search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Batlagundu"

    வத்தலக்குண்டு அருகே மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வத்தலக்குண்டு:

    மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்தவர் ராமலட்சுமி (வயது21). இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. இவரது நண்பர் உசிலம்பட்டி கொக்குளத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (27).

    இவர்கள் 2 பேரும் கடந்த 19-ந் தேதியன்று ஒரு மோட்டார் சைக்கிளில் வத்தலக்குண்டு- பெரியகுளம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். எல்.ஐ.சி. அலுவலகம் அருகே சென்றபோது திடீரென பைக் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது.

    பலத்த காயம் அடைந்த 2 பேரும் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தொடர் சிகிச்சையில் இருந்த அவர்கள் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வத்தலக்குண்டு அருகே அரசு பஸ் - சரக்கு வேன் மோதிய விபத்தில் கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் அருகே உள்ள கொடைரோடு அம்மா பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் காமராஜ் (வயது 19). இவர் சரக்கு வேன் கிளீனராக வேலை பார்த்து வந்தார். பெரியகுளத்தில இருந்து மாங்காய் லோடு ஏற்றிக் கொண்டு வத்தலக்குண்டு நோக்கி சரக்கு வேன் வந்தது. இந்த வேனை காமாட்சி என்பவர் ஓட்டி வந்துள்ளார். காமராஜ் வேனில் கிளீனராக வந்துள்ளார்.

    கட்டகாமன்பட்டி அருகே வந்தபோது வத்தலக்குண்டுவில் இருந்து தேனி நோக்கி சென்ற அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் படுகாயமடைந்த காமராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் காமாட்சி வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் முதல்-உதவி சிகிச்சை பெற்று தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வத்தலக்குண்டுவில் காதல் திருமணம் செய்த பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகில் உள்ள கட்டகாமன்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் பாலசந்தர். இவர் சென்னையில் வக்கீலுக்கு படித்து வந்தார். பண்ணைக்காடு பகுதியை சேர்ந்த சக்திவடிவேல் முருகன் மகள் தனுஷ்பிரியா (வயது26).

    இவர் சென்னையில் பல் டாக்டருக்கு படித்து வந்தார்.கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து காதலர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர்.

    வத்தலக்குண்டு காந்திநகர் கம்பர் தெருவில் தனியாக வசித்துவந்தனர். இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு தனுஷ்பிரியா தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அவரது தந்தை சக்திவடிவேல் முருகன் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். திண்டுக்கல் ஆர்.டி.ஓ. ஜீவா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

    வத்தலக்குண்டு அருகே மரக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமானது.

    வத்தலக்குண்டு:

    சென்னையை சேர்ந்தவர் ரமேஷ். இவர் வத்தலக்குண்டு அருகே சேவுகம்பட்டி 8-வது வார்டு பகுதியில் மரக்கடை வைத்துள்ளார். இங்கு கேரளாவை சேர்ந்த நியாஸ் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

    10-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வேலை பார்க்கின்றனர். வழக்கம்போல் வேலை முடிந்ததும் கடையை பூட்டியுள்ளனர். அப்போது உள்ளே இருந்து புகை கிளம்பியுள்ளது. சிறிது நேரத்தில் தீப்பற்றி வேகமாக பரவியது.

    அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடிய வில்லை. இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட அலுவலர் சந்திரகுமார் தலைமையில் நிலைய அலுவலர்கள் கணேசன்(வத்தலக்குண்டு), ஜோசப்(நிலக்கோட்டை), சக்திவேல்(திண்டுக்கல்) மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    விடிய விடிய பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். இருந்தபோதும் பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமானது. ரமேஷ் சென்னையில் இருந்து வந்தபிறகுதான் சேத மதிப்பு குறித்து தெரியவரும். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் பயணிகள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.

    வத்தலக்குண்டு:

    கொடைக்கானல், மூணாறு, தேக்கடி, குமுளி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சபரிமலை உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு செல்வதற்கு வத்தலக்குண்டு பஸ் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது.

    தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் கொடைக்கானலுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். இதனால் வத்தலக்குண்டு பஸ்நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பொதுமக்கள் வசதிக்காக பஸ்நிலையத்தில் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

    தற்போது அந்த சின்டெக்ஸ்தொட்டி தண்ணீர் இன்றி காட்சிப் பொருளாக உள்ளது. இதனால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

    குறிப்பாக குழந்தைகளுடன் வரும் பயணிகள் தண்ணீர் கிடைக்காமல் பஸ்நிலையத்தில் தவித்து வருகின்றனர். அம்மா குடிநீர் பாட்டிலும் குறைந்த அளவே வருவதால் வேகமாக விற்று தீர்ந்து விடுகிறது. இதனை பயன்படுத்தி கடைக்காரர்கள் குடிநீர் பாட்டிலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் தடையின்றி மதுபானங்கள் கொண்டு வரப்படுகிறது. ஆனால் குடிநீருக்காக அலைந்து திரிவது தொடர் கதையாகி வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பஸ்சில் பயணம் செய்யும் முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. சில நேரங்களில் அவர்கள் மயக்கமடையும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

    பல்வேறு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் குடிநீர் இல்லாதது சுற்றுலா பயணிகளை தவிப்புக்குள்ளாகி வருகிறது.

    மேலும் இலவச கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள் அதிக அளவில் சிரமப்படுகின்றனர். எனவே பஸ்நிலையத்தில் குடிநீர் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    வத்தலக்குண்டுவில் குடிபோதையில் தீக்குளித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு ராஜன் நகரை சேர்ந்த சுப்பையா-ராஜாத்தி மகன் கதிரேசன் (வயது34). இவர் டாஸ்மாக் பார்களில் வேலை பார்த்து வந்தார். இன்னும் திருமணமாகவில்லை. குடி பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் அடிக்கடி தனது தாயிடம் தற்கொலை செய்து கொள்ளபோவதாக மிரட்டி வந்தார்.

    நேற்று இரவு போதையில் வீட்டிற்கு வந்த கதிரேசன் வழக்கம்போல தற்கொலை செய்ய போவதாக கூறி உள்ளார். ஆனால் வீட்டில் இருந்தவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. பின்னர் தன் உடலில் மண்எண்ணை ஊற்றி கதிரேசன் தீ வைத்துக் கொண்டார்.

    பலத்த காயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வத்தலக்குண்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணாகாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வத்தலக்குண்டு ஓட்டலில் ரகளை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு டென்னீஸ் கிளப் சாலையில் உள்ள ஓட்டலுக்கு கட்டகாமன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த மருதகாளி (வயது25), முனியப்பன் ஆகியோர் சாப்பிட சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளை ஓட்டல் முன்பு நிறுத்தி உள்ளனர். உரிமையாளர் பிரவீன் வாகனத்தை ஓரமாக நிறுத்தும்படி கூறி உள்ளார். இதனால்அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்தது.

    இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் ஓட்டலில் ரகளை செய்து பின்பு தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டனர். இதில் முனியப்பன் படுகாயம் அடைந்து வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மருதகாளியை கைது செய்தனர்.

    வத்தலக்குண்டு விடுதியில் பிணமாக கிடந்த சமையல் மாஸ்டர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வத்தலக்குண்டு:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மருதன்வாழ்வைச் சேர்ந்தவர் முருகன் (வயது 53). இவர் திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறையில் உள்ள ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். மேலும் விசே‌ஷங்களுக்கும் சென்று சமைக்கும் பணி செய்து வந்தார்.

    வெளியே பல இடங்களுக்கு வேலைக்கு செல்லும் முருகன் 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறையே வீட்டுக்கு வருவார். பொங்கல் பண்டிகைக்கு வருவதாக கூறிய முருகன் வீட்டுக்கு வரவில்லை. மேலும் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    வத்தலக்குண்டு மெயின் ரோடு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் முருகன் கடந்த 17-ந் தேதி அறை எடுத்து தங்கியுள்ளார். அதன் பின்னர் ஊழியர்களுடன் பேசாமல் பெரும்பாலும் அறைக்குள்ளேயே முடங்கியுள்ளார்.

    நேற்று அறையில் இருந்து துர்நாற்றம் வீசவே சந்தேகமடைந்த ஊழியர்கள் வத்தலக்குண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்தே போது அங்கு முருகன் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    அவரது உடலை மீட்டு வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகே முருகன் எவ்வாறு இறந்தார்? என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    வத்தலக்குண்டு அருகே வெந்நீர் கொட்டியதில் கைக்குழந்தை பரிதாபமாக உயிரிந்தது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகில் உள்ள பழைய வத்தலக்குண்டு மேற்கு தெருவை சேர்ந்தவர் முரளி (வயது30). கூலித்தொழிலாளி. இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், மோகனரூபன் என்ற 11 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

    சம்பவத்தன்று மல்லிகா வீட்டில் சுடுதண்ணீர் காய்ச்சி அந்த பாத்திரத்தை வைத்திருந்தார். தவழ்ந்து விளையாடிக்கொண்டிருந்த மோகனரூபன் அந்த பாத்திரத்தை தட்டி விட்டதில் வெந்நீர் அவன் உடலில் கொட்டியது.

    படுகாயங்களுடன் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவன் மேல் சிகிச்சைக்கு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். ஆனால் அங்கு சிகிசிசை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

    இது குறித்து வத்தலக்குண்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வத்தலக்குண்டு அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே உள்ள பா.ஊராலிப்பட்டி ஊராட்சி பூவம்பட்டி கிராமத்தில் கடந்த 3 மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. இது குறித்து ஊராட்சி அலுவலகத்தில் புகார் செய்த போது யூனியன் அலுவலகத்தில் தெரிவிக்குமாறு கூறியுள்ளனர்.

    யூனியன் அலுவலகத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நேற்று பூவம்பட்டி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் வத்தலக்குண்டுவில் இருந்த ஆண்டிப்பட்டி செல்லும் சாலையில் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணி வகுத்து நின்றன. சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் 1 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.

    வத்தலக்குண்டுவில் அரசு அதிகாரியிடம் நகையை பறித்தது தொடர்பாக மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு யூனியன் அலுவலகம் அருகே உள்ள எழில்நகரில் வசித்து வருபவர் சக்திவடிவேல் முருகன். வத்தலக்குண்டு யூனியன் அலுவலகத்தில் துணைவட்டார வளர்ச்சி அலுவலராக(சத்துணவு) உள்ளார். அவரது மனைவி ரேணுகாதேவி, மகள் வர்ஷா, மகன் கோகுல். தற்போது பயிற்சிக்காக சக்திவடிவேல் முருகன் பவானிசாகருக்கு சென்றுள்ளார்.

    நேற்றிரவு ரேணுகாதேவி தனது குழந்தைகளுடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு சமயம் மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் ஹெல்மெட் மற்றும் டவுசர் அணிந்திருந்தனர். மர்மநபர்கள் 2 பேரும் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பீரோவை திறந்த அவர்கள் 2 பவுன்நகையை திருடிக்கொண்டனர். சத்தம் கேட்டு ரேணுகாதேவி திடுக்கிட்டு எழுந்தார். அப்போது மர்மநபர்கள் நிற்பதை பார்த்து கூச்சல் போட்டார்.

    உஷாரான அவர்கள் ரேணுகாதேவியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு தலைமறைவானார்கள். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வத்தலக்குண்டு நகரில் தொடர்ந்து கொள்ளைச்சம்பவம் நடந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.#tamilnews
    வத்தலக்குண்டுவில் வங்கி ஊழியர் வீட்டில் நகை- பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் அருகே உள்ள வத்தலக்குண்டு ஊர்காலசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னசாமி. சித்தையன்கோட்டையில் உள்ள கூட்டுறவு வங்கியில் கிளார்க்காக உள்ளார். அவரது மனைவி தேன்மொழி. பழைய வத்தலக்குண்டுவில் உள்ள அரசு உயர்நிலைபள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்கள் வசிக்கும் வீடு 2 மாடிகள் கொண்டது.

    நேற்று இரவு சின்னசாமி மனைவி, 2 குழந்தைகளுடன் கீழ் வீட்டில் தூங்கினார். அப்போது காற்றுக்காக கதவை திறந்து வைத்து இருந்தார். நள்ளிரவு சமயம் நைசாக மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். மாடி வீட்டுக்கு சென்ற அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகை-பணத்தை சுருட்டி கொண்டு கீழ் பகுதிக்கு வந்தனர். அங்கிருந்த பீரோவை நைசாக திறந்து அதில் இருந்த நகையை எடுத்து கொண்டு தலைமறைவானார்கள்.

    இன்று காலை எழுந்து பார்த்த சின்னசாமி வீட்டுக்கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பீரோவை பார்த்த போது அதில் இருந்த 12 பவுன் நகையை காணவில்லை.

    அதிர்ச்சி அடைந்த அவர் உடனே மாடி வீட்டுக்கு சென்று பீரோவை பார்த்தார். அப்போது அதில் 20 நகை மற்றும் பணம் கொள்ளை போனது கண்டு பதறி போனார்.

    இதுகுறித்து சின்னசாமி வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    ×