search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லை"

    • திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அம்பாசமுத்திரத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார்.
    • அம்பாசமுத்திரத்தில் இருந்து, கார் மூலம் அகஸ்தியர் பட்டிக்கு பிரதமர் மோடி விரைந்தார்.

    பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி தமிழகத்தில் முதற்கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், போட்டிடும் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக பிரதமர் மோடி இன்று நெல்லை வந்தடைந்தார்.

    திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அம்பாசமுத்திரத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார்.

    பின்னர், அம்பாசமுத்திரத்தில் இருந்து, கார் மூலம் அகஸ்தியர் பட்டிக்கு பிரதமர் மோடி விரைந்தார்.

    நெல்லை அகஸ்தியர்பட்டி பிரசார பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    தொடர்ந்து, வணக்கம் என கூறி தமிழில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.

    • புதிய சிந்தனையோடு இந்தியாவோடு சேர்ந்து தமிழகமும் சிந்திக்கிறது.
    • காங்கிரசும், தி.மு.க.வும் நாட்டை பிளவுபடுத்தி வருகின்றன.

    நெல்லை:

    நெல்லையில் நடந்த பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

    நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு எனது நமஸ்காரங்கள். நாட்டுக்காக உழைக்க நெல்லையப்பர், காந்திமதி அம்மன் நல்லாசி தர வேண்டும். திருநெல்வேலி அல்வா போலவே நெல்லை மக்களும் மிகவும் இனிப்பானவர்கள். திருநெல்வேலி வந்துள்ளதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

    தமிழக மக்கள் பா.ஜ.க. மீது வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம். தமிழகத்திற்காக நான் அளித்த அத்தனை உறுதிமொழிகளையும் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். இது எனது உத்தரவாதம். பா.ஜ.க.வின் சமூக நீதி, நேர்மையான அரசியலை தமிழக மக்கள் கவனித்து வருகிறார்கள்.

    புதிய சிந்தனையோடு இந்தியாவோடு சேர்ந்து தமிழகமும் சிந்திக்கிறது. நாடு ஒரு புதிய சிந்தனையோடு செயல்பட்டு வருகிறது. இதன் பலன் தமிழகத்துக்கு கிடைக்கும்.

    புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகித்து வருகிறது. உலககெங்கிலும் வசிக்கும் தமிழ் மக்கள் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை நினைத்து பெருமைப்படுகிறார்கள். தமிழக மக்களின் அன்பு எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது.

    தமிழக மக்கள் எதிர்காலத்தை பற்றிய தெளிவுடன் இருப்பார்கள். அவர்கள் தொழில்நுட்ப அறிவில் மிகவும் சிறந்தவர்கள். இதுதான் தமிழகத்தை பா.ஜனதாவுடன் நெருக்கமாக்குகிறது. பா.ஜனதா கட்சியின் அணுகுமுறையும் சித்தாந்தமும் தமிழக மக்களின் எண்ணத்தோடு ஒத்துப்போகிறது.

    உலகெங்கிலும் வசிக்கும் தமிழக மக்கள் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை நினைத்து பெருமைப்படுகிறார்கள். இது மத்திய அரசின் செயல்பாடுகளால் வருகிறது. பா.ஜ.க. ஆட்சியில் தமிழகம் டெல்லிக்கு மிக அருகே வந்திருக்கிறது.

    5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 21 லட்சம் வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. இன்று 1 கோடியாக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தில் 40 லட்சம் மகளிருக்கு உஜ்வாலா எரிவாயு சிலிண்டர் கிடைக்கிறது. இதனால் எனக்கு தமிழகத்தில் பெண்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.

    இன்று நாடு 100 அடி முன்னேறுகிறது என்றால் தமிழகமும் மிக வேகமாக 100 அடி முன்னேறும். இது மோடியின் உத்தரவாதம்.

    தமிழகத்தில் 50 லட்சம் பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் இலவச மருத்துவ உதவி பெறுகிறார்கள். மக்கள் விருப்பத்திற்கு எதிராக மாநில அரசிடம் கணக்கு கேட்க வேண்டிய நேரம் இது. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை படுகுழியில் தள்ளி விட்டார்கள். நான் இதை தொடர விட மாட்டேன். இது மோடியின் உத்தரவாதம்.

    பல ஆண்டு காத்திருப்புக்கு பிறகு அயோத்தியில் குழந்தை ராமர் ஆலயம் அமைந்திருக்கிறது. அயோத்தி ராமர் கோவில் பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக மக்களிடம் நாங்கள் பாரபட்சம் காட்டவில்லை.

    காங்கிரசும், தி.மு.க.வும் நாட்டை பிளவுபடுத்தி வருகின்றன. தமிழகத்தில் இருந்து ஒருவரை நாங்கள் பாராளுமன்ற உறுப்பினராக்கி உள்ளோம். அவரை மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்வு செய்துள்ளோம்.

    தமிழகத்தின் மீது அதிக அன்பு எங்களுக்கு இருக்கிறது. கத்தாரில் இருந்து தண்டனை பெற்ற 8 முன்னாள் ராணுவ வீரர்களை இந்தியா அழைத்து வந்துள்ளோம்.

    எங்களுக்கு நாடுதான் முதலிடம், மக்கள்தான் முக்கியம். இது வலிமையான பாரதம், தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் விமானத்தில் விழுந்தார். அவரை ஒரு கீறல் கூட இல்லாமல் கூட்டிட்டு வந்தோம். இலங்கையில் 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தனர். அவர்களை மீட்டு வந்தோம்.

    நம் நாட்டு மக்கள் மீது யாரும் கை வைக்க முடியாது. ஏனென்றால் இங்கு இருப்பது மோடி. மோடியை மீறி யாரும் இந்தியன் மீது கை வைக்க முடியாது.

    தவறானவர்களை திருத்த வேண்டிய நேரம் இது. இந்த அரசுகளை மாற்ற வேண்டிய காலம் வந்து விட்டது. தி.மு.க. பொய் வேஷம் போடுகிறது. தி.மு.க. பிரித்தாளும் சூழ்ச்சியை செய்கிறது. இதை நாம் தெளிவாக பார்க்க முடிகிறது. ஆனால் இனி தி.மு.க.வை பார்க்க முடியாது. இனி தி.மு.க. இங்கு இருக்க முடியாது. ஏனென்றால் இங்கு அண்ணாமலை வந்து விட்டார். உங்கள் கூட அண்ணாமலை இருக்கிறார். இனி தி.மு.க.வை நீங்கள் எங்கு தேடினாலும் கிடைக்காது. தி.மு.க. இங்கு முற்றிலுமாக அகற்றப்படும்.

    நெல்லை, சென்னை வந்தே பாரத் ரெயில் மூலம் வணிகம் பெருகி இருக்கிறது. தமிழ்நாட்டில் இனி தி.மு.க. என்ற ஒரு கட்சி இருக்காது. அக்கட்சியின் வேஷம் விரைவில் கலையும்.

    மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநிலத்தில் உள்ள தி.மு.க. அரசு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. நெல்லை, தூத்துக்குடியில் சோலார் மின் உற்பத்தி நிலையம், காற்றாலை, விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும். ராமர் கோவில் விவகாரத்தில் தி.மு.க. வெறுப்பு அரசியலை பரப்பியது.

    தமிழ் வேறு, இந்தி வேறு என்னும் பிரித்தாளும் சூழ்ச்சியை தி.மு.க. கையாள்கிறது. இந்தி பேசும் மாநிலத்தில் இருந்து தமிழரான எல்.முருகனை பா.ஜனதா எம்.பி.யாக்கி உள்ளது.

    மத்திய அரசின் மீது குற்றம் சொல்வதை தி.மு.க. வேலையாக வைத்துள்ளது. அதையும் தாண்டி மக்களுக்கு நன்மை செய்துள்ளோம்.

    தனது குடும்ப வளர்ச்சியை தவிர மாநிலத்தின் வளர்ச்சியை தி.மு.க. கண்டு கொள்வதில்லை.

    தமிழக மாணவர்கள் மருத்துவம், பொறியியல் கல்வியை தாய் மொழியில் படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தென் தமிழக மக்களின் பிரச்சினைகளை பா.ஜ.க. நன்கு அறிந்துள்ளது. தங்கள் குடும்பத்தை வளர்ப்பதற்காகவே சிலர் ஆட்சிக்கு வர விரும்புகிறார்கள். என்ன வளர்ச்சி பணிகளை செய்ய போகிறோம் என அவர்களுக்கு எந்த திட்டமும் இல்லை.

    ஆட்சிக்கு வந்தால் யார் அமைச்சர் ஆவார்கள் என்ற திட்டம் மட்டும் அவர்களிடம் இருக்கிறது. தமிழ்நாடு எப்போதும் நாட்டுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறது. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தங்களுடைய குழந்தைகளின் நல்வாழ்வுக்கு பாடுபடுபவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

    இங்கு எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் வளர்ச்சிக்கான பாதையை வகுத்தார்கள். தங்கள் வாரிசுகளை முன்னிலைப்படுத்துவதை மட்டுமே சிலர் நோக்கமாக வைத்துள்ளனர்.

    தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது. அவ்வப்போது ஒரு சில வார்த்தைகளை தமிழில் பேசுகிறேன். ஆனால் முழுமையாக தமிழில் பேச முடியவில்லையே என்கிற வருத்தம் எனக்குள் இருக்கிறது.

    நான் என்ன பேசுகிறேன் என்று ஆர்வத்தோடு கேட்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு என்னுடைய 100 கோடி வணக்கம்.

    நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை 2 கை எடுத்து கும்பிடுகிறேன். தலைவணங்குகிறேன். நீங்கள் எனக்கு ஆசியும், வாழ்த்தும் கொடுக்க வேண்டும்.

    எதிர்க்கட்சி தலைவர்கள் கூட இன்று பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு வாக்காளரிடமும் நமது திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும். தமிழ்நாடு எனக்கு இத்தகைய ஆதரவு, ஆசீர்வாதம் தருவது எனது பாக்கியம்.

    ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தி.மு.க.வும், காங்கிரசும் சம்பாதிக்க நினைக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. வாரிசு அரசியலை முன்னெடுக்கிறது. குடும்ப அரசியலில் ஈடுபடுவோருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். நீங்கள் எவ்வளவு உழைக்கிறீர்களோ அதை விட அதிகமாக நான் உங்களுக்காக உழைப்பேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • பாஜக ஆட்சியில் தமிழகம் டெல்லிக்கு மிக அருகே வந்திருக்கிறது.
    • தமிழகத்தில் இன்று 40 லட்சம் மகளிருக்கு உஜ்வாலா எரிவாயு சிலிண்டர் கிடைக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழக மக்கள் பாஜகவின் பின்னே வர தொடங்கி உள்ளனர்.

    * பாஜக ஆட்சியில் தமிழகம் டெல்லிக்கு மிக அருகே வந்திருக்கிறது.

    * 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 21 லட்சம் வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. இன்று அது 1 கோடியாக உயர்ந்துள்ளது.

    * தமிழகத்தில் இன்று 40 லட்சம் மகளிருக்கு உஜ்வாலா எரிவாயு சிலிண்டர் கிடைக்கிறது.

    * உஜ்வாலா எரிவாயு சிலிண்டர் மூலம் தமிழக பெண்களின் வாழ்க்கை எளிதாகி உள்ளது. இதனால் எனக்கு தமிழகத்தில் பெண்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.

    * இன்று நாடு 100 அடி முன்னேறுகிறது என்றால், தமிழகமும் மிக வேகமாக 100 அடி முன்னேறும், இது மோடியின் உத்தரவாதம்.

    * தமிழகத்தில் 50 லட்சம் பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ உதவி பெறுகிறார்கள்.

    * மக்கள் விருப்பத்திற்கு எதிராக செயல்படும் மாநில அரசிடம் கணக்கு கேட்க வேண்டிய நேரம் இது.

    * உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை படுகுழியில் தள்ளிவிட்டார்கள்.

    * நான் இதை தொடர விட மாட்டேன். இது மோடியின் உத்தரவாதம்.

    * பல ஆண்டு காத்திருப்புக்கு பின் அயோத்தியில் குழந்தை ராமர் ஆலயம் அமைந்திருக்கிறது.

    * அயோத்தி ராமர் கோவில் பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

    * காங்கிரசும், திமுகவும் நாட்டை பிரிக்கின்றன.

    * தமிழகத்தில் இருந்து ஒருவரை நாங்கள் பாராளுமன்ற உறுப்பினராக்கி உள்ளோம். அவரை ம.பி.யில் இருந்து தேர்வு செய்துள்ளோம்.

    * தமிழகத்தின் மீது அதிக அன்பு எங்களுக்கு இருக்கிறது.

    * கத்தாரில் இருந்து தண்டனை பெற்ற 8 முன்னாள் ராணுவ வீரர்களை இந்தியா அழைத்து வந்துள்ளோம்.

    * மத்திய அரசுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. தவறானவர்களை திருத்த வேண்டிய நேரம் இது.

    * மோடியை மீறி இந்தியா மீது யாரும் கை வைக்க முடியாது.

    * தமிழகத்தில் தி.மு.க. இனி இருக்காது, எங்கு தேடினாலும் கிடைக்காது.

    * வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு, வளர்ச்சியடைந்த தமிழகம் மிக அவசியம்.

    * நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் மூலம் வணிகம் பெருகி இருக்கிறது.

    * நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய இடங்களில் சூரிய மின்சக்தி திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளன.

    * வளர்ச்சி திட்டங்கள் தமிழகத்தில் மிக வேகமாக செயல்பட்டு வருகிறது.

    * விருதுநகரில் பிரதம மந்திரி ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

    • பாஜக அரசு ஒரு நேர்மறையான சிந்தனையோடு செயல்படுகிறது.
    • தோளோடு தோள் நின்று நடைபோடுபவர்கள் தமிழர்கள்.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவரை பார்த்து தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.

    மேடையில் அண்ணாமலை, எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அமர்ந்துள்ளனர். பாஜக பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஜான் பாண்டியன், தேவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்றினார். "அனைவருக்கும் வணக்கம்" என தமிழில் கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார். அவர் கூறியதாவது:

    * அனைவருக்கும் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும்.

    * அல்வாவை போல நெல்லை மக்களும் இனிமையானவர்கள்.

    * தமிழ்நாட்டின் அனைத்து மக்களும் பாஜகவின் பக்கம் நிற்பதை நான் பார்க்கிறேன்.

    * பாஜக அரசு ஒரு நேர்மறையான சிந்தனையோடு செயல்படுகிறது.

    * தமிழக மக்களின் அன்பு எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது.

    * உங்களின் நம்பிக்கையை பாஜக நிச்சயம் நிறைவேற்றும் என்பது மோடியின் உத்தரவாதம்.

    * தோளோடு தோள் நின்று நடைபோடுபவர்கள் தமிழர்கள்.

    * பாஜக தான் தமிழகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய கட்சி.

    * மாற்று எரிசக்தி துறையில் உலகின் முதன்மையான நாடாக இந்தியா உள்ளது.

    * நாடு ஒரு புதிய எண்ணத்தோடு பணியாற்றி வருகிறது. இதன் பலன் தமிழகத்திற்கு கிடைக்கும்.

    * உலகெங்கிலும் வசிக்கும் தமிழ் மக்கள் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை நினைத்து பெருமைப்படுகிறார்கள்.

    * இது மத்திய அரசின் செயல்பாடுகளால் வருகிறது என்று கூறினார்.

    • நெல்லையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
    • பிரதமரை பார்த்து தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.

    நெல்லை:

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்லடம், மதுரை ஆகிய இடங்களில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இரவில் அவர் மதுரையில் தங்கினார்.

    இன்று மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தூத்துக்குடிக்கு புறப்பட்ட பிரதமர் மோடி, வ.உ.சி. துறைமுக வளாகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

    அங்கிருந்து பிரதமர் மோடி நெல்லை வந்தடைந்தார். காரின் படிக்கட்டில் நின்று தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு பிரதமர் மோடி சென்றார்.

    மோடி மோடி என உற்சாக கூச்சலிட்டு தொண்டர்கள் அவரை வரவேற்றனர். நெல்லையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

    நெல்லை பாளையங்கோட்டையில் பாஜக பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். பிரதமரை பார்த்து தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.

    மேடையில் அண்ணாமலை, எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அமர்ந்துள்ளனர். பாஜக பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஜான் பாண்டியன், தேவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    • போராட்டத்தில் ஈடுபட போவதாக கோவில் பக்தர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
    • பக்தர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு கருப்பந்துறை பகுதியில் பிரசித்தி பெற்ற அழியாபதி ஈஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த கோவிலுக்கு முன் பகுதியில் 39.52 சென்ட் நிலம் கோவில் நந்தவனமாக பயன் படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலம் சில நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நந்தவனம் பயன்பாட்டுக்கு இல்லாத நிலை உருவாகி இருப்பதாக அப்பகுதியினர் புகார் கூறினர்.

    இதனால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சுவாமி அழியாபதி ஈஸ்வரரிடம் விண்ணப்பம் செய்து பிரார்த்தனை செய்து போராட்டத்தில் ஈடுபட போவதாக கோவில் பக்தர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை அங்கு பக்தர்கள் பிரார்த்தனை போராட்டம் நடத்தப் போவதாக வந்த தகவலை அடுத்து நெல்லை சந்திப்பு போலீஸ் உதவி கமிஷனர் ராஜேஸ்வரன் தலைமையில் போலீசார் கோவில் வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.

    அப்போது பக்தர்கள் பிரார்த்தனை செய்ய கோவிலுக்கு வருகை தந்த நிலையில் கோவில் முன்பு ஒற்றை காலில் நின்றவாறு சிவ நாமம் பாடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நந்தவனத்தை மீட்க பிரார்த்தனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து பக்தர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது பிரார்த்தனையில் ஈடுபட்ட பக்தர்கள் தரப்பில், உடனடியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் மீட்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் நில அளவை பிரிவு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு பிரச்சனைக்குரிய இடம் அளவீடு செய்யப்பட்டது.

    தொடர்ந்து அரசு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட இடம் கோவில் நந்தவனம் என கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இன்னும் ஒரு சில நாட்களில் இடத்தை மீட்டு தருவது தொடர்பான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகளும், வருவாய் துறை அதிகாரிகளும் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பக்தர்கள் அங்கிருந்து தற்காலிகமாக கலைந்து சென்றனர்.

    இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில செயலாளர் குற்றாலநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் பிரம்மநாயகம், மாவட்ட துணைத்தலைவர்கள் செல்வராஜ், ராஜ செல்வம், மாவட்ட செயலாளர்கள் சுடலை, சுரேஷ், சங்கர், விமல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இரட்டை ரெயில்கள் செல்ல வசதியாக பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • வாகனங்கள் ஒழுகினசேரி செல்லாதவகையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு சாலை அடைக்கப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒரு சில இடங்களில் பணிகள் மேற்கொள்ள வேண்டியது உள்ளது. இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் ஒழுகினசேரியில் ரெயில்வே பாலம் பகுதியில் இரட்டை பாதை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழைய ரெயில்வே பாலத்தில் ஒரு ரெயில்கள் செல்ல வசதியாக மட்டுமே தண்டவாளம் உள்ளது என்பதால் பழைய பாலத்தை இடித்து விட்டு புதிதாக இரட்டை ரெயில்கள் செல்ல வசதியாக பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    புதிதாக பாலம் அமைப்பதற்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மேல் தளம் அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர். பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்தை மாற்றி விடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து இன்று (28-ந்தேதி) முதல் 20 நாட்கள் போக்குவரத்து மாற்றிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலை ஒழுகினசேரி பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.

    போக்குவரத்து மாற்றிவிடப் பட்டதையடுத்து போக்கு வரத்து போலீசார் ஒழுகினசேரி, புத்தேரி, அப்டா மார்க்கெட் பகுதிகளில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். வடசேரி பகுதியில் சாலைகள் பேரிகார்டுகளால் மூடப்பட்டுள்ளது. இதுபோல் அப்டா மார்க்கெட் பகுதியில் நெல்லையில் இருந்து வரும் 4 சக்கர வாகனங்கள் ஒழுகினசேரி செல்லாதவகையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு சாலை அடைக்கப்பட்டு உள்ளது.


    நெல்லையிலிருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் அப்டா மார்க்கெட் பகுதியில் இருந்து நான்கு வழிசாலை வழியாக திருப்பி விடப்பட்டது. அப்டா மார்க்கெட் நான்கு வழிச்சாலையில் இருந்து புத்தேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி வழியாக வடசேரிக்கு வந்தது. இதேபோல் வடசேரியில் இருந்து நெல்லைக்கு சென்ற வாகனங்களும் இதே பாதையில் இயக்கப்பட்டது. இதனால் வடசேரி அசம்பு ரோடு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அப்டா மார்க்கெட் பகுதியில் இருந்து வடசேரிக்கு வந்த இருசக்கர வாகனங்கள் ஒழுகினசேரி பாலத்தையொட்டியுள்ள சாலை வழியாக வந்தது.

    களியக்காவிளை, குளச்சல், மார்த்தாண்டம் பகுதியில் இருந்து வந்த 4 சக்கர வாகனங்கள் களியங்காட்டில் இருந்து இறச்சகுளம், புத்தேரி, அப்டா மார்க்கெட் வழியாக இயக்கப்பட்டது.

    இதே போல் இங்கிருந்து தக்கலை, திருவனந்தபுரம், களியக்காவிளை, குளச்சல் சென்ற வாகனங்களும் இதே பாதையில் இயக்கப்பட்டன. இதனால் அந்த சாலையிலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் என்ட் டூ என்ட் பஸ்கள் வழக்கமாக வரக்கூடிய நேரத்தை விட சிறிய நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது.

    இதே போல் மற்ற பஸ்களும் மாற்றுபாதை வழியாக இயக்கப்படுவதால் சிறிய நேரம் தாமதமாக வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்தது. பஸ்கள் புத்தேரி நான்கு வழிசாலை வழியாக திருப்பிடப்பட்டுள்ள நிலையில் நான்கு வழி சாலை இணைக்கும் பகுதியில் 100 மீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் தளம் அமைக்கப்படாமல் சாலை உள்ளது. இந்த சாலையில் கனரக வாகனங்களும் பஸ்களும் செல்லும் போது புழுதி காற்றால் புழுதி பறந்து வருகிறது.

    இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது. பஸ் போக்குவரத்து மாற்றப்பட்டதையடுத்து ஒழுகினசேரி பகுதியில் புதிய பாலம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டு உள்ளனர். அந்த பகுதியில் மணல் நிரப்பும்பணி, கேபிள் வயர்கள் மாற்றும்பணி, கம்பிகள் கட்டும்பணி உள்பட அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது.

    • ராணுவத்தில் பணியாற்றும் வாலிபர்கள் விமானத்தில் சொந்த ஊருக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர்.
    • ஊர்மக்கள் அனைவரும் பணத்தை சிறுக சிறுக சேமித்து விமானத்தில் பறக்க திட்டமிட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த வி.கே.புரம் அருகே தாட்டான்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயத்திலும், பெண்கள் பீடி சுற்றும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ராணுவம், காவல்துறை உள்ளிட்ட அரசு துறைகளிலும் வாலிபர்கள் சேவை புரிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இப்பகுதியை சேர்ந்த ராணுவத்தில் பணியாற்றும் வாலிபர்கள் விமானத்தில் சொந்த ஊருக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர். இதனால் தாட்டான்பட்டியில் வசிக்கும் பெண்களுக்கும் எப்படியாவது ஒரு முறையாவது விமானத்தில் நாமும் பறந்து செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டனர். ஆனால் அந்த ஆசை நீண்ட ஆண்டுகளாக கனவாகவே இருந்துள்ளது. அந்த கனவை நிறைவேற்றும் விதமாக ஊர்மக்கள் அனைவரும் பணத்தை சிறுக சிறுக சேமித்து விமானத்தில் பறக்க திட்டமிட்டனர்.

    அதன்படி கனவு நிறைவேறும் விதமாக பணத்தை சேமித்து வந்த கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு புனித சுற்றுலாவாக விமானம் மூலமாக கோவா புறப்பட்டனர். தொடர்ந்து அங்குள்ள சவேரியாரை இன்று காலை பார்வையிட்டனர். இதற்காக அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 134 பேர் விமானத்தில் பறந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அருளகம் பங்கு தந்தை எட்வர்ட் ராயன் தலைமையில் அருள்பால்துரை, அருளானந்தம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    முன்னதாக அவர்கள் ஊரில் இருந்து புறப்பட்டபோது, அங்குள்ள புனித அருளானந்தர் ஆலயம் முன்பு அருளகம் பங்கு தந்தை எட்வர்ட் ராயன் தலைமையில் கிராம மக்கள் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அனைவருக்கும் தனியாக அடையாள அட்டை, உடைமைகள் தொலைந்து விடாமல் இருக்க அனைவரது உடைகளிலும் சிவப்பு நிற துணி உள்ளிட்டவை அடையாளமாக வைத்து பல்வேறு திட்டமிடுதலுடன் சென்றனர்.

    இதுகுறித்து பங்கு தந்தை எட்வர்ட் ராயன் கூறுகையில், சிறு சிறு சேமிப்பு மூலமாக புனித பயணமாக சவேரியாரை தரிசனம் செய்ய உள்ளோம். எங்கள் கிராமத்தினர் நீண்ட ஆண்டுகளாக விமானத்தில் செல்ல வேண்டும் என கூறினர். அதனால் இந்த புனித சுற்றுலாவிற்கு விமானத்தில் சென்றுவிட்டு, ரெயிலில் ஊருக்கு திரும்ப உள்ளோம். சுமார் 10 ஆண்டுகளாக சிறு சிறு சேமிப்பு மூலமாக எங்கள் பணத்தில் செல்கிறோம். இதனால் எங்களது நீண்ட நாள் கனவு நிறைவேறி இருக்கிறது. இன்றும், நாளையும் என 2 நாட்கள் கோவாவில் தங்கி புனித சவேரியார் ஆலயத்தை சுற்றி பார்க்க உள்ளோம் என்றார்.

    • பாபநாசம் அணைக்கு வரும் நீரின் அளவு 883 கனஅடியாக அதிகரித்தது.
    • மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவி பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று காலையில் தொடங்கி இரவு வரையிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்தது.

    நெல்லையில் நேற்று மாலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது. அங்கு 5 மில்லி மீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 2 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.

    இதனால் பாபநாசம் அணைக்கு வரும் நீரின் அளவு 883 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 1,054 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 140.50 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணையில் 11 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    118 அடி கொண்ட மணி முத்தாறு அணை பகுதியில் நேற்று 14.50 மில்லிமீட்டர் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக அணை இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் 3-வது முறையாக நிரம்பியது.

    தாமிரபரணி ஆற்றில் உபரி நீர் 720 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் சாரல்மழை தொடர்ந்து பெய்து வந்தது. அங்கு 8.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. களக்காட்டில் 9.2 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 4 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    மாவட்டத்தில் நாங்குநேரி, அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. நாங்குநேரியில் அதிகபட்சமாக 12 மில்லி மீட்டரும், அம்பையில் 6 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. ராதாபுரத்தில் 3 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஊத்து, நாலுமுக்கு, மாஞ்சோலை, காக்காச்சி உள்ளிட்ட எஸ்டேட்டுகளிலும் தொடர்ந்து 2-வது நாளாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 12 மில்லி மீட்டரும், நாலுமுக்கில் 8 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 7 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் ராமநதி, கடனா நதி மற்றும் குண்டாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை நீடிக்கிறது. அதிகபட்சமாக கடனா நதியில் 7 மில்லி மீட்டரும், ராமநதியில் 6 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36 அடியை அடைந்து நிரம்பி வழிந்த வண்ணம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவி பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இன்று விடுமுறை தினத்தையொட்டி மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து குளித்து மகிழ்ந்து வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் தென்காசி மற்றும் சிவகிரியில் லேசான சாரல் அடித்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரன் பட்டினம், சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தலா 13 மில்லிமீட்டர் மழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 23 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருச்செந்தூரில் 1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    • ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தனி தீவுகளாக காட்சி அளித்தன.
    • தமிழக அரசு சார்பில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது.

    கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் அணைகள் நிரம்பியதால் சுமார் 1 லட்சம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தனி தீவுகளாக காட்சி அளித்தன. லட்சக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதைத்தொடர்ந்து வெள்ளத்தில் தவித்தவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.


    தமிழக அரசு சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.6 ஆயிரம், மற்றவர்களுக்கு ரூ.1000 என வழங்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.


    இந்நிலையில், நடிகர் பிரசாந்த், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் மழையால் பாதிக்கப்பட்ட 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வலம் வருகிறது. இதற்கு முன்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார்.

    • சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • காரைக்கால் பகுதிகளிலும் நேற்று (31.12.2023) முதல் ஜனவரி 6 ஆம் தேதி வரை (06.01.2024) லேசானது முதல் மிதமான மழை.

    காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவுவதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நேற்று (31.12.2023) முதல் ஜனவரி 6 ஆம் தேதி வரை (06.01.2024) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    இந்நிலையில், வடமேற்கு திசையில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • ஏற்கனவே ஜனவரி 2ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
    • நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பிற மின் நுகர்வோருக்கும் அவகாசம் பொருந்தும்.

    தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு மின் கட்டணத்தை அபராதம் இல்லாமல் செலுத்த வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    வரும் 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

    வீடு, வணிக பயன்பாடு, தொழிற்சாலைகள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பிற மின் நுகர்வோருக்கும் அவகாசம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் இரு மாவட்ட மக்களுக்கும் ஏற்கனவே ஜனவரி 2ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×