

சேலம்:
சேலம் இரும்பாலை அருகே உள்ள தளவாய்ப ட்டியை சேர்ந்தவர் தமிழரசன் (28), கொத்தனார். இவரது மகன் 3 வயது ஆண் குழந்தை மகிழரசன்.
குழந்தை மகிழரசன் நேற்று மதியம் தனது தாயுடன் ரொட்டிகாரன் வட்டத்தில் உள்ள தாய்மாமன் வீட்டிற்கு சென்றான். தொடர்ந்து அங்குள்ள மதில் சுவர் அருகே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது மதில் சுவரின் மீதிருந்த கைப்பிடி சுவர் இடிந்து திடீரென சிறுவன் மீது விழுந்தது.
இதனை பார்த்து கதறிய தாய் மற்றும் உறவினர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய குழந்தையை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை மகிழரசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுது புரண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.