search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arcot"

    ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பைபாஸ் சாலையில் தனியாருக்கு சொந்தமான குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் தீயில் எரிந்து நாசமானது.

    ஆற்காடு:

    சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சேக் இஸ்மாயில். பீடி கம்பெனி நடத்தி வருகிறார். அந்த பீடி கம்பெனிக்கு ஆற்காடு அண்ணம் பாளையம் தெருவில் கிளை ஒன்றும் உள்ளது.

    அந்த கிளையில் பீடி தயாரிப்பதற்கு தேவையான இலைகளை மேல்விஷாரம் பைபாஸ் சாலை பெரிய மசூதி எதிரே உள்ள குடோனில் வைத்திருந்தனர். அந்த குடோன் மேற்கூரை முழுவதும் தகர ஷீட்டுகளால் பொருத்தப்பட்டு முன்பக்கம் இரும்பு ‌ஷட்டர் போட்டு பூட்டப்பட்டு இருந்தது.

    நேற்று மாலை 6 மணியளவில் அந்த குடோனில் திடீரென தீப்பிடித்தது. இதைக் கண்ட அந்த வழியாக சென்றவர்கள் ஆற்காடு தீயணைப்பு நிலையத்திற்கும், டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பாய்ச்சி அடித்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இருப்பினும் குடோனில் 200 பெரிய மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் எரிந்து நாசமானது.

    சம்பவ இடத்திற்கு வந்த டவுன் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை டி.எஸ்.பி. கலைச்செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பீடி இலைகள் வைக்கப்பட்டிருந்த குடோன் தீயில் எரிந்து நாசமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தலில் வாக்களிக்க பொதுமக்கள் திரண்டு வந்ததால், அவர்களை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #LokSabhaEelctions2019 #Arcot
    அரக்கோணம்:

    பாராளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடந்தது.

    இந்நிலையில், அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு அருகே வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்தில் பொதுமக்கள் திரண்டு வந்ததால், அவர்களை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு அருகே ராசாத்திபுரம் கீழ்விஷாரத்தில் என்ற பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    திடீரென வாக்குச்சாவடி பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது #LokSabhaEelctions2019 #Arcot 
    ஆற்காடு அருகே பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலியான சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கலவை:

    ஆற்காடு அடுத்த பென்னகர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம், கூலி தொழிலாளி. அவரது மனைவி அமலா, தம்பதிக்கு லோகேஸ்வரன் (3), சுதர்சன் (2) என 2 மகன்கள் இருந்தனர். லோகேஸ்வரன் கலவை அருகேயுள்ள பெரும்பள்ளத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறான்.

    தினமும் பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு சென்ற லோகேஸ்வரன் மாலை பள்ளி பஸ்சில் வீட்டிற்கு வந்தான். வீட்டிற்கு அருகே பள்ளி பஸ் நின்றது.

    லோகேஸ்வரனை அழைத்து செல்ல அவரது தாய் அமலா குழந்தை சுதர்சனையும் அழைத்து வந்தார்.

    லோகேஸ்வரன் பஸ்சில் இருந்து இறங்கியவுடன் டிரைவர் பஸ்சை இயக்கியுள்ளார். அப்போது சுதர்சன் பஸ்சின் முன்னால் ஓடியதை கவனிக்காததால் பஸ் சுதர்சன் மீது ஏறி இறங்கியது.

    இதில் உடல் நசுங்கி சுதர்சன் சம்பவ இடத்திலேயே பலியானான். இதனை கண்ட தாய் அமலா கதறி துடித்தார். விபத்துக்கு காரணமான டிரைவரை பிடித்த பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கி வாழப்பந்தல் போலீசில் ஒப்படைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்துக்கு காரணமான மேச்சேரியை சேர்ந்த பஸ் டிரைவர் சந்திரனை போலீசார் கைது செய்தனர். தாய் கண் முன்னே பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலியான சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஆற்காடு அருகே ஏரி மண் கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர். 6 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த திமிரி உள் வட்டத்திற்கு உட்பட்ட பழையனூர் பரதராமி ஏரிகளில் அரசு அனுமதியின்றி மண் கடத்திச் செல்வதாக ராணிப்பேட்டை சப்-கலெக்டர் இளம் பகவத் மற்றும் டி.எஸ்.பி. கலைச் செல்வம் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அவர்கள் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏரியில் மணல் அள்ளிக் கொண்டு இருந்த 3 டிப்பர் லாரிகள், மண் அல்ல பயன்படுத்திய ஒரு ஜே.சி.பி. மற்றும் 2 பைக் பறிமுதல் செய்தனர். திமிரி பாத்திகாரன் பட்டியை சேர்ந்த அப்பாதுரை (44), அனந்தாங்கள் தேவேந்திரன் (43), நெமிலி வேடந்தாங்கலை சேர்ந்த ராஜ்குமார் (24) ஆகியோரை கைது செய்தனர்.

    அதேபோல் பரதராமி ஏரியில் மண் அள்ளிக் கொண்டு இருந்த 3 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர். ஆற்காடு அடுத்த மாசாப்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் பாபு (40), அலமேலு ரங்காபுரம் பழனி (28) 2 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர். வழக்குப்பதிவு செய்து ஆற்காடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் சென்னை சுற்றுலா பயணிகளை கத்தியால் குத்தி பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    ஆற்காடு:

    சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்த 20 பேர் ஊட்டிக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் சென்னைக்கு புறப்பட்டு வந்தனர்.

    வேலூர் மாவட்டம் ஆற்காடு பஸ் நிலையம் அருகே வேனை நிறுத்திவிட்டு, அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றனர். அப்போது ஆற்காடு லேபர் தெருவை சேர்ந்த அஜித்குமார் (வயது 22), மணி (30) மற்றும் சிலர் சுற்றுலா பயணிகளுடன் தகராறு செய்து கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாயை பறித்துள்ளனர். மேலும் நவநீதம் (20), சரவணக்குமார் (32), தினேஷ் (19), தாஸ் (28) ஆகிய 4 பேரை கத்தியால் குத்தி உள்ளனர். அதில் காயமடைந்த அவர்கள் ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    இதுகுறித்து யுவராஜ் என்பவர் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமார், மணி ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். #Tamilnews
    ×