என் மலர்
செய்திகள்

வத்தலக்குண்டு விடுதியில் பிணமாக கிடந்த சமையல் மாஸ்டர்
வத்தலக்குண்டு:
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மருதன்வாழ்வைச் சேர்ந்தவர் முருகன் (வயது 53). இவர் திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறையில் உள்ள ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். மேலும் விசேஷங்களுக்கும் சென்று சமைக்கும் பணி செய்து வந்தார்.
வெளியே பல இடங்களுக்கு வேலைக்கு செல்லும் முருகன் 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறையே வீட்டுக்கு வருவார். பொங்கல் பண்டிகைக்கு வருவதாக கூறிய முருகன் வீட்டுக்கு வரவில்லை. மேலும் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
வத்தலக்குண்டு மெயின் ரோடு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் முருகன் கடந்த 17-ந் தேதி அறை எடுத்து தங்கியுள்ளார். அதன் பின்னர் ஊழியர்களுடன் பேசாமல் பெரும்பாலும் அறைக்குள்ளேயே முடங்கியுள்ளார்.
நேற்று அறையில் இருந்து துர்நாற்றம் வீசவே சந்தேகமடைந்த ஊழியர்கள் வத்தலக்குண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்தே போது அங்கு முருகன் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
அவரது உடலை மீட்டு வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகே முருகன் எவ்வாறு இறந்தார்? என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.