search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cooking master dead"

    • பேருந்து புறப்பட்ட சில விநாடிகளில் மிகவும் சோர்வாக காணப்பட்ட ஜோதிபாஸ்கர் சரியான சில்லரை கொடுத்து சங்கரன்கோவிலுக்கு டிக்கெட் பெற்றுக்கொண்டார்.
    • டீக்கடையை திறக்க வந்தவர்கள் கடை முன்பாக ஒருவர் படுத்துக்கிடந்ததை பார்த்து அவரை எழுப்ப முயன்றனர்.

    ராஜபாளையம்:

    'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று வாக்குரைத்த வள்ளலார் பிறந்த இந்த மண்ணில் மனிதநேயம் என்றால் என்ன என கேள்வி கேட்கும் நிலை வந்துவிட்டது. எந்திரத்தனமான உலகில் எதையும் கண்டுகொள்ளாமல் செல்வதே சாலச்சிறந்தது என்று தங்களுக்குள் ஒரு கொள்கை வகுத்து விலகி செல்வதால் ஏற்படும் இழப்பு குறித்து இந்த சமுதாயம் சிந்திக்காமல் செல்வது தான் வேதனைக்குரியது.

    அப்படியொரு மனிதநேய மற்ற செயலால் காந்தி ஜெயந்தியான இன்று ஒரு உயிர் சாலையோரம் பறிபோகியுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நல்லகுற்றாலம் தெருவைச் சேர்ந்தவர் ஜோதிபாஸ்கர் (வயது 50). இவர் சங்கரன்கோவிலில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மற்றும் சரக்கு மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். தினமும் அதிகாலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பஸ்சில் வேலைக்கு செல்லும் அவர் இரவில் வீடு திரும்புவார்.

    வழக்கம்போல் இன்று காலை மனைவியிடம் கூறி விட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி சென்று தனியார் பஸ்சில் ஏறி அமர்ந்தார். அந்த பஸ்சில் டிரைவராக மகேஷ் என்பவரும், கண்டக்டராக கோபால் என்பவரும் பணியில் இருந்தனர்.

    பேருந்து புறப்பட்ட சில விநாடிகளில் மிகவும் சோர்வாக காணப்பட்ட ஜோதிபாஸ்கர் சரியான சில்லரை கொடுத்து சங்கரன்கோவிலுக்கு டிக்கெட் பெற்றுக்கொண்டார்.

    பேருந்து ராஜபாளையம் நகருக்குள் நுழைந்தபோது திடீரென்று ஜோதிபாஸ்கருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார். இதைப்பார்த்த பேருந்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சமயம் தனியார் பஸ் காந்தி சிலை ரவுண்டானா அருகிலுள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையை கடந்துதான் சென்றது.

    இருந்தபோதிலும் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற அடிப்படை எண்ணம் கூட இல்லாமல் டிரைவர், கண்டக்டர் இருவரும் வலியால் துடித்தவரை வேடிக்கை பார்த்தவாறு சென்றுள்ளனர். பின்னர் அவரால் தொடர்ந்து பயணிக்க முடியாத நிலை உருவானது.

    இதையடுத்து சங்கரக்கோவில் முக்கு பகுதிக்கு பேருந்து வந்ததும் டிரைவர், கண்டக்டர் இருவரும் சேர்ந்து நெஞ்சுவலியால் உயிருக்கு போராடிய ஜோதி பாஸ்கரை பஸ்சில் இருந்து கைத்தாங்கலாக தூக்கி வந்து சாலையோரம் உள்ள டீக்கடை முன்பு அமர வைத்து விட்டு அடுத்த கலெக்சனை எதிர்பார்த்து பேருந்தை எடுத்து சென்றனர்.

    இதற்கிடையே டீக்கடையை திறக்க வந்தவர்கள் கடை முன்பாக ஒருவர் படுத்துக்கிடந்ததை பார்த்து அவரை எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் அசைவற்ற நிலையில் கிடந்ததால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்சில் ஏற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஜோதிபாஸ்கர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    மருத்துவ வசதி இல்லாத காலத்தில்கூட உயிருக்கு போராடும் ஒருவரை காப்பாற்ற முயற்சி மேற்கொண்ட காலம் போய், மருத்துவமனையை கடந்தபோது கூட நெஞ்சுவலியால் துடித்தவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க அனுமதிக்காமல் வருவாயை மட்டும் கருத்தில் கொண்டு பேருந்தை இயக்கி, அதிலும் அந்த நபரை பாதி வழியில் இறக்கி சாலையோரம் கிடத்திவிட்டு சென்று தனியார் பஸ் ஊழியர்களின் செயலால் விலை மதிப்பற்ற உயிர் பறிபோய் உள்ளது.

    வேலைக்கு சென்ற கணவர், சில மணி நேரங்களிலேயே பிணமாக வீடு திரும்பியதை பார்த்து அவரது மனைவி, பிள்ளைகள் கதறித்துடித்தது காண்போர் நெஞ்சை கசக்கி பிழிந்தது. இந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வத்தலக்குண்டு விடுதியில் பிணமாக கிடந்த சமையல் மாஸ்டர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வத்தலக்குண்டு:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மருதன்வாழ்வைச் சேர்ந்தவர் முருகன் (வயது 53). இவர் திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறையில் உள்ள ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். மேலும் விசே‌ஷங்களுக்கும் சென்று சமைக்கும் பணி செய்து வந்தார்.

    வெளியே பல இடங்களுக்கு வேலைக்கு செல்லும் முருகன் 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறையே வீட்டுக்கு வருவார். பொங்கல் பண்டிகைக்கு வருவதாக கூறிய முருகன் வீட்டுக்கு வரவில்லை. மேலும் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    வத்தலக்குண்டு மெயின் ரோடு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் முருகன் கடந்த 17-ந் தேதி அறை எடுத்து தங்கியுள்ளார். அதன் பின்னர் ஊழியர்களுடன் பேசாமல் பெரும்பாலும் அறைக்குள்ளேயே முடங்கியுள்ளார்.

    நேற்று அறையில் இருந்து துர்நாற்றம் வீசவே சந்தேகமடைந்த ஊழியர்கள் வத்தலக்குண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்தே போது அங்கு முருகன் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    அவரது உடலை மீட்டு வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகே முருகன் எவ்வாறு இறந்தார்? என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    ×