என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஐ.டி. ஊழியர் தற்கொலை- ஆன்லைன் கடனால் துயர முடிவு
- மனம் உடைந்த பொன். கார்த்திக் யாரும் எதிர்பாராத விதமாக தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
- கடந்த வாரம் பொன் கார்த்திக் தனது நண்பர் ஒருவரிடம் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக புலம்பி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருச்சி:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் கைகோல் பாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையங்கிரி. இவரது மகன் பொன் கார்த்திக் (வயது 24). பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள இவர் திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
பணி நிமித்தமாக பொன் கார்த்திக், ரவி ஆனந்த் என்ற நண்பருடன் நவல்பட்டு போலீஸ் காலனியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். வழக்கமாக காலையில் வேலைக்கு புறப்பட்டு செல்வார். மாலையில் வீடு திரும்புவார். நேற்று வெகு நேரமாகியும் கார்த்திக் வேலைக்கு வரவில்லை. இதையடுத்து மாலையில் உடன் வேலை பார்க்கும் நண்பர் இளவரசன் அவரை தேடிச் சென்றார். அப்போது அறையில் பொன் கார்த்திக் தூக்கில் பிணமாக தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர், இது பற்றி நவல்பட்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இதில், கடன் தொல்லையால் தற்கொலை செய்தது தெரியவந்தது. பொன் கார்த்திக்குக்கு ஆன்லைனில் கடன் வாங்கும் பழக்கம் இருந்தது. ஒரு கட்டத்தில் அவரால் கடன் தொகையை திரும்பச் செலுத்த இயலவில்லை.
இதனால் மனம் உடைந்த பொன். கார்த்திக் யாரும் எதிர்பாராத விதமாக தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும், கடந்த வாரம் பொன் கார்த்திக் தனது நண்பர் ஒருவரிடம் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக புலம்பி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஐ.டி. நிறுவன இன்ஜினியர் கடன் தொல்லையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






