என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ashok Gehlot"
- இரட்டை என்ஜினில் ஒன்று எப்போதுமே பழுது
- ஒற்றை என்ஜின் சிறப்பாக செயல்பட்டு வருகிறது
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் சமூக பாதுகாப்பு பென்சன் திட்டத்தின் கீழ் பயன் அடைந்தவர்களுடன் உரையாடினார். அப்போது இரட்டை என்ஜின் அரசைவிட ஒற்றை என்ஜின் அரசு சிறப்பாக செயல்படுகிறது எனது பாரதிய ஜனதாவை விமர்சனம் செய்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சிலர் அவர்களுடைய அரசாங்கத்தை (மாநிலம் மற்றும் மத்தியில் ஆட்சி செய்வதால்) இரட்டை என்ஜின் என்று கூறி வருகிறார்கள். ஆனால் அதில் ஒரு இந்தியன் எப்போதுமே பழுதாகியே உள்ளது. உண்மையான என்ஜின் ராஜஸ்தான் அரசு.
அவர்களுடைய இரட்டை என்ஜின் அரசைவிட இந்தியாவில் உள்ள எங்கும் ஒற்றை என்ஜின் ஆன எங்கள் ஒற்றை என்ஜின் அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது. எங்களுடைய ஒற்றை என்ஜின் பாதுகாப்பானது உறுதியானது.
பாரதிய ஜனதா அரசு மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்தால்தான், நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும். இதனால் மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே அரசான இரட்டை என்ஜின் அரசு தேவை என்று அடிக்கடி கூறிவரும் நிலையில், ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கிண்டல் செய்துள்ளார்.
மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த திட்டத்திற்காக ஆயிரம் கோடி ரூபாயை, அவர்களது கணக்கில் போடப்பட்டுள்ளதாக தெரிவித்த அசோக் கெலாட், இந்த திட்டத்திற்கான சட்டம் இயற்றப்படும் எனக் கூறினார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக இருக்கிறது. ஒற்றுமையாகவே இருக்கும். வரும் தேர்தலில் ஒற்றுமையாக செயல்பட்டு காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் எனக் கூறினார்
சட்டசபை தேர்தல் வரவிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் 21 தலைவர்கள், 42 பொதுச்செயலாளர்கள், ஒருங்கிணைப்பு பொதுச் செயலாளர், 121 செயலாளர் மற்றும் 25 மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்
- சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அறிவிப்பா? என எதிர்க்கட்சி விமர்சனம்
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அசோக் கெலாட் முதல்வராக இருக்கிறார். நான்கரை ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்த நிலையில் இந்த ஆண்டு இறுதியில் அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதனால் மக்கள் மனதை கவரும் வகையில் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே, கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை நழுவ விட்ட பா.ஜனதா, கெலாட்- சச்சின் பைலட் இடையிலான மோதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை கையில் எடுத்து ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை பிடிக்க திட்டம் தீட்டி வருகிறது. இந்த நிலையில் அசோக் கெலாட் அறிவிப்பு பா.ஜனதாவை சற்று அச்சம் அடைய செய்துள்ளது.
இதற்கிடையே, நான்கரை ஆண்டுகள் மக்களை கொள்ளை அடித்துவிட்டு, ஆட்சியின் கடைசி காலத்தில் அறிவிப்புகளை வெளியிடுவதா? என சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான ராஜேந்திர ரதோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜேந்திர ரதோர் கூறியதாவது:-
மோடியின் மாநாடுகளை பார்த்து அசோக் கெலாட் ஈர்க்கப்பட்டுள்ளார். இதனால்தான் நேற்றிரவு வலுக்கட்டாயமாக இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
நான்கரை ஆண்டுகள் மக்களை கொள்ளையடித்துவிட்டு, தற்போது தேர்தலை அணுகுவதற்காக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் திடீரென உங்களுடைய அறிவிப்புகளை மக்கள் நம்புவதற்கு ஒன்றும் முட்டாள்கள் அல்ல. உங்களுடைய கொள்கை மற்றும் நோக்கம் குறைபாடானது.
இவ்வாறு ரதோர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி செய்துவருகிறது.
- அங்கு முதல் 100 யூனிட் வரை பயன்படுத்தும் மின்சாரம் இலவசம் என முதல் மந்திரி அசோக் கெலாட் அறிவித்தார்.
ஜெய்ப்பூர்:
மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கருடன் சேர்த்து ராஜஸ்தான் மாநிலத்திலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.
இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் 100 யூனிட் வரை பயன்படுத்தும் மின்சாரம் இலவசம் என முதல் மந்திரி அசோக் கெலாட் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதனால், அவர்கள் அந்த மின்சார பயன்பாட்டிற்கான கட்டணம் செலுத்த வேண்டிய தேவையில்லை. 100 யூனிட்டுக்கு கூடுதலாக பயன்படுத்தக்கூடிய மின்சாரத்தில் முதல் 100 யூனிட்டுக்கான கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
இதேபோல், 200 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதுடன், நிலையான கட்டணம், பிற கட்டணங்கள் உள்ளிட்டவை 200 யூனிட் வரை தள்ளுபடி செய்யப்படும். அவர்களுக்கான மின் கட்டணத்தொகையை அரசே செலுத்தி விடும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- சாவர்க்கரின் பிறந்தநாளில் இதை செய்திருக்கக் கூடாது என சுதிப் பந்தோபாத்யாய் கூறி உள்ளார்.
- ஜனாதிபதி திறந்து வைப்பதே முறையானதாக இருக்கும் என அசோக் கெலாட் கூறியுள்ளார்.
கொல்கத்தா:
டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல, என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.
'ஜனாதிபதிதான் நாட்டின் அரசியலமைப்புத் தலைவர். எனவே, புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைப்பதே முறையானதாக இருக்கும்' என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.
குறிப்பாக சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெறுவதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன.
இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் சுதிப் பந்தோபாத்யாய் இதுபற்றி கூறுகையில், "மே 28ம் தேதி புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். சுதந்திர தினத்திலோ அல்லது குடியரசு தினத்திலோ அல்லது மகாத்மா காந்தி பிறந்த நாளிலோ இந்த விழா நடந்திருக்க வேண்டும். சாவர்க்கரின் பிறந்தநாளில் இதை செய்திருக்கக் கூடாது" என்றார்.
பாராளுமன்றம் என்பது வெறும் கட்டிடம் மட்டுமல்ல, பழைய மரபுகள், முன்னுதாரணங்கள் மற்றும் ஜனநாயக அடித்தளம் ஆகியவற்றை கொண்டு நிறுவப்பட்டது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் கூறினார்.
- பாராளுமன்ற திறப்பு விழா நடைபெறும் தேதி காங்கிரசை எரிச்சல் அடைய வைத்துள்ளது.
- உலக அளவில் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்றும் கெலாட் சுட்டிக்காட்டி உள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்துக்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்து கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் கட்டப்பட்ட புதிய பாராளுமன்ற வளாகம் கட்டும் பணிகள் முடிவடைந்துள்ளது. இதையடுத்து புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வருகிற 28-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை மோடி திறந்து வைப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. அத்துடன், பாராளுமன்ற திறப்பு விழா நடைபெறும் தேதியும் காங்கிரசை எரிச்சல் அடைய வைத்துள்ளது. அந்த தினம் சாவர்க்கரின் பிறந்தநாள் என்பதால், அந்த நாளை தேர்வு செய்தது தேசத்தை கட்டமைத்த தலைவர்களுக்கு அவமானம் என்றும் காங்கிரஸ் கூறுகிறது.
"புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல" என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.
இதே கருத்தை ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். ராகுல் காந்தியின் ட்வீட்டை பகிர்ந்துள்ள அவர், 'ஜனாதிபதி நாட்டின் அரசியலமைப்புத் தலைவர். எனவே, அரசியலமைப்புச் சட்டம், நெறிமுறைகள் மற்றும் பாராளுமன்ற அவைகளின் கண்ணியத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையில், புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைப்பதே முறையானதாக இருக்கும்' என கூறியுள்ளார்.
மேலும், அரசியல் ஆதாயம் மற்றும் விளம்பரம் தேடும் நோக்கத்திற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் உலக அளவில் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்றும் கெலாட் சுட்டிக்காட்டி உள்ளார்.
- ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது.
- நிலையான, விரைவான வளர்ச்சியைத்தான் வரலாறு காண்கிறது.
ஜெய்ப்பூர் :
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது.
அங்கு தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 350 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நாதத்வாரா நகரில் ராஜ்சமந்த்-உதய்பூர் இரு வழிப்பாதை மேம்பாடு திட்டம், உதய்பூர் ரெயில்நிலையம் மறுஉருவாக்கத்திட்டம், தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் என ரூ.5,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்கான விழா நேற்று நடந்தது.
இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு. முதல்-மந்திரி அசோக் கெலாட் முன்னிலையில் வளர்ச்சித்திட்டங்களைத் தொடங்கி வைத்துப்பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை பெயர் குறிப்பிடாமல் சாடினார். அவர் கூறியதாவது:-
நாட்டில் உள்ள சிலர் (காங்கிரசார்) சிதைக்கப்பட்ட சித்தாந்தத்துக்கு இரையாகி விட்டனர். அவர்கள் முற்றிலும் எதிர்மறையானவர்கள். அவர்கள் நாட்டில் நடக்கிற எந்த நல்லதையும் பார்க்க விரும்புவதில்லை. அவர்கள் சர்ச்சையை உருவாக்குவதைத்தான் விரும்புகிறார்கள்.
எல்லாவற்றையும் ஓட்டு அடிப்படையில் பார்ப்பவர்களால், நாட்டை மனதில் கொண்டு திட்டங்களைத் தீட்ட முடியாது. இந்த சிந்தனை காரணமாக நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுககு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை.
நிலையான, விரைவான வளர்ச்சியைத்தான் வரலாறு காண்கிறது. நவீன கட்டமைப்பு வசதிகளை அடிப்படை அமைப்புடன் உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.
தேவையான அளவுக்கு மருத்துவக் கல்லூரிகளை ஏற்கனவே தொடங்கியாகி விட்டது என்றால், டாக்டர்களுக்கு பற்றாக்குறை இருக்கக்கூடாது. எல்லா வீடுகளிலும் ஏற்கனவே தண்ணீர் கிடைக்கத் தொடங்கி இருந்தால், ஜல்ஜீவன் திட்டம் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
தொலைநோக்குத்திட்டத்துடன் ராஜஸ்தானிலும் போதுமான அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.
நவீன கட்டமைப்பு வசதிகள் நகரங்கள், கிராமங்களை இணைப்பதை அதிகரிக்கும். வசதிகளை ஏற்படுத்தும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். வளர்ச்சியை முடுக்கி விடும். வரும் 25 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை காண வேண்டும் என்று நாம் பேசுகிறபோது, இந்த நவீன கட்டமைப்பு வசதி, புதிய சக்தியாக உருவாகும்.
நாட்டில் எல்லா வகையிலான உள்கட்டமைப்புகளிலும் இதுவரையில்லாத வகையில் பெரும் முதலீடுகள் செய்யப்படுகின்றன. அதிவேகமாக பணிகள் நடைபெறுகின்றன.
உள்கட்டமைப்புகளுக்காக முதலீடுகள் செய்கிறபோது, அது வளர்ச்சியிலும், வேலை வாய்ப்புகளிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் நன்மைகள் மக்களுக்குப் போய்ச்சேருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜனநாயகத்தில் பகைமைக்கு இடம் இல்லை.
- எல்லோருக்கும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது.
ஜெய்ப்பூர் :
ராஜஸ்தானில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வளர்ச்சித்திட்டங்களைத் தொடங்கி வைத்துப்பேசிய விழாவில், அந்த மாநில காங்கிரஸ் முதல்-மந்திரி அசோக் கெலாட்டும் கலந்து கொண்டார். அப்போது அவர் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட வேண்டியதின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப்பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஜனநாயகத்தில் பகைமைக்கு இடம் இல்லை. சித்தாந்த சண்டைகளுக்குத்தான் இடம் உண்டு. எல்லோருக்கும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. நாட்டில் எல்லா மதத்தினர், சாதியினர் இடையேயும் அன்பும், சகோதரத்துவமும் இருக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகளை மதிக்க வேண்டும். இந்த திசையில் நீங்களும் (பிரதமர் மோடி) செல்வீர்கள் என்று நான் கருதுகிறேன். இது மட்டும் நடந்து விட்டால், ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து நாட்டுக்கு இன்னும் அதிக வீரியத்துடன் பணியாற்ற முடியும்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதற்காக தனது இன்னுயிரை நீத்தார். அவர் பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து காலிஸ்தான் உருவாவதை அனுமதிக்கவில்லை.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் படுகொலை செய்யப்பட்டார்.
நாம் அனைவரும் ஒற்றுமையாய் நடைபோட்டால், நாடு ஒன்றாக இருக்கும், ஒற்றுமையாகவும் இருக்கும்.
பதற்றமும், வன்முறையும் வளர்ச்சியைத் தடுத்துவிடும். நீங்கள் (பிரதமர் மோடி) விடுக்கும் செய்தி, நாட்டை ஒன்றுபட்டிருக்கச்செய்யும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடி முன்னிலையில் அசோக் கெலாட் பேசிய இந்தப் பேச்சு அரசியல் அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விழாவில் அசோக் கெலாட் பேச எழுந்தபோது, கூட்டத்தினர் எழுந்து "மோடி மோடி" என கோஷமிட்டனர். அப்போது பிரதமர் மோடி கூட்டத்தினரைப் பார்த்து " நீங்கள் உட்காருங்கள், அப்போதுதான் அசோக் கெலாட் இடையூறின்றி பேச முடியும்" என குறிப்பால் உணர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜனநாயக நாட்டில் லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்.
- அசோக் கெலாட்டுக்கு சொந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஜெய்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
கடந்த 2020-ம் ஆண்டு முதல் மந்திரி அசோக் கெலாட்டுக்கு எதிராக சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குரல் எழுப்பினர். இதனால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. பின்னர் மூத்த தலைவர்களின் சமரச பேச்சு காரணமாக பிரச்சினை முடிவுக்கு வந்தது.
இதுபற்றி தற்போது ஜோத்பூரில் நடந்த கூட்டத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட் பேசியபோது, 2020-ம் ஆண்டு தனது ஆட்சியை கவிழ்க்க உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோர் சதி செய்தனர். இதற்காக எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு பணம் வினியோகிக்கப்பட்டது.
ஆனால் அப்போது எனது ஆட்சி காப்பாற்றப்பட்டது. இதற்கு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி வசுந்துரா ராஜே சிந்தியா மற்றும் முன்னாள் சபாநாயகர் கைலாஷ் மேக்வால், எம்.எல்.ஏ. ஷோபாராணி குஷ்வா ஆகியோரே காரணம், எனது ஆட்சியை கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுக்கப்பட்ட பணத்தை யாரும் திரும்ப வாங்கவில்லை. இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது, என்று கூறியிருந்தார்.
முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறியதை வசுந்துரா ராஜே சிந்தியா மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
அசோக் கெலாட்டுக்கு சொந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனை சமாளிக்க அவர் என்னை பற்றி தவறான கருத்துக்களை கூறிவருகிறார்.
அவரது ஆட்சியை காப்பாற்ற நான் உதவி செய்ததாக அவர் பொய் கூறுகிறார். ஜனநாயக நாட்டில் லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம். அப்படியிருக்க ஒரு மாநிலத்தின் முதல்-மந்திரியே, எம்.எல்.ஏ.க்கள் லஞ்சம் வாங்கியதாக கூறியுள்ளார். அவரிடம் தான் உள்துறை இலாகா உள்ளது. அவர் உடனே அந்த எம்.எல்.ஏ. க்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜஸ்தானில் நடந்த குதிரை பேரத்திற்கு பின்னணியில் அசோக் கெலாட்டே இருந்தார். அவர் தான் இதற்கு மூளையாக செயல்பட்டார். ஆனால் பாரதிய ஜனதா ஒருபோதும் இது போன்ற செயல்களில் ஈடுப ட்டதில்லை, இனியும் ஈடுபட போவதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- நான் 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன், எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை.
- பாஜகவினருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என அசோக் கெலாட் விமர்சனம்
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் தகுதிவாய்ந்த மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களின் பலன்களை வழங்குவதற்காக 'பணவீக்க நிவாரண முகாம்கள்' நடத்தப்படுகின்றன. மக்களுக்கு நிவாரணம் வழங்க, 10 மக்கள் நலத் திட்டங்களில் ஏழை, எளிய மக்களை இணைக்கவும், உடனடி பலன்களை வழங்கவும் இந்த முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களை முதல்வர் அசோக் கெலாட் பார்வையிட்டு பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்.
அவ்வகையில் இன்று ஹனுமன்கர் மாவட்டம் ரவாஸ்தர் நகரில் உள்ள முகாமை பார்வையிட்ட முதல்வர் கெலாட், அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசியதாவது:-
பிரதமர் மோடியின் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அவர் எதையாவது சொல்கிறார், ஆனால் அது ஒருபோதும் நடப்பதில்லை. நாங்கள் இருவரும் முதலமைச்சராக இருந்தபோது, நாட்டில் குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று அவர் (மோடி) கூறினார். இப்போது நீங்கள் (மோடி) இரண்டு முறை நாட்டின் பிரதமராகிவிட்டீர்கள். ஏன் சட்டம் இயற்றப்படவில்லை?
மோடியின் ஆட்சியில் விமர்சிப்பவர் துரோகி. விமர்சித்தால் சிறைக்கு செல்வீர்கள். அவர்கள் (பாஜக-வினர்) நாட்டில் ஜனநாயகத்தை கொலை செய்கிறார்கள். அவர்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை.
நான் 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன், எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை. வாழ்வின் அனைத்தையும் காங்கிரஸ் கட்சி கொடுத்துள்ளது. சோனியா காந்தி என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். நான் மூன்று முறை முதல்வராக பதவியில் இருந்துள்ளேன். மத்தியில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். என் மூச்சு இருக்கும்வரை நான் உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- அசோக் கெலாட்டுக்கு எதிராக முன்னணி ஒன்றை சச்சின் பைலட் தொடங்கினார்.
- சச்சின் பைலட் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
ஜெய்ப்பூர் :
ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட், இளம் தலைவர் சச்சின் பைலட் என இரு தலைவர்களிடையேயான மோதலில் காங்கிரஸ் கட்சி, சிக்கித்தவிக்கிறது.
2018 சட்டசபை தேர்தலுக்குப்பின் முதல்-மந்திரி பதவியை இளம் தலைவர் சச்சின் பைலட் எதிர்பார்த்தார். ஆனால் அந்தப் பதவி, கட்சியின் மூத்த தலைவரான அசோக் கெலாட்டுக்கு கிடைத்தது. அதில் இருந்தே அவருடன் சச்சின் பைலட் மோதி வருகிறார். இந்த மோதல் போக்கு, கட்சித்தலைமையின் தலையீட்டால் அவ்வப்போது சற்றே தணிவதும், பின்னர் மீண்டும் அனல் வீசுவதும் தொடர்கிறது.
இந்த ஆண்டு அங்கு சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், அசோக் கெலாட்டுக்கு எதிராக முன்னணி ஒன்றை சச்சின் பைலட் தொடங்கினார். அத்துடன் முந்தைய முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. அரசின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த அசோக் கெலாட் அரசை வலியுறுத்தி 11-ந் தேதி ஒரு நாள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவேன் எனவும் அவர் அதிரடியாக அறிவித்தார்.
இதற்காக அவருக்கு ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா எச்சரிக்கை விடுத்தார். மாநில அரசுக்கு எதிரான இத்தகைய போராட்டம், கட்சி விரோத நடவடிக்கை, கட்சியின் நலன்களுக்கு எதிரானது என எச்சரித்தார்.
ஆனாலும் சச்சின் பைலட் அதைப் பொருட்படுத்தாமல் திட்டமிட்டபடி ஜெய்ப்பூரில் வரலாற்றுச்சிறப்பு மிக்க போர் நினைவுச்சின்னமான 'ஷாகீத் ஸ்மாரக்'கில் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினார்.
வரவேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டதால், இந்த உண்ணாவிரதப்போராட்டம் நடந்த இடத்துக்கு ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வரவில்லை. ஆனால் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கு போட்டி நடவடிக்கை போல 2030-ம் ஆண்டுக்குள் ராஜஸ்தான் மாநிலத்தை முன்னணி மாநிலமாக உயர்த்துவதற்கான தொலைநோக்குப்பார்வை வீடியோவை அசோக் கெலாட் அதிரடியாக வெளியிட்டார்.
இந்த வீடியோவில் அவர், " 2030-ம் ஆண்டுக்குள் ராஜஸ்தானை முன்னணி மாநிலமாக ஆக்குவதற்கு நான் தீர்மானித்துள்ளேன். இந்தக் கனவை நனவாக்குவதற்காக, கடந்த 4 ஆண்டுகளாகவும், இந்த ஆண்டும் தாக்கல் செய்த பட்ஜெட்டுகளில் பிற எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களை அறிவித்து இருக்கிறேன்" என கூறி உள்ளார். தான் அமல்படுத்தி உள்ள சிரஞ்சீவி சுகாதார காப்பீடு, சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம், ரூ.10 லட்சம் விபத்துக்காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அசோக் கெலாட், சச்சின் பைலட் மோதல் மீண்டும் வெளிப்படையாக வெடித்திருப்பது, தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
- ராஜஸ்தான் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் அசோக் கெலாட்.
- இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் அசோக் கெலாட்.
இந்நிலையில், முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கெலாட் கூறுகையில், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்து பணிகளை கவனித்து வருகிறேன். லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
அதேபோல், பா.ஜ.க.வை சேர்ந்தவரும் அம்மாநில முன்னாள் முதல் மந்திரியான வசுந்தரா ராஜேவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- பாராளுமன்றத்தில் இருந்து ராகுல் காந்தியை வெளியேற்றியதற்கான விளைவுகளை பா.ஜனதா எதிர்கொள்ளும்.
- ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகரித்ததால் சிலர் அச்சமடைந்தனர்.
ஜெய்ப்பூர் :
அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதன் பின்னணியில் சதி இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.
கோட்டாவில் நடந்த காங்கிரசாரின் போராட்டம் ஒன்றில் பேசும்போது அவர் கூறுகையில், 'விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சமூக பதற்றம், ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு போன்றவைதான் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் வைக்கப்பட்ட முக்கிய பிரச்சினைகளாக இருந்தன. இந்த பயணத்தின் வெற்றியால் ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகரித்ததால் சிலர் அச்சமடைந்தனர். இதனால் சதி செய்து அவரை மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளனர்' என தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இருந்து ராகுல் காந்தியை வெளியேற்றியதற்கான விளைவுகளை பா.ஜனதா எதிர்கொள்ளும் எனக்கூறிய அவர், இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இருப்பதாகவும், இது ஒரு நல்ல அறிகுறி என்றும் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்