என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "PR Pandian"
சீர்காழியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தகூடிய ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு தொடர்ந்து மத்திய அரசு மறைமுகமாக தீவிர முயற்சி எடுப்பது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே மீத்தேன் திட்டத்திற்கு ஜெயலலிதா தடை விதித்தது போல தற்போதைய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடை விதிக்க முன் வரவேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயிகளை காக்க வேண்டும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு மறுத்து வருகிறது. பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு கூட முழு நிவாரணம் வழங்காமல் ஏழை மக்களை வஞ்சித்து வருகிறது. அதே போல் தென்னை விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்காமல் அறிவிக்கப்பட்ட ரூ. 1600 வங்கிகள் மூலம் வழங்கப்படுவதாக கூறி மரம் ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் விடுவிக்கப்படுகிறது.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க கூடிய நிவாரண தொகையை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மகளிர் குழு கடன், கல்வி கடன், விவசாய கடன், நிலுவை என்று சொல்லி நிவாரண தொகையை அதில் வரவு வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள்.
தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் முதற்கட்ட கணக்கெடுப்பில் 79 லட்சம் தென்னை மரங்கள் விழுந்ததாக கணக்கீடு செய்யப்பட்டது. இந்த 4 மாவட்டங்களோடு தேனி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மொத்தம் 49 லட்சம் தென்னை மரங்கள் விழுந்திருப்பதாக பட்டியல் கூறுகிறது. அதற்கான நிவாரணமும் 500 ரூபாய் வீதமே ஏற்றப்படுகிறது. இது மிகப்பெரிய மோசடி நடவடிக்கையாகும். மத்திய அரசு இதுவரை நிவாரணம் கொடுக்கவில்லை. வங்கிகளும் விவசாயிகளுக்கு பெரிய நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கு மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு கடனை மத்திய கால கடனாக மாற்றம் செய்ய கூடாது.
இவ்வாறு பி.ஆர். பாண்டியன் கூறினார். #GajaCyclone #PRPandian
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 மாவட்டங்களில் 79 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்ததாக 41 லட்சத்து 33 ஆயிரத்து 878 மரங்கள் சாய்ந்துள்ளதாக அரசு தரப்பில் அறிவித்துள்ளனர். கணக்கெடுப்பை குறைந்து காண்பிக்கும்படி கிராம நிர்வாக அலுவலர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.500 மட்டுமே நிவாரணமாக வழங்கப்படுகிறது.
அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது. கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
கர்நாடக அரசு திட்டமிட்டு தமிழகத்தை பாலைவனமாக்க நினைக்கிறது. மேகதாதுவில் அணை கட்டுவது மின்சாரம் தயாரிக்க என்றும், கடலில் வீணாகும் தண்ணீரை அணையில் சேமித்து அந்த தண்ணீர் முழுவதும் தமிழகத்திற்கு தான் வழங்கப்படும் என்றும் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறியிருப்பது ஏமாற்று வேலையாகும்.
மின்சாரம் தயாரிப்பதற்கு தான் என கூறுவது உண்மையானால் ராசிமணலில் அணை கட்ட வேண்டும். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது. அதற்கு பதிலாக ராசிமணலில் அணை கட்ட வேண்டும் என்று 1997-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் தேவேகவுடாவிடம் அன்றைக்கு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி வலியுறுத்தினார்.
ராசிமணலில் அணை கட்டப்பட்டால் அந்த அணை தமிழகத்திற்கு சொந்தமாகும். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது. ராசிமணலில் அணை கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஓசூரில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மேகதாதுவை முற்றுகையிடும் போராட்டத்தை 3-ந் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். #MekedatuDam
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர்பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது;
காவிரி டெல்டாவில் கஜா புயல் தாக்குதலால் கிராமப்புறங்களில் விழுந்த மரங்கள், கழிவுகள் முழுமையாக அப்புறப்படுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் கழிவுகளால் மாசடைந்து மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
பல இடங்களில் குடியிருப்பு பகுதிகள், வயல்வெளிகளிலும், வாய்க்கால் கரைகளிலும் அமைந்துள்ளதால் இதனால் தொற்றுநோய் பரவி வருகிறது. காய்ச்சல், வயிற்றுப் போக்கால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக மன்னார்குடி வட்டம் கோட்டூர் நடுத்தெரு கிராமத்தில் காத்தான் மகன் பாண்டியன் (வயது 50) என்பவர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு திடீரென்று இறந்து விட்டார். அவரது மனைவி, மகன் வயிற்று போக்கு நோய் தாக்குதலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்த பாண்டியன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்கவேண்டும்.
எனவே தமிழக அரசு விரைந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளையும், சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் கிராமப்புறங்களில் மேற்கொள்ள வேண்டும். காய்ச்சிய குடிநீர் குடிப்பதற்கும், மீன் உள்ளிட்ட இறைச்சி வகைகளை தவிர்ப்பதற்கும் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ள வேண்டும்.
துணை ராணுவப்படை மூலம் புயலால் விழுந்த தென்னை மரங்களை அப்புறப்படுத்தி விட்டு உடன் புதிய தென்னங்கன்றுகள் நடுவதற்கான பணிகளை அரசு தொடங்க வேண்டும். வேளாண் பொறியியல் துறை மூலம் எந்திரங்களை வரவழைத்து தென்னை விளை நிலங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
இதனை வலியுறுத்தி தமிழக தென்னை உழவர்கள் சங்கம் சார்பில் வருகிற 4-ந்தேதி பட்டுக்கோட்டை-அறந்தாங்கி முக்கத்தில் உண்ணாவிரதம் எனது தலைமையில் நடைபெற உள்ளது. போராட்டத்தை முன்னாள் தென்னை வாரிய உறுப்பினர் குருவிக்கரம்பை பழனிவேலு தொடங்கி வைக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார். #prpandian #gajacycloneeffected
அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி டெல்டா மாவட்டங்களை மையப்படுத்தி 2 மண்டலங்களில் வேதாந்தா நிறுவனமும், சிதம்பரம் நகரத்தை மையப்படுத்தி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஒரு இடத்திலும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுத்து வணிக ரீதியில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையெழுத்தாகியுள்ளது.
இதை கண்டித்தும். இந்த திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
நெல்லுக்கு குவிண்டாலுக்கு மத்திய அரசு ரூ.200 உயர்த்தி அறிவித்தது ஏமாற்றம் அளித்தது. தமிழக அரசு குவிண்டாலுக்கு ரூ.400 உயர்த்தி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ரூ.70, ரூ.50 என உயர்த்தி சன்ன ரகம் ரூ.1840-ம், சாதாரண ரகம் ரூ.1800-ம் என விலை நிர்ணயம் செய்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இதை பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #PRPandian #TNGovernor #BanwarilalPurohit
தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் காவிரி டெல்டாவில் திறக்கப்பட்ட தண்ணீர் இதுவரை பாசன பகுதிகளுக்கு சென்றடையவில்லை. நாற்று விடுவதற்கு நாற்றங்கால் தயார் செய்யப்பட்டு நிலுவையில் இருக்கிறது. நேரடி விதைப்பு செய்யப்பட்ட பயிர்கள் கருக தொடங்கி விட்டது.
திருச்சி முக்கொம்பில் உடைப்பு ஏற்பட்ட கொள்ளிடம் கதவணையில் மண்மூட்டை போட்டு தடுத்து காவிரி வழியாக நாங்கள் பாசனத்தை கொண்டு வருவோம் என்று அரசு சொல்வது தவறான நடவடிக்கை. இதனை ஏற்க இயலாது. உடனடியாக ராணுவத்தை கொண்டு தற்காலிக கதவணைகள் அமைக்கப்பட்டு பாசனத்துக்கு தண்ணீரை விடுவிக்க வேண்டும்.
ராசி மணலில் அணையை கட்டி உபரி நீரை தடுப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 8-ந்தேதி முக்கொம்பில் விசாயிகளை திரட்டி முற்றுகை போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #PRPandian #MukkombuDam
திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றுக்கு தண்ணீர் திறக்கப்படும் மதகுகளில் நேற்றிரவு மதகுகள் உடைந்து பாலம் துண்டிக்கப்பட்டது. இதனால் மேட்டூரில் இருந்து திருச்சி காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் முழுவதும் உடைந்த மதகுகள் வழியாக கொள்ளிடத்தில் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விவசாய சங்கத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது :-
காவிரி-கொள்ளிடம் ஆற்றில் கரூர் முதல் திருச்சி வரை கடந்த 15 ஆண்டுகளில் நடந்த மணல் கொள்ளையே கொள்ளிடம் இரும்பு பாலம் மற்றும் முக்கொம்பு அணை பாலம் உடைய காரணம் ஆகும்.
கோர்ட்டு உத்தரவுப்படி ஆறுகளில் 5 அடி அளவு தான் மணல் அள்ள வேண்டும். ஆனால் அரசு குவாரிகளிலும் பல அனுமதி பெறாத திருட்டு குவாரிகளிலும் காவிரி ஆறுகளில் 50 அடி முதல் 100 அடி ஆழம் வரை மணலை அள்ளி விட்டனர்.
பாலங்கள் அடியிலும் இந்த மணல் கொள்ளை நடந்தது. அதனால் தான் வெள்ளம் வரும் நேரங்களில் பள்ளங்களை நிரப்ப வெள்ள நீர் பாலங்களின் அருகில் உள்ள மணல் திட்டை அள்ளிக்கொண்டு செல்கிறது.
அப்போது பாலத்தின் தூண் அருகில் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் பாலம் சுவர் வலுவிழந்து போய் விடுகிறது. இதனால் தான் பலவீனம் அடைந்து கொள்ளிடம் பழைய பாலமும், நேற்றிரவு முக்கொம்பு மேலணை பாலமும் உடைந்து ஆற்றுக்குள் விழுந்து விட்டன.
கடந்த ஆண்டு கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி. அணையின் மதகுகள் உடைந்தது. தொடர்ந்து எடப்பாடி அருகில் உள்ள அணையிலும் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தோம்.
தொடர்ந்து ஏற்படும் பாலம் பிரச்சனைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். இதை வலியுறுத்தி நாங்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
அணைகள் கட்டப்பட்டது தண்ணீரை தேக்கி வைத்து பாசனத்திற்கு பயன்படுத்துவதற்காகத் தான் தவிர இப்படி உடைந்து வீணாக வெளியேறுவதற்காக அல்ல. தண்ணீருக்காக போராடி, அதன் மூலம் கிடைத்த நீரை தேக்கி வைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் போனது கண்டிக்கத்தக்கது. நீர் மேலாண்மை சிறப்பாக செயல்படுத்தப்படும் என்று கூறும் அரசு கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தேக்க என்ன செய்துள்ளது.?
இவ்வாறு அவர் கூறினார். #PRPandian
ஆம்பூர் அடுத்த மின்னூர் பாலாற்றில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியை மின்வாரியம் மேற்கொண்டது. இதற்கு, விவசாயிகள் சங்கமும், பாலாறு பாதுகாப்பு சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா மின்னூரில் ஆய்வு மேற்கொண்டு மின் கோபுரம் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டார். மறுஉத்தரவு வரும் வரை பாலாற்றில் எந்த கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என சப்-கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து, பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பாண்டியன் மின்னூரில் மேற்கொள்ளப்பட்டு வந்த மின் கோபுரப் பணிகளை நேற்று பார்வையிட்டார்.
வேலூர் மாவட்டம் பாலாற்றை நம்பி இங்கு விவசாயப் பணிகள் செய்யப்பட்டு வந்தன. பாலாற்றின் கரையோரம் இருந்த விவசாயிகள் அதிக அளவில் விவசாயம் செய்து வந்தனர்.
போதிய மழை இல்லாததாலும், பாலாறு இருக்கும் இடம் தெரியாமல் போனது. தற்போது, பாலாற்றில் தோல் கழிவுநீர் கலக்கப்படுவதால் நிலத்தடி நீர் மாசடைந்து பாலாறு படிப்படியாக அழிந்து வருகிறது. பாலாற்றை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது.
தமிழகத்தில் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் எந்தவித ஆக்கிரமிப்புகளும் இருக்கக் கூடாது. இருந்தால், உடனடியாக அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் ஆக்கிமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ளன. நீர் நிலைகளை தனிநபர்கள் ஆக்கிரமித்த காலங்கள் மாறி தற்போது அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களே ஆக்கிரமித்துள்ளனர். தமிழக அரசின் அனுமதி பெறாமல் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதை அரசு ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.
மின்னூர் பாலாற்றில் மின் கோபுரங்கள் அமைக்க மாவட்ட நிர்வாகத்திடமோ? எந்த அனுமதியும் மின்வாரியம் வாங்கவில்லை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, மின்னூர் பாலாற்றில் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகளை மின்வாரியம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கட்டுமானப் பணிகளை அகற்ற வேண்டும். அதே நேரத்தில், தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தருமபுரி- கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் ஒகேனக்கல் அருகே உள்ள ராசிமணல் என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்காக கடந்த 1965ம் ஆண்டு காமராஜர் ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த இடத்தில் அணைக்கட்டினால் கடலுக்கு செல்லும் நீர் தடுத்து நிறுத்தி 50 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் சேமிக்க முடியும். இதன் மூலம் அந்தந்த மாவட்டங்கள் பாசன வசதி பெறும்.
இது தொடர்டபாக முதல்-அமைச்சர் எடப்படி பழனிசாமியை நேரில் சந்தித்து விவசாய சங்கங்கள் சார்பில் வலியுறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருத்துறைப்பூண்டி:
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருத்துறைப்பூண்டியில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார்.
காவிரியில் இருந்து உபரி நீர் மட்டுமே தமிழகத்திற்கு வழங்க முடியும் என்ற கர்நாடகாவின் உள்நோக்கத்திற்கு ஆணையம் துணைபோய்விடக் கூடாது. உரிய நீரை உரிய காலத்தில் திறக்கப்படுவதை தான் கணக்கில் கொள்ள வேண்டும்.
நடப்பாண்டு ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவதை ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்நிலையில் கர்நாடக சட்டமன்றக் கூட்டத்தில் முதல்-மந்திரி குமாரசாமி உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாக ராசிமணல், மேகதாது ஆகிய இடங்களில் தடுப்பணை கட்டியே தீருவோம் என பேசியுள்ளார். இது குறித்து ஆணைய தலைவர் தனது கண்டனத்தை தெரிவிக்காமல் மவுனம் காத்து வருவது தனது பொறுப்பை தட்டிக் கழிப்பதாகும்.
மேலும் ஒரு போக சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கும் என்று நம்பி எதிர்பார்த்து தமிழக விவசாயிகள் உள்ளனர். எனவே இது குறித்து ஆணைய தலைவர் மசூத் உசேனை விரைவில் சந்தித்து பேச உள்ளோம்.
குடிமராமத்துப் பணிகளில் ஊழல் முறைகேடுகளின்றி உரிய காலக்கெடுவுக்குள் பணிகள் முழுமையும் நிறை வேற்றுவதை கண்காணிக்க அரசுத் துறை செயலாளர்கள் நியமிக்க வேண்டுமென முதல்-அமைச்சரை வலியுறுத்தியதன் பேரில் 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து உள்ளதை வரவேற்கிறோம்.
இக்குழு தமிழகம் முழுவதும் ஆய்வு பணிகளை உடன் தொடங்குவதோடு, பணிகளின் நிலை குறித்து மாவட்டம் தோறும் விவசாயிகளோடு ஆய்வு கூட்டங்கள் நடந்திட வேண்டுமென குழு தலைவரும் வேளாண் துறை முதன்மை செயலாளருமான ககன்தீப்சிங்பேடியை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Chennairain #PrPandian
மானாமதுரை பகுதி வைகை ஆற்றுப்படுகையில் வாகுடி, செய்களத்தூர், தெ.புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் பொதுப்பணித்துறை சார்பில் அரசு மணல் குவாரி அமைக்க முடிவு செய்து, பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இப்பகுதி வைகை ஆற்றில் இருந்து விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு 72 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும் திருப்புவனம், மானாமதுரை ஆகிய 2 தாலுகாக்களிலும் வைகை ஆற்றை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. அரசு மணல் குவாரி அமைத்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும். எனவே இப்பகுதியில் அரசு மணல் குவாரி அமைக்கக்கூடாது என்றும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி தலைமையில் நேற்று மானாமதுரை பழைய பஸ் நிலையம் எதிரே தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின்போது, மணல் குவாரி அமைப்பதை அரசு மறுபரிசீலனை செய்யாவிடில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்து கட்சியினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது உண்ணாவிரதத்தில் அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் உமாதேவன், குருமுருகானந்தம், விஜயகுமார், சுரேஷ்பாபு, நகர வர்த்தகர் சங்க தலைவர் பாலகுருசாமி, தி.மு.க. சார்பில் அண்ணாத்துரை, ராஜாமணி, பொன்னுச்சாமி, இந்திய கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் முத்தையா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தங்கமணி, குணசேகரன், ம.தி.மு.க. சார்பில் கண்ணன், மருது, தே.மு.தி.க. தர்மாராமு, த.மா.கா. முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பாலசுப்பிரமணியன், பா.ஜ.க. சார்பில் கண்ணன், சங்கரசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி.ஆர். பாண்டியன் பங்கேற்று பேசினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறும்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மணலை விற்று மக்களை அழித்து ஆட்சி நடத்த வேண்டிய அவசியமில்லை. மக்களை அழிப்பதற்கு என்றே தமிழக அரசு செயல்படுவதை ஏற்க மாட்டோம். மணல் குவாரியால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே மணல் குவாரி அமைக்கும் நடவடிக்கை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றார்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், நிரூபர்களுக்கு பேட்டியளித்தார்.
காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டத்திலேயே ஜூலை மாதத்திற்கு 31.24 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு கர்நாடக மாநிலம் திறந்து விட உத்தரவிட்டதை பாராட்டுகிறோம். இதனால் இந்த ஆண்டு ஒரு போக சம்பா சாகுபடியாவது மேற்கொள்ள முடியும் என நம்புகிறோம்.
ஆணையத்தின் இந்த உத்தரவை காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்று குழு உடன் நிறைவேற்ற வேண்டும். கர்நாடகாவில் உள்ள அணைகளின் தண்ணீரை அன்றாடம் கணக்கிட்டு பகிர்ந்தளிக்கும் நிர்வாக அதிகாரத்தை ஆணையம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டுக்கு இணையான ஆணைய உத்தரவை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும். இதை யார் மீறினாலும் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பின் கீழ் கர்நாடக அணைகளை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மன்னார்குடி:
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் விவசாய பணிகள் தொடங்கி உள்ள நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் உரிமையை ரத்து செய்து, மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற்றுக் கொள்ள தமிழக கூட்டுறவுத் துறை உத்திரவிட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
உடன் அனைவருக்கும் நிபந்தனையின்றி தொடங்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கிட தமிழக அரசை வலியுறுத்துகிறோம். விவசாயிகளுக்க 4 சதவீத வட்டியில் தேசிய மயமாக்கப்பட்ட மாற்று வணிக வங்கிகள் நகை கடன் வழங்கும்போது, கூட்டுறவு வங்கிகள் மட்டும் 9.50 சதவீத வட்டி நிர்ணயம் செய்வது நியாயமல்ல. மேலும் உடன் இதனை அரசு கைவிட வேண்டும்.
கர்நாடக விவசாயிகளின் பாசனத்திற்குதான் தண்ணீர் திறக்க உத்திரவிடுவதை யாராலும் தடுக்க முடியாது என கர்நாடக முதல்வர் குமாரசாமி சாவல் விடுவதும், காவிரி ஆணைய உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வழங்க மறுப்பதும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும். இதனை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது. உடன் தமிழக அரசு குமாரசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். உடனடியாக ஆணைய கூட்டத்தை கூட்டி கர்நாடக அணைகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.
அணைகளுக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்கிடவும், பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு கர்நாடக, தமிழக அணைகளை பார்வையிட்டு ஆய்வு செய்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய நீர்வளத்துறை முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #PRPandian #Kumaraswamy
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் அனைத்து அணைகளும் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
கபினி அணையில் இருந்து மேட்டூர் அணைக்கு தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. அவ்வாறு உயர்ந்தால் வருகிற 25-ந் தேதி(திங்கட்கிழமை) குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேட்டூர் அணை திறக்கப்பட்டால் கடை மடை பகுதி வரை தண்ணீர் செல்லுமா? என்ற ஏக்கத்தில் விவசாயிகள் உள்ளனர். அதற்கு காரணம் எந்த ஒரு ஆறும் தூர்வாரப்படவில்லை. பாசன மதகுகள், கட்டமைப்புகள் பராமரிப்பு பணி இதுவரை தொடங்கப்படவில்லை. இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #PRPandian #Metturdam
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்