search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tomato"

    • பழனி நகராட்சி தக்காளி மார்க்கெட்டில் விவசாயிகள் கொண்டு வரக்கூடிய தக்காளிக்கு 14 கிலோ அடங்கிய பெட்டி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.
    • கடந்த ஒரு மாதமாக தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    பழனி:

    பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான அமரபூண்டி, பாப்பம்பட்டி, நெய்க்காரப்பட்டி, தொப்பம்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

    தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்த நிலையில் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. பழனி நகராட்சி தக்காளி மார்க்கெட்டில் விவசாயிகள் கொண்டு வரக்கூடிய தக்காளிக்கு 14 கிலோ அடங்கிய பெட்டி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக மொத்த விலையில் விவசாயிகளுக்கு 1 கிலோ தக்காளி ரூ.7 முதல் ரூ.8 வரை மட்டுமே கிடைக்கிறது.

    கிராம பகுதியில் இருந்து தக்காளியை சந்தைக்குப் பறித்து எடுத்துச் செல்லக்கூடிய செலவிற்கு கூட போதுமானதாக இல்லாததால் விவசாயிகள் தோட்டத்திற்கு அருகில் சாலை ஓரங்களில் தக்காளி பழங்களை கொட்டி வருகின்றனர்.

    கடந்த ஒரு மாதமாக தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • தற்போது தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் ஆங்காங்கே சாலையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.
    • ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் விலை சரிவை சந்திப்பதும் விவசாயிகள் நஷ்டமடைவதும் தொடர்கதையாகவே உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் அடிக்கடி ஏற்படும் விலை சரிவு விவசாயிகளின் வாழ்க்கையை அதல பாதாளத்துக்கு தள்ளி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தற்போது தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் ஆங்காங்கே சாலையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் சாகுபடி செய்யப்படும் தக்காளி உடுமலை தினசரி சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து வியாபாரிகள் மூலம் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. கேரள மாநிலத்தின் சில பகுதிகளுக்கும் இங்கிருந்து தக்காளி அனுப்பி வைக்கப்படுகிறது. வரத்து மற்றும் தேவையை பொறுத்து தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் விலை சரிவை சந்திப்பதும் விவசாயிகள் நஷ்டமடைவதும் தொடர்கதையாகவே உள்ளது. தற்போது 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.80 முதல் ரூ.150 வரையே விற்பனையாகிறது. இதனால் போக்குவரத்து, சுங்கம், கூலி என செலவு செய்து சந்தைக்கு கொண்டு வந்து நஷ்டத்துடன் திரும்புவதை விட சாலை ஓரத்தில் வீசி எறிவதே சிறந்தது என்று விவசாயிகள் முடிவு செய்து விடுகின்றனர்.

    பல விவசாயிகள் விரக்தியின் உச்சத்தில், டிராக்டர்கள் மூலம் தக்காளி செடிகளை அழிக்க தொடங்கியுள்ளனர். ஆண்டுதோறும் ஏற்படும் இந்த நிலையால் தக்காளி செடிகள் மட்டும் அழிக்கப்படுவதில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரமும், எதிர்காலமும் சேர்ந்தே அழிந்து போகிறது. இந்தநிலை ஏற்படாமல் தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயம் மட்டுமல்லாமல் விவசாயியும் சேர்ந்தே அழியும் நிலை உருவாகி விடும்.

    எல்லா பொருட்களின் விலைவாசியும் 10 ஆண்டுகளுக்குள் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது.ஆனால் ஒரு கட்டு கீரை ரூ.10 லிருந்து ரூ.15 ஆக உயர்த்தப்பட்டால் அது அநியாய விலையாக பார்க்கப்படுகிறது. உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்கப்பட வேண்டும். ஆனால் ரூ.5-க்கும் ரூ.10-க்கும் அள்ளி கொடுத்து விட்டு விவசாயி மூலையில் முடங்கி கிடக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மடத்துக்குளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தக்காளியை கொட்டி உள்ளனர்.

    எனவே விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலையில் தக்காளி சந்தை உருவாக்கி, இருப்பு வைக்கவும், உரிய விலை கிடைக்கும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கவும், மதிப்புக் கூட்டுப்பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்து உள்ளது.

    போரூர்:

    சின்னவெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.120 வரை விற்கப்பட்டது. பின்னர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து அதன் விலை ரூ.100-க்கு கீழ் குறைந்தது. கிலோ ரூ.80 வரை விற்பனை ஆனது.

    இந்த நிலையில் கோயம்பேடு காய்கறி மார்கெட்டிற்கு சின்ன வெங்காயம் வரத்து மீண்டும் குறைந்து உள்ளது. இதனால் அதன் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. மொத்த விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.90-க்கு விற்கப்படுகிறது.வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சின்னவெங்காயத்தின் விலை மீண்டும் கிலோ ரூ.100-யை கடந்து உள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் சமையலில் சின்ன வெங்காயத்தின் பயன்பாட்டை குறைத்து உள்ளனர். பெரிய வெங்காயத்திற்கு மாறி உள்ளனர்.

    எனினும் பெரிய வெங்காயத்தின் விலையும் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இன்று மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ. 50 ஆக உள்ளது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் தக்காளி உற்பத்தி நடந்து வரும் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்து உள்ளது. தினசரி 55 லாரிகள் வரை விற்பனைக்கு குவிந்து வந்த தக்காளி இன்று 40 லாரிகளாக குறைந்தது. இதனால் தக்காளி விலையும் அதிகரித்து உள்ளது.

    மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.36-க்கும் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 வரையிலும் விற்பனை ஆனது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் விலை குறைந்து ரூ.50-க்கு விற்கப்படுகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை (கிலோவில்) வருமாறு:-

    ஊட்டி கேரட்-ரூ.40, முள்ளங்கி-ரூ.30, பீட்ரூட்-ரூ.25, அவரைக்காய் ரூ.65, ஊட்டி சவ்சவ்-ரூ.20, முருங்கைக்காய்- ரூ.90, முட்டை கோஸ்-ரூ.8, உஜாலா கத்தரிக்காய்- ரூ.30, குடை மிளகாய் ரூ.20, வெண்டைக்காய்-ரூ.30, கோவக்காய்-ரூ.35, பன்னீர் பாகற்காய்-ரூ.45, பீர்க்கங்காய்-ரூ.30.

    • வழக்கத்திற்கு மாறாக ஐப்பசி மாதம் வரை வறண்ட வானிலை நிலவியதால், தக்காளி விளைச்சல் அதிகரித்தது.
    • தக்காளி விலை தொடர்ந்து அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலுார் பகுதியில் ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி அறுவடை செய்யப்பட்டு வருகிறது. வழக்கத்திற்கு மாறாக ஐப்பசி மாதம் வரை வறண்ட வானிலை நிலவியதால், தக்காளி விளைச்சல் அதிகரித்தது. எனவே, 13 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி, 100 ரூபாய்க்கு விலை போனது. இது விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது தொடர்ந்து மழை பெய்ய தொடங்கி உள்ளது. எனவே, அதிக ஈரப்பதம் காரணமாக தக்காளி அழுகும் நிலைமை அதிகரித்துள்ளது.

    தற்போது ஒரு பெட்டி தக்காளி 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வரும் வாரங்களில் மழை அதிகரிக்கும் என்பதால் தக்காளி மேலும் அழுக வாய்ப்புள்ளது. இதனால் தக்காளி விலை தொடர்ந்து அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது.

    இந்த தகவலை பொங்கலூர் பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    • விண்கலத்தில் 3 பேர் பயணம் செய்து சீன விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார்.
    • குழுவினர் விண்வெளியில் ஆய்வை முடித்துவிட்டு அடுத்த மாதம் பூமிக்கு வர உள்ளனர்.

    பீஜிங்:

    அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் இணைத்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளது. அதே போல் சீனா, சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளது. விண்வெளியில் டியாங்காங் என்ற ஆய்வு மையத்தை உருவாக்கி ஆய்வு செய்து வருகிறது. இதற்காக சீன விண்வெளி வீரர்கள் அங்கு தங்கி உள்ளனர்.

    கடந்த மே மாதம் 30-ந்தேதி, ஷென்சோ-16, விண்கலத்தில் விண்வெளி வீரர்களான ஜிங்ஹைபெங், ஜூ யாங்சு மற்றும் சீனா ஏரோனாட்டிக்ஸ் பல்கலைகழகத்தின் பேராசிரியர் குய் ஹைச்சாலோ ஆகிய 3 பேர் பயணம் செய்து சீன விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார். அங்கு அவர்கள் காய்கறிகள் பயிரிட்டனர்.

    கீரை, சின்ன வெங்காயம், செர்ரி, தக்காளி செடிகளை வளர்த்தனர். பூமியில் தேவையான சூரிய வெளிச்சம், தண்ணீர் இருப்பதால் செடிகள் எளிதில் வளரும். ஆனால் விண்வெளியில் இந்த சாத்தியகூறுகள் இல்லாததால் சீனா சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருந்த செடிகளை பயிரிடுவதற்கான சிறப்பு சாதனத்தை உருவாக்கி இருந்தது.

    தாவர வளர்ச்சிக்கு தேவையான வெப்பநிலை, ஈரப்பதம், ஆக்சிஜன், கார்பன் டை-ஆக்சைடு உள்ளிட்டவை சரியான அளவில் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது. அவர்கள் பயிரிட்ட கீரை, செர்ரி, தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவை நன்கு வளர்ந்துள்ளது. இதையடுத்து அவற்றை அவர்கள் அறுவடை செய்துள்ளனர். இந்த குழுவினர் விண்வெளியில் ஆய்வை முடித்துவிட்டு அடுத்த மாதம் பூமிக்கு வர உள்ளனர். முன்னதாக விண்வெளியில் காய்கறி செடிகளை வளர்த்து அறுவடை செய்யும் முயற்சியில் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி வீரர்கள் சாதனை படைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அவரைக்காய் ரூ.80, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.55,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது,

      வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது, வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

    இன்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.20, கத்தரிக்காய் ரூ.60, பீர்க்கங்காய் ரூ.60. பெரிய வெங்காயம் ரூ.30 , சின்ன வெங்காயம் ரூ. 100. உருளைக்கிழங்கு ரூ.30, பீட்ரூட் ரூ.40, புடலை காய் ரூ.40, முட்டை கோஸ் ரூ.40, பீன்ஸ் ரூ.100, கேரட் ரூ.60, பாவற்காய் ரூ.60,வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.150, அவரைக்காய் ரூ.80, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.55,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.

    • விலை வீழ்ச்சி தக்காளி விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது.
    • விலை வீழ்ச்சி காலங்களில், தக்காளி விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    தருமபுரி:

    தமிழகத்தில் கடந்த பல மாதங்களாகவே ஏற்ற, இறக்கங்கள் நிறைந்த விலையில் தக்காளி விற்பனை ஆகி வந்துள்ளது. இருப்பினும், சராசரியாக கிலோ ரூ.15 என்ற நிலைக்கு குறையாத அளவில் விவசாயிகளுக்கு விலை கிடைத்து வந்தது.

    இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக தக்காளி விலையில் வேகமான சரிவு ஏற்பட்டது. கடந்த வாரத்தில் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை தக்காளியின் தரத்துக்கு ஏற்ப விலை கிடைத்து வந்தது.

    ஆனால், நடப்பு வாரத்தில் தக்காளியின் விலை சந்தையில் கிலோ ரூ.6 முதல் ரூ.8 வரை என்ற நிலைக்கு கீழே சரிந்து விட்டது.

    விவசாயிகள் இடத்தில் தக்காளி கிலோ ரூ.3 முதல் ரூ.5 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் தக்காளி பயிரிட்டுள்ள தருமபுரி மாவட்ட விவசாயிகள் கடும் வேதனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விளையும் தக்காளிப் பழங்கள் சென்னை, மதுரை, திண்டுக்கல், கும்பகோணம் உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கும், பெங்களூருவுக்கும் விற்பனைக்காக செல்கிறது.

    விலை வீழ்ச்சி தக்காளி விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. இருப்பினும், தெரிந்த ஒரே தொழில் விவசாயம் தான் என்பதால் விவசாயிகள் நஷ்டங்களையும் சகித்துக் கொண்டு விலை உயரும் என்ற நம்பிக்கையில் மீண்டும் சாகுபடிக்கு செல்கின்றனர்.

    தக்காளிக்கு மட்டுமன்றி இதர சில காய்கறி பயிர்களிலும் இதேபோன்ற விலைவீழ்ச்சி சிரமங்களை விவசாயிகள் அவ்வப்போது எதிர்கொள்கின்றனர்.

    இன்று உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.8 க்கு விற்பனை செய்யப்பட்டது.

    விலை வீழ்ச்சி காலங்களில், தக்காளி விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    • உற்பத்தி அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ தக்காளி சில்லரை கடைகளில் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • விவசாயிகளுக்கு பயிர் கூலி மற்றும் கூலி ஆட்களுக்கு கொடுக்க வேண்டிய கூலி கூட கிடைக்க முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது.

    மேட்டுப்பாளையம்:

    தக்காளி விலை கடந்த சில மாதங்களில் உச்சத்தில் இருந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.150 முதல் 200 வரை விற்பனை செய்யப்பட்டது. நாடு முழுவதும் இந்த விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இதனால் மத்திய, மாநில அரசுகள் தக்காளியை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து பெற்று அதனை கூட்டுறவு பண்டக சாலை மற்றும் ரேஷன் கடைகள் மூலம் ரூ.60 வரை விற்பனை செய்து வந்தனர். விலை உயர்வு காரணமாக விவசாயிகள், தக்காளிகளை அதிகளவில் பயிரிடத் தொடங்கினர். இதன் காரணமாக தக்காளி விலை படிப்படியாக குறைந்தது.

    உற்பத்தி அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ தக்காளி சில்லரை கடைகளில் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் மொத்த விலைக்கு கொள்முதல் செய்யும் போது ரூ.10-க்கும் குறைவாக விலை கேட்கின்றனர்.

    இதனால் விவசாயிகளுக்கு பயிர் கூலி மற்றும் கூலி ஆட்களுக்கு கொடுக்க வேண்டிய கூலி கூட கிடைக்க முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் அருகே காரமடை காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கரில் தக்காளி விவசாயம் செய்து வருகிறார். தன்னுடைய நிலத்தில் விளைந்த தக்காளியை மார்க்கெட்டுக்கு நேற்று எடுத்துச் சென்ற போது மிகவும் குறைந்த விலையில் மட்டுமே விலை போனதால் மனவேதனை அடைந்தார். இதையடுத்து தக்காளியை விற்பனை செய்யாமல் காந்திநகர் பகுதியில் சாலையோரத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளுக்கு தீவனமாக போட்டு சென்றார்.

    இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தங்களுக்கும் தேவையான தக்காளியை எடுத்து சென்றனர்.

    • கடந்த 2 வாரங்களாக தக்காளியின் வரத்து மீண்டும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியதால் அதன் விலை குறைய தொடங்கியது.
    • மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.9-க்கு விற்கப்படுகிறது.

    போரூர்:

    கடந்த மாத தொடக்கத்தில் வரத்து குறைவால் தக்காளியின் விலை உச்சத்தை எட்டியது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்கப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக தக்காளியின் வரத்து மீண்டும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியதால் அதன் விலை குறைய தொடங்கியது. கடந்த வாரம் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.18-க்கும் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.25-க்கும் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று 55 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்துள்ளது. இதையடுத்து தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.9-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.15-க்கு விற்கப்படுகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகள் மொத்த விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்):-

    பீன்ஸ்-ரூ.50, ஊட்டி கேரட்-ரூ.40, பீட்ரூட்-ரூ.20, அவரைக்காய்-ரூ.55, வெள்ளரிக்காய்-ரூ.20, உஜாலா கத்தரிக்காய்- ரூ.15, வரி கத்தரிக்காய்-ரூ.10, வெண்டைக்காய்-ரூ.10, பீர்க்கங்காய்-ரூ.20, புடலங்காய்-ரூ.15, முட்டைகோஸ்-ரூ.8, கோவக்காய்-ரூ.8, பட்டை கொத்தவரங்காய்-ரூ.20, நைஸ் கொத்தவரங்காய் ரூ.40, பச்சை மிளகாய்- ரூ.30, இஞ்சி-ரூ.240, புது இஞ்சி- ரூ.80-க்கு விற்கப்படுகிறது.

    • ஆந்திர மாநிலம் நந்தியாலில் உள்ள பியாபலி சந்தைக்கு விவசாயிகள் அதிக அளவில் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • ஒரு சில விவசாயிகள் தக்காளியை பறித்து தங்களது கால்நடைகளுக்கு உணவாக கொடுத்தனர்.

    திருப்பதி:

    தக்காளி வரத்து கடந்த மாதம் குறைந்ததால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது.

    இந்த நிலையில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்து உள்ளது. கடந்த மாதம் ரூ.200க்கு விற்பனையான தக்காளி தற்போது 3 ரூபாயாக குறைந்து உள்ளது. ஆந்திர மாநிலம் நந்தியாலில் உள்ள பியாபலி சந்தைக்கு விவசாயிகள் அதிக அளவில் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    விவசாயிகள் எதிர்பார்த்த அளவு தக்காளி விலை போகாததால் தக்காளி பறிக்கும் கூலி மற்றும் போக்குவரத்து செலவு கூட மிஞ்சவில்லை எனக்கூறி தக்காளியை சாலையோரங்களில் கொட்டி சென்றனர். ஒரு சில விவசாயிகள் தக்காளியை பறித்து தங்களது கால்நடைகளுக்கு உணவாக கொடுத்தனர்.

    • கிட்டத்தட்ட இன்னும் 10 நாட்களில் ஆந்திரா மார்க்கெட்டுகளுக்கு தினமும் தக்காளி வரத்து 1000 டன்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • மிகப்பெரிய உச்சம் தொட்ட தக்காளி தற்போது விலை சரிந்துள்ளதால் சமூக வலைதளங்களில் இதனை கிண்டல் செய்து வருகின்றனர்.

    திருப்பதி:

    தக்காளி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை ஏழைகளுக்கு எட்டாத கனிகளில் ஒன்றாக மாறியிருந்தது. ஆப்பிள், மாதுளை பழங்கள் இடையே போட்டி போடும் அளவிற்கு தக்காளி விலை கடும் உச்சத்தை தொட்டது.

    தங்கத்தின் விலை போல தக்காளி விலையை தினசரி கேட்டு வாங்கக்கூடிய நிலைமை ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் ஆசியாவில் மிகப்பெரிய தக்காளி சாகுபடி பகுதியாக உள்ளது.

    இங்கிருந்து தமிழகம், கர்நாடகா, மும்பை, ஒரிசா மற்றும் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கும் ஏற்றுமதி ஆகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தக்காளி வரத்து மிகவும் குறைந்தது.

    இதனால் தக்காளி விலை கிலோ 200-க்கு மேல் விற்பனையானது. தக்காளி விவசாயிகள் லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் மாறினார்கள். இதனால் தக்காளி விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியில் ஆட்டம் போடும் அளவிற்கு நிலைமை இருந்தது.

    தக்காளி விற்ற பணத்தை எடுத்துக் கொண்டு வந்த வியாபாரிகளிடம் வழிப்பறி மற்றும் கொலை சம்பவங்களும் அரங்கேறின. கடையில் புகுந்து தக்காளி திருட்டு தோட்டத்திற்குள் புகுந்து தக்காளிகளை பறித்து கொள்ளையடித்து சென்ற சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தற்போது அன்னமய்யா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தக்காளி அதிகளவு உற்பத்தியாகி மார்க்கெட்டுகளுக்கு வரத் தொடங்கியுள்ளது. சித்தூர் பலமனேர் புங்கனூர் பகுதிகளில் இருந்தும் அதிகளவு தக்காளி வரத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை 90 டன்னுக்கும் குறைவாக வரத்து இருந்த தக்காளி தற்போது தினமும் 300 டன்னுக்கு அதிகமாக வரத்தொடங்கி உள்ளது. இதனால் தற்போது கிலோ ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனை ஆகிறது.

    ஆந்திராவின் அன்னமய்யா உள்பட பல்வேறு மாவட்டங்களில் தற்போது தக்காளி காய்களாக உள்ளன. இன்னும் 2 வாரத்தில் இந்த தக்காளிகள் பழமாக மாறிவிடும்.

    கிட்டத்தட்ட இன்னும் 10 நாட்களில் ஆந்திரா மார்க்கெட்டுகளுக்கு தினமும் தக்காளி வரத்து 1000 டன்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அப்போது தக்காளி கிலோ விலை ரூ.2-க்கும் குறைவாக இருக்கும் என கணித்துள்ளனர். இது விவசாயிகளை மிகவும் கவலை அடைய செய்துள்ளது. இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில்:-

    இந்த காரி பருவத்தில் அதிக அளவில் தக்காளிகளை பயிரிட்டுள்ளோம். இந்த மாத இறுதியில் அதிக அளவு தக்காளி அறுவடை செய்யப்படும். அப்போது தக்காளி விலை மிக குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் பயிர்களை அறுவடை செய்யாமல் விட்டுவிடுவது தவிர வேறு வழியில்லை என்றார்.

    மிகப்பெரிய உச்சம் தொட்ட தக்காளி தற்போது விலை சரிந்துள்ளதால் சமூக வலைதளங்களில் இதனை கிண்டல் செய்து வருகின்றனர்.

    கொஞ்ச ஆட்டமாடா போட்டீங்க... இப்போ உங்க நிலைமையை பார்த்தீர்களா என்ற வசனங்களுடன் சமூக வலைதளங்களில் படங்கள் வைரலாகி வருகிறது.

    • தக்காளியை கொள்முதல் செய்து மானிய விலையில் கிலோ 60 ரூபாய்க்கு நியாய விலை கடைகளில் விற்பனை செய்தது.
    • தக்காளி 10 ரூபாய்க்கு விற்று விவசாயிகள் நஷ்டம் அடையும்போது சமூகம் கண்டு கொள்ளாமல் இருக்கிறது.

    பல்லடம்:

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி பல்லடத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த நான்கு மாதங்களாக எல்லா தரப்பிலும் உச்சரிக்கப்பட்ட பெயர் தக்காளி. தக்காளியின் விலை உயர்ந்து கிலோ 100 ரூபாய் தாண்டி விற்பனையாகியது, ஆனால் விவசாயிகளிடம் தக்காளி இல்லை.ஒரு சில விவசாயிகள் மட்டுமே அதனால் பயன் பெற்றனர்.

    தக்காளி விலை உயர்ந்த போது பொதுமக்களும், அரசியல்வாதிகளும் தக்காளி விலை உயர்ந்ததால் மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள் என்று தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு மகாராஷ்டிராவில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும், மத்திய பிரதேசத்திலிருந்தும் தக்காளியை கொள்முதல் செய்து மானிய விலையில் கிலோ 60 ரூபாய்க்கு நியாய விலை கடைகளில் விற்பனை செய்தது.

    பொதுமக்களை காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை பல்வேறு தரப்பிலும் வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது தக்காளி விளைவித்த விவசாயிகள் கிலோ ரூபாய் 10க்கு விற்பதால் மிகக் கடுமையாக நஷ்டத்தில் உள்ளார்கள். விவசாயிகள் நஷ்டப்படும் போது மத்திய,மாநில அரசுகள் தக்காளியை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என நீண்ட காலமாக விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

    தக்காளியை மட்டுமல்ல அனைத்து விவசாய பொருட்களுக்குமான இந்த கோரிக்கை தொடர்ச்சியை நிறைவேற்றப்படாமல் இருந்து கொண்டே இருக்கிறது. தக்காளி 100 ரூபாய்க்கு விற்ற போது கவலைப்பட்ட சமூகம் தக்காளி 10 ரூபாய்க்கு விற்று விவசாயிகள் நஷ்டம் அடையும்போது இந்த சமூகம் கண்டு கொள்ளாமல் இருப்பது விவசாயிகளுக்கு கடுமையான வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    பொதுமக்களுக்கு மானிய விலையில் தக்காளியை விற்பனை செய்து கொடுக்கும் அரசு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து தக்காளியை கொள்முதல் செய்யாமல் இருப்பது இரட்டை நிலைப்பாடாக உள்ளது.விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் உள்ளது.தற்போது விவசாயிகள் கடுமையான நஷ்டத்தில் உள்ளார்கள்.

    எனவே தமிழ்நாடு அரசு தக்காளிக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோ ரூ.20 விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்து, மக்களுக்கு விநியோகம் செய்து, விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இன்றைய காலகட்டத்தில் விவசாயம் செய்வது என்பது தெரிந்தே தற்கொலை செய்வதற்கு சமமானது. ஏனென்றால் விவசாயிகள் விளைவிக்கும் விளை பொருளுக்கு, அவர்கள் விலை நிர்ணயம் செய்ய முடியாது. தக்காளியோ, வெங்காயமோ, விலை உயர்ந்தால் உடனே மத்திய, மாநில அரசுகள் வரிந்து கட்டிக்கொண்டு வந்து விலை உயராமல் கட்டுப்படுத்துகின்றன.

    தக்காளி விலை உயர்ந்து விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் நியாயமான விலை கிடைத்த போது அரசு, அமைச்சர்கள், அதிகாரிகள் என அத்தனை பேரும் குடி முழுகி போய்விட்டதாக, குதித்தார்கள். அதே தக்காளியின் விலை இன்று அதல பாதாளத்தில் உள்ளது. இன்று அதே அரசும், அமைச்சர்களும் எங்கே போனார்கள்.

    தக்காளி தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்த போது வெளி மாநிலங்களில் இருந்து வாங்கி கூட்டுறவுத்துறை மற்றும் ரேசன் கடைகளில் நியாயமான விலைக்கு தக்காளி விற்ற அரசு, இன்று விவசாயிகளிடம் அதே நியாயமான விலைக்கு கொள்முதல் செய்து ஏன் ரேசன் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது.

    நுகர்வோர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும் அரசு, விவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க கூடாதா. தக்காளி, தேங்காய், வெங்காயம் போன்ற விளை பொருட்கள் சீரான விலையில் விற்கவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அரசுக்கு நுகர்வோரை காப்பாற்றுவதில் உள்ள அக்கறை, விவசாயிகள் மீது துளி கூட இல்லை என்பதை இது காட்டுகிறது.

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை உழவர் உழைப்பாளர் கட்சி வரவேற்கிறது. காரணம் ஜாதி, மத வேறுபாடுகள் களையப்படும். எல்லோரும் இந்தியர்கள் என்ற உணர்வு மேலோங்கும், உதாரணமாக ஒரு ஊரில் பல சாதியினர் இருப்பார்கள். ஆனால் வெளியில் செல்லும்போது நான் இந்த ஊர்காரன் என்று தான் சொல்வார்கள்.

    இந்த சாதிக்காரன் என்று சொல்ல மாட்டார்கள். அது போல் இனி தமிழ்நாடு,கேரளா, கர்நாடகா என்று சொல்லாமல் இந்தியா என்ற எண்ணம் மேல் ஓங்குவதற்கு இது வழிவகுக்கும். இதனால் இந்தியா மென்மேலும் வளர்ச்சியடையும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×