search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adani Group"

    • தாராளமயமாக்கலை காங்கிரஸ் ஆதரிக்கிறது.
    • அதானி விவகாரத்தில் நாங்கள் அஞ்சமாட்டோம்.

    புதுடெல்லி :

    அதானி நிறுவனங்கள் மீதான ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கை இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. பங்குச்சந்தையில் அதானி நிறுவனங்களின் முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இது தொடர்பாக பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆனால் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதேநேரம் அதானி விவகாரத்தில் மறைப்பதற்கோ, அஞ்சுவதற்கோ பா.ஜனதாவிடம் எதுவும் இல்லை என உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

    இதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்து உள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    அதானி விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால் பாராளுமன்ற கூட்டு விசாரணைக்குழு அமைக்க தயங்குவது ஏன்?

    கூட்டு விசாரணைக்குழு கோரிக்கையை பாராளுமன்றத்தில் எழுப்பக்கூட அவர்கள் அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்பட எங்கள் தலைவர்கள் பாராளுமன்றத்தில் பேசினால், அந்த கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகின்றன.

    அப்படி அதானி விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை அரசு அனுமதிக்க வேண்டும்.

    அதானி விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்துமாறு ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மற்றும் 'செபி' தலைவர் மதாபி புரிக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.

    அதானிக்கும், அரசுடனான அவரது நிறுவனங்களின் உறவுகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.

    அதேநேரம் நாங்கள் எப்போதும் தொழில் முனைவோருக்கு ஆதரவாக இருக்கிறோம். அதுவே பொருளாதார வளர்ச்சிக்கு முன்னோக்கி செல்லும் வழி ஆகும். கண்மூடித்தனமான தனியார்மயமாக்கல் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

    இதைப்போல தாராளமயமாக்கலை காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஆனால் அது விதிகள் மற்றும் நிறுவனங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். அவை சுதந்திரமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் விதிகள் பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான முறையில் பயன்படுத்தப்படும்.

    அதானி விவகாரத்தில் நாங்கள் அஞ்சமாட்டோம், தொடர்ந்து குரல் எழுப்புவோம். பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் இருக்கின்றன.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

    • அரசிடம் கேள்வி கேட்பது எதிர்க்கட்சிகளின் வேலை.
    • அதானி விவகாரம் பெருந்தொகையுடன் தொடர்புடைய மிகப்பெரிய ஊழல்.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் மத்திய அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பி கூறியதாவது:-

    அதானி விவகாரம் பெருந்தொகையுடன் தொடர்புடைய மிகப்பெரிய ஊழல். இதை முறையாக விசாரிக்க வேண்டும். மாநிலங்களவையில் நான் பேசியபோது, பாராளுமன்ற நடைமுறைக்கு ஒவ்வாத எதையும் கூறிவிடவில்லை. நான் அதானி விவகாரத்தில் சில கேள்விகளை எழுப்பினேன்.

    அதானி நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை ஏன் மோடி அரசு நடத்தவில்லை?

    பாராளுமன்றத்தில் மோடியும், அவரது அரசும் அதானி என்ற வார்த்தையை உச்சரிக்கக்கூட அனுமதிக்கவில்லையே, அதன் பின்னணியில் உள்ள காரணம்தான் என்ன?

    ரிசர்வ் வங்கி, பங்குச்சந்தை பரிமாற்ற வாரியம் (செபி), அமலாக்கத்துறை இயக்குனரகம், தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (எஸ்.எப்.ஐ.ஓ), கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சகம், வருமான வரித்துறை, சி.பி.ஐ. ஆகியவை ஏன் முடங்கிப்போய்விட்டன? எத்தனையோ ஊழல்கள் நடந்துள்ளன, ஏன் இன்னும் அவர்கள் மவுனமாக இருக்கிறார்கள்?

    அரசிடம் கேள்வி கேட்பது எதிர்க்கட்சிகளின் வேலை. மக்கள்தான் பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களின் பணத்தையும், அவர்களது உரிமைகளையும் பாதுகாக்க வேண்டியது, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஊழல்கள் குறித்து அரசிடம் கேள்விகள் எழுப்புவது, தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றவாதிகளின் பொறுப்பு.

    ஆனால் அதானி விவகாரத்தில் அவர்கள் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்த விஷயத்தை பாராளுமன்றத்தில் எழுப்பவும் எங்களை அனுமதிக்கவில்லை. எனவே தான் எங்கள் ஆட்கள் போராடுகிறார்கள். அதானி விவகாரத்தை பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து எழுப்புவோம்.

    பாராளுமன்ற ஜனநாயகத்தில் நாங்கள் அரசிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்போம். ஆனால், ஜனநாயக ரீதியில் பாராளுமன்றம் இயங்குவதை அரசு விரும்பவில்லை. ஜனநாயக ரீதியில் செயல்பட தயாராக இல்லை என்றால், சர்வாதிகாரமாக பேசினால், மக்கள் அதிலிருந்து விடுபடுவார்கள்.

    எனது பேச்சின் குறிப்பிட்ட பகுதிகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது பற்றி நான் சபைத்தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளேன். வெறுமனே எனது பேச்சின் அம்சங்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விடுவதால், மக்களும், ஊடகங்களும் கூறிய குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட்டு விட முடியாது.

    ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து, அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று கேட்கின்றன. இந்த விஷயத்தில் ஒற்றுமை இருக்கிறது. ஒவ்வொருவரும் நாட்டை காப்பாற்ற வேண்டும், ஏழை மக்களின் சொத்தை பாதுகாக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாதன் ஆண்டர்சனை விசாரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என எம்.எல்.ஷர்மா வாதிட்டார்.
    • இந்திய முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது என நீதிபதிகள் கருத்து

    புதுடெல்லி:

    அதானி குழுமம் முறைகேடு செய்திருப்பதாக கூறி ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக விசாரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா, விஷால் திவாரி ஆகியோர் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

    வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்த மனுவில், "அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை தொடுத்த தாக்குதலால், அதானி நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது, முதலீட்டார்களை பெரிதும் பாதித்துள்ளது. மக்களின் பணம் வீணானது. நாட்டின் பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலில் அதிகாரிகளால் எந்த உறுதியான நடவடிக்கைகளும் எடுக்க முடியவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

    இந்த வழக்கில், மத்திய அரசுடன் இந்திய ரிசர்வ் வங்கி, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி உள்ளிட்ட அமைப்புகள் பிரதிவாதிகளாக இணைக்கப்பட்டுள்ளன.

    இவ்வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்பு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில் திங்கட்கிழமைக்குள் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    குறிப்பாக ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் நாதன் ஆண்டர்சனை விசாரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா வாதிட்டார். உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஹிண்டன்பர்க் அறிக்கையை ஆய்வு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் விஷால் திவாரி வாதிட்டார்.

    வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், 'இந்திய முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது, இது தொடர்பான அக்கறையை நாம் காட்டவேண்டி உள்ளது. எனவே, முதலீட்டாளர்களை எவ்வாறு பாதுகாக்கப் போகிறோம்? என்ற விவரத்தை செபியிடம் கேட்டு, ஆலோசனை பெற்று திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும்' என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தாவுக்கு உத்தரவிட்டு மனுக்கள் மீதான விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.

    'நாங்கள் இதில் தலையிட்டு, இது மீண்டும் நடக்காமல் இருக்க ஒரு வழிமுறை இருக்கிறதா? கொள்கை விஷயங்களில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அது அரசாங்கம் தொடர்புடையது. இந்த நடவடிக்கை விஷயத்தில் இந்திய அரசு ஆர்வமாக இருந்தால், ஒட்டுமொத்த நிலைமை மற்றும் ஆய்வு மேற்கொள்ள நீதிபதி உள்பட நிபுணர்கள் குழுவை அமைக்க பரிந்துரைக்கிறோம்' என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.

    • அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிய ஆரம்பித்தன.
    • ஹிண்டன்பர்க் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது.

    அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வறிக்கை, அதானி குழுமத்தை ஆட்டம் காணச் செய்துள்ளது. அந்த அறிக்கையில், "அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த 3 ஆண்டுகளாக அபரிமிதமாக உயர்ந்தது. இதில் முறைகேடு நடந்துள்ளது. மேலும், போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர்" என கூறப்பட்டிருந்தது. ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிய ஆரம்பித்தன.

    இந்த சூழ்நிலையில், ஹிண்டன்பர்க் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட நிறுவனமான வாச்டெல்லை அதானி குழுமம் நியமித்துள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

    அதானி குழும பங்குகள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை கையாள்வது குறித்து ஆலோசனை வழங்குவதற்காக வாட்ச்டெல், லிப்டன், ரோசன் & காட்ஸ் நிறுவனத்தின் மூத்த வழக்கறிஞர்களை நியமித்துள்ளதாக பிரிட்டனைச் சேர்ந்த நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட இந்த சட்ட நிறுவனம், கார்ப்பரேட் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றது. பெரிய மற்றும் சிக்கலான பரிவர்த்தனைகளை தொடர்ந்து கையாளுகிறது.

    ஹிண்டன்பர்க் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை பொய்யானது, உள்நோக்கம் கொண்டது என்றும், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அதில் இடம்பெற்றுள்ளன என்றும் அதானி குழுமம் கூறியது. அமெரிக்க நிறுவனங்கள் பலனடைய வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதானி குழும விவகாரம் தொடர்பாக பராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
    • ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் கிருஷ்ணாபுரம் ஆர்ச் முன்பு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    நெல்லை:

    அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்தது, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள் கடன் வழங்கியது தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும், இந்த விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்தும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பாளை வட்டாரத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் ஆர்ச் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு காங்கி ரஸ் கமிட்டி மாநில பொரு ளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசி னார். ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் முழங்கப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, வட்டார, நகர பேரூராட்சி, பஞ்சாயத்து வார்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    • பாளை எல்.ஐ.சி. அலுவலகம் எதிரே காங்கிரஸ் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • போராட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பாளை எல்.ஐ.சி. அலுவலகம் எதிரே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார்.

    அதானி குழுமம்

    முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    போராட்டத்தில் அதானி குழுமம் மீது சமீபத்தில் வெளியான ஆராய்ச்சி அறிக்கை குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும்.

    எல்.ஐ.சி., பாரத ஸ்டேட் வங்கி மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிர்பந்தம் செய்யக் கூடாது. முதலீட்டாளர் களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    இதில் கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன், காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் ராஜேஷ்முருகன், மாவட்ட செயலாளர் மகேந்திர பாண்டியன், மண்டல தலைவர்கள் ராஜேந்திரன், அய்யப்பன், கெங்கராஜ், முகமதுஅனஸ் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • பங்குகளின் அடிப்படையில் எந்த கடனும் வழங்கவில்லை.
    • அதானி குழுமத்தின் கணக்கில் ஒரு பைசா கூட பாக்கி இல்லை.

    மும்பை :

    இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான அதானியின் பல்வேறு நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பெரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், கணக்குகளில் மோசடி செய்ததாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

    இந்த அறிக்கையை தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் கோடிக்கு மேல் சரிந்தது. எல்.ஐ.சி., பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) போன்ற பொதுத்துறை நிறுவனங்கள், அதானியின் நிறுவனங்களில் முதலீடுகள் செய்துள்ளதால் இந்த வீழ்ச்சி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள், பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகின்றன.

    இந்த நிலையில் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி தலைவர் தினேஷ் கரா பல்வேறு தகவல்களை வெளியிட்டார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அதானி குழுமத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய மொத்த கடன் ரூ.27 ஆயிரம் கோடி மட்டுமே. இது வங்கியின் கடன் புத்தகத்தில் வெறும் 0.88 சதவீதம் ஆகும்.

    பங்குகளின் அடிப்படையில் அதானி குழுமத்துக்கு எந்த கடனும் வழங்கவில்லை.

    கடன் வழங்குவதற்கான உறுதியான சொத்துகள் மற்றும் போதுமான பணப்புழக்கங்களை அதானி குழும திட்டங்கள் கொண்டுள்ளன. அத்துடன் கடனை திருப்பி செலுத்துவதில் சிறந்த வரலாறும் இந்த குழுமத்துக்கு உண்டு.

    இதைப்போல இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காக அதானி குழுமத்திடம் இருந்து எந்தவித மறுநிதி கோரிக்கைகளும் வரவில்லை.

    இவ்வாறு பாரத ஸ்டேட் வங்கி தலைவர் தினேஷ் கரா தெரிவித்தார்.

    இதற்கிடையே அதானி குழுமத்துக்கு தாங்கள் வழங்கிய கடன் பாதுகாப்பாக இருப்பதாக ஜம்மு-காஷ்மீர் வங்கி (ஜே.கே.வங்கி) தெரிவித்து உள்ளது.

    இது குறித்து வங்கியின் துணை பொதுமேலாளர் நிஷிகாந்த் சர்மா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், 'அதானி குழுமத்துக்கான எங்கள் கடன்கள் ஜே.கே. வங்கியால் நிதியளிக்கப்பட்ட திட்டங்களின் சொத்துகளுக்கு மேல் பாதுகாக்கப்படுகின்றன' என தெரிவித்தார்.

    மேலும் அவர், 'அதானி குழுமத்துக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2 மின் திட்டங்களுக்காக ரூ.400 கோடி கடன் வழங்கப்பட்டது. தற்போது அது சுமார் ரூ.250 கோடியாக உள்ளது. கடனுக்கான பணத்தை திருப்பி செலுத்துவது ஒழுங்காக நடைபெறுவதுடன், 2 மின் திட்டங்களும் மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களுடன் செயல்படுகின்றன. அதானி குழுமத்தின் கணக்கில் ஒரு பைசா கூட பாக்கி இல்லை' என்றும் கூறினார்.

    • அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு சுமார் ரூ.8.22 லட்சம் கோடி அளவுக்கு சரிந்தது.
    • அதானி விவகாரத்தில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும்.

    புதுடெல்லி :

    அதானியின் நிறுவனங்கள் பங்குகள் விவகாரத்தில் பெரும் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை, தொடர்ந்து பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு சுமார் ரூ.8.22 லட்சம் கோடி அளவுக்கு சரிந்தது.

    பொதுமக்களின் முதலீடுகள் பெருமளவில் உள்ள எல்.ஐ.சி., பாரத ஸ்டேட் வங்கி போன்ற பொதுத்துறை நிறுவனங்கள், அதானியின் நிறுவனங்களில் முதலீடுகள் செய்துள்ளதால், இது மக்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் உடனே விவாதிக்க வேண்டும், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நேற்று முன்தினம் கோரின. அரசு ஏற்காத நிலையில், இரு அவைகளும் முடங்கின.

    இந்த நிலையில், டெல்லியில் பாராளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயின் அறையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, ஆம்ஆத்மி, பாரத ராஷ்டிர சமிதி, சிவசேனா, ராஷ்டிரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாடு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (ஜோஸ் மணி), கேரள காங்கிரஸ் (தாமஸ்), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி என 16 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதானி நிறுவன விவகாரத்தில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த மறுப்பதால், அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்வது என்பது பற்றி விவாதித்தனர்.

    முடிவில் இந்த கூட்டத்தில் அதானி விவகாரத்தில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். அதற்கு மத்திய அரசு அனுமதிக்காவிட்டால் இரு அவைகளுக்குள்ளும் போராட்டம் நடத்துவது என்று தீர்மானித்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, "பிரதமர் வற்புறுத்தலின் பேரில் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதால், சுதந்திரமான விசாரணைதான் எல்.ஐ.சி., பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பிற நிறுவனங்களைக் காப்பாற்றும். இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை" என தெரிவித்தார்.

    • அதானி நிறுவனங்களின் விவகாரம் அதிமுக்கியமானது
    • எல்.ஐ.சி. என்பது ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும்.

    புதுடெல்லி :

    அதானி நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் சமீபத்தில் மோசடிக் குற்றச்சாட்டுகளுடன் வெளியிட்ட அறிக்கை, நாட்டையே அதிர்வில் ஆழ்த்தி உள்ளது.

    இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. இதை மத்திய அரசு தரப்பில் ஏற்காத நிலையில், பாராளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று அலுவல் எதையும் நடத்த முடியாமல் முடங்கிப்போயின.

    இதையொட்டி காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் எம்.பி., செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாடு சந்தித்து வருகிற பிரச்சினைகளை விவாதிப்பதற்கான இடம்தான் பாராளுமன்றம். இதன் மூலம், எம்.பி.க்களின் அக்கறைகளைப் பற்றியும், எம்.பி.க்கள் எவற்றில் கவனம் செலுத்துகிறார்கள் என்பதைக் குறித்தும் நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள முடியும்.

    ஆனால் துரதிரஷ்டவசமாக மத்திய அரசு இதன் நன்மையை கண்டு கொள்ள வில்லை. எனவேதான் அவர்கள் (அரசில் அங்கம் வகிக்கிறவர்கள்) விவாதங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். இதன் விளைவுதான், நாம் பாராளுமன்றத்தின் 2 நாட்களை இழந்து இருக்கிறோம்.

    அதானி நிறுவனங்களின் விவகாரம் அதிமுக்கியமானது, நாட்டின் மக்களைப் பாதிக்கிறது என்பதால்தான் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு விரும்புகின்றன. இது போதுமான முக்கியத்துவம் வாய்ந்த விஷயம், அரசு விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. ஆனால் தனக்கு தர்ம சங்கடமாக அமைகிற எந்தவொரு விஷயத்தையும் விவாதிக்க அரசு விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையொட்டி சசி தரூருக்கு பதில் அளிப்பதுபோல பா.ஜ.க. எம்.பி. மகேஷ் ஜேத்மலானி பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    மத்திய அரசின் தூண்டுதலால்தான் அதானியின் நிறுவனங்களில் எல்.ஐ.சி., முதலீடு செய்தது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது.

    இதில் மத்திய அரசு செய்வதற்கு என்ன இருக்கிறது? இதில் மத்திய அரசின் பங்களிப்பு என்ன என்பதை யாரும் கூறவில்லை. எல்.ஐ.சி. என்பது ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும். அவர்கள் சில முதலீடுகளைச் செய்வது என்று தீர்மானித்து செயல்பட்டிருக்கிறார்கள்.

    இந்த முதலீடுகளில் தவறுகள் நேர்ந்திருந்தால் இது பற்றி இந்திய பங்குச்சந்தை பரிமாற்ற வாரியம் (செபி) மற்றும் பாரத ரிசர்வ் வங்கிதான் விசாரிக்கும். அவர்கள் விசாரித்து அதன் அறிக்கை வரட்டும். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நியாயப்படுத்த முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 6 நாட்களில் மட்டும் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 26.5 சதவீதம் இழப்பை சந்தித்துள்ளது.
    • இந்திய வங்கிகளில் பொதுத்துறை வங்கிகளே அதானி குழுமத்திற்கு 90 சதவீதத்திற்கு அதிகமான கடன்களை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    அதானி குழுமம் மீது அமெரிக்காவின் ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை கூறியது.

    இதைத்தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக அதானியின் சொத்து மதிப்பும், கடும் சரிவை சந்தித்தது.

    கடந்த 24-ந் தேதி வரை உலக பணக்கார பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த கவுதம் அதானி தற்போது முதல் 10 இடங்களில் இருந்து வெளியேறியது மட்டுமல்லாமல் முகேஷ்அம்பானிக்கு பின் சென்று விட்டார். இதன் மூலம் கவுதம்அதானி ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற நிலையையும் இழந்துள்ளார்.

    இந்நிலையில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், எப்.பி.ஓ. பங்குகள் மூலம் ரூ.20 ஆயிரம் கோடி திரட்டும் திட்டத்தையும் நேற்று ரத்து செய்தது.

    இதுஒரு புறம் இருக்க, பங்குச்சந்தைகளில் அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் 6 நாட்களில் மட்டும் ரூ.9 லட்சம் கோடி (100 பில்லியன் டாலர்) அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது.

    அதாவது கடந்த 6 நாட்களில் மட்டும் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 26.5 சதவீதம் இழப்பை சந்தித்துள்ளது. அதானி டோடல் கேஸ் நிறுவனம் 10 சதவீதம், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் 10 சதவீதம், அதானி துறைமுகங்கள் 6.1 சதவீதம், அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனம் 10 சதவீதம், என்.டி.டி.வி. பங்குகள் 5 சதவீதம், அதானி பவர் 5 சதவீதம், அதானி வில்மர் 22.4 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன. ஏ.சி.சி. லிமிடெட் 0.1 சதவீதமும், அம்புஜா சிமெண்ட்ஸ் 5.3 சதவீதமும் உயர்ந்துள்ளது.

    இதன் மூலம் அதானி குழுமத்தில் 10 நிறுவனங்கள், 8 நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது.

    இதற்கிடையே அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ள கடன்கள் குறித்த விபரங்களை தெரிவிக்குமாறு வங்கிகளிடம் பாரத ரிசர்வ் வங்கி கேட்டுள்ளது. வங்கிகளிடம் இருந்து அதானி குழும நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக ரூ.2.1 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளன. இவற்றின் இந்திய வங்கிகள் வழங்கிய கடன் மட்டும் சுமார் 40 சதவீதம் என கூறப்படுகிறது.

    இந்திய வங்கிகளில் பொதுத்துறை வங்கிகளே அதானி குழுமத்திற்கு 90 சதவீதத்திற்கு அதிகமான கடன்களை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பாரத ஸ்டேட் வங்கி ரூ.22 ஆயிரம் கோடியையும், பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.7 ஆயிரம் கோடியையும், பரோடா வங்கி ரூ.7 ஆயிரம் கோடியையும் அதானி குழும நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர். மற்ற வங்கிகள் கடன் விபரங்களை வெளியிடவில்லை.

    இந்நிலையில் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்கிகள் அதானி குழுமங்களுக்கு வழங்கிய கடன் விபரங்கள் குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு பாரத ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

    • மோடி அரசின் ஆதரவோடு அதானி இந்த ஊழலை நடத்திக்கொண்டிருக்கிறார்.
    • பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்டு இருக்கிறது.

    புதுடெல்லி

    பாராளுமன்றத்தில் நேற்று அதானி குழும விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியது. எம்.பி.க்களின் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச்சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    அது வருமாறு:-

    கனிமொழி (தி.மு.க. எம்.பி.):- அதானி குழுமத்தின் நிலையால் பொதுத்துறைகளில் சாமானிய மக்கள் முதலீடு செய்த பணம் என்ன ஆனது என நாடாளுமன்ற இரு அவைகளிலும் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினோம். ஆனால் பா.ஜனதா இதை காதில் வாங்கவில்லை. அவையை ஒத்தி வைத்துவிட்டனர். நாங்கள் கூட்டுக்குழு விசாரணை கேட்டு இருக்கிறோம். தமிழக முதல்-அமைச்சரும் இதை வலியுறுத்துகிறார். நிச்சயம் நாங்கள் இதைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

    கார்த்தி ப.சிதம்பரம் (காங்கிரஸ் எம்.பி.):- வெளிப்படையான, தரமான சந்தை பரிமாற்றம் உள்ள ஒரு நாட்டில் வெளிநாட்டு அமைப்பு சில கருத்துகளை சொன்னால் அந்த நாட்டின் பொருளாதாரத்தை கவனிக்கும் மந்திரியோ, அதிகாரியோ மக்களை சந்தித்து நாட்டின் நிலை என்ன? என்று வெளிப்படையாக சொல்லி இருக்க வேண்டும். சாதாரண மக்களின் பணம் பாதுகாப்பாக இருக்கிறதா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பொதுத்துறைகளை நிர்வகிக்கும் செபி, ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளும் இதில் சம்பந்தப்பட்டு உள்ளன. இதையெல்லாம் பற்றி அரசு ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவையை ஒத்திவைத்து விட்டனர். இதுபற்றி முதலில் அரசு பதில் அளிக்கட்டும். அது திருப்தியா? இல்லையா? என்பதை பார்த்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்வோம்.

    வெளிநாட்டு அமைப்பு சொல்வதாலேயே அது உண்மை என ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்?. இதில் பொதுமக்களின் பணமும் சம்பந்தப்பட்டு இருக்கிறது. அது பத்திரமாக இருக்கிறதா என்பதையும் விளக்க வேண்டும்.

    ஜோதிமணி (காங்கிரஸ் எம்.பி.):- அதானி குழுமம் வீழ்ச்சியால் அதில் முதலீடு செய்துள்ள எல்.ஐ.சி.யில் ஒரே நாளில் மக்கள் பணம் ரூ.30 ஆயிரம் கோடி நாசமாகியுள்ளது. மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை இந்த பிரச்சினை ஏற்படுத்தி உள்ளது. மோடி அரசின் ஆதரவோடு அதானி இந்த ஊழலை நடத்திக்கொண்டிருக்கிறார். ராகுல்காந்தி கடந்த 8 ஆண்டுகளாக இது அதானி அரசு என்று சொல்வது தற்போது நிரூபணமாகி இருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதானி எண்டர் பிரைசஸ் நிறுவனம் ரூ.20 ஆயிரம் கோடிக்கு பங்குகளை விற்க முதலில் திட்டமிட்டு இருந்தது.
    • முதலீட்டாளர்கள் நலன் கருதி பங்கு விற்பனை ரத்து செய்வதாக அதானி நிறுவனம் அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    ஹிண்டன் பர்க் நிறுவனம் கூறிய முறைகேடு புகாரால் அதானி குழும பங்குகள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. மேலும் உலக பணக்காரர்கள் பட்டியலிலும் 15-வது இடத்துக்கு கவுதம் அதானி தள்ளப்பட்டார்.

    அதானி எண்டர் பிரைசஸ் நிறுவனம் ரூ.20 ஆயிரம் கோடிக்கு பங்குகளை விற்க முதலில் திட்டமிட்டு இருந்தது. முதலீட்டாளர்கள் நலன் கருதி இந்த பங்கு விற்பனை ரத்து செய்வதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

    இதற்கிடையே அதானி குழுமம் விவகாரம் தொடர்பாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது.

    அதானி குழும நிறுவனங்களில் செய்த முதலீடு கொடுத்த கடன் விவரங்களை அளிக்க வேண்டும் என்று ஆர்.பி.ஐ. வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

    ×