search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹிண்டன்பர்க் அறிக்கை"

    • ஹிண்டன்பர்க் அறிக்கையில் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்பட்டது
    • அறிக்கைகளை ஆதாரமாக கொண்டு மனு தாக்கல் செய்வது தவறு என உச்ச நீதிமன்றம் கூறியது

    இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்று, அதானி குழுமம். இதன் நிறுவனர், இந்தியாவின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவரான குஜராத் மாநிலத்தை சேர்ந்த கவுதம் அதானி (Gautam Adani).

    கடந்த 2023 ஜனவரி மாதம், அமெரிக்காவை சேர்ந்த பொருளாதார புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் (Hindenburg), அதானி குழுமம் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி நீண்ட அறிக்கையை வெளியிட்டது. இதை தொடர்ந்து அதானி குழும பங்குகள் பெரும் சரிவை சந்தித்தது.

    இதனை தொடர்ந்து, செபி (SEBI) எனப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் இந்த முறைகேடுகள் குறித்த விசாரிக்க தொடங்கியது.

    உச்ச நீதிமன்றத்திலும் அதானி குழுமத்திற்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

    கடந்த மார்ச் மாதம், இது குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

    இரு மாதங்கள் கழித்து "குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படவில்லை" என இந்த குழு அறிக்கை சமர்ப்பித்தது.

    இதை தொடர்ந்து அதானி குழுமத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவித்திருப்பதாவது:

    ஹிண்டன்பர்க் அறிக்கை போன்ற ஒரு அறிக்கையை மட்டுமே அடிப்படையாக கொண்டு எந்த விசாரணைக்கும் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி இது குறித்து விசாரணை செய்வதுதான் சரியானது. இதில் தற்போது உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. மேலும், தனியாக "சிட்" (SIT) எனப்படும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உத்தரவிட முடியாது. நீதிமன்றம் நியமித்த குழுவின் பரிந்துரைகளின்படி அடுத்த கட்ட நடவடிக்கையை மத்திய அரசும், செபியும்தான் எடுக்க வேண்டும். தகுந்த ஆய்வுகளை மேற்கொள்ளாமல் பொது வெளியில் வரும் அறிக்கைகளை மட்டுமே ஆதாரமாக கொண்டு மனு தாக்கல் செய்வதும், அவற்றின் அடிப்படையில் உத்தரவிடுவதும் நீதி பரிபாலனத்திற்கே இழுக்காக அமையும்.

    இவ்வாறு அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அத்துடன், மொத்தம் உள்ள 22 புகார்களில் 20 குற்றச்சாட்டுகளுக்கான விசாரணையை செபி முடித்து விட்டது. மீதமுள்ள 2 வழக்குகளிலும் அடுத்த 3 மாதங்களுக்குள் செபி விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இத்தீர்ப்பு குறித்து கவுதம் அதானி, எக்ஸ் சமூக வலைதளத்தில் தனது அதிகாரபூர்வ கணக்கில் கூறியிருப்பதாவது:

    மதிப்பிற்குரிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் உண்மை எப்பொதும் நிலைத்திருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சத்தியமே வெல்லும். எங்களுடன் உறுதுணையாக இருந்தவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தியாவின் வளர்ச்சிக்கு எங்களின் சிறு பங்களிப்பு தொடரும். ஜெய் ஹிந்த்.

    இவ்வாறு அதானி தெரிவித்துள்ளார்.



    • வல்லுநர் குழு முதல் கட்ட விசாரணை அறிக்கையை மே மாதம் தாக்கல் செய்தது.
    • ஏதேனும் விதிமீறல் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செபி தெரிவித்துள்ளது.

    அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும், அதானி நிறுவனம் பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தி மோசடியில் ஈடுபட்டதாகவும், அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அதானி நிறுவனத்தின் மீது அடுக்கடுக்கான கேள்விகளையும் முன்வைத்திருந்தது.

    இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்தில் முதல் கட்ட விசாரணை அறிக்கையை மே மாதம் தாக்கல் செய்தது. அதில், அதானி குழும நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடி வேலை செய்தற்கான எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்தது. அதேசமயம், 2014-2019 காலகட்டத்தில் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) செய்த பல திருத்தங்களை மேற்கோள் காட்டி, இது விசாரணை திறனைக் கட்டுப்படுத்தியதாக குறிப்பிட்டிருந்தது.

    இந்நிலையில், அதானி குழும நிறுவனங்கள் மீதான முறைகேடு புகார் குறித்து இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) விசாரணை அறிக்கையை இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

    அதில், வல்லுநர் குழுவின் அறிக்கையில் உள்ள கருத்துக்களை ஏற்கமுடியாது என்றும், 2019 ஆம் ஆண்டில் செய்த மாற்றங்கள், வெளிநாட்டு நிதிகளின் பயனாளிகளைக் கண்டறிவதை கடினமாக்கவில்லை என்றும் கூறி உள்ளது. ஏதேனும் விதிமீறல் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தது.

    • ஹிண்டர்பர்க் அறிக்கை காரணமாக அதானி நிறுவன பங்குகள் கடுமையான சரிந்தன.
    • விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    புதுடெல்லி:

    அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அதானி நிறுவனத்தின் மீது அடுக்கடுக்கான கேள்விகளையும் முன்வைத்திருந்தது. இந்திய அரசியலில் இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    ஹிண்டர்பர்க் அறிக்கை காரணமாக அதானி நிறுவன பங்குகள் கடுமையான சரிந்தன. அதானி நிறுவனம் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் குழுவை அமைத்தது. இந்த குழு ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்தில் முதல் கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், அதானி குழும நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடி வேலை செய்தற்கான எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளது. அதானி நிறுவனம் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை என செபியும் கூறியிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சீலிட்ட உறையில் மத்திய அரசு அளிக்கும் ஆலோசனையை ஏற்க நீதிபதிகள் ஏற்க மறுப்பு
    • இந்த விவகாரத்தில் விவகாரத்தில் வெளிப்படுத்த தன்மை இருக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து

    புதுடெல்லி:

    அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்தது. இந்த விவகாரம் இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் அதானி குழும முறைகேடு குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விசாரிக்கக் கோரி எம்.எல்.சர்மா, பிரசாந்த் பூஷன், காங்கிரசைச் சேர்ந்த ஜெயா தாக்கூர், வழக்கறிஞர் விஷால் திவாரி உள்ளிட்டோர் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    விசாரணைக்கு முன்னதாக மத்திய அரசின் சார்பில், இந்த விவகாரத்தை முழுமையாக வெளிப்படைத்தன்மையுடன் விசாரிக்க தயாராக இருப்பதாகவும், முதலீட்டாளர்களின் நலனை கருதி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

    இதனை நீதிபதிகள் நிராகரித்ததுடன், மனுதாரர்களின் யோசனையை கேட்டது. இந்த விவகாரத்தில், குறிப்பாக இந்த ஒட்டுமொத்த விவகாரத்தையும் உயர் அதிகாரம் படைத்த குழு விசாரிக்க வேண்டும் என மனுதாரர் விஷால் திவாரி தெரிவித்ததையும், உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் அதானி குழுமம் மீதான அறிக்கை குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என பிரசாந்த் பூஷன் தெரிவித்த கருத்தையும் நீதிபதிகள் பதிவு செய்துகொண்டனர்.

    9 மத்திய விசாரணை அமைப்புகளைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் தரப்பிலும் வாதம் முன்வைக்கப்பட்டது.

    அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இதில் தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு எவ்வித குழுவையும் அமைக்க மாட்டோம் என தெளிவுபடுத்தினர். மேலும், ஹிண்டன்பெர்க் அறிக்கையை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என்று கூறினர்.

    இந்த விவகாரத்தில் வெளிப்படுத்த தன்மை இருக்க வேண்டும் என விரும்புகிறோம். முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. சீலிட்ட உறையில் மத்திய அரசு அளிக்கும் ஆலோசனையை ஏற்க மாட்டோம். குழுவை நாங்களே ஏற்படுத்துவோம். இந்த விவகாரத்தில் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தோல்வி என கருத முடியாது, என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    • நாதன் ஆண்டர்சனை விசாரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என எம்.எல்.ஷர்மா வாதிட்டார்.
    • இந்திய முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது என நீதிபதிகள் கருத்து

    புதுடெல்லி:

    அதானி குழுமம் முறைகேடு செய்திருப்பதாக கூறி ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக விசாரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா, விஷால் திவாரி ஆகியோர் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

    வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்த மனுவில், "அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை தொடுத்த தாக்குதலால், அதானி நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது, முதலீட்டார்களை பெரிதும் பாதித்துள்ளது. மக்களின் பணம் வீணானது. நாட்டின் பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலில் அதிகாரிகளால் எந்த உறுதியான நடவடிக்கைகளும் எடுக்க முடியவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

    இந்த வழக்கில், மத்திய அரசுடன் இந்திய ரிசர்வ் வங்கி, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி உள்ளிட்ட அமைப்புகள் பிரதிவாதிகளாக இணைக்கப்பட்டுள்ளன.

    இவ்வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்பு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில் திங்கட்கிழமைக்குள் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    குறிப்பாக ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் நாதன் ஆண்டர்சனை விசாரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா வாதிட்டார். உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஹிண்டன்பர்க் அறிக்கையை ஆய்வு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் விஷால் திவாரி வாதிட்டார்.

    வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், 'இந்திய முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது, இது தொடர்பான அக்கறையை நாம் காட்டவேண்டி உள்ளது. எனவே, முதலீட்டாளர்களை எவ்வாறு பாதுகாக்கப் போகிறோம்? என்ற விவரத்தை செபியிடம் கேட்டு, ஆலோசனை பெற்று திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும்' என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தாவுக்கு உத்தரவிட்டு மனுக்கள் மீதான விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.

    'நாங்கள் இதில் தலையிட்டு, இது மீண்டும் நடக்காமல் இருக்க ஒரு வழிமுறை இருக்கிறதா? கொள்கை விஷயங்களில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அது அரசாங்கம் தொடர்புடையது. இந்த நடவடிக்கை விஷயத்தில் இந்திய அரசு ஆர்வமாக இருந்தால், ஒட்டுமொத்த நிலைமை மற்றும் ஆய்வு மேற்கொள்ள நீதிபதி உள்பட நிபுணர்கள் குழுவை அமைக்க பரிந்துரைக்கிறோம்' என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.

    • அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிய ஆரம்பித்தன.
    • ஹிண்டன்பர்க் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது.

    அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வறிக்கை, அதானி குழுமத்தை ஆட்டம் காணச் செய்துள்ளது. அந்த அறிக்கையில், "அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த 3 ஆண்டுகளாக அபரிமிதமாக உயர்ந்தது. இதில் முறைகேடு நடந்துள்ளது. மேலும், போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர்" என கூறப்பட்டிருந்தது. ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிய ஆரம்பித்தன.

    இந்த சூழ்நிலையில், ஹிண்டன்பர்க் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட நிறுவனமான வாச்டெல்லை அதானி குழுமம் நியமித்துள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

    அதானி குழும பங்குகள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை கையாள்வது குறித்து ஆலோசனை வழங்குவதற்காக வாட்ச்டெல், லிப்டன், ரோசன் & காட்ஸ் நிறுவனத்தின் மூத்த வழக்கறிஞர்களை நியமித்துள்ளதாக பிரிட்டனைச் சேர்ந்த நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட இந்த சட்ட நிறுவனம், கார்ப்பரேட் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றது. பெரிய மற்றும் சிக்கலான பரிவர்த்தனைகளை தொடர்ந்து கையாளுகிறது.

    ஹிண்டன்பர்க் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை பொய்யானது, உள்நோக்கம் கொண்டது என்றும், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அதில் இடம்பெற்றுள்ளன என்றும் அதானி குழுமம் கூறியது. அமெரிக்க நிறுவனங்கள் பலனடைய வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×