search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "spaceship"

    • கடந்த செப்டம்பர் 2-ந்தேதி ‘ஆதித்யா-எல்1’ விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.
    • சூரியனை நோக்கி ஆதித்யா-எல்1 விண்கலத்தின் பயணத்தை இஸ்ரோ கண்காணித்து வருகிறது.

    பெங்களூரு:

    சூரியனின் புறவெளிப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, கடந்த செப்டம்பர் 2-ந்தேதி 'ஆதித்யா-எல்1' விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட 63 நிமிடங்கள் மற்றும் 20 வினாடிகளில், நீள்வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

    சூரியனை நோக்கி ஆதித்யா-எல்1 விண்கலத்தின் பயணத்தை இஸ்ரோ கண்காணித்து வருகிறது.

    இந்நிலையில், 'ஆதித்யா-எல்1' விண்கலம் இன்று மாலை அதன் இறுதி இருப்பிட சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.

    இன்று மாலை சுமார் 4 மணிக்கு லாக்ராஞ்ச் பாயிண்ட் 1-ஐ சுற்றியுள்ள 'ஹாலோ' சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. அந்த இடம், பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது.

    அந்த இடம், எந்த கிரகணமும் குறுக்கிடாமல் சூரியனை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் வகையில் வசதியான இடம் ஆகும். விண்கலம் நிலை நிறுத்தப்பட்ட பின்னர் சூரியனின் எல்-1 புள்ளியை வலம் வந்தவாறு சூரியனின் கரோனா, போட்டோஸ்பியர், குரோமோஸ்பியர் பகுதிகளை ஆதித்யா விண்கலம் ஆய்வு செய்யும். இதன் ஆயுள் காலம் 5 ஆண்டுகளாகும்.

    சூரியனை ஆய்வு செய்ய இதுவரை அமெரிக்கா, ஜெர்மனி,ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் விண்கலங்களை அனுப்பி உள்ளன. ஆதித்யா திட்டம் வெற்றி பெற்றால் அந்த வரிசையில் இந்தியா 5-வது நாடாக இணையும்.

    • விண்கலத்தில் 3 பேர் பயணம் செய்து சீன விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார்.
    • குழுவினர் விண்வெளியில் ஆய்வை முடித்துவிட்டு அடுத்த மாதம் பூமிக்கு வர உள்ளனர்.

    பீஜிங்:

    அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் இணைத்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளது. அதே போல் சீனா, சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளது. விண்வெளியில் டியாங்காங் என்ற ஆய்வு மையத்தை உருவாக்கி ஆய்வு செய்து வருகிறது. இதற்காக சீன விண்வெளி வீரர்கள் அங்கு தங்கி உள்ளனர்.

    கடந்த மே மாதம் 30-ந்தேதி, ஷென்சோ-16, விண்கலத்தில் விண்வெளி வீரர்களான ஜிங்ஹைபெங், ஜூ யாங்சு மற்றும் சீனா ஏரோனாட்டிக்ஸ் பல்கலைகழகத்தின் பேராசிரியர் குய் ஹைச்சாலோ ஆகிய 3 பேர் பயணம் செய்து சீன விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார். அங்கு அவர்கள் காய்கறிகள் பயிரிட்டனர்.

    கீரை, சின்ன வெங்காயம், செர்ரி, தக்காளி செடிகளை வளர்த்தனர். பூமியில் தேவையான சூரிய வெளிச்சம், தண்ணீர் இருப்பதால் செடிகள் எளிதில் வளரும். ஆனால் விண்வெளியில் இந்த சாத்தியகூறுகள் இல்லாததால் சீனா சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருந்த செடிகளை பயிரிடுவதற்கான சிறப்பு சாதனத்தை உருவாக்கி இருந்தது.

    தாவர வளர்ச்சிக்கு தேவையான வெப்பநிலை, ஈரப்பதம், ஆக்சிஜன், கார்பன் டை-ஆக்சைடு உள்ளிட்டவை சரியான அளவில் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது. அவர்கள் பயிரிட்ட கீரை, செர்ரி, தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவை நன்கு வளர்ந்துள்ளது. இதையடுத்து அவற்றை அவர்கள் அறுவடை செய்துள்ளனர். இந்த குழுவினர் விண்வெளியில் ஆய்வை முடித்துவிட்டு அடுத்த மாதம் பூமிக்கு வர உள்ளனர். முன்னதாக விண்வெளியில் காய்கறி செடிகளை வளர்த்து அறுவடை செய்யும் முயற்சியில் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி வீரர்கள் சாதனை படைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சந்திரயான்-3 விண்கல ராக்கெட்டின் பாகமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
    • சில ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தில் பாகம் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவின் மேற்கில் உள்ள ஜீரியன் விரிகுடாவுக்கு அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. பெரிய அளவிலான உலோக பாகம் போன்று இருந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். மேலும் அபாயகரமான பொருளில் இருந்து விலகி இருக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தினர்.

    இதுகுறித்து ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் கூறும்போது, மத்திய மேற்கு கடற்கரையில் உள்ள கிரீன் ஹெட் அருகே மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வருகிறோம். இது ஒரு வெளிநாட்டு விண்வெளி ஏவுகணையில் இருந்து வந்திருக்கலாம்.

    மற்ற நாடுகளுடன் நாங்கள் தொடர்பு கொள்கிறோம். அந்த பொருளின் தோற்றம் தெரியாததால் அதை கையாள்வதையோ அல்லது நகர்த்த முயற்சிப்பதையோ மக்கள் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.

    இதற்கிடையே ஆஸ்திரேலிய கடற்கரையில் ஒதுங்கிய அந்த பொருள், சமீபத்தில் இந்தியாவில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கல ராக்கெட்டின் பாகமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

    மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தில் பாகம் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் கூறும்போது, விசாரணை நடந்து வருவதால், தகவல்கள் கிடைக்கும் வரை முடிவுகளை எடுப்பதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.

    இந்த மர்ம பொருள் 2 மீட்டர் உயரமும், 2 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது. ராக்கெட் பாகம் போன்று உள்ளது.

    ×