search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை அருகே காணும் பொங்கலில் ஆட்டிறைச்சி சாப்பிட்ட தாய்-மகள் ‘திடீர்’ பலி
    X

    புதுக்கோட்டை அருகே காணும் பொங்கலில் ஆட்டிறைச்சி சாப்பிட்ட தாய்-மகள் ‘திடீர்’ பலி

    ஆட்டு இறைச்சியை சமைத்து சாப்பிட்ட தாய்-மகள் பலியான சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள திருநாளூர் வடக்கு பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 40). இவரது மனைவி தாமரை செல்வி (33). இவர்களது மகள் தர்ஷினி (12). சேகரும், தாமரைசெல்வியும் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர்.

    இதனால் தர்ஷினி, புதுக்கோட்டை மாவட்டம் ஆவனத்தான்கோட்டையில் உள்ள அவரது பாட்டி பானுமதி வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தாமரைச்செல்வி அவரது தாய் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று காணும் பொங்கலையொட்டி ஆட்டு இறைச்சி வாங்கி சமைத்து சாப்பிட்டனர். அதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் தாமரைசெல்விக்கும், தர்ஷினிக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சியடைந்த பானுமதி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இருவரையும் அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.


    இருப்பினும் சிகிச்சை பலனின்றி தர்ஷினி இறந்தாள். தாமரைசெல்விக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் , மகள் இறந்ததை அறிந்து கதறி துடித்தார்.

    தர்ஷினி உடலை அவரது உறவினர்கள் வீட்டிற்கு கொண்டு சென்றனர். அப்போது தாமரைச்செல்வியும் உடன் சென்றார். போகும் வழியில் திடீரென தாமரைச் செல்வியும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தாய்-மகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவில்லை. ஆட்டு இறைச்சியை சமைத்து சாப்பிட்ட பிறகே இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட் டுள்ளது. மேலும் தலைக்கறியை சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

    இதனால் ஆட்டு இறைச்சியை விற்பனை செய்த வியாபாரி பழைய இறைச்சியை விற்பனை செய்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்ததா? அல்லது ஏதாவது கலப்படம் செய்யப்பட்ட ஆட்டு இறைச்சியை வாங்கி சாப்பிட்டதன் காரணமாக இறந்தனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்காக அவர்கள் சமைத்து சாப்பிட்ட ஆட்டு இறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். அதன் முடிவில் இந்த சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. ஆட்டு இறைச்சியை சமைத்து சாப்பிட்ட தாய்-மகள் பலியான சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பொங்கல் பண்டிகை மறு நாளான கரிநாள் அன்று அறந்தாங்கி பகுதியில் ஆட்டு இறைச்சி அதிக அளவில் விற்பனையானது. பொதுமக்கள் பலர் போட்டி போட்டு வாங்கினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வியாபாரிகள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஆட்டு இறைச்சியை, புதிதாக வெட்டப்பட்ட ஆட்டு இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்திருக்கலாம் என போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்த அறந்தாங்கி பகுதியில் உள்ள ஆட்டு இறைச்சி கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×