search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழனி கோவில்"

    • 10 நாட்கள் நடைபெறும் தைப்பூசத்திருவிழாவில் தினமும் காலை தந்தபல்லக்கில் முத்துக்குமாரசாமி வீதி உலா நடைபெறும்.
    • தைப்பூசத்திருவிழா களைகட்டி வரும் நிலையில் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும்.

    இத்திருவிழாவின் சிறப்பு அம்சமே பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து முருகபெருமானை தரிசனம் செய்வதுதான். அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூசத்திருவிழா கொடியேற்றம் இன்று பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு விநாயகர் பூஜை, புன்னியாகவாஜனம், முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

    அதன்பின் காலை 7.30 மணிக்கு கொடிபூஜை, வாத்தியபூஜை நடைபெற்றது. கொடி படம் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவில் உட்பிரகாரத்தில் கொண்டுவரப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க முருகனை வழிபட்டனர்.

    திருவிழாவில் இன்று மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் திருஆவினன்குடி, மலைக்கோவிலில் உள்ள விநாயகர், மூலவர், சண்முகர், உச்சவர், துவார பாலகர்கள் மற்றும் வாகனங்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    10 நாட்கள் நடைபெறும் தைப்பூசத்திருவிழாவில் தினமும் காலை தந்தபல்லக்கில் முத்துக்குமாரசாமி வீதி உலா நடைபெறும். மேலும் தினந்தோறும் இரவு 7.30 மணிக்கு வெள்ளி ஆட்டு கிடா, காமதேனு, தங்கமயில், தங்ககுதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 24ந் தேதியும், தேரோட்டம் 25ந் தேதியும் நடைபெறுகிறது. தைப்பூச திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி கோவிலுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

    பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேவஸ்தானம் சார்பில் சிறப்பாக செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தைப்பூசத்திருவிழா களைகட்டி வரும் நிலையில் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 

    • புத்தாண்டு தினத்தில் காலையில் முருகப் பெருமானை தரிசிக்க முதல் நாளே ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்திருந்தனர்.
    • சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பழனி:

    புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெரும்பாலான மக்கள் இறைவழிபாட்டுடன் புத்தாண்டை தொடங்குவது வழக்கம். அதன்படி அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதலே அதிகரித்து காணப்பட்டது.

    புத்தாண்டை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து கால சந்தி, சிறுகாலசந்தி, விழா பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகப் பெருமான் அருள்பாலித்தார்.

    புத்தாண்டு தினத்தில் காலையில் முருகப் பெருமானை தரிசிக்க முதல் நாளே ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்திருந்தனர். அவர்கள் அதிகாலையில் படிப்பாதை, யானைப்பாதை வழியாக கொட்டும் பனியிலும் நடந்து சென்று முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

    கடந்த சில நாட்களாகவே பழனியில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று மேலும் அதிகரித்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாட்டு பாடியும் குழுவாக வந்து முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

    சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிகமாக காணப்பட்டது. இதனால் மலைக்கோவில், ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம் உள்பட அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இதே போல் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில், அபிராமியம்மன், வெள்ளை விநாயகர், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அனைத்து கோவில்களிலும் மார்கழி மாத திருவிளக்கு வழிபாடு நடைபெற்று வரும் நிலையில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. 

    • சூரசம்ஹாரத்தை காண பழனி கோவிலுக்கு இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரத்தொடங்கினர்.
    • பக்தர்கள் பாதுகாப்புக்காக கிரிவீதி மற்றும் மலைக்கோவிலில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த திங்கட்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இத்திருவிழாவை முன்னிட்டு மலைக்கோவிலில் தினமும் உச்சிகாலத்தின்போது கல்பபூஜை, சண்முகர் தீபாராதனை, தங்கமயில் புறப்பாடு, தங்கச்சப்பரம் புறப்பாடு, வெள்ளி காமதேனு புறப்பாடு ஆகியவை நடைபெற்றன.

    கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு மலைக்கோவில், திருஆவினன்குடி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் ஏராளமான பக்தர்கள் தங்கி சஷ்டி விரதம் மேற்கொண்டனர். 6-ம் நாளான இன்று பக்தர்கள் வாழைத்தண்டுடன் பழங்கள் கலந்த உணவை அருந்தி விரதத்தை முடித்துக்கொண்டனர்.

    கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று சூரன்களின் பொம்மை தயாரிக்கும் பணி நடைபெற்றது. இன்று நண்பகலில் உச்சிகால பூஜையை தொடர்ந்து சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு சூரர்களை வதம் செய்ய மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னக்குமாரசாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அதன்பின் 3.15 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு சாமி பராசக்தி வேலுடன் அடிவாரம் வந்தடைவார். இதனை முன்னிட்டு இன்று காலை பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து தாரகசூரன் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்குமேல் வடக்கு கிரிவீதியில் முதலாவதாக தாரகசூரவதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகசூரன் வதமும், மேற்குகிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது.

    பழனியின் 4 கிரிவீதிகளிலும் 4 சூரர்கள் வதம் செய்யப்படுவது தனிச்சிறப்பாகும். சூரசம்ஹாரத்திற்கு பிறகு ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா கொண்டாடப்பட்டு மலைக்கு வேல் கொண்டு செல்லப்படும். அங்கு பராசக்தி வேலுக்கு சம்ரோக்சன பூஜை செய்யப்பட்டு பின்னர் அர்த்தசாம பூஜை நடைபெறும்.

    சூரசம்ஹாரத்தை காண பழனி கோவிலுக்கு இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரத்தொடங்கினர். பகல் 12 மணிக்கு மேல் மலைக்கோவிலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதால் அதற்கு முன்பாகவே சாமி தரிசனம் செய்ய நீண்டவரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள் பாதுகாப்புக்காக கிரிவீதி மற்றும் மலைக்கோவிலில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை காலை மலைக்கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத சண்முகருக்கும், மாலையில் பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர்(பொறுப்பு) லட்சுமி மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • மாத கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
    • விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்திருந்தனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 கால பூஜைகள் நடக்கிறது. மாத கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    மேலும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நிகழும் நாட்களின்போது பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் பூஜை நேரம் மாற்றப்படுவது வழக்கம்.

    அதன்படி இன்று அதிகாலை 1.05 மணிக்கு தொடங்கிய சந்திர கிரகணம் 2.23 மணி வரை நீடித்தது. இதையொட்டி பழனி முருகன் கோவில் உள்பட அனைத்து உபகோவில்களிலும் நேற்று இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜை செய்து நடை சாத்தப்பட்டது. சந்திரகிரகணம் முடிந்ததும் அனைத்து கோவில்களிலும் சுத்தம் செய்யப்பட்டு பரிகார பூஜை நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கலசபூஜை, கலச அபிஷேகம், நைவேத்தியம், தீபாராதனை மற்றும் நித்ய பூஜைகள் நடைபெற்றது. இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்திருந்தனர். இதனால் அடிவாரம் ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையம், கிரிவீதி, யானைப்பாதை, படிப்பாதைகளில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் தென்பட்டது.

    மேலும் மலைக்கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் நேற்று மாலை 6.45 மணிக்கு நடை சாத்தப்பட்டது. சந்திர கிரகணம் முடிந்த பின்னர் பரிகார பூஜை செய்யப்பட்டு மீண்டும் நடை திறக்கப்பட்டது. இதேபோல் அபிராமி அம்மன் கோவில், தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களும் பரிகார பூஜைக்குப் பின்னர் மீண்டும் நடை திறக்கப்பட்டது.

    • சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 18-ந்தேதி நடைபெறுகிறது.
    • சூரசம்ஹாரத்தையொட்டி 18-ந்தேதி மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு நிறுத்தப்படும்.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் கந்த சஷ்டி விழா வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொள்வார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா வருகிற நவம்பர் 13-ந்தேதி பகல் 12 மணிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்க உள்ளது.

    சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 18-ந்தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நெய்வேத்திய நிகழ்ச்சி நடைபெறும். மதியம் 12 மணிக்கு உச்சிகாலபூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும்.

    மதியம் 3.15 மணிக்கு மலைக்கோவிலில் சின்னகுமாரசாமி அசுரர்களை வதம் புரிவதற்காக மலைக்கோவிலில் இருந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைதொடர்ந்து சன்னதி நடை அடைக்கப்படும். மாலை 6 மணிக்கு வடக்குகிரிவீதியில் தாரகாசூரன் வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபசூரன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன் வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதனைதொடர்ந்து 19-ந்தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அன்று காலை 9.30 மணிக்குமேல் 10.30 மணிக்குள் தனுர்லக்கினத்தில் மலைக்கோவிலில் வள்ளி-தெய்வானை சமேதராக சண்முகர் திருக்கல்யாணம் நடைபெறும். மாலை 6.30 மணிமுதல் 7.30 மணிவரை பெரியநாயகி அம்மன் கோவிலில் ரிஷப லக்கினத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    சூரசம்ஹாரத்தையொட்டி 18-ந்தேதி மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு நிறுத்தப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் ஆணையர் மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • ரோப்கார் கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது.
    • 50 நாட்களுக்கு பின்னர் ரோப்கார் மீண்டும் இயங்கியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இவ்வாறு வரும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும், யானைப்பாதை வழியாகவும் ரோப்கார், மின்இழுவை ரெயில் மூலமாக கோவிலுக்கு செல்கின்றனர்.

    ரோப்கார் கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது. ரோப்கார் பெட்டி, உபகரணங்கள், சாப்ட் எந்திரம் ஆகியவை கழற்றப்பட்டு சீரமைக்கும் பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் எடைக்கற்கள் மற்றும் பஞ்சாமிர்த பெட்டிகள் வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.

    சென்னை ஐ.ஐ.டி வல்லுநர்குழு ரோப்காரை இயக்கி ஆய்வு செய்தனர். அதில் திருப்தி ஏற்பட்டதைதொடர்ந்து இன்றுமுதல் ரோப்கார் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று அதிகாலை ரோப்கார் பெட்டிகளுக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

    50 நாட்களுக்கு பின்னர் ரோப்கார் மீண்டும் இயங்கியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் மலைக்கோவில், அடிவாரம், கிரிவீதி, திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சீரமைத்தனர்.

    மலைக்கோவிலில் நீண்டநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரோப்கார் மீண்டும் இயக்கப்பட்டதில் மகிழ்ச்சி. இதேபோல் மின்இழுவை 3-வது ரெயில் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கொல்கத்தாவில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான புதிய சாப்ட் வரவழைக்கப்பட்டு ரோப்காரில் பொருத்தப்பட்டது.
    • காலை ரோப்காரில் எடை கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு.

    இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் சிரமமின்றியும், எளிதாகவும் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல ரோப்கார் மற்றும் மின் இழுவை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக அடிவாரத்தில் இருந்து 2½ நிமிடத்தில் மலைக்கோவிலுக்கு செல்லக்கூடிய ரோப் காரையே பெரும்பாலான பக்தர்கள் விரும்பிச் செல்கின்றனர்.

    குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த ரோப்கார் சேவை மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் ரோப்கார் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுகிறது.

    அதன்படி கடந்த 19.8.23-ந் தேதி பராமரிப்பு பணிகளுக்காக ரோப்கார் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு பழுதடைந்த உதிரி பாகங்கள் மாற்றப்பட்டது. குறிப்பாக கொல்கத்தாவில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான புதிய சாப்ட் வரவழைக்கப்பட்டு ரோப்காரில் பொருத்தப்பட்டது.

    பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் ரோப்காரில் உள்ள 8 பெட்டிகளுக்கும் புதிய வண்ணங்கள் தீட்டும் பணி நேற்று நடைபெற்றது. இன்று காலை ரோப்காரில் எடை கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டத்தில் போது பெட்டிகள் சீரான முறையில் ஒன்றுடன் ஒன்று மோதாமல் இயங்குகிறதா? என சரி பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை சென்னை ஐ.ஐ.டி. குழுவினரால் பராமரிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதா என உறுதி செய்யப்படும். அந்த குழுவினர் சான்றளித்தால் ஓரிரு நாளில் ரோப் கார் சேவை பக்தர்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • வழக்கமாக மலைக்கோவிலில் இரவு 9.30 மணிக்கு ராக்கால பூஜை நடத்தப்பட்டு பள்ளியறைக்கு பின்பு நடை சாத்தப்படும்.
    • ராக்கால பூஜை தொடங்கியவுடன் கோவில் கதவு அடைக்கப்பட்டுவிடும்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக பண்டிகை மற்றும் விஷேச நாட்களில் அதிகளவு பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    நேற்று புரட்டாசி மாத கார்த்திகை என்பதால் மாலை சாயரட்சை பூஜைக்கு பின்பு பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வருகை தந்தனர். நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து தங்கரதம் இழுத்தும் வழிபாடு செய்தனர்.

    வழக்கமாக மலைக்கோவிலில் இரவு 9.30 மணிக்கு ராக்கால பூஜை நடத்தப்பட்டு பள்ளியறைக்கு பின்பு நடை சாத்தப்படும். ராக்கால பூஜை தொடங்கியவுடன் கோவில் கதவு அடைக்கப்பட்டுவிடும். அதன்பின்பு பக்தர்கள் உள்ளே வர அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    நேற்று இரவு ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்த நிலையில் இரவு 9.30 மணிக்கு பின்பும் பக்தர்கள் அடிவாரத்தில் காத்திருந்தனர். அவர்கள் மலைக்கோவிலுக்கு வர முயன்றபோது அங்கிருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதில் திருப்பூரை சேர்ந்த பக்தர்கள் காவலர்களை தரக்குறைவாக பேசினர்.

    இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. காவலர்கள் பக்தர் ஒருவரை அங்கிருந்து வெளியேற்றும்போது அவரது ஆடை கிழிந்தது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழனி கோவிலுக்கு ராக்காலபூஜை நேரத்திற்கு பின்பு பக்தர்கள் உள்ளே வர முயற்சிப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    நடைசாத்தப்படும் நேரம் என்பதை அடிவாரம் பகுதியிலேயே குறிப்பிட்டு அதன்பிறகு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவித்தால் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கலாம். பக்தர்கள், பாதுகாவலர்களிடையே இதுபோன்ற பிரச்சனை அடிக்கடி நடைபெறுவதை தடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மலைக்கோவிலின் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் காணப்பட்டது.
    • பழனியில் ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையம், பாதவிநாயகர் கோவில் பகுதி என 3 இடங்களில் செல்போன்கள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    பழனி:

    தமிழகத்தின் சிறந்த ஆன்மீக தலமாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக திருவிழா காலங்கள் மட்டுமின்றி சுபமுகூர்த்தம், பண்டிகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி இன்று முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    மலைக்கோவிலில் முருகனை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சிலர் பால்குடம், காவடி எடுத்தும், படிப்பாதையில் படிப்பூஜை செய்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இந்த கல்வியாண்டில் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கிடவும், இளைஞர்கள் தொழிலில் முன்னேற்றம் காணவும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். மலைக்கோவிலின் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் காணப்பட்டது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல மின் இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இந்நிலையில் சிலர் மலைக்கோவிலில் மூலவரை செல்போனில் புகைப்படம் எடுக்கும் சம்பவம் நடந்து வந்தது. ஆகவே பழனி கோவிலில் செல்போனுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் தனிநபர் ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த ஐகோர்ட்டு பழனி முருகன் கோவிலில் செல்போனுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

    அதைத்தொடர்ந்து பழனி கோவில் நிர்வாகமும் இன்று முதல் பழனி கோவிலில் செல்போன் கொண்டுவர தடை விதித்துள்ளது. மேலும் படிப்பாதை, ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களில் செல்போன்கள் வாங்கப்படும் என்றும், அதற்கான பாதுகாப்பு கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.

    பழனியில் ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையம், பாதவிநாயகர் கோவில் பகுதி என 3 இடங்களில் செல்போன்கள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 30 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு அவர்களுக்கு சிறப்புபயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இன்று பாதவிநாயகர் கோவில் அருகே வைக்கப்பட்டுள்ள செல்போன் சேகரிப்பு மையத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பழனி முருகன் கோவிலில் செல்போனுக்கு தடை என்பதால் அடிவார பகுதியில் இதுபற்றிய அறிவிப்பு பலகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளது.

    • கோவில் நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பஞ்சாமிர்தத்தின் விலையை உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.
    • பக்தர்கள் அனைவரும் தவறாமல் வாங்கிச் செல்லும் பிரசாதமாக பஞ்சாமிர்தம் உள்ளது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    சாதாரண நாட்களிலும் பக்தர்கள் அதிக அளவு வந்து செல்லும் நிலையில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தருகின்றனர்.

    இவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இலவச பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர கோவிலுக்கு வரும் பக்தர்கள் தேவஸ்தான ஸ்டால்களில் விற்பனையாகும் பஞ்சாமிர்தத்தை தங்கள் வீடுகளுக்கு வாங்கி செல்வார்கள்.

    கோவில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தேவஸ்தானம் மட்டுமின்றி பழனி பஸ் நிலையம், அடிவாரம், மின் இழுவை ரெயில் நிலையம், மலைக்கோவில் வெளிப்பிரகாரம் போன்ற பல்வேறு இடங்களிலும் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இங்கு ½ கிலோ எடையில் டப்பா, டின் என 2 வகைகளில் பஞ்சாமிர்தம் விற்கப்படுகிறது. டப்பாக்களில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் ரூ.35க்கும், டின்களில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் ரூ.40க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பஞ்சாமிர்தத்தின் விலையை ஒரு டப்பாவுக்கு ரூ.5 விலை உயர்த்தி கோவில் நிர்வாகம் விற்பனை செய்தது.

    டின் பஞ்சாமிர்தம் ரூ.40ல் இருந்து ரூ.45க்கும், டப்பா பஞ்சாமிர்தம் ரூ.35ல் இருந்து ரூ.40க்கும் விலை உயர்த்தி விற்கப்பட்டது. புதிய விலையை பேனாவால் மாற்றி விற்பனை நிலையங்களில் வைத்திருந்தனர். இதனால் பக்தர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து வி.எச்.பி. மாநில அமைப்பாளர் செந்தில் தெரிவிக்கையில், தமிழகத்திலேயே அதிக வருவாய் கொண்ட கோவிலாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் தவறாமல் வாங்கிச் செல்லும் பிரசாதமாக பஞ்சாமிர்தம் உள்ளது. அதனால்தான் மத்திய அரசு பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. ஆனால் கோவில் நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பஞ்சாமிர்தத்தின் விலையை உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.

    கோவிலுக்கு வருவாய் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பக்தர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுவதில்லை. ஆனால் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தின் விலையை எதற்காக உயர்த்த வேண்டும். நெய் மற்றும் மூலப்பொருட்கள் விலை உயர்ந்துவிட்டதால் பஞ்சாமிர்தம் விலையை உயர்த்தியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே இந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    பழனிச்சாமி : பழனி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலில் விற்கப்படும் பஞ்சாமிர்தத்தை வாங்கி அதனை தங்கள் உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு வழங்குவது வழக்கம். அவ்வாறு ஒருவர் 50 முதல் 100 டப்பாக்கள் வரை கூட வாங்கிச் செல்வார்கள். குறிப்பிட்ட அளவு பணத்தை எடுத்து வரும் பக்தர்கள் இது போன்ற கூடுதல் பஞ்சாமிர்தங்களை வாங்கிச் செல்ல முடியாது. வணிக நிறுவனங்கள் போல லாப நோக்கில் தேவஸ்தான பிரசாதங்களை விற்கக்கூடாது. இதில் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை மூலம் தயார் செய்யப்படுவது. திருப்பதியில் இலவச லட்டு வழங்கப்படுகிறது. அதன் பிறகு பக்தர்களுக்கு தேவைப்பட்டால் விலை கொடுத்து லட்டுகளை வாங்கிச் செல்கின்றனர். ஆனால் அங்கு கூட விலை ஏற்றப்படவில்லை. அதே போல பழனி கோவில் பஞ்சாமிர்தத்தையும் பழைய விலையிலேயே விற்பனை செய்ய வேண்டும் என்றார். 

    • பழனி மின்இழுவை ரெயில்நிலைய பகுதியில் ‘இந்துக்கள் மட்டும் செல்ல அனுமதி' என்ற பேனரை மீண்டும் வைக்க வேண்டும் என இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
    • கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு இந்து அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    பழனி:

    தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பிற மதத்தினர் வருவதை தடுக்க 'இந்துக்கள் மட்டும் செல்ல அனுமதி' என்ற வாசகம் கொண்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலிலும் மின்இழுவை ரெயில்நிலைய வாயில் பகுதியில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி புனரமைப்பு பணிகள் நடைபெற்றன. அப்போது மின்இழுவை ரெயில்நிலைய பகுதியில் வைக்கப்பட்டிருந்த அந்த பேனர் அகற்றப்பட்டது.

    இதற்கிடையே சமீபத்தில் மாற்று மதத்தை சேர்ந்த பெண்கள் சிலர் மின்இழுவை ரெயில் மூலம் பழனி மலைக்கோவிலுக்கு செல்ல முயன்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பழனி மின்இழுவை ரெயில்நிலைய பகுதியில் 'இந்துக்கள் மட்டும் செல்ல அனுமதி' என்ற பேனரை மீண்டும் வைக்க வேண்டும் என இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

    மேலும் பழனியை சேர்ந்த செந்தில்குமார் என்ற பக்தர், பழனி முருகன் கோவிலில் 'இந்துக்கள் மட்டும் செல்ல அனுமதி' என்ற பேனரை வைக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பழனி முருகன் கோவிலில் மீண்டும் பேனர் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் நேற்று பழனி முருகன் கோவில் மின்இழுவை ரெயில்நிலையம் முன்பு 'இந்துக்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்' என்ற வாசகம் கொண்ட பேனர் மீண்டும் வைக்கப்பட்டது.

    கோவில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்து அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    • கோவில் ஊழியர் தன்னால் எப்படி குரங்கிடம் இருந்து செல்போனை மீட்டு தர இயலும் என கேட்டார்.
    • கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் பொருளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் நேற்று சுதந்திர தின விடுமுறை நாளை முன்னிட்டு மலைக்கோவிலில் உள்ள முருகனை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவ்வாறு கூடி இருந்த பக்தர்களில் சிலர் மலை மீது அமர்ந்திருந்த குரங்குகளை தங்களது செல்போனின் மூலமாக படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

    அப்பொழுது ஒரு பக்தர் குரங்கின் அருகே சென்று போட்டோ எடுத்தார். தனக்கு ஏதோ தருகிறார் என நினைத்த குரங்கு செல்போனை திடீரென பறித்துக் கொண்டு ஓடியது. இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர் கூச்சலிட்டார். செல்போனை பறித்த குரங்கு லாவகமாக தப்பி செல்போனை கையில் வைத்துக்கொண்டு மலை மீது உள்ள கட்டிடங்களில் தாவித் தாவி சென்றது. அந்த செல்போனை உணவு பண்டம் என நினைத்து கடித்தது. இதனால் பதறிப்போன பக்தர் செல்போனை கொடுக்குமாறு அந்த குரங்கைத் துரத்திச் சென்றார்.

    ஆனால் குரங்கு வேகமாக வேறு கட்டிடத்துக்கு தாவிச் சென்றது. செல்போனை பறி கொடுத்த பக்தர் அங்கு பணிபுரியும் ஊழியரிடம் சொல்லி செல்போனை மீட்டுத் தருமாறு கேட்டார். ஆனால் கோவில் ஊழியர் தன்னால் எப்படி குரங்கிடம் இருந்து செல்போனை மீட்டு தர இயலும் என கேட்டார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் பொருளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குரங்கின் அருகே சென்று செல்போனை வைத்து படம் பிடிக்க வேண்டாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர். பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வாழைப்பழம், தேங்காய், உணவு திண்படம் போன்றவற்றை பறித்துச் செல்லும் குரங்கு தற்போது செல்போனையும் பறித்து சென்றது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×