என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இலங்கை
- நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள்.
- போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின்போது போலீசார் கிட்டத்தட்ட 15,000 பேர் கைது.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, 1000க்கும் மேற்பட்ட குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரி தெரிவித்தார்.
இன்று விடுவிக்கப்பட்ட 1,004 பேரில், நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கையர்களும் அடங்குவதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ராணுவ ஆதரவுடன் போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின் போது போலீசார் கிட்டத்தட்ட 15,000 பேரை கைது செய்து பின்னர் மன்னிப்பு கிடைத்து சமீபத்தில் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பொதுமக்கள் நடத்திய போராட்டங்களால் இலங்கையில் அதிபராக ரணில் விக்கிரமசிங்கே கடந்த ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
- இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த கூட்டத்தில் தமிழ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கொழும்பு:
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி அந்நாட்டு அரசியலையும் மாற்றி அமைத்தது. பொதுமக்கள் நடத்திய போராட்டங்களால் இலங்கையில் அதிபராக ரணில் விக்கிரமசிங்கே கடந்த ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதையடுத்து அவர் நாட்டில் நிலவி வந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீளுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் இலங்கையில் வசித்து வரும் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ் கட்சி தலைவர்களுடன் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்கான நில உரிமைகள் வழங்குதல், நல்லிணக்கம், மீன்பிடி தொடர்பாக சட்டங்களை அமல்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும் இந்தியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்தும், அவர்களை மீண்டும் இலங்கையில் குடியமர்த்துவது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
- அடுத்த மாதம், மற்றொரு சீன ஆய்வுக்கப்பல் இலங்கைக்கு வர திட்டமிட்டுள்ளது.
- வருகிற ஜனவரி மாதம் முதல் ஓராண்டுக்கு இம்முடிவு அமலில் இருக்கும்.
கொழும்பு:
இந்தியாவின் எதிர்ப்பை மீறி, சீன உளவு கப்பல்கள் அவ்வப்போது இலங்கைக்கு வருகின்றன. அவை இலங்கை துறைமுகங்களில் நின்றுகொண்டு, ஆய்வுப்பணியில் ஈடுபடுகின்றன. அடுத்த மாதம், மற்றொரு சீன ஆய்வுக்கப்பல் இலங்கைக்கு வர திட்டமிட்டுள்ளது. அதற்காக இலங்கை அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எந்த வெளிநாட்டு உளவு கப்பலையும் இலங்கை கடல் எல்லைக்குள் வர அனுமதிப்பது இல்லை என்று இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. வருகிற ஜனவரி மாதம் முதல் ஓராண்டுக்கு இம்முடிவு அமலில் இருக்கும்.
கடந்த 10 ஆண்டுகளில் இலங்கையில் தங்கள் உளவு கப்பல்களை நிறுத்திய அனைத்து வெளிநாடுகளுக்கும் இம்முடிவை தெரிவித்து விட்டதாக இலங்கை வெளியுறவு மந்திரி அலி சாப்ரி தெரிவித்தார்.
- இலங்கை தலைநகர் கொழும்புவில் ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி தேசிய மாநாடு நடந்தது.
- அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலின் போது நாங்கள் மீண்டும் வலுவாக வருவோம்.
கொழும்பு:
இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நெருக்கடிக்கு அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே தான் காரணம். அவர்கள் இருவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என போராட்டம் நடந்தது.
இந்த போரட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து கோத்தபய ராஜபக்சேவும், மகிந்த ராஜபக்சேவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றார். பின்னர் இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவியுடன் இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீண்டது.
இலங்கையில் மீண்டும் இயல்பு நிலை திரும்பியதால் வெளிநாட்டில் இருந்த கோத்தபய ராஜபக்சே சொந்த நாடு திரும்பினார்.
ஆனாலும் சில காலம் அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தார். இந்த சூழ்நிலையில் தற்போது மகிந்த ராஜபக்சே ஆளுங்கட்சி தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி தேசிய மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் 78 வயதான மகிந்த ராஜபக்சே கட்சியின் தலைவராக தேர்வு செய்யபப்பட்டார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மாநாட்டில் மகிந்த ராஜபக்சே பேசியதாவது:-
இலங்கையில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதாக நியாயமற்ற முறையில் நாங்கள் குற்றம் சாட்டப்பட்டு உள்ளோம். விடுதலை புலிகளுடனான போரில் ஈடுபட்ட போது தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் செல்வதை உறுதிபடுத்தினோம். நம்மை அவதூறு செய்து கேலி செய்பவர்கள் அதை தொடரட்டும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலின் போது நாங்கள் மீண்டும் வலுவாக வருவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- யாழ்பாண மாவட்டத்தில் டெல்ப்ட் தீவு, நயினாதீவு மற்றும் அனலத்தீவு ஆகிய இடங்களில் புதிதாக 3 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
- மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்கள் இந்தியாவின் மானிய உதவியுடன் அமைக்கப்படுகின்றன.
கொழும்பு:
இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள யாழ்பாண மாவட்டத்தில் டெல்ப்ட் தீவு, நயினாதீவு மற்றும் அனலத்தீவு ஆகிய இடங்களில் புதிதாக 3 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்கள் இந்தியாவின் மானிய உதவியுடன் அமைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் புதிய மின்உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் இது குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக மந்திரிசபை செய்தி தொடர்பாளரும், ஊடகத்துறை மந்திரியுமான பந்துல குணவர்தனே தெரிவித்தார்.
- மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
- பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தற்போது மின் தடையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
கொழும்பு:
இலங்கை முழுவதும் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதியடைந்தனர். மின் வினியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சார சப்ளையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. இதனால் மக்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர். மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார வினியோகத்தை சீர் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கையில் மின்சார அமைப்பு தெரிவித்தது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கை, அதிலிருந்து மீண்டு வந்தது. இதற்கிடையே இலங்கையில் மின் வினியோக பாதையில் கோளாறு காரணமாக மின்தடை ஏற்படுகிறது.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தற்போது மின் தடையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
- பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை தற்போது மீண்டு வருகிறது.
- பெண்கள் தலைமையிலான சிறு, குறு, நிலையான நிதியை மேம்படுத்தவும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை தற்போது மீண்டு வருகிறது. அந்நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கியது. இதில் முதல் தவணை வழங்கப்பட்ட நிலையில் 2-வது தவணைக்காக இலங்கை காத்திருக்கிறது.
இந்த நிலையில் இலங்கையின் நிதித்துறையை ஸ்திரப்படுத்த உதவ அந்நாட்டுக்கு ரூ.1668 கோடி கடனுதவி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்தது.
நாட்டின் வங்கி துறையில் ஸ்திரத்தன்மை, மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்தவும், பெண்கள் தலைமையிலான சிறு, குறு, நிலையான நிதியை மேம்படுத்தவும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
- சீன நிறுவனத்தின் இந்த பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை இலங்கையில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகும்.
- ஹம்பன்தோடா துறைமுகம் 2017-ம் ஆண்டு முதல் சீன வர்த்தக துறைமுகங்களின் கூட்டு முயற்சியின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
சீனாவின் எரிசக்தி நிறுவனமான சினோபெக் நிறுவனத்திற்கு ரூ.37 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை ஹம்பன்தோடா துறைமுகத்தில் நிறுவ இலங்கை மந்திரி சபை அனுமதி அளித்துள்ளது. இதை இலங்கை மந்திரி காஞ்சனா விஜே சேகரா தெரிவித்தார்.
சீன நிறுவனத்தின் இந்த பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை இலங்கையில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகும். இந்த சுத்திகரிப்பு நிலையத்துடன், அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகள் மற்றும் பயிற்சி மையமும் கூடுதலாக அமைக்கப்பட உள்ளது.
ஹம்பன்தோடா துறைமுகம் இலங்கையின் 2-வது பெரிய துறைமுகம் ஆகும். இந்த துறைமுகம் 2010-ம் ஆண்டு திறக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு முதல் சீன வர்த்தக துறைமுகங்களின் கூட்டு முயற்சியின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
இந்த துறைமுக கட்டுமானத்துக்கு சீனாவின் எக்சிம் வங்கி கடன் அளித்துள்ளது. தற்போது இங்கு சீனா மிகப் பெரிய முதலீட்டை செய்து உள்ளது.
- உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் வெளியேறியது.
- அரசின் தலையீடு இருப்பதாக கூறி ஐசிசியில் இருந்து இலங்கை அணி தற்காலிகமாக நீக்கப்பட்டது.
கொழும்பு:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் வெளியேறியது. இதில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி 55 ரன்னில் ஆல் அவுட்டாகி மோசமாக தோற்றது அந்த நாட்டு அரசியல் மட்டத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்து அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க தலைமையில் புதிய இடைக்கால குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே திடீர் திருப்பமாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக இடைநீக்கம் செய்தது. கிரிக்கெட் அமைப்பு அரசாங்கத்தின் தலையீடு இன்றி தன்னாட்சியுடன் செயல்பட வேண்டும் என்ற அடிப்படை விதிமுறையை மீறியிருப்பதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யின் உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது பதவியைப் பயன்படுத்தி இலங்கை கிரிக்கெட்டை சிதைக்கிறார். அவரது அழுத்தத்தால்தான் இலங்கை கிரிக்கெட் அழிக்கப்படுகிறது. இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கும் ஜெய்ஷாவிற்கும் தொடர்புள்ளது என அர்ஜுன ரணதுங்க பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவை தொலைபேசியில் அழைத்து, ரணதுங்கா கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார் என இலங்கை சுற்றுலாத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
மேலும் இன்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் நானும், எனது நண்பரான எரிசக்தி துறை மந்திரியுமான காஞ்சனா விஜேசேகராவும் வருத்தம் தெரிவித்தோம் என குறிப்பிட்டார்.
- ‘ஷியான் யாங் ஹாங் - 03’ என்ற பெயர் கொண்ட இந்த கப்பல் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டது.
- அதிநவீன உளவு கப்பலால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் சீன கப்பல் வருகைக்கு இந்தியா மீண்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பு:
இலங்கை கடல் பகுதியில் ஆய்வு பணி என்ற அடிப்படையில் சீன உளவு கப்பல்கள் அவ்வப்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தியாவும் இதற்கு அடிக்கடி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சீன உளவு கப்பல்கள் இலங்கையின் அம்பன் தோட்டா, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அடிக்கடி வந்து செல்கின்றன. இந்த கப்பல்கள் அனைத்துமே உயர் தொழில் நுட்பம் கொண்ட உளவு கப்பல்கள் ஆகும். இந்த கப்பல்கள் இலங்கை கடல் பரப்பில் இருக்கும் பொருளாதார வளம் பற்றி ஆய்வு செய்வதற்காகவே வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த கப்பல்கள் இந்தியாவை உளவு பார்ப்பதற்காகவே இலங்கை கடல் பகுதிக்கு அடிக்கடி வருவதாக இந்தியா குற்றம் சாட்டுகிறது.
சீன கப்பல்கள் இலங்கை கடல் பகுதியில் நின்றபடியே தமிழக கடல் பகுதிகள் மற்றும் தமிழகத்துக்குள் இருக்கும் இந்திய படைகள் ஆகியவற்றை பற்றி முழுமையான தகவல்களை கண்காணித்து அறிந்து கொள்ளும் பணிகளில் ஈடுபடுவதாகவும், தென் மாநிலங்களை உளவு பார்ப்பதாகவும் இந்தியா தரப்பில் கூறப்படுகிறது. சீன உளவு கப்பல் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாலேயே அவை இலங்கைக்கு வர இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
சீனாவின் உளவு கப்பலை இலங்கை கடல் பகுதிக்குள் அனுமதிக்கக்கூடாது என்று இந்தியா தரப்பில் இலங்கை அரசிடம் பலமுறை கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனாலும் இலங்கை அரசால் சீன கப்பலை தடுக்க முடியவில்லை. காரணம், இலங்கை அரசு சீனாவிடம் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் பொருளாதார உதவியை பெற்றுள்ளது.
இந்நிலையில் சீனாவின் உளவு கப்பலான 'ஷின் யான் - 6' கடந்த மாதம் இலங்கைக்கு வந்தது. அந்த கப்பல் இலங்கை கடல் பகுதிக்கு வெளியே இந்திய பெருங்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கடல் ஆய்வுப்பணியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஆனால் அந்த கப்பலும் இந்தியாவை உளவு பார்க்க வந்ததாகவே இந்தியா சார்பில் இலங்கை அரசிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த கப்பல் கொழும்பு செல்வதற்காக காத்திருக்கிறது. ஆனால் அந்த கப்பல் சீனாவுக்கு எப்போது திரும்பும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் சீனாவில் இருந்து மேலும் ஒரு உளவு கப்பல் இலங்கைக்கு வருகிறது. 'ஷியான் யாங் ஹாங் - 03' என்ற பெயர் கொண்ட இந்த கப்பல் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டது. இது பல்நோக்கு கப்பல் ஆகும். இந்த கப்பலை இலங்கைக்கு அனுப்ப அந்த நாட்டிடம் சீனா அனுமதி கேட்டுள்ளது.
இந்த கப்பல் சீனாவின் இயற்கை வள அமைச்சகத்துக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இலங்கை கடற்பரப்பின் பொருளாதார வளத்தை ஆராய்ந்து இலங்கைக்கு உதவுவதற்காகவே இந்த கப்பல் அனுப்பி வைக்கப்படுவதாக மீண்டும் காரணம் சொல்லப்படுகிறது.
'ஷியான் யாங் ஹாங் - 03' அதிநவீன கப்பல் வருகிற ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகிறது. ஜனவரி 5-ந்தேதி முதல் பிப்ரவரி 20-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த கப்பல் இலங்கை கடல் பகுதியில் நிறுத்தப்பட்டு பல்வேறு ஆய்வுகளை நடத்த திட்டமிட்டு இருப்பதாக சீனா தரப்பில் கூறப்படுகிறது. இந்த கப்பல் 99.06 மீட்டர் நீளம் கொண்ட பல்நோக்கு கப்பல் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிநவீன உளவு கப்பலால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் சீன கப்பல் வருகைக்கு இந்தியா மீண்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த கப்பல் இலங்கை வருவதற்கு இலங்கை அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று இலங்கைக்கு இந்தியா சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் இலங்கை அரசு என்ன முடிவு எடுக்கும் என்று இந்தியா எதிர்பார்த்து காத்திருக்கிறது.
- இலங்கையும், இந்தியா, சீனா போன்ற வெளிநாடுகளின் உதவியுடன் கொஞ்சம் சீராக மூச்சுவிடத் தொடங்கியுள்ளது.
- பொருளாதார சரிவு தொடர்பாக ராஜபக்சே சகோதரர்கள் மீது மேலும் பல வழக்குகள் தொடரப்படலாம்.
கொழும்பு:
அண்டை நாடான இலங்கை, சுதந்திரத்துக்குப் பின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை கடந்த ஆண்டு சந்தித்தது. அன்னியச் செலாவணி இருப்பு முற்றிலுமாக காலியான நிலையில், விலைவாசி விண்ணைத் தாண்டிச் சென்றது. உணவுப்பொருட்கள், எரிபொருள், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பொறுமை இழந்து கொந்தளித்த பொதுமக்கள், தெருவில் இறங்கிப் போராடினர். பல மாதங்கள் நீடித்த போராட்டத்தால் அதிபர் பதவியில் இருந்து கீழிறங்கிய கோத்தபய ராஜபக்சே, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.
பின்னர் அவர் நாடு திரும்பிவிட்டார். இலங்கையும், இந்தியா, சீனா போன்ற வெளிநாடுகளின் உதவியுடன் கொஞ்சம் சீராக மூச்சுவிடத் தொடங்கியுள்ளது. ஆனால் 46.9 பில்லியன் டாலர்கள் என்ற மிகப் பெரிய கடன் மலையில் இலங்கை உட்கார்ந்திருக்கிறது. அதில் சுமார் பாதி அளவு, சீனாவுக்கு கொடுக்க வேண்டிய கடன் ஆகும்.
இந்த நிலையில், இலங்கை சர்வதேச ஊழல் கண்காணிப்பகம் (டிரான்பரன்சி இன்டர்நேசனல்) மற்றும் 4 செயல்பாட்டாளர்கள், நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு, நேற்று முன்தினம் தீர்ப்பு கூறியது. அதில் 4 நீதிபதிகள், இலங்கையில் 2019-2022-ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு, முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சே ஆகிய ராஜபக்சே சகோதரர்கள், பொருளாதாரத்தை தவறாக கையாண்டதே காரணம் என்று அதிரடியாக தீர்ப்பு கூறினர். மேலும், இலங்கை மத்திய வங்கி முன்னாள் கவர்னர்கள் அஜித் நிவார்டு கப்ரால், லக்ஷ்மண், கருவூலத்துறை முன்னாள் செயலாளர்கள் ஜெயசுந்தரா, அட்டிகலே உள்ளிட்ட உயர்பொறுப்பு வகித்த 13 பேரும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் ராஜபக்சே சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு சுப்ரீம் கோர்ட்டு அபராதம் எதையும் விதிக்கவில்லை என்றாலும், மனுதாரர்களின் வழக்குச் செலவுக்கு தலா ரூ.1½ லட்சம் வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பை தொடர்ந்து, பொருளாதார சரிவு தொடர்பாக ராஜபக்சே சகோதரர்கள் மீது மேலும் பல வழக்குகள் தொடரப்படலாம் என்று கூறப்படுகிறது.
- இலங்கையில் கடந்த 2021-ம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
- மக்கள் போராட்டத்தால் ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சியை இழந்தனர்.
கொழும்பு:
இலங்கையில் கடந்த 2021-ம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறையால் மக்கள் அவதியடைந்தனர். மக்களின் போராட்டங்களால் ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பண வீக்கம் வரலாறு காணாத வகையில் அதிகரித்தது. இதுதொடர்பாக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோரும் பொறுப்பு என இலங்கை உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
பக்சே சகோதரர்கள் கையாண்ட தவறான பொருளாதாரக் கொள்கைகளால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், இலங்கை மத்திய வங்கி முன்னாள் கவர்னர் அஜித் நிவாத் உள்பட பலரும் நெருக்கடிக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்