search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lake"

    • சூர்யா தனது லாரியில் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து வந்து பிரகாஷை கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.
    • கொலை சம்பவத்தால் அக்கரைப்பாக்கம் ஏரியில் சவுடு மண் குவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், அக்கரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஏரியில் கடந்த சில நாட்களாக சவுடு மண்குவாரி இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்று காலை ஆத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர்களான பிரகாஷ் (வயது31), சூர்யா(வயது29) என்ற டிரைவர்கள் சவுடு எடுக்க குவாரிக்கு வந்தனர்.

    அப்பொழுது மண் ஏற்றுக் கொண்டு இரண்டு லாரிகளும் வெளியே வரும்போது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஒருவரை, ஒருவர் தள்ளிக் கொண்டனர். இதில், ஆத்திரம் அடைந்த சூர்யா தனது லாரியில் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து வந்து பிரகாஷை கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.

    இதில், துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பிரகாஷ் பலியானார். இவர்களுக்குள் ஏற்பட்ட மோதலை கண்டு அருகில் இருந்த டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் தலைமையில் பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    படுகொலை செய்யப்பட்ட பிரகாஷ் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகொலை செய்யப்பட்ட பிரகாஷ் மீது லாரியை வழி மறித்து கொள்ளையடித்த வழக்கு பெரியபாளையம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் பணம் மற்றும் நகைகள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் இந்த கொலை சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    இதில், சூர்யாவுக்கும் பிரகாசுக்கும் இடையே பணம் மற்றும் நகைகள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை கடந்த சில நாட்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், குற்றவாளி சூர்யாவின் பூர்வீகம் கிருஷ்ணாபுரம் கண்டிகை என்றும் பிரகாசுடன் ஏற்பட்ட பழக்கத்தால் சூர்யா தனது குடும்பத்துடன் ஆத்துப்பாக்கம் கிராமத்துக்கு குடி பெயர்ந்து தெரியவந்துள்ளது. இந்தக் கொலை சம்பவத்தால் அக்கரைப்பாக்கம் ஏரியில் சவுடு மண் குவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது பிரச்சினையால் இப்பகுதியில் பதட்டமும், பரபரப்பு நிலவுகிறது.

    • அருள்தாஸ்( வயது 23)இவர் பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார். பூவுடன் சேர்த்து தழையை பறிக்க ஏரிக்கு இவருடன் 5 பேர் கொண்ட நண்பர்கள் சென்றனர்.
    • பின்னர் அதே ஏரியில் குளித்த போது நீச்சல் தெரியாததால் அருள் தாஸ் ஏரியில் மூழ்கி பலியானார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தேசூர் பாட்டை பகுதியை சேர்ந்த மின் ஊழியர் ஏசுதாஸ் மகன் அருள்தாஸ்( வயது 23)இவர் பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் பூவுடன் சேர்த்து தழை கட்டுவதற்காக செஞ்சி அருகே உள்ள எட்டியதாங்கல் ஏரிக்கு அருள்தாஸ் மற்றும் அவருடன் 5 பேர் கொண்ட நண்பர்கள் சென்று தழைகளை பறித்து கொண்டு இருந்தனர்.பின்னர் அதே ஏரியில் குளித்த போது நீச்சல் தெரியாததால் அருள் தாஸ் ஏரியில்மூழ்கி பலியானார்.இது குறித்து உடனடியாக சக நண்பர்கள் செஞ்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி அருள்தாஸ் உடலை மீட்டனர்.பின்னர் இது குறித்து செஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருள்தாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தகுதியான கட்டிட கலைஞர், சிவில் என்ஜினீயரை கொண்ட நிறுவனங்கள் பங்கேற்கலாம்
    • சென்னையில் 10 ஏரிகளை ரூ.100 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்வதற்கான வடிவமைப்பு போட்டியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடங்கியுள்ளது.

    சென்னை:

    மழை நீரை சேகரித்து குடிநீர் ஆதாரத்தை உருவாக்கி தருவதோடு, நிலத்தடி நீர் வளத்தை பெருக்குவதில் ஏரிகளும், குளங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் சென்னையில் ஏரிகளில் வீடுகள் கட்டுவதும், குப்பைகள் கொட்டுவதும் தொடர் கதையாகி வருகிறது. இதனால் சென்னையில் ஏரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 20 ஏரிகள் உள்ளன. இவற்றில் பல ஏரிகள் ஆக்கிர மிக்கப்பட்டிருப்பதோடு குப்பை கொட்டும் இடமாகவும் மாறியுள்ளன. இதனால் ஏரிகளின் பரப்பளவு சுருங்கி வருவதோடு சென்னையில் வெள்ள பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.

    சென்னை நகரின் குடிநீர் ஆதாரம் மற்றும் நிலத்தடி நீர்வளத்தை பெருக்கும் வகையில் சென்னையில் ஆக்கிரமிப்புகள் போக எஞ்சியுள்ள ஏரிகளையாவது முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் சென்னையில் 10 ஏரிகள் ரூ.100 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன. இதற்கான 'லேக் பிரண்ட் ரீ கனெக்ட்' எனப்படும் ஏரி வடிவமைப்பு போட்டியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடங்கியுள்ளது.

    இதுகுறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரி ஒருவர் கூறியதாவது:

    சென்னையில் பெரும்பாக்கம், ரெட்டேரி, முடிச்சூர், மாடம்பாக்கம், செம்பாக்கம், அயனம்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், புழல், கொளத்தூர் ஆகிய ஏரிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன. இந்த ஏரி கள் ஆக்கிரமிப்புகள் காரணமாகவும், பராமரிப்பு இல்லாததாலும் அதன் கட்டமைப்பை இழந்துவிட்டன.

    எனவே இந்த ஏரிகளும், அதன் முகப்பு பகுதிகளும் சீரமைக்கப்படுகின்றன. இந்த போட்டியில் பங்கேற்கும் நிறுவனங்கள் ஒரு தகுதி வாய்ந்த கட்டிட கலைஞர், இயற்கை சார்ந்த கட்டிட கலைஞர், சிவில் என்ஜினீயர் ஆகியோரை கொண்டிருப்பதுடன் மற்ற துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.

    குறைந்தபட்சம் ஒரு ஏரிக்கான வடிவமைப்புகளை உருவாக்கி வருகிற ஏப்ரல் 17-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். போட்டியின் முடிவுகள் வெளியான பிறகு திட்டங்களுக்கான டெண்டர் வருகிற ஜூன் மாதம் இறுதி செய்யப்படும்.

    இந்த ஏரிகள் அனைத்திற்கும் பொதுவாக இருக்க வேண்டிய சில அம்சங்களில் திறந்த வெளிகளும் அடங்கும். தற்போதைய ஏரியின் தன்மை, நிலத்தின் அளவு, சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு ஏற்றதா என ஆய்வு செய்யப்படும். ஏரி அமைப்பு, முகப்பு தோற்றம், பறவைகளுக்கான வசதிகள், கலை நிகழ்ச்சிகளுக்கான மேடைகள் ஆகிய அனைத்தும் இதன் கட்டமைப்புகளில் ஒரு பகுதியாக இருக்கலாம்.

    நடைபாதைகள், சைக்கிள் ஓட்டும் இடம், திறந்த வெளி உடற்பயிற்சி கூடம், ஏரியின் எல்லை மேம்பாடு, தூய்மையான கரை பகுதிகள், தோட்டங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள், வாகன நிறுத்தும் வசதிகள், ஆம்பி தியேட்டர்கள், உணவகம், நீர் விளையாட்டுகள், மீன்பிடிதளம், விளையாட்டு பகுதி பொது வசதி, படகு சவாரி போன்ற வடிவமைப்புகளும் இடம் பெற வேண்டும். இந்த ஏரிகள் பொழுதுபோக்கு மற்றும் பொருளாதார சேவைகளுக்கான வாய்ப்பையும் கொண்டிருக்க வேண்டும்.

    இந்த ஏரிகளில் தண்ணீ ரை சேமித்து வைப்பதன் மூலம் சென்னையின் வெள்ள பாதிப்பை தடுக்க முடியும். மேலும் கோடை காலத்தில் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும்.

    இந்த போட்டியில் பங்கேற்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு ஏரியின் தனித்துவமான இடம் மற்றும் இயற்கை அம்சங்களை கருத்தில் கொண்டு வடிவமைப்புகளை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவையின் குடிநீர் தேவைக்கு பயன்படுவது மட்டுமின்றி பறவைகள் சரணாலயமாகவும் ஊசுடு ஏரி திகழ்கிறது.
    • சமீப காலமாக ஊசுடு ஏரி சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவையின் மிகப்பெரிய ஏரியாக ஊசுடு ஏரி உள்ளது. புதுவையின் குடிநீர் தேவைக்கு பயன்படுவது மட்டுமின்றி பறவைகள் சரணாலயமாகவும் ஊசுடு ஏரி திகழ்கிறது.

    இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு சுற்றுலா வளர்ச்சிக்க ழகத்தின் சார்பில் படகு குழாமும் உள்ளது. சுற்றுலா பயணிகள் அமைதியான சூழலில் படகு சவாரி செய்து பறவைகளை கண்டுரசிப்பது வாடிக்கை.

    சமீப காலமாக ஊசுடு ஏரி சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. குருமாம்பேட் பாண்லே முதல் பத்துக்கண்ணு சந்திப்பு வரை தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதை பயன்படுத்திக்கொண்டு அவ்வழியே திருக்கனூர் செல்லும் பொதுமக்களிடம் ரவுடிகள் வழிப்பறி நடத்தி வருகின்றனர்.  நேரங்களில் இவ்வழியே செல்லவே அச்சப்பட வேண்டியுள்ளது.

    ஊசுடு ஏரியின் கரையோரத்தில் இரவில் மது அருந்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மது, கஞ்சா போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்தும் சமூக விரோதிகள் அவ்வழியே வருவோரிடம் தகராறில் ஈடுபடுவது, செல்போன், பணம், நகை பறிப்பில் ஈடுபடுகின்றனர். சமூகவிரோதிகளுக்குள் ஏற்படும் தகராறால் சட்ட ஒழுங்கும் சீர்கெட்டு வருகிறது.

    இந்நிலையில் சுற்றுலா வளர்ச்சிக்கழகத்துக்கு சொந்தமான 3 படகுகளை சமூக விரோதிகள் குடிபோதையில் தீ வைத்து எரித்துள்ளனர். இதனால் அரசுக்கு வீண் பண விரயமும் ஏற்பட்டுள்ளது.

    எனவே புதுவை அரசு இப்பகுதியில் அனைத்து தெருவிளக்குகளையும் எரிய செய்ய வேண்டும். தேவைப்படும் இடங்களில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைத்து இந்த சாலையை வெளிச்சம் மிகுந்த சாலையாக்க வேண்டும்.

    இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியை அதிகரித்து சமூகவிரோதிகளை விரட்டியடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால்தான் ஊசுடு ஏரிக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளிடையே நிலவும் அச்சத்தை போக்க முடியும். மேட்டுப்பாளையம் வழியாக திருக்கனூர் செல்லும் மக்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என சமூக நல அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.

    • 35 ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வழிகின்றன
    • பலத்தமழை காரணமாக

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய சிறிது நாட்களிலேயே லாடபுரம் பெரிய ஏரியும், லாடபுரம் கீழேரியும் நிரம்பின. பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி, அரணாரை நீலியம்மன்-செல்லியம்மன் ஏரி ஆகிய ஏரிகள் நிரம்பின. அதனைத்தொடர்ந்து சற்று இடைவெளிவிட்டு கடந்த 13-ந்தேதி கன மழை பெய்தது. பெரம்பலூரில் 2 மணிநேரம் மழை கொட்டியது. அதனைத்தொடர்ந்து இரவு வரையிலும் மழை விட்டுவிட்டு பெய்தது.

    தொடர்மழையின் காரணமாக லாடபுரம் ஏரிகள், குரும்பலூர் ஏரி, செஞ்சேரி ஏரி, அரணாரை நீலியம்மன்-செல்லியம்மன் ஏரி, பெரம்பலூர் பெரியஏரி, வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி மற்றும் துறைமங்கலம் பெரிய ஏரி ஆகியவை மீண்டும் நிரம்பின.

    பெரம்பலூரில் உள்ள திரவுபதி குளம் என்றழைக்கப்படும் தெப்பக்குளம் நேற்று முன்தினம் முழுமையாக நிரம்பியது. மழை நீரும், காட்டாற்று ஓடைகளின் ஊற்றுநீரும் ஏரி, மதகுகளின் வழியே வழிந்தோடுவது கண்கொள்ளாக்காட்சியாக உள்ளது. பெரம்பலூர் பெரிய ஏரியில் நேற்று அதிகாலை பிரதான மதகில் நீர் வழிந்தோடியது. இதையடுத்து, பெரிய ஏரி ஆயக்கட்டு பகுதி விவசாயிகள், மதனகோபாலசுவாமி கோவில் பணியாளர்கள் பெரிய ஏரியில் நீர்நிலைக்கு தேங்காய் உடைத்தும் நிவேதனம் செய்தும் வழிபட்டனர். பின்னர் பூக்களை தூவி புதுவெள்ளநீரை வரவேற்றனர்.

    பெரிய ஏரியில் கடை வழிந்தோடிய மழைநீரில் மீன்கள் அதிகம் தென்பட்டதால், மீன்பிடிப்பவர்கள் வலைகளை விரித்து மீன்களை பிடித்து சென்றனர். பள்ளி மாணவ-மாணவிகள் கூட்டம் கூட்டமாக வந்து பெரிய ஏரியில் நீர்வழிந்தோடியதை கண்டு ரசித்தனர்.

    இதேபோல் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரியின் உபரிநீர் வாய்க்காலிலும், துறைமங்கலம் பெரிய ஏரி வழிந்தோடும் மதகு பகுதியிலும் இளைஞர்கள் ஆர்வமுடன் மீன்பிடிப்பில் ஈடுபட்டனர். பெரம்பலூர் டவுனில் பெய்த பலத்த மழை காரணமாகவும், பெரம்பலூர் பெரிய ஏரி நிரம்பி வழிந்தோடி வருவதாலும், பெரம்பலூரில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி மற்றும் துறைமங்கலம் பெரிய ஏரி ஆகியவை நிரம்பின.

    பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் பராமரிக்கப்படும் ஏரிகள் மொத்தம் 73 உள்ளன. இவற்றில் 35 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் நிரம்பி வழிந்தோடுகிறது. பென்னகோணம், வெங்கலம், பேரையூர் ஆகிய ஏரிகள் 80 சதவீதம் நீர் நிரம்பி உள்ளன. செங்குணம், அன்னமங்கலம், நாரணமங்கலம், காரை பெரியஏரி, சின்னாறு போன்ற ஏரிகள் 50 சதவீதத்திற்கு கீழ் தண்ணீர் நிரம்பி உள்ளன.

    • மாவட்டத்திலுள்ள 2,512 குளங்களில் 1971 குளங்கள் நிரம்பிவிட்டன.
    • அனுமந்தபுரம், கொப்பளான் ஏரி உடைந்தன.

    தாம்பரம் :

    கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 துப்பணித்துறை ஏரிகளில் 220 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள 620 ஏரிகளில் 293 ஏரிகள் நிரம்பி உள்ளன. மாவட்டத்தில் முக்கிய விவசாய பாசன ஏரிகளான திருக்கழுக்குன்றம் பி.வி. களத்தூர் ஏரி. திருப்போரூர் மானாமதிஏரி. சிறுதாவூர் ஏரி. தையூர் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின‌

    செங்கல்பட்டு கொளவாய் ஏரி, திருப்போரூர் காயார் ஏரி, கொண்டங்கி ஏரி, செய்யூர் பல்லவன் குளம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது

    மாவட்டத்திலுள்ள 2,512 குளங்களில் 1971 குளங்கள் நிரம்பிவிட்டன

    ஏரி குளங்களில் உடைப்புகள் ஏற்படுவதை தடுக்க பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் அனுமந்தபுரம் கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் கொப்பளான் ஏரியின் மதகு உடைந்ததால் ஏரியிலிருந்து வெளியேறிய நீர் முழுவதும் விவசாய நிலங்களில் புகுந்தது.

    தகவலறிந்து வந்த வருவாய்துறை அதிகாரிகள் ஏரியில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு வருகின்றனர். கடந்த மாதம் பெய்த மழையிலேயே முழு கொள்ளளவை எட்டியிருந்த நிலையில் தற்போது மாண்டஸ் புயலின் தாக்கத்தால் பெய்த கனமழையினால் மீண்டும் கொப்பளான் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஏரி உடைந்துள்ளது.

    இதனால் ஏரியிலிருந்து வெளியேறிய நீர் சுற்று வட்டார கிராமத்தில் உள்ள 97 ஏக்கர் விவசாய நிலத்தில் புகுந்தது. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர் இதனால் அங்கு விரைந்து வந்த வருவாய்துறை அதிகாரிகள் ஏரியில் இருந்து வெளியேறும் நீரை தடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    கனமழை தொடர்வதால் கூடுதலாக பாலாற்றில் தண்ணீர் வர வாய்ப்புள்ளதால் பாலாற்றின் கரையோரம் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டு்ள்ளது.

    பொதுமக்கள் ஆற்றில் இறங்கவும், ஆற்றை கடக்கவும் ஆற்றில் குளிக்கவும் துணி துவைக்கவும் இறங்க வேண்டாம். செல்போன் மூலம் புகைப்படம் எடுப்பது செல்பி எடுப்பது போன்றவற்றை செய்யக்கூடாது. கால்நடைகளை பாலாற்றங்கரையில் மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது வீட்டில் உள்ள சிறுவர், சிறுமிகளை ஆற்றின் அருகே செல்லாமல் இருக்க பெற்றோர் விழிப்புடன் இருக்குமாறு நீர் ஆதாரத்துறை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

    • மாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி நல்லாம்பாளையம் பகுதியில் ஏரி உள்ளது.
    • ரூ.10 லட்சம் அரசு நிதி உதவி பெற்று ஏரியின் கரைகளை புதிதாக அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி நல்லாம்பாளையம் பகுதியில் ஏரி உள்ளது. இது சிறுக, சிறுக மண் அரிப்பு ஏற்பட்டு இந்த கரைகள் முற்றிலும் சேதமானது. இதனால் மழை நீர் வந்தால் தேங்காமல் வீணாக சென்று விடுகிறது.

    இதனை புதிதாக கரை கட்டி தண்ணீர் சேமித்து வைக்க இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, ஊராட்சி தலைவி புஷ்பா இதற்கான முயற்சி எடுத்து, ரூ.10 லட்சம் அரசு நிதி உதவி பெற்று ஏரியின் கரைகளை புதிதாக அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஏரியில் மழை நீர் நின்றால், இப்ப குதி விவசாய கிணறுகளில் நீர் பெருகும், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து போர்வெல்களில் தண்ணீர் எப்போதும் வற்றாத நிலை யில் இருக்கும். இதனால் இப்பகுதி விவசாயிகள் தண்ணீர் கவலையில்லாமல் விவசாயம் செய்ய உதவியாக இருக்கும். கால்ந டைகளுக்கும் போதுமான குடிநீர் கிடைக்கும்.

    • ஏரி இருப்பதாக கூறி குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கையில் தீவிரம் காட்டுகிறார்கள்.
    • முடிவெடுக்கும் வகையில் அதிகாரம் கொண்ட மாவட்ட அளவிலான உயர்மட்டக் குழு அமைக்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொருக்கை மற்றும் முத்துப்பேட்டை ஒன்றியம் ஆலங்காடு ஊராட்சிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீடுகள் அகற்றப்படும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோருதல் தொடர்பாக மாரிமுத்து எம்.எல்.ஏ, முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பினார்.

    அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது,

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியம், கொருக்கை ஊராட்சி, தலைக்காடு, கண்ணன் மேடு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர்.

    இந்தக் குடும்பங்கள் குடியிருந்து வரும் நிலத்தில் ஏரி இருந்ததாகவும், மக்கள் நீர் நிலைப்பகுதிக்கான இடத்தை ஆக்கிரமித்து, குடியிருப்பதாகவும் கூறி வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை உதவியுடன் வழிவழியாக வாழ்ந்து வரும் குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

    இதற்கு நீதிமன்ற உத்தரவை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

    கொருக்கை ஊராட்சியில் ஏரி இருந்ததற்கான எந்த தடயங்களும், அடையாளங்களும் இல்லாத நிலையில், அரசு ஆவணத்தில் 37 ஏக்கர் பரப்பளவில் ஏரி இருப்பதாக கூறி குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கையில் தீவிரம் காட்டுகிறார்கள்.

    புயல், பெருமழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் எதிலும் தலைக்காடு, கண்ணன் மேடு பகுதியில் உள்ள குடும்பங்கள் எவ்வித பாதிப்புக்கும் ஆளாகவில்லை.

    இயற்கை சீற்றங்களால் பதிக்கப்படாத, நீர் தேக்கம் எதுவும் இல்லாத தலைக்காடு, கண்ணன் மேடு நிலப்பகுதியை வகை மாற்றம் செய்து, குடியிருந்து வரும் குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்குவதாக மாவட்ட கலெக்டர் உறுதி அளித்துள்ளார்.

    இதேபோல் முத்துப்பேட்டை ஒன்றியம், ஆலங்காடு ஊராட்சி, இ சி ஆர் சாலை, மெயின்ரோடு பகுதியில் 80 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நீண்டகாலமாக வசித்து வருகின்றனர்.

    இந்த நிலப்பகுதியும் நீர்நிலைப் பகுதி என குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையில் வருவாய்த்துறை தீவிரம் காட்டுகிறது.

    கொருக்கை மற்றும் ஆலங்காடு ஊராட்சிகளில் உள்ள நிலப்பகுதி போல் திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    அரசின் நடவடிக்கை மாவட்டம் முழுவதும் கடுமையான பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

    இதில் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரசு ஆவணங்களில் நீர்நிலைப் பகுதி அல்லது ஆட்சேபகரமான நிலப்பகுதி என வகைப்பாட்டில் உள்ள நிலப்பகுதியின் நடப்புக்காலத் தன்மையை புலத்தணிக்கை செய்து, குடியிருந்து வரும் குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்குவது அல்லது மாற்று இடத்தில் வீடுகள் கட்டிக்கொடுத்து. மறுவாழ்வை உறுதி செய்து வெளியேற்றுவது என்று முடிவெடுக்கும் வகையில் அதிகாரம் கொண்ட மாவட்ட அளவிலான உயர்மட்டக் குழு அமைக்க வேண்டும்.

    மாவட்ட அளவில் அமைக்கப்படும் உயர்மட்டக் குழுக்கள் ஆய்வு செய்யும் காலத்தை நிர்ணயித்து, இதற்கு தகுந்தபடி, அரசின் வருவாய்த்துறை உயர்நீதி மன்றத்தில் மனு செய்து, ஆக்கிரமிப்புகள் மீது சுமூகமான முறையில் தீர்வுகாண அனுமதி பெற வேண்டும்.

    மேற்கண்ட நடவடிக்கைகளுக்கான காலத்தில் தற்போது உள்ள நிலை நீடிக்க அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கனமழையால் புதிய கட்டளை மேட்டு கால்வாய் பாசன பகுதி ஏரிகளில் ஓரளவு தண்ணீர் நிரம்பியுள்ளது.
    • பூதலூர் ஒன்றிய விவசாயிகள் சிரமமின்றி ஒருபோக சாகுபடி செய்ய பொதுப்பணித்துறை ஆற்றுப்பாசன கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பூதலூர்:

    பூதலூர் ஒன்றியத்தில் செங்கிப்பட்டி பகுதியில் புதிய கட்டளை மேட்டு கால்வாய் வழியாக தண்ணீர் பெற்று 100-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரப்பி அதன் மூலம் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு போக சாகுபடி செய்வது வழக்கம். இந்த ஆண்டு காவிரி டெல்டா பாசனத்திற்குகாக மேட்டூர் அணை கடந்த மே 24-ந் தேதி திறக்கப்பட்ட நிலையில் புதிய கட்டளை மேட்டு கால்வாயில் அதன் தலைப்பு உள்ள கரூர் மாவட்டம், மாயனூரில் இருந்து தண்ணீர் கடந்த ஜூலை 16-ந் தேதி திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் கரூர், திருச்சி மாவட்டங்களை கடந்து தஞ்சை மாவட்ட த்திற்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திருச்சி மாவட்டம் அசூர் அருகில் கட்டளை கால்வாய் உடைப்பு ஏற்பட்டதால், அதனை அடைப்பதற்காக மாயனூரில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாக தெரியவருகிறது.

    இது போன்ற சூழ்நிலையில் பூதலூர் ஒன்றியத்தில் அவ்வப்போது கொட்டி தீர்க்கும் கனமழையால் புதிய கட்டளை மேட்டு கால்வாய் பாசன பகுதி ஏரிகளில் ஓரளவு தண்ணீர் நிரம்பியுள்ளது. புதிய கட்டளை மேட்டு கால்வாயின் கடைமடை ஏரியாக உள்ள பூதலூர் ஒன்றியம் செல்லப்பன்பேட்டை பெத்தமாதுரான் ஏரியில் முழு கொள்ளளவும் நிரம்பி கடல் போல காட்சியளித்து கொண்டிருக்கிறது. இதனால் திருச்சி மாவட்ட த்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை அடைத்து பொய்கைகுடி ஏரியை நிரப்பி பூதலூர் ஒன்றிய பகுதி பாசனத்திற்காக புதிய கட்டளை மேட்டு கால்வாயில் முழு கொள்ளளவில் தண்ணீரை திறந்து விட்டு அனைத்து ஏரிகளையும் நிரப்பி, பூதலூர் ஒன்றிய விவசாயிகள் சிரமமின்றி ஒருபோக சாகுபடி செய்ய பொதுப்பணித்துறை ஆற்றுப்பாசன கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

    • இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய விண்கல் ஒன்று விழுந்திருக்கிறது. விண்கல் விழுந்த இடத்தில் மிகப்பெரிய ஏரி ஒன்றும் உருவாகியிருக்கிறது.
    • மகாராஷ்டிரா மாநிலத்தில் புல்தானா மாவட்டத்தில் உள்ள குக்கிராமமான லோனாரில் தான் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 1.98 கி.மீ விட்டமுள்ள மிகப்பெரிய விண்கல் விழுந்ததினால் உருவானது தான் இந்த லோனார் ஏரியாகும்.

    இந்தியாவில் விண்கல் விழுந்ததினால் உருவான மிகப்பெரிய ஏரியைப் பற்றி தெரியுமா உங்களுக்கு?

    நமது சூரிய மண்டலத்தின் செவ்வாய் கோளுக்கும் வியாழன் கோளுக்கும் இடையே சிறிதும் பெரிதுமான கற்கள் சூரியனைச் சுற்றிவருகின்றன. இவையே விண்கற்கள் எனப்படுகின்றன.

    இந்த கற்கள் விண்ணில் இருப்பதனால் இவற்றை விண்கற்கள் என்கிறோம். இவை பூமியின் ஈர்பால் பூமியின் வளிமண்டலத்திற்குள் வரும்போது காற்றின் உராய்வால் வெப்பமடைந்து எரிந்து விடுகின்றன. இப்போது அவற்றை எரிகற்கள் அல்லது எரிநட்சத்திங்கள் என்கிறோம்.

    விண்கற்கள் சில மீட்டர் நீளத்திலிருந்து பல கிலோமீட்டர்கள் நீளம் வரையிலும் உள்ளன. பொதுவில் பெரிய அளவில் உள்ள விண்கற்களை அஸ்டிராய்ட் என்று குறிப்பிடுகின்றனர். மாங்காய் அளவு அல்லது கூழாங்கல் அளவுக்கு இருக்கும் விண்கற்களும் விண்வெளியில் நிறையவே உள்ளன.

    இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய விண்கல் ஒன்று விழுந்திருக்கிறது. விண்கல் விழுந்த இடத்தில் மிகப்பெரிய ஏரி ஒன்றும் உருவாகியிருக்கிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் புல்தானா மாவட்டத்தில் உள்ள குக்கிராமமான லோனாரில் தான் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 1.98 கி.மீ விட்டமுள்ள மிகப்பெரிய விண்கல் விழுந்ததினால் உருவானது தான் இந்த லோனார் ஏரியாகும்.

    அதீத விசையுடன் பூமியில் விழுந்ததன் காரணமாக கிட்டத்தட்ட 1.98 கி.மீ விட்டமும் 449 அடி ஆழமும் கொண்ட மிகப்பெரிய பள்ளம் உருவாகியிருக்கிறது.

    இந்த ஏரிக்கு புர்னா மற்றும் பென்கங்கா என்ற இரண்டு சிறிய ஓடைகளில் இருந்து தண்ணீர் வருகிறது.

    விண்கல் அதீத விசையுடன் இங்கே வந்து விழுந்த போது இங்கிருக்கும் பாறைகள் உராய்வின் சூட்டில் உருகி மேலெழும்பியிருக்கின்றன.

    இந்த பாறைகளில் இருக்கும் இரசாயனங்களின் காரணமாக ஏரியில் இருக்கும் பெரும்பகுதி நீர் உப்புத்தன்மை கொண்டதாக இருக்கிறது.

    லானோர் ஏரியில் பெரும்பகுதி நீர் உப்புத்தன்மை உள்ளதாக இருந்தாலும் இதன் தெற்குப்பகுதியில் நன்னீர் இருக்கிறது. ஒரே ஏரியில் உப்பு நீரும் நன்னீரும் இருப்பது லோனார் ஏரியில் மட்டும் தான் !!! .

    பழங்காலத்தில் இந்த இடத்தின் மகிமையை அறிந்தோ என்னவோ லோனார் ஏரியை சுற்றிலும் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ஏராளமான கோவில்களை ரிஷிகளும் முனிவர்களும் எழுப்பியிருக்கின்றனர்.

    அந்த கோயில்கள் அனைத்தும் இப்போது சிதலமடைத்து காணப்பட்டாலும் அக்கோவில்களுள் பல ரகசியங்கள் பொதிந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

    - வீரமணி வீராசாமி

    • 15 நீர் பிடிப்பு குளங்களை நிரப்ப வேண்டும். எஞ்சிய தண்ணீரை மணப்பாடு கடலுக்கு அனுப்பினால் போதும்.
    • மணப்பாடுகடல்முகம் இயற்கையாக அமைந்து இருப்பதால் பொதுமக்களுக்கு எந்த விதமான இடையூறும் இல்லை.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகள், தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    தாமிரபரணி ஆற்றின் ஸ்ரீவைகுண்டம் அணையின் தென்கால்உபரிநீர் முழுவதையும் குலசை தருவைக்குளம் வழியாக மணப்பாடு கடலுக்கு மட்டும் அனுப்ப வேண்டும்.

    வருடந்தோறும் ஆத்தூர் வழியாக புன்னக்காயல் கடலுக்கு நேரடியாக செல்லும் தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் அளவை முன்கூட்டியே கணக்கிட்டு அதை ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிற்கு முன்பே உள்ள

    மருதூர்மேலக்கால் அணைக்கட்டு மூலம் உபரிநீரை தெற்கே திருப்பிஉடன்குடியைச் சுற்றியுள்ள நீர்ப்பிடிப்பு குளங்களான செம்மறி படுகைகுளம், சடையனேரி குளம், தாங்கைக்குளம், அய்யனார்குளம், நரிக்குளம், தண்டுபத்துவடக்குகுளம், மானாட்சிகுளம்,

    குண்டாங்கரைகுளம், சிறுகுளம், இடையர்குளம், தேரிகுண்டாங்கரை உட்பட 15 நீர் பிடிப்பு குளங்களை நிரப்ப வேண்டும். எஞ்சிய தண்ணீரை தாங்கைக்குளம் வழியாக கருமேனிஆற்றில் விட்டு மணப்பாடு கடலுக்கு அனுப்பினால் போதும்.

    மணப்பாடுகடல்முகம் இயற்கையாக அமைந்து இருப்பதால் உடன்குடி சுற்று வட்டார பொதுமக்களுக்கு எந்த விதமான இடையூறும் இல்லை.

    புன்னக்காயல் கடலுக்கு நேர்வழியில் போவதை மாற்றிட முடியும்.

    உடன்குடியைச் சுற்றி மணப்பாடு கடலுக்கு அனுப்பினாலே போதும் ஆனால் அதற்கு முறை யான திட்டமிடலும் செய லாக்கமும் தன் ஊக்கமும் தான் இப்போது அவசியம். ஏனெனில் உடன்குடியில் பாசன குளங்கள் எதுவுமில்லை.

    அனைத்துமே நீர்ப்பிடிப்பு குளங்கள் தான்.பம்புசெட் மூலமேவிவசாயம் நடைபெறுவதால் அவை உறிஞ்சும் தண்ணீரை மேற்கண்ட குளங்கள் மூலமாக வருடந்தோறும் கொடுத்தாலே போதும்.

    எனவே மழையை மட்டுமே எதிர்பார்த்திருக்க அவசியம் இல்லை, 15 நீர் பிடிப்பு குளங்களையும் காப்பாற்ற கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை திருப்பி விட நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பாடாலூர் அருகே புதுக்குறிச்சி ஏரியில் சாலை அமைப்பதை கண்டித்து அந்தப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பாடாலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் அருகே உள்ள காரை கிராமத்தில் ஊராட்சி செயலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய நிலங்கள், கிணறுகள் காரை ஊராட்சி புதுக்குறிச்சியில் ஊரக வளர்ச்சித் துறைக்கு சொந்தமான ஏரிக்கு அருகே உள்ளது. அந்த நிலத்திற்கு செல்வதற்காக புதுக்குறிச்சி ஏரியினுள் சந்திரசேகர் சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்றி விட்டு, சாலை அமைத்து வருவதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து ஏரியில் சாலை அமைப்பதை கண்டித்து புதுக்குறிச்சி கிராமத்தை பொதுமக்கள் நேற்று காலை காரை பஸ் நிறுத்தம் அருகே ஆலத்தூர் கேட்டில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவலறிந்த ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தயாளன், வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் சிரில்சுதன், பாடாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாறன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏரியில் ஆக்கிரமித்து சாலை அமைப்பதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    ×