என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஊட்டியில் 1955-ம் ஆண்டில் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியிலேயே இந்த கல்லூரியானது ஏற்படுத்தப்பட்டது.
    • ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர்.

    ஊட்டி:

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இந்த கல்லூரியில் உள்ளூர் மாணவர்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த கல்லூரி, 1955-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த காமராஜரால் தொடங்கி வைக்கப்பட்டது. பெரும் சவால்களுக்கு மத்தியிலேயே இந்த கல்லூரி தொடங்கப்பட்டது.

    இந்த கல்லூரியில் படித்த பலரும் தற்போது இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளி நாடுகளிலும் உயர் பதவிகளில் அமர்ந்து பணியாற்றி வருகின்றனர். இது இந்த கல்லூரிக்கு கிடைத்த பெருமை.

    இப்படிப்பட்ட இந்த கல்லூரி இந்த மலை மாவட்டத்தில் உருவாவதற்கு முக்கிய பங்காற்றிய முன்னாள் முதலமைச்சர் காமராஜருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது 121-வது பிறந்தநாளான இந்த ஆண்டில், ஊட்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரிக்கு பெருந்தலைவர் காமராஜரின் பெயரை சூட்ட வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆவண காப்பகத்தின் இயக்குனர் வேணுகோபால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

    இது தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆவண காப்பகத்தின் இயக்குனர் வேணுகோபால் கூறியதாவது:-


    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 1955-ம் ஆண்டில் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியிலேயே இந்த கல்லூரியானது ஏற்படுத்தப்பட்டது.

    கல்லூரி முழுவதும் கற்களால் கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். நீலகிரியில் முதன் முதலாக கட்டப்பட்ட நவீன கட்டிமாக இந்த கல்லூரியின் கட்டிடம் விளங்கி வருகிறது.

    தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் இருப்பது போன்று, மலைப்பகுதியிலும் ஒரு கலைக்கல்லூரியை தொடங்க வேண்டும் என அப்போது முதலமைச்சராக இருந்த காமராஜர் முடிவெடுத்தார்.

    இதுதொடர்பாக தனது அமைச்சரவை சகாக்களுடன் விவாதித்து, அவர்களது கருத்துக்களை கேட்டார்.

    அப்போது, அமைச்சர்களில் சிலர், மலைப்பிரதேசத்தில் கலைக்கல்லூரிக்கு பதிலாக தொழில் நுட்ப கல்லூரி திறந்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்தனர்.

    ஆனால் காமராஜர் அங்கு கலைக்கல்லூரி தான் தொடங்குவேன் என்பதில் உறுதியாக இருந்து, கல்லூரியையும் திறந்தார். அதன்பின்னரும் அமைச்சர்களில் சிலர் கலைக்கல்லூரி தொடர்ந்து செயல்படுவது சாத்தியமா என்றே கேள்வி எழுப்பினர்.

    அதற்கு காமராஜர், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடையை மூடுவதற்கு நான் ஒன்றும் இங்கு பெட்டிக்கடை திறக்கவில்லை. கல்வி நிறுவனத்தை தொடங்கி உள்ளேன். இதன் மூலம் பழங்குடியினர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் என பல தலைமுறை கடந்து அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

    மலைவாழ் மக்களின் பிள்ளைகளுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகவே இந்த கல்லூரியானது இருக்கும் என பதில் அளித்தார். அவர் கூறிய வார்த்தைகள் இப்போது உண்மையாகி உள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். உள்ளூரை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்கு தங்கி படித்து வருகிறார்கள்.

    இந்த கல்லூரி மலைவாழ் மக்களின் பிள்ளைகளுக்கு பெரும் உதவியாக உள்ளது. அவர்கள் பெரிய, பெரிய பதவிகளில் அமருவதற்கும் இந்த கல்லூரி ஒரு அடித்தளமாக இருந்து வருகிறது.

    தமிழகத்திலேயே சிறந்த ஒழுக்கத்திற்கும், செயல்பாட்டிற்கும் பெயர் பெற்ற கல்லூரியாக இந்த கல்லூரி விளங்கி வருகிறது. பல சிறந்த மாணவர்களையும் இந்த கல்லூரியானது உருவாக்கி உள்ளது.

    இப்படி தொலைநோக்கு சிந்தனையோடு, மலை மாவட்டத்திலும் ஒரு கலைக்கல்லூரியை உருவாக்கி, பல மாணவர்களின் வாழ்க்கையில் ஒளிவிளக்கேற்றி வைக்க முக்கிய பங்காற்றிய முன்னாள் முதலமைச்சர் காமராஜருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த கல்லூரிக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என நீலகிரி மாவட்ட மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சத்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
    • சத்யாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் புதிய தகவல் கிடைத்துள்ளது.

    தாராபுரம்:

    ஈரோடு மாவட்டம் கொடிமுடி அருகே உள்ள ஒத்தக்கடையை சேர்ந்தவர் சத்யா (வயது 35). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், கணவர் பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து பணம் சம்பாதிக்கவும், உல்லாச வாழ்க்கை வாழவும் ஆண்கள் பலரை திருமணம் செய்து ஏமாற்றி நகை-பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக அரசு அதிகாரிகள், வசதி படைத்த திருமணமாகாத வாலிபர்கள் ஆகியோரை குறி வைத்து இந்த செயலில் ஈடுபட்டார். இதற்காக திருமண வரன் பார்க்கும் மேட்ரிமோனியில் தனது தகவல்களை பதிவிட்டு இருந்தார்.

    இதன் மூலம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சத்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    தனக்கு திருமணமானதை மறைத்து அந்த வாலிபரை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பின்னர் சத்யா மீது சந்தேகமடைந்த அந்த வாலிபரின் உறவினர்கள் கொடிமுடி சென்று விசாரித்த போது அவர் ஏற்கனவே பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றி நகை-பணம் பறித்து வந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் மனமடைந்த வாலிபரின் தாத்தா தற்கொலை செய்து கொண்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இது குறித்து தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் சத்யாவை அழைத்து விசாரணை நடத்திய போது அவர், திருப்பூர், கோவை, ஈரோடு, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் அரசு அதிகாரிகள், சர்வேயர், டி.எஸ்.பி., சப்-இன்ஸ்பெக்டர், சாப்ட்வேர் என்ஜினீயர், திருமணமாகாத வாலிபர்கள், தொழிலதிபர்கள் உள்பட 53 பேரை ஏமாற்றி திருமணம் செய்து லட்சக்கணக்கில் நகை-பணம் பறித்தது தெரியவந்தது.


    தனது மோசடி செயல் போலீசாருக்கு தெரியவரவே, சத்யா போலீஸ் நிலையத்தில் இருந்து நைசாக தப்பி சென்று விட்டார். 53 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணியின் செயல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மீம்ஸ்களும் வெளியாகின.

    இதையடுத்து தலைமறைவான சத்யாவை பிடிக்க தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா (பொறுப்பு) தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சத்யாவின் செல்போன் சிக்னலை வைத்து கண்காணித்த போது அவர் புதுச்சேரியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் புதுச்சேரி சென்று சத்யாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை தாராபுரம் அழைத்து வந்தனர். தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பல்லடம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். நீதிபதி காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் சத்யாவை கோவை மகளிர் சிறையில் அடைத்தனர்.

    அவர் மீது கொலை முயற்சி, ஏமாற்றி பணம் பறித்தல், தனக்கு திருமணம் ஆனதை மறைத்து பல திருமணங்களை செய்தல், ஆபாசமான வார்த்தைகளால் திட்டுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் சத்யாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் புதிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ள செல்போன் எண் மூலம் தன்னை தொடர்பு கொள்ளும் ஆண்களை சத்யா தனிமையில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது தன் அழகில் அவர்களை மயக்கும் அவர் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். ஓட்டலில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருக்கும் போது சத்யா ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்துள்ளார்.

    பின்னர் அந்த ஆபாச வீடியோ காட்சிகளை காண்பித்து தன்னிடம் உல்லாசமாக இருந்த ஆண்களிடம் நகை-பணம் பறித்துள்ளார். அவ்வப்போது செலவுக்கு ரூ.10ஆயிரம், 20ஆயிரம் என கேட்டுள்ளார். ஆபாச வீடியோ காட்சியை வைத்து மிரட்டியதால் பலர் பயந்து சத்யா கேட்கும் பணத்தை கொடுத்துள்ளனர். இவரிடம் திருமணம் ஆன ஆண்களின் குடும்பத்தினர், மானம் போய் விடும் என்று பயந்து கேட்டபோதெல்லாம் பணத்தை வாரி வழங்கியுள்ளனர். சொத்துக்களையும் எழுதி கொடுத்துள்ளனர். இதனால் சத்யாவால் பாதிக்கப்பட்ட பல குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

    தற்போது சத்யா போலீஸ் பிடியில் சிக்கியுள்ள நிலையில் அவரால் பாதிக்கப்பட்ட ஆண்கள் பலர் ஆன்லைன் மூலம் தாராபுரம் போலீசில் புகார் கொடுத்து வருகின்றனர். இதுவரை 20க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்துள்ளனர். அதில் சத்யா மீது நடவடிக்கை எடுப்பதுடன், தாங்கள் கொடுத்த நகை-பணத்தை மீட்டு தருமாறு கூறியுள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்திய சத்யாவிடம் இருந்து நகை-பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர் பயன்படுத்திய செல்போன்களில் ஆபாச படங்கள் இருக்கிறதா என்று ஆய்வு செய்து அதனை பறிமுதல் செய்யவும் உள்ளனர்.

    இதனிடையே சத்யாவின் இந்த செயலுக்கு உறுதுணையாக கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையை சேர்ந்த தமிழ்செல்வி இருந்துள்ளார். அவர்தான் புரோக்கராக செயல்பட்டு சத்யாவுக்கு ஆண்கள் பலரை திருமணம் செய்து வைத்து ஏமாற்றி பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். மேலும் சிலர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே தலைமறைவான தமிழ்செல்வியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால் இந்த சம்பவம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்தனர்.

    • தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
    • மாவட்ட சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்தியூர்:

    கர்நாடகா மாநுலத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் டெங்கு காய்ச்சலை பரவு வதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    இதையொட்டி கர்நாட கத்தையொட்டி உள்ள தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் அனைத்து நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என தமிழக சுகாதார துறை மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வருகிறது.

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் கர்நாடகா எல்லை பகுதியில் உள்ள அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் அணை சோதனை ச்சாவடி மற்றும் பர்கூர் சோதனை சாவடிகளில் மாவட்ட சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர், பர்கூர் வழியாக கர்நாடகா மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய சாலை உள்ளது. இந்த வழியாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு ஏராளமான வாகனங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் வருபவர்களும் அதிக அளவில் பயணித்து வருகின்றனர். குறிப்பாக சரக்கு வாகனங்கள் இந்த வழியாக அதிகளவில் சென்று வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூர், மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் தமிழக சுகாதார த்துறை கர்நாடகா எல்லை பகுதிகளில் சோதனைக்கு பிறகு அனுமதிக்க சுகாதாரத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்தை இணைக்கும் கர்கே கண்டி செக் போஸ்ட் அருகே அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவி னர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் போலீசார் மற்றும் சுகதார துறையினர் அந்த வழியாக வந்த வாகனங்களை தீவிர சோதனை செய்த பிறகு அனுப்பி வைக்கப்படு கின்றனர்.

    அந்த பகுதியில் சுகாதார துறையினர் வாகனங்களில் வருபவர்களிடம் காய்சல், இருமல் மற்றும் நோய் தென்படும் அறிகுறிகள் இருந்தால் தெரியப்படுத்த வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர். மேலும் மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் வரட்டுபள்ளம் சோதனச்சாவடியிலும் அந்த வழியாக வரும் வாகனங்களை சுகாதாரத் துறையினர் சோதனை செய்து அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

    இதே போல் சத்திய மங்கலம் அருகே உள்ள பண்ணாரி, தாளவாடி, காரப்பள்ளம், மற்றும் புளிஞ்சூர் சோதனைச் சாவடிகளிலும் போலீசார் மற்றும் சுகதார துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். அவர்கள் அந்த வழியாக வரும் சரக்கு வாகனம், பஸ், லாரி மற்றும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி டிரைவர் மற்றும் கிளீனர்களிடம் விசாரணை நடத்திய பின்பே அனுப்பி வைக்கின்றனர்.

    காய்ச்சல் உள்ளிட்ட நோய் உபாதைகள் உள்ளதா என சோதனை செய்த பிறகே மருத்துவ குழுவினர் வாகன ஓட்டிகளை அனுமதிக்கின்றனர்.

    • கூட்டணி என்பது வேறு காவிரி பிரச்சினை என்பதும் வேறு.
    • நிரந்தர தீர்வை உச்சநீதிமன்றம் தான் தர வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள தனியார் நிதிஉதவி பெறும் பள்ளியில் முதல் அமைச்சரின் காலை உணவு திட்டத்தை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

    அப்போது அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு தினசரி தமிழகத்திற்கு ஒரு டி.எம்,சி தண்ணீரை திறக்க உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி 8 ஆயிரம் கன அடி தண்ணீர் தான் விடப்படும் என்று கூறுகிறார்கள்.

    கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் அவர்கள் தண்ணீரை தர மறுக்கி றார்கள். முதலமைச்சருடன் கலந்து பேசி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதா? அல்லது கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதுவதா? என்பதை இன்று முடிவு செய்வோம். கூட்டணி என்பது வேறு காவிரி பிரச்சனை என்பதும் வேறு.

    அ.தி.மு.க ஆட்சியில் இருந்த போது மட்டும் அவர்களுக்கு கர்நாடக அரசு தண்ணீரை திறந்தாவிட்டது. இது காலம்காலமாக உள்ள பிரச்சனை. தற்போது இதுகுறித்து கவனம் செலுத்தி வருகிறோம்.

    எடப்பாடி பழனிசாமிக்கு இதுபற்றி எல்லாம் எதுவும் தெரியாது. கர்நாடகத்தில் தற்போது 4 அணைகளிலும் போதிய நீர் இருப்பு இருந்தும் அவர்கள் அலட்சியம் காட்டுகிறார்க்ள். இதற்கு நிரந்தர தீர்வை உச்சநீதிமன்றம் தான் தர வேண்டும். ஆனாலும் நீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா மதிக்கமாட்டேன் என்கிறார்கள் என்ன செய்வது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கற்றாழை அமெரிக்காவை பூர்விகமாக கொண்டுள்ளது.
    • தாமரை பூ வடிவில் இருப்பது அதன் மற்றொரு சிறப்பம்சமாகும்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் பருவகால சூழலுக்கு ஏற்றவாறு பல வகைகளில் பல்வேறு வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்குவது வழக்கம். இந்நிலையில் தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிலையம் மற்றும் நகர் பகுதிகளில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூத்து குலுங்கும் யூக்கா அலோய்போலியா என்ற கற்றாழை வகை பூக்கள் பூக்க தொடங்கியுள்ளன.

    இந்த கற்றாழை அமெரிக்காவை பூர்விகமாக கொண்டுள்ளது. இந்த கற்றாழை மலர்கள் குளிர்ந்த வெப்பமும், தண்ணீர் அதிகமாக உள்ள பகுதிகளிலும் வளரும் தன்மை வாய்ந்தவை. இவ்வகை கற்றாழை செடிகளில் பூக்கும் பூக்கள் சுமார் 5 அடி முதல் 12 அடி உயரம் வரை வளரும் தன்மை கொண்டுள்ளது.


     தற்போது கொடைக்கானலில் நிலவி வரும் குளிர்ந்த சூழலில் இந்த அரிய வகை (யூக்கா அலோய்போலியா) கற்றாழை பூக்கள் கொத்து கொத்தாக தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிலைய வளாகத்திலும், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் நகர்ப்பகுதிகளிலில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக பூத்து குலுங்குகின்றன. இவை பார்ப்பதற்கு தாமரை பூ வடிவில் இருப்பது அதன் மற்றொரு சிறப்பம்சமாகும். பொதுவாக மண் அரிப்பை தடுக்கும் விதமாக இவ்வகை கற்றாழை செடிகள் மலைகளின் சரிவான பகுதிகளில் வளர்க்கப்பட்டு வருகிறது.

    • காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • கைத்தறி சங்கம் சார்பில் நூற்பு வேள்வி நடைபெற்றது.

    விருதுநகர்:

    பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. விருதுநகரில் பிறந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் வீடு, நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது.

    இந்த நினைவு இல்லத்தில், பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்திய பொருட்கள், வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்துக்கூறும் புகைப்படங்கள், படித்த நூல்கள் ஆகியவை நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளன.

    அதோடு, காமராஜரின் நூற்றாண்டு மணிமண்டபமும் விருதுநகரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று காமராஜரின் 122-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, மணிமண்டபம் மின்னொளியால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    இன்று காலை காமராஜர் வாழ்ந்த இல்லத்தில் அவரது திருவுருப்படத்திற்கு கலெக்டர் ஜெயசீலன் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இதேபோல் விருதுநகர்- மதுரை சாலையில் அமைந்துள்ள காமராஜரின் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மேலும், சிவகாசி மேயர் சங்கீதா, விருதுநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன், சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் உள்ளிட்டோர் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மேலும், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடார் மகாஜன சங்க நிர் வாகிகள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    விருதுநகரில் உள்ள காமராஜரின் இல்லத்தில், கைத்தறி சங்கம் சார்பில் நூற்பு வேள்வி நடைபெற்றது. இதில் ரெங்கப்ப நாயக்கன்பட்டி கிராமிய நூற்பு நிலையம் சார்பில் பெண்கள் நூல் நூற்று வேள்வி நடத்தினர்.

    மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காம ராஜரின் இல்லத்திற்கு வருகை தந்த நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நோட்டு புத்தகங்களைக் கொண்டு வந்து காணிக்கையாக அளித்து காமராஜருக்கு மரியாதை செலுத்தினர்.

    காமராஜர் பிறந்த பிறந்த ஊரில் அரசு மற்றும் பல் வேறு அமைப்புகள் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருவதால் விருதுநகரே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் விரிவாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவருந்தி மகிழ்ந்தார்.

    கீழச்சேரி:

    பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் காமராஜரின் உருவப் படத்திற்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    அதனை தொடர்ந்து, மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி காமராஜர் பிறந்தநாளான இன்று கீழச்சேரி அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் விரிவாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 3995 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ததன் மூலம் 2.20 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

    பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவருந்தி மகிழ்ந்தார்.

    அப்போது அங்கு படிக்கும் மாணவிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது என் பேரு என்ன என்று ஒரு மாணவியிடம் அவர் கேட்கிறார். அதற்கு அந்த மாணவி ஸ்டாலின் தாத்தா என்று கூற... என் பேரு ஸ்டாலின் தாத்தா இல்ல ஸ்டாலின் அவ்வளவுதான் என்று முதலமைச்சர் பதில் அளிக்கிறார்.

    முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ்நாட்டு மாணவர்கள் படிப்பதற்கு எதுவும் தடையாக இருக்கக் கூடாது.
    • இந்தியாவும் தமிழ்நாட்டு வழியில் நீட் தேர்வை எதிர்க்கிறது.

     காலை உணவு திட்ட தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    என்ன ஒரு சிறு பிரச்சனை வந்தாலும் நம் அரசு உடனடியாக அதை கவனத்தில் எடுத்து தீர்த்து வைக்கிறது. நாள்தோறும் மக்களுக்கான நலத்திட்டங்கள், தமிழ்நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான செயல்பாடுகள் என்று நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறோம்.

    பொய் செய்திகள் மூலம் ஒரு சில கருத்துக்கு வாசகங்கள் உருவாக்கி அதில் குளிர்காய நினைக்கிற மக்கள் விரோத சக்திகளின் அஜண்டா எந்த காலத்திலும் நடக்காது.

    ஏனென்றால் ஒவ்வொரு திட்டமும் பயனபெறக் கூடிய வகையில் மக்கள் நலத்திட்டங்களை பார்த்து பார்த்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக காலை உணவுத் திட்டம் நமது திராவிட மாடல் அரசுக்கு நீடித்த புகழை தேடித்தந்துள்ளது.

    நாம் தொடங்கிய பின்புதான் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், கனடா போன்ற நாடுகளிலும் தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த நேரத்தில் அமைச்சர்களையும், அதிகாரிகளையும், எம்.எல்.ஏ.க்களையும், எம்.பி.க்களையும் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது எந்த ஊரிலேயும், எந்த பள்ளியிலும் உணவின் தரம் ஒரு துளி கூட குறையக் கூடாது.

    உங்கள் குழந்தைகள் சாப்பிடும் சாப்பாட்டை எப்படி கவனமாக பார்த்துக் கொள்வீர்களோ அந்த மாதிரி, அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் சாப்பாட்டையும் கவனமாக சிறப்பு கவனம் எடுத்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

    நான் ஆய்வுக்கு வெளியூர் போகும்போது ஏதாவது ஒரு பள்ளிக்கு திடீரென்று செல்கிறேன். அங்கிருக்கும் பிள்ளைகளுடன் பேசுகிறேன். காலை உணவு எப்படி இருக்கிறது என்று பார்க்கிறேன். அந்த உணவை நானே சாப்பிட்டும் பார்க்கிறேன்.

    அமைச்சர் உதயநிதி கூட சுற்றுப்பயணம் போகும் போதும், நிகழ்ச்சிகளுக்கு போகும்போதும் இந்த மாதிரி ஆய்வு செய்வதை பார்க்கிறேன். மற்ற அமைச்சர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள். எ

    எனவே மற்ற அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும், மாவட்ட கலெக்டர்களும், அதிகாரிகளும் அவரவர் பகுதிகளில் இருக்கும் பள்ளிகளில் திடீர் திடீரென்று ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று ரொம்ப பணிவாக கேட்டுக் கொள்கிறேன்.

    திராவிட மாடல் அரசையும், என்னையும் பொருத்த வரைக்கும் நமது தமிழ்நாட்டு மாணவர்கள் படிப்பதற்கு எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்று நினைக்கி றோம். அது பசியாக இருந்தாலும் சரி, நீட் தேர்வாக இருந்தாலும் சரி, ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையாக இருந்தாலும் சரி, எந்த தடை வந்தாலும் அந்த தடையை உடைப்பதுதான் எங்களுடைய முதல் பணி.

    நீட் தேர்வை நான் எதிர்க்கத் தொடங்கியபோது ஏன் எதிர்க்கிறீர்கள் என்று சிலர் எதிர் கேள்வி கேட்டனர். ஆனால் இன்றைக்கு நீட் தேர்வில் நடக்கிற முறைகேடுகளை பார்த்து உச்சநீதிமன்றமே கேள்வி கேட்கிறது.

    மாணவர் சமுதாயம் போர்க்கொடி தூக்குகிறது. பல முதல்-அமைச்சர் கள், தேசிய தலைவர்கள் நீட் தேர்வு வேண்டாம் என்று குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

    ஒட்டு மொத்த இந்தியாவும் தமிழ்நாட்டு வழியில் நீட் தேர்வை எதிர்க்கிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசு அரசிய லுக்காக இப்போது நெருக்கடி நிலையை பற்றி பாராளுமன்றத்தில் தொடர்ந்து பேசுகிறது.

    ஆனால் நாம் அவர்களி டம் கேட்கும் கேள்வி, நெருக்கடி நிலை காலத்தில் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை உடனடியாக மாநில பட்டிய லுக்கு மாற்ற ஒன்றிய அரசு தயாராக இருக்கிறதா? இந்த ஆக்கப்பூர்வமான செயலை அவர்கள் செய்வார்களா? நம்மை பொருத்தவரை நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை தேவையற்றது.

    அதனால்தான் எதிர்க்கிறோம். ஒரு பக்கம் அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்கள் நடத்துகிறோம். இன்னொரு புறம் மாணவர்களின் நன்மைக்காக பள்ளிக்கல்வி, கல்லூரிகள், உயர்கல்விகளுக்கும் ஏராளமான திட்டங்களை தீட்டுகிறோம். எனவே தடைகளை நாங்கள் உடைக்கிறோம். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

    நான் திரும்பவும் சொல்கிறேன். கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. அந்த சொத்தை தமிழ்நாட்டு மாணவர்கள் பெற்றாக வேண்டும். மாணவச் செல்வங்களே படியுங்கள். நீங்கள் உயர படியுங்கள். நீங்கள் உயர உங்கள் வீடும் உயரும். இந்த நாடும் உயரும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஆனி வருஷாபிஷேகம் நடைபெற்றது.

    வருஷாபிசேகத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் கோவில் மகா மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மூலவர், வள்ளி, தெய்வானை அம்மாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    அதேபோல் குமரவிடங்கபெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட கும்பங்கள் கோவில் விமான தளத்திற்கு எடுத்து வரப்பட்டு காலை 10.15 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமான கலசத்திற்கு புனித நீர் உற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து வள்ளி, தெய்வானை அம்பாள் விமான கலசத்திற்கும் வருஷாபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளியம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். இன்று இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.

    விழாவில் கோவில் இணை ஆணையர் கார்த்திக், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.
    • வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்தது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.

    அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதனால் இன்று காலையில் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் குடை பிடித்த வாறு பள்ளிக்கு சென்றனர். தொடர்ந்து மழை பெய்த தால் அரசு மற்றும் தனியார் அலுவலகத்திற்கு சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இருசக்கர வாகனங்களில் நனைந்தவாறு அலுவலகங்களுக்கு சென்றனர்.

    கன்னிமார், கொட்டாரம், மயிலாடி, நாகர்கோவில், பூதப்பாண்டி, இரணியல், குழித்துறை, சுருளோடு, முள்ளாங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலையிலும் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசி வருகிறது.

    மலையோரப்பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது.

    பாலமோரில் அதிகபட்சமாக 28.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக ரம்யமான சூழல் நிலவுகிறது.

    அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருவதால் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.76 அடியாக இருந்தது.

    அணைக்கு 475 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 481 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.22 அடியாக உள்ளது. அணைக்கு 401 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 360 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 15.25 அடியாகவும், சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 15.35 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 15.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 47.82 அடியாகவும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 22.20 அடியாக உள்ளது.

    • வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.
    • கிராமுக்கு 30 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.99.70-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    சென்னையில் வாரத்தொடக்க நாளான இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.54,280-க்கும் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,785-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 30 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.99.70-க்கும் கிலோவுக்கு ரூ.300 குறைந்து பார் வெள்ளி ரூ.99,700-க்கும் விற்பனையாகிறது.

    • தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் தங்கமாரிமுத்து புகார் அளித்தார்.
    • கள்ளச்சாராய விற்பனையிலும் வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள மலை கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. குறிப்பாக திருமணம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் அந்த குடும்பத்தினரே சாராயம் வாங்கி சப்ளை செய்து வந்ததாகவும் புகார்கள் வந்தன.

    கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு பிறகு கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் சாராயம் காய்ச்சுபவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உடனடியாக தெரிவிக்கவும், டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆண்டிபட்டி அடுத்துள்ள மேய்க்கிலார்பட்டி ஈஸ்வரன் கோவில் அருகே பழனிக்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் தங்கமாரிமுத்து புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கள்ளச்சாராயம் காய்ச்சிக் கொண்டு இருந்த அதே ஊரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (47), கிழக்குத் தெருவைச் சேர்ந்த பொன் இருளன் (40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஊறல்களையும் போலீசார் அழித்தனர்.

    தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா, அதிநவீன போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் கள்ளச்சாராய விற்பனையிலும் வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×