search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lake"

    • ஏரிகளை பழைய நிலைக்கு மீட்கப்பட உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • கேரளா, ஆந்திரா ஆகியவற்றுடன் நீர் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை ஆழப்படுத்தவும், ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும் அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில், தமிழகம் முழுவதும் 2,300 ஏரிகள் உலக வங்கி உதவியுடன், ஆழப்படுத்தி பழைய நிலைக்கு மீட்கப்பட உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது.

    கடந்த ஜூன் மாத புள்ளி விவர கணக்கின்படி 20,150 ஆக்கிரமிப்புகள் அகற்றி 7,569 ஏரிகள் ஆக்கிரமிப்புகள் அற்றவையாக பராமரிக்கப்பட்டுள்ளது.

    கேரளா, ஆந்திரா ஆகியவற்றுடன் நீர் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

    அவை மீறப்படும் பட்சத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க உரிய அமைப்பை நாடி வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 362 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 1862 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 70 கனஅடி தண்ணீர் வருகிறது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் உள்ளன. வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து கடந்த வாரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. அப்போது குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. பின்னர் மழை இல்லாததால் ஏரிகளுக்கு நீர் வரத்து குறைந்நது.

    இந்நிலையில் குமரிக்கடல் மற்றும் தமிழக கடலோர பகுதிகள், அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை விடிய, விடிய நீடித்தது. இன்று காலையும் மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 362 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. இதில் 2726மி.கனஅடி தண்ணீர் உள்ளது. 189 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1080மி.கனஅடி. இதில் 673மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 186 கனஅடி தண்ணீர் வருகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645மி.கனஅடி. இதில் 3115 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வரும் 162 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 21.98 அடிக்கு தண்ணீர் உள்ளது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 1862 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 70 கனஅடி தண்ணீர் வருகிறது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 435 மி.கனஅடிதண்ணீர் உள்ளது. ஏரிக்கு 10 கனஅடி தண்ணீர் வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 5 ஏரிகளிலும் மொத்தம் 11757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இதில் 8811 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பொன்னேரி பகுதியில் பெய்த பலத்த மழை காணமாக ரெயில்வே சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குளம் போல் காணப்படுகிறது. தடபெரும்பாக்கம் காலனி, துரைசாமி நகர் பகுதியில் தாழ்வான இடங்களில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. நேற்று இரவு முதல் பொன்னேரி மீஞ்சூர் சோழவரம், திருப்பாலைவனம் பழவேற்காடு மணலி புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

    • கீழ்கட்டளை ஏரியை சுற்றிலும் பெரிய குடியிருப்புகள் வந்து உள்ளன.
    • ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    தாம்பரம்:

    தாம்பரம் மாநகராட்சி, 2-வது மண்டலத்துக்குட்பட்ட பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் கீழ்கட்டளை ஏரிஉள்ளது. இது கிழக்குகடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி பெரும்பாலான ஐ.டி நிறுவன ஊழியர்கள் சென்று வருகின்றனர். புறநகர் பகதிகளிள் அசூர வளர்ச்சியின் காரணமாக இந்த சாலையும் கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தை கண்டு உள்ளது. கீழ்கட்டளை ஏரியை சுற்றிலும் பெரிய குடியிருப்புகள் வந்து உள்ளன. இதானல் ஏரி இடமும் ஆக்கிரமிப்பில் சிக்கி வருகிறது. மேலும் ஏரிக்கு வரும் கழிவுநீரும் அதிகரித்து உள்ளது. கழிவு நீர் பிரச்சனை குறித்து எந்த ஒரு திட்டமிடலும் இல்லாததால் ஆறுபோல் கழிவு நீர் ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது.

    இதன் காரணமாக ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகிறார்கள். குறிப்பாக 18, 19,20, ஆகிய வார்டுகளில் நிலத்தடி நீர் பாதிக்கபட்ட தோடு குடிநீரிலும் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதேபோல் ஏரியில் கழிவுநீர் கலப்பதால் அங்குள்ள மீன்களும் அதிக அளவில் இறந்து வருகின்றன. கீழ்கட்டளை ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதற்கிடையே கீழ்கட்டளை ஏரியில் கழிவு நீர் கலப்பது பற்றி அறிந்ததும் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில் பா.ஜ.க.வினர் கீழ்கட்டளை ஏரியை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் கூறும்போது, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி பெருமாள், ஓய்வு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளர் கிருஷ்ண மூர்த்தி, ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் சூரியநாராயணன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஒரு மாதத்திற்குள் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட ஏரிகளை பார்வையிட்டு அறிக்கை தயார் செய்ய உள்ளனர். அதனை செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ.க. வெளியிடும். பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாநகர மேம்பாட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தாம்பரம் மாநகராட்சியை எப்படி மேம்படுத்துவது என்ற பணியை செய்ய வேண்டும். ஏரி மற்றும் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, தரமான வசதிகளை பெற்றுத் தருவதற்கு தொடர்ந்து போராடுவோம். மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.

    • காணை போலீசார் விசாரணை
    • உடல் இன்று அதிகாலையில் மாம்ப ழப்பட்டு ஏரிக்கரையில் மிதந்துள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் திருக்கோவிலூர் சாலையில் உள்ள மாம்பழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 37). பூக்கடையில் பூக்களை மாலையாக கட்டும் பணிசெய்து வந்தார். திருமணமாகாதவர். இவரது உடல் இன்று அதிகாலையில் மாம்ப ழப்பட்டு ஏரிக்கரையில் மிதந்துள்ளது. அருகில் சென்று பார்த்தவர்கள், சுந்தரமூர்த்தி இறந்து கிடந்ததை உறுதி செய்து, காணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுந்தரமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கால் கழுவ சென்ற போது தவறி விழுந்தாரா, மதுபோதையில் தவறி விழுந்தாரா, யாரேனும் ஏரியில் தள்ளிவிட்டனரா என்பன போன்ற கோணங்களில் காணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வழக்கமாக செப்டம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் காஞ்சிபுரம் ஏரிகளுக்கு அதிகளவு வருவது உண்டு.
    • நீர்நிலைகளை தேடி வரும் பறவைகளை வேட்டையாடினால் அவற்றின் வருகை குறைந்து விடும் என்று எச்சரித்துள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் பெரும்பாலானவை பாசனத்துக்கு கை கொடுப்பதாக உள்ளன.

    இந்த ஏரிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் வெளி நாடுகளில் இருந்து அரிய வகை பறவைகள் வந்து செல்வது வழக்கம். உணவு மற்றும் இன பெருக்கத்துக்காக வரும் இந்த பறவைகள் சில மாதங்கள் ஏரிகளில் தங்கி இருந்துவிட்டு மீண்டும் பறந்து சென்று விடும்.

    தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 6 ஏரிகளில் அதிகளவு வெளிநாட்டு பறவைகள் வந்து இருப்பது தெரிய வந்துள்ளது. வழக்கமாக செப்டம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வெளிநாட்டு பறவை கள் காஞ்சிபுரம் ஏரிகளுக்கு அதிகளவு வருவது உண்டு.

    அந்த வகையில் வந்துள்ள இந்த பறவைகள் வழக்கத்தை விட கூடுதல் ஏரிகளில் தங்கி உள்ளன. ஒரகடம், நாவலூர், மணிமங்கலம், ஆதனூர் ஏரிகளிலும் வெளிநாட்டு பறவைகள் அதிகம் வந்திருப்ப தை பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    வெளிநாட்டு பறவைகளில் எந்தெந்த வகை பறவைகள் தற்போது வந்துள்ளன என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப் போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு 190-க்கும் மேற்பட்ட அரிய வகை வெளிநாட்டு பறவைகள் வந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    நாவலூர் ஏரியில் வெளிநாட்டு வகை வாத்துக்கள் நூற்றுக்கணக்கில் குவிந்துள்ளன. ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு புதிய வகை பறவைகள் வந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகளுக்கு வரும் வெளிநாட்டு பறவைகளை சில கிராம மக்கள் பிடிப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு பறவை ஆராய்ச்சியாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நீர்நிலைகளை தேடி வரும் பறவைகளை வேட்டையாடினால் அவற்றின் வருகை குறைந்து விடும் என்று எச்சரித்துள்ளனர். சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சில கிராமங்களில் அரிய வகை பறவைகளை பிடித்து கூண்டுகளில் அடைத்து சிலர் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப் பட்டது. அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பறவை இன ஆராய்ச்சியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • மிகப்பெரிய நீர் நிலையாக இருந்த ஏரி, சாலை அமைக்கப்படுவதற்காக பாதி அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக ஆக்கிரமிக்கப்பட்டது.
    • மாநகராட்சி அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    சேர்ந்தே இருப்பது... குப்பை மேடும் கோபுரங்களும்...

    சேராது இருப்பது... சுத்தமும், சுகாதாரமும்...

    கண்டு கொள்வது... கடற்கரையும் காதலர்களும்... கண்டுகொள்ளாதது... கண்ட கண்ட இடங்களில் குப்பைகளையும் கழிவுகளையும் கொட்டுவதை.

    இதுதான் சென்னையின் நிலை. அழகான நகரம் இப்படி அலங்கோலப்படுத்தப்படுவது தடுக்கப்படுமா? இந்த நகரத்தின் அழகு மீட்டெடுக்கப்படுமா? என்ற ஏக்கம் சென்னை வாசிகளிடம் நெடு நாளாகவே இருக்கிறது. ஆனால் அழகை மீட்பதற்கு பதில் நாளுக்கு நாள் சிதைத்து தான் வருகிறார்கள்.

    நகரம் விரிவடைந்தது. கூடவே நிழல் போல் நரக சூழலும் தொடர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும். விரிவாக்கத்தின் அடையாள ரேகை போல் குரோம்பேட்டையில் இருந்து துரைப்பாக்கம் வரை 200 அடி ரேடியல் ரோடு உருவாக்கப்பட்டது.

    இந்தச் சாலை அமைந்த பிறகு அந்தப் பகுதியில் வளர்ச்சி மின்னல் வேகத்தில் உயர்ந்தது.

    அதே நேரம் மிகப்பெரிய நீர் நிலையாக இருந்த ஏரி சாலை அமைக்கப்படுவதற்காக பாதி அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக ஆக்கிரமிக்கப்பட்டது.

    மிச்சமிருந்த ஏரி குப்பை கொட்டும் வளாகம் போல் மாறிவிட்டது.

    குப்பைகள் கட்டிட கழிவுகள் டன் கணக்கில் குவிக்கப்பட்டு இப்போது அந்த ஏரி குப்பை மலையாக மாறி இருக்கிறது. அங்கிருந்து துரைப்பாக்கம் வழியாக பள்ளிக்கரணை சென்றால் மிகப் பெரிய குப்பை கிடங்கு இருக்கிறது. லட்சக்கணக்கான டன் குப்பை குவிந்து சில கிலோ மீட்டர் தூரத்திற்கு மலை போல் உயர்ந்து காட்சியளிக்கிறது.

    இந்த குப்பை கிடங்குகள் காரணமாக சதுப்பு நில பகுதி முற்றிலும் பாழ்பட்டு கிடக்கிறது. இந்தப் பகுதி ஐ.டி.நிறுவனங்கள் நிறைந்த பகுதி மழை பெய்தால் தண்ணீரில் கலந்து துர்நாற்றம் வீசும்... வெயில் அடித் தால் நெருப்பு பற்றிக் கொள்ளும். அதில் இருந்து வெளியேறும் புகை வழியாக துர்நாற்றம் வரும். இப்படி ஆண்டு முழுவதும் இந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசிக் கொண்டே இருக்கும்.

    12 ஏக்கர் பரப்பளவில் நான் கைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கடல் போல் நீர் நிரம்பி காணப்பட்டது செம்மஞ்சேரி ஏரி. பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும்.

    அதன் பிறகு மெல்ல மெல்ல இந்த ஏரி ஆக்கிரமிக்கப்பட்டது. 30 சதவீதத்துக்கும் மேற்பட்ட பகுதி கட்டிட இடிபாடுகளை கொட்டி கட்டாந்தரை போல் ஆக்கப்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. அதற்கு விதிப்படி தேவையான இடத்தை ஏரியில் இருந்து எடுத்து சுற்றுச் சுவரும் கட்டப்பட்டு உள்ளதாக பசுமை தாயகம் அமைப்பின் மாவட்டச் செயலாளர் நிர்மல்குமார் கூறினார். அந்த பகுதி யில் கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாயும் இந்த ஏரியில் கொண்டு விடப்பட்டு உள்ளது. ஏற்கனவே தூர்ந்து போன ஏரியில் மழைக்காலங்களில் தண்ணீர் வரும் போது அந்த கால்வாய் வழியாக தண்ணீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளை மூழ்கடிக்கும் என்கிறார்கள்.

    தற்போது கெட்டப்படும் கட்டிட கழிவுகளை கண்டு கொள்ளாமல் இருந்தால் ஒரு கட்டத்தில் பிளாட் போட்டு விற்கப்படும் என்கிறார்கள். இப்படித்தான் சோழிங்கநல்லூரில் பல குட்டைகள் காணாமல் போய்விட்டதாக ஆதங்கப்பட்டார் நிர்மல்குமார்.

    தென் சென்னையிலேயே இப்படியென்றால் வட சென்னையை கேட்க வேண்டியதில்லை. ஏற்க னவே கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு கொடுமையை அந்த பகுதி வாசிகள் அனுபவித்து வருகிறார்கள்.

    இதேபோல் மிகப்பெரிய நீர் ஆதாரமான ரெட்டேரி ஏரியும் கட்டிட கழிவுகளை கொட்டும் வளாகமாக மாற்றப்பட்டது. பொது மக்கள் போராட்டத்தால் ஓரளவு குறைந்தாலும் ஏரியை சுற்றி ஏராளமான கட்டிட கழிவுகள் லாரி, லாரியாக கொண்டு வந்து கொட்டப்படுகிறது.

    தனியார் மற்றும் அரசு கட்டுமான பணிகளை செய்து வரும் ஒப்பந்ததாரர்கள் கட்டிட கழிவுகளை இந்த பகுதியில் கொட்டுகிறார்கள். அதை பின்னர் அங்கிருந்து அப்புறப்படுத்துவதில்லை.

    ரெட்டேரி ஏரியின் தென் கரையோரம் பெரம்பூர்-ரெட்ஹில்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி உர உற்பத்தி மையத்தை ஒட்டியுள்ள 3 இடங்களில் கட்டிட இடிபாடுகள் மட்டு மில்லாமல் ஏராளமான கழிவுப் பொருட்களும் இந்த பகுதியில் கொட்டி குவிக்கப்பட்டுள்ளது.

    இதனை மாநகராட்சி அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    புதிய நீர் நிலைகளை உருவாக்குவது கடினம். இருக்கும் நீர் நிலைகளை யாவது பாதுகாப்பதில் கவனம் செலுத்தலாமே.

    • பழமையான 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட செல்லிக்குறிச்சி ஏரி உள்ளது.
    • தற்போது இந்த ஏரி சரியாக தூர்வாரப்படாத நிலையில் உள்ளது.

    அதிராம்பட்டினம்:

    அதிராம்பட்டினம்- பட்டுக்கோட்டை சாலையில் மிகவும் பழமையான 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட செல்லிக்குறிச்சி ஏரி உள்ளது. இந்த ஏரியால் அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் மிகவும் பயனடைகின்றன.

    இந்நிலையில், தற்போது இந்த ஏரி சரியாக தூர்வாரப்படாத நிலையில் உள்ளது.

    இதனால் ஏரியில் உள்ள தண்ணீர் குறுகிய நாட்களில் வற்றி போகிறது. எனவே, இந்த ஏரியை உடனடியாக தூர்வார வேண்டும். மேலும், அதிராம்பட்டினத்தை சுற்றியுள்ள மக்களும், சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து நேரத்தை செலவிடும் வகையில் ஏரியில் படகு சவாரி ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர் அப்துல் பாசித் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    • ஏற்கனவே திருமணமாகி கார்த்திக் என்ற கணவரும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.
    • பச்சிளம் குழந்தையை கல்நெஞ்சம் படைத்த தாயே ஏரியில் வீசி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேளச்சேரி:

    வேளச்சேரி, சசி நகர் அருகே உள்ள ஏரிப் பகுதியில் நேற்று மாலை பச்சிளம் பெண் குழந்தை உடல் மிதந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வேளச்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீ சார் நடத்திய விசாரணையில் சசிநகர், ஏரிக்கரை பகுதியை சேர்ந்த சங்கீதா (வயது26) என்பவர் கள்ளக்காதலன் மூலம் குழந்தை பிறந்ததால் அதனை ஏரியில் வீசி கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து சங்கீதாவை போலீசார் கைது செய்தனர். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி கார்த்திக் என்ற கணவரும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. கார்த்திக் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். மனைவியின் செயலை அறிந்து அவர் அதிர்ச்சியில் உள்ளார்.

    சங்கீதாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    இந்த தொடர்பை சங்கீதா தனது கணவருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார். இதனால் அவர் மீது கணவருக்கும் பெரிய அளவில் சந்தேகம் ஏற்படவில்லை.

    இதற்கிடையே சங்கீதா, கள்ளக்காதலன் மூலம் கர்ப்பம் அடைந்தார். அந்த குழந்தையை கலைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அவர் வயிற்றில் குழந்தை இருப்பதை அக்கம் பக்கத்தினருக்கு தெரியாமல் மறைத்தார்.

    வயிறு பெரிதானதும் கணவர் மற்றும் உறவினர்கள் கேட்டபோது சாப்பிட்டு தூங்குவதால் வயிறு பெரிதாகி விட்டது என்று கூறி சமாளித்து உள்ளார்.

    இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் சங்கீதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்று பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

    பின்னர் கணவர் வருவதற்குள் அந்த பச்சிளம் குழந்தையை அருகில் உள்ள ஏரியில் வீசி விட்டு சங்கீதா வீட்டுக்கு வந்து உள்ளார். இதில் ஏரி தண்ணீரில் மூழ்கி குழந்தை இறந்து போனது.

    2 நாட்களுக்கு பிறகு குழந்தையின் உடல் தண்ணீரில் மிதந்து கரை ஒதுங்கியதால் போலீசாரின் விசாரணையில் சங்கீதா சிக்கிக்கொண்டார்.

    தவறான உறவின் மூலம் பிறந்ததால் குழந்தையை ஏரியில் வீசி கொலை செய்ததாக சங்கீதா எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்து உள்ளார்.

    குழந்தை பெற்றதும் சங்கீதா ஏரிப்பகுதிக்கு சென்று குழந்தையை தண்ணீரில் வீசி இருக்க முடியாது என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    எனவே குழந்தை கொலையில் சங்கீதாவுக்கு கள்ளக்காதலன் உதவினாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கள்ளக்காதலில் பிறந்ததால் பச்சிளம் குழந்தையை கல்நெஞ்சம் படைத்த தாயே ஏரியில் வீசி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது.
    • சத்தம் அருகில் வசிக்கும் பொது மக்களுக்கு கேட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பங்காரம் கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரியில் உள்ள நீரால் பங்காரம் பகுதியை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீர் பாசன வசதி பெறுகின்றன.இந்நிலையில் இந்த ஏரியில் சில நாட்களாக இரவு நேரங்களில் வாகனம் செல்லும் சத்தம் அருகில் வசிக்கும் பொது மக்களுக்கு கேட்டுள்ளது. மறுநாள் காலையில் சென்று பார்த்ததில் ஏரியில் பள்ளம் தோண்டப்பட்டு இருப்பதும் இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்களால் மண் திருடப்படுவதையும் அறிந்த அப்பகுதி மக்கள் மண் திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க ஏரிக்கு சென்றுள்ளனர்.

    பொதுமக்கள் வருவதை தெரிந்து கொண்ட மணல் திருடர்கள் மண் திருட பயன்படுத்திய2 கிட்டாச்சி வாகனங்களை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றனர்.பின்னர் இதுகுறித்து போலீஸ் நிலையத்திற்கும் வருவாய் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.இது போன்ற சட்டத்திற்கு எதிராகவும் நிலத்தடி நீர் பாதிக்கும் வகையில் மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆமூர் ஏரியில் இருந்து சவுடு மண் எடுத்து சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.
    • சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஏரியில் மணல் அள்ள வந்த லாரிகளை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    பழவேற்காடு அருகே காட்டுப்பள்ளி பஞ்செட்டி பகுதியில் உள்ள சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை இடையே நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக பொன்னேரி அருகே உள்ள ஆமூர் ஏரியில் இருந்து சவுடு மண் எடுத்து சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.

    இந்த நிலையில் ஏரியில் விதிமுறையயை மீறி சுமார் 20 அடி ஆழம் மணல் எடுக்கப்பட்டு வருவதாகவும், மேலும் வெளியிடங்களுக்கு முறைகேடாக விற்கப்படுவதாகவும் தெரிகிறது.

    ஏரியில் மணல் அள்ளப்படுவதால் சுற்றி உள்ள பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படுவதோடு கால்நடைகளுக்கும் விவசாயத்திற்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறி அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஏரியில் மணல் அள்ள வந்த லாரிகளை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பதட்ட மான சூழ் நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் பொன்னேரி போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஏரியில் மணல் அள்ளுவது தற்கா லிகமாக நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • சூர்யா தனது லாரியில் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து வந்து பிரகாஷை கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.
    • கொலை சம்பவத்தால் அக்கரைப்பாக்கம் ஏரியில் சவுடு மண் குவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், அக்கரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஏரியில் கடந்த சில நாட்களாக சவுடு மண்குவாரி இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்று காலை ஆத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர்களான பிரகாஷ் (வயது31), சூர்யா(வயது29) என்ற டிரைவர்கள் சவுடு எடுக்க குவாரிக்கு வந்தனர்.

    அப்பொழுது மண் ஏற்றுக் கொண்டு இரண்டு லாரிகளும் வெளியே வரும்போது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஒருவரை, ஒருவர் தள்ளிக் கொண்டனர். இதில், ஆத்திரம் அடைந்த சூர்யா தனது லாரியில் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து வந்து பிரகாஷை கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.

    இதில், துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பிரகாஷ் பலியானார். இவர்களுக்குள் ஏற்பட்ட மோதலை கண்டு அருகில் இருந்த டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் தலைமையில் பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    படுகொலை செய்யப்பட்ட பிரகாஷ் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகொலை செய்யப்பட்ட பிரகாஷ் மீது லாரியை வழி மறித்து கொள்ளையடித்த வழக்கு பெரியபாளையம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் பணம் மற்றும் நகைகள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் இந்த கொலை சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    இதில், சூர்யாவுக்கும் பிரகாசுக்கும் இடையே பணம் மற்றும் நகைகள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை கடந்த சில நாட்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், குற்றவாளி சூர்யாவின் பூர்வீகம் கிருஷ்ணாபுரம் கண்டிகை என்றும் பிரகாசுடன் ஏற்பட்ட பழக்கத்தால் சூர்யா தனது குடும்பத்துடன் ஆத்துப்பாக்கம் கிராமத்துக்கு குடி பெயர்ந்து தெரியவந்துள்ளது. இந்தக் கொலை சம்பவத்தால் அக்கரைப்பாக்கம் ஏரியில் சவுடு மண் குவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது பிரச்சினையால் இப்பகுதியில் பதட்டமும், பரபரப்பு நிலவுகிறது.

    கூத்தம்பூண்டி அருகே ஏரியில் மூழ்கி கூலித்தொழிலாளி பலியானார்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அருகே கூத்தம்பூண்டி அண்ணமார்கோவில் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 50). கூலித ்தொழிலாளி. இவரது குடும்பத்தினர் மும்பையில் வசித்து வருகின்றனர். பழனி சற்று மனநிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் அவர் மும்பையில் இருந்து கூத்தம் பூண்டியில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணிக்கம்பாளையம் சென்று விட்டு வருவதாகக் கூறிச் சென்ற பழனி திரும்ப வீட்டுக்கு வரவில்லை.
     
    பல இடங்களில் தேடி பார்த்தும் அக்கம்பக்கத்தில் விசாரித்தும் எங்கும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று  மாணிக்கம்பாளையம் ஏரி பகுதிக்கு சென்றவர்கள் ஒரு ஆண் பிரேதம் இறந்து கிடப்பதைப் பார்த்துள்ளனர். 

    இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

    போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை செய்ததில் இறந்து கிடந்தவர் பழனி என்று தெரியவந்தது. அவர் ஏரியில் குளிக்க சென்றபோது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். 

    இதையடுத்து பழனியின் உடலை போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×