search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய ஜனநாயக கூட்டணி"

    • கட்சி வலுவாக உள்ள இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்றார் முன்னாள் பிரதமர் தேவகவுடா.
    • வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டியிடும் என்றார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் காங்கிரசை எதிர்க்க பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்பட போவதாக தேவ கவுடாவின் மகனும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி அறிவித்து இருந்தார். வரும் பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறியிருந்தார்.

    இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஹெச்.டி.தேவகவுடா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனித்தே போட்டியிடும். எங்கள் கட்சி ஐந்து, ஆறு, மூன்று, இரண்டு அல்லது ஓர் இடத்தில் வெற்றி பெற்றாலும், இந்த மக்களவைத் தேர்தலில் கட்சி தனித்தே போட்டியிடும்.

    எங்கள் கட்சியினருடன் கலந்தாலோசித்த பின்னர் கட்சி வலுவாக உள்ள இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று தெரிவித்தார்.

    குமாரசாமியின் கருத்துக்கு நேர்மாறாக தேவகவுடா கருத்து தெரிவித்துள்ளது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்திற்கு அழைப்பு இல்லாததால் செல்லவில்லை.
    • பா.ஜனதா முறிக்கும்வரை, பா.ஜனதா உடனான என்னுடைய கூட்டணி தொடரும்

    பா.ஜனதா, அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் இடம் பிடித்திருந்த மற்றும் புதிய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து, கடந்த 18-ந்தேதி டெல்லியில் கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ஜனதா முறைப்படி அழைப்பு விடுத்தது.

    எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். பிரதமர் மோடிக்கு அருகில் அவர் அமரவைக்கப்பட்டார்.

    சமீபத்தில் இந்திய தேர்தல் கமிஷன் அதிமுக-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து, அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தது.

    இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி. பதவி பறிக்கப்பட்டபோதிலும், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அ.தி.மு.க. சார்பில் அழைக்கப்பட்டிருந்தார்.

    தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காதது பற்றி ஓ. பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ''தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பா.ஜனதா எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆகவே, நான் செல்லவில்லை. என்னுடனான கூட்டணியை பா.ஜனதா முறிக்கும்வரை, பா.ஜனதா உடனான என்னுடைய கூட்டணி தொடரும்'' எனத் தெரிவித்துள்ளார்.

    • ஒவ்வொரு குழுவிலும் இரண்டு பிராந்திய எம்.பி.க்கள் இடம் பெறுவார்கள்
    • ஜே.பி. நட்டா, ராஜ்நாத் சிங் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்

    மக்களவை தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வரும் நிலையில், 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்க பா.ஜனதாவும் திட்டம் வகுத்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு போட்டியாக 38 கட்சிகளுடன் கடந்த 18-ந்தேதி டெல்லியில் கூட்டம் நடத்தியது.

    தற்போது மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். மக்களவை தேர்தல் நெருங்குவதால், தேர்தல் குறித்து திட்டம் வகுக்க, இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிரதமர் மோடி எம்.பி.க்களை 10 குழுக்களாக பிரித்து அவர்களுடன் தினந்தோறும் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஒவ்வொரு குழுவிலும் 35 முதல் 40 எம்.பி.க்கள் இருப்பார்கள் எனத் தெரிகிறது. பிராந்தியம் வகையில் குறிவைக்கும் நோக்கமாக இது பார்க்கப்படுகிறது. ஜூலை 25-ந்தேதியில் இருந்து இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.

    இந்த எம்.பி.க்கள் குழு பிராந்தியம் ரீதியில் பிரிக்கப்படுகிறது. ஒவவொரு குரூப்பிலும் இரண்டு பிராந்தியத்தில் உள்ள எம்.பி.க்கள் இடம் பெறுவார்கள். முதல் கூட்டத்தில் உத்தர பிரதேசம் மற்றும் வடகிழக்கு பிராந்திய எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.

    பிரதமர் மோடி மாலை 6.30 மணிக்கு ஒரு கூட்டம், இரவு 7.30 மணிக்கு ஒரு கூட்டம் என இரண்டு கூட்டமாக நடத்த இருக்கிறார். பிரதமர் மோடியுடன் பா.ஜனதா தலைவர் நட்டா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரும் ஒவ்வொரு கூட்டத்திலும் இருப்பார்கள்.

    இந்த ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள சஞ்சீவ் பல்யான், அஜய் பாத், பா.ஜனதா கட்சி அதிகாரிகள், மத்திய அமைச்சர்களும் இடம் பெற இருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி 25 வருடத்தை நிறைவு செய்யும் நிலையில் இநத் கூட்டம் நடைபெற இருக்கிறது.

    பிரதமர் மோடி தலைமையில் 2024 மக்களவை தேர்தலை பா.ஜனதா சந்திக்க உள்ளது. இந்த முறை மிகப்பெரிய அளவில் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது.

    • கடந்த 2014-ம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜ.க., ஜனசேனா கட்சிகளுடன் கூட்டணி இணைந்து போட்டியிட்டது.
    • ஆந்திராவில் தனியார் நபர்கள் தரவுகளை சேகரிக்கின்றனர்.

    திருப்பதி:

    டெல்லியில் பா.ஜ.க. கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் பங்கேற்றார்.

    இந்த கூட்டத்திற்கு முன்பு பவன் கல்யாண் கூறியதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜ.க., ஜனசேனா கட்சிகளுடன் கூட்டணி இணைந்து போட்டியிட்டது. இதனையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு பிரிவினை ஏற்பட்டது. பா.ஜ.க.வும் ஜனசேனாவும் மீண்டும் இணைந்தாலும், தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க. இடையே புரிந்துணர்வு பிரச்சனை உள்ளது.

    அவர்களின் பிரச்சனைகளை பேசுவது ஏற்புடையது அல்ல.

    எங்கள் கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பது ஒரு பிரச்னை இல்லை. ஜனசேனா கட்சியினர் என்னை முதல்வராக பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தேர்தலின் போது முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து தெளிவு படுத்தப்படும்.

    ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது மட்டுமே எனது முன்னுரிமை.

    ஆதார் போன்ற பொதுமக்களின் தனிப்பட்ட தரவுகள் தனியாருக்கு ஏன் கொடுக்கப்பட வேண்டும். ஆந்திராவில் தனியார் நபர்கள் தரவுகளை சேகரிக்கின்றனர்.

    ஆந்திர மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை உள்ளது. உள்கட்டமைப்பு முழுமையாக இல்லை. ஊழியர்களுக்கு முறையான சம்பளம் கிடைப்பதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி, சிறிய கட்சி என்பது கிடையாது
    • மெஜாரிட்டி கிடைத்த போதிலும் தேசிய ஜனநாயக கூட்டணிதான் அரசு அமைத்தது

    எதிர்க்கட்சிகள் தலைவர்கள் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக கர்நாடகாவில் நடைபெற்றது. 2-வது கூட்டத்தில் ஓரளவிற்கு மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உறுதி செய்யப்பட்டது என்றே கூறலாம். நேற்றைய கூட்டத்திற்குப்பிறகு இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைப்பு கூட்டணி எனப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இதற்கிடையே பா.ஜனதா நேற்று டெல்லியில தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்தை கூட்டியது. இதில் 39 கட்சிகள் இடம் பிடித்திருந்தன.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பிடித்துள்ள பெரும்பாலான கட்சிகளை பற்றி கேள்விப்பட்டதே இல்லை என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கிண்டல் செய்திருந்தார்.

    அதற்கு பிரதமர் மோடி அளித்த பதில் பின்வருமாறு:-

    தேசிய ஜனநாயக கூட்டணி வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல. பங்களிப்பால் ஏற்பட்ட கூட்டணி. இந்த கூட்டணியில் எந்த கட்சியும் பெரிதோ, சிறிதோ அல்ல. பா.ஜனதா 2014 மற்றும் 2019-ல் மெஜாரிட்டி பெற்றிருந்தது. இருந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சி அமைத்தது'' என்றார்.

    • பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவின் வளர்ச்சியை பார்க்க வேண்டும்
    • பெரிய சிறிய கட்சிகள் என்ற பாகுபாடு இல்லாமல் மரியாதை வழங்கப்பட்டது

    டெல்லியில் 38 கட்சிகள் பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடியின் அருகில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் தேசிய அளவில் அ.தி.மு.க.வுக்கு பாரதீய ஜனதா கட்சி மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது.

    இந்த நிலையில் டெல்லியில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்டு எங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே தேர்தல்களில் ஒத்த கருத்துள்ள கட்சிகளேடு கூட்டணி அமைத்து வெற்றி பெற்றிருக்கிறோம். அந்த இருபெரும் தலைவர்களின் வழியிலேயே அ.தி.மு.க. செயல்படும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி உள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

    கொரோனாவால் உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் இந்தியாவில் அதுபோன்ற நெருக்கடி ஏற்படவில்லை. 9 ஆண்டுகள் மோடி சிறப்பான ஆட்சி அளித்துள்ளார். உலக அளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி இருக்கிறார்.

    இன்றைய இளைஞர்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து செயல்படும் அரசாக மத்திய அரசு உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும் அதற்கு துணை நிற்கின்றன. எனவே பாராளுமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 330 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும என்று நம்புகிறோம்.

    தற்போது கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் அப்படியே நீடிக்குமா என்று கேட்கிறீர்கள். அந்த கேள்விக்கே இடம் கிடையாது. சிறிய கட்சி, பெரிய கட்சி என்கிற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உரிய மரியாதை தேசிய ஜனநாயக கூட்டணிகளில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கே: நேற்றைய கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்திலும் எதிரொலிக்குமா? அங்கு சிறு சிறு பிரச்சினைகள் கூட்டணியில் இருப்பதுபோல் தெரிகிறதே?

    ப: உங்களது பார்வைக்கு அப்படி தெரியலாம். தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரையில் ஒருமித்த கருத்தோடுதான் அனைத்து கட்சிகளும் செயல்படுகின்றன. பெரிய கட்சி, சிறிய கட்சி என்ற பாகுபாடு இல்லை.

    இருந்தாலும் அ.தி.மு.க. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளது. நேற்றைய தேதி வரையில் 1 கோடியே 72 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.வின் பெரிய வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

    1½ கோடி உறுப்பினர்கள்ளாக இருந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளது. எதிர்காலத்தில் அ.தி.மு.க. தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இன்று இளைஞர்கள் பலர் இணைந்துள்ளனர். கூட்டணியில் தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை பற்றி இப்போது எதுவும் பேசப்படவில்லை.

    கே: குட்கா ஊழல் குற்றச்சாட்டில் தொடர்பு இருந்ததாகவும் பா.ஜனதாவுடன் இணைந்து செயல்படுவதால் அ.தி.மு.க. மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தி.மு.க. சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதே?

    ப: ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு தி.மு.க. அரசு மட்டுமே. தி.மு.க.வினருக்கு, மு.க.ஸ்டாலினுக்கும் ஊழலை பற்றி பேசுவதற்கு அருகதையே இல்லை. காங்கிரஸ் ஆட்சி மத்தியில் இருந்தபோது தி.மு.க. அங்கம் வகித்தது. அப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழியும் ஆ.ராசாவும் கைது செய்யப்பட்டனர்.

    நேற்று மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட கர்நாடக அமைச்சர் சிவக்குமார் மீதும் அமலாக்கத்துறை வழக்கு இருந்தது. அவரும் சிறை சென்று வந்துள்ளார். அவர்களது அணியில் உள்ள பல கட்சி தலைவர்கள் மீதும் ஊழல் வழக்கு உள்ளது.

    அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இன்னொரு அமைச்சர் பொன்முடி மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இப்படி ஊழல் செய்வது தி.மு.க.தான். நான் முதல்-அமைச்சராக இருந்தபோது எனது அரசு மீது குற்றம்சாட்டி தி.மு.க.வை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

    பொய்யான வழக்கு என்பதற்கு இதுவே உதாரணம். வழக்கை ரத்து செய்துள்ளனர்.

    கே: மோடி அருகில் அமர இடம் கிடைத்துள்ளது. வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. சந்தோஷமாக இருக்கிறீர்கள். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

    ப: நாங்கள் உழைப்பதைத்தான் நம்புகிறோம். என்னிடத்தில் மட்டுமல்ல. மோடி எல்லோரிடத்திலும் நெருக்கமாகத்தான் உள்ளார். அவர் யரிடத்திலும் எந்த பாகுபாடும் பார்ப்பது இல்லை.

    கே: மோடியுடன் நெருக்கமாக இருப்பதால் மேகதாது அணை மற்றும் காவிரி நதி நீர் விவகாரத்தில் அவரிடம் பேசி பிரச்சினைக்கு தீர்வு காணலாமே?

    ப: மு.க.ஸ்டாலினும்தான் கர்நாடக அரசுடன் நெருக்கமாக உள்ளார். கர்நாடக அரசுடன் அவர் பேச மறுப்பது ஏன்? எங்களை பொறுத்தவரையில் மேகதாதுவில் அணை கட்ட கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.

    கே: கொடநாடு வழக்கை விரைவுபடுத்த வேண்டும் என்று ஓ.பி.எஸ். கூறி இருக்கிறாரே?

    ப: அவருக்கு வேறு வழிஇல்லை. ஓ.பி.எஸ். இப்போது தி.மு.க.வை தாங்கி பிடித்து கொண்டிருக்கிறார். கொடநாடு வழக்கில் குற்றத்தில் ஈடுபட்டவர்களை அ.தி.மு.க. அரசு கைது செய்தது. அவர்களுக்கு ஜாமின் போட்டவர்கள்தான் தி.மு.க.வினர்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    பேட்டியின்போது எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி. சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சரத் பவார் பங்கேற்பு
    • டெல்லியில் பா.ஜனதா தலைமையிலான கூட்டத்தில் அஜித் பவார் பங்கேற்பு

    பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் தலைவர்கள் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் கலந்து கொண்டவர் பிரபுல் பட்டேல். அப்போது சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் இருந்தார்.

    அதன்பின் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து தனியாக செயல்படுகிறார். அஜித் பவார் உடன் பிரபுல் பட்டேலும் சென்றுள்ளார். இவர்கள் தற்போது தேசியவாத காங்கிரஸ் நாங்கள்தான் எனக் கூறி வருகிறார்கள்.

    நேற்று டெல்லியில் பிரதமர் மோடி, ஜே.பி. நட்டா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரபுல் பட்டேல் கலந்து கொண்டார்.

    அதன்பின் பேசிய பிரபுல் பட்டேல், தேசியவாத காங்கிரஸ் ஜனநாயக கூட்டணியின் ஒரு அங்கம் எனத் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இந்த கூட்டணியுடன் இணைந்து செயல்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில் ''நானும், அஜித் பவாரும் 38 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கேற்றோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு அங்கம். எங்கள் தரப்பில் இருந்து அஜித் பவார் கருத்துகளை முன்னெடுத்து வைத்தார்'' என்றார்.

    திங்கட்கிழமை காலையில் அஜித் பவார், பிரபுல் பட்டேல், சுனில் தட்கரே ஆகியோர் சரத்பவாரை சென்று சந்தித்தனர். அப்போது அவர்கள் தேசியவாத காங்கிரஸ் ஒற்றுமையாக செயல்பட வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், சரத் பவார் அவர்களுடைய கருத்துகளை கேட்டுக்கொண்டு பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.

    சரத் பவார் எங்களை அழைக்கவில்லை. நாங்கள் அவரை பார்க்கச் சென்று, அவருடைய வாழ்த்தை பெறச் சென்றோம் என்றார் அஜித் பவார்.

    • தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தக் கட்சியும் பெரிய கட்சியோ, சிறிய கட்சியோ இல்லை.
    • என்டிஏ கூட்டணியின் மூன்றாவது ஆட்சியில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும்.

    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    தேசத்தை வலுப்படுத்துவதே தேசிய ஜனநாயக கூட்டணியின் நோக்கம். வளர்ச்சியும் மக்களுக்கு அதிகாரமளிப்பதுமே கூட்டணியின் நோக்கம். எதிர்க்கட்சியாக இருந்தபோதும் நேர்மறையான அரசியலையே நாங்கள் செய்தோம். வெளிநாட்டு சக்திகளின் உதவியை பெறவே இல்லை. எதிர்மறையான சிந்தனையுடன் அமைக்கப்படும் எந்த ஒரு கூட்டணியும் வெற்றி பெறாது.

    NDA கூட்டணியில், N என்றால் New India (புதிய இந்தியா), D என்றால் Developed Nation (வளர்ந்த நாடு), A என்றால் Aspirations of people and regions (மக்கள் மற்றும் பிராந்தியங்களின் விருப்பங்கள்)

    என்டிஏ கூட்டணியானது கட்டாயத்தின்பேரில் அமைந்த கூட்டணி அல்ல, பங்களிப்புடன் கூடிய கூட்டணி. இங்குள்ள அனைத்து கட்சிகளும் பங்களிப்பை வழங்குகின்றன, அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தக் கட்சியும் பெரிய கட்சியோ, சிறிய கட்சியோ இல்லை, 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பாஜக பெரும்பான்மையைப் பெற்றது. ஆனால் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைத்தது.

    தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது, எதிர்க்கட்சிகளோ அவர்களை பிரிக்கின்றன. நாங்கள் நிகழ்காலத்திற்காக மட்டும் உழைக்காமல், எதிர்காலத்தையும் சிறப்பாக்க பாடுபடுகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முதலில் நாடு, நாட்டின் பாதுகாப்பு, முன்னேற்றம், மக்களுக்கு அதிகாரம். அதன்பிறகுதான் அரசியல்

    2024 பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெறும். மேலும் அனைத்து கட்சிகளும் வளர்ச்சியை எடுத்துச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்க வேண்டும். நாம் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியின் மூன்றாவது ஆட்சியில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.
    • பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணி குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த இரண்டு பாராளுமன்றத் தேர்தல்களிலும் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்த நிலையில், வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு களமிறங்க முடிவு செய்துள்ளன. இதற்கான ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. 26 கட்சிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், கூட்டணி குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மற்றும் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, பாமகவின் ஏகே மூர்த்தி, த.மா.கா.வின் ஜிகே வாசன் மற்றும் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே உட்பட 38 கட்சிகளின் பிரதிநிதிகள் நாடெங்கிலும் இருந்து கூட்டம் நடைபெறும் அரங்கிற்கு வந்துள்ளனர்.

    இக்கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நாடு முழுவதும் இருந்து தலைவர்கள் பங்கேற்க வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் கூட்டணி பல்வேறு சோதனைகளை கடந்து, பல தடைகளை கடந்த ஒரு வெற்றிக்கூட்டணி. தேசிய வளர்ச்சிக்கும் மாநிலங்களின் நோக்கங்களை நிறைவேற்றவும் உருவானது நமது கூட்டணி," என குறிப்பிட்டுள்ளார்.

    வரும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள இந்த சமயத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    • புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்தார்.
    • தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் ஏ.சி.சண்முகம் பங்கேற்கிறார்.

    சென்னை:

    தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்தார்.

    இந்த அழைப்பை ஏற்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் ஏ.சி.சண்முகம் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார்.

    • பாஜக தனது கூட்டணியில் உள்ள 38 கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
    • பாஜக தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி கேள்வி குறியாகி உள்ளது.

    திருப்பதி:

    பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது. இதில் பாஜக தனது கூட்டணியில் உள்ள 38 கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க.வுடன் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக அந்த கட்சியின் தலைவர் நடிகர் பவன் கல்யாணுக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ஆந்திர மாநிலத்தில் இருந்து பவன் கல்யாண் மட்டுமே பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்க தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

    இதனால் பாஜக தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி கேள்வி குறியாகி உள்ளது.

    ஆந்திர மாநில பாஜக தலைவராக என்.டி. ராமராவின் மகள் புரந்தேஸ்வரி பொறுப்பேற்றுள்ளார். ஆந்திராவில் பவன் கல்யாண் கட்சி மட்டுமே பாஜக கூட்டணியில் உள்ளது. மற்ற கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது குறித்து மேலிடம் முடிவு செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.

    ஆந்திராவில் பா.ஜ.க, பவன் கல்யாண் கட்சியுடன் கூட்டணி அமைத்து தனித்து போட்டியிடும் என பரபரப்பாக பேசப்படுகிறது.

    • எதிர்க்கட்சிகள் கூட்டம் கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது
    • தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்

    காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள எதிர்க்கட்சிகள் கூட்டம் கர்நாடகாவில் நேற்று தொடங்கியது. இன்றும் நடைபெறுகிறது. இதற்கு போட்டியாக பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. 38 கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க இருப்பதாக ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

    38 கட்சிகளில் பெரும்பாலான கட்சிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் இல்லை என்றாலும், மாநில கட்சிகள் கூட்டணியில் இருப்பதை பா.ஜனதா சாதகமாக பார்க்கிறது.

    மோடி தலைமையில் கடந்த 9 வருடம் நல்லாட்சியை கொடுத்துள்ளோம். அதன் தொடர்ச்சி செயல்முறைதான் இது என நட்டா தெரிவித்துள்ளார்.

    பீகாரை பொறுத்தவரைக்கும் நிதிஷ் குமார் உடன் கூட்டணி வைத்திருந்தது. நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றால், லோக் ஜனசக்தி கட்சி மட்டுமே பா.ஜனதாவில் உள்ளது. சிராக் பஸ்வான் மற்றும் அவரது மாமா ஆகியோரை ஒன்று சேர்க்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. இதனால் 6 சதவீதம் பஸ்வான் வாக்குகள் கிடைக்கும் என நினைக்கிறது. மேலும், உபேந்திர சிங் குஷ்வாகா, முகேஷ் சஹானி, ஜித்தன் ராம் மஞ்சி ஆகியோர் கட்சியை கூட்டணியில் சேர்க்க இருக்கிறது.

    உத்தர பிரதேசததில் வலுவாக இருக்கும் பா.ஜனதா சுகல்வே் பாரதிய சமாஜ் கட்சியை மட்டும் கூட்டணியில் சேர்க்க இருக்கிறது.

    தமிழகத்தில் அதிமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளுடனும், மகாராஷ்டிராவில் அஜித் பவாரின் தேசிவாத காங்கிரஸ், ஷிண்டுயின் சிவசேனா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பத்தில முக்கிய கவனம் செலுத்தும்.

    வடகிழக்கு மாநிலங்களில ஏழு கட்சிகள் பா.ஜனதா கூட்டணியில் உள்ளது. பவன் கல்யாண், கேரளாவின் தாமஸ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைய இருக்கின்றன.

    ×