search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hydro Carbon Project"

    மன்னார்குடி அருகே பெண்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கும்மியடித்து ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.
    மன்னார்குடி:

    தமிழகத்தில் விழுப்புரம், நாகை, கடலூர், திருவாரூர், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு வேதாந்தா குழுமத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து 274 இடங்களில் 3500 அடி முதல் 6 ஆயிரம் அடிவரை கிணறுகள் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் புதுச்சேரி வரை 1,794 சதுர கிலோ மீட்டர் பரப்பில் 274 கிணறுகள் தோண்டப்பட உள்ளது.

    தமிழகத்தில் வேதாந்தா நிறுவனம் முதல் வட்டாரத்திற்கு மரக்காணம் முதல் கடலூர் வரை ஹைட்ரோ கார்பன் எடுக்க பரிசோதனை செய்ய உள்ளது. கடந்த 12-ந்தேதி இரண்டாவது வட்டாரத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்த 2-வது வட்டாரம் என்பது நாகை மாவட்டத்தின் ஆழ்கடல் இல்லாத கரையோர கடல் பகுதியாகும். இந்த பகுதியில் 158 கிணறுகள் அமைக்கப்பட உள்ளது.

    இந்த திட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டால் விவசாயம் முற்றிலும் அழிந்து குடிநீர் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்திய அரசு அனுமதி அளித்துள்ள 274 இடங்களில் கிணறுகள் அமைத்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் சங்கத்தினரும் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்தநிலையில் தமிழ்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் பாலன் தலைமையில் காவிரி படுகை மண்டல கூட்டம் நடந்தது. இதில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்துள்ள இடங்களின் பட்டியலில் முதலில் உள்ள இடம் திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம், திருக்களார் ஊராட்சி ஆகும்.

    இங்கு கடந்த 14-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. அதில் அடுத்த மாதம் (ஜூன்) கடைசி வாரத்தில் லட்சக்கணக்கான மக்களை திரட்டி திருவாரூர் மாவட்டம் முழுவதும் மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல் கட்டமாக கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சிகளிலும் போராட்டக்குழு அமைக்கப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று போராட்டக்குழுவினர் மற்றும் பொதுமக்கள், விவசாய தொழிலாளர்கள், பெண்கள் உள்பட பலர் திருக்களாரில் ஒன்று திரண்டனர். அப்போது பெண்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கும்மியடித்து ஒப்பாரி போராட்டம் நடத்தினர். இதேபோல் திருவாரூர் மாவட்டம் நான்காம் சேத்தி கிராமத்தில் விவசாயிகள் தங்கள் வயல்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் வை.சிவபுண்ணியமும் கலந்து கொண்டார்.

    திருக்களாரில் இன்று போராட்டம் தொடங்கி விட்டது. நெடுவாசல் போல வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது. காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும். உயிரை கொடுத்தாவது ஹைட்ரோ கார்பன் திட்டங்களை வெளியேற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுதொடர்பாக மீத்தேன் எதிர்ப்பு திட்ட கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கூறியதாவது:-

    மத்திய, மாநில அரசுகள் டெல்டா மாவட்டங்களை பாலை வனமாக்க இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

    இதற்கு எதிராக ஓட்டுமொத்த காவிரி டெல்டா மாவட்டங்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம். மயிலாடுதுறையில் வருகிற 19-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தி போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மத்திய அரசின் நெருக்கடியால் வழக்கு போடப்பட்டதா? அல்லது தமிழக அரசே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆதரிக்கிறதா? என்பதை முதல்-அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். #PRPandian
    மன்னார்குடி:

    தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மேகதாதுவில் கர்நாடக அரசு அணைக்கட்ட தாக்கல் செய்துள்ள வரைவு திட்ட அறிக்கைக்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளதை வரவேற்கிறோம். அதேநேரம் பிரதமர் மோடியை மதுரையில் சந்திக்க உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழகம் சார்பில் கண்டனத்தை நேரிலும், கடிதம் மூலமும் தெரிவிக்க வேண்டும்.

    கோதாவரி-காவிரி இணைப்பு என்று கூறி, காவிரி பாசனத்தை அழிக்க மத்திய மந்திரி நிதின்கட்கரி சதி செயலில் ஈடுபடுகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். 2017-18-ம் ஆண்டு பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

    நாகை மாவட்டத்தில் போலீசார் அனுமதித்த இடங்களில் தான் அவர்களின் முழு பாதுகாப்போடு போக்குவரத்து பாதிப்பின்றி ஹைட்ரோ கார்பன் எரிவாயு எதிர்ப்பு பிரசாரம் செய்தோம். இந்த நிலையில் வேதாரண்யம் பகுதிகளில் 4 போலீஸ் நிலையங்களில் என் மீது வழக்கு தொடர்ந்திருப்பது கேலிக்கூத்தானது. மத்திய அரசின் நெருக்கடியால் வழக்கு போடப்பட்டதா? அல்லது தமிழக அரசே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆதரிக்கிறதா? என்பதை முதல்-அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும்.

    நாளை குடியரசு தினத்தன்று திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #PRPandian #TNGovt
    ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி வருகிற 26-ந்தேதி டெல்டா மாவட்ட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பிஆர் பாண்டியன் கூறினார். #PRPandian
    தஞ்சாவூர்:

    தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரியின் குறுக்கே கர்நாடகம் இனி அணை கட்டி தமிழகத்திற்கு செல்லும் தண்ணீரை தடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பில் கூறி உள்ளது. கீழ்பாசனத்தை தடுக்கக்கூடாது என நிரந்தரமான சட்டமும் உள்ள நிலையில் மேகதாதுவில் அணை கட்ட விரிவான ஆய்வறிக்கை தயார் செய்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கி உள்ளது. இது சட்ட விரோதமானது.

    இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் அணை கட்ட அனுமதி கொடுக்கவில்லை. ஆய்வுக்குத்தான் அனுமதி கொடுத்துள்ளோம் என்று மத்திய அரசு கூறுவது மோசடி நடவடிக்கையாகும். இதனை நீதிமன்றத்தில் தமிழக அரசு ஆதாரத்தோடு எடுத்துக்கூறி ஆய்விற்கான அனுமதியை ரத்து செய்ய முயற்சிக்க வேண்டும்.

    இந்த நிலையில் கர்நாடகாவை சேர்ந்த வாட்டாள்நாகராஜ், விவசாயிகள் சங்க தலைவர் என்ற போர்வையில் அணை கட்டுவதை தமிழகம் தடுத்தால் கன்னடத்தில் உள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் விடுத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இனி ஒரு தமிழனுக்கு சிறு பாதிப்பு என்றாலும் நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். அவர் மீது தேச துரோக வழக்கின் கீழ் நடவடிக்கை எடுத்து கன்னட தமிழர்களை பாதுகாக்க வேண்டும்.

    திருவாரூர் மாவட்டம் திருக்கார வாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) குடியரசு தினத்தன்று தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் பங்கேற்கும் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #PRPandian
    திருவாரூரில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக எம்எல்ஏக்கல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #Hydrocarbon #DMK
    திருவாரூர்:

    நாடு முழுவதும் 55 மண்டலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

    தமிழகத்தில், கடலூர் மாவட்டத்தில் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.க்கும் நாகை மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்துக்கும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த 1-ந்தேதி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் டெல்லியில் நடந்தது.

    தமிழகத்தை பொறுத்தவரை 3 மண்டலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக தெரிகிறது.

    மத்திய அரசின் இந்த முடிவுக்கு டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம் தீவிரமாகும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தி.மு.க. சார்பில் இன்று (3-ந்தேதி ) திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

    அதன்படி இன்று காலை 10 மணிக்கு திருவாரூர் பஸ் நிலையம் அருகில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமை தாங்கினார்.

    இதில் முன்னாள் அமைச்சர் மதிவாணன், முன்னாள் மத்திய மந்திரி எஸ்.எஸ். பழநிமாணிக்கம், முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ். விஜயன், நாகை மாவட்ட செயலாளர் கவுதமன், நாகை வடக்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா, திருத்துறைப்பூண்டி ஆடலரசன், திருவையாறு துரை.சந்திரசேகரன், கும்பகோணம் அன்பழகன், ஒரத்தநாடு ராமச்சந்திரன், திருவிடைமருதூர் கோவி.செழியன் மற்றும் தஞ்சை நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள், மகளிரணியினர், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் எரிவாயு, எண்ணை திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்திக்கூடாது என்று கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இந்நிலையில் இன்று பிற்பகலில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், திருவாரூக்கு சென்று மக்களை சந்தித்து மனுக்களை பெறுகிறார்.

    மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் அனைவரும் கவர்னருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.

    அதன்படி திருவாரூருக்கு வரும் வழியில் கவர்னருக்கு பிற்பகலில் விளமல் கிராமம் பகுதியில் கருப்பு கொடி காட்டப்பட உள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

    கவர்னர் வருகையையொட்டி திருவாரூர் செல்லும் வழி நெடுகிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #Hydrocarbon #DMK
    சபரிமலை கோவிலில் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தற்போது அந்த கோவிலில் உள்ள வழக்கமான நடைமுறைகளே தொடர வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #Sabarimala
    கன்னியாகுமரி:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பது தொடர்பாக தமிழக அரசு ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளது. அதில் எந்த பிரச்சனையும் இல்லை. நிச்சயமாக எய்ம்ஸ் ஆஸ்பத்திரி வந்தே தீரும்.

    தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்திய வேதாந்தா குழுமத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு யாரையும் கூப்பிட்டு நீங்கள் எடுங்கள் என்று அழைப்பதில்லை. வெளிப்படையாக டெண்டர் தகுதியானவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது. ஆனால் கறைபடிந்த காங்கிரஸ் மற்றும் தி.மு.க. போன்ற கட்சிகள்தான் இதுபோன்ற திட்டத்தை எதிர்க்கின்றன.

    ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறைகள் வைத்துள்ளார்கள். ஒரே மதத்தில் ஒவ்வொரு இடத்திற்கென்று வழிபாட்டு முறைகளில் மாற்றம் உள்ளது. இந்த வழிபாட்டு முறைகள் ஆரம்ப காலத்தில் எந்த நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டதோ அதை மழுங்கடிக்க கூடிய தகுதி யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை.


    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பொறுத்தவரை சபரிமலை கோவில் மீது அதீத நம்பிக்கை கொண்டிருக்கிற பக்தர்கள் அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தற்போது அந்த கோவிலில் உள்ள வழக்கமான நடைமுறைகளே தொடர வேண்டும் என விரும்புகிறார்கள்.

    இந்த பிரச்சனைக்கிடையே மசூதிக்குள் பெண்களை வழிபாட்டுக்கு அனுமதிக்கலாமா? என்ற கேள்வி வந்து கொண்டிருக்கிறது. இது எல்லாம் விவாதத்திற்குரிய வி‌ஷயம் கிடையாது. பெரியவர்கள் அந்த காலத்தில் வகுத்து வைத்திருக்கிறார்கள் என்றால் அதில் கண்டிப்பாக முக்கியத்துவம் இருக்கும்.

    41 நாட்கள் விரதம் இருந்து போடக்கூடிய மாலையை சபரிமலைக்கு சென்றுவிட்டு கழற்றும் வரைக்கும் பக்தர்கள் மனைவி, சகோதரிகளையோ ஏறெடுத்து பார்க்க மாட்டார்கள். அந்தளவுக்கு கடுமையாக விரதம் கடைப்பிடிக்கின்றனர். எனவே இந்த மாதிரி இருக்ககூடாது என்ற சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது.

    அதேபோல மசூதிக்குள் தொழுகை நடக்கும் போது இறைவன் பால் ஒட்டுமொத்த சிந்தனையும் செல்ல வேண்டும் என்று தான் அந்த வழிபாட்டு முறையை வைத்துள்ளார்கள். எதுவாக இருந்தாலும் அந்தந்த மதத்தின் வழிபாட்டு முறைகளில் தலையிட யாரும் முயற்சிப்பது சரியான ஒன்றாக நான் கருதவில்லை.

    கன்னியாகுமரி துறைமுக திட்டம் முன்னேற்ற நிலையில் உள்ளது. விரைவில் இத்திட்டம் வரும். நரிக்குளம் நான்கு வழிச்சாலை இணைப்பு பாலப்பணிகள் முடிந்து தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் முத்துகிருஷ்ணன் உடனிருந்தார். #BJP #PonRadhakrishnan #Sabarimala #GandhiJayanti150  #MahatmaGandhi
    ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டியும், மத்திய அரசை கண்டித்தும் நாகை புதிய பஸ் நிலையம் அருகே காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் தனபாலன் தலைமை தாங்கினார்.

    போராட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது கழுத்தில் தூக்கு கயிற்றை சுற்றி கொண்டு, ஒரு பக்கம் பிரதமர் மோடியும், மறுமுனையில் மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதானுமும் கயிரை இறுக்குவது போல் போராட்டம் நடத்தினர்.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்து மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதை கண்டித்து தமிழ் நாடு முக்குலத்து புலிகள் அமைப்பினர் நாகை வேளாங்கண்ணி அருகே உள்ள காமேஸ்வரம் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து கீழையூர் போலீசார் முக்குலத்து புலிகள் அமைப்பை சேர்ந்த 30 பேரை கைது செய்தனர்.
    டெல்டா மாவட்டங்களில் செயல்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து நாளை கவர்னருக்கு விவசாயிகள் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். #PRPandian
    திருவாரூர்:

    அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி டெல்டா மாவட்டங்களை மையப்படுத்தி 2 மண்டலங்களில் வேதாந்தா நிறுவனமும், சிதம்பரம் நகரத்தை மையப்படுத்தி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஒரு இடத்திலும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுத்து வணிக ரீதியில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையெழுத்தாகியுள்ளது.

    இதை கண்டித்தும். இந்த திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    மத்திய அரசின் நேரடி பிரதிநிதியான கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை (3-ந் தேதி) திருவாரூருக்கு வருகிறார்.


    டெல்டா மாவட்டங்களில் செயல்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்தும், இந்த திட்டத்தை உடனடியாக கைவிடக்கோரியும், திருவாரூர் மாவட்டம் விளமல் அருகே நாளை மாலை 3 மணியளவில் கவர்னருக்கு விவசாயிகள் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

    நெல்லுக்கு குவிண்டாலுக்கு மத்திய அரசு ரூ.200 உயர்த்தி அறிவித்தது ஏமாற்றம் அளித்தது. தமிழக அரசு குவிண்டாலுக்கு ரூ.400 உயர்த்தி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ரூ.70, ரூ.50 என உயர்த்தி சன்ன ரகம் ரூ.1840-ம், சாதாரண ரகம் ரூ.1800-ம் என விலை நிர்ணயம் செய்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இதை பரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PRPandian #TNGovernor #BanwarilalPurohit
    ×