search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aruna Jagadeesan"

    • தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணைய அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
    • இந்த அறிக்கை விரைவில் சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி வந்த அருணா ஜெகதீசன் ஆணையம், தனது இறுதி அறிக்கையை மே மாதம் 18-ம் தேதி சமர்ப்பித்துள்ளது.

    இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

    அறிக்கையில் கூறப்பட்டுள்ள அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    விசாரணை ஆணைய அறிக்கை 4 தொகுதிகளாக தரப்பட்டுள்ளதால் தீவிரமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது.

    அலுவலர்கள் மீதான நடவடிக்கை தொடர்பான விவரங்களுடன் கூடிய ஆணையத்தின் இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் 10-ம் கட்ட விசாரணை இன்று தொடங்கியது. #ThoothukudiFiring #ArunaJagadeesan
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதையடுத்து நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள்.

    இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையம் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்களிடம் 9 கட்டங்களாக விசாரணை நடத்தியது. அப்போது 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து விசாரணை ஆணையத்தின் 10-ம் கட்ட விசாரணை இன்று தொடங்கியது. விசாரணை அதிகாரி அருணாஜெகதீசன் தலைமையில் தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் அமைந்து உள்ள முகாம் அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணை நடந்தது.

    இந்த விசாரணைக்காக 47 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இன்று வர சம்மன் அனுப்பப்பட்டிருந்தவர்கள் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த 10-ம் கட்ட விசாரணை நாளை மறுநாள் (10-ந் தேதி) வரை நடக்கிறது. #ThoothukudiFiring #ArunaJagadeesan

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணாஜெகதீசனின் 4-ம் கட்ட விசாரணை நாளையுடன் நிறைவடைகிறது. #ThoothukudiFiring #ArunaJagadeesan
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பரிதாபமாக இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக தேசிய, மாநில மனித உரிமை கமிஷன் விசாரணை நடத்தியது. துப்பாக்கி சூடு தொடர்பான வழக்குகளை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.



    அவர் கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி தூத்துக்குடிக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பிரமாண பத்திரங்கள் பெறப்பட்டன. அந்த பிரமாண பத்திரங்கள் அடிப்படையில் சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 3 கட்டமாக விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. மொத்தம் 24 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    4-வது கட்டமாக விசாரணை நேற்று முன்தினம் (17-ந்தேதி) தொடங்கியது. இதற்காக விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணையை தொடங்கினார். 4-வது கட்ட விசாரணைக்காக மொத்தம் 33 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதில் நேற்று முன்தினம் ஆஜராவதற்காக சம்மன் வழங்கப்பட்ட 8 பேரில் 7 பேர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். நேற்று ஆஜராவதற்காக 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அவர்களில் 7 பேர் ஆணையம் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

    நீதிபதி அருணாஜெகதீசன் 3-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தினார். இதனால் விசாரணை நடக்கும் முகாம் அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். நீதிபதி அருணா ஜெகதீசனின் 4-ம் கட்ட விசாரணை நாளையுடன் நிறைவடைகிறது. #ThoothukudiFiring #ArunaJagadeesan

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்தவர்களிடம் விசாரணை நடத்த நீதிபதி அருணாஜெகதீசன் மீண்டும் தூத்துக்குடிக்கு வருகிறார். #Thoothukudifiring #Arunajagadeesan
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த 22ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மாநில மற்றும் தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் தூத்துக்குடி வந்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் தங்களின் விசாரணை அறிக்கையை தயார் செய்து வருகின்றனர்.

    மேலும் இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இதைத்தொடர்ந்து நீதிபதி அருணாஜெகதீசன் தூத்துக்குடியில் முகாமிட்டு பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    சம்பவம் தொடர்பாக தைரியமாக வந்து ஆணையம் முன்பு விளக்கவும், பிரமாண பத்திரம் (அபிடவிட்) தாக்கல் செய்யவும் அறிவுறுத்தினார். இதற்காக தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள அரசின் பழைய சுற்றுலா மாளிகையில் ஒருநபர் ஆணைய முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அங்கு ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பாண்டு ரங்கன் தலைமையில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    அவர்களிடம் பொது மக்கள் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்து வருகின்றனர். இதேபோல் சென்னையில் கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள விசாரணை ஆணைய அலுவலகத்திலும் பிரமாண பத்திரங்கள் பெறப்பட்டு வருகின்றன. வருகிற 30-ந் தேதி வரை மக்களிடம் இருந்து பிரமாண பத்திரம் பெறப்படுகிறது. நேரில் வர முடியாதவர்கள் தபாலிலும் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.



    இதைத்தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரும், காயமடைந்தவர்களும் தனித்தனியாக பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்து வருகிறார்கள். கலவரத்தின் சேதமான வாகன உரிமையாளர்களும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து வருகின்றனர்.

    சிலர் வக்கீல்கள் உதவியுடன் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்கின்றனர். பிரமாண பத்திரங்கள் தாக்கல் முடிவடைந்ததும் அவை ஆய்வு செய்யப்படுகின்றன. இதைதொடர்ந்து அடுத்த மாதம் முதல் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக முகாம் அலுவலகத்தில் கோர்ட்டு அறையும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    சம்பந்தப்பட்டவர்கள் நின்று சாட்சியும் அளிப்பதற்காக பிரத்யேகமாக விசாரணை கூண்டு அமைக்கப்ப‌ட்டு உள்ளது. பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளதால் விசாரணையும் ரகசியமாகவே நடைபெறும் என தெரிகிறது. இதற்காக நீதிபதி அருணாஜெகதீசன் மீண்டும் தூத்துக்குடிக்கு வருகிறார்.

    அவர் தொடர்ச்சியாக தூத்துக்குடியில் தங்கியிருந்து விசாரணை மேற்கொள்வார் என தெரிகிறது. 2 மாதம்வரை விசாரணை நடைபெறும் எனவும், அதன்பிறகு விசாரணை அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. #Thoothukudifiring #Arunajagadeesan


    துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தனது முதல் கட்ட விசாரணையை நிறைவு செய்துவிட்டு நேற்று மாலை தூத்துக்குடியிலிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். #Thoothukudifiring #Arunajagadeesan
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒரு நபர் விசாரணை கமி‌ஷனை தமிழக அரசு நியமித்தது. இதைத்தொடர்ந்து நீதிபதி அருணா ஜெகதீசன் தூத்துக்குடி வந்து விசாரணை நடத்தினார்.

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்ற கலெக்டர் அலுவலகம், திரேஸ்புரம், அண்ணாநகர் ஆகிய இடங்களையும் மற்றும் கலவர பகுதிகளையும் அவர் பார்வையிட்டார். கலெக்டர் அலுவலகத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட வாகனங்கள், ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பில் சேதப்படுத்தப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

    கடந்த 4 நாட்களாக துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரையும் அவர் நேரடியாக சந்தித்து விசாரணை நடத்தினார்.



    மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் அவர் பார்வையிட்டு துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விபரங்களை சேகரித்தார்.

    அதுமட்டுமின்றி தூத்துக்குடி சுற்றுலா மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து பிரமாண வாக்குமூலம் பெற்றார். இதில் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மற்றும் பலியானவர்களின் உறவினர்கள் ஏராளமானோர் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தனர்.

    இதே போல் சென்னையில் கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள விசாரணை ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் பிரமாண வாக்குமூலம் கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குமூலம் பெறுவதற்காக பிரத்யேக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பிரமாண வாக்குமூலத்தை பெற்று வருகின்றனர். வருகிற 30-ந்தேதி வரை பிரமாண வாக்குமூலம் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே நீதிபதி அருணா ஜெகதீசன் தனது முதல் கட்ட விசாரணையை நிறைவு செய்து விட்டு நேற்று மாலை தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். ஓரிரு நாட்களுக்கு பின் அவர் மீண்டும் தூத்துக்குடிக்கு வந்து விசாரணை நடத்த உள்ளார். #Thoothukudifiring #Arunajagadeesan



    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் சாட்சிகளை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வக்கீல் முறையீடு செய்துள்ளார்.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் இன்று வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள்.

    அப்போது வக்கீல் சூரிய பிரகாசம் ஆஜராகி, தூத்துக்குடியில் கடந்த மே 22 மற்றும் 23-ந்தேதிகளில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து, சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என்று நான் தொடர்ந்தேன்.

    ஐகோர்ட்டு, அதுகுறித்து பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது.

    இந்த நிலையில், தமிழக அரசு இந்த பிரச்சினையை நீர்த்து போகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் அவசர அவரசரமாக ஐகோர்ட்டு ஓய்வுப் பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைத்து உத்தரவிட்டுள்ளது.

    ஏற்கனவே சி.பி.ஐ. விசாரணை கேட்ட வழக்கு நிலுவையில் இருக்கும்போது, தமிழக அரசின் இந்த உத்தரவு சரியானது அல்ல. தற்போது அருணா ஜெகதீசன் விசாரணையையும் தொடங்கி விட்டார். இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக நான் தொடரும் வழக்கை இன்று விசாரிக்க வேண்டும்’ என்று கூறினார்.

    இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், ‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது. அப்போது, இது தொடர்பான கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று கூறினார்கள்.

    அதற்கு வக்கீல் சூரிய பிரகாசம், அதுவரை நீதிபதி அருணா ஜெகதீசன் சாட்சிகளை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதிகள் இது குறித்து பின்னர் பரிசீலிக்கலாம் என்று கூறினார்கள்.

    துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இன்று கள ஆய்வில் ஈடுபட்டுள்ள நீதிபதி அருணாஜெகதீசன் முதலில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலக பகுதியில் துப்பாக்கி சூடு நடந்த பகுதிகளை பார்வையிட்டார். #arunajagadeesan #Thoothukudifiring
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி தூத்துக்குடியில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இதையடுத்து நீதிபதி அருணாஜெகதீசன் நேற்று தூத்துக்குடிக்கு வந்து விசாரணையை தொடங்கினார்.

    முதல்கட்டமாக தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணைய முகாம் அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு கலெக்டர் சந்தீப்நந்தூரி மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

    இதன் பிறகு நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணையை தொடங்கினார். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 3 கட்டமாக அருணாஜெகதீசன் விசாரணை நடத்த உள்ளார். அதன்படி முதல் கட்டமாக பாதிக்கப்பட்ட மக்கள், காயமடைந்து சிகிச்சை பெறுபவர்கள், பலியானவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.



    தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர் அங்கு துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் காயம் பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் நடந்த விபரம் குறித்து கேட்டறிந்தார்.

    தொடர்ந்து அவர் துப்பாக்கி சூட்டில் பலியான சிலோன்காலனி கந்தையா, புஷ்பாநகர் ரஞ்சித்குமார், மாசிலாமணிபுரம் சண்முகம் ஆகியோரின் வீடுகளுக்கு சென்றார். அங்கு அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரிடம் துப்பாக்கி சூடு குறித்த சம்பவங்களை தைரியமாக அச்சப்படாமல் விசாரணை ஆணையத்தில் சொல்லுங்கள் என கேட்டுக் கொண்டார்.

    அவர்களிடம் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் கிரின்வேஸ் ரோட்டில் உள்ள விசாரணை ஆணையத்தின் தலைமை அலுவலகத்திலும், தூத்துக்குடியில் உள்ள முகாம் அலுவலகத்திலும் வருகிற 30-ந்தேதி வரை பிரமாண வாக்குமூலம் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இவற்றை பெறுவதற்கென பிரத்யேக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். பிரமாண வாக்குமூலம் அளிப்பவர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட உள்ளது.

    முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து 2-வது கட்டமாக நீதிபதி அருணாஜெகதீசன் துப்பாக்கி சூடு சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களிடமும் விசாரணை நடத்துகிறார்.

    3-வது கட்டமாக காவல் துறையை சார்ந்தவர்கள், துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படும் போலீசார் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள், பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், காயமடைந்த வர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், சம்பவம் நடந்தபோது பொறுப்பில் இருந்த மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்துகிறார்.

    இதனிடையே துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணாஜெகதீசன் இன்று கள ஆய்வில் ஈடுபட்டார். முதலில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலக பகுதிக்கு சென்ற அவர் அங்கு துப்பாக்கி சூடு நடந்த பகுதிகளை பார்வையிட்டார். மேலும் வன்முறையால் தீவைக்கப்பட்ட வாகனங்களையும் பார்த்தார்.

    பின்பு ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புக்கு சென்ற அவர் அங்கு தீவைக்கப்பட்ட வாகனங்களை பார்வையிட்டார். அங்கு வசிக்கும் ஊழியர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து வி.வி.டி. சிக்னல் பகுதிக்கு வந்த அருணாஜெகதீசன் அங்கும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்தை பார்வையிட்டார்.

    மேலும் தீவைத்து எரிக்கப்பட்ட போலீஸ் வாகனம் மற்றும் வன்முறையால் சேதப்படுத்தப்பட்ட கடைகளையும் அவர் ஆய்வு செய்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனை பகுதியையும் அவர் பார்வையிட்டார். பின்னர் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதிக்கு சென்று அப்பகுதியில் துப்பாக்கி சூடு, தடியடி நடைபெற்ற இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  #arunajagadeesan #Thoothukudifiring

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து 3 கட்டங்களாக விசாரணை நடைபெறும். முதல் கட்டமாக பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த உள்ளேன் என்று ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கூறினார். #Thoothukudifiring #Arunajagadeesan
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதுபற்றிய விவரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யலாம். இந்த விபரங்கள் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

    இதற்காக தூத்துக்குடி பழைய விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பிரமாண பத்திரம் தாக்கல் செய்யலாம். மேலும் சென்னை குமாரசாமி ரோட்டில் உள்ள தலைமை அலுவலகத்திலும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யலாம். வருகிற 22-ந்தேதி வரை இதற்கு கால அவகாசம் உள்ளது.

    எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை. தயக்க மின்றி புகார் செய்யுங்கள். விசாரணைக்கு தேவைப்பட்டால் அழைப்போம். விசாரணை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும். 3 கட்டங்களாக விசாரணை நடைபெறும். முதல் கட்டமாக பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த உள்ளேன்.

    2-வது கட்டமாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ஊடகவியலாளர்களிடம் விசாரணை நடத்தப்படும். 3-வது கட்டமாக காவல்துறையினர், ஆட்சியர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thoothukudifiring  #Arunajagadeesan

    துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒரு நபர் கமி‌ஷன் விசாரணை தூத்துக்குடியில் இன்று தொடங்கியது. #Thoothukudifiring #Arunajagadeesan
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் நடத்திய போராட்டம் மோதலில் முடிந்தது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    பலியானவர்களில் சண்முகம், செல்வசேகர், கார்த்திக், கந்தையா, காளியப்பன், ஸ்னோலின், தமிழரசன் ஆகிய 7 பேர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்தோணி செல்வராஜ், கிளாஸ்டன், ஜான்சி, மணிராஜ், ரஞ்சித் குமார், ஜெயராமன் ஆகிய 6 பேர்களின் உடல்கள் ஐகோர்ட்டு உத்தரவின்படி வருகிற 6-ந்தேதிக்கு பிறகு பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

    இந்தநிலையில் முதலில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேர்களின் உடல்களையும் மறுபிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதனடிப்படையில் புதுவை ஜிப்மர் டாக்டர் அம்பிகா பிரசாத் பத்ரா தலைமையிலான குழுவினர், நீதிபதிகள் முன்னிலையில் 7 பேர் உடலையும் மறு பிரேத பரிசோதனை செய்தனர்.

    இதைத்தொடர்ந்து அவர்களது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கடந்த 2-ந்தேதி மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்களான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சித்தரஞ்சன் மோகன்தாஸ், ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன், சத்யபிரியா, பாலகிருஷ்ண பிரபு, மாநில மனித உரிமை ஆணையர் உதவி பதிவாளர் வாசுதேவன் ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினார்கள்.

    இதன் தொடர்ச்சியாக அன்று மாலையே டெல்லியில் இருந்து தேசிய மனித உரிமை ஆணையக்குழு மூத்த போலீஸ் சூப்பிரண்டு புபுல் பிரிட்டோ பிரசாத் தலைமையில், உறுப்பினர்கள் ரஜ்வீர்சிங், நிதின்குமார், அருண் தியாகி, லால்பகர் ஆகியோர் தூத்துக்குடிக்கு வந்தனர்.

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்த இடங்களை பார்வையிட்டனர். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டார்கள். மேலும் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து வருகிற 7-ந்தேதி வரை விசாரணை நடைபெறுகிறது.



    இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒரு நபர் கமி‌ஷன் விசாரணை தூத்துக்குடியில் இன்று தொடங்கியது.

    இதற்காக நீதிபதி அருணாஜெகதீசன் இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். முதலில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற அவர் கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் தென் மண்டல ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து அவர் முறைப்படி விசாரணையை தொடங்கினார். அவர் துப்பாக்கி சூடு நடந்த இடங்கள், கலவரத்தில் சேதப்படுத்தப்பட்ட வாகனங்களை பார்வையிடுகிறார். பின்பு அவர் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொள்கிறார்.

    காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக தூத்துக்குடி பழைய விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த அலுவலகத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் துப்பாக்கி சூடு தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மனுக்கள் பெறுகிறார்.

    மேலும் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அவரவருக்கு தெரிந்த தகவல்களை விசாரணை அலுவலகத்தில் நீதிபதி அருணா ஜெகதீசனிடம் தெரிவிக்கலாம் என்றும், சென்னையில் உள்ள மனித உரிமை ஆணைய தலைமை அலுவலகத்திலும் நேரிலோ அல்லது தபால் மூலமோ வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  #Thoothukudifiring  #Arunajagadeesan



    ×