search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மக்களவை தேர்தலில் என்.டி.ஏ. 330 இடங்களில் வெற்றிபெறும்: எடப்பாடி பழனிசாமி
    X

    மக்களவை தேர்தலில் என்.டி.ஏ. 330 இடங்களில் வெற்றிபெறும்: எடப்பாடி பழனிசாமி

    • பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவின் வளர்ச்சியை பார்க்க வேண்டும்
    • பெரிய சிறிய கட்சிகள் என்ற பாகுபாடு இல்லாமல் மரியாதை வழங்கப்பட்டது

    டெல்லியில் 38 கட்சிகள் பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடியின் அருகில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் தேசிய அளவில் அ.தி.மு.க.வுக்கு பாரதீய ஜனதா கட்சி மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது.

    இந்த நிலையில் டெல்லியில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்டு எங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே தேர்தல்களில் ஒத்த கருத்துள்ள கட்சிகளேடு கூட்டணி அமைத்து வெற்றி பெற்றிருக்கிறோம். அந்த இருபெரும் தலைவர்களின் வழியிலேயே அ.தி.மு.க. செயல்படும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி உள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

    கொரோனாவால் உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் இந்தியாவில் அதுபோன்ற நெருக்கடி ஏற்படவில்லை. 9 ஆண்டுகள் மோடி சிறப்பான ஆட்சி அளித்துள்ளார். உலக அளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி இருக்கிறார்.

    இன்றைய இளைஞர்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து செயல்படும் அரசாக மத்திய அரசு உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும் அதற்கு துணை நிற்கின்றன. எனவே பாராளுமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 330 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும என்று நம்புகிறோம்.

    தற்போது கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் அப்படியே நீடிக்குமா என்று கேட்கிறீர்கள். அந்த கேள்விக்கே இடம் கிடையாது. சிறிய கட்சி, பெரிய கட்சி என்கிற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உரிய மரியாதை தேசிய ஜனநாயக கூட்டணிகளில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கே: நேற்றைய கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்திலும் எதிரொலிக்குமா? அங்கு சிறு சிறு பிரச்சினைகள் கூட்டணியில் இருப்பதுபோல் தெரிகிறதே?

    ப: உங்களது பார்வைக்கு அப்படி தெரியலாம். தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரையில் ஒருமித்த கருத்தோடுதான் அனைத்து கட்சிகளும் செயல்படுகின்றன. பெரிய கட்சி, சிறிய கட்சி என்ற பாகுபாடு இல்லை.

    இருந்தாலும் அ.தி.மு.க. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளது. நேற்றைய தேதி வரையில் 1 கோடியே 72 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.வின் பெரிய வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

    1½ கோடி உறுப்பினர்கள்ளாக இருந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளது. எதிர்காலத்தில் அ.தி.மு.க. தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இன்று இளைஞர்கள் பலர் இணைந்துள்ளனர். கூட்டணியில் தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை பற்றி இப்போது எதுவும் பேசப்படவில்லை.

    கே: குட்கா ஊழல் குற்றச்சாட்டில் தொடர்பு இருந்ததாகவும் பா.ஜனதாவுடன் இணைந்து செயல்படுவதால் அ.தி.மு.க. மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தி.மு.க. சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதே?

    ப: ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு தி.மு.க. அரசு மட்டுமே. தி.மு.க.வினருக்கு, மு.க.ஸ்டாலினுக்கும் ஊழலை பற்றி பேசுவதற்கு அருகதையே இல்லை. காங்கிரஸ் ஆட்சி மத்தியில் இருந்தபோது தி.மு.க. அங்கம் வகித்தது. அப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழியும் ஆ.ராசாவும் கைது செய்யப்பட்டனர்.

    நேற்று மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட கர்நாடக அமைச்சர் சிவக்குமார் மீதும் அமலாக்கத்துறை வழக்கு இருந்தது. அவரும் சிறை சென்று வந்துள்ளார். அவர்களது அணியில் உள்ள பல கட்சி தலைவர்கள் மீதும் ஊழல் வழக்கு உள்ளது.

    அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இன்னொரு அமைச்சர் பொன்முடி மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இப்படி ஊழல் செய்வது தி.மு.க.தான். நான் முதல்-அமைச்சராக இருந்தபோது எனது அரசு மீது குற்றம்சாட்டி தி.மு.க.வை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

    பொய்யான வழக்கு என்பதற்கு இதுவே உதாரணம். வழக்கை ரத்து செய்துள்ளனர்.

    கே: மோடி அருகில் அமர இடம் கிடைத்துள்ளது. வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. சந்தோஷமாக இருக்கிறீர்கள். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

    ப: நாங்கள் உழைப்பதைத்தான் நம்புகிறோம். என்னிடத்தில் மட்டுமல்ல. மோடி எல்லோரிடத்திலும் நெருக்கமாகத்தான் உள்ளார். அவர் யரிடத்திலும் எந்த பாகுபாடும் பார்ப்பது இல்லை.

    கே: மோடியுடன் நெருக்கமாக இருப்பதால் மேகதாது அணை மற்றும் காவிரி நதி நீர் விவகாரத்தில் அவரிடம் பேசி பிரச்சினைக்கு தீர்வு காணலாமே?

    ப: மு.க.ஸ்டாலினும்தான் கர்நாடக அரசுடன் நெருக்கமாக உள்ளார். கர்நாடக அரசுடன் அவர் பேச மறுப்பது ஏன்? எங்களை பொறுத்தவரையில் மேகதாதுவில் அணை கட்ட கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.

    கே: கொடநாடு வழக்கை விரைவுபடுத்த வேண்டும் என்று ஓ.பி.எஸ். கூறி இருக்கிறாரே?

    ப: அவருக்கு வேறு வழிஇல்லை. ஓ.பி.எஸ். இப்போது தி.மு.க.வை தாங்கி பிடித்து கொண்டிருக்கிறார். கொடநாடு வழக்கில் குற்றத்தில் ஈடுபட்டவர்களை அ.தி.மு.க. அரசு கைது செய்தது. அவர்களுக்கு ஜாமின் போட்டவர்கள்தான் தி.மு.க.வினர்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    பேட்டியின்போது எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி. சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×