search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi firing"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உயிர் நீத்தவர்களின் உருவ படத்திற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • எதற்காக அவர்கள் போராடினார்களோ அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்ற மக்களுடன் துணை நிற்போம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த, உயிர் நீத்தவர்களின் உருவ படத்திற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அவருடன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா , தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.

    பின்னர் கனிமொழி எம்.பி. அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தில் அவர்களின் நினைவுகளை மனதில் ஏந்தி அஞ்சலி செலுத்துகிறோம்.

    எதற்காக அவர்கள் போராடினார்களோ அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்ற மக்களுடன் துணை நிற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமியின் துரோகங்களும், தவறுகளும் அவரது அரசியல் வாழ்க்கையை அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும் என முதல்வர் தாக்கு
    • ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்திலும் விரைவாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என உறுதி

    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமான அறிக்கை தொடர்பாக தமிழக சட்டசபையில் உறுப்பினர்கள் பேசினார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    இந்தப் பிரச்சனையை அப்போதைய அ.தி.மு.க. அரசு சரியாக கையாளவில்லை. மக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டு அறிய அன்றைக்கு அந்த அரசு தயாராக இல்லை. அது மட்டும் அல்லாமல் ஊர்வலமாக வந்த மக்கள் மீது பலத்தை பயன்படுத்தி கலைப்பதற்கு திட்டமிட்டார்கள். துப்பாக்கிச்சூடு திட்ட மிட்டு நடத்தப்பட்டுள்ளதாக அருணா ஜெகதீசன் ஆணையம் உறுதி செய்து வெளியிட்டுள்ளது. 11 ஆண்கள் இரண்டு பெண்கள் என 13 பேர் பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். 40 பேர் பலத்த காயங்களை அடைந்துள்ளனர்.

    அன்றைய முதல்-அமைச்சர் பழனிசாமியின் எதேச்சதிகாரத்திற்கு அந்த சம்பவம் எடுத்துக்காட்டாய் உள்ளது. நானும் சம்பவத்தை டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என பழனிசாமி கூறியது யாரும் மறந்திருக்க முடியாது. கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவாங்க "கடப்பாரைய முழுங்கிட்டு கசாயம் குடிச்சிடுவாங்க"ன்னு... அந்த அளவிற்கு மிகப்பெரிய பொய்யை அவர் அன்று சொல்லியுள்ளார்.

    இந்த ஆணையத்திடம் மிக வலுவாக இருக்கும் ஆதாரம் என்னவென்றால் சாட்சியாக விசாரிக்கப்பட்ட அப்போதைய தலைமைச் செயலாளர், அப்போதைய டிஜிபி, அப்போதைய உளவுத்துறை ஐஜி ஆகியோர் தூத்துக்குடியில் நடந்த சம்பவங்களை நிமிடத்திற்கு நிமிடம் அன்றைய முதல்வரிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்கள். ஊடகங்களைப் பார்த்து தெரிந்துகொண்டேன் என்பது மிகத்தவறு. அவர்கள் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஆணையமே சொல்லி விட்டது. அந்த ஆணையம் நம்மால் அமைக்கப்பட்டது அல்ல. அவர்கள் அமைத்த ஆணையம்தான். ஒருவேளை அதை நாம் அமைத்திருந்தால், இதில் அரசியல் இருக்கிறது என்றுகூட சொல்லியிருக்கலாம். ஆனால், அவர்கள் அமைத்த ஆணையமே சொல்லியிருக்கிறது. நேற்றைக்கு தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அறிக்கைகளுமே, அவர்கள் அமைத்த ஆணையங்களால் அளிக்கப்பட்ட அறிக்கைகளாகும். நாம் வந்து எந்த ஆணையமும் இதற்காக அமைக்கவில்லை.

    நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் பக்கம் 252-ல் இது அம்பலம் ஆகி இருக்கிறது. ''தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'அந்தச் சம்பவத்தை மற்றவர்களைப் போல ஊடகங்களில் வந்த செய்தி மூலம் அறிந்து கொண்டேன்' என்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியும் அளித்திருக்கிறார். ஆனால் இந்த ஆணையத்திடம் மிக வலுவாக இருக்கும் ஆதாரம் என்னவென்றால், சாட்சியாக விசாரிக்கப்பட்ட அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அப்போதைய டி.ஜி.பி. ராஜேந்திரன், அப்போதைய உளவுத் துறை ஐ.ஜி சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடியில் நடக்கும் சம்பவங்களையும், அங்குள்ள நிலவரங்களையும் நிமிடத்துக்கு நிமிடம் அன்றைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து வந்ததாகக் கூறினார்கள். எனவே, ஊடகங்கள் மூலமாகத்தான் அந்தச் சம்பவம் பற்றி தெரிந்து கொண்டதாக அவர் கூறியது தவறான கருத்து என்பது இந்த ஆணையத்தின் கருத்தாகும். இது ஆணையத்தின் அறிக்கையில் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

    அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஆணையமே, இதனை உறுதிப்படுத்தி இருக்கிறது. கொடூரமான கொலைவெறித் தாக்குதல் தொடர்பாக நேரடி வர்ணனைகளை தனது அறையில் உட்கார்ந்து கேட்டுவிட்டு, வெளியில் வந்து 'எனக்கு எதுவும் தெரியாது' என்று சொன்னவர்தான் அன்றைக்கு முதல்வராக இருந்த பழனிசாமி. அவரது துரோகங்களும், தவறுகளும் அவரது அரசியல் வாழ்க்கையை அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். புதிதாக நாம் எதையும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இதனால் நான் இதற்கு மேல் எதையும் சொல்ல விரும்பவில்லை. இதற்கான தண்டனையின் தொடக்கத்தைத்தான் தேர்தல் தோல்வி மூலமாக அதிமுகவுக்கு தமிழ்நாட்டு மக்கள் வழங்கினார்கள்.

    ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, இச்சம்பவத்தில் தொடர்புடைய சில அலுவலர்கள்மீது துறைரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான அந்தப் பணிகளைத் தொடங்கியிருக்கிறோம். அதனுடைய விவரத்தை இந்த அவைக்கு நான் இப்போது தெரிவிக்க விரும்புகிறேன். தூத்துக்குடி மாவட்டத்தின் அப்போதைய ஆட்சியர்மீது, துறைரீதியான நடவடிக்கை பொதுத் துறை மூலமாக எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினை சேர்ந்த மூன்று வருவாய் துறை அதிகாரிகள்மீது தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு & மேல்முறையீடு) விதிகளின் பிரிவு 17(B)–ன்கீழ் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. உள்துறை மூலமாக, அப்போதைய தென் மண்டல காவல் துறைத் தலைவர், திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஒரு காவல் துணைக் காண்காணிப்பாளர், மூன்று ஆய்வாளர்கள், ஒரு சார்-ஆய்வாளர் மற்றும் 7 காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன. இதில் நேரடியாக ஈடுபட்ட ஒரு ஆய்வாளர் உட்பட 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

    இந்த ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்திலும் விரைவாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு முடிவுக்குக் கொண்டுவரப்படும். ஒரு ஆட்சி நிர்வாகம் இரக்கமற்று எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணம்தான், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த தூத்துக்குடி கொடூரம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. நிர்வாகத்தை நடத்தக்கூடிய அதிகாரிகளாக இருந்தாலும், சட்டம்-ஒழுங்கைக் காக்கக்கூடிய காவலர்களாக இருந்தாலும், மனிதாபிமானம் கொண்டவர்களாக, மக்கள் சேவகர்களாக மட்டுமே நடந்து கொள்ள வேண்டுமே தவிர, வேறு மாதிரியாக நடந்து கொள்வது மனிதத் தன்மைக்கே விரோதமானது என்பதை உணர வேண்டும். அதிகாரமும், சட்டமும் மக்களைக் காக்கவே என்பதை அனைவரும் உணர வேண்டும். இது ஏதோ இப்பொழுது சொல்கிற உறுதிமொழி அல்ல; ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தேர்தல் நேரத்தில் சொன்ன உறுதிமொழிதான். யார், யார் குற்றவாளிகளோ, அவர்களெல்லாம் நிச்சயமாக கூண்டில் ஏற்றப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

    மேலும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு, ஏற்கெனவே வழங்கிய நிதியோடு, மேலும், கூடுதலாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரிய வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்தது.
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் ஒருவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு விஷயத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக கூறிய தேசிய மனித உரிமைகள் ஆணையம், வழக்கை முடித்து வைத்தது.



    துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் விசாரணை நடத்துவதற்கு ஒரு நபர் கமிஷன் அமைத்தது போன்றவை திருப்தி அளிப்பதாக மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது.

    துப்பாக்கி சூடு சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்து ஓராண்டு முடிந்த நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் நினைவுகள் மக்களை விட்டு இன்னும் அகலவில்லை.
    தூத்துக்குடி:

    தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து ஓராண்டு ஆன நிலையில் இன்னும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து போனது அந்த நிகழ்வு. அதற்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையின் வருகை மற்றும் செயல்பாடுகள், அதன் விளைவால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், போராட்டங்கள், போராட்டத்தின் இறுதியாக நிகழ்ந்த துப்பாக்கி சூடு, ஆலை மூடல், மீண்டும் திறக்க முயற்சி என ஒரு பார்வை!

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை  போராட்டம் கடந்து வந்த பாதை:

    * 1990: ஆண்டின் ஆரம்ப காலகட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்க கோவா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் மறுப்பு.

    * 1992: மராட்டிய மாநிலம் ரத்தினகிரியில் ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி!

    * 1993: மராட்டியத்தில் விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக ஸ்டெர்லைட் வெளியேற்றப்பட்டது.

    * 1.8.1994: தென் தமிழகத்தின் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு அனுமதி!

    * 14.10.1996: மாசுக்கட்டுப்பாடு வாரியம் நிபந்தனையுடன் அனுமதி!

    * 23.11.1998: ஐகோர்ட்டு ஆணைப்படி ஆலை மூடல் (பிறகு அபராதம் கட்டி ஆலை திறக்கப்பட்டது)

    * 29.3.2013: ஆலையை மூட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு.

    * 31.5.2013: தமிழக அரசின் உத்தரவை தேசிய பசுமை தீர்ப்பாயம் ரத்து செய்து ஆலையை திறக்க அனுமதி.

    * 5.2.2018: ஆலையை மூட மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு.

    * 12.2.2018: குமாரரெட்டியாபுரத்தில் மக்கள் 100 நாள் போராட்டம் அறிவிப்பு.

    * மார்ச் 2018: தூத்துக்குடி முழுவதும் கடை அடைப்பு, போராட்டம்.  

    * 9.4.2018: மாசு கட்டுப்பாட்டு வாரியம் உரிமத்தை புதுப்பிக்க மறுப்பு.

    * 21.5.2018: போராட்டங்களுக்கு தடைவிதித்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு. ஆனால், மக்களுக்கு செய்திகள் சரியாக சென்று சேரவில்லை.

    * 22.5.2018: ஏற்கனவே அறிவித்தபடி போராட்டத்தின் 100-வது நாளை குறிக்கும் வண்ணம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட மக்கள் பேரணி. போலீஸ் துப்பாக்கி சூடு, 13 பேர் பலி! 65 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி.

    * 23.5.2018: அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமி‌ஷன் அமைக்க தமிழக அரசு உத்தரவு.

    * செப்டம்பர் 2018: மீண்டும் விசாரணை ஆணையத்தின் காலகட்டம் 6 மாதங்கள் நீட்டிப்பு. அந்த 6 மாதமும் கடந்த நிலையில் இன்று வரை விசாரணை அறிக்கை வெளிவரவில்லை.

    * 28.5.2018: ஸ்டெர்லைட் ஆலையை மூடி மாவட்ட கலெக்டர் சீல் வைத்தார்.

    * 9.10.2018: வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு ஆணை.

    * டிசம்பர் 2018: தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க அனுமதி.

    18.2.2019: தமிழக அரசின் மேல்முறையீட்டில், சுப்ரீம் கோர்ட்டு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை.

    மன்னார் வளைகுடாவில் இருந்து 25 கிலோ மீட்டர் தள்ளி தான் ஆலை நிறுவப்பட வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்த கட்டுப்பாட்டை மீறி 14 கிலோ மீட்டரில் அதுவும் மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் ஆலை நிறுவப்பட்டது. ஆண்டுக்கு 4 லட்சம் டன் காப்பர் தயாரிக்கும் திறன் கொண்டது ஸ்டெர்லைட் ஆலை.

    இதில் ஒரு டன் காப்பர் தயாரிக்கவே 2 கிலோ கந்தக டை ஆக்சைடு வெளியேறுகிறது. இதுவரை மிக பிரமாண்டமாக வெளியேறிய கந்தக டை ஆக்சைடு காரணமாக 82 முறை வி‌ஷவாயு கசிந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வி‌ஷவாயு கசிவின் போது மக்களுக்கு கண் எரிச்சல், மயக்கம், மூச்சுத்திணறல், வாந்தி, தலைவலி போன்றவை ஏற்பட்டு உடல்நலன் பாதிக்கப்படுகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையால் நிலம், நீர், காற்று மாசுபடுவதாக மக்கள் தொடர்ச்சியாக போராடினர்.

    ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால். இது ஒரு பிரிட்டன் நிறுவனம். இது தமிழகத்தில் செய்துள்ள முதலீடு ரூ.336 கோடி. கடைசியாக 2017-ம் ஆண்டில் மட்டும் இந்த ஆலையின் லாபம் ரூ.1,657 கோடி!

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விவகாரம் ஒரு முக்கிய விவாத பொருளானது. அதன் விளைவு என்ன என்பது மே 23-ல் (நாளை) மக்கள் தீர்ப்பில் தெரியவரும்.

    ஸ்டெர்லைட் ஆலை, ஒரு டன் தாமிரத்துக்கு 2 கிலோ கந்தக டை ஆக்சைடு வாயுவை உமிழ்கிறது. இதுவரை, 82 நச்சு வாயு கசிவு சம்பவங்கள் நடந்துள்ளன.

    ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்களின் 100-வது நாளையொட்டி, கடந்த ஆண்டு மே 22-ந் தேதி போராட்டக்காரர்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

    மக்கள் மனதில் நீங்காத வடுவாக அமைந்த இந்த சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடியில் இன்று ஸ்டெர்லைட் போராட்டத்தில் பலியானோருக்கு நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதால் பாதுகாப்புக்காக 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்த போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கு போராட்ட குழுவினர் மற்றும் மக்கள் சார்பில் தூத்துக்குடி நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் நினைவு அஞ்சலி கூட்டங்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

    இதையொட்டி தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதற்காக விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா மேற்பார்வையில் 7 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 28 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 103 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 280 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 2 ஆயிரத்து 300 போலீசார் மற்றும் 6 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை உள்பட சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.



    தூத்துக்குடி சிப்காட் வளாகம், கலெக்டர் அலுவலகம், எப்.சி.ஐ. குடோன், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி பகுதி, தென்பாகம் போலீஸ் நிலையம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கலவர தடுப்பு வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா கூறும்போது, “பொதுமக்கள்-போலீஸ் உறவு நல்ல முறையில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் மக்கள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார்கள். தூத்துக்குடி மக்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்படுபவர்களாக உள்ளனர். தேவையான அளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிகள் அமைதியான முறையில் நடக்க பொதுமக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று கூறினார்.

    இது தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேசுவரன் தலைமையில் நேற்று மாலை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நாளை (அதாவது இன்று) எந்தவித சிறிய அசம்பாவிதமும் நடக்காமல் சிறந்த முறையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டத்தை நடத்த போலீசார் அனுமதி வழங்கலாம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiFiring #MaduraiHCBench
    மதுரை:

    தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமாபாபு, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே 22-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்திய பொதுமக்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இதில் கல்லூரி மாணவி உட்பட 16 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை 2018 ஆகஸ்ட் 14ல் சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது. அப்போது சி.பி.ஐ. 4 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியிருந்தனர்.

    இந்த காலக்கெடு 2018 டிசம்பர் 14-ல் முடிந்தது. காலக்கெடு முடிந்து 5 மாதங்கள் கடந்தும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஒரு போலீஸ் அதிகாரி மீது கூட சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை.



    துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு நெருங்குகிறது. இருப்பினும் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. தூத்துக்குடி சம்பவத்தில் மனித உரிமை மீறல்கள் அதிகளவில் நடைபெற்றுள்ளன.

    இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வருகிற 22-ந்தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த முடிவு செய்து, தூத்துக்குடி சிதம்பர நகர் வி.வி.டி. சந்திப்பு அல்லது எஸ்.வி.ஏ. பள்ளி மைதானம் அல்லது தூத்துக்குடி நகரில் ஏதாவது ஒரு மண்டபத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல் துறையினரிடம் ஏப்ரல் 26-ந் தேதி மனு அளிக்கப்பட்டது.

    இருப்பினும் இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனால் இந்த 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் மே 22-ந் தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சாமிநாதன், தண்டபாணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது அவர்கள் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டத்தை வருகிற 22-ந்தேதி தூத்துக்குடி பகுதியில் உள்ள உள்கூட்ட அரங்கில் காலை 9 மணி முதல் 11 மணி வரை நடத்த போலீசார் அனுமதி வழங்கலாம்.

    இந்த கூட்டத்தில் அதிகபட்சம் 250 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். கூட்டம் நடத்துவோர் போலீசாரின் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர். #ThoothukudiFiring #MaduraiHCBench
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் 10-ம் கட்ட விசாரணை இன்று தொடங்கியது. #ThoothukudiFiring #ArunaJagadeesan
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதையடுத்து நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள்.

    இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையம் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்களிடம் 9 கட்டங்களாக விசாரணை நடத்தியது. அப்போது 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து விசாரணை ஆணையத்தின் 10-ம் கட்ட விசாரணை இன்று தொடங்கியது. விசாரணை அதிகாரி அருணாஜெகதீசன் தலைமையில் தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் அமைந்து உள்ள முகாம் அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணை நடந்தது.

    இந்த விசாரணைக்காக 47 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இன்று வர சம்மன் அனுப்பப்பட்டிருந்தவர்கள் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த 10-ம் கட்ட விசாரணை நாளை மறுநாள் (10-ந் தேதி) வரை நடக்கிறது. #ThoothukudiFiring #ArunaJagadeesan

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாளை ஆஜராக வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiFiring #MaduraiHCBench
    மதுரை:

    தூத்துக்குடியை சேர்ந்த மோகன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் பொதுமக்கள் ஊர்வலம் நடத்தினர். அப்போது போலீசார் ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அருணா ஜெகதீஷ் ஆணையம் விசாரணை செய்து வருகிறது.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் பொய் வழக்குகளை பதிந்து துன்புறுத்தி வருகின்றனர். இதனால் தூத்துக்குடி பொது மக்களின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது.

    ஒரு மனிதன் தனது உரிமையை பெற போராடலாம் என சட்ட உரிமை கூறுகிறது. ஆனால் தூத்துக்குடி வட்டாரத்தில் கடந்த 3 மாதங்களாக பொதுகூட்டம், ஆர்ப்பாட்டம், விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட எவற்றிற்குமே போலீசார் அனுமதி தருவதில்லை.

    போராட்டம் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி கோருபவர்களை தேவையின்றி அழைக்கழிக்கபடுவதுடன் போலீசார் தொந்தரவு செய்கின்றனர். தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அரசுக்கு எதிராக சி.பி.ஐ., அருணா ஜெகதீஷ் ஆணையத்திடம் சாட்சி கூறுபவர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்கின்றனர்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அரசுக்கு எதிராக சி.பி.ஐ., அருணா ஜெகதீஷ் ஆணையத்திடம் சாட்சி கூறிய சந்தோஷ்ராஜ் என்பவர் மீது போலீசார் பல பொய் வழக்குகளை பதிந்துள்ளனர். தூத்துக்குடி போலீசார் சட்டபடி முறையாக நடக்கவில்லை. தூத்துக்குடியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 24 மணி நேரமும் வக்கீல் குழு பணியில் இருக்க சட்ட உதவிமையத்தின் உறுப்பினர் செயலருக்கு உத்தரவிட வேண்டும்.

    15.8.2018 முதல் 15.1.2019 வரை தூத்துக்குடியில் கைது செய்யபட்டவர்களுக்காக மூத்த வக்கீல் அடங்கிய குழுவினை தாலுகா அளவில் அமைக்க மாவட்ட சட்ட உதவி மையத்திற்கு வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பொய் வழக்கு பதிந்து, சட்டவிரோதமாக கைது செய்வதை தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த மனு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த 3 மாதங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் போராட்டம் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி கோரியவர்கள் எவ்வளவு? எத்தனை போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாளை (30-ந்தேதி) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கினை நாளை (30-ந் தேதிக்கு) ஒத்திவைத்தினர். #ThoothukudiFiring #MaduraiHCBench
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான 207 வழக்குகளின் ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர். #Thoothukudifiring
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந்தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் இறந்தனர். இது தொடர்பாக 249 வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். இதில் 5 வழக்குகள் மட்டும் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. பின்னர் ஐகோர்ட்டு உத்தரவுபடி மொத்தம் 207 வழக்குகளை ஒரே வழக்காக மாற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வந்தனர்.

    இந்நிலையில் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந்தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே உள்ள 5 வழக்கு தொடர்பாக திரட்டிய ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று 207 வழக்குகளின் ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கு ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர். #Thoothukudifiring
    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு நடைபெற்றது தொடர்பான வழக்கில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக போலீசார் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. #SterliteProtest #ThoothukudiFiring #CBI
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இறுதிக்கட்டமாக பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் பொதுமக்கள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. ஒரு வழக்கில் யாருடைய உத்தரவு பேரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டிருந்தது.


    இந்நிலையில் சிபிஐ தமிழக போலீசார் மற்றும் தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. #SterliteProtest #ThoothukudiFiring #CBI
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று 2-வது நாளாக விசாரணையை தொடங்கினர். #ThoothukudiFiring #CBI
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ந்தேதி நடந்த போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 99 போலீசாரும், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் காயம் அடைந்தனர்.

    இது தொடர்பாக சிப்காட், தென்பாகம், வடபாகம், முத்தையாபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு தமிழக அரசு மாற்றியது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் தூத்துக்குடியில் முகாமிட்டு விசாரணையை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி ஐகோர்ட்டு ஆணை பிறப்பித்தது.

    இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு தொடர்பான ஆவணங்களை கடந்த 8-ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதன்பேரில் சென்னை சி.பி.ஐ. சிறப்பு குற்றப்புலனாய்வு பிரிவு துணை சூப்பிரண்டு ரவி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்தார். சி.பி.ஐ. சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    கொலை முயற்சி, கொலை மிரட்டல், அரசு ஊழியர்களை பணிசெய்யவிடாமல் தடுத்தல், பயங்கர ஆயுதங்களை வைத்து தாக்குதல், சந்தேக மரணங்கள் உள்ளிட்ட 13 சட்டப்பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

    இந்த நிலையில் சி.பி.ஐ. சூப்பிரண்டு சரவணன் தலைமையில் வழக்கு விசாரணை அதிகாரியான சி.பி.ஐ. சிறப்பு குற்றப்புலனாய்வு பிரிவு துணை சூப்பிரண்டு ரவி மற்றும் 3 பேர் கொண்ட குழுவினர் நேற்று மதியம் தூத்துக்குடிக்கு வந்து விசாரணையை தொடங்கினர்.


    முதல்கட்டமாக அவர்கள் தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையம், தென்பாகம், வடபாகம், ஆயுதப்படை வளாகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வழக்கு தொடர்பாக ஆவணங்களை சேகரித்தனர்.

    சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது சேகரிக்கப்பட்ட ஆவணங்களுடன் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைத்த ஆவணங்களை ஒப்பிட்டு பார்த்தனர். இதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை தொடங்கினர்.

    அப்போது தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையம், தென்பாகம், வடபாகம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அடுத்தக் கட்ட நடவடிக்கையில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #ThoothukudiFiring #CBI
    கூவத்தூரில் நடந்ததை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கூறுவதால் தன் உயிர் போகும் என்றால் போகட்டும் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. கூறினார். #Karunas #Koovathur
    சென்னை:

    முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கடுமையாக கண்டித்தவர்களில் நானும் ஒருவன். போராடிய மக்களுக்கு ஆதரவாகவும், தூத்துக்குடி சம்பவத்திற்கு எதிராகவும் பேசியதற்காகவும் பழிவாங்கப்படுகிறேன். நான் ஒரு சமுதாயவாதி.

    நான் கூட்டணி கட்சி தலைவர், தோழமை கட்சி என்ற மரியாதை கூட கொடுக்காமல் கண்ணியமற்று பேசி வருகின்றனர்.

    நான் லொடுக்கு பாண்டி அல்ல. லொடுக்கு பாண்டியன், பெயரை சரியாக உச்சரியுங்கள். முக்குலத்து சமுதாய மக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர். அதை வரும் தேர்தலில் முக்குலத்து மக்கள் காண்பிப்பார்கள்.

    கோப்புப்படம்

    கூவத்தூரில் நடந்ததை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கூறுவேன், அப்படி கூறுவதால் என் உயிர் போகும் என்றால் போகட்டும், சமுதாயத்திற்காக என் உயிர் போகட்டும். இந்திய அளவில் மோடி அரசு டெபாசிட் இழக்கும்.

    நான் முக்குலத்தோர் புலிப்படை என போஸ்டர் ஒட்டினால் வழக்குப்பதிவு செய்கிறீர்கள், நேற்று அண்ணா சாலையில் வைக்கப்பட்ட பேனர்களுக்கு யாரிடம் அனுமதி வாங்கினீர்கள்?

    எடப்பாடி அரசு தொடர்ந்து நீதிமன்றத்தை அவமதித்து வருகிறது. அமைச்சர்கள் நிலையறிந்து பேசவேண்டும், நானாவது தோழமைக் கட்சி என்ற அடிப்படையில் சீட் வாங்கி வென்றவன்.

    அமைச்சர்கள் இருந்த நிலையை மறக்க வேண்டாம்.

    எத்தனையோ சிலைகள் மெரினாவில் இருக்கிறது, மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப முக்கிய சாலையில் சிவாஜி கணேசனின் சிலையை நிறுவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கருணாசை தினகரன் ஆதரவாளரும், அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரத்தினசபாபதி சந்தித்து பேசினார். #Karunas #Koovathur
    ×