search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MK Stalin"

    • FIDE கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்ற இளம்வீரர் என்ற வரலாற்றை வெறும் 17 வயதில் படைத்துள்ளார்.
    • உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக, சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் வெல்ல வாழ்த்துகள்.

    சென்னை :

    கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ஜி.குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.

    அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்ட குகேஷ், அதில் டிரா செய்து 14 சுற்றுகள் கொண்ட போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக விளையாடுவதற்கு தகுதி பெற்ற முதல் இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அவரும் பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். FIDE கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்ற இளம்வீரர் என்ற வரலாற்றை வெறும் 17 வயதில் படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக, சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் வெல்ல வாழ்த்துகள் என கூறியுள்ளார்.


    • ஆகாஷவாணி என்ற பெயர் உங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி காலத்திலிருந்திருந்தே உள்ளது.
    • நம் பாரத தேசத்தின் தேசியக்கொடியில் முதன்மை வாய்ந்தது காவி...

    சென்னை:

    'தூர்தர்ஷன்' இலச்சினை காவிநிறமாக மாற்றப்பட்டு இருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னான் கவர்னரும், தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில்,

    அகில இந்திய வானொலிக்கு ஆகாஷவாணி என்ற சமஸ்கிருத பெயர் வைப்பதா என்ற கேள்வி கேட்கும் மு.க.ஸ்டாலின் அவர்களே...

    ஆகாஷவாணி என்ற பெயர் உங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி காலத்திலிருந்திருந்தே உள்ளது.

    எப்போது உங்கள் குடும்ப தொலைக்காட்சியான சன் டிவி என்ற ஆங்கில பெயரை தமிழாக்கம் செய்யப் போகிறீர்கள்?

     DD பொதிகை என்ற பெயரை DD தமிழ் என்று பெயர் மாற்றம் செய்து தமிழுக்கு தானே பெருமை சேர்த்துள்ளார்கள்.

    காவி என்பது தியாகத்தின் வண்ணம்....

    நம் பாரத தேசத்தின் தேசியக்கொடியில் முதன்மை வாய்ந்தது காவி...

    அந்த வண்ணத்தில் இலச்சினை மாற்றுவது தவறில்லையே...

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவினரை இன்னும் இந்த திமுக அரசு கைது செய்ததாகத் தெரியவில்லை.
    • உடனடியாக குற்றச் செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி என்பவர், வாக்குப்பதிவு நாளன்று, குடும்பத்தினர் கண்முன்னே திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

    தேர்தலில், தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக, திமுகவினர் இந்தப் பாதகச் செயலை செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவினரை இன்னும் இந்த திமுக அரசு கைது செய்ததாகத் தெரியவில்லை.

    அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையைக் கூட, தங்கள் விருப்பப்படிதான் நடத்த வேண்டும் என்ற திமுகவின் சர்வாதிகாரப் போக்கு, ஜனநாயகத்துக்கு மிகுந்த ஆபத்தானது.

    இந்தியாவைக் காப்பாற்றப் போவதாகக் கனவு கண்டு கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், முதலில் தனது கட்சிக்காரர்களிடம் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்றும் வேலையைப் பார்க்க வேண்டும். உடனடியாக, இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து, கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அண்ணாமலை அந்த பதிவில் கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்;
    • வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்;

    சென்னை:

    மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்தி செய்தி சேனலான தூர்தர்ஷன் நியூஸ் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியுள்ளது.

    மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்;

    தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்;

    வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்;

    பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்;

    தற்போது தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள்!

    தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்!

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


    • உடல்நலன் பாதிக்கப்படுவதற்கு முன்புவரை கழகப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட கழகப்பற்றாளர்.
    • எனது வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் உடனிருந்து வழிநடத்திய பண்பாளர்;

    சென்னை:

    இன்று தி.மு.க. உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினர் ஆற்காடு வீராசாமியின் பிறந்தநாளையொட்டி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:-

    "தலைவர் கலைஞரின் நிழலாக இருந்தவர் அண்ணன் ஆர்க்காட்டார்!

    உடல்நலன் பாதிக்கப்படுவதற்கு முன்புவரை கழகப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட கழகப்பற்றாளர்.

    எனது வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் உடனிருந்து வழிநடத்திய பண்பாளர்;

    என்றும் மானமிகு உடன் பிறப்பு மரியாதைக்குரிய அண்ணன் ஆர்க்காட்டார் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


    • தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளை கர்நாடகத்திற்கு தாரை வார்ப்பது தி.மு.க.வின் வழக்கம்.
    • காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை தி.மு.க. அரசு அடகு வைத்து விடக்கூடாது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை நல்ல வழியிலோ, மோசடி செய்தோ கட்டியே தீருவோம்; அதன் மூலம் பெங்களூரு நகரத்திற்கு காவிரி நீரை வழங்குவோம் என்று கர்நாடக துணை முதல்-அமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். ஆனால், அதைக் கண்டிக்கக் கூட முன்வராமல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது, காங்கிரஸ் கூட்டணிக்காக தமிழ்நாட்டின் காவிரி ஆற்று உரிமையை அடகு வைத்து விட்டாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையாவும், துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவக்குமாரும் மாறி மாறி கூறி வருகின்றனர். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான நல்லுறவுக்கு வேட்டு வைக்கும் செயலாகும். இதை தமிழர்களால் சகித்துக்கொள்ள முடியாது.

    கர்நாடக முதல்- அமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் பேச்சுகள் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானவை என்பது தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் விவசாயிக்குக் கூட தெரிகிறது. ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இதுகுறித்து எதுவுமே தெரியாதது தான் வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது. உலகில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளுக்கு எல்லாம் கருத்து தெரிவிக்கும் அவர், தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வராமல் தடுக்கும் வகையில் மேகதாது அணையை கட்டுவோம் என்று கர்நாடக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அதுகுறித்து எதுவுமே கருத்து தெரிவிக்காமல் இருப்பதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.

    எப்போதெல்லாம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ, எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளை கர்நாடகத்திற்கு தாரை வார்ப்பது தி.மு.க.வின் வழக்கம். இப்போதும் காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை தி.மு.க. அரசு அடகு வைத்து விடக்கூடாது.

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், அதன்பிறகு காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். அதை உணர்ந்து மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க வேண்டும். நல்ல வழியிலோ, மோசடி வழியிலோ மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கூறி வரும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முதல்-அமைச்சர் சித்தராமையா ஆகியோரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • துருப்பிடிக்காத உற்சாகம் தகர்க்க முடியாத தர்க்கம்
    • சொல்லியடித்த புள்ளிவிவரம் சோர்ந்துவிடாத உடல்மொழி

    சென்னை:

    கவிஞர் வைரமுத்து இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மக்கள் வெள்ளம்

    மணியான பேச்சு

    துருப்பிடிக்காத உற்சாகம்

    தகர்க்க முடியாத தர்க்கம்

    சொல்லியடித்த புள்ளிவிவரம்

    சோர்ந்துவிடாத உடல்மொழி

    தற்புகழ் கழிந்த உரை

    தமிழர்மீது அக்கறை

    இந்தத் தேர்தல் களத்தின்

    ஆட்ட நாயகன்

    முதலமைச்சர்தான்

    முத்துவேல் கருணாநிதி

    ஸ்டாலின்தான்

    ஒரு பூங்கொத்து

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    • காலையில் 11 மணி வரை கிட்டதட்ட 18 சதவீதம் வாக்குப்பதிவு ஆகி உள்ளது.
    • உங்களுக்கு யார் சரியான ஆட்சியாளர்கள் வர வேண்டும் என்பதை இந்த தேர்தல் மூலம் காட்டுங்கள்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மனைவி கிருத்திகாவுடன் தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரிக்கு சென்று வாக்களித்தார்.

    அப்போது உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னுடைய ஜனநாயக கடமையை வாக்களித்து நிறைவேற்றி இருக்கிறேன். முதலமைச்சர் சொன்னது மாதிரி, எல்லோரும் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள். காலையில் 11 மணி வரை கிட்டதட்ட 18 சதவீதம் வாக்குப்பதிவு ஆகி உள்ளது. இன்னும் மாலை 6 மணி வரை நேரம் உள்ளது.

    பொதுமக்கள் அனைவரும் யார் யாருக்கு வாக்குரிமை இருக்கிறதோ முக்கியமாக இளைஞர்கள் வந்து உங்களுடைய கடமையை செய்யுங்கள். உங்களுக்கு யார் சரியான ஆட்சியாளர்கள் வர வேண்டும் என்பதை இந்த தேர்தல் மூலம் காட்டுங்கள்.

    கேள்வி:- தமிழ்நாடு முழுவதும் நிலவரம் எப்படி உள்ளது?

    பதில்:- தமிழ்நாடு முழுவதும் பயணித்தேன். எனக்கு தெரிந்தவரை நல்ல வெற்றி கிடைக்கும் ஜூன் 4-ந்தேதி பேசிக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    • நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றி இருக்கிறேன்.
    • நீங்கள் நினைப்பது போல் இந்தியாவுக்கு வெற்றிதான்.

    சென்னை:

    இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல் இன்று தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி மகளிர் கல்லூரி வாக்குச்சாவடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வரிசையில் காத்திருந்து வாக்கை பதிவு செய்தார்.

    இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

    நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றி இருக்கிறேன். அதேபோல் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமை ஆற்றிட வேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல் ஜனநாயக கடமை ஆற்றிட வேண்டும் என்று உங்கள் மூலமாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

    கே: வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

    நீங்கள் நினைப்பது போல் இந்தியாவுக்கு வெற்றிதான் என்று கூறினார்.

    • விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள்.
    • வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்.

    சென்னை :

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

    நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

    மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18-ஆவது பாராளுமன்ற பொதுத்தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

    மார்ச் 22-ஆம் தேதி தீரர் கோட்டமாம் திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம், ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும்.

    தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள், முழுமையான போர் வீரர்கள்.

    இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன்.

    காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும்.

    அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும்.

    விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கின்ற ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க 'இந்தியா' கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்
    • யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி தொடர்ந்துவிடக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் இது

    உங்களில் ஒருவனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உரிமையோடு கேட்கிறேன். நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தாருங்கள். நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,

    "இந்திய நாட்டின் இரண்டாவது விடுதலைப் போர் என்று அழைக்கப்படுகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் ஏப்ரல் 19-ஆம் நாள் நடைபெற இருக்கிறது.

    ஜனநாயகத்தையும் - மக்களாட்சி மாண்புகளையும் மதிக்கின்ற, கூட்டாட்சித் தத்துவத்தைப் போற்றி இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கின்ற ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க 'இந்தியா' கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பத்தாண்டு கால இருள் சூழ்ந்த ஆட்சியை அகற்றி, புதிய இந்தியாவுக்கான விடியலுக்கு அச்சாரம் இடும் நாள்தான் - ஏப்ரல் 19.

    யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி தொடர்ந்துவிடக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் இது. குஜராத் மாடல், வளர்ச்சியின் நாயகன் என்ற முகமூடிகளுடன் இதுவரை தேர்தல் களத்தில் மோடி நின்றார். அவரது குஜராத் மாடல் என்பது போலியானது என்பதும், வளர்ச்சியின் நாயகன் என்பது பொய்யானது என்பதும் பத்தாண்டுகளில் தெரிந்து விட்டது. மக்கள் தெளிந்து விட்டார்கள். இப்போது அனைவருக்கும் தெரிவது, 'ஊழல் மோடி' தான். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி பல்லாயிரம் கோடி பணத்தை பாஜக குவித்திருப்பதை தேர்தல் பத்திர ஊழல் அம்பலப்படுத்திவிட்டது.

    உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல், சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய முறைகேடு என்று வர்ணிக்கப்படுகிற தேர்தல் பத்திர ஊழல், பாரதீய ஜனதா கட்சியும் நரேந்திர மோடியும் ஊடகங்களின் துணையோடு உருவாக்கி வைத்திருந்த போலி பிம்பத்தைச் சுக்கு நூறாக்கி, முகத்திரையைக் கிழித்துவிட்டன. தேர்தல் பத்திர நடைமுறையே முறைகேடானது, சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், ஊழல் மலிந்த தேர்தல் பத்திரத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நியாயப்படுத்தி பேசி வருவது, இதுவரை பாஜகவை ஆதரித்தவர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. வேறு எந்த நாட்டிலாவது இதுபோன்ற இமாலய ஊழல் அரங்கேறி இருந்தால், அந்த நாட்டின் பிரதமர் பதவி விலகி இருப்பார்.

    தனது சுயநல அரசியலுக்காக ஒட்டுமொத்த இந்தியாவையும் மோடி நாசப்படுத்தி விட்டார். கருப்புப் பணத்தை மீட்பது, ஊழலற்ற ஆட்சியைத் தருவது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, தொழில் வளர்ச்சியை பெருக்குவது, வறுமையை ஒழித்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, சமூகநீதித் திட்டங்களைச் செயல்படுத்தி சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவது, பாதுகாப்பை உறுதிசெய்து மகளிர் வாழ்வை மேம்படுத்துவது என்ற எல்லா தளங்களிலும் படுதோல்வியை மோடியின் அரசு சந்தித்து இருக்கிறது.

    வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம் கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவுகளைச் சிதைத்து விட்டது. விஷம் போல் ஏறிய விலைவாசி உயர்வு ஏழை மக்களின் வாழ்க்கையைப் பாழ்படுத்திவிட்டது. பெட்ரோல், டீசல், சுங்கக் கட்டணக் கொள்ளை நடுத்தர மக்களை வதைத்துவிட்டது. இரக்கமற்ற ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு சிறு, குறு தொழில்களை சிதைத்துவிட்டது. மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைத்து, எப்போதும் மதப் பகையை வளர்க்கும் வெறுப்புப் பேச்சின் மூலம் சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்திக் குளிர்காய நினைக்கிறார்கள்.

    அண்ணல் அம்பேத்கர் இயற்றி அளித்த அரசியலமைப்புச் சட்டம், மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள், மாநிலங்களின் முதலமைச்சர் பதவியில் இருந்தாலும் கைது செய்து சிறையில் அடைக்கும் கொடுமையும், ஆளுநர்களை வைத்துப் போட்டி அரசாங்கம் நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த விடாமல் முடக்கும் அநியாயம், மாநிலங்களுக்கு வரி மற்றும் நிதிப் பகிர்வில் பாரபட்சம் அரங்கேறாத நாளே இல்லை. இதுவரை இந்தியத் திருநாடு சந்திக்காத அளவு மாநில உரிமைப் பறிப்பு நடவடிக்கைகள் மோடி அரசால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தன. சுதந்திர இந்தியாவில், பெட்ரோல் – டீசல் மீது மிக அதிகமான வரியை செஸ், சர்சார்ஜ் என்ற பெயரில் வசூலித்து, மாநிலங்களுக்குப் பகிர்ந்து தராமல், மக்களிடம் சுரண்டி மாநிலங்களையும் வஞ்சித்த மோசமான ஆட்சி, மோடியின் ஆட்சி!

    வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம், சட்ட மசோதாக்களுக்கு அனுமதி, அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது, துணைவேந்தர்களை நியமனம் செய்வது போன்ற அன்றாட, இயல்பான நிர்வாக நடைமுறைகளுக்குக்கூட உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு மாநிலங்களுக்கு நிர்பந்தம் தருகிற கொடுங்கோல் ஆட்சியாக, மோடி தலைமையிலான ஆட்சி இருப்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். மாநிலங்களின் வயிற்றில் அடிப்பது, மாநில உரிமைகளை நசுக்குவதைப் பெருமையான செயல் என்று கருதிக்கொள்கிற அளவு அதிகார மமதையில் ஆட்டம் போடும் ஆட்சியாளர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவதற்கான தேர்தல் இது.

    இந்தியா போன்ற மகத்தான, மாபெரும் ஜனநாயக நாட்டின் பிரதமராக, தனது கடமையில் நரேந்திர மோடி தோற்றுவிட்டார். எனவே, அவர் அந்த நாற்காலியில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதை நாடு தாங்காது. நாடாளுமன்ற ஜனநாயகத் தேர்தல் முறையே இல்லாமல் போய்விடும், சர்வாதிகார அதிபர் ஆட்சி முறை கொண்ட நாடாக ஆர்எஸ்எஸ் – பாஜக ஆட்சியாளர்கள் இந்தியா மாற்றிவிடுவார்கள். இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால் இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டி, மாநிலங்களின் எல்லைக் கோடுகளை மாற்றி, ஒற்றையாட்சி நாடாக மாற்றிவிடுவார்கள் என்ற அச்சம் நாடு முழுவதும் மக்கள் மனங்களில் இருக்கிறது. இந்தியாவைப் பாதுகாக்க மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

    கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு, தமிழர்களின் வளர்ச்சிக்கு மோடி அரசு தீட்டிய ஒரேயொரு சிறப்புத் திட்டத்தையாவது கூறுங்கள் என்று கடந்த ஒரு மாத காலமாகப் பரப்புரைக் கூட்டங்களில் ஒன்றிய அரசை நோக்கிக் கேள்வி எழுப்பி வந்தேன். தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு பைசா கூட தராமல் தமிழ்நாட்டை வஞ்சிப்பது நியாயமா என்றும் கேட்டு வந்தேன். ஆனால், அதற்கு எந்த நேர்மையான பதிலையும் பிரதமர் மோடியோ, அவரது அமைச்சரவை சகாக்களோ கூறவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் மோடியும் பாஜகவும் எதிரிகள் என்பது இதில் இருந்தே உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் அமைய இருந்த மாபெரும் முதலீட்டை, மிரட்டி குஜராத்துக்கு மடை மாற்றியவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முன்னேறுவதை அனுமதிக்கவே மாட்டார்கள். தமிழ்நாட்டின் வளமான எதிர்காலத்துக்கும், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது.

    இவர்கள் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கத்தில் அடிமை பழனிசாமியின் கட்சியானது பாஜக போட்டுத் தந்த திட்டப்படி கள்ளக் கூட்டணி அமைத்து தனியாக நிற்கிறது. தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக, பாழ்படுத்திய அதிமுக ஆகிய இரண்டு கூட்டணியையும் புறக்கணிக்குமாறு தமிழ்நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

    பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பது போல நாடகமாகிக் கொண்டிருந்தாலும், தேர்தலுக்குப் பிறகு கைகோத்து விடுவார்கள். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியை விமர்சிக்காதது மட்டுமல்ல, தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க-வுக்குத் தேவையென்றால் நேரடியாக ஆதரிப்பார்கள்.

    2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியை அமைத்தது திராவிட முன்னேற்றக் கழகம். அன்று முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தொடர் வெற்றிகளைக் குவித்த சிறப்பும் பெருமையும் திமுக கூட்டணிக்கு உண்டு.

    திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் அகில இந்திய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. நண்பர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் நம் அணியில் இணைந்துள்ளது. திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை உள்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள், சமுதாய இயக்கங்கள் நமது அணிக்கு ஆதரவைத் தெரிவித்து உள்ளன. இந்தத் தொண்டர்களின் சலிக்காத உழைப்பைத் தமிழ்நாடு முழுவதும் நான் பார்த்தேன். அவர்களது முகங்களில் தெரிந்த நம்பிக்கை, என்னை மேலும் மேலும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

    தேர்தலுக்கு முன்னதாக நான் வெளியிட்ட அறிக்கையில், '' புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளிலும் யார் வேட்பாளர், எந்தச் சின்னம் என்பதை மறந்து விட்டு , 'வேட்பாளர் மு.க.ஸ்டாலின்' என்பதை மனதில் வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும். அனைத்துத் தொகுதியிலும் நானே போட்டியிடுகிறேன் என்பதை உள்ளத்தில் தாங்கி அனைத்து உடன்பிறப்புகளும் பணியாற்ற வேண்டும்" என்று உரிமையோடு நான் கேட்டுக் கொண்டேன். அந்தச் சொல்லுக்கு கட்டுப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து உடன்பிறப்புகளும் தேர்தல் பணியாற்றி வரும் காட்சியை நான் பார்த்தேன். 'இவர்களைத் தொண்டர்களாகப் பெற என்ன தவம் செய்துவிட்டேன்' என்ற பெருமித உணர்வை நான் அடைகிறேன்.

    இதே ஆர்வமும் சுறுசுறுப்பும் தேர்தல் முடியும் வரை இருந்தாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களை வாக்குச்சாவடிக்கு வர விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதல், வாக்குப் பெட்டிகள் உரிய பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவது வரையிலும் கண்துஞ்சாது கண்காணிக்க வேண்டும் என்று கழக உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன். உங்களது உழைப்பின் பயன்தான் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் காக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

    தமிழ்நாட்டில் தனக்கு பிடித்த ஊர்ப் பெயர்களில் ஒன்று 'எப்போதும் வென்றான்' என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்கள். திராவிட முன்னேற்றக் கழகமும் எப்போதும், எல்லாத் தேர்தல்களிலும் வென்றான் என்பதை மெய்ப்பிக்கும் தேர்தல் இது.

    ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளைக் கண்டு நம் கவனம் துளியும் சிதறிவிடக்கூடாது. அவற்றைக் கடந்த காலங்களிலும் நாம் பொருட்படுத்தியது இல்லை. கடைசி வாக்கு பதிவாகி, வெற்றிக் கனி நம் கைகளில் வந்து சேரும் வரை, கண் துஞ்சாது – பசி நோக்காது – கருமமே கண்ணாயினர் என நாம் கவனத்தோடும் உற்சாகம் குன்றாமலும் உழைத்திட வேண்டுகிறேன். கருத்துக்கணிப்புகளை எல்லாம் விஞ்சுகிற, நாடே தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கிற வெற்றியாக நம் வெற்றி இருக்க வேண்டும்.

    தேர்தல் விதிகளை முறையாகப் பின்பற்றி, வாக்காளப் பெருமக்கள் ஒவ்வொரையும் மீண்டும் தேடிச் சென்று சந்தித்து, அவர்களிடம் மோடி ஆட்சியில் நாடு எதிர்கொண்டுள்ள ஆபத்துகளை விளக்கிச் சொல்லி, திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்ற மகத்தான மக்கள் நலத்திட்டங்களையும் சாதனைகளையும் எடுத்துரைத்து, நம் அணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

    இரண்டு முறை இருண்ட காலத்தைக் காட்டிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். இந்தியா கூட்டணியின் வெற்றியில்தான் இந்திய நாட்டின் சிறப்பான எதிர்காலமும் தமிழ்நாட்டின் முன்னேற்றமும் இருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையும், அதை வழிமொழிந்தும் வலு சேர்த்தும் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையும் திட்டங்களாக மாற வேண்டும்.

    தமிழ்நாட்டின் வாக்காளப் பெருமக்களுக்கு பணிவான வேண்டுகோளை கரம் கூப்பி முன்வைக்கிறேன். இந்தியா என்றென்றும் மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும் சகோதரத்துவமும் கொண்ட நாடாகத் திகழ, தமிழ்நாட்டின் தனித்தன்மையை நிலைநாட்டுவதற்கு நம் முன் உள்ள ஒரே வாய்ப்பும் ஆயுதமும் உங்கள் வாக்குதான். உங்கள் பொன்னான வாக்குகள், இந்தியாவைக் காக்கட்டும், சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை மீட்கட்டும். தமிழ்நாட்டின் தனித்தன்மையை உறுதி செய்யட்டும்.

    தமிழ்நாட்டின் மக்கள் நலத் திட்டங்கள் தொய்வின்றித் தொடர, எங்கும் எதிலும் தமிழ்நாடு முன்னோடி என்ற பெருமை நிலைத்திட, தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற அரசு டெல்லியில் அமைந்தாக வேண்டும். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு, ஒன்றியத்தில் ஆட்சி மாற்றமே ஒன்றே தீர்வு. தமிழ்நாட்டின் பகைவர்களை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் எதிரிகளை வீழ்த்துவோம்.

    ஜனநாயகத்தைக் காக்கும் போர்க்களத்தில், நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வரலாறு காணாத வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் தேடித் தர வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் எழுதியுள்ளார்.

    • மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கியாஸ் சிலிண்டர் விலை ரூ.400-க்கு விற்பனையானது.
    • எப்படி ஒரு திட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை பெண்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

    கோவை:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து சிங்காநல்லூர் பஸ் நிலையம் முன்பு பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-

    ஏப்ரல் 19-ந் தேதி நீங்கள் போடுகிற ஓட்டு தான் நாம் மோடிக்கு வைக்கிற வேட்டு.

    இந்த முறை பா.ஜ.க.வை விரட்டி அடித்து விட்டு, இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்க போகிறது. அதற்கு ஆரம்ப புள்ளியாக தமிழ்நாடு இருக்கப்போகிறது. 39-க்கு 39 வெற்றி நாம் தான் வெற்றி பெற போகிறோம்.

    மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கியாஸ் சிலிண்டர் விலை ரூ.400-க்கு விற்பனையானது. தற்போது கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் பிரதமர் மோடி தான்.

    இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், கியாஸ் சிலிண்டர் ரூ.500-க்கு கொடுக்கப்படும். பெட்ரோல் லிட்டர் ரூ.75-க்கும், டீசல் லிட்டர் ரூ.65-க்கும் கொடுக்கப்படும் என வாக்குறுதிகள் கொடுத்துள்ளோம். அதுமட்டுமின்றி கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும். செம்மொழி பூங்கா பணிகள் விரைந்து முடிக்கப்படும், கலைஞர் நூலகம் கட்டி முடிக்கப்படும். நகை தொழில் புத்துயிர் பெறுவதற்கு புதிய சிட்கோ பூங்கா அமைக்கப்படும், ஜி.டி.நாயுடு பெயரில் அறிவியல் ஆய்வு மையம் அமைத்து தரப்படும். சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி காட்டுவோம்.

    2021-ல் தமிழக மக்கள் எல்லாரும் வாக்களித்து, ஆதரித்து, இவர் தான் முதலமைச்சராக வர வேண்டும் என மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் பதவியில் அமர வைத்தனர்.

    தவழ்ந்து, தவழ்ந்து சென்று முதலமைச்சர் ஆனவர் தான் எடப்பாடி பழனிசாமி. கடைசியில் தன்னை முதலமைச்சர் ஆக்கியவரின் காலையும் வாரி விட்டதுடன், அவர் யார் என்று கேட்டவர் தான் பழனிசாமி.

    சசிகலாவுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பச்சை துரோகம் பண்ணியவர் தான் எடப்பாடி பழனிசாமி. கல்வி உரிமை, மொழி உரிமை, நிதி உரிமை என அனைத்து உரிமைகளையும் பா.ஜ.கவிடம் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்து விட்டார்.

    இப்போது தேர்தல் வந்ததும். பா.ஜ.க.வுடன் இருந்தால் நமக்கு வரக்கூடிய 10 ஓட்டுகளும் வராது என்பது தெரிந்ததும், நாங்கள் பா.ஜ.க.வில் இருந்து பிரிந்து விட்டோம் என நாடகம் ஆடுகிறார்கள். அவர்களின் நாடகத்தை மக்கள் யாரும் நம்பி விடாதீர்கள்.

    2021-ல் கொரோனா 2-வது அலை உச்சத்தில் இருந்தபோது தான் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அந்த கால கட்டத்தில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. ஒன்றே ஒன்று பண்ணினார். எல்லாரும் விளக்கு ஏற்றுங்கள். மணி அடியுங்கள். மணி அடித்தால் கொரோனா வைரஸ் ஓடி விடும் என்று சொன்னார். அதனை தவிர வேறு எதனையும் அவர் செய்யவே இல்லை.

    ஆனால் நமது முதலமைச்சர், கொரோனா காலகட்டத்தின்போது கோவைக்கு வந்து, இங்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்ததுடன், அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார். இந்தியாவிலேயே முதல் முதலமைச்சராக கொரோனா வார்டுக்குள் தைரியமாக சென்று ஆய்வு செய்தவர் தான் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதல் வாக்குறுதியாக பெட்ரோல் விலையை ரூ.3 ஆக குறைப்பேன் என்று முதலமைச்சர் சொன்னார். அதன்படியே ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து போட்டு சொன்னதை செய்து காட்டினார். அதேபோல் ஆவின் பால் விலையையும் ரூ.3 குறைத்து நடவடிக்கை எடுத்தார்.

    மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தையும் முதலமைச்சர் கொண்டு வந்தார். இப்போது எங்கு பார்த்தாலும் பிங்க் பஸ் தான். பெண்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், திருநங்கைகள் அனைவருக்கும் இலவசமாக பயணித்து வருகிறார்கள். இப்போது அந்த பஸ்சை யாரும் பிங்க் பஸ் என்று அழைப்பதில்லை. ஸ்டாலின் பஸ் என்றே அழைக்கிறார்கள். அந்தளவுக்கு இந்த திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.

    எப்படி ஒரு திட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை பெண்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் இந்த திட்டத்தின் வெற்றி. திராவிட மாடல் அரசின் வெற்றி. அரசு ஒரு திட்டத்தை கொண்டு வருவது பெரிய விஷயம் அல்ல. அதனை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்பது தான் முக்கியமானது.

    பள்ளி படிப்பை முடித்து விட்டு, கல்லூரி படிக்க செல்ல வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது தான் புதுமைப்பெண் திட்டம். அரசு பள்ளியில் படித்து கல்லூரிக்கு சென்று படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இதுவரை 3 லட்சம் மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். கோவையில் ஒவ்வொரு மாதமும் 17 ஆயிரம் மாணவிகள் பயன் பெறுகிறார்கள்.

    இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் நமது முதலமைச்சரால் கொண்டு வரப்பட்டது தான் காலை உணவு திட்டம். தரமான காலை உணவு கொடுத்து, தரமான கல்வியை கொடுப்பது தான் நமது திராவிட மாடல் அரசு. இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு நாளும் 18 லட்சம் குழந்தைகள் பயன் பெறுகின்றனர்.

    இந்த திட்டத்தை கர்நாடகாவிலும் செயல்படுத்தியுள்ளனர். மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக செயல்படுவது தான் திராவிட மாடல் அரசு. கோவை மாவட்டத்தில் மட்டும் தினந்தோறும் 80 ஆயிரம் குழந்தைகள் காலை உணவு திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.

    இதேபோல் மகளிர் உரிமைத்தொகை திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15-ந் தேதி ஒரு கோடியே 18 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

    இன்னும் 5 மாதங்களில் அனைத்து பணிகளும் சரி செய்யப்பட்டு, விடுபட்ட அனைத்து தகுதியுள்ள இல்லத்தரசிகளுக்கும் மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கொடுக்கப்படும்.

    10 ஆண்டு காலம் இந்தியாவை ஆண்டு வரும் பிரதமர் மோடி தமிழகத்திற்கு ஏதாவது செய்துள்ளரா? கொரோனா பாதிப்பு, சென்னை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. அப்போது பிரதமர் தமிழகத்திற்கு வந்து மக்களை சந்தித்தரா? வரவே இல்லை.

    தமிழ்நாட்டின் வரிப்பணத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு இழப்பீடு தொகை கொடுத்தது. மத்திய அரசிடம் பேரிடர் நிதியை கொடுங்கள் என கேட்டு வருகிறோம். ஆனால் இதுவரை அவர்கள் வரை ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. அவரை இனிமேல் பேரை சொல்லி அழைக்காதீர்கள். 29 பைசா என்று தான் சொல்லி அழைக்க வேண்டும்.

    ஜி.எஸ்.டி வரி, கூட்ஸ் அண்ட் சர்வீஸ் வரி கட்டுகிறோம். நாம் ஒரு ரூபாய் கொடுத்தால், மத்திய அரசு அதனை பகிர்ந்து நமக்கு ஒரு ரூபாய் திருப்பி கொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் நமக்கு திருப்பி தருவது 29 பைசா தான். ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் கூடுதலாக கொடுக்கிறது.

    பிரதமர் மோடி போகிற இடமெல்லாம் ரோடு ஷோ நடத்துகிறார். ரோடு ஷோ நடத்தும் பிரதமரை மக்கள் ரோட்டிற்கு தான் அனுப்ப போகிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில் இருந்த வரை நீட் தேர்வை தமிழகத்திற்குள் அனுமதிக்கவே இல்லை. ஆனால் அவர் இறந்த பின்னர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான் நீட் தேர்வு தமிழகத்திற்குள் புகுந்தது. நீட் தேர்வால் இதுவரை 22 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

    இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வுக்கு தமிழகத்தில் விலக்கு அளிக்கப்படும் என தி.மு.க.வும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். காங்கிரசை சேர்ந்த ராகுல்காந்தியும் நெல்லை கூட்டத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளார்.

    பா.ஜ.க.வின் பொய் பிரசாரத்தை மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் சேர்ந்து காலி செய்து விட்டனர். பா.ஜ.கவின் பொய் பிரசாரம் தமிழகத்தில் எடுபடாது.

    பிரதமர் மோடி கடந்த 10 நாட்களாக தமிழகத்தையே சுற்றி சுற்றி வருகிறார். தேர்தலுக்காக மட்டுமே அவர் வருகிறார். தேர்தலுக்கு தேர்தல் அவர் நாடகம் ஆடி வருகிறார். 2019-ல் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வருவோம் என கூறியிருந்தனர். ஆனால் இன்று வரை மருத்துவமனை கட்ட நிதி ஒதுக்கவில்லை.

    தி.மு.க. தலைவர், தி.மு.க.வினருக்கு தூக்கம் போய்விட்டது என்று பிரதமர் மோடி சொல்லி வருகிறார். ஆமாம் எங்களுக்கு தூக்கம் போய்விட்டது. பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரையில் எங்களுக்கு தூக்கம் இல்லை. மானமிகு சுயமரியாதைக்காரர்களுக்கும், இரக்கமற்ற சர்வாதிகாரிகளுக்கும் நடக்கும் போர் தான் இந்த தேர்தல். இதில் இந்தியா கூட்டணி ஜெயிக்க தமிழகம் ஆரம்ப புள்ளியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×