search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kaanum pongal"

    • சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் போலீஸ் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டது
    • கூட்ட நெரிசலில் மாயமாகும் குழந்தைகள், முதியோர்கள் பற்றி உடனடியாக புகார்கள் தெரிவித்து, அவர்களை கண்டுப்பிடிப்பதற்கு, போலீஸ் உதவி மையங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.

    சென்னை:

    சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் போலீஸ் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டது. கடற்கரை மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் 28 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. மெரினா கடற்கரை மணற்பரப்பில் 4 இடங்களில் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் போலீஸ் உதவி மையம் நிறுவப்பட்டது.

    இவற்றின் பயன்பாட்டை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். அப்போது அவர், மெரினா கடற்கரையில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஒளிரும் ஜாக்கெட்டுகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, இணை கமிஷனர்கள் சிபி சக்ரவர்த்தி, திஷா மிட்டல், துணை கமிஷனர்கள் பி.மகேந்திரன், ரஜத் சதுர்வேதி, ரோகித்நாதன் ராஜகோபால், தேஷ்முக் சேகர் சஞ்சய், உதவி கமிஷனர் பாஸ்கர் உள்பட போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    பின்னர், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மெரினா கடற்கரை மணற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள சோலார் உதவி மையம் பொதுமக்கள் இரவு நேரங்களிலும் எளிதில் அடையாளம் கண்டு அவசர உதவியை பெற முடியும். பண்டிகை காலங்களில் கூட்டம் அதிகம் இருக்கும் நேரத்தில், பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும். அவசர தேவைக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.

    கூட்ட நெரிசலில் மாயமாகும் குழந்தைகள், முதியோர்கள் பற்றி உடனடியாக புகார்கள் தெரிவித்து, அவர்களை கண்டுப்பிடிப்பதற்கு, இந்த போலீஸ் உதவி மையங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.

    காணும் பொங்கலை முன்னிட்டு (17-ந் தேதி) மெரினா கடற்கரையில் மட்டும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 9 நவீன டிரோன்கள் வாயிலாகவும் கண்காணிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆயுதப்படை போலீசார் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கலந்துகொண்டார். மேலும் அவர், கொச்சின் ஹவுஸ் போலீஸ் குடியிருப்பு, பரங்கிமலை ஆயுதப்படை மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற்ற பொங்கல் விழாவிலும் பங்கேற்று சிறப்பித்தார்.

    கிராமிய மனம் கமழும் வகையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன.

    • பொங்கலுக்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் மக்கள் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    • மெரினா கடற்கரையில் காணும் பொங்கல் நாளில் சுமார் ஒரு லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை முதல் தேதியில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    தை ஒன்றாம் தேதி பொங்கல் கொண்டாட்டமும் இரண்டாவது நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டமும் களைகட்டும்.

    மூன்றாவது நாள் காணும் பொங்கலாக மக்கள் சுற்றுலா தலங்களில் ஒன்று கூடி மகிழ்வார்கள்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவித கொண்டாட்டங்களும் பெரிய அளவில் நடைபெறவில்லை. அந்த வகையில் காணும் பொங்கல் கொண்டாட்டத்திற்கும் தமிழகம் முழுவதும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பொங்கலையொட்டி வரும் காணும் பொங்கல் கொண்டாட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு தைப்பொங்கலை வரவேற்க மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு தயாராகி வருகிறார்கள். வருகிற 15-ந் தேதி தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

    பொங்கலுக்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் மக்கள் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் கடைவீதிகளில் மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. பொங்கல் தினத்தன்று வீடுகளில் பொங்கல் வைத்து சூரியனை வழிபடும் மக்கள் மறுநாள் 16-ந் தேதி மாட்டுப் பொங்கலை கொண்டாடி மகிழ்வார்கள். வீடுகளில் உள்ள மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளில் வர்ணம் தீட்டி மாட்டுப் பொங்கலையும் உற்சாகமாகக் கொண்டாடுவார்கள்.

    மூன்றாவது நாளான 17-ந்தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுவதையொட்டி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காணும் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட மக்கள் இப்போதே ஆவலுடன் உள்ளனர்.

    சென்னையில் காணும் பொங்கல் கொண்டாட்டம் மெரினா கடற்கரையில் மிகுந்த உற்சாகத்தோடு இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது.

    இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மெரினா கடற்கரைக்குட்பட்ட அண்ணா சதுக்கம் மற்றும் மெரினா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள உரிய அறிவுரைகளை உயரதிகாரிகள் வழங்கி உள்ளனர்.

    மெரினா கடற்கரை மட்டுமன்றி சென்னையில் உள்ள சிறிய மாநகராட்சி பூங்காக்கள் முதல் பெரிய பூங்காக்கள் வரை அத்தனை பூங்காக்களிலும் மக்கள் கூட்டம் காணும் பொங்கல் அன்று அலைமோதும்.

    கிண்டி சிறுவர் பூங்காவிலும் பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இதனை கருத்தில் கொண்டு சென்னை மாநகரம் முழுவதும் 16 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்தந்த பகுதிகளை சேர்ந்த துணை கமிஷனர்கள் உதவி கமிஷனர்கள் ஆகியோருக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மெரினா கடற்கரையில் காணும் பொங்கல் நாளில் சுமார் ஒரு லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அன்றைய தினம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மெரினா கடற்கரைக்கு சென்று பொழுதை போக்குவார்கள்.

    காணும் பொங்கல் அன்று மாலை 6 மணியில் இருந்தே மக்கள் மெரினாவில் கூடத் தொடங்கி விடுவார்கள். இரவு 9 மணி அளவில் கட்டுக்கடங்காத வகையில் கூட்டம் காணப்படும். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் கொள்ளையர்கள் யாரும் கைவரிசை காட்டி விடக்கூடாது என்பதற்காக மாறுவேடத்திலும் போலீசார் கண்காணிக்க உள்ளனர். பைனாகுலர் மூலமாக கூட்டத்தை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக கடற்கரை மணல் பகுதிகளில் சுமார் 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. அதில் இருந்தபடியே போலீசார் கூட்டத்தை கண்காணிக்க உள்ளனர். குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் மெரினா கடற்கரையில் சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை ஒன்றும் தற்காலிகமாக திறக்கப்பட உள்ளது.

    அதில் இருந்தபடியே காவல் துறையினர் ஒலி பெருக்கி மூலமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க உள்ளனர்.

    பொங்கல் பண்டிகை நாளில் இருந்தே மெரினா கடற்கரையில் மக்கள் பொழுதைப் போக்க திரளாக கூடுவார்கள் என்பதால் 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதை அடுத்து வருகிற 14-ந் தேதி சனிக்கிழமை மாலையில் இருந்தே மெரினாவில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட உள்ளது. இதேபோன்று பொங்கலை ஒட்டி மக்கள் கூடும் பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

    • காணும் பொங்கலையொட்டி களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் வருகிற ஜனவரி 11-ந் தேதி முதல் தலையணையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட உள்ளது.
    • காணும் பொங்கல் கொண்டாட வருவோர் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. வனப்பகுதியில் கூச்சல் எழுப்பக் கூடாது, வனத்துறை விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.

    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காணும் பொங்கலை யொட்டி களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் வருகிற ஜனவரி 11-ந் தேதி முதல் தலையணையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட உள்ளது.

    காணும் பொங்கல் கொண்டாட வருவோர் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. வனப்பகுதியில் கூச்சல் எழுப்பக் கூடாது, வனத்துறை விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டில்கள், கத்தி, அரிவாள் போன்றவைகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தலையணை சோதனை சாவடியில் யாரேனும் தடை செய்யப்பட்ட பொருட்களுடன் பிடிபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காலை 8 மணி முதல் மாலை 4-30 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும். சுற்றுலா பயணிகள் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும்.

    அசம்பாவிதங்களை தடுக்க கூடுதல் வனத் துறையினர், போலீசார், என்.சி.சி மாணவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தலையணையில் வாகன நெரிசல்களை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைவரும் குளிப்பதற்கு ஏதுவாக சுற்றுலா பயணிகள் குளிக்க குறிப்பிட்ட நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படும். அனுமதி இல்லாமல் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைவோர் வன பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நெல்லிக்குப்பம் அருகே காணும் பொங்கலையொட்டி மது குடிக்கும் தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ளது கீழ்அருங்குணம். இந்த பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 35). இவர் அண்ணா கிராமம் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சி செயலாளராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (50). அ.தி.மு.க. பிரமுகர்.

    இவர்கள் 2 பேருக்கும் இடையே தேர்தலையொட்டி முன்விரோதம் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருபிரிவுகளாக பிரிந்து அடிக்கடி மோதி வந்தனர்.

    காணும் பொங்கலையொட்டி நேற்று இரவு தாமோதரன் தரப்பினரும், சுபாஷ் தரப்பினரும் தனித்தனியாக மது குடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்களுக்கிடையே திடீரென்று வாய்த் தகராறு ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது. இருதரப்பினரும் கத்தி, கம்பு, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொண்டனர்.

    இந்த தாக்குதலில் தாமோதரன் தரப்பை சேர்ந்த தங்கவேல் (37), முத்துக்குமரன் (30), சுபாஷினி (10), ஞானவேல் (21) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    சுபாஷ் தரப்பை சேர்ந்த மணிகண்டன், சேதுபதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் 6 பேரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த தங்கவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மணிகண்டனை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த மோதல் சம்பவம் தொடர்பாக நெல்லிக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கட லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையில் நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் 30-க்கும் மேற்பட்ட போலீசார் கீழ்அருங்குணம் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக நெல்லிக்குப்பம் போலீசார் 10 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆட்டு இறைச்சியை சமைத்து சாப்பிட்ட தாய்-மகள் பலியான சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள திருநாளூர் வடக்கு பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 40). இவரது மனைவி தாமரை செல்வி (33). இவர்களது மகள் தர்ஷினி (12). சேகரும், தாமரைசெல்வியும் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர்.

    இதனால் தர்ஷினி, புதுக்கோட்டை மாவட்டம் ஆவனத்தான்கோட்டையில் உள்ள அவரது பாட்டி பானுமதி வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தாமரைச்செல்வி அவரது தாய் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று காணும் பொங்கலையொட்டி ஆட்டு இறைச்சி வாங்கி சமைத்து சாப்பிட்டனர். அதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் தாமரைசெல்விக்கும், தர்ஷினிக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சியடைந்த பானுமதி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இருவரையும் அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.


    இருப்பினும் சிகிச்சை பலனின்றி தர்ஷினி இறந்தாள். தாமரைசெல்விக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் , மகள் இறந்ததை அறிந்து கதறி துடித்தார்.

    தர்ஷினி உடலை அவரது உறவினர்கள் வீட்டிற்கு கொண்டு சென்றனர். அப்போது தாமரைச்செல்வியும் உடன் சென்றார். போகும் வழியில் திடீரென தாமரைச் செல்வியும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தாய்-மகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவில்லை. ஆட்டு இறைச்சியை சமைத்து சாப்பிட்ட பிறகே இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட் டுள்ளது. மேலும் தலைக்கறியை சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

    இதனால் ஆட்டு இறைச்சியை விற்பனை செய்த வியாபாரி பழைய இறைச்சியை விற்பனை செய்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்ததா? அல்லது ஏதாவது கலப்படம் செய்யப்பட்ட ஆட்டு இறைச்சியை வாங்கி சாப்பிட்டதன் காரணமாக இறந்தனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்காக அவர்கள் சமைத்து சாப்பிட்ட ஆட்டு இறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். அதன் முடிவில் இந்த சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. ஆட்டு இறைச்சியை சமைத்து சாப்பிட்ட தாய்-மகள் பலியான சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பொங்கல் பண்டிகை மறு நாளான கரிநாள் அன்று அறந்தாங்கி பகுதியில் ஆட்டு இறைச்சி அதிக அளவில் விற்பனையானது. பொதுமக்கள் பலர் போட்டி போட்டு வாங்கினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வியாபாரிகள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஆட்டு இறைச்சியை, புதிதாக வெட்டப்பட்ட ஆட்டு இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்திருக்கலாம் என போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்த அறந்தாங்கி பகுதியில் உள்ள ஆட்டு இறைச்சி கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    சென்னையில் காணும் பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மெரினா கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் 5 லட்சம் மக்கள் திரண்டனர். #KaanumPongal
    சென்னை:

    பொங்கல் பண்டிகை கடந்த செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. அதற்கு மறுநாள் புதன்கிழமை, விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

    நேற்று காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காணும் பொங்கலையொட்டி மக்கள் சுற்றுலா தலங்களுக்கும், பொழுதுபோக்கு மையங்களுக்கும் சென்று மகிழ்ச்சியுடன் பொழுதை கழிப்பது வழக்கம். அதன்படி நேற்று கடற்கரை, பூங்கா போன்ற இடங்களுக்கு சென்று மக்கள் காணும் பொங்கலை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடினார்கள்.

    சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரைகள், கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா, பொருட்காட்சி ஆகிய இடங்களுக்கு நேற்று காலை முதலே குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து குவிய தொடங்கினார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து கார், வேன், பஸ், மாட்டுவண்டி, மோட்டார் சைக்கிள்களில் படையெடுத்து வந்தனர்.

    இதனால் அந்த இடங்களில் கொண்டாட்டம் களை கட்டியது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அதை போக்குவரத்து போலீசார் சரிசெய்தனர்.

    சுற்றுலாதலங்களில் 5 லட்சம் பேர் திரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மெரினா கடற்கரைக்கு மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்திருந்ததாக அவர்கள் கூறினார்கள்.

    மெரினா கடற்கரைக்கு அதிக அளவில் மக்கள் வருவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். மெரினா கடற்கரையில் மட்டும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டு இருந்தனர்.

    அதுமட்டுமில்லாது 13 உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து, பொதுமக்களை கண்காணித்தனர். கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால், மெரினா கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதை கண்காணிக்கவும் போலீசார் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். அவர்கள், தடையை மீறி குளிக்க முயன்றவர்களை கண்டித்தும், எச்சரிக்கை செய்தும் அனுப்பினர்.

    மெரினா கடற்கரையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் பெற்றோருடன் வந்திருந்த சிறுவர்-சிறுமிகளுக்கு போலீசார் கையில் அடையாள ‘பேட்ஜ்’ அணிவித்தனர். அதில் குழந்தை மற்றும் பெற்றோரின் பெயர், செல்போன் எண் எழுதப்பட்டு இருந்தது. கூட்டத்தில் சிறுவர்-சிறுமிகள் காணாமல் போனால் அடையாளம் காண்பதற்கு இது பெரும் உதவியாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    கடற்கரை மணற்பரப்பில் இருந்த ராட்டினங்களில் விளையாடுவது, சிற்றுண்டி கடைகளில் சாப்பிடுவது என மக்கள் பொழுதை மகிழ்ச்சியுடன் கழித்தனர். குடும்பமாக வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் சாப்பாடு கொண்டு வந்து வட்டமாக அமர்ந்து உணவு பரிமாறி சாப்பிட்டதையும் பார்க்க முடிந்தது.

    இதேபோல், பெசன்ட்நகர், திருவான்மியூர் கடற்கரைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் கடற்கரை மணற்பரப்பில் கோ-கோ, கண்ணாமூச்சி போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.

    கிண்டி சிறுவர் பூங்காவுக்கு காலை 8 மணி முதல் ஏராளமானோர் வேன்கள், மோட்டார் சைக்கிள்களில் கூட்டம் கூட்டமாக வந்தனர்.

    பிளாஸ்டிக் தடையை அரசு அமல்படுத்தி இருப்பதால், கிண்டி சிறுவர் பூங்காவுக்குள் பிளாஸ்டிக் பைகளை கொண்டு செல்ல தடை விதித்து, அதற்கு மாற்றாக பேப்பர் கவர்களை வழங்கி, அதில் பொருட்களை வைத்து கொண்டு செல்ல வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    சிறுவர் பூங்காவில் இருந்த ஊஞ்சல், சறுக்கல்கள் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களில் குழந்தைகள் ஏறி உற்சாகமாக விளையாடினார்கள். பூங்காவில் கூண்டுக்குள் இருந்த வன விலங்குகள், பறவைகளை கண்டு ரசித்தனர். பிற்பகல் நேரத்தில் குடும்பத்துடன் வந்திருந்தவர்கள் மரங்களின் நிழலில் இளைப்பாறி, தாங்கள் கொண்டு வந்திருந்த உணவுகளை பரிமாறி உண்டு மகிழ்ந்தனர்.

    வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சென்னை மட்டுமல்லாது திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் இருந்து பஸ், வேன், கார், மோட்டார் சைக்கிள்களில் ஏராளமானோர் வந்திருந்தனர். வழக்கத்தைவிட முன்னதாகவே வண்டலூர் உயிரியல் பூங்கா நேற்று திறக்கப்பட்டது. பஸ், வேன், கார், மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

    உயிரியல் பூங்காவில் உள்ள குரங்குகள், புலி, சிங்கம், யானை, நீர் யானை, ஒட்டகச்சிவிங்கி உள்ளிட்ட வன விலங்குகளை மக்கள் கண்டு மகிழ்ந்தனர். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் வனத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

    சென்னை நுங்கம்பாக்கம், கதீட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்கா, கிண்டி காந்தி மண்டபம், காமராஜர் நினைவு மண்டபம் மற்றும் மாநகராட்சி பூங்காக்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சிலர் திரையரங்குகள், தனியார் பொழுதுபோக்கு பூங்காக்களிலும் பொழுதை கழித்தனர்.

    சென்னை தீவுத்திடலில் தமிழக அரசின் சார்பில் நடைபெற்று வரும் சுற்றுலா பொருட்காட்சியிலும் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். குடும்பத்துடனும், உறவினர்களுடனும் பொருட்காட்சியை பார்க்க வந்திருந்தவர்கள், அங்கிருந்த பல்வேறு வகையான ராட்டினங்களில் ஏறி குதூகலம் அடைந்தனர்.

    மாமல்லபுரத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.

    கடற்கரை, சுற்றுலா தலங் களை போலவே கோவில்களிலும் நேற்று மக்கள் கூட்டம் காணப்பட்டது. சென்னையில் உள்ள பல்வேறு வழிபாட்டு தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    கடற்கரை, சுற்றுலாதலங்கள், பூங்காக்கள் மற்றும் கோவில்களுக்கு எளிதில் சென்று வரும் வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அதன் மூலம் மக்கள் எவ்வித சிரமும் இல்லாமல் பயணத்தை எளிதாக மேற்கொண்டனர்.

    சென்னையைப் போல் திருச்சி, ஈரோடு, மதுரை, தஞ்சை, கன்னியாகுமரி போன்ற ஊர்களிலும் மக்கள் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு சென்று காணும் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். #KaanumPongal
    கொடைக்கானலில் இன்று காணும் பொங்கலையொட்டி நேற்று மதியம் முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
    கொடைக்கானல்:

    தமிழகத்தில் தற்போது பொங்கல் பண்டிகையை யொட்டி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சுற்றுலா இடங்களுக்கு சென்று வருகின்றனர். மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தற்போது தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

    இன்று காணும் பொங்கல் என்பதால் குடும்பத்துடன் பல்வேறு இடங்களுக்கு பொதுமக்கள் சென்று வந்தனர். கொடைக்கானலில் கடும் குளிர் நிலவியபோதும் கூட்டம் அலைமோதியது. இதனால் முக்கிய சுற்றுலா இடங்களான மோயர்பாயிண்ட், தூண்பாறை, கோக்கர் ஸ்வாக், பைன்பாரஸ்ட், குணாகுகை, பிரையண்ட் பூங்கா ஆகிய இடங்களில் மக்கள்வெள்ளம் அலைமோதியது.

    மேலும் நகரின் மத்தியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் ஆனந்தமாக படகுசவாரி செய்தனர். மேலும் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்து சிறுவர்கள் மகிழ்ந்தனர்.

    நேற்று மதியம் முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இன்றும் வாகனங்கள் அதிகளவில் வந்ததால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் விரைந்து சென்று சீரமைத்தனர். நீண்டநாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகையால் வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சென்னை தீவுத்திடலில் அரசு பொருட்காட்சிக்கு இதுவரையில் 1 ¼ லட்சம் பேர் கண்டு களித்துள்ளனர். இன்று காணும் பொங்கலையொட்டி கூட்டம் நிரம்பி வழிகிறது. #KaanumPongal
    சென்னை:

    சென்னை தீவுத்திடலில் அரசு பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 9-ந் தேதி தொடங்கிய பொருட்காட்சியில் சிறுவர்களை கவரும் விளையாட்டு சாதனங்கள், மத்திய, மாநில அரசுகளின் அரங்குகள், நூற்றுக்கணக்கான ஸ்டால்கள் இடம் பெற்று உள்ளன.

    தாமதமாக தொடங்கப்பட்ட பொருட்காட்சி பொங்கல் விடுமுறையை யொட்டி களைகட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக கூட்டமின்றி காணப்பட்ட பொருட்காட்சியில் பொங்கல் முதல் கூட்டம் கூடியது.

    நேற்று மாட்டு பொங்கல் ஒரே நாளில் மட்டும் 60 ஆயிரம் பேர் பொருட்காட்சியை கண்டுகளித்தனர். இதுவரையில் 1 ¼ லட்சம் பேர் பொருட்காட்சிக்கு வந்துள்ளனர்.

    இன்று காணும் பொங்கலையொட்டி கூட்டம் நிரம்பி வழிகிறது. குடும்பம், குடும்பமாக பொருட்காட்சிக்கு படையெடுக்க தொடங்கினர். புதுமண தம்பதிகள், காதல் ஜோடிகள் என பிற்பகல் முதல் கூட்டம் கூட தொடங்கியது. இன்று சுமார் 1 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பொருட்காட்சியில் சிறுவர்களை கவரும் ராட்டினங்கள், விளையாட்டு சாதனங்கள் அதிகம் உள்ளதால் அதில் சிறுவர்களை அமர்த்தி பெற்றோர்கள் மகிழ்வித்தனர். எப்போதும் போல சோலா பூரி, பஜ்ஜி, அப்பளம் போன்ற உணவு கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொருட்காட்சி இன்னும் 2 மாதம் வரை நடைபெறுகிறது. #KaanumPongal
    காணும் பொங்கலையொட்டி மெரினா கடற்கரையில் மக்கள் வெள்ளமென திரண்டனர். சென்னை மாநகரம் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #KaanumPongal
    சென்னை:

    காணும் பொங்கல் கொண்டாட்டங்கள் இன்று தமிழகம் முழுவதும் களை கட்டியது.

    சென்னையில் மெரினா கடற்கரையில் மக்கள் வெள்ளமென திரண்டனர். காலையில் இருந்தே கார் மற்றும் மோட்டார்சைக்கிள்களில் கடற்கரையை நோக்கி மக்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர். சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து மினி லாரிகளிலும் மக்கள் வந்திருந்தனர்.

    ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலையொட்டி மெரினாவில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடி வருகிறார்கள்.

    இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்துடன் காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் மெரினாவில் திரண்டனர்.

    தங்களது வீடுகளில் இருந்து சமைத்து எடுத்து வந்திருந்த உணவுகளை கடற்கரை மணலில் ஒன்றாக அமர்ந்து அனைவரும் சாப்பிட்டனர்.

    சிறுவர்களும் பெரியவர்களும் பாரபட்சமின்றி கூடி விளையாடி மகிழ்ந்தனர். கடற்கரை மணலில் பலர் கபடி விளையாடினார்கள்

    கண்ணாமூச்சி ஆட்டம் மற்றும் பந்து எறிதல் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் ஈடுபட்டனர். இதனால் மெரினா கடற்கரையில் உற்சாகம் கரைபுரண்டது.

    காணும் பொங்கலையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர்கள், கமி‌ஷனர்கள் மகேஸ்குமார், தினகரன், இணை கமி‌ஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோரது மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவக் குழுவினர் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் 140 நீச்சல் தெரிந்த நபர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

    மணல் பரப்பில் 13 உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு கோபுரத்திலும் 3 போலீசார் பணியமர்த்தப்பட்டிருந்தனர். அங்கிருந்து பைனாகுலர் மூலம் கண்காணித்து வாக்கி-டாக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. கட்டுப்பாட்டறைக்கு வாக்கிடாக்கி மூலமும் வாட்சப் குழுவிலும் உடனுக்குடன் தகவல்கள் வழங்கினர். 3 பறக்கும் பொம்மை விமானத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

    12 முக்கியமான இடங்களில் அதிக ஒளி திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவை தற்காலிக கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கப்பட்டன.



    கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தடுப்பு வேலிகளை அமைத்து போலீசார் கண்காணித்தனர். ஆயுதப்படையின் குதிரைப் படையுடன் கூடுதலாக 16 குதிரைகள் மூலமும் கண்காணிக்கப்பட்டது.

    கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்காக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. அடையாள அட்டையில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர் மற்றும் பெற்றோர் கைபேசி எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டப்பட்டது.

    இதே போன்று பொதுமக்கள் அதிகம் கூடும் மற்ற இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள் மற்றும் இதர இடங்களிலும் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. #KaanumPongal

    காணும் பொங்கலை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி சுற்றுலா தலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்துடன் குவிந்தனர். #KaanumPongal
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் அதிகாலையிலேயே வாசல்களில் வண்ணக் கோலமிட்டு புதுப்பானையில் பொங்கலிட்டு கொண்டாடினர்.

    மேலும் பொங்கலுக்கு மறுநாள் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கிராமங்களில் பசு உள்ளிட்ட மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

    காணும் பொங்கலையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கடற்கரை பகுதிகள், சுற்றுலா தலங்களுக்கு மக்கள் சென்று கொண்டாடுவது வழக்கம். அதன்படி தூத்துக்குடி ராஜாஜி பூங்கா, ரோச் பூங்கா, முத்துநகர் கடற்கரை பூங்கா, துறைமுக கடற்கரை பூங்கா பகுதிகளுக்கு மக்கள் சென்றனர். மக்கள் அந்த பகுதிகளில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு விளையாடி மகிழ்ந்தனர்.

    சிறுவர்கள் பட்டங்களை பறக்கவிட்டு விளையாடினர். கடற்கரை மற்றும் பூங்காக்களையொட்டி 100-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த கடைகளில் தின்பண்டங்கள், சிறுவர்களுக்கு பிடித்தமான விளையாட்டு பொருட்கள் விற்பனை ஜோராக நடந்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் காணும் பொங்கலையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கடற்கரை பகுதிகள், சுற்றுலா தலங்களுக்கு மக்கள் தங்கள் குடும்பங்களுடன் சென்று நேரத்தை செலவழிப்பது வழக்கம். காணும் பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடியில் முயல் தீவு மற்றும் தெர்மல் நகர் கடற்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.

    காணும் பொங்கலை முன்னிட்டு மாவட்டம் முழுவதிலும் இருக்கும் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா உத்தரவின் பேரில், 1,800-க்கும் மேற்பட்ட போலீசார் மாவட்டம் முழுவதிலும் உள்ள சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    கூட்டம் அதிகமாக இருந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. குற்றங்களை தடுப்பதற்காக சாதாரண உடையிலும் போலீசார் வலம் வந்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களான குற்றாலம், பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய இடங்களிலும் ஏராளமான மக்கள் காணும் பொங்கலை கொண்டாடினார்கள். இப்பகுதியில் உள்ள பூங்காக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    களக்காடு தலையணையில் காணும் பொங்கல் கொண்டாட்டம் களை கட்டியது. இதையொட்டி நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் குடும்பத்தினர்களுடன் பச்சையாற்றில் குளித்தனர்.

    இந்தாண்டு புதியதாக அமைக்கப்பட்ட பூங்காவில் சிறுவர்கள் விளையாடினர். வனத்துறை சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்பட பொருட்கள் கொண்டு வருகிறார்களா? என கடும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் தற்காலிக வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தாண்டு முதல் முறையாக கழிவறை, குடிநீர் வசதி, உடை மாற்றும் அறைகள் உள்பட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

    களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனரும், தலைமை வன பாதுகாவலருமான அன்வர்தீன் உத்தரவின் பேரில் களக்காடு துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் ஆலோசனையின்படி வனசரகர்கள் புகழேந்தி, பாலாஜி முன்னிலையில் வனத்துறையினரும், களக்காடு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதுபோல களக்காடு தேங்காய் உருளி அருவி, பச்சையாறு அணை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம், கூட்டமாக குவிந்திருந்தனர். #KaanumPongal

    நாளை காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்ல வசதியாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 480 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. #KaanumPongal
    சென்னை:

    உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது, இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. நகர்ப்புறங்களை விட கிராமப் பகுதியில் மாட்டுப்பொங்கல் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    நாளை காணும் பொங்கல் தினத்தில் குடும்பமாக பொழுதுபோக்கு மையங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக அனுபவிப்பார்கள்.

    கூட்டு குடும்பமாகவோ, நண்பர்களாகவோ வீடுகளில் உணவினை சமைத்து பாத்திரங்களில் எடுத்து சென்று கூட்டமாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்வது வழக்கம்.

    சென்னையில் உள்ள பொழுதுபோக்கு மையங்களில் காணும் பொங்கல் தினத்தில் மக்கள் குவிந்து விடுவார்கள். சென்னை மக்களின் பொழுதுபோக்கு மையமாக இருப்பது மெரினா கடற்கரையாகும்.

    மோட்டார் சைக்கிள், கார்களில் இங்கு மக்கள் அதிகமாக வருவார்கள். ஏழை-எளிய மக்கள் மாநகர பஸ்களில் பயணம் செய்வார்கள். மெரினா தவிர அரசு பொருட்காட்சி, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, கோவளம், மகாபலிபுரம், பெசன்ட்நகர் கடற்கரை பகுதிகளுக்கும் செல்வார்கள்.



    மேலும் வி.ஜி.பி., எம்.ஜி.எம்., குயின்ஸ்லேண்ட் போன்ற பொழுதுபோக்கு மையங்களில் அதிகளவு கூடுவார்கள். பொதுமக்கள் பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்ல வசதியாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 480 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    சென்னை நகரின் அனைத்து பஸ் நிலையங்களில் இருந்தும் காணும் பொங்கலை கொண்டாடும் வகையில் கூடுதலாக பஸ்கள் விடப்படுகிறது.

    நாளை காலையில் இருந்து நள்ளிரவு வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பிராட்வே, கோயம்பேடு, மாதவரம், தாம்பரம், கே.கே.நகர், அடையார், ஆதம்பாக்கம், வடபழனி, அம்பத்தூர், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது. #KaanumPongal

    ×