என் மலர்
நீங்கள் தேடியது "பழனி கோவில்"
- விரைவாக செல்லவும், இயற்கை அழகை ரசித்தபடி செல்லவும் ரோப் காரில் பயணம் மேற்கொள்கின்றனர்.
- ரோப்கார் சேவை வழக்கம் போல் இயக்கப்படும் என பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் சேவை மற்றும் மின் இழுவை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பக்தர்கள் ரோப் காரில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர். விரைவாக செல்லவும், இயற்கை அழகை ரசித்தபடி செல்லவும் ரோப் காரில் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் ரோப் கார் பராமரிப்பு பணிக்காக தினமும் ஒரு மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை ரோப்கார் சேவை வழக்கம் போல் இயக்கப்படும் என பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். ஆனால் திடீரென மின்னணு பழுது ஏற்பட்டதால் ரோப் கார் இன்று காலை இயக்கப்படவில்லை. இதனால் ரோப் கார் ஊழியர்கள் தொடர்ந்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
நீண்ட நேரம் காத்திருந்தும் ரோப்கார் இயக்க முடியாததால் பக்தர்கள் படிப்பாதை மற்றும் மின் இழுவை ரெயில் மூலமாக மலைக்கோவில் சென்று முருகனை தரிசனம் செய்யுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. முன்னறிவிப்பு இன்றி திடீரென ரோப்கார் நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
- பக்தர்கள் வசதிக்காக பழனி மலைக்கோவிலில் 100-க்கும் மேற்பட்ட ஒலிப்பெருக்கிகள் அமைப்பு.
- ஒலிப்பெருக்கியில் திடீரென த.வெ.க. பாடல் ஒலித்ததால் பக்தர்கள் அதிர்ச்சி.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலில் தைப்பூசத் திருவிழா நடைபெற்று நிறைவடைந்துள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர். பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக பழனி மலைக்கோவில், படிப்பாதை, கிரிவலப் பாதை, அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஒலிப்பெருக்கிகள் அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தவறவிடும் உடமைகள், பொருட்கள், காணாமல் போகும் குழந்தைகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்த அறிவிப்புகளை மலைக்கோவில் அலுவலகத்தில் உள்ள ஒலிபெருக்கியில் பேசினால் பழனி மலை மற்றும் அடிவாரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒலிப் பெருக்கிகளில் கேட்கும் விதமாக பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று பழனி மலைக் கோவிலுக்கு சென்ற பக்தர் ஒருவர் படிப்பாதையில் உள்ள ஒலிப்பெருக்கியில் தனது செல்போனை இணைத்து அதில் த.வெ.க. பாடலை ஒலிக்கச்செய்தது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பக்தர்களின் முக்கிய தேவை மற்றும் பிரச்சனைகள் குறித்து அறிவிக்கும் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் முருகன், விநாயகர், சிவன் உள்ளிட்ட தெய்வப் பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பப்படும் நிலையில் திடீரென த.வெ.க. பாடல் ஒலித்தது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழனி கோவிலில் த.வெ.க. பாடல் ஒலிக்கப்பட்டு அது பழனி அடிவாரம் முழுவதும் கேட்டிருக்குமா? அல்லது குறிப்பிட்ட அந்த ஒரு இடத்தில் மட்டும் ஒலிபரப்பானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் கோவிலில் உள்ள ஒலிப்பெருக்கியில் செல்போனை இணைத்து த.வெ.க. பாடலை ஒலிக்கவைத்த இளைஞர் யார்? என்று அடையாளம் கண்டு, அவர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர்.
- பழனி தைப்பூச திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் இடும்பன்குளம், சண்முகநதியில் புனித நீராடுவது வழக்கம்.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு இன்று மாலை திருக்கல்யாணமும், நாளை தேரோட்டமும் நடைபெற உள்ள நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
பழனி தைப்பூசத்திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாது நள்ளிரவிலும் பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பியபடி வந்தவண்ணம் உள்ளனர்.
இதனால் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் தலையாக காட்சி அளிக்கிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் பழனி மலைக்கோவிலில் 2 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இன்று முதல் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பக்தர்கள் வருகை அதிகரிப்பால் மலைக்கோவிலில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது. அவ்வாறு காத்திருக்கும் பக்தர்களுக்கு பிஸ்கெட், தண்ணீர் பாட்டில், சிற்றுண்டி உள்ளிட்டவை கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
வழக்கமாக இன்று முதல் 3 நாட்களுக்கு மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு ரத்து செய்யப்பட்ட நிலையில் கட்டண தரிசனமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் சரவணன் தலைமையில் எஸ்.பி. பிரதீப், கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோட்டாட்சியர் கண்ணன், தாசில்தார் பிரசன்னா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் கலெக்டர் சரவணன் தெரிவிக்கையில், பழனி மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய அதிக நேரம் காத்திருப்பதால் பக்தர்கள் சோர்வு அடைந்து விடுகின்றனர். இந்த ஆண்டு பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் சிற்றுண்டிகள், தண்ணீர் பாட்டில்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து இடும்பன்குளம், சண்முகாநதி உள்ளிட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அதிகளவில் பணியாளர்களை நியமித்து பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் பேருந்து வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் காவல்துறையின் மூலம் 3 ஆயிரம் காவலர்கள் காவல் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தைப்பூசத் திருவிழா நாளில் கூட்டநெரிசல் அதிகமாக காணப்படுவதால் பக்தர்களின் உடைமைகள் திருடுபோவதற்கு வாய்ப்புள்ளது. இதனை கருத்திற்கொண்டு 22 சிறப்பு குற்றக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 600 கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
பழனி தைப்பூச திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் இடும்பன்குளம், சண்முகநதியில் புனித நீராடுவது வழக்கம். அதன்படி பழனி இடும்பன்குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடினர். எனவே பக்தர்களின் பாதுகாப்புக்காக மாவட்ட தீயணைப்பு அலுவலர் விவேகானந்தன் தலைமையிலான தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக இடும்பன்குளத்தில் ஆழமான பகுதிக்கு பக்தர்கள் செல்வதை தடுக்க ரப்பர் படகில் தீயணைப்பு படையினர் ரோந்து சென்றனர். அதேபோல் மலைக்கோவில், அடிவாரம் என 12 இடங்களில் மீட்பு பணி வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் 170-க்கும் மேற்பட்ட படையினர் கண்காணித்து வருகின்றனர்.
- தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாக வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு வருகிற 31-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
- 4 ரத வீதிகளிலும் முத்துக்குமார சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூசம் முதன்மையானதாகும்.
இந்த திருவிழாவின் முக்கிய அம்சமே பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்வதுதான். அதன்படி இந்த வருடத்துக்கான தைப்பூசத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை முன்னிட்டு பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி கொடிக்கட்டி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். சிறப்பு பூஜைகளுக்கு பின்பு காலை 9.30 மணிக்கு மேல் கொடியேற்றத்துக்கான விழா தொடங்கியது.
வேல், மயில், சேவல் உருவம் பொறித்த மஞ்சள் நிற கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோவில் உட்பிரகாரமாக வலம் வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவில் கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.
அப்போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி தண்டாயுதபாணி சுவாமியை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு இன்று இரவு புதுச்சேரி சப்பரத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் தைப்பூச விழாவில் வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, யானை, தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாக வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு வருகிற 31-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று மாலை வெள்ளித் தேரோட்டம் ரத வீதிகளில் நடைபெறும். மணக்கோலத்தில் முத்துக்குமார சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மறுநாள் (பிப்ரவரி 1-ந் தேதி) தேரோட்டம் நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு தோளுக்கினியாளில் சண்முக நதியில் எழுந்தருளி தீர்த்தம் வழங்கும் நிகழ்வும், மாலை 4 மணிக்கு திருத்தேரேற்றம் மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கும் தேரோட்டம் நடக்கிறது.
4 ரத வீதிகளிலும் முத்துக்குமார சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். பிப்ரவரி 2-ந் தேதி இரவு 8 மணிக்கு தங்க குதிரை வாகனத்திலும், மறுநாள் 3-ந் தேதி இரவு 9 மணிக்கு பெரிய தங்கமயில் வாகனத்திலும் வீதி உலா நடைபெறும். பிப்ரவரி 4-ந் தேதி தெப்பத்தேர் திருவிழாவுடன் கொடி இறக்கம் நடைபெற்று தைப்பூசத்திருவிழா நிறைவுபெறும்.
தைப்பூசத்தை முன்னிட்டு தற்போதே பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பழனி கோவிலுக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். இன்று அதிகாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்த நிலையிலும் பழனி கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் அவர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
வரும் நாட்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் 30-ந் தேதி முதல் பிப்ரவரி 3-ந் தேதி வரை 5 நாட்களுக்கு மலைக்கோவிலில் நடைபெறும் தங்கரத புறப்பாடு இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4-ந் தேதி முதல் வழக்கம் போல் தங்கரத புறப்பாடு நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பழனி முருகன் கோவிலில் அடுத்த மாதம் 1-ந்தேதி தைப்பூச திருவிழா என்பதால் தற்போதே பாதயாத்திரை பக்தர்கள் பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
- மலைக்கோவிலின் வெளிப்பிரகாரம் மற்றும் பொது, சிறப்பு, கட்டண தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் இருந்தது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வாரவிடுமுறை, விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை இருமடங்காக இருக்கும். அதன்படி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அதிகாலை முதலே அடிவாரம், மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அரையாண்டு விடுமுறை என்பதாலும் ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் பழனிக்கு வந்தனர். பழனி முருகன் கோவிலில் அடுத்த மாதம் 1-ந்தேதி தைப்பூச திருவிழா என்பதால் தற்போதே பாதயாத்திரை பக்தர்கள் பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
அதன்படி மதுரை, திருச்சி என பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும் பழனி அடிவார பகுதியில் கிரிவலம் வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டத்தால் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்வதற்கான படிப்பாதை, யானைப்பாதை மற்றும் மின்இழுவை ரெயில்நிலையம், ரோப்கார் நிலையத்தில் கூட்டம் அதிகளவில் இருந்தது.
கூட்டம் காரணமாக அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மலைக்கோவில் செல்லவும், தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்கள் படிப்பாதை வழியாக வரவும் ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டது. அதோடு கூட்டம் அலைகடலென இருந்ததால் பக்தர்கள் பகுதி, பகுதியாக அனுப்பப்பட்டனர்.
மேலும் மலைக்கோவிலின் வெளிப்பிரகாரம் மற்றும் பொது, சிறப்பு, கட்டண தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் இருந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பழனி மட்டுமின்றி திருஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், பெரியாவுடையார் கோவிலிலும் புத்தாண்டையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புத்தாண்டை முன்னிட்டு பழனியில் தரிசனம் செய்ய வெளியூர்களில் இருந்து கார், வேன், பஸ்களில் பக்தர்கள் வந்தனர். இதனால் அடிவாரம், குளத்துரோடு, கிரிவீதிகள், சன்னதிவீதி, பூங்காரோடு ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா பஸ் நிலையம் வாகனங்களால் நிரம்பி வழிந்தது. அதேபோல் பழனியில் தரிசனம் முடித்த பின்பு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ்நிலையத்தில் குவிந்ததால் அங்கும் கூட்டம் இருந்தது.
- பழனி மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது.
- சுக்கு காபி தீர்ந்தால் உடனே தயார் செய்து தொடர்ந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு கார்த்திகை மாதம் தொடங்கியதை முன்னிட்டு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக ஆந்திர மாநில பக்தர்களின் வருகை அதிகரித்து வந்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் கேரள பக்தர்களின் வருகை அதிகமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சாரல் மழை தொடங்கியுள்ள நிலையில் பழனி மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து பழனி மலைக்கோவிலுக்கு படிப்பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்களின் களைப்பை போக்கும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் அதிகாலை 4.30 மணி முதல் சுடச்சுட சுக்கு காபி வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே படிப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கடும் குளிருடன் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருவதால் சுக்கு காபி வழங்கப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 4.30 மணி முதல் பகல் 1 மணி வரை சுக்கு காபி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அதே இடத்தில் அடுப்பு வைத்து வெல்லம், மல்லி, சுக்கு சேர்த்து சுக்கு காபி தயாரிக்கப்படுகிறது.
சுக்கு காபி தீர்ந்தால் உடனே தயார் செய்து தொடர்ந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
- திருமணம் செய்ய விரும்பும் பக்தர்களும் திருஆவினன்குடி கோவிலிலேயே திருமாங்கல்யம் மாற்றிக்கொள்வது வழக்கம்.
- பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும் பால் தரமற்றவையாக உள்ளது என புகார் எழுந்துள்ளது.
பழனி:
தமிழகத்திலேயே அதிக பக்தர்கள் வரும் கோவில்களில் முதன்மையானதாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவில் கட்டுப்பாட்டின் கீழ் 49 உப கோவில்கள் உள்ளன. இவற்றில் முதன்மையானது பழனி அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோவில் ஆகும். 3-ம் படை வீடாக அறியப்படும் இந்த கோவிலில்தான் பங்குனிஉத்திரம் உள்ளிட்ட முக்கிய திருவிழாக்களுக்கு கொடியேற்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். பழனி மலைக்கோவிலுக்கு வரும் ஏராளமான கேரள பக்தர்களும் திருஆவினன்குடி கோவிலுக்கு வந்தபின்னரே மலைக்கோவிலுக்கு செல்வார்கள்.
மேலும் உள்ளூர் பக்தர்களும் அதிக அளவு இந்த கோவிலுக்கு வருவது வழக்கம். இங்கு மூலவராக குழந்தை வேலாயுத சுவாமி உள்ளார். இவருக்கு 6 கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. திருமணம் செய்ய விரும்பும் பக்தர்களும் திருஆவினன்குடி கோவிலிலேயே திருமாங்கல்யம் மாற்றிக்கொள்வது வழக்கம்.
இங்கு பக்தர்கள் கொண்டு வரும் பால் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறும். இந்நிலையில் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும் பால் தரமற்றவையாக உள்ளது என புகார் எழுந்துள்ளது. இதனால் சுவாமி சிலைகள் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் கருதப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் இதர பரிவார தெய்வங்களுக்கு பக்தர்களால் கொண்டு வரப்படும் பால் உணவு பாதுகாப்புத்துறையின் தரச்சான்றான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. தரக்குறியீடு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பலகைகள் திருஆவினன்குடி கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
- மாலை 5.30 மணிக்கு நடக்க வேண்டிய சாயரட்சை பூஜை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும்.
- கந்தசஷ்டி விழாவையொட்டி தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்து வருகின்றனர்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் அக். 22-ம் தேதி காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (அக்.27) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்காக, பெரியநாயகியம்மன் கோவிலில் 6 அடி உயரம், 4 அடி அகலத்தில் 4 விதமான சூரன்களை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. திருச்செந்தூரில் சூரன் உருவத்தில் தலையை மட்டும் மாற்றி மாற்றி சூரசம்ஹாரம் நடைபெறும்.
ஆனால் பழனியில் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் சூரன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகா சூரன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் என 4 திசைகளிலும் தனித்தனியாக சூரன்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. சூரசம்ஹாரத்தையொட்டி, நாளை (அக்.27) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும்.
பழனி பெரியநாயகியம்மன் கோவிலில் நடைபெற்ற சூரன்களை தயார் செய்யும் பணி.
மாலை 5.30 மணிக்கு நடக்க வேண்டிய சாயரட்சை பூஜை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும்.
பிற்பகல் 3 மணிக்கு சின்னக் குமாரசுவாமி அசுரர்களை வதம்புரியும் பொருட்டு மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சியுடன் சன்னதி அடைக்கப்படும். தொடர்ந்து திரு ஆவினன்குடி கோவிலில் பராசக்தி வேலுக்கு பூஜை செய்யப்பட்டு, மாலை 6 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடைபெறும். இதையொட்டி நாளை காலை 11.30 மணிக்கு அனைத்து தரிசன கட்டண சீட்டுகளும் நிறுத்தப்படும். படிப்பாதை, ரோப் கார் மற்றும் வின்ச் ரெயிலில் மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் காலை 11 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
விழாவின் நிறைவாக நாளை மறுநாள் (அக்.28) காலை 10.30 மணிக்கு மேல் மலைக்கோவிலில் வள்ளி தேவசேனா சமேத சண்முகருக்கும், இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகியம்மன் கோவிலில் வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
கந்தசஷ்டி விழாவையொட்டி தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்து வருகின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதால் கேரளாவில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் பஸ் நிலையம், அடிவாரம், மின்இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம், படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மலைக்கோவிலுக்கு சென்ற பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர்.
- பழனி மலை கோவில் தங்கரதம் நிலையம் அருகே தங்கத் தொட்டில் அறை செயல்பட்டு வந்தது.
- அனைத்து பணிகளும் நிறைவு பெற்ற பிறகு இன்று காலை சிறப்பு பூஜையுடன் தங்கத் தொட்டில் அறை திறக்கப்பட்டது.
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து முருகனை தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் குழந்தைகளை தங்கத் தொட்டிலில் போட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இதற்காக பழனி மலை கோவில் தங்கரதம் நிலையம் அருகே தங்கத் தொட்டில் அறை செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் அறையை புதுப்பிக்க கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ. 45 லட்சம் மதிப்பில் உபயதாரர் மூலம் புதுப்பிக்கும் பணியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.
அனைத்து பணிகளும் நிறைவு பெற்ற பிறகு இன்று காலை சிறப்பு பூஜையுடன் தங்கத் தொட்டில் அறை திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், அன்னபூரணி மற்றும் பொறியாளர்கள் குமார், முத்துராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் தங்கத் தொட்டிலில் போடும் குழந்தைகளுக்கு ரூ. 300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அந்த குழந்தைக்கு 2 பஞ்சாமிர்த டப்பாக்காள், விபூதி, முருகன் படம் உள்ளிட்டவை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை விநாயகர் பூஜை நடைபெற்றது.
- காலசந்தி பூஜை செய்யப்பட்டு காப்புக்கட்டு நிகழ்ச்சி நடந்தது.
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா காப்புக்கட்டுதலுடன் இன்று தொடங்கியது. முன்னதாக கோவில்கள் சுத்தம் செய்யப்பட்டன.
பின்னர் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு மேல் விநாயகர் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலசந்தி பூஜை செய்யப்பட்டு காப்புக்கட்டு நிகழ்ச்சி நடந்தது.
அப்போது சிவன், நடராஜர், சிவகாமி அம்மன், சோமாஸ்கந்தர், பெரியநாயகி அம்மன், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை, வாகனங்கள் மற்றும்கோவில் யானை கஸ்தூரிக்கு காப்புக்கட்டு நடைபெற்றது.
இதேபோல் பழனி மலைக் கோவிலில் உச்சிக்கால பூஜையில் விநாயகர், மூலவர், சின்னக்குமாரர், சண்முகர், வள்ளி-தெய்வானை, துவார பாலகர்கள், நவவீரர்கள் ஆகிய தெய்வங்களுக்கு காப்பு கட்டப்பட்டது.
முன்னதாக சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பூஜை முறைகளை கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வ சுப்பிரமணி மற்றும் குருக்கள்கள் செய்தனர்.
விழாவின் 10-நாளான 1-ம் தேதி பழனி முருகன் கோவிலில் பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது.
பின்னர் மாலை 3 மணிக்கு பராசக்திவேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அங்கிருந்து முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் கோதைமங்கலம் சென்று, வில்அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் முத்துக்குமாரசுவாமி பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வருதல், அர்த்தஜாம பூஜை நடைபெறுகிறது.
தொடர்ந்து பராசக்திவேல் மீண்டும் பழனி முருகன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஏராளமான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
- நிலத்தில் இருந்த புதர் செடிகள் அகற்றும் பணி நடைபெற்றது.
பழனி:
தமிழ் கடவுள் முருகன் பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தமிழகத்தில் அதிக அளவு பக்தர்கள் வரும் கோவில்களில் முதன்மையானதாக உள்ளது. மேலும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் அதிக அளவு பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை பக்தர்களால் தானமாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஆன்மிக பெரியவர்கள் பலரும் பழனி கோவிலுக்கு பல்வேறு சொத்துக்களை தானமாக வழங்கி உள்ளனர்.
இவற்றில் ஏராளமான விவசாய நிலங்கள் மற்றும் இடங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கி இருந்தன. தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் கடந்த 4 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஏராளமான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பழனி பூங்கா ரோடு பகுதியில் கோவிலுடன் இணைந்த தண்டபாணி சுவாமி மடத்திற்கு பாத்தியப்பட்ட சுமார் 1.40 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது. தற்போது அந்த நிலத்திற்கு பழனி கோவில் ஆணையரை தக்காராக நியமனம்செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் தண்டபாணி மடத்தின் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மடத்தை மீட்டனர்.
தொடர்ந்து நிலத்தில் இருந்த புதர் செடிகள் அகற்றும் பணி நடைபெற்றது. இந்த இடத்தில் யாரும் அத்துமீறி நுழையக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியிருந்த ரூ.100 கோடி மதிப்பிலான பழனி கோவில் நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டது பக்கதர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- ராக்கால பூஜை நடைபெற்று இரவு 8.30 மணிக்குள் கோவில் நடை அடைக்கப்படும்.
- பக்தர்கள் இரவு 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
சந்திர கிரகணத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் வருகிற 7-ந் தேதி பூஜை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தினந்தோறும் இரவு 7 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும். ராக்கால பூஜை இரவு 9 மணிக்கு நடைபெறும். வருகிற 7-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரகணம் என்பதால் அன்றைய தினம் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கோவில் நிர்வாகம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
வருகிற ஞாயிற்றுக்கிழமை இரவு 9.57 மணி முதல் நள்ளிரவு 1.26 மணி வரை சந்திர கிரகணம். எனவே அன்று மாலை 6.30 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மற்றும் உபகோவில்களில் இரவு 7.45 மணிக்கு ராக்கால பூஜை நடைபெற்று இரவு 8.30 மணிக்குள் கோவில் நடை அடைக்கப்படும்.
படிப்பாதை, மின் இழுவை ரெயில், ரோப்காரில் வரும் பக்தர்கள் இரவு 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
மறுநாள் செப்டம்பர் 8-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு மேல் சம்ரோக்ஷனபூஜை, ஹோமம், நைவேத்தியம், தீபாராதனை, நடைபெறும். அதன் பின்பு விஸ்வரூப தரிசனத்துக்கு வழக்கம் போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.






