என் மலர்
இந்தியா
- தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.
- பள்ளிக்கல்வியில் தமிழ் மொழியை முதல் மொழியாக நிலைநிறுத்துவது அவசியம்.
சென்னை:
மாநில கல்வி கொள்கையை உருவாக்க 2022-ல் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த ஜூலை மாதம் சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில், 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது என்றும் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்றும் மாநில கல்விக்கொள்கை குழு பரிந்துரைத்தது. மேலும், நீட் தேர்வு கூடாது, நீட் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்களை விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும். பள்ளிக்கல்வியில் தமிழ் மொழியை முதல் மொழியாக நிலைநிறுத்துவது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், மாநில கல்வி கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த நீங்கள் தவறிவிட்டீர்கள்.
- 50 சதவீத வரி விதிக்க டிரம்ப் எடுத்த முடிவு வெளியுறவு கொள்கையில் ஒரு பேரழிவாகும்.
புதுடெல்லி:
ரஷியாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை மேற்கொண்டார்.
இது தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவின் தேசிய நலன் மிகவும் உயர்ந்தது. நமது வெளியுறவு கொள்கையில் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில் டிரம்ப் 50 சதவீத வரியை உயர்த்தி உள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறியபோது பிரதமர் மோடி அமைதியாக இருந்தார். குறைந்தது 30 முறையாவது கூறிவிட்டார். கடந்த ஆண்டு நவம்பர் 30-ந்தேதி அன்று பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் மிரட்டினார். அங்கு பிரதமர் மோடி அமர்ந்து இருந்தார். வெளிப்படையாக சிரித்து கொண்டே இருந்தார். அதே நேரத்தில் டிரம்ப் 'பிரிக்ஸ்' இறந்து விட்டதாக அறிவித்தார்.
பல மாதங்களாக சமச்சீர் வரிகளை டிரம்ப் திட்டமிட்டு வருகிறார். அது பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. விவசாயம், சிறு-குறு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில்கள் போன்ற நமது முக்கிய துறைகளில் ஏற்பட்ட பாதிப்பை குறைக்க மத்திய பட்ஜெட்டில் நீங்கள் (மோடி) எதுவும் செய்யவில்லை.
உங்கள் மந்திரிகள் பல மாதங்களாக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேசி வருகின்றனர். அவர்களில் சிலர் பல நாட்களாக வாஷிங்டனில் முகாமிட்டு இருந்தனர்.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த நீங்கள் தவறிவிட்டீர்கள். உங்களுக்கு 6 மாதங்களுக்கும் மேலாக இருந்தது. இப்போது டிரம்ப் மிரட்டி வற்புறுத்துகிறார். ஆனால் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள்.
50 சதவீத வரி விதிக்க டிரம்ப் எடுத்த முடிவு வெளியுறவு கொள்கையில் ஒரு பேரழிவாகும். இதை பிரதமர் மோடியால் சமாளிக்க முடியாமல் திணறுகிறார். இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்பது மோடி அரசுக்கு தெரியாது.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
- நாட்டுப்படகு, வள்ளம் போன்றவை கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
- மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பெரியநாயகி தெருவில் மீனவர்கள் பாதுகாப்புடன் மீன்பிடி தொழில் செய்வதற்காக தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலம் குறுகலாக அமைக்கப்பட்டு உள்ளதால் மீனவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று புகார்கள் எழுந்து உள்ளன. எனவே பாலத்தை மேலும் நீட்டித்து தர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனை வலியுறுத்தி கன்னியாகுமரியை சேர்ந்த விசைப்படகு, நாட்டுப்படகு மற்றும் வள்ளம் மீனவர்கள் சுமார் 5ஆயிரம் பேர் இன்று "திடீர்" என்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாததால் விசைப்படகுகள் அனைத்தும் சின்ன முட்டம் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல நாட்டுப்படகு, வள்ளம் போன்றவை கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. மீன் வரத்தும் அடியோடு நின்று விட்டது. இதனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மீன் சந்தைகள் களையிழந்து கிடக்கின்றன. மீன் வரத்து குறைந்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் மீன்விலையும் "கிடுகிடு" என்று உயர்ந்து உள்ளது.
- கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனருக்கே அதிகாரம் உள்ளது.
- தன்னைத்தானே தலைவர் என சொல்லிக்கொண்டு அன்புமணி செயல்படுகிறார்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், "கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28-ந்தேதியுடன் நிறைவடைந்து விட்டது.
கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனருக்கே அதிகாரம் உள்ளது.
தன்னைத்தானே தலைவர் என சொல்லிக்கொண்டு அன்புமணி செயல்படுகிறார். அவர் வருகிற 9-ந்தேதி கூட்டும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக கூறினார்.
- நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, ஏ.ஜி.மாஷி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது.
- தலைமை நீதிபதியும் விசாரணைக் குழுவும் செயல்முறையை கவனமாகப் பின்பற்றினர்.
புதுடெல்லி:
டெல்லி ஐகோர்ட் நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது அவரது அரசு இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ந்தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டறியப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட 3 நீதிபதிகள் அடங்கிய குழு யஷ்வந்த் வா்மா வீட்டில் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று அப்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிக்கை சமா்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்து ஜனாதிபதி திரவுபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோருக்கு சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதினாா்.
இந்த சா்ச்சையை தொடா்ந்து, அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்ட நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவியில் இருந்து நீக்க 208 எம்.பி.க்கள் சாா்பில் பாராளுமன்றத்தில் நோட்டீஸ் சமா்ப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட் அமைத்த விசாரணைக் குழுவின் அறிக்கை செல்லுபடியாகாது என்று அறிவித்து தன்னை பதவி நீக்கம் செய்வதற்கான பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி நீதிபதி யஷ்வந்த் வா்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தாா்.
நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, ஏ.ஜி.மாஷி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
இந்த நிலையில் நீதிபதி யஷ்வந்த் சர்மா தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அப்போதைய தலைமை நீதிபதியும் விசாரணைக் குழுவும் செயல்முறையை கவனமாகப் பின்பற்றினர். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவேற்றுவது அவசியமில்லை என்று கருதப்பட்டது, குறிப்பாக அந்த நேரத்தில் எந்த ஆட்சேபனையும் மனுதாரரால் எழுப்பப்படவில்லை.
ஜனாதிபதி, பிரதமருக்கு விசாரணை அறிக்கையை அனுப்புவது அரசியலமைப்புக்கு விரோதமானது அல்ல.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
- ‘தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்’ ‘இளைய திராவிடம் எழுகிறது’ ஆகிய 2 புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ளார்.
- கலைஞரின் சிலைகளை நினைவுப் பரிசாக உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை:
மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி நினைவு நாளையொட்டி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தை தொடங்கி வைத்து அதன் இலச்சினையை வெளியிட்டார். அதை நக்கீரன் கோபால் பெற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து திராவிட இயக்க இளம் ஆய்வாளர்களை கண்டறிந்து அவர்களை வளர்த்தெடுத்து ஊக்குவிக்கும் விதமாக கலைஞர் நிதிநல்கை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் இலச்சினையை அவர் வெளியிட திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு பெற்றுக்கொண்டார். இந்த திட்டத்தின் மூலம் இளம் ஆய்வாளர்கள் 15 பேருக்கு ஆண்டுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட 8 நூல்களான தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும், தி.மு.க. வரலாறு, இளைய திராவிடம் எழுகிறது, மாநில சுயாட்சி முழக்கம், திராவிட இயக்க வரலாறு கேள்வி பதில், இந்தித் திணிப்பை எதிர்க்கிறோம் ஏன்? இந்தியாவுக்கு வழிகாட்டும் திராவிட மாடல், 'இந்தியாவில் சமூக நீதியும் இட ஒதுக்கீடும்' ஆகிய புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். இதில் 'தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்' 'இளைய திராவிடம் எழுகிறது' ஆகிய 2 புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கருணாநிதி குறித்த சிறப்பு காணொலியும் ஒளிபரப்பப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட அனைவருக்கும் கலைஞரின் சிலைகளை நினைவுப் பரிசாக உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் கனிமொழி எம்.பி., ஐ.பெரியசாமி, திருச்சி சிவா எம்.பி., ஆ.ராசா எம்.பி., அந்தியூர் செல்வராஜ், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா மற்றும் புத்தக எழுத்தாளர்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
- திருவிழாவில் மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளின் சந்தை பிரபலமாக உள்ளது.
- பல்வேறு மாநிலங்களில் இருந்து விலங்குகள் கொண்டு வரப்படுகிறது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம், அந்தியூர் குருநாதசுவாமி கோவில் தேர்த்திருவிழா வரும் 13-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்காக அந்தியூர் பகுதியில் கோவில், கடைகள், கேளிக்கை அரங்குகள், குதிரை மற்றும் மாட்டு சந்தைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
திருவிழாவில் மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளின் சந்தை பிரபலமாக உள்ளது. குறிப்பாக இசைக்கு ஏற்ப நடமாடும் குதிரை உலக புகழ் பெற்றது. சந்தைக்கு கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து விலங்குகள் கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழாவை முன்னிட்டு கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சைஜா என்பவர் 24 குதிரைகளை சந்தைக்கு கொண்டு வந்தார். குதிரையின் பாதுகாவலராக பைரஸ் என்பவர் இருந்தார். நேற்று இரவு குதிரைக்கு அருகில் உள்ள தோட்டத்தில் இருந்து வாளியின் மூலம் தண்ணீர் கொண்டு வைத்தார். வாளியில் யூரியா இருந்துள்ளதை கவனிக்காமல் தண்ணீர் எடுத்து வைத்ததில் 6 குதிரைகள் தண்ணீரை குடித்துள்ளது. யூரியா தண்ணீரை குடித்த 6 குதிரைகளும் ஒன்றன் பின் ஒன்றாக மயங்கி விழுந்து இறந்தன. மற்ற குதிரைகள் வேறு வாளியில் இருந்த தண்ணீரை குடித்ததால் உயிர் தப்பியது.
திருவிழாவை முன்னிட்டு சந்தையில் விற்பனை செய்ய கொண்டு வரப்பட்ட குதிரைகளில் 6 குதிரைகள் இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- திருமணத்தின்போது பிரீத்திக்கு 120 பவுன் நகை, சொகுசு கார், ரூ.25 லட்சம் வரதட்சணையாக பெற்றோர் கொடுத்ததாக கூறப்படுகிறது.
- கடந்த மாதம் 11-ந்தேதி ஈரோட்டில் இருந்து புறப்பட்டு திருப்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.
திருப்பூர்:
திருப்பூர் கே.செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. தொழில் அதிபர். இவரது மனைவி சுகந்தி. இந்த தம்பதியின் மகள் பிரீத்தி (வயது 26). இவருக்கும், ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த என்ஜினீயரான சதீஸ்வர் (30) என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது பிரீத்திக்கு 120 பவுன் நகை, சொகுசு கார், ரூ.25 லட்சம் வரதட்சணையாக பெற்றோர் கொடுத்ததாக கூறப்படுகிறது.
கணவர் மற்றும் மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் பிரீத்தி கோபித்துக்கொண்டு, கடந்த மாதம் 11-ந்தேதி ஈரோட்டில் இருந்து புறப்பட்டு திருப்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.
பிரீத்தியின் பெற்றோர், சின்னக்கரையில் உள்ள சொத்தை சமீபத்தில் விற்பனை செய்துள்ளனர். இதில் பிரீத்தியின் பங்காக ரூ.50 லட்சம் வந்துள்ளது. அந்த பணத்தை சதீஸ்வர், தனக்கு கொடுக்குமாறு மனைவியிடம் தொடர்ந்து கேட்டதாக தெரிகிறது. இதனால் பிரீத்தி மனம் உடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெற்றோர் வீட்டில் சோகமாக இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரீத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் பற்றி அறிந்ததும் நல்லூர் போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வரதட்சணை கொடுமையால் பிரீத்தி தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர், உறவினர்கள் குற்றம்சாட்டினர். மேலும் பிரீத்தியின் கணவர் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பிறகே உடலை பெறுவோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வரதட்சணை புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருப்பூர் ஆர்.டி.ஓ. மோகனசுந்தரம், பிரீத்தியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.
இந்தநிலையில் நல்லூர் போலீசார் பிரீத்தியின் கணவர் சதீஸ்வர், மாமனார் விஜயகுமார், மாமியார் உமா ஆகியோரிடம் விசாரணை நடத்திய நிலையில், இன்று காலை 3பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ., மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவினாசியில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் ரிதன்யா தற்கொலை செய்த நிலையில், திருப்பூரில் மீண்டும் மற்றொரு இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மக்கள் எங்களுக்கு சான்றிதழ் தரவேண்டும்.
- எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் எங்களுக்கு வேண்டாம்.
புதுக்கோட்டை:
அமைச்சர் எஸ்.ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் வைத்தது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்று. அ.தி.மு.க. ஆட்சியிலும் எடப்பாடி பழனிசாமி படம் போடப்பட்டது. மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயரை வைத்தார்கள். அந்த சட்ட மசோதா ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
மீண்டும் நாங்கள் அந்த சட்ட மசோதாவை கொண்டு வந்தபோது கவர்னர் ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பினார். அதற்கு சேர்த்துதான் உச்ச நீதிமன்றத்தில் கலைஞருக்காக, அவர்களது தலைவர் ஜெயலலிதாவிற்கும் சேர்த்து அவரது பெயரை வைக்க வேண்டும் என்று வாதாடி பெற்றிருக்கின்ற இயக்கம் தான் தி.மு.க.
எங்களுக்கு கட்சி வேறுபாடு கிடையாது. எந்தெந்த நிகழ்ச்சிகளுக்கு எங்களுடைய முதலமைச்சர் பெயரை சூட்ட வேண்டுமோ அந்த பெயரை சூட்ட கடமைப்பட்டுள்ளோம். அதையெல்லாம் விமர்சித்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உள்ளது வரவேற்கத்தக்கது.
பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களில் எல்லாம் மோடியால் வளர்ச்சி விகிதத்தை எட்ட முடிந்ததா? இல்லை... மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தான் தமிழ்நாடு இந்த வளர்ச்சி விகிதத்தை எட்டி உள்ளோம். இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசுடைய உழைப்பு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்திருக்கின்ற முயற்சிக்கு கிடைத்து உள்ள மிகப்பெரிய அங்கீகாரம்.
திருவாரூரில் கலைஞர் பல்கலைக்கழகம் திறப்பதற்கு கவர்னருக்கு அனுப்பிய சட்ட மசோதாவை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். ஜனாதிபதி என்ன பதிலளிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஒரு எதிர்க்கட்சி சட்டம் ஒழுங்கு நல்லா இருக்கின்றது என்று சான்றிதழ் கொடுக்க மாட்டார்கள். நாங்கள் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து அந்த சான்றிதழை எதிர்பார்க்கவில்லை. மக்கள் எங்களுக்கு சான்றிதழ் தரவேண்டும். அந்த மக்கள் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது நாங்கள் பாதுகாப்பாக இருக்கின்றோம், நலமாக இருக்கின்றோம் என்று மக்கள் எங்களது தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சான்றிதழ் தருகின்றனர். அந்த சான்றிதழ் எங்களுக்கு போதும். எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் எங்களுக்கு வேண்டாம்.
திருப்பூரில் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் போலீஸ்காரரை தாக்கி விட்டு தப்பா சென்றதால் தான் இந்த என்கவுண்டர் சம்பவம் நடந்துள்ளது. காவல்துறைக்கு பாதுகாப்பு தேவையில்லை. காவல்துறை தனியாக போய் சில சமயங்களில் இது போன்ற கொலை சம்பவம் நடைபெறுகிறதே தவிர வேறு எங்கேயும் கிடையாது.
இதைவிட மோசமான சம்பவங்கள் எல்லாம் வட மாநிலங்களில் வருகின்றது. இந்தியாவிலேயே தொழில் தொடங்கவும், வசிக்கவும் தகுந்த ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். ஆணவ படுகொலைகள் எங்களுக்கு தெரிந்து நடப்பது கிடையாது. தெரிந்தால் நிச்சயம் அதை தடுத்து விடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தம்பதியின் விந்தணு மற்றும் கரு முட்டைகளை சேகரித்து வேறொரு பெண்ணின் வயிற்றில் வளர்க்கப்படுவதாக உறுதியளித்தார்.
- குழந்தைகளை வாங்கிய 80 தம்பதிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் நம்ரதா. இவர் விஜயவாடா, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் கருத்தரிப்பு மையங்களை நடத்தி வருகிறார்.
குழந்தை இல்லாத தம்பதிகளிடம் சோதனை குழாய் மற்றும் வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்று தருவதாக நம்ப வைத்தார். அதன்படி வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக் கொள்ள வலியுறுத்தி வந்தார்.
தம்பதியின் விந்தணு மற்றும் கரு முட்டைகளை சேகரித்து வேறொரு பெண்ணின் வயிற்றில் வளர்க்கப்படுவதாக உறுதியளித்தார்.
இதற்காக தம்பதிகளிடம் ரூ.30 முதல் 40 லட்சம் வரை வசூல் செய்தார். மேலும் வாடகை தாய்க்கு உடல்நலம், மருத்துவ செலவுகள், பராமரிப்பு ஊட்டிச்சத்து செலவு என 9 மாதங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்து வந்தார்.
ஆனால் இந்த கருத்தரிப்பு மையத்தில் கடத்தப்படும் குழந்தைகளை வாடகை தாய் முறையில் பெற்றதாக கூறி தம்பதியினர் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக போலீசார் நம்ரதா உள்பட 8 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
கருத்தரிப்பு மையத்தில் குழந்தை கடத்தும் கும்பலுடன் சேர்ந்து மொத்தம் 80 குழந்தைகளை கடத்தி வந்து குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதன் மூலம் குழந்தைகளை வாங்கிய 80 தம்பதிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
இதற்காக குழந்தை இல்லாத தம்பதிகளிடம் நம்ரதா ரூ. 25 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளார். இதனை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நம்ரதா மற்றும் அவரது மகன் ஜெயந்த் கிருஷ்ணாவின் வங்கி கணக்குகளை முடக்கி உள்ளனர்.
- தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளைத் திமுக அரசு தொடர்ந்து புறக்கணிப்பது முறையல்ல.
- சேதமடைந்த தடுப்பணைகளை மேம்படுத்துவதற்கும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும்.
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
திருச்சி மாவட்டம் அழகிரிபுரம் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஆண்டு சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணை சேதமடைந்ததை சீர்செய்யாமல் அறிவாலயம் அரசு அலட்சியப்படுத்துவதால், பயிர் பாசனத்திற்கு பயன்பட வேண்டிய மழை நீர் வீணாகக் கடலில் கலப்பதாகக் கூறி அப்பகுதி விவசாய பெருமக்கள் ஆற்றில் இறங்கி நின்று போராடும் காணொளி மனதை கனக்க வைக்கிறது.
தரமற்ற முறையில் தடுப்பணையைக் கட்டியது மட்டுமன்றி ஊருக்கே படியளக்கும் விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் கெடுத்து அவர்களின் வயிற்றிலடிக்கும் திமுக அரசின் அராஜகத்திற்கு எனது கடும் கண்டனங்கள். ஏற்கனவே பராமரிப்பற்ற அரசு சேமிப்பு கிடங்குகளில் அடுக்கி வைக்கும் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதாலும், முறையாக தூர்வாராமல் வறண்டு கிடக்கும் பாசனப் போக்குவரத்தால் பயிர்கள் கருகுவதாலும் ஏகப்பட்ட நஷ்டத்தை சந்தித்து வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளைத் திமுக அரசு தொடர்ந்து புறக்கணிப்பது முறையல்ல.
எனவே, அழகிரிபுரம் விவசாயப் பெருமக்களின் அத்தனை கோரிக்கைகளுக்கும் செவிமடுத்து அவற்றை நிறைவேற்றுவதோடு, தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள தடுப்பணைகளைக் கட்டுவதற்கும், சேதமடைந்த தடுப்பணைகளை மேம்படுத்துவதற்கும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மனம் உடைந்த பொன். கார்த்திக் யாரும் எதிர்பாராத விதமாக தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
- கடந்த வாரம் பொன் கார்த்திக் தனது நண்பர் ஒருவரிடம் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக புலம்பி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருச்சி:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் கைகோல் பாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையங்கிரி. இவரது மகன் பொன் கார்த்திக் (வயது 24). பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள இவர் திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
பணி நிமித்தமாக பொன் கார்த்திக், ரவி ஆனந்த் என்ற நண்பருடன் நவல்பட்டு போலீஸ் காலனியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். வழக்கமாக காலையில் வேலைக்கு புறப்பட்டு செல்வார். மாலையில் வீடு திரும்புவார். நேற்று வெகு நேரமாகியும் கார்த்திக் வேலைக்கு வரவில்லை. இதையடுத்து மாலையில் உடன் வேலை பார்க்கும் நண்பர் இளவரசன் அவரை தேடிச் சென்றார். அப்போது அறையில் பொன் கார்த்திக் தூக்கில் பிணமாக தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர், இது பற்றி நவல்பட்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இதில், கடன் தொல்லையால் தற்கொலை செய்தது தெரியவந்தது. பொன் கார்த்திக்குக்கு ஆன்லைனில் கடன் வாங்கும் பழக்கம் இருந்தது. ஒரு கட்டத்தில் அவரால் கடன் தொகையை திரும்பச் செலுத்த இயலவில்லை.
இதனால் மனம் உடைந்த பொன். கார்த்திக் யாரும் எதிர்பாராத விதமாக தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும், கடந்த வாரம் பொன் கார்த்திக் தனது நண்பர் ஒருவரிடம் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக புலம்பி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஐ.டி. நிறுவன இன்ஜினியர் கடன் தொல்லையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






