என் மலர்
செய்திகள்

தண்ணீர் தொட்டியில் 4½ வயது சிறுமி மூழ்கடித்து படுகொலை
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள எம்.கைகாட்டியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சஜிதா (வயது 32). இவர்களது மகள்கள் சுபாஷினி (14), ஸ்ரீஹர்ஷினி (4½). பிரபாகரன் கடந்த 1 வருடத்துக்கு முன்பு திடீரென இறந்து விட்டார்.
எனவே சஜிதா பிரபாகரன் வேலை பார்த்த சென்னையை சேர்ந்த மனோஜ் என்பவருக்கு சொந்தமான பங்களாவில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை 7 மணி முதல் தனது இளைய மகள் ஸ்ரீஹர்ஷினியை காணவில்லை என சஜிதா கோத்தகிரி போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் எம்.கைகாட்டியில் உள்ள அவரது வீடு மற்றும் வேலை பார்க்கும் பங்களா ஆகிய பகுதிகளில் சிறுமியை தேடினர். அப்போது சிறுமி பங்களா அருகில் உள்ள 8 அடி ஆழமுள்ள தொட்டியில் பிணமாக கிடப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து குன்னூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தொட்டியில் இருந்து சிறுமியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தண்ணீர் தொட்டியின் மூடி இரும்பால் செய்யப்பட்டது. மூடியை சிறுமி திறக்க வாய்ப்பு இல்லை. எனவே அந்த சிறுமி தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து படுகொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த படுகொலை சம்பவத்தில் சிறுமியின் தாய் சஜிதா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் அவரிடம் குன்னூர் போலீசார் நேற்று இரவு முதல் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






