search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewellery robbery"

    • 8 வருடங்களுக்கு முன்பு சென்னை வேளச்சேரியில் வீட்டுமனை வாங்க ஒருவரிடம் மாத தவணையாக பணத்தை கட்டினேன்.
    • போலீஸ் நிலையங்களில் பொய்புகார் கொடுத்து என்மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்ய வைத்தார்.

    கோவை :

    அன்னூரில் சத்தி சாலையில் ஜெயகுமார் என்பவர் நகை கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த வாலிபர் ஒருவர், தான் வங்கியின் மேலாளர் என்று கூறி 2 பவுன் தங்க செயினை திருடி கொண்டு தப்பியோடிவிட்டார்.

    இதுகுறித்து அன்னூர் போலீசில் ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார், நகைக்கடைக்கு சென்று, அங்குள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர். அப்போது அதில் வாலிபரின் முகம் தெளிவாக பதிவாகி இருந்தது. இதையடுத்து, போலீசார் அதனை வைத்து அவரை தேடினர்.

    அன்னூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்த போது, அவர் சென்னையை சேர்ந்த ரவி என்ற சீசிங் ரவி(வயது 40) என்பதும், எம்.பி.ஏ. பட்டதாரி என்பதும் தெரியவந்தது. இவர் தான் அன்னூரில் நகைக்கடையில் நகையை திருடி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 பவுன் செயின் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    போலீசாரிடம் ரவி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் கோபி நீதிமன்றம் எதிரே உணவு கடை நடத்தி வந்தேன். 8 வருடங்களுக்கு முன்பு சென்னை வேளச்சேரியில் வீட்டுமனை வாங்க ஒருவரிடம் மாத தவணையாக பணத்தை கட்டினேன். ஆனால் அவர் மோசடி செய்து விட்டார்.

    சட்டப்படி நடவடிக்கை எடுக்க போவதாக அவரை எச்சரித்ததால் என்மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் பொய்புகார் கொடுத்தார். அதன்பேரில் என்மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்ய வைத்தார். இதனால் நான் சிறைக்கு சென்றேன். இதனால் மனைவி பிரிந்து செ்னறார். எனது வாழ்க்கையும் மாறிவிட்டது.

    சிறையில் இருந்தபோது, தேனியை சேர்ந்த ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகு 2 பேரும் ஒன்றாக வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டோம்.

    பின்னர் நான் 2-வது திருமணம் செய்து கொண்டேன். மீண்டும் கோபில் உணவகம் நடத்தினேன்.இதற்கிடையே எனது 2-வது மனைவி, மகன் நோயால் பாதித்ததால் சிகிச்சைக்காக வட்டிக்கு பணம் பெற்றேன். ஆனால் அதுவும் போதவில்லை. இதையடுத்து நகை திருடி சம்பாதிக்க ஆசைப்பட்டு, நகைக்கடையில் திருடினேன். அப்போது தான் சிக்கி கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆண்டிப்பட்டி அருகே வாலிபரை உல்லாசத்துக்கு அழைத்து அவரை தாக்கி நகை மற்றும் பணத்தை பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    கேரள மாநிலம் மூணாறு பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் அனீஸ் குமார் (வயது 25). இவர் கேரள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தற்காலிக தினக்கூலி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பெற்றோருடன் நாகர்கோவிலுக்கு சென்றார்.

    பின்னர் மீண்டும் அவர்கள் மூணாறு திரும்பிக் கொண்டு இருந்தனர். வரும் வழியில் அனீஸ்குமார் ஆண்டிப்பட்டியில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக இறங்கி விட்டார்.

    பஸ் நிலையம் அருகே நின்று கொண்டு இருந்தபோது 3 வாலிபர்கள் அவரிடம் வந்து அழகான பெண் உல்லாசத்துக்கு இருப்பதாகவும் பணம் கொடுத்தால் அவருடன் சந்தோசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

    அதனை நம்பி அனீஸ்குமார் அவர்களுடன் சென்றார். ரெயில்வே கேட் அருகே வந்ததும் திடீரென அவர்கள் அனீஸ்குமாரை பீர் பாட்டிலால் தாக்கினர். பின்னர் அவர் அணிந்திருந்த மோதிரம், செயின், செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்து அனுப்பி விட்டனர்.

    படுகாயங்களுடன் ஊருக்கு சென்ற அனீஸ்குமார் பின்னர் மீண்டும் திரும்பி வந்து ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்த கார்த்திக் (வயது 23), முல்லை நகரத்தைச் சேர்ந்த மனோ ஆனந்த் (32), போடியைச் சேர்ந்த மாரிமுத்து (24) ஆகிய 3 பேர் தான் அனீஸ்குமாரிடம் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்தது என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து கொள்ளையடித்த பொருட்களையும் பறிமுதல் செய்து அனீஸ்குமாரிடம் ஒப்படைத்தனர்.

    மாரிமுத்துவும், கார்த்தியும் ஆட்டோ டிரைவர்களாக உள்ளனர். அவர்களுடன் கூட்டு சேர்ந்த மனோ ஆனந்த் பல வழிப்பறிகளில் ஈடுபட்டு வந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டணத்தில் தொழில் அதிபர் வீட்டில் 31 பவுன் நகையை கொள்ளையடித்த டிரைவர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டணத்தில் உள்ள பிலால் நகரைச் சேர்ந்தவர் பசீர் என்ற சிங்கம் பசீர் (வயது 53). இவர் வெளிநாட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்து தொழில் செய்து வருகிறார்.

    பெரிய பட்டணத்தில் இவருக்கு சொந்தமான வீடு உள்ளது. தனது டிரைவர் மர்சூக் அலி என்பவரிடம் வீட்டின் பொறுப்பை கவனித்துக் கொள்ளுமாறு சிங்கம் பசீர் கூறிவிட்டு வெளிநாட்டில் தங்கியிருந்தார்.

    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிங்கம் பசீர் சொந்த ஊருக்கு வந்தார். அவர் வந்த நாளில் இருந்து டிரைவர் மர்சூக் அலி மாயமானார். அவரை தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லை.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த பொருட்களை சரிபார்த்தபோது, பீரோவில் இருந்த 31 பவுன் நகை மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து விசாரித்ததில், மர்சூக் அலி நகையை திருடி விற்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக திருப்புல்லாணி போலீசில் சிங்கம்பசீர் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி மர்சூக் அலி மற்றும் உடந்தையாக இருந்த செய்யது அபுதாகீர், அசன் மைதீன், முகமது பயாஸ்கான், பைசல் சர்புதீன், பாசிக் அலி, சாகுல் அமீது, சுலைமான் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    நொய்யல் அருகே வீட்டில் உள்ள பீரோவை உடைத்து 26 பவுன் நகை மற்றும் காரை திருடிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குறுக்குச்சாலையை சேர்ந்தவர் ராமசாமி (வயது 57). இவர் தனது மனைவியுடன் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றிருந்தர். பின்னர் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் மாயமாகியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்தார். வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 26 பவுன் தங்க நகைகளும் திருடப்பட்டிருந்தது. 

    இந்த சம்பவம் குறித்து உடனடியாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தனார். இன்ஸ் பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார் இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர். மேலும் மாயமான கார் குறித்த தகவல்கள் பிற மாவட்டங்களில் உள்ள போலீசாருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 

    இதற்கிடையில் மதுரையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சம்பந்தப்பட்ட காரை போலீசார் மடக்கினர். அந்த காரில் 3 வாலிபர்கள் இருந்னர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஆரப்பாளையத்தை சேர்ந்த பட்டறை சுரேஷ் (29) என்பது தெரியவந்தது.

    போலீசர் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த வினோத் (29), திருச்சி துவாக்குடியை சேர்ந்த டேவிட் (30) ஆகியோருடன் இணைந்து நொய்யல் குறுக்கு சாலையில் உள்ள வீட்டில் 26 பவுன் நகைகள், கார் ஆகியவற்றை திருடி வந்ததை ஒப்புக் கொண்டார். பின்னர் இன்ஸ்பெக்டர் வேலுசாமி மதுரை நீதிமன்றத் தில் மனுத்தாக்கல் செய்து பட்டறை சுரேசை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தார். மேலும் அவரிடம் இருந்த 26 பவுன் தங்க நகை யையும் மீட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள வினோத், டேவிட் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கோயம்பேட்டில் ஓடும் பஸ்சில் 2 பெண்ணிடம் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    போரூர்:

    சாலிகிராமம் மதியழகன் நகர் கே.கே. சாலையை சேர்ந்தவர் ஜெயகுமாரி (வயது40). இவர் தனது மகள் பிருந்தாவின் திருமணத்திற்காக நகை வாங்க ரூ. 40 ஆயிரம் பணம் மற்றும் வீட்டில் இருந்த 6 பவுன் நகைகளை எடுத்து கொண்டு அண்ணா நகரில் உள்ள நகைக் கடைக்கு மாநகர பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

    கோயம்பேடு 100அடி சாலை வந்தபோது நகை மற்றும் பணம் இருந்த பையை காணாமல் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்

    கூட்ட நெரிசலை பயன் படுத்தி பஸ்சில் வந்த மர்ம நபர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜெயகுமாரி கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் அளித்தார்.

    இதேபோல் பெருங்குடி கல்லுக்குட்டை அன்னை தெரசா தெருவைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (48). இவர் நேற்று நெற்குன்றத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார்.

    பின்னர் நெற்குன்றம் செல்லும் மினி பஸ்சில் ஏறி அமர்ந்தார். பஸ் கிளம்பி சிறிது தூரம் சென்றதும் தனது கைப்பை கிழிந்து கிடந்ததை நாகலட்சுமி கண்டார்.

    மர்ம நபர்கள் பையை கிழித்து அதிலிருந்த 5 பவுன் நகைகளை திருடி சென்றது தெரிந்தது. இது குறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவையில் வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து நர்சை படுகொலை செய்து 6 பவுன் நகையுடன் தப்பிய தம்பதியினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    கோவை:

    கோவை சவுரிபாளையம் அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் விஜய் ஆனந்தன். இவரது மனைவி மேரி ஏஞ்சலின் (வயது 70).

    இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி ஒருவர் சென்னையிலும், மற்றொருவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலும் வசித்து வருகிறார்கள்.

    விஜய்ஆனந்தன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேரி ஏஞ்சலின் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக அருகிலேயே மேலும் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி என அறிமுகப்படுத்திக் கொண்டு வீட்டுக்கு வந்த ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் மேரி ஏஞ்சலனிடம் வாடகைக்கு வீடு வேண்டும் என கேட்டு விசாரித்துள்ளனர்.

    பின்னர் நேற்று இரவு 9.30 மணிக்கு அந்த பெண்ணும், வாலிபரும் மீண்டும் வீட்டுக்கு வந்து மேரி ஏஞ்சலினிடம் வீட்டை பார்க்கவேண்டும் என கேட்டனர். உடனே மேரி ஏஞ்சலின் சாவியை எடுத்துக் கொண்டு வீட்டை காட்டுவதற்கு சென்றார்.

    வெகுநேரமாகியும் மேரி ஏஞ்சலின் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த விஜய் ஆனந்தன் அவரை தேடிச் சென்றார். அப்போது வீட்டுக்குள் மேரிஏஞ்சலின் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் செயின், 1 பவுன் கம்மல் என 6 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. அவர் வைத்திருந்த செல்போனையும் காணவில்லை.

    இதுகுறித்து தகவலறிந்ததும் குற்றப்பிரிவு துணை கமி‌ஷனர் பெருமாள், உதவி கமி‌ஷனர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    சம்பவஇடத்தின் அருகே சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட்டிருந்தது. இதில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    விஜய் ஆனந்தன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரால் சரியாக பேச முடியவில்லை. வீடு வாடகைக்கு வந்தவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது அவருக்கு தெரியவில்லை.

    கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை சேகரித்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்காநல்லூரில் தனியாக வசித்த மூதாட்டியை கொன்று ரூ.40 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது,

    இந்நிலையில் பீளமேட்டில் பெண்ணை கொன்று நகை கள் கொள்ளையடிக்கப்பட் டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    தஞ்சை திருமண மண்டபத்தில் மணப்பெண் அறையில் புகுந்து 60 பவுன் நகையை திருடிய மர்மநபர், போலீசாரை கண்டதும் நகையை போட்டுவிட்டு தப்பி சென்று விட்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை செல்வம் நகரில் ஒரு தனியார் திருமண மண்டபம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு தஞ்சையை சேர்ந்த மணப்பெண் வீட்டார் தங்கியிருந்தனர். இன்று காலை திருமணம் நடைபெற இருந்ததால் வெளியூரிலிருந்து வந்த மணப்பெண்ணின் உறவினர்களும் திருமண மண்டபத்தில் தங்கியிருந்தனர்.

    இந்த நிலையில் மணப்பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் மணப்பெண் தனது திருமணத்திற்கு செய்யப்பட்ட 60 பவுன் நகைகளை ஒரு பையில் வைத்து அதனை தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு தூங்கினார்.

    நள்ளிரவு மணப்பெண் அறைக்குள் புகுந்த கொள்ளையன் தலையணைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த 60 பவுன் நகையை எடுத்துக்கொண்டு தப்பி செல்ல முயன்றான்.

    அப்போது தண்ணீர் குடிப்பதற்காக எழுந்த மணப்பெண் உறவினர் ஒருவர் மர்மநபர் பையுடன் செல்வதை கண்டு திடுக்கிட்டார். அவர் சந்தேகமடைந்து திருடன்... திருடன் என்று சத்தம் போட்டார். இதை தொடர்ந்து மண்டபத்திலிருந்த உறவினர்கள் சிலர் எழுந்து வந்து மர்மநபரை விரட்டி சென்றனர்.

    இதுபற்றி தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். இதனை கண்ட மர்ம நபர் தன்னை பிடித்துவிடுவார்கள் என்று பயந்து கையில் வைத்திருந்த நகை பையை கீழே போட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டான். அதனை கைபற்றி போலீசார் மணப்பெண் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

    திருமண மண்டபத்தில் கொள்ளையன் புகுந்து 60 பவுன் நகையை திருடி செல்ல முயன்ற சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரையில் வீட்டின் கதவை உடைத்து 24 பவுன் மற்றும் ரூ.36 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    மதுரை:

    மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ் சரகத்திற்குட்பட்ட விராட்டிபத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி அழகுமீனா (வயது 41). இவர்களது மகள் அபிநயா கல்லூரி மாணவி. செல்வராஜ், கத்தார் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். மகளுடன் வசித்து வந்த அழகுமீனா, கடலாடியில் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். நேற்று காலை அபிநயா வீட்டை பூட்டிவிட்டு கல்லூரிக்குச் சென்றார். மாலையில் வீடு திரும்பிய அவர், கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தாயார் அழகுமீனாவுக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 24 பவுன் தங்க நகைகள், ரூ.36 ஆயிரம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில், அழகு மீனா புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை அருகே இளம்பெண்ணை மிரட்டி கல்லால் தாக்கி நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
    ராயக்கோட்டை:

    தருமபுரி மாவட்டம் தளவாய்அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி தேவி (வயது 20). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியில் உள்ள ஒரு கோவில் திருவிழாவிற்காக அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.

    நேற்று காலை தேவி காலை கடன் கழிப்பதற்காக வெளியே சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அம்பிகா என்பவர் அங்கு வந்து தேவியிடம் காதில், கழுத்தில் இருக்கும் நகைகளை கழட்டி கொடுக்குமாறு கேட்டார். அதற்கு தேவி கொடுக்க மறுத்தார். உடனே அம்பிகா அருகில் இருந்த கல்லை எடுத்து அவரை தாக்கினார். பின்னர் அவர் தேவியின் கழுத்தில், காதில் இருந்த ஒரு பவுன் நகைகளை பறித்துவிட்டு அவரை அருகில் உள்ள பள்ளத்தில் தள்ளிவிட்டு அம்பிகா அங்கிருந்து தப்பி சென்று விட்டார். 

    கல்லால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த தேவி வலியால் அலறினார். அவரது அலறல் சத்தம்கேட்டு உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவிக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.  

    இந்த சம்பவம் குறித்து தேவி உத்தனபள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் இளம்பெண்ணை மிரட்டி நகை பறித்துசென்ற அம்பிகா மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
    கடத்தூர் அருகே பட்டப்பகலில் ஆசிரியர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    கடத்தூர்:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் அருகே உள்ள ஒடசல்பட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது49). ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயமணி ஆசிரியை ஆவர்.

    இருவரும் வெவ்வேறு ஊர்களில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இருவரும் வேலைக்கு சென்ற நிலையில் அவர்களது மாமியார் ராஜேஸ்வரி, மாமனார் சுப்பிரமணி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு அருகில் இருந்த உறவினர்களின் வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர், வெளியே சென்றவர்கள் திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைக்கப்பட்டிருந்த சுமார் 17 பவுன் நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

    இது குறித்து கடத்தூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்துள்ள இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
    தொட்டியம் அருகே தலைமையாசிரியர் வீட்டில் 21 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூர் ஜவஹர் நகரை சேர்ந்தவர் சாமிதுரை ( வயது 80) , ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். சம்பவத்தன்று சாமிதுரை வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி லட்சுமியை அழைத்து கொண்டு நாமக்கல் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். 

    பின்னர் வந்து பார்த்த போது வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு தங்கசங்கிலி, வளையல், மோதிரம் உள்பட 21 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. 

    இது குறித்து சாமிதுரை கொடுத்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவையில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை வெள்ளலூர் எல்.ஜி.நகரை சேர்ந்தவர் நிர்மர்குமார். இவர் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் சிவில் சப்ளை பிரிவில் பணியாற்றி வருகிறார்.

    இவர் கடந்த 17-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டு, நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 26 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    கோவை ஒத்தகால்மண்டபம் வேலந்தாவளம் ரோடு பகுதியை சேர்ந்தவர் குட்டியப்பன்(வயது 59). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார். மறுநாள் திரும்பி வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 9 பவுன் நகை மற்றும் டி.வி. உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின்பேரில் செட்டிப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை கண்காணித்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். அந்த பகுயில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என பட்டியல் சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் திருட்டு நடந்த வீடுகளின் அருகே உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ×