search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ricky Ponting"

    • தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்த ஆசிய கேப்டன் என்ற சாதனையை ரோகித் படைத்துள்ளார்.
    • ரோகித் சர்மா ஒட்டுமொத்தமாக கடைசியாக வழிநடத்திய 19 போட்டிகளிலும் இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா டி20 தொடரை கைப்பற்றியது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 3-வது போட்டியில் 17 ரன்னில் தோல்வியை தழுவியது.

    ஏற்கனவே தொடரை கைப்பற்றிய காரணத்தால் டி20 உலகக்கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறியும் நோக்கில் சோதனை முயற்சியாக 3-வது போட்டியில் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இளம் பவுலர்களுக்கு ரோகித் சர்மா வாய்ப்பளித்தார். அதில் ஹர்ஷல் படேல், பிஷ்னோய் தவிர எஞ்சிய பவுலர்கள் சொதப்பினாலும் கடைசியில் இந்தியா போராடி தான் தோல்வியடைந்தது.

    முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பின் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 14 வெற்றிகளை பதிவு செய்து உலக சாதனை படைத்த ரோகித் சர்மா ஒட்டுமொத்தமாக கடைசியாக வழிநடத்திய 19 போட்டிகளிலும் இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

    நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் சாதனையை ரோகித் சமன் செய்திருந்திருப்பார்.


    அந்த சாதனையை ரோகித் தவறவிட்டுள்ளார். இருப்பினும் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்த ஆசிய கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

    1. ரிக்கி பாண்டிங் : 20 (2008)

    2. ரோகித் சர்மா : 19 (2019/22)

    3. ரிக்கி பாண்டிங் : 16 (2006/07)

    ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் வாரியம் என்னை அந்தப் பதவிக்கு அணுகியதாக ரிக்கி பாண்டிக் கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்த அவர் 2 முறை ஒருநாள் போட்டி உலக கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

    46 வயதான ரிக்கி பாண்டிங் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்காக இந்திய அணியை இப்போதே தயார் படுத்த வேண்டும். தற்போதுள்ள அணியில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும்.

    20 ஓவர் போட்டியில் விளையாட கூடிய திறமையான வீரர்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறார்கள். இதனால் சீனியர் வீரர்கள் தங்களது இடங்களை தக்க வைத்து கொள்வது கடினமானது. ஹர்திக் பாண்ட்யா உடல் தகுதியுடன் இல்லாததால் பந்து வீசவில்லை. அவரது இடத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.

    தற்போது உள்ள 5 இளம் வீரர்கள் எதிர்காலத்தில் ஜொலிப்பார்கள். பிரித்வி ஷா, வெங்கடேஷ் அய்யர், ருதுராஜ் கெய்க்வாட், படிக்கல், ஜெய்ஷ்வால் ஆகியோர் எதிர்கால இந்திய அணியில் சூப்பர் ஸ்டார் வீரர்களாக இருப்பார்கள். ரோகித் சர்மா, விராட் கோலி இல்லாத காலத்தில் அவர்கள் முத்திரை பதிக்கலாம்.

    வெங்கடேஷ் அய்யரின் சிறப்பான ஆட்டத்துக்கு கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

    ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் வாரியம் என்னை அந்தப் பதவிக்கு அணுகியது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் என்னை ஏற்கனவே பயிற்சியாளர் பதவிக்கு அணுகி இருந்தது.

    பயிற்சியாளர் பதவியில் 300 நாட்கள் வீரர்களுடன் செலவிட வேண்டும். அவ்வளவு நாட்கள் என்னால் இருக்க முடியாது என்பதால் பயிற்சியாளர் பதவியை நிராகரித்து விட்டேன்.

    ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொண்டது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. குடும்பத்தை தியாகம் செய்து பார்க்க வேண்டிய வேலை அதுவாகும். இதனால்தான் அவர் பொறுப்பேற்றது வியப்பை அளித்தது. அவரது குடும்ப விவரம் பற்றி எனக்கு தெரியாது. அவருக்கு சிறிய வயதில் குழந்தைகள் இருப்பதாக நினைக்கிறேன். ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்கு தொடர்ந்து பயிற்சியாளராக இருப்பேன்.

    இவ்வாறு ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

    உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உதவி பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் திரும்பி இருப்பது போட்டியில் அணியின் ஆட்ட திறனை அதிகரிப்பதாக அமையும். அவர்கள் இருவரும் அணிக்கு வெளியே இருந்த போது ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்படவில்லை. நான் மட்டுமின்றி ஒட்டு மொத்த அணியே அவர்கள் இருவரும் அணிக்கு திரும்புவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறது. சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் டேவிட் வார்னர் நன்றாக விளையாடினார். ஸ்டீவன் சுமித் பீல்டிங் செய்கையில் சற்று தடுமாறினார். இருப்பினும் அவர் நல்ல பார்முக்கு வந்து விடுவார். உலக கோப்பையை தக்க வைத்து கொள்ள உண்மையிலேயே ஆஸ்திரேலிய அணியினர் போராடுவார்கள். நிச்சயமாக எதிரணிகளுக்கு சவால் அளிப்பார்கள். மிட்செல் ஸ்டார்க் அணிக்கு திரும்பி இருக்கிறார். கம்மின்ஸ் நன்றாக பந்து வீசி வருகிறார். எங்களது பந்து வீச்சு பலம் அதிகரித்துள்ளது. ஆல்-ரவுண்டர்கள் மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    உலக கோப்பை போட்டி நீண்ட நாட்கள் நடக்கக்கூடியதாகும். அணியில் வலுவான மாற்று வீரர்கள் இருக்க வேண்டியது அவசியமானதாகும். சரியான வேகப்பந்து வீச்சு இல்லை என்றால் இங்கிலாந்து மண்ணில் வெற்றி பெற முடியாது. ஆஸ்திரேலிய அணியில் சிறந்த வீரர்கள் இடம் பிடித்து இருப்பதால் கோப்பையை வெல்லக்கூடிய அணியாக நாங்கள் இருப்பதாக நினைக்கிறேன்.

    உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் சமீபகாலமாக ஒரு நாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அத்துடன் அந்த அணி தனது சொந்த மண்ணில் விளையாடுகிறது. இதனால் இயற்கையாகவே இங்கிலாந்து அணிக்கு சில அனுகூலங்கள் இருக்கும். இருப்பினும் அந்த அணிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் சவால் அளிக்கும். வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா அணிகளும் வலுவானது தான். சாம்பியன் பட்டம் வெல்ல மிகவும் திறந்த வாய்ப்பு உள்ள போட்டி இதுவாகும். இதில் இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு இருந்தாலும், மற்ற அணிகளும் அதிர்ச்சி அளிக்க வாய்ப்பு இருக்கிறது.

    இவ்வாறு ரிக்கி பாண்டிங் கூறினார்.
    டெல்லி பெரோஸ் ஷா கோட்லா ஆடுகளம் உள்ளூர் அணிக்கு உகந்த மாதிரி இல்லை என்று பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங் புகார் கூறியுள்ளார். #IPL2019 #RickyPonting
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த 16-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தியது. வேகமின்றி (ஸ்லோ) காணப்பட்ட இந்த ஆடுகளத்தில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 129 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.

    எளிய இலக்கை ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. அதிரடியாக ஆடிய ஐதராபாத் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ (48 ரன், 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    தோல்விக்கு பிறகு நிருபர்களை சந்தித்த டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங் ஆடுகள பராமரிப்பாளர் மீது சாடினார். பாண்டிங் கூறியதாவது:-

    இந்த ஆடுகளத்தன்மை (பிட்ச்) எங்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்று சொல்வதே நியாயமாக இருக்கும். போட்டிக்கு முன்பாக ஆடுகள பராமரிப்பாளரிடம் பேசியபோது, முந்தைய ஆட்டங்களை காட்டிலும் இது மிகச்சிறந்த ஆடுகளமாக இருக்கும் என்று கூறினார். ஆனால் அதற்கு நேர்மாறாக மோசமான பிட்ச்சாகி விட்டது. பந்து குறைந்த அளவே பவுன்ஸ் ஆனதையும், ஆடுகளம் எவ்வளவு மந்தமாக இருந்தது என்பதையும் நீங்களே பார்த்து இருப்பீர்கள்.

    இந்த ஆடுகளம் ஐதராபாத் அணியினருக்கே கன கச்சிதமாக பொருந்தியது. மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களும், பந்தை வேகம் குறைத்து வீசக்கூடிய திறமையான வேகப்பந்து வீச்சாளர்களும் அவர்களிடம் உள்ளனர். இங்குள்ள சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு அருமையாக பந்து வீசினர். இத்தகைய ஆடுகளத்தில் பந்தை மெதுவாக வீசும் போது அது ஏறக்குறைய அடிக்க முடியாத பந்துகளாகவே இருக்கும். அடுத்து வரும் ஆட்டங்களுக்கும் ஆடுகளத்தின் போக்கு தொடர்ந்து இது போன்றே இருக்குமே என்றால், ஆடும் லெவன் அணியில் மாற்றம் செய்வது குறித்து சிந்திக்க வேண்டியது இருக்கும். மொத்தத்தில் இன்றைய நாளில் இந்த ஆடுகளம் எங்களது பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லை. இது நாங்கள் எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை.

    ஆடுகளம் மெதுவாக இருந்தாலும் கூட டெல்லி பேட்ஸ்மேன்கள் 160 முதல் 165 ரன்கள் வரை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வீரர்கள் ஷாட்களை தேர்வு செய்து அடித்த விதம் மோசமாக இருந்தது. அது தான் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இந்த குறைபாடுகளை சரி செய்ய வேண்டியது முக்கியம்.

    மேலும் இது தான் எங்களது சொந்த ஊர் ஆடுகளம். எனவே இங்குள்ள சீதோஷ்ண நிலையில் எதிரணியை விட எப்படி சிறப்பாக செயல்படுவது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். இதுவரை இங்கு நடந்துள்ள 3 ஆட்டங்களில் 2-ல் வெளியூர் அணி வெற்றி பெற்று இருக்கிறது. அதனால் நிச்சயம் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டும்.

    இவ்வாறு பாண்டிங் கூறினார்.

    பாண்டிங்கின் குற்றச்சாட்டு குறித்து டெல்லி கிரிக்கெட் சங்க மூத்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, ‘எனக்கு தெரிந்த மட்டில், இந்த ஆடுகளம் எந்த மாதிரி இருக்கும் என்பதை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு என்று நியமிக்கப்பட்டிருந்த பிட்ச் ஒருங்கிணைப்பாளரிடம் தான் பாண்டிங் கேட்டு அறிந்துள்ளார். ஆனால் டெல்லி கிரிக்கெட் சங்கத்தை சேர்ந்த பிட்ச் பராமரிப்பாளர்கள் யாரும் பாண்டிங்கிடம், இது வேகப்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளமாக இருக்கும் என்று சொல்லவில்லை. இந்த விஷயத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிட்ச் ஒருங்கிணைப்பாளர் பாண்டிங்கை தவறாக வழிநடத்தி விட்டதாக நினைக்கிறேன். ஆனால் அந்த நபர், பிட்ச் பராமரிப்பாளருக்குரிய தகுதி படைத்தவர் கிடையாது’ என்றார்.

    இந்த ஆட்டம் முடிந்ததும் டெல்லி பிட்ச் பராமரிப்பாளர் அங்கித் தத்தாவிடம் அணியின் ஆலோசகர் சவுரவ் கங்குலி நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். அடுத்த உள்ளூர் ஆட்டத்திற்கு முன்பாக (ஏப்ரல் 18-ந்தேதி) முடிந்த வரை ஆடுகளத்தன்மையை மாற்ற முயற்சிப்பதாக டெல்லி அணிக்கு உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. #IPL2019 #RickyPonting
    ஆஸ்திரேலிய அணி மீண்டும் உலக கோப்பையை வெல்லும் என்று முன்னாள் கேப்டனும், உதவி பயிற்சியாளருமான ரிக்கிபாண்டிங் கூறியுள்ளார். #RickyPonting
    சிட்னி:

    10 அணிகள் பங்கேற்கும் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை வலுப்படுத்தும் விதமாக அந்த அணியின் உதவி பயிற்சியாளராக ரிக்கிபாண்டிங் நியமிக்கப்பட்டு இருக்கிறார். ரிக்கிபாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 2003 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் உலக கோப்பையை வென்று இருந்தது.

    இந்த நிலையில் ரிக்கிபாண்டிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த முறை நாங்கள் உலக கோப்பையை வென்றோம். இந்த முறையும் எங்களால் உலக கோப்பையை நிச்சயம் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன். தற்சமயம் உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்தியாவும், இங்கிலாந்தும் முன்னணியில் இருக்கின்றன. ஆனால் ஸ்டீவன் சுமித்தும், டேவிட் வார்னரும் திரும்பியதும், எங்கள் அணியும் பலம் வாய்ந்ததாக உருவெடுத்து விடும். சுமித்தும், வார்னரும் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள். அனுபவசாலிகள். நெருக்கடியான சூழலை திறம்பட கையாளக்கூடியவர்கள். அவர்கள் வந்ததும் உடனடியாக எங்கள் அணியை பார்க்க வலுமிக்கதாக தெரிய தொடங்கி விடும்.

    உலக கோப்பை போட்டி நடக்கும் இங்கிலாந்தில் உள்ள சீதோஷ்ண நிலை, எங்களது ஆட்ட பாணிக்கு சாதகமானது. அதனால் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள பிரதான அணிகளில் ஒன்றாக ஆஸ்திரேலியாவும் இருக்கும்.

    வேகப்பந்து வீச்சாளர்கள் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் காயத்தால் அவதிப்படுவது குறித்து கேட்கிறீர்கள். பொதுவாக, அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு தங்களை எப்படி தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தெரியும். அதனால் அதுபற்றி எங்களுக்கு அதிகமாக கவலையில்லை. எங்களது கவலை சுமித், வார்னர், ஹேசில்வுட், ஸ்டார்க் ஆகிய வீரர்களை அணிக்குள் கொண்டு வந்து ஒருங்கிணைப்பதில் தான் இருக்கிறது. திட்டமிட்டப்படி எல்லாமே சரியாக அமைந்து விட்டால் எங்கள் அணி சவால்மிக்க அணியாக விளங்கும்.

    இவ்வாறு பாண்டிங் கூறினார். #RickyPonting

    ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை இந்திய அணியால் வெல்ல இயலாது என்று அந்நாட்டு முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். #AUSvIND #RickyPonting
    பெர்த்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    4 டெஸ்ட் தொடரில் அடிலெய்டுவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் டெஸ்ட் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை இந்திய அணியால் வெல்ல இயலாது என்று அந்நாட்டு முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இந்த டெஸ்ட் தொடரில் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளையும் கவனித்து வருகிறேன். இந்திய அணியால் இந்த டெஸ்ட் தொடரை நிச்சயமாக வெல்ல முடியாது. ஏனென்றால் இந்தியாவின் பேட்டிங் வரிசை மோசமாகவே இருக்கிறது. பெர்த் டெஸ்டில் இது வெட்டவெளிச்சமாகி விட்டது.

    தொடக்க வீரர் காயம், புதிய வீரரை அடுத்த டெஸ்டில் களம் இறக்குதல் போன்ற சூழல் இந்திய வீரர்களின் மனநிலையை பாதிக்கும்.

    ஆஸ்திரேலிய அணி மெல்போர்னில் நடைபெறும் அடுத்த போட்டிக்கு பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டாம். மிகவும் அமைதியாக ஆடினாலே இந்தியாவை எளிதில் வென்றுவிடலாம்.

    மெல்போர்ன், சிட்னி ஆடுகளங்கள் இந்திய வீரர்களுக்கு ஏற்றவையாக இருந்தாலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெறும். அந்த அணியின் வெற்றி நீடிக்கும்.

    இவ்வாறு பாண்டிங் கூறியுள்ளார். #AUSvIND #RickyPonting
    ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கோலியிடம் பயப்பட தேவையில்லை என்று ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் கூறியுள்ளார். #rickyponting #ViratKohli

    சிட்னி:

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையே 4 டெஸ்ட் போட்டி நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.

    இந்த டெஸ்ட் தொடர் குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் கூறியதாவது:-

    இந்திய அணி கேப்டன் விராட்கோலியின் ஆட்டத்தை பார்த்து அசராமல் அவருக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் இன்னும் அச்சத்தை ஏற்படுத்தலாம்.

    கோலி ரன் வேட்டையில் ஈடுபடுவார் என நினைக்க தேவையில்லை. அவர் ரன்களை குவிக்க முயல்வார். ஆனால் அவரை கண்டு ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் பயப்பட தேவையில்லை. அவருக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்.

    மிச்சேல் ஜான்சன் சில முறை கோலிக்கு ஆக்ரோ‌ஷமான பந்துவீச்ச, உடல் செய்கை மூலம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளார்.

    உள்ளூரில் விளையாடுவதால் ஆஸ்திரேலிய வீரர்கள் செயல்பாடு வலிமையாக இருக்க வேண்டும். தற்போதைய அணி ஆக்ரோ‌ஷமான மனபான்மையுடன் ஆடாவிட்டால் அது குப்பைக்கு ஈடாகும். வார்த்தைகள், செயல்கள் ஒன்றாக அமைய வேண்டும்.

    2014-15 தொடரில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் இழந்தது. கோலி 86.26 சராசரியுடன் 692 ரன்களை குவித்தார்.

    நான் அணியின் கேப்டனாக இருந்தால் கோலிக்கு நல்ல தொடக்கம் அமையவிட மாட்டேன். ஆரம்பத்திலேயே பவுண்டரிகள் அடிக்க விடக்கூடாது. இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தான் கோலியை அதிகமுறை சிரமத்துக்கு உள்ளாக்கினார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #rickyponting #ViratKohli

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங்கின்போது வீரர்களை எந்த இடத்தில் நிறுத்துவது என்பதில் கவனம் செலுத்த வேண்டுமென ரிக்கி பாண்டிங் அறிவுரை வழங்கியுள்ளார். #ViratKohli #RickyPonting
    மெல்போர்ன்:

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பீல்டிங்கின் போது வீரர்களை எந்த இடத்தில் நிறுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ரிக்கி பாண்டிங் அறிவுரை வழங்கியுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணி வருகிற நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. இப்போட்டி தொடர் குறித்து பேட்டி அளித்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு அறிவுரை கூறி உள்ளார்.

    டெஸ்ட் தொடரில் ஒவ்வொரு பந்தையும் நான் பார்ப்பதில்லை. ஆனால் ஆடுகளத்தில் என்ன நடக்கிறது என்பது எனக்கு முக்கியமானது. ஏனென்றால் கேப்டன்ஷிப்பில் ஒரு கேப்டனின் பணி 60 சதவீதம் களத்துக்கு வெளியே எப்படி செயல்படுவது என்று திட்டம் வகுப்பதில் இருக்க வேண்டும். 40 ஆடுகளத்தில் செயல்படுவதும் ஆகும்.

    பந்து வீச்சை மாற்றுவதிலும் பீல்டிங்கில் வீரர்களை எந்த இடத்தில் நிறுத்துவது என்பது மிகவும் முக்கியமானது. இதில் கோலி கவனம் செலுத்த வேண்டும். மேலும் அவர் ஆடுகளத்துக்கு வெளியே வீரர்கள் தயார்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்றார். #AUSvIND #ViratKohli #RickyPonting
    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டியால் மேக்வெல்லை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் என்று லாங்கர் தெரிவித்துள்ளார். #ENGvAUS
    ஆஸ்திரேலியா அணி ஐந்து ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் முதல் தொடர் இதுவாகும். இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த அணி விரும்புகிறது. பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆனால் அதிரடி பேட்ஸ்மேன் ஆன மேக்ஸ்வெல் இரண்டில் ஒற்றையிலக்க ரன்னிலேயே வெளியேறினார்.

    மேக்ஸ்வெல் ஃபார்ம் இன்றி தவித்தாலும் ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளார். இந்த தொடரில் ரிக்கி பாண்டிங் வர்ணனையாளராக செயல்பட இருக்கிறார். தொடருக்கு முன் ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்து டிப்ஸ் வழங்க இருக்கிறார்.



    அப்போது மேக்ஸ்வெல்லை ரிக்கி பாண்டியால் பழைய பார்முக்கு கொண்டு வருவார் என்று லாங்கர் கூறியுள்ளார். இதுகுறித்து லாங்கர் கூறுகையில் ‘‘இங்கிலாந்து தொடருக்கான மேக்ஸ்வெல்லின் தயார்படுத்துதல் நிலை சிறப்பாக உள்ளது. அவர் விரைவில் மிகப்பெரிய ஸ்கோரை எட்டவில்லை எனில், நான் மிகவும் ஆச்சர்யம் அடைவேன். அவரைப் பற்றி பேச்சுக்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், அவர் வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்து வருவது எனக்கு ஈர்ப்பை கொடுத்துள்ளது.

    மேக்ஸ்வெல் இரண்டு மாதங்களாக ரிக்கி பாண்டிங் உடன் இணைந்து ஐபிஎல் தொடரில் பணியாற்றியுள்ளார். ரிக்கி பாண்டிங் உடனான இந்த நிகழ்வு முக்கியமானது. ரிக்கி பாண்டிங் எங்கள் அணியுடன் ஞாயிற்றுக்கிழமை (இன்று) இணைவார். மேக்ஸ்வெல் அவரது பயிற்சியை சிறப்பாக செய்து, அவர் மீது நம்பிக்கை வைத்தால், அவர் சிறந்த வீரராக மாறுவது வெகுதூரத்தில் இல்லை. அவர் ஏராளமான திறமையை பெற்றுள்ளார்’’ என்றார்.
    வருங்காலத்தில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு கேப்டன் பதவி கிடைக்காவிடில், அது ஆச்சரியமான விஷயமாக இருக்கும் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். #IPL2018 #DD
    ஐபிஎல் தொடரில் இளம் வீரர்களை கொண்ட டெல்லி டேர்டெவில்ஸ் 14 போட்டிகளில் ஐந்தில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளது. சீசன் தொடக்கத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் தலைமையில் தொடர் தோல்வியை சந்தித்தது. இதனால் காம்பீர் நீக்கப்பட்டு ஷ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அத்துடன் காம்பீர் நீக்கப்பட்டு பிரித்வி ஷா தொடக்க வீரராக களம் இறங்கினார்.

    ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையில் டெல்லி டேர்டெவில்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முடிவில் டெல்லி ஐந்து வெற்றிகளை பெற்றுள்ளது. உச்சக்கட்டமாக மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பிளேஆஃப்ஸ் சுற்றை விட்டு வெளியேற்ற வைத்தது.

    ஷ்ரேயாஸ் அய்யரின் செயல்பாட்டால் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மகிழ்ச்சியடைந்துள்ளார். வருங்காலத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் கேப்டன் பதவியை வகிக்காவிடில் அது ஆச்சரியமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘கவுதம் காம்பீர் கேப்டன் பதவியில் இருந்து விலகியது எந்த எதிர்வினையும் அணியில் ஏற்படுத்தவில்லை. அவரது முடிவு வீரர்களுக்கும், எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இது மிகவும் தைரியமான முடிவு. இதேபோல் முடிவை ஒவ்வொரு நாளும் பார்க்க முடியாது.

    காம்பீர் கேப்டன் பதவியில் இருந்து விலகியது பிரித்வி ஷா தொடக்க வீரராக களம் இறங்கவும், ஷ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக பதவி ஏற்கவும் வாய்ப்பளித்தது. தொடரில் இடையில் கேப்டன் பதவியை வாங்கி செயல்படுவது கடினமானது. ஷ்ரேயாஸ் அய்யர் கேப்டன் பதவி சவாலை திறமையாக எதிர்கொண்டார். அவர் அபாயகரமான இளம் வீரர். எதிர்காலத்தில் அவர் அதிகமான கேப்டன் பதவிகளில் பொறுப்பேற்றால், எனக்கு அது ஆச்சரியம் இருக்காது’’ என்றார்.
    ×