search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dubai"

    ஐக்கிய அரபு அமீரகத்தில் பரவலாக ஆலங்கட்டி மழை பெய்தது. சாலையில் கிடந்த ஐஸ்கட்டிகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    புஜேரா :

    ஐக்கிய அரபு அமீரக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆனால் புஜேரா, உம் அல் குவைன் மற்றும் ராசல் கைமா உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை இல்லாத வகையில் திடீரென்று ஆலங்கட்டி மழை பெய்தது.

    பொதுவாக வானில் இருந்து மழைத்துளிகள் ஐஸ்கட்டிகளாக மாறி பொழிவது ‘ஆலங்கட்டி மழை’ அல்லது ஐஸ் கட்டிமழை எனப்படுகிறது. சாதாரண மழையோடு ‘ஆலங்கட்டிகள்’ விழுவதை பார்த்திருக்கலாம். பெரும்பாலும் இவை முழுவதுமாக ஐஸ்கட்டிகளாக விழுவதில்லை.

    ஆனால் நேற்று அமீரகத்தில் முதல்முறையாக ஒரு ‘கோல்ப்’ பந்து அளவில் ஐஸ்கட்டிகள் சடசடவென்று விழுந்தன. ஐஸ்கட்டிகள் விழுந்ததால் பயந்துபோன சிலர் ஒதுங்க இடம்தேடி ஓடி சென்றனர்.

    இதனால் வாகனங்கள் சாலைகளில் செல்ல தடுமாறின. சிலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. சாலையில் கிடந்த ஐஸ் கட்டிகளில் சிலர் விளையாடியும் மகிழ்ந்தனர்.
    நியூசிலாந்து மசூதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தனர். இந்த தாக்குதலை கொண்டாடிய துபாய் நிறுவனத்தின் ஊழியர் பணிநீக்கம் செய்துள்ளார். #MosqueShooting #NewZealandShooting #Mansuspended
    துபாய்:

    நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த மார்ச் 15ம் தேதி தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 50 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    துப்பாக்கி சூடு குற்றவாளி  "ப்ரெண்டான் டாரன்ட்" என்று பெயரிடப்பட்ட ஒரு ஆஸ்திரேலியராக ட்விட்டரில் தன்னை அடையாளம் காட்டி,  73 பக்கத்தில் தனது நோக்கங்களை  தெரிவித்திருந்தான்.



    இந்த மனித தன்மையற்ற செயலுக்கு பல்வேறு நாட்டினரும், அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிப்புரிந்த ஊழியர் ஒருவர், தனது முகநூல் பக்கத்தில், நியூசிலாந்து தாக்குதல் குறித்து கொண்டாடும் விதமாக கருத்து தெரிவித்திருந்தார்.

    முதலில் இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்னர் இதனை அறிந்த அந்த நிறுவனத்தின் தலைவர் அவரை பணியில் இருந்து நீக்கினார்.  மேலும் அந்த ஊழியர் துபாயை விட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார். #MosqueShooting #NewZealandShooting #Mansuspended
    ஐ.சி.சி.யின் செயற்குழு கூட்டம் துபாயில் இன்று தொடங்குகிறது. இதில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.
    புதுடெல்லி:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைமை செயற்குழு கூட்டம் துபாயில் இன்று தொடங்குகிறது. வருகிற 2-ந் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்தியாவில் 2021-ம் ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி (சாம்பியன்ஸ் கோப்பை போட்டி மாற்றப்படுகிறது) மற்றும் 2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி ஆகியவற்றுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. வற்புறுத்தி வருகிறது. ஆனால் இந்திய அரசு இதுவரை வரிவிலக்கு அளிக்கவில்லை. இந்த விவகாரம் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் 2021-ம் ஆண்டு நடைபெறுகிறது. இரு நாடுகள் இடையிலான டெஸ்ட் போட்டி தொடரின் முடிவு அடிப்படையில் ஒவ்வொரு அணிகளும் புள்ளிகளை பெறும். அதிக புள்ளிகளை பெறும் அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இந்த போட்டிக்கான ஒளிபரப்பு உரிமம் வழங்குவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படுகிறது.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஜூன் 16-ந் தேதி பாகிஸ்தானுடன் மோதும்படி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் பலமாக எழுந்துள்ளன. அத்துடன் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுடன் கிரிக்கெட் விளையாடும் மற்ற நாடுகள் உறவை துண்டித்து கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாமல் ஐ.சி.சி.க்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதி இருந்தது. ஆனால் இந்த விஷயம் குறித்து விவாதிக்கப்படாது என்று தெரிகிறது. அதேநேரத்தில் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது.

    பல்வேறு நாடுகளில் நடைபெறும் உள்ளூர் லீக் ஆட்டங்களில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கும் விகிதாச்சாரம் குறித்து கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை செய்யப்படுகிறது. 2028-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை சேர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் நிர்வாகிகள் விவாதிக்க இருக்கிறார்கள்.
    துபாயில் சைக்கிள் சாகச வீரர் ஒருவர், ஹெலிகாப்டரில் இருந்து ஹோட்டலின் மேல்தளத்தில் குதித்து சாகசம் செய்துள்ளார். #Dubaicyclestunt
    துபாய்:

    ஸ்காட்லாண்டை சேர்ந்த சைக்கிள் சாகச வீரர் கிரிஸ் கெய்லி. இவர் பல சாகசங்களை சைக்கிள் பயணம் மூலம் பல்வேறு நாடுகளில் நிகழ்த்தியுள்ளார். இவர் தற்போது புதிய சாகசம் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

    துபாயில் ஜுமைரா பகுதியில் மிகப்பெரிய கட்டுமான வசதி கொண்ட கண்கவர் மற்றும் உயரமான ஹோட்டல்களில் புர்ஜ் அல் அரேபியா ஹோட்டலும் ஒன்றாகும். சைக்கிள் சாகச வீரர் கிரிஸ் கெய்லி, ஹெலிகாப்டரில் இருந்து முதலில் 14 அடி உயரத்தில் இருந்து சைக்கிளோடு இந்த ஹோட்டலின் மேல்பகுதியில் குதித்தார்.

    அதன் பின் ஹோட்டலின் மேல்பரப்பில் உள்ள சரிவான பலகை ஒன்றில் துவங்கி, பின் ஹோட்டலின் லிஃப்ட் வழியாக சைக்கிளில் வந்தபடி சுமார் 700 அடி உயரத்தை சுலபமாக கடந்தார்.

    இந்நிலையில் வழியில் தென்படும் கட்டிடங்கள், மேல்தளங்கள்  என அனைத்தின் மீதும், தரையில் ஓட்டுவது போல் மிக சாதாரணமாக ஓட்டி சாகசம் புரிந்துள்ளார். இவ்வாறு எவ்வித அச்சமும் இல்லாமல்  சைக்கிளில் அவர் செய்த  சாகசங்கள்  பார்ப்போரை பிரமிப்படைய செய்துள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. #Dubaicyclestunt

    துபாய் இண்டர்நேசனல் அகாடமி சிட்டியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனத்திற்கு சென்ற ராகுல் காந்தி அங்கு மாணவ, மாணவிகள் மத்தியில் கலந்துரையாடினார். #RahulGandhi #Dubai
    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 10-ந் தேதி இரவு ராகுல் காந்தி துபாய் வந்தார். பின்னர் அவர் நேற்று முன்தினம் அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், இந்திய வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து பேசினார்.

    தொடர்ந்து துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இரவு ஆயிரக்கணக்கான இந்தியர்கள் திரண்டு இருந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    நேற்று ராகுல்காந்தி தனது 2-வது நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். துபாய் இண்டர்நேசனல் அகாடமி சிட்டியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனத்திற்கு ராகுல் காந்தி சென்றார். அங்கு மாணவ, மாணவிகள் மத்தியில் கலந்துரையாடினார். சுமார் 50 நிமிடம் அவர்களுடன் உரையாடினார். 
    துபாய் பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி இந்தியாவில் ஆத்திரமும், சகிப்புத்தன்மையின்மையும் ஆதிக்கம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். #Intolerance #angerreign #angerreignIndia #RahulGandhi
    துபாய்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துபாயில் இரண்டாவது நாளாக இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

    அதில் ஒருகட்டமாக துபாய் பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாற்றிய ராகுல் கூறியதாவது:-

    20-ம் நூற்றாண்டு காலகட்டம் மூளை வறட்சியான நாட்களாக கழிந்தது. ஆனால், 21-ம் நூற்றாண்டில் மக்கள் தாங்கள் விரும்பிய இடங்களுக்கும், தங்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கும் இடங்களுக்கும் தற்போது செல்கின்றனர். அவர்களுக்கான வாய்ப்புகளை அவர்களின் தாய்நாடு உருவாக்கித்தர வேண்டும்.



    இந்தியா பல சிந்தனைகளை உருவாக்கியுள்ளது. அதேபோல், பல சிந்தனைகள் ஒன்றிணைந்துதான் இந்தியா உருவாகியுள்ளது. மற்றவர்களின் சிந்தனைகளை கேட்பதும் இந்தியாவின் சிந்தனையாக உள்ளது.

    சகிப்புத்தன்மை என்பது நமது கலாசாரத்தோடு ஒன்றர கலந்த ஒன்றாக இருந்து வந்துள்ளது. ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளாக இந்தியாவில் சமுதாய பிரிவினையும், அளவுக்கதிகமான ஆத்திரமும், சகிப்புத்தன்மையின்மையும் தலையெடுத்து வருவதை நாம் பார்க்கிறோம். அதிகாரத்தில் இருப்பவர்களின் மனப்போக்கில் இருந்துதான் இவை உருவாகின்றன.

    தங்கள் கருத்துகளை தெரிவிப்பவர்கள் கொல்லப்படும் இந்தியாவையும், பத்திரிகையாளர்கள் துப்பாக்கியால் சுடப்படும் இந்தியாவையும் நாங்கள் விரும்பவில்லை. இது மாற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இந்த சவாலை முன்வைத்துதான் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை நாங்கள் சந்திக்கப் போகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Intolerance #angerreign #angerreignIndia #RahulGandhi
    துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காங். தலைவர் ராகுல் காந்தி, பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என தெரிவித்தார். #Dubai #Congress #RahulGandhi #SpecialStatusforAndhraPradesh
    துபாய் :

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக நேற்று மாலை துபாய் சென்றடைந்தார். துபாய் விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    துபாய் சென்றுள்ள ராகுல் அங்குள்ள தொழிலாளர் காலனியில் இந்திய சமூகத்தினர் மற்றும் மாணவர்களை இன்று சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:



    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து துபாயில் வேலை செய்து வருகிறீர்கள். அதன்மூலம் இந்தியாவிற்கு பெரும் உதவி செய்து வருகிறீர்கள். எனவே உங்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நீங்கள் சிந்தும் வியர்வை, ரத்தத்தினால் இந்த நாட்டை வளப்படுத்தி வருகிறீர்கள். உங்களால் அனைத்து இந்தியர்களும் பெருமிதம் அடைகிறோம்

    வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். #Dubai #Congress #RahulGandhi #SpecialStatusforAndhraPradesh
    பிரதமர் மோடியின் பிரசார வியூகங்களை பின்பற்றத் தொடங்கியுள்ள ராகுல் காந்தி ஜனவரி 11-ந்தேதி துபாயில் நடக்கும் கூட்டத்தில் இந்தியர்களை சந்தித்துப் பேசுகிறார். #RahulGandhi #Congress
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது, இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களிடமும் சென்று ஆதரவு திரட்டினார்.

    அவரது வெளிநாட்டுப் பயணங்கள் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தின மோடி அலை உருவாகவும், சமூக வலைத்தளங்களில் விறுவிறுப்பு ஏற்படுத்தவும் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் மிகவும் உதவின.

    மோடியின் பிரசார வியூகங்களை அப்படியே பின்பற்றத் தொடங்கி உள்ள ராகுல், வெளிநாடு வாழ் இந்தியர்களிடமும் ஆதரவு திரட்ட தொடங்கியுள்ளார். இதற்காக சாம் பிட்ரோடா தலைமையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான காங்கிரஸ் கிளை அமைப்புத் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த அமைப்பு ஏற்பாடு செய்த திட்டத்தின்படி கடந்த ஆகஸ்டு மாதம் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு ராகுல் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள இந்தியர்களை சந்தித்துப் பேசினார்.

    5 மாநில தேர்தல் வந்ததால் தனது வெளிநாட்டு கட்சிப் பயணங்களை ஒத்திவைத்து இருந்த ராகுல் மீண்டும் அடுத்த மாதம் (ஜனவரி) முதல் அதைத் தொடங்க திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக துபாய், அபுதாபிக்கு ராகுல் செல்ல இருக்கிறார்.

    ஜனவரி 11-ந்தேதி துபாயில் நடக்கும் கூட்டத்தில் இந்தியர்களை சந்தித்துப் பேசுகிறார். மறுநாள் ஜனவரி 12-ந்தேதி அபுதாபிக்கு சென்று பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை சாம் பிட்ரோடா செய்து வருகிறார்.

    மத்திய கிழக்கு நாடுகளில் ஏராளமான இந்தியர்கள் உள்ளனர். குறிப்பாக தென் இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் அனைத்துத் துறைகளிலும் பணிபுரிந்து வருகிறார்கள்.

    அவர்களிடம் கலந்துரையாடல் நடத்துவதன் மூலம் தென் இந்தியாவில் அதிக தொகுதிகளை கைப்பற்ற முடியும் என்று ராகுல் கருதுகிறார். எனவே துபாய், அபுதாபி கூட்டங்களுக்கு ராகுல் முக்கியத்துவம் அளித்துள்ளார்.

    துபாய் அல்லது அபுதாபியில் மிகப்பெரிய விளையாட்டு ஸ்டேடியத்தில் அதிக இந்தியர்களை சந்தித்து பேச ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக ஆன்லைன் முன்பதிவை கொண்டு வர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் ஆதரவைப் பெறுவதற்காக ராகுல் இதுவரை அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பக்ரைன், சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். அடுத்த மாதம் அவர் செல்வது 5-வதுகட்ட வெளிநாட்டு பயணமாகும். துபாய், அபுதாபி பயணத்தை முடித்த பிறகு கனடா நாட்டுக்கு செல்ல ராகுல் திட்டமிட்டுள்ளார். #RahulGandhi #Congress

    இந்தியாவை சேர்ந்த 13 வயது சிறுவன் மென்பொருள் நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக அதனை நடத்தி வருகிறான். #MondayMotivaton #softwaredevelopment
    துபாய் நாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆதித்யன் ராஜேஷ் 13 வயது சிறுவன் தான். ஆனால் இவரது வயதிற்கு முற்றிலும் பொருந்தாத வகையில் இப்போதே தனக்கென மென்பொருள் நிறுவனம் ஒன்றை துவங்கி இருக்கிறான். டிரைநெட் சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் துவங்கப்பட்டு இருக்கும் மென்பொருள் நிறுவனத்தில் தற்சமயம் மூன்றுபேர் பணியாற்றி வருகின்றனர்.

    மூன்று பணியாளர்களும் ஆதித்யனுடன் பள்ளியில் பயிலும் நண்பர்கள் மற்றும் மாணவர்கள் ஆவர். தற்சமயம் நிறுவனங்களுக்கு வலைத்தளம் உருவாக்கி தரும் டிரைநெட் சொல்யூஷன்ஸ் அவர்கள் செய்யும் எந்த பணிக்கும் கட்டணம் வசூலிப்பதில்லை.

    ஆதித்யன் ராஜேஷ் தனது ஐந்து வயதில் கம்ப்யூட்டர் பயன்படுத்த துவங்கியதே, இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு பயிலும் வயதிலேயே கணினி மீது ஆர்வம் அதிகரிக்க தனது ஒன்பதாவது வயதில் மொபைல் செயலி ஒன்றை வெளியிட்டான்.

    வீட்டில் போரடிக்கும் நேரத்தில் தனது முதல் செயலியை உருவாக்கிய ஆதித்யன், அதன் பின் நிறுவனங்களுக்கு லோகோ மற்றும் வலைத்தளங்களை உருவாக்கி கொடுக்க ஆரம்பித்தார். கேரளாவின் திருவில்லாவில் பிறந்த ஆதித்யன் தனது ஐந்து வயதில் துபாய் நாட்டிற்கு இடம்பெயர்ந்தான்.

    புகைப்படம் நன்றி: Aadi Media

    நிறுவனத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்ய ஆதித்யன் 18 வயது வரை காத்திருக்க வேண்டும். எனினும், ஏற்கனவே டிரைநெட் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மற்ற நிறுவனங்களை போன்று இயங்கி வருகிறது. இதுவரை 12 நிறுவனங்களுக்கு டிரைநெட் சொல்யூஷன்ஸ் சார்பில் வடிவமைப்பு மற்றும் குறியீடு பணிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

    டிசம்பர் 7, 2017ம் ஆண்டில் டிரைநெட் சொல்யூஷன்ஸ் நிறுவனம் துவங்கப்பட்டது. தற்சமயம் ஏழாம் வகுப்பு பயிலும் ஆதித்யனுடன் டிரைநெட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் 11 மற்றும் 12 வகுப்பு பயிலும் மாணவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    தற்சமயம் ஆதித்யன் தனது பள்ளி ஆசிரியர்களுக்காக பிரத்யேக செயலி ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளான். இந்த செயலி ஆசிரியர்களின் பணியை பாதியாக குறைக்கும் அம்சங்களை கொண்டிருக்கும் என ஆதித்யன் தெரிவித்திருக்கிறான். மென்பொருள் நிறுவனம் தவிர யூடியூப் சேனல் மூலம் தனக்கு தெரிந்த தகவல்களை ஆதித்யன் வீடியோ மூலம் பகிர்ந்து கொண்டு வருகிறார்.  #MondayMotivaton #softwaredevelopment
    நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. #PAKvNZ #Pakistan #NewZealand
    துபாய்:
     
    பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்தது.

    இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. அதிகபட்சமாக ஹாரிஸ் சோகைல் 147 ரன்னும், பாபர் அசாம் ஆட்டம் இழக்காமல் 127 ரன்னும் எடுத்தனர்.

    அதன்பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி, யாசிர் ஷா பந்து வீச்சில் சிக்கி 90 ரன்னில் சுருண்டது. யாசிர் ஷா 8 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.

    பாலோ ஆன் பெற்ற நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. நேற்று 3-வது நாள் ஆட்டநேரம் முடிவில் 2 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தது. டாம் லாதம் 44 ரன்னுடனும், ராஸ் டெய்லர் 49 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. டாம் லாதம் அரை சதமடித்து வெளியேறினார். அடுத்து இறங்கிய ஹென்றி நிகோலஸ் டெய்லருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ராஸ் டெய்லர் 82 ரன்னிலும், ஹென்றி நிகோலஸ் 77 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. 



    இறுதியில், நியூசிலாந்து அணி 112.5 ஓவரில் 312 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் யாசிர் ஷா 6 விக்கெட்டுகளும், ஹசன் அலி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, பாகிஸ்தான் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் 14 விக்கெட்டுகள் வீழ்த்திய யாசிர் ஷா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    இந்த வெற்றி மூலம் இரு அணிகளும் தலாஒரு வெற்றியை பெற்றுள்ளன. இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3-ம் தேதி தொடங்கவுள்ளது. #PAKvNZ #Pakistan #NewZealand
    பல்வேறு புதிய தொழில்நுட்பங்களில் கலக்கி வரும் துபாய் போலீசார், தற்போது பறக்கும் மோட்டார்சைக்கிள்களையும் பயன்படுத்தி பயிற்சி செய்து வருகின்றனர். #DubaiPolice #Hoversurf #FlyingMotorbikes
    அபுதாபி: 

    உலகின் மிகவும் விரும்பப்படும் சுற்றுலா நகரங்கள் வரிசையில் துபாய் முதன்மை வகிக்கிறது. மேலும், உலக நாடுகளை அதீத தொழில்நுட்ப பயன்பாடுகளினால் வியப்பில் ஆழ்த்தும் நாடுகளில் ஒன்றாகவும் துபாய் பார்க்கப்படுகிறது.

    பல்வேறு உலக நாடுகளில் வானத்தில் பறக்கும் சிறிய ரக வாகனங்கள் அதிகம் பயன்படுத்தப்படாத நிலையில், துபாய் போலீசார் பறக்கும் மோட்டார்சைக்கிள்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதன்மூலம் வானத்தில் இருந்தபடியே கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும்.

    இந்த ஹோவர் பைக்கை ரோந்து பணிகளுக்காகவும், விபத்தில் சிக்குபவர்களுக்கு முதலுதவி அளிக்கும் விதத்திலும் பயன்படுத்த துபாய் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனை ரிமோட் கன்ட்ரோல் முறையிலும் ஆள் இல்லாமலும் இயக்கலாம்.



    ஸ்கார்பியன் என அழைக்கப்படும் புதிய பறக்கும் மோட்டார்சைக்கிள் கலிபோர்னியாவை சேர்ந்த ஹோவர்சர்ஃப் (Hoversurf) எனும் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைத்துள்ளது. நான்கு இறக்கைகள் வாகனத்தின் இருக்கையை சுற்றி நான்கு முனைகளில் பொருத்தப்பட்டுள்ளது.

    ஹோவர்சர்ஃப் மோட்டார்சைக்கிள் தொடர்ச்சியாக 25 நிமிடத்துக்கு வானத்தில் பறக்கும் என்றும், மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. ஒருவர் மட்டும் பயணம் செய்யக்கக்கூடிய ஸ்கார்பியான் தானியங்கி முறையில் இயங்கும் என்றும் அதிகபட்சம் 272 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வரும் 2020-ம் ஆண்டில் இந்த பறக்கும் மோட்டார்சைக்கிள்களின் பயன்பாடு வரவுள்ளது என துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர். #DubaiPolice #Hoversurf #FlyingMotorbikes
    துபாயில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் தொடரையும் கைப்பற்றியது. #PAKvNZ
    துபாய்:

    பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர் அபுதாபியில் நடைபெறுகிறது. முதல் டி 20 போட்டியில் 2 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டி-20 போட்டி அபுதாபியில் நேற்று நடைபெற்றது. 

    டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் காலின் முன்ரோ 28 பந்துகளில் 44 ரன்களும், கேப்டன் கேன் வில்லியம்சன்37 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.  

    கோரி ஆண்டர்சன் 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் ஷகின் அப்ரிதி 3 விக்கெட் எடுத்தார்.



    இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. பாபர் அசாம் 40 ரன்களிலும், அசிப் அலி 38 ரன்களிலும், பகர் சமான் 24 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

    ஆட்டத்தின் இறுதியில், மொகமது ஹபீஸ் நிலைத்து நின்று ஆடி 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்துஅவுட்டாகாமல் பாகிஸ்தானை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். நியூசிலாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    ஆட்ட நாயகனாக ஷகின் அப்ரிதி தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 2-0 என டி 20 தொடரை கைப்பற்றியுள்ளது. #PAKvNZ
    ×