search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Health Care"

    • பேரீச்சம் பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் இருக்கிறது
    • மதிய உணவு இடைவேளையின்போது பேரீச்சம் பழம் சாப்பிடலாம்.

    தினமும் மூன்று பேரீச்சம் பழங்களாவது சாப்பிட வேண்டும். அதன் மூலம் உடல் உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும். கல்லீரலை பலப்படுத்துவதில் பேரீச்சம் பழத்திற்கும் பங்கு இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதய நலனுக்கும் பேரீச்சம் பழம் இன்றியமையாதது. பக்கவாதம், மாரடைப்பு, கொழுப்பு போன்றவற்றை கட்டுப்படுத்தவும் உதவும்.

    பேரீச்சம் பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் இருக்கிறது. அது கண்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. மேலும் அதில் உள்ளடங்கி இருக்கும் லூடின், ஜியாசாந்தைன் போன்றவையும் பார்வை சக்தியை மேம்படுத்தும். தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களின் தாக்கத்தை குறைத்து கண்களுக்கு பாதுகாப்பு கவசமாகவும் செயல்படும். மதிய உணவு இடைவேளையின்போது பேரீச்சம் பழம் சாப்பிடலாம். அதில் கலந்திருக்கும் சர்க்கரை உற்சாகமாக செயல்பட வைக்கும்.

    பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்புகள், நட்ஸ் வகைகளையும் சேர்த்து சாப்பிடலாம். அவை மூளை சுறுசுறுப்புடன் செயல்பட வழிவகை செய்யும். விளையாட்டு வீரர்கள் தவறாமல் பேரீச்சம் பழம் சாப்பிட்டு வர வேண்டும். அது உடல் ஆற்றலை அதிகப்படுத்தும். செரிமானம் சீராக நடைபெறவும் பேரீச்சம் பழம் உதவும். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். உடல் வலி, வீக்கத்தை குறைக்கவும் பேரீச்சம் பழம் துணைபுரிகிறது. நோய் தொற்றுகளில் இருந்தும் உடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. நொறுக்கு தீனி பிரியர்கள் பேரீச்சம் பழம் சாப்பிடுவது நல்லது.

    • இந்தியன் டாய்லெட், வெஸ்டர்ன் டாய்லெட் இரண்டையும் பயன்படுத்துகிறவர்களும் உண்டு.
    • ஒவ்வொரு மனிதருக்கும் இது முக்கியமான பிரச்சினை.

    உலகில் கடந்த காலங்களில் எல்லா துறைகளிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. கற்பனைக்கு அப்பாற்பட்ட வளர்ச்சி பல துறைகளில் ஏற்பட்டிருந்தாலும், மனிதர்களின் அத்தியாவசிய தேவையான 'டாய்லெட்' வடிவமைப்பில் அப்படி பெரிய அளவில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லை என்பது உண்மை. ஏற்கனவே சொன்னதுபோல, உலகம் முழுவதும் டூ பாத்ரூம் அதாவது டாய்லெட் போக இரண்டே இரண்டு முறைகள்தான் இன்றைய தேதி வரை மிக அதிகமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    ஒன்று: கால் முட்டிகள் இரண்டையும் மடக்கி குத்தவைத்து இருந்து கொண்டு (SQUATTING POSITION) மலம் கழிப்பது. இதை 'இந்தியன் ஸ்டைல்' என்று சொல்வார்கள்.

    இரண்டு: நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போன்று உட்கார்ந்து கொண்டு மலம் கழிப்பது. இதை 'வெஸ்டர்ன் ஸ்டைல்' என்று சொல்வார்கள்.

    டாய்லெட் வசதி இல்லாத இடங்களிலும், டாய்லெட் அமைப்பு இல்லாத இடங்களிலும் குத்தவைத்து உட்கார்ந்திருந்து மலம் கழிக்கும் முறைதான் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, டாய்லெட்டை உபயோகப்படுத்துவது என்பது, ஒரு தனிப்பட்ட, அந்தரங்கமான விஷயமாகவே இன்றும் கருதப்படுகிறது. இந்திய ஜனத்தொகையில் குறிப்பிட்ட சதவீத மக்கள், இன்னும் கட்டாந்தரையிலும், வெட்ட வெளியிலும், இருள் மறைவிலும், ஆறு, குளம், ஏரி, வாய்க்கால் கரையோரங்களிலும், ஊருக்கு ஒதுக்குப்புறங்களிலும், உபயோகத்தில் இல்லாத நிலங்களிலும் தான் மல ஜலம் கழித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போன்று, உட்கார்ந்துகொண்டு மலம் கழிப்பது என்பது, மேலை நாடுகளில் ஆரம்பித்து, அங்கு தான் அதிகமாக உபயோகத்திலும் இருந்து வருகிறது. அதனால்தான் இதனை 'வெஸ்டர்ன் டாய்லெட்' என்கிறோம். நம்மவர்கள் முன்பெல்லாம் களைக்கும் அளவுக்கு உழைப்பவர்களாக இருந்தார்கள். அதனால் வயதான காலத்திலும் அவர்களால் குத்துக்காலிட்டு உட்கார முடிந்தது. இப்போது உடலுழைப்பு காணாமல்போய், மூளைக்கு அதிக வேலைகொடுத்து, மூட்டுகளை மடங்காத நிலைக்கு கொண்டு வந்திருக்கிறோம்.

    வயதானவர்கள், விபத்துகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆபரேஷன் செய்தவர்கள், நோய்வாய்ப்பட்டவர்களின் சவுகரியத்திற்காகத்தான் 'வெஸ்டர்ன் டாய்லெட்' அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்தியன் டாய்லெட், வெஸ்டர்ன் டாய்லெட் இரண்டையும் பயன்படுத்துகிறவர்களும் உண்டு. அதனால்தான் பொதுகழிப்பறைகள் மற்றும் ரெயில்களில் இரண்டுவிதமான டாய்லெட்டுகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தற்போது 'வெஸ்டர்ன் டாய்லெட்' பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    தானாகவே தண்ணீர் பீய்ச்சி சுத்தம் பண்ணும் 'WATER CLOSET' அமைப்பு 1880-ம் ஆண்டு பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு இந்த ஸ்டைல் பிரிட்டனிலிருந்து ஐரோப்பா முழுவதுக்கும் பரவியது. செயினால் இழுக்கும் வெஸ்டர்ன் டாய்லெட் அமைப்பு 1890-ல் அமெரிக்காவில் பணக்காரர்கள் வீட்டிலும், பிரபலமான ஓட்டல்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

    வெஸ்டர்ன் டாய்லெட்டில் மலம் கழிக்கும்போது உடலை கொஞ்சம் முன்பக்கமாக வளைத்தோ அல்லது முதுகை வளைக்காமல் 90 டிகிரியில் முதுகை நேராக வைத்துக்கொண்டோதான் நாம் உட்கார்ந்திருப்போம். உட்கார்ந்திருப்பதற்கு வேண்டுமானால் இது சவுகரியமாக இருக்குமே தவிர வயிறு சுத்தமாக காலியாகாது என்றுதான் சொல்லவேண்டும்.

    பெருங்குடலின் கடைசிப் பகுதியும் ஆசன வாய்ப் பகுதியும் சேரும் இடமானது 90 டிகிரி கோணத்தில் 'L' வடிவத்தில் இருக்கும். இந்த சந்திப்பு கோணத்திற்கு 'ஏனோரெக்டல் ஆங்கிள்' ANORECTAL ANGLE) என்று பெயர். இந்தப் "பெருங்குடல் - ஆசன வாய்ப்பகுதி சந்திப்பு" மலம் கழிக்கும் செயலில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

    1996-ம் ஆண்டு ஆராய்ச்சியாளர் 'டாகர்ட்' என்பவர் பல்வேறு நிலைகளில் மனிதனை உட்கார வைத்து மனிதனின் "பெருங்குடல்-ஆசன வாய்ப் பகுதி சந்திப்பை" பல கோணங்களில் அளவெடுத்துப் பார்த்தார். பின்பு அவர், "சாதாரணமாக 'L' வடிவத்தில் இருக்கும் கோணம் குத்தவைத்து உட்கார்ந்து மலம் கழிக்கும்போது, சற்று நேராகிறது" என்று தெரிவித்தார். அதாவது குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்கும்போது பெருங்குடலின் கடைசிப்பகுதியும், ஆசன வாய்ப்பகுதியும் நேராக வருகிறதாம். குத்துக்காலிட்டு உட்கார்ந்து மலம் கழிக்கும் போது, வயிற்றுக்கு நாம் கொடுக்கும் அழுத்தம் குறைந்து விடுகிறது என்றும் மலச்சிக்கலும், மூலநோய் வருவதும் குறைகிறது என்றும் டாகர்ட் கூறியுள்ளார்.

    வயதானவர்களுக்கு, நோய்வாய்ப்பட்டவர் களுக்கு, வெஸ்டர்ன் டாய்லெட் அமைப்பு மிகவும் உபயோகமாக இருப்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இந்திய டாய்லெட் அமைப்பை உபயோகிப்பதே உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. இந்தியன் டாய்லெட் அமைப்பை உபயோகிக்கும்போது இடுப்பிலிருந்து கணுக்கால் வரை உள்ள எல்லா மூட்டுகளும் நன்றாக இயங்குகின்றன. திடக்கழிவும் முழுமையாக வயிற்றிலிருந்து வெளியேறிவிடுகிறது. அதனால் இந்திய டாய்லெட் அமைப்பில் மலம் கழிப்பதுதான் நல்லது என்று பிரபல அமெரிக்க டாக்டர்.எம்.கே.ரிஜ் என்பவர் கூறியுள்ளார்.

    வெஸ்டர்ன் டாய்லெட்டை உபயோகித்துவிட்டு திடீரென்று இந்தியன் டாய்லெட்டில் போய் உட்காரச் சொன்னால் அவர்களால் முடியாது. மிகவும் கஷ்டப்படுவார்கள். அதனால் சிறு வயதிலிருந்தே இரண்டு டாய்லெட்டுகளையும் உபயோகிக்கும் பழக்கத்துக்கு தயாராகுவதே நல்லது. ஒவ்வொரு மனிதருக்கும் இது முக்கியமான பிரச்சினை. இதில் அலட்சியம்காட்டவேண்டாம்.

    கட்டுரை: டாக்டர் எஸ்.அமுதகுமார், பொது மற்றும் குடும்ப நல மருத்துவர், சென்னை.

    • நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை எப்போதும் அனைத்து சத்துகளும் நிறைந்த உணவையே உண்ண வேண்டும்.
    • நீரிழிவு நோயாளிகளுக்கு கால் நகங்கள் கருப்பாக மாறுவதற்கு முக்கிய காரணங்கள் வருமாறு:

    பொதுவாக பலரையும் வாட்டக்கூடிய நீரிழிவு நோய் இரண்டாம் இடத்தில் உள்ளது. தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய் என்று இதனை கூறலாம். இதனை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது. இல்லாவிடின் உயிர் ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு கால் நகங்கள் கருப்பாக மாறுவதற்கு முக்கிய காரணங்கள் வருமாறு:

    பூஞ்சை தொற்று: இது விரலின் நுனியில் தொடங்கி பின்னர் மையத்திற்கு பரவுகிறது. பொதுவாக கால் விரல்களை பாதிக்கிறது. குறிப்பாக காலில் ஷூ அல்லது விரல்களை மூடுமாறு அணியும் காலணிகளை அணிபவர்களுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. டெர்மெட்டோபைட் எனும் பூஞ்சையால் ஏற்படும் இந்த தொற்று ஒனைக்கோமைக்கோசிஸ் அல்லது டினியா உன்குயம் என்று அழைக்கப்படுகிறது.

    நகங்களில் ஏற்படும் காயம்: நகத்தின் மேல் காயம் ஏற்பட்டால் நகத்தின் கீழ் உள்ள ரத்த நாளங்களை வெடிக்க செய்து, ரத்தம் அதிகமாக சேர்ந்து நகத்தின் நிறத்தை மாற்றும். பொருந்தாத காலணிகள் அல்லது இறுக்கமான காலணிகளை அணிந்து நடப்பது, ஓடுவது அல்லது வேலை செய்வதால் ஏற்படும் அழுத்தம் அல்லது காயங்களால் நகத்தின் நிறம் மாறலாம்.

    மெலனோமா: சில சமயம் ஓர் அரிய நிகழ்வாக தோலில் ஏற்படக்கூடிய மெலனோமா புற்றுநோய் காரணமாக நகத்தின் நிறம் கருமையாக மாறும்.

    நோய் பாதிப்பு: இதய நோய், சிறுநீரக பாதிப்பு அல்லது ரத்த சோகையினால் கூட நகத்தின் நிறம் கருப்பாக மாறலாம். உங்கள் கால் நகம் கருப்பாக மாறும் போது மருத்துவரிடம் சென்று கலந்தாலோசித்து அது குறித்து தகுந்த பரிசோதனை செய்து மருத்துவரின் பரிந்துரையை பின்பற்ற வேண்டும்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது.
    • எத்தகைய நன்மைகள் இதில் இருக்கிறது என பார்ப்போமா..?

    தற்போது அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய மிகவும் பிரபலமான மற்றும் பலரும் விரும்பி சாப்பிடும் பழம் தான் ஆப்பிள். ஆப்பிளில் பல வெரைட்டிகள் உள்ளன. அனைத்து வகையான ஆப்பிள்களும் ஒரே சத்துக்களைத் தான் கொண்டுள்ளது. ஒருவர் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. அந்த அளவில் ஆப்பிளில் ஏராளமான சக்தி வாய்ந்த உட்பொருட்கள் அடங்கியுள்ளன.

    ஆப்பிள் பழத்தில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் என உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. வேறு எத்தகைய நன்மைகள் இதில் இருக்கிறது என பார்ப்போமா..?

    * பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து ஆப்பிளில் அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொழுப்பானது கரைந்து விடும்.

    * இதில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்சிடன்ட், மூளைச் செல்களை அழியாமல் பாதுகாப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது.

    * ஆப்பிளில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், ரத்தத்தில் சக்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.

    * இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது.

    * ஆப்பிளில் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் இருப்பதால் அவை சருமத்தை இளமையுடன் வைத்து கொள்ள உதவுகிறது.

    * ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால் வலுவிழந்து மற்றும் பொலிவிழந்து இருக்கும் பற்களை நன்கு பளிச்சென்று மின்ன வைக்கலாம். ஆரோக்கியத்துடனும் வைத்து கொள்ளலாம்.

    * ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் பெக்டின் அதிகம் உள்ளதால், அவை உடலை கட்டழகுடன் வைத்து கொள்ள உதவுகிறது. மேலும் இதில் உள்ள பாலி பினால், உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து விடும்.

    * ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து, ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவும். ஆப்பிளை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், குடலியக்கம் சிறப்பாக நடைபெற்று, மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் கழிவுகளை எளிதில் மலக்குடல் வழியாக வெளியேற்றும். எனவே உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள்.

    * ஆப்பிள் புற்றுநோயைத் தடுக்கும். குறிப்பாக ஆப்பிள் மார்பக புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய் போன்றவற்றின் அபாயத்தைத் தடுக்கும். உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாது என்று நினைத்தால், தினமும் ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிடுங்கள். ஏனெனில் தோலில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

    • சர்க்கரைவள்ளி கிழங்கு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது.
    • சர்க்கரைவள்ளி கிழங்கில் நார்ச்சத்து அதிகம்.

    சர்க்கரைவள்ளி கிழங்கை ருசிக்காக மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை பேண, அவசியம் சாப்பிட்டுவர வேண்டும். இதில் இருக்கும் மாவுப்பொருள் இனிப்பு சுவையை தருவதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கிறது.

    * பி-6 வைட்டமினின் பங்களிப்பு அதிகமாக இருப்பதால் செரிமான கோளாறுகளை சீர் செய்கிறது. இதய நோய் பாதிப்பில் இருந்தும் காக்கிறது.

    * ரத்த அணுக்கள் உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. குளிர்காலங்களில் சரும பொலிவை தக்க வைக்கவும் உதவுகிறது. மன அழுத்தத்தில் இருந்தும் விடுவிக்கிறது.

    * சர்க்கரைவள்ளி கிழங்கில் நார்ச்சத்து அதிகம். உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற நச்சுகளை வெளியேற்றவும் வழிவகை செய்கிறது.

    * இதிலிருக்கும் வைட்டமின் டி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. ஆரோக்கியமான மனநிலை, வலுவான எலும்புகள், இதயம் ஆகியவற்றின் செயல்பாட்டுக்கும் உறுதுணையாக இருக்கிறது. தைராய்டு சுரப்பி, பற்கள், எலும்புகள், நரம்புகள் மற்றும் தோல் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை காக்கவும் வைட்டமின் டி அவசியமானதாகிறது.

    * வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க சர்க்கரைவள்ளி கிழங்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.

    * இதிலிருக்கும் வைட்டமின் ஏ சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இதன் மூலம் அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் எதிராக போராட தூண்டுகிறது. புற ஊதா கதிர்களின் பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும் துணைபுரிகிறது. பழுதடைந்த செல்களை சரிசெய்வதிலும், புதிய செல்களை சேதாரம் அடையாமல் பாதுகாப்பதிலும் சர்க்கரை வள்ளி கிழங்கின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

    * சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வைத்தோ, சுட வைத்தோ அல்லது சிப்ஸ் தயாரித்தோ சாப்பிடலாம். அதிலிருக்கும் சத்துக்கள் முழுவதும் உடலுக்கு கிடைக்கும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
    • இந்த நோயால் பாதிக்கப்பட்டால், உணவுகளில் மிகவும் கவனம் தேவை.

    உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டால், உணவுகளில் மிகவும் கவனம் தேவை.

    நீரிழிவு பாதிப்பு உள்ள நோயாளிகள் தங்கள் உணவு முறையில் சிறு மாற்றத்தைச் செய்தாலேயே நீரிழிவு நோயைப் பெருமளவு குறைக்கலாம் என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    நெல்லை நேரடியாக வெயிலில் உலர்த்தி, வேக வைக்காமல், ஆலையில் அரைத்து அதன் உமி, தவிடு நீக்குவதால் கிடைக்கும் அரிசி பச்சரிசி ஆகும். நெல்லை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து பின்னர் ஊறிய நெல்லை அரைப்பதத்திற்கு வேகவைத்து, வெயிலில் உலர்த்தி, பின்னர் உமியை நீக்குவதால் கிடைக்கும் அரிசி புழுங்கல் அரிசி ஆகும்.

    நெல்லை வேகவைக்கும்போது உமியில் உள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி, ஒரைசினால் போன்ற ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் அரிசிக்குள் திணிக்கப்படுவதால் புழுங்கல் அரிசி அதிக ஊட்டச்சத்து உள்ளதாக திகழ்கிறது. புழுங்கல் அரிசியின் கிளைசிமிக் இன்டெக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) 38 ஆகும், ஆனால் பச்சரிசியின் கிளைசிமிக் இன்டெக்ஸ் 55 ஆகும்.

    புழுங்கல் அரிசியின் கிளைசிமிக் இன்டெக்ஸ் பச்சரிசியை விட குறைவாக இருப்பதாலும், புழுங்கல் அரிசியில் வைட்டமின் பி, ஆன்டி ஆக்சிடென்ட்ஸ், நார்ச்சத்து பச்சரிசியை விட அதிகமாக இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சரிசியை விட புழுங்கல் அரிசியே சிறந்தது.

    புழுங்கல் அரிசி ஊற வைப்பது, வேக வைப்பது, உலர்த்துவது என்ற மூன்று நிலைகளை கடந்து பெறப்படுவதால் ஜீரணத்தை எளிதாக்கி வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது. புழுங்கல் அரிசியில் ஆந்தோசையனின் என்ற ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் அளவு அதிகமாக உள்ளது.

    இது செல்களில் ஏற்படும் அழற்சியையும், ஃபிரீரேடிகல்கள் பாதிப்பையும் குறைக்கிறது. பச்சரிசியை ஒப்பிட்டு பார்க்கும்போது, புழுங்கல் அரிசியில் அதிகமான அளவு கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீஸ் ஆகியவை இருக்கிறது. இத்தகைய நன்மைகளை பெற்றிருக்கும் புழுங்கல் அரிசி, நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சரிசியை விட சிறந்ததாக கருதப்படுகிறது.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • தற்போது இதய நோயால் ஏராளமானோர் உயிரை இழக்கின்றனர்.
    • இதய ரத்தக்குழாய் அடைப்பிற்கு 3 வகையான தீர்வுகள் உள்ளன.

    தற்போது இதய நோயால் ஏராளமானோர் உயிரை இழக்கின்றனர். இதய நோய் வருவதற்கு கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை அன்றாடம் அதிகமாக சாப்பிடுவதுடன், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கையை வாழ்வது தான். இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தினமும் உடற்பயிற்சி செய்வதுடன், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளையும் உட்கொண்டு வர வேண்டும்.

    ஆஞ்சியோ (ஆஞ்சியோகிராம்) என்பது இதய ரத்தக்குழாய் அடைப்பை கண்டறியும் ஒரு பரிசோதனை முறையாகும். ஆஞ்சியோ என்பது ஒரு சிகிச்சை முறையோ அல்லது தீர்வோ அல்ல. ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்பின் அளவு, தன்மை ஆகியவற்றுக்கு ஏற்பவும், நோயாளியின் வயது, உடல்நிலை போன்றவற்றின் அடிப்படையிலும் அவருக்கு எந்த மாதிரியான சிகிச்சை தேவை என்பதை இதய நோய் சிகிச்சை நிபுணர் முடிவு செய்வார்.

    பொதுவாக இதய ரத்தக்குழாய் அடைப்பிற்கு 3 வகையான தீர்வுகள் உள்ளன. அவை:

    1) மருந்தின் மூலம் அடைப்பை நீக்கலாம்,

    2) ரத்தக்குழாயில் உள்ள அடைப்பை நீக்க ஆஞ்சியோபிளாஸ்ட்டி மற்றும் ஸ்டென்ட் பொருத்துதல் முறையை கையாளலாம். இந்த முறையில் ரத்தக்குழாயில் உள்ள அடைப்பை நீக்க வலை போன்ற அமைப்புள்ள ஸ்டென்ட் பொருத்தப்படும். இது ரத்தக்குழாயை விரிவடையச்செய்து ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

    3) இதய பைபாஸ் ஆபரேஷன். ரத்தக்குழாயில் உள்ள அடைப்பின் அளவு அதிகபட்சமாக இருப்பது, ஸ்டென்ட் பொருத்த முடியாத நிலை போன்ற சூழ்நிலைகளின் போது பைபாஸ் ஆபரேஷன் பரிந்துரைக்கப்படும்.

    இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருந்தால் இந்த மூன்றில் ஏதாவது ஒரு தீர்வின் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். இதய நோயாளிக்கு இம்மூன்றில் எது தேவை, எந்த சிகிச்சை முறை பொருத்தமானது என்பதை இதய நிபுணர் தான் முடிவு செய்வார்.

    இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி. வெங்கடேஷ், எம்.டி., டி.என்.பி, (கார்டியோ)

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • காய்ச்சல்களில் பல வகைகள் இருக்கின்றன.
    • காய்ச்சலை கையாளும் முறையில் மாற்றம் வேண்டும்.

    காய்ச்சலை நாம் அணுகும் முறையால்தான் உணவுரீதியாகவும் நாம் தடுமாற்றம் அடைகிறோம். எனவே, காய்ச்சலை கையாளும் முறையில் மாற்றம் வேண்டும். காய்ச்சல்களில் பல வகைகள் இருக்கின்றன என்பது பலரும் அறிந்ததுதான். அது சாதாரண காய்ச்சலாக இருந்தாலும், தீவிரமான காய்ச்சலாக இருந்தாலும் நாம் பயப்படத் தேவையில்லை.

    காய்ச்சல் வந்தவுடன் நம்மில் பலர் அப்படியே படுத்துவிட்டு, சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருப்பார்கள். இதைத்தான் முதலில் தவிர்க்க வேண்டும். நமது உடலில் காய்ச்சல் ஏன், எதனால் ஏற்படுகிறது. அதை எப்படி சரிசெய்வது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

    நமது சுற்றுப்புறத்திலுள்ள வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற ஏதாவதொரு கிருமி நம் உடலுக்குள் சென்றுவிட்டால் அதை நமக்கு உணர்த்தக்கூடிய ஓர் அறிகுறிதான் காய்ச்சல். அப்படி உடலுக்குள் சென்ற கிருமியை எதிர்த்து உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு செயல்படுகிறபோது உடலின் வெப்பநிலை அதிகரிப்பதை காய்ச்சல் என்று சொல்கிறோம்.

    காய்ச்சலோடு தலைவலி, வாந்தி, குமட்டல், மூட்டுவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அது வைரஸ் காய்ச்சலாக இருக்கலாம். காய்ச்சலோடு சிறுநீர் கழிக்கையில் எரிச்சல் அல்லது ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அது சிறுநீரக நோய்த் தொற்றாக இருக்கலாம். காய்ச்சலோடு வாந்தி, குமட்டல், பேதி போன்ற அறிகுறிகள் இருந்தால் வயிற்றில் ஏதாவது தொற்று ஏற்பட்டிருக்கலாம். காய்ச்சலோடு கண் மஞ்சள் நிறமாக இருந்தால் கல்லீரலில் நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கலாம். காய்ச்சலோடு இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் நுரையீரலில் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம்.

    உடலில் அதிக களைப்பு ஏற்பட்டு, தண்ணீர் குடிக்காமல் வெயில் காலங்களில் வெளியே செல்கிறபோதும் உடல் வெப்பநிலை அதிகரித்து காய்ச்சல் வருவதை Heat Stroke என்று சொல்கிறோம். அதேபோல அம்மை நோய்கள் ஏற்படுகிறபோது உடலில் கொப்புளங்களோடு காய்ச்சலும் வரும். எனவே, என்ன காரணத்தால் அல்லது எந்தக் கிருமியினால் காய்ச்சல் வந்துள்ளது என்பதை சரியாக கண்டறிவதற்கே இரண்டு நாட்கள் வரை ஆகும்.

    மலேரியா, டைபாய்டு, டெங்கு, சிக்கன்குனியா என்று நூற்றுக்கணக்கான காய்ச்சல் இருக்கிறது. எனவே, உடல் வெப்பநிலை எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்பதை தெர்மாமீட்டர் மூலம் கண்டறிவதோடு என்ன காரணத்தினால் அந்த காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்பதை சரியாக கண்டறிந்த பிறகே அதற்குரிய சரியான மருத்துவத்தை மேற்கொள்ள முடியும்.

    காய்ச்சலின்போது நீர்ச்சத்து தொடர்பான எல்லா உணவுகளையுமே நாம் புறக்கணிக்கிறோம். உடல் மேலும் குளிர்ச்சியடைந்து காய்ச்சல் அதிகமாகிவிடும் என்றும் தவறாக நம்புகிறோம். காய்ச்சலின்போது உடல் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் உடலில் நீர்வறட்சி ஏற்படுகிறது. இந்த நீர்வறட்சியினால் ஏற்படுகிற பாதிப்புகள்தான் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துகிற நிலைக்குக் கொண்டுபோய் விடுகிறது. எனவே, அதிகளவு நீர் அருந்துவதோடு நீராகாரங்களையும் எடுத்துக்கொள்வது நல்லது.

    இந்த நீராகாரங்கள் நமது உடலில் உள்ள எலக்ட்ரோலைட்களின்(Electrolyte) அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. தண்ணீரின் சுகாதாரம் தொடர்பாக பல சந்தேகங்கள் இருப்பதால், கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடித்துக் கொள்ளலாம். முக்கியமாக, காய்ச்சல் வந்த பிறகு இரண்டு நாட்கள் வரை உடலுக்கு போதுமான ஓய்வு கொடுக்க வேண்டும்.

    காய்ச்சல் வந்துவிட்டால் இதைத்தான் சாப்பிட வேண்டும். இதையெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதே தவறான புரிதல். இதுபோன்ற நேரங்களில் நாம் இவற்றை எல்லாம் சாப்பிடக்கூடாது என்று நாமாகவே நினைத்துக்கொண்டு, சாப்பிடாமலேயே இருப்பதுதான் உடல் பிரச்னைகளை இன்னும் அதிகமாக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

    காய்ச்சலின்போது மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகளை சாப்பிடுவதோடு தண்ணீர், இளநீர், மோர், பழச்சாறுகள், சூப் போன்ற நீராகாரங்களை அதிகளவில் எடுத்துக்கொள்வது அவசியம். உடலுக்குள் புகுந்திருக்கிற கிருமிக்கு எதிராக செயல்படுகிறபோது, அதற்கு உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைப்பதற்கு நாம் எப்போதும்போல உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் இருக்கையில் நமது வாய்க்கு எதை சாப்பிடப் பிடிக்கிறதோ அதை சாப்பிடலாம்.

    நாம் வழக்கமாக சாப்பிடுகிற எல்லா விதமான உணவுகளையும் சாப்பிடலாம். நாம் சரியாக சாப்பிட்டால்தான் காய்ச்சலில் இருந்து விரைவாக குணமடைய முடியும். ஆனால், நமக்குப் பிடிக்கும் என்பதற்காக குளிர்பானங்கள், துரித உணவுகள் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்ற ஆரோக்கியக் கேடான உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வயிறு சம்பந்தமான பிரச்னைகள் இருந்தால் அதிகக் காரமான உணவுகளைத் தவிர்ப்பது முக்கியம்.

    • பெருங்காயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
    • பெருங்காயம், கசப்பு மற்றும் காரத்தன்மை கொண்டது.

    ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானை தாயகமாகக் கொண்ட பெருங்காயம், கசப்பு மற்றும் காரத்தன்மை கொண்டது. நரம்புகளைத் தூண்டி சுவை உணர்வை மேம்படுத்தக் கூடியது. உடல் வெப்பத்தை அதிகரிக்கும். சமையலில் நறுமணமூட்டியாக பயன்படுத்தப்படும் பெருங்காயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

    செரிமானத்துக்காக பயன்படுத்தப்படும் கை வைத்திய முறையில் பெருங்காயத்துக்கு முதல் இடம் உண்டு. இஞ்சிச் சாறு மற்றும் தேனுடன் பெருங்காயத்தைக் கலந்து குடிக்கலாம். இது குடலில் உள்ள கிருமிகளை நீக்கி, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும். வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், வயிற்று வலி மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்தும்.

    சுவாச நோய், நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் மூர்ச்சை நோய், வலிப்பு நோய் போன்றவற்றையும் குணப்படுத்தும் தன்மை பெருங்காயத்துக்கு உண்டு. பிரசவத்துக்குப் பிறகு தாயின் உடலில் இருந்து நஞ்சுக்கொடியை வெளியேற்ற, பெருங்காயத்தைப் பொரித்து, வெள்ளைப் பூண்டு, பனை வெல்லம் ஆகியவற்றை சேர்த்து காலை வேளையில் சாப்பிட வேண்டும். இது தாய்-சேய்க்கு ஏற்படும் வாயுப் பிரச்சினை, கோழைக்கட்டு, வாந்தி, அஜீரணம், குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் போன்ற பாதிப்புகளையும் குணப்படுத்தும்.

    முட்டையின் மஞ்சள் கருவுடன் பெருங்காயத்தைக் கலந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் நீங்கும். பெருங்காயப் பொடியை வாணலியில் போட்டு மிதமான தீயில் வறுத்து, சொத்தைப் பல்லின் குழியில் வைத்து கடித்துக் கொண்டால் பல் வலி சரியாகும்.

    பெருங்காயம் உடலில் உள்ள வாதத்தையும், கபத்தையும் சமநிலைப்படுத்தி, நச்சுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. பெருங்காயப் பொடியை நெருப்பில் போட்டு, அதன் புகையை சுவாசித்து வந்தால் ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் தீரும். இதில் உள்ள ரசாயன மூலக்கூறுகள் மார்புச் சளியை வெளியேற்றும். ½ டீஸ்பூன் பெருங்காயத்தூளை வெந்நீரில் கலந்து தினமும் காலை வேளையில் குடித்து வருவது உடலில் உள்ள கெட்டக் கொழுப்பைக் கரைக்கும்.

    இதில் உள்ள புரதச்சத்து, உடலில் சீரான ரத்த ஓட்டத்தை உண்டாக்கி, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அடிவயிற்று வலி, முதுகு வலி மற்றும் தலைவலியை குறைக்கும். குறிப்பு: தினமும் 5 முதல் 30 மில்லி கிராம் வரை பெருங்காயம் சாப்பிடுவது நல்லது. அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் உடலில் பித்தம் அதிகரிக்கும்.

    • "போசான் அபியான்" என்னும் வளர் இளம் குழந்தைகளுக்கு அடுப்பில்லா ஆரோக்கிய சமையல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சுமார் 30க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள், அங்கன்வாடி ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் வடுகபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் "போசான் அபியான்" என்னும் வளர் இளம் குழந்தைகளுக்கு அடுப்பில்லா ஆரோக்கிய சமையல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் இரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து நிறைந்த உணவுகள், புரதச்சத்து உணவுகள், மற்றும் உணவுகள் தயாரிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனை பல்லடம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மகாலட்சுமி சங்கீதா, பள்ளி தலைமை ஆசிரியை செல்வராணி, உள்ளிட்டோர் உணர்வுகளை சுவைத்து பார்த்து, அதனை சமைத்த போட்டியாளர்களை தேர்வு செய்தனர்.

    இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள், அங்கன்வாடி ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாம் செய்யும் சில பழக்கங்கள் இதய நோய் வரக்காரணமாக இருக்கும்.
    • அத்தகைய பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.

    அன்றாடம் பின்பற்றும் சில பழக்கவழக்கங்கள் இதய நோய்களுக்கு வழிவகுக்கின்றன. பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும் அவை இதயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அத்தகைய பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.

    * தூக்கத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு உள்ளது. தினமும் சில மணி நேரமாவது தடையற்ற ஆழ்ந்த தூக்கம் அவசிய மானது. தூக்கமின்மை மன அழுத்தத்திற்கு வழி வகுக்கும். இதயத்தின் செயல்பாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    * குறட்டை விடும் பழக்கமும் இதயத்திற்கு கேடு தரும். குறட்டை விடும்போது தொண்டை தசைகள் காற்று செல்லும் பாதைக்கு இடையூறு ஏற்படுத்தும். அதனால் சுவாசத்தில் கலந்து செல்லும் ஆக்சிஜனின் அளவு குறையும். குறட்டை பிரச்சினை நீண்டகாலமாக பின் தொடர்ந்து கொண்டிருந்தால் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கடுமையான உடல்நல கோளாறுகளை எதிர்கொள்ள நேரிடும்.

    * தினமும் ஒரே இடத்தில் உட்கார்ந்து அதிக நேரம் தொலைக்காட்சியைப் பார்ப்பது புகைபிடிக்கும் பழக்கத்தை காட்டிலும் மோசமானது என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அரை மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து நடமாடுவது அவசியம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் தினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்தாலும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இதயத்திற்கு நல்லதல்ல.

    * மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதும் முக்கியமானது. நீண்ட கால மன அழுத்தம் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு வழிவகுத்துவிடும். அதனால் தமனி சுவர்கள் சேதமடையும். மன அழுத்தத்தை போக்கும் வழிமுறைகளை கற்றுக்கொள்வது உடலுக்கும், மனதுக்கும் பலனளிக்கும். தினமும் குறிப்பிட்ட நேரம் ஆழ்ந்த சுவாச பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும்.

    * சமையலில் உப்பு அதிகம் சேர்க்கக் கூடாது. அதில் இருக்கும் சோடியம் தண்ணீரிலும், ரத்தத்திலும் அதிகம் கலக்கும்போது ரத்தத்தின் செயல்பாட்டில் பாதிப்பு நேரும். இதயத்திற்கும் அழுத்தம் கொடுக்கும். அதனால் இதய செயலிழப்பு ஏற்பட வழி வகுக்கும். உடலின் தேவைக்கேற்ப போது மான ரத்தத்தை இதயம் பம்ப் செய்ய முடியாத போது இதய செயலிழப்பு உண்டாகும்.

    * இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியங்கள், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள், கோழி, மீன் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

    * இதயத்தை ஆரோக்கியமாக வைத் திருப்பதற்கு ஈறுகளின் ஆரோக்கியத்தை பேணுவது இன்றியமையாதது. வாய் வழியாக பல நோய்கள் உருவாகின்றன. முதலில் பற்களில் தொற்றுகள் பரவி இதயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடும்.

    * தினமும் தவறாமல் ஒரு கப் காபி பருகுவது இதய நோய் அபாயத்தை குறைக்க உதவும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. காபியை தவறாமல் உட்கொள்ளும்போது இதய தமனிகளில் கால்சியம் சீராக இருக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    * கைகளை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் அதில் பாக்டீரியாக்கள் படிந்து விடும். சாப்பிடும்போது உடலுக்குள் புகுந்து உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். இதயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    • முதுகு தண்டுவட பாதிப்பு மிகக்கொடுமையானது.
    • சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் முதுகெலும்பு காயத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

    விளையாடும்போதோ, விபத்தின்போதோ முதுகெலும்பில் ஏற்படும் காயம் ஒட்டுமொத்த உடல் இயக்க செயல்பாடுகளையும் முடக்கிவிட வாய்ப்புள்ளது. 'ஸ்பைனல் கார்டு இஞ்சுரி' எனப்படும் இந்த முதுகு தண்டுவட பாதிப்பு மிகக்கொடுமையானது. சக்கர நாற்காலியில் முடங்கும் நிலைமையை ஏற்படுத்திவிடக்கூடியது.

    சமீபத்திய ஆய்வுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் ஐந்து லட்சம் பேர் முதுகெலும்பு தண்டுவட பாதிப்புக்கு ஆளாகிறார்கள். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, முதுகெலும்பு காயம் உள்ளவர்கள் முன்கூட்டியே இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதுகெலும்பு காயம் ஏற்படுவதற்கான அபாயம் இருக்கிறது. பெண்களை விட ஆண்கள்தான் அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

    பேரதிர்ச்சி ஏற்படுத்தும் விபத்துக்களில் சிக்கி கடும் பாதிப்புக்குள்ளாகுபவர்களில் 90 சதவீதம் பேர் முதுகு தண்டுவட பாதிப்புக்குள்ளாவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சாலை விபத்துகள், எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுவது, வன்முறையில் பாதிப்புக்குள்ளாவது போன்றவை இதில் அடங்கும். முதுகு தண்டுவட பாதிப்புக்குள்ளாகுபவர்களுக்கு நாள்பட்ட வலி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பலர் மனச்சோர்வுக்கும் ஆளாகிறார்கள். ஒரு சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் முதுகெலும்பு காயத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

    பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது: கார் விபத்துக்கள்தான் பெரும்பாலும் முதுகு தண்டுவட காயத்திற்கு முக்கிய காரணமாகின்றன. அதனால் சீரான வேகத்தில் கார் ஓட்டுவது அவசியம். கார் ஓட்டும்போது உடன் பயணிப்பவர்களுடன் பேசுவது, எதையாவது பற்றி யோசித்துக்கொண்டிருப்பது போன்ற கவனச்சிதறல்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது. கார் ஓட்டுபவரும், உடன் பயணிப்பவர்களும் சீட் பெல்ட் அணிவது மிகவும் அவசியமானது.

    தடுமாறி விழுதல்: எதிர்பாராதவிதமாக உயரமான பகுதியில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுவதும் முதுகெலும்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சைக்கிளிலோ, இருசக்கர வாகனத்திலோ செல்லும்போது தடுமாறி கீழே விழுந்து விட்டால் முதுகெலும்பில் காயம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆதலால் கவனமாக செயல்பட வேண்டும்.

    விளையாட்டு: விளையாடும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியமானது. ஜிம்னாஸ்டிக் போன்ற உடலை வளைத்து சாகசம் செய்யும் விளையாட்டுகளின்போது பாதுகாப்பு அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது. சிறு அசம்பாவிதம் நேர்ந்தாலும் அது முதுகெலும்பு பகுதியை கடுமையாக பாதித்துவிடும்.

    மதுப்பழக்கம்: மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது விபத்துக்கு மூல காரணமாகிறது. எனவே அதனை தவிர்க்க வேண்டும்.

    ×