என் மலர்
நீங்கள் தேடியது "Ashok Gehlot"
- மோடிக்கு எதிரான சவால் மிகப் பெரியது என்று நான் உணர்கிறேன்.
- மல்லிகார்ஜூன கார்கே பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அசோக் கெலாட் பேட்டி.
டெல்லியில் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக வர வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், ஏனெனில் அவர் மட்டுமே பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விட முடியும். அன்பு, பாசம் கலந்த அரசியல் இருக்க வேண்டும், வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற செய்தியை ராகுல்காந்தியின் யாத்திரை நாட்டுக்கு தெரிவித்துள்ளது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகளையும் அவர் எழுப்பியுள்ளார்.
சோனியாகாந்தி குடும்பம் அல்லாத கட்சித் தலைவர் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்ட பிறகு கார்கே பொறுப்பேற்றார். சவால் மிகப் பெரியது என்று நான் உணர்கிறேன். சோனியாகாந்தி என்ன முடிவு எடுத்தாலும் அது மதிக்கப்படும் மற்றும் அவரது கரங்கள் பலப்படுத்தப்படும் என்பதை நாங்கள் அனைவரும் உறுதி செய்வோம். நாடு பெரிய சவால்களை எதிர்கொள்ளும் நேரத்தில் காங்கிரஸுக்கு இது ஒரு புதிய தொடக்கம். சோனியாகாந்தி அரசியலுக்கு வந்த போது அவருக்கு எதிராக இருந்தவர்கள் அவரது அபிமானிகளாக மாறினார்கள்.
இன்று காங்கிரஸ் தலைவர் பதவியை சோனியா காந்தி ராஜினாமா செய்தது அனைத்து காங்கிரஸ்காரர்களுக்கும் ஒரு உணர்ச்சிகரமான தருணம். சோனியா காந்தியின் வழிகாட்டுதல் கட்சிக்கு விலைமதிப்பற்றது. 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில், பாஜகவை தோற்கடித்து மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை காங்கிரஸ் அமைத்தது. சோனியா பிரதமர் பதவியையும் துறந்து, காங்கிரஸை ஒரு குடும்பம் போல் நடத்தினார். இந்த தியாகம், பாசம் மற்றும் சொந்தம் ஆகியவற்றின் காரணமாக, அவரது தலைமையின் கீழ் கட்சி ஒன்றுபட்டது மற்றும் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியை உருவாக்கியது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்கள்தான் உள்ளன.
- கட்சியின் சட்ட திட்டங்களும், விதிகளும் எல்லோருக்கும் ஒன்றுதான்.
ஜெய்ப்பூர் :
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக்கெலாட் போட்டியிட விரும்பினார். ஒருவருக்கு ஒரு பதவி என்பதில் காங்கிரஸ் மேலிடம் உறுதியாக இருப்பதால், அவர் கட்சித்தலைவர் பதவிக்கு போட்டியிட்டால், அங்கு முதல்-மந்திரியை மாற்றி விடலாம் என முடிவுக்கு வந்தது. குறிப்பாக நீண்ட காலமாக அந்தப் பதவி மீது கண் வைத்துள்ள சச்சின் பைலட்டை முதல்-மந்திரி ஆக்க முடிவு எடுத்தது. இதற்காக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தி புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய மேலிடம் மல்லிகார்ஜூன கார்கேயையும், அஜய் மக்கானையும் ராஜஸ்தான் அனுப்பியது.
ஆனால் முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க அசோக் கெலாட் முன்வரவில்லை. எனவே மேலிட முடிவுக்கு எதிராக அசோக் கெலாட் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியதுடன், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். மேலும் போட்டி கூட்டமும் நடத்தினர். இது கட்சி விரோத செயலுக்காக பார்க்கப்பட்டது.
இதையொட்டி மந்திரிகள் சாந்தி தாரிவால், மகேஷ் ஜோஷி, ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் தர்மேந்திர ரத்தோர் உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் மேலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் அசோக் கெலாட், சோனியா காந்தியை சந்தித்து பேசி தனது ஆதரவாளர்களின் செயல்களுக்கு தார்மீகப்பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டதுடன், காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து பின்வாங்கினார். இத்துடன் இந்த விவகாரம் முடிவுக்கு வந்து விட்டது என கருதப்பட்டது.
ஆனால் அது நீறுபூத்த நெருப்பாக தொடர்கிறது.
இந்த விவகாரத்தில் இப்போது சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி உள்ளார். காங்கிரஸ் தலைமையின் முடிவுக்கு எதிராக செயல்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
கட்சி விரோத நடவடிக்கைக்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்கள் மீது கட்சித்தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்கள்தான் உள்ளன. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் போன்று என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை விரைவாக எடுக்க வேண்டும்.
கட்சியின் சட்ட திட்டங்களும், விதிகளும் எல்லோருக்கும் ஒன்றுதான். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விரைவாக முடிவு எடுக்க வேண்டும்.
ஒரு நிகழ்ச்சியின்போது ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டை பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார். இதை எளிதாக எடுத்துக்கொண்டு விட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் சச்சின் பைலட்டின் போர்க்கொடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
- ஒரு பொதுவான நபரை அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து முடிவுசெய்யும்.
- ஆம் ஆத்மி கட்சி மக்களை தவறாக வழிநடத்துவதாக அசோக் கெலாட் குற்றச்சாட்டு
சிம்லா:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட் கூறியதாவது:-
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை பயணம்' மூலம் முன்னிலைப்படுத்தி வரும் விஷயங்கள் பொது மக்களுடன் தொடர்புடையவை. அவரது செய்தி நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றடைகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விடக்கூடிய தகுதி ராகுல் காந்திக்கு உள்ளது. ஆனால் ஒரு பொதுவான நபரை அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து முடிவுசெய்யும்.
குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் அரசுக்கு எதிரான அலை உள்ளது. காங்கிரஸ் வேகமாக முன்னேறி வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். குஜராத் மாநிலத்தில் இப்போதுதான் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 175 சட்டமன்றத் தொகுதிகளைக் கடந்து ஐந்து யாத்திரைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். நாங்கள் சிறப்பாகச் செயல்படுவோம் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அசோக் கெலாட் கூறினார்.
குஜராத்தில் ஆம் ஆத்மியின் தாக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "ஆம் ஆத்மி கட்சி மக்களை தவறாக வழிநடத்துகிறது. ஊடகங்களைக் கைப்பற்றியுள்ளது. இதைத் தவிர வேறு எதுவும் இல்லை" என்று அசோக் கெலாட் தெரிவித்தார்.
தற்போது நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்களில் ராகுல் காந்தி பிரசாரம் செய்யாதது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கெலாட், "ராகுல் காந்தியின் பாதயாத்திரை பயணம் இருப்பதால் பல மாநிலங்களுக்கு செல்ல முடியவில்லை. காரணமே இல்லாமல் அதை பிரச்சனை ஆக்க பார்க்கிறார்கள்" என்றார்.
- சச்சின் பைலட் 2020-ம் ஆண்டு காங்கிரசுக்கு எதிராக கொடி பிடித்தவர்.
- பைலட் காங்கிரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதில் அமித்ஷாவுக்கு தொடர்பு உள்ளது.
புதுடெல்லி :
ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், அங்கு முதல்-மந்திரியாக துடிக்கிற சச்சின் பைலட்டுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு உள்ளது.
இந்த நிலையில், அசோக் கெலாட் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சச்சின் பைலட் 2020-ம் ஆண்டு காங்கிரசுக்கு எதிராக கொடி பிடித்தவர். எனது அரசை கவிழ்க்க முயன்றார். துரோகியான அவரை ராஜஸ்தான் முதல்-மந்திரி ஆக்க முடியாது.
பைலட் காங்கிரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு தொடர்பு உள்ளது. அவருக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்களை ஒரு மாதத்துக்கும் மேலாக குருகிராமில் ஒரு விடுதியில் தங்க வைத்தனர். மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அவர்களை சந்தித்தார். பைலட் உள்ளிட்ட அந்த எம்.எல்.ஏ.க்களுக்கு ஒவ்வொருவருக்கும் ரூ.10 கோடி கொடுக்கப்பட்டதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்கு உதவும் என கட்சித்தலைமை கருதினால், என்னை மாற்றட்டும். பைலட் தவிர்த்து 102 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் யாரை வேண்டுமானாலும் முதல்-மந்திரி ஆக்கட்டும். கட்சியின் தலைவர், தனது சொந்த கட்சியின் அரசை கவிழ்க்க முயற்சித்த உதாரணத்தை ஒருவரும் கண்டிருக்க முடியாது.
இதுவரை அவர் எம்.எல்.ஏ.க்களிடம் மன்னிப்பு கேட்டதில்லை.
அவர் மன்னிப்பு கேட்டிருந்தால், நான் (சோனியாவிடம்) மன்னிப்பு கேட்க வேண்டி வந்திருக்காது.
கட்சித்தலைமை பைலட்டை முதல்-மந்திரியாக்க முடிவு எடுத்தால், என்ன செய்வீர்கள் என கேட்கிறீர்கள்.
இது அனுமானத்தின் அடிப்படையிலானது. இது எப்படி நடக்கும்? அது நடக்காது.
ராஜஸ்தானுக்கு காங்கிரஸ் தலைமை நீதி வழங்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையிலான மோதல் முற்றி உள்ளது.
- காங்கிரசால் மட்டுமே பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும்.
புதுடெல்லி :
ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. சச்சின் பைலட்டுக்கும் இடையிலான மோதல் முற்றி உள்ளது. சச்சின் பைலட் ஒரு துரோகி, அவர் முதல்-மந்திரி ஆக முடியாது என்று அசோக் கெலாட் கூறியிருந்தார்.
இதற்கு சச்சின் பைலட் பதில் அளித்துள்ளார். ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
அசோக் கெலாட் என்னை குறிவைத்து பேசி இருப்பதை பார்த்தேன். என்னை 'துரோகி', 'உபயோகம் இல்லாதவன்' என்றெல்லாம் அவர் கூறி இருக்கிறார்.
இத்தகைய அவதூறு வார்த்தைகளை பேசுவது நீண்டகால அனுபவம் வாய்ந்த, ஒரு மூத்த தலைவருக்கு அழகல்ல. அவர் சொல்வது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள்.
நீண்ட காலமாகவே அசோக் கெலாட் என் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இந்த நேரத்தில் நாம் பா.ஜனதாவுக்கு எதிராக ஒற்றுமையாக போராட வேண்டும்.
அசோக் கெலாட் மூத்த பார்வையாளராக உள்ள குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தியின் கரத்தையும், கட்சியையும் வலுப்படுத்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இது, பா.ஜனதாவை தோற்கடிக்க ஒன்றுபட்டு போராட வேண்டிய நேரம். ஏனென்றால், காங்கிரசால் மட்டுமே பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும். இந்த நேரத்தில் மாறி மாறி சேறு வாரி வீசுவது, எந்த பயனையும் அளிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, அசோக் கெலாட்-சச்சின் பைலட் மோதல் தீர்த்து வைக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:-
அசோக் கெலாட், அனுபவம் வாய்ந்த, மூத்த அரசியல் தலைவர். தனது இளைய சகா சச்சின் பைலட்டுடன் அவருக்கு என்ன கருத்து வேறுபாடு இருந்தாலும், கட்சிக்கு வலுவூட்டும்வகையில் அதற்கு தீர்வு காணப்படும்.
இந்த நேரத்தில் பாதயாத்திரைக்கு வடமாநிலங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுதான் ஒவ்வொரு காங்கிரசாரின் கடமையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை சிலிண்டர் ரூ.410க்கு விற்கப்பட்டடதாக அசோக் கெலாட் பேச்சு
- ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்:
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு முதல் பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டரை 500 ரூபாய்க்கு வழங்க முடிவு செய்துள்ளது. வறுமைக் கோட்டுககு கீழ் உள்ளவர்களுக்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இந்திய ஒற்றுமை பயண பொதுக்கூட்டத்தில் அசோக் கெலாட் பேசுகையில், 'ஏழைகள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் மற்றும் உஜ்வாலா யோஜனா திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து ஆய்வு செய்து வகைப்படுத்தப்படும். பின்னர், ஏப்ரல் 1ம் தேதி முதல் 500 ரூபாய்க்கு அவர்களுக்கு சிலிண்டர் வழங்கப்படும். இது தொடர்பாக வரும் பட்ஜெட்டில் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும். மேலும் பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்படும்' என்றார்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2014-ஆம் ஆண்டு வரை ரூ.410க்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர், இப்பாது ரூ.1,040க்கு விற்கப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடியையும் அசோக் கெலாட் விமர்சனம் செய்தார்.
ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை காங்கிரஸ் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், ஏழைகளுக்கு ரூ.500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று கெலாட் வாக்குறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- பட்ஜெட்டை தவறுதலாக வாசித்ததற்காக அசோக் கெலாட் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
- பாஜக தலைவர் வசுந்தரா ராஜே அசோக் கெலாட்டை கடுமையாக விமர்சித்தார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யபட்டது. நிதித்துறை பொறுப்பும் முதல் மந்திரி அசோக் கெலாட்டிடமே உள்ளதால் பட்ஜெட்டை அவரே தாக்கல் செய்தார். அசோக் கெலாட் பட்ஜெட் தாக்கல் செய்து உரையை வாசித்துக்கொண்டு இருந்தார். சுமார் 7 நிமிடங்கள் வாசித்த நிலையில், அவர் கடந்த ஆண்டின் பட்ஜெட் உரையை படிப்பதை தலைமை கொறடா மகேஷ் ஜோஷி, கவனித்தார். உடனடியாக அவர் அசோக் கெலாட்டிடம் இதைக் கூறினார்.
உடனே சுதாரித்துக்கொண்ட அசோக் கெலாட் பட்ஜெட் உரை வாசிப்பதை நிறுத்தினார். தவறுதலாக வாசித்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்ட அவர், இந்த ஆண்டின் பட்ஜெட்டை வாசித்தார்.
முதல்வரின் இந்த கவனக்குறைவை சுட்டிக்காட்டி, பாஜக எம்.எல்.எக்கள் சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்த பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். உறுப்பினர்களை அமைதி காக்குமாறு சபாநாயகர் வலியுறுத்தினார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான் முன்னாள் முதல் மந்திரியும் பாஜக தலைவருமான வசுந்தரா ராஜே, முதல்வர் அசோக் கெலாட்டை கடுமையாக விமர்சித்தார். வசுந்தரா ராஜே பேசுகையில், "நான் முதல் மந்திரியாக இருந்தபோது பட்ஜெட் வாசிப்பதற்கு முன்பாக முழுமையாக சரிபார்த்துக்கொள்வேன். கடந்த பட்ஜெட்டை மீண்டும் வாசிக்கும் முதல்வரின் கையில் மாநிலம் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்" என்றார்.
இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது, இது கசிந்துவிட்டதா? என்று பாஜக தலைவர் குலாப் சந்த் கட்டாரியா கூறினார்.
இன்று முதல்வர் கெலாட் பழைய பட்ஜெட்டை தாக்கல் செய்ததன் மூலம் ராஜஸ்தான் சட்டசபை அவமதிக்கப்பட்டுள்ளது என பாஜக எம்எல்ஏ ராஜேந்திர ரத்தோர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த அசோக் கெலாட், 'உங்கள் கையில் கொடுக்கப்பட்டு இருக்கும் பட்ஜெட்டின் நகலில் இருந்து என்னிடம் இருக்கும் பட்ஜெட் உரையில் வேறுபாடு இருந்தால் என்னிடம் சுட்டிக்காட்டுங்கள். பட்ஜெட் உரை கசிந்துவிட்டதாக எப்படி சொல்ல முடியும்? தவறுதலாக கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இருந்த பக்கங்கள் சேர்க்கப்பட்டு விட்டது" என்றார்.
- கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு 3,000 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
- பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் தினமும் பால் வழங்கப்படும்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று முதலமைச்சர் அசோக் கெலாட் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னதாக அவர் தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதில், ரூ.19,000 கோடிக்கு நிவாரண தொகுப்பை அறிவித்தார்.
பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
11 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் 2000 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். வீடுகளுக்கு மாதம் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ், ஒரு கோடி குடும்பங்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்படும்.
உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ் 76 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் தினமும் பால் வழங்கப்படும்.
மாநில அரசு வாரியங்கள், பெருநிறுவனங்கள், கல்விக்கூடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 2004ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு முன் பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்.
மாநிலம் முழுவதும் மாணவிகளுக்கு 30,000 மின்சார இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு 3,000 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும். தோல் நோய் தாக்குதலால் கால்நடைகளை இழந்த கால்நடை வளர்ப்போருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும். புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பாராளுமன்றத்தில் இருந்து ராகுல் காந்தியை வெளியேற்றியதற்கான விளைவுகளை பா.ஜனதா எதிர்கொள்ளும்.
- ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகரித்ததால் சிலர் அச்சமடைந்தனர்.
ஜெய்ப்பூர் :
அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதன் பின்னணியில் சதி இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.
கோட்டாவில் நடந்த காங்கிரசாரின் போராட்டம் ஒன்றில் பேசும்போது அவர் கூறுகையில், 'விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சமூக பதற்றம், ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு போன்றவைதான் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் வைக்கப்பட்ட முக்கிய பிரச்சினைகளாக இருந்தன. இந்த பயணத்தின் வெற்றியால் ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகரித்ததால் சிலர் அச்சமடைந்தனர். இதனால் சதி செய்து அவரை மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளனர்' என தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இருந்து ராகுல் காந்தியை வெளியேற்றியதற்கான விளைவுகளை பா.ஜனதா எதிர்கொள்ளும் எனக்கூறிய அவர், இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இருப்பதாகவும், இது ஒரு நல்ல அறிகுறி என்றும் கூறினார்.
- ராஜஸ்தான் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் அசோக் கெலாட்.
- இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் அசோக் கெலாட்.
இந்நிலையில், முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கெலாட் கூறுகையில், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்து பணிகளை கவனித்து வருகிறேன். லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
அதேபோல், பா.ஜ.க.வை சேர்ந்தவரும் அம்மாநில முன்னாள் முதல் மந்திரியான வசுந்தரா ராஜேவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- அசோக் கெலாட்டுக்கு எதிராக முன்னணி ஒன்றை சச்சின் பைலட் தொடங்கினார்.
- சச்சின் பைலட் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
ஜெய்ப்பூர் :
ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட், இளம் தலைவர் சச்சின் பைலட் என இரு தலைவர்களிடையேயான மோதலில் காங்கிரஸ் கட்சி, சிக்கித்தவிக்கிறது.
2018 சட்டசபை தேர்தலுக்குப்பின் முதல்-மந்திரி பதவியை இளம் தலைவர் சச்சின் பைலட் எதிர்பார்த்தார். ஆனால் அந்தப் பதவி, கட்சியின் மூத்த தலைவரான அசோக் கெலாட்டுக்கு கிடைத்தது. அதில் இருந்தே அவருடன் சச்சின் பைலட் மோதி வருகிறார். இந்த மோதல் போக்கு, கட்சித்தலைமையின் தலையீட்டால் அவ்வப்போது சற்றே தணிவதும், பின்னர் மீண்டும் அனல் வீசுவதும் தொடர்கிறது.
இந்த ஆண்டு அங்கு சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், அசோக் கெலாட்டுக்கு எதிராக முன்னணி ஒன்றை சச்சின் பைலட் தொடங்கினார். அத்துடன் முந்தைய முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. அரசின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த அசோக் கெலாட் அரசை வலியுறுத்தி 11-ந் தேதி ஒரு நாள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவேன் எனவும் அவர் அதிரடியாக அறிவித்தார்.
இதற்காக அவருக்கு ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா எச்சரிக்கை விடுத்தார். மாநில அரசுக்கு எதிரான இத்தகைய போராட்டம், கட்சி விரோத நடவடிக்கை, கட்சியின் நலன்களுக்கு எதிரானது என எச்சரித்தார்.
ஆனாலும் சச்சின் பைலட் அதைப் பொருட்படுத்தாமல் திட்டமிட்டபடி ஜெய்ப்பூரில் வரலாற்றுச்சிறப்பு மிக்க போர் நினைவுச்சின்னமான 'ஷாகீத் ஸ்மாரக்'கில் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினார்.
வரவேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டதால், இந்த உண்ணாவிரதப்போராட்டம் நடந்த இடத்துக்கு ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வரவில்லை. ஆனால் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கு போட்டி நடவடிக்கை போல 2030-ம் ஆண்டுக்குள் ராஜஸ்தான் மாநிலத்தை முன்னணி மாநிலமாக உயர்த்துவதற்கான தொலைநோக்குப்பார்வை வீடியோவை அசோக் கெலாட் அதிரடியாக வெளியிட்டார்.
இந்த வீடியோவில் அவர், " 2030-ம் ஆண்டுக்குள் ராஜஸ்தானை முன்னணி மாநிலமாக ஆக்குவதற்கு நான் தீர்மானித்துள்ளேன். இந்தக் கனவை நனவாக்குவதற்காக, கடந்த 4 ஆண்டுகளாகவும், இந்த ஆண்டும் தாக்கல் செய்த பட்ஜெட்டுகளில் பிற எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களை அறிவித்து இருக்கிறேன்" என கூறி உள்ளார். தான் அமல்படுத்தி உள்ள சிரஞ்சீவி சுகாதார காப்பீடு, சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம், ரூ.10 லட்சம் விபத்துக்காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அசோக் கெலாட், சச்சின் பைலட் மோதல் மீண்டும் வெளிப்படையாக வெடித்திருப்பது, தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
- நான் 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன், எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை.
- பாஜகவினருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என அசோக் கெலாட் விமர்சனம்
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் தகுதிவாய்ந்த மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களின் பலன்களை வழங்குவதற்காக 'பணவீக்க நிவாரண முகாம்கள்' நடத்தப்படுகின்றன. மக்களுக்கு நிவாரணம் வழங்க, 10 மக்கள் நலத் திட்டங்களில் ஏழை, எளிய மக்களை இணைக்கவும், உடனடி பலன்களை வழங்கவும் இந்த முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களை முதல்வர் அசோக் கெலாட் பார்வையிட்டு பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்.
அவ்வகையில் இன்று ஹனுமன்கர் மாவட்டம் ரவாஸ்தர் நகரில் உள்ள முகாமை பார்வையிட்ட முதல்வர் கெலாட், அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசியதாவது:-
பிரதமர் மோடியின் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அவர் எதையாவது சொல்கிறார், ஆனால் அது ஒருபோதும் நடப்பதில்லை. நாங்கள் இருவரும் முதலமைச்சராக இருந்தபோது, நாட்டில் குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று அவர் (மோடி) கூறினார். இப்போது நீங்கள் (மோடி) இரண்டு முறை நாட்டின் பிரதமராகிவிட்டீர்கள். ஏன் சட்டம் இயற்றப்படவில்லை?
மோடியின் ஆட்சியில் விமர்சிப்பவர் துரோகி. விமர்சித்தால் சிறைக்கு செல்வீர்கள். அவர்கள் (பாஜக-வினர்) நாட்டில் ஜனநாயகத்தை கொலை செய்கிறார்கள். அவர்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை.
நான் 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன், எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை. வாழ்வின் அனைத்தையும் காங்கிரஸ் கட்சி கொடுத்துள்ளது. சோனியா காந்தி என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். நான் மூன்று முறை முதல்வராக பதவியில் இருந்துள்ளேன். மத்தியில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். என் மூச்சு இருக்கும்வரை நான் உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.