என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்கலம்"

    • கடந்த 5-ந் தேதி இந்த விண்கலம் பூமி திரும்ப திட்டமிட்டு இருந்தது.
    • தோங் தலைமையிலான ஷென்சோ-20 குழுவினர் ஷென்சோ-21 விண்கலம் மூலம் கடந்த 14-ந் தேதி பூமி திரும்பினர்.

    பீஜிங்:

    விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் தீவிர ஆர்வம் காட்டுகின்றன. இதில் சீனா ஒரு படி மேலே ஏறி 2021-ம் ஆண்டு தியாங்காங் என்ற விண்வெளி நிலையத்தை தனக்கென அமைத்துள்ளது.

    சுமார் 390 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள அங்கு சீன விண்வெளி வீரர்கள் தங்கி சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். அதன்படி கடந்த ஏப்ரல் 24-ந் தேதி ஷென்சோ-20 என்ற விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் அனுப்பப்பட்டது.

    கடந்த 5-ந் தேதி இந்த விண்கலம் பூமி திரும்ப திட்டமிட்டு இருந்தது. ஆனால் விண்வெளி குப்பை மோதியதால் விண்கலம் சேதமடைந்தது. எனவே அந்த விண்கலம் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

    இதனையடுத்து விண்வெளி நிலைய ஆராய்ச்சிக்காக 3 வீரர்களுடன் ஷென்சோ-21 விண்கலம் அனுப்பப்பட்டது. இதனால் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் 3 பேருக்கு பதிலாக 6 பேர் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    அதன்பிறகு தோங் தலைமையிலான ஷென்சோ-20 குழுவினர் ஷென்சோ-21 விண்கலம் மூலம் கடந்த 14-ந் தேதி பூமி திரும்பினர். சாங் லூ தலைமையிலான ஷென்சோ-21 குழுவினர் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் தொடர்ந்து ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதேசமயம் ஷென்சோ-21 குழுவினர் பூமி திரும்ப எந்த விண்கலத்துடனும் இணைக்கப்படவில்லை. இதனால் அவர்களை மீட்க ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-2எப் ராக்கெட் மூலம் ஷென்சோ-22 என்ற விண்கலத்தை சீனா வெற்றிகரமாக நேற்று அனுப்பியது.

    • சுபான்ஷு சுக்லா பூமி திரும்பியபோது பெற்றோர் அவரை ஆனந்தக் கண்ணீருடன் வரவேற்றனர்.
    • சுபான்ஷு சுக்லா தரையிறங்கியதை அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

    வாஷிங்டன்:

    சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட டிராகன் விண்கலம் சுமார் 22 மணி நேரத்திற்கு பிறகு இன்று மதியம் 2.55 மணிக்கு வளிமண்டல பகுதிக்குள் நுழைந்தது.

    இதனையடுத்து இந்திய நேரப்படி இன்று பகல் 3.01 மணியளவில் டிராகன் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் பத்திரமாக தரையிறங்கியது. இதன்மூலம் சுபான்ஷு சுக்லா வரலாற்று சாதனை படைத்தார்.

    தரையிறங்கிய டிராகன் விண்கலத்தை கப்பலில் ஏற்றி அமெரிக்க கடற்படை வீரர்கள் கரைக்கு கொண்டு சென்றனர். பின்னர் விண்கலத்தில் இருந்து வீரர்களை பத்திரமாக மீட்கும் பணியில் அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈடுபட்டனர்.

    இதையடுத்து டிராகன் விண்கலத்திலிருந்து விண்வெளி வீரர்கள் ஒவ்வொருவராக வெளியே அழைத்து வரப்பட்டனர். முதல் வீரராக நாசாவின் பெக்கி விட்சன் வெளியே அழைத்து வரப்பட்டார். 2-வது வீரராக இந்தியாவின் சுபான்ஷு சுக்லா அழைத்து வரப்பட்டார். அப்போது அவர் புன்னகைத்தவாறே, கைகளை அசைத்த படி சுபான்ஷு தரையில் கால்பதித்தார். 3-வது வீரராக ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு, 4-வது வீரராக போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி அழைத்து வரப்பட்டனர்.

    சிறிய படகு மூலம் கரைக்கு அழைத்து வரப்படும் அவர்களுக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகள் நடக்க உள்ளன. சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்று பத்திரமாக திரும்பிய முதல் இந்தியராக சுபான்ஷு சுக்லா சாதனை படைத்துள்ளார். சுபான்ஷு சுக்லா பூமிக்கு திரும்பியபோது ஆனந்தக் கண்ணீருடன் பெற்றோர் அவரை வரவேற்றனர். டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பியதையடுத்து கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை அவரது பெற்றோர் பகிர்ந்து கொண்டனர்.


    • இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு சென்றுள்ளார்.
    • சரியாக 28 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.

    அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பியது.

    இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு சென்றுள்ளார். இவருடன் 3 விண்வெளி வீரர்கள் சென்றுள்ளனர்.

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் அவர்கள் செல்ல இருந்த பயணம், தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 6 முறை ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில், ஆக்சியம் 4 திட்டம் நேற்று வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் நேற்று விண்வெளி பயணம் மேற்கொண்டனர்.

    புளோரிடாவில் இருந்து பால்கன் 9 மூலம் டிராகன் விண்கலத்தில் நால்வரும் விண்வெளிக்கு பயணித்துள்ளனர்.

    இந்நிலையில், இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவுடன் சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்ட குழு சரியாக 28 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.

    • ஐஸ்பேஸ் நிறுவன அதிகாரிகள், விண்கலத்தின் லேசர் கருவியின் செயலிழப்பே விபத்துக்குக் காரணம் என்று கூறி உள்ளனர்.
    • நாசாவுடன் இணைந்து 4-வது முயற்சிக்கான திட்டம் ஒப்பந்தமாகி உள்ளது.

    டோக்கியோ:

    ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையமான ஜாஸா ஏற்கனவே நிலவில் விண்கலத்தை தரையிறக்கி உள்ளது. அங்குள்ள தனியார் நிறுவனமான ஐஸ்பேஸ் நிறுவனம், ரெசிலியன்ஸ் என்ற விண்கலத்தை கடந்த ஜனவரி மாதம் நிலவுக்கு அனுப்பியது. நிலவின் வடக்கில் அமைந்துள்ள உறை கடல் எனப்படும் மார் பிரிகோரிசில் தரையிறங்கும் இலக்குடன் அந்த விண்கலம் அனுப்பப்பட்டது. அந்த விண்கலம் இந்த மாத தொடக்கத்தில் நிலவின் தரையில் மோதி செயல் இழந்தது.

    ரெசிலியன்ஸ் விண்கலம் மற்றும் அதன் உலவு கருவி ஆகியவை விழுந்து நொறுங்கி கிடக்கும் இடத்தை நாசாவின் லூனார் விண்கலம் கடந்தவாரம் புகைப்படங்கள் எடுத்து அனுப்பியது.

    ஐஸ்பேஸ் நிறுவன அதிகாரிகள், விண்கலத்தின் லேசர் கருவியின் செயலிழப்பே விபத்துக்குக் காரணம் என்று கூறி உள்ளனர். லேசர் கருவி நிலவின் மேற்பரப்பு தூரத்தை துல்லியமாக அளவிட்டு கொடுக்காததால், வேகமாக சென்ற விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்கு உள்ளானதாக கூறி உள்ளனர்.

    மென்பொருள் செயலிழப்பால் கடந்த 2023-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் முதல் நிலவு விண்கலம் தரையிறங்க முடியாமல் விபத்துக்கு உள்ளானது. தற்போது அடுத்த 2 ஆண்டுகளுக்குள்ளாக அதன் 2-வது முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது. அந்த நிறுவனம் தனது 3-வது முயற்சியை 2027-ல் செய்ய உள்ளது. நாசாவுடன் இணைந்து 4-வது முயற்சிக்கான திட்டமும் ஒப்பந்தமாகி உள்ளது.

    சமீபத்திய ஆண்டுகளில் தனியார் அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட 7 நிலவில் தரையிறங்கும் முயற்சிகளில், ஒன்று மட்டுமே முழுமையான வெற்றி பெற்றுள்ளது. பயர்பிளை ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனம் மார்ச் மாதத்தில் அதன் புளூ கோஸ்ட் லேண்டரை நிலவில் தரையிறக்கியது குறிப்பிடத்தக்கது.

    • நேற்று அதிகாலை பால்கன்-9 ராக்கெட்டில் டிராகன் விண்கலம் ஏவப்பட்டது.
    • விண்வெளியில் சிக்கி தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் 9 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்ப உள்ளனர்.

    சர்வதேச விண்வெளி மையத்துக்கு கடந்த ஆண்டு ஜூன் 5-ந்தேதி இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சென்றனர். அவர்கள் 10 நாட்கள் ஆய்வுக்கு பிறகு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பூமிக்கு திரும்ப முடியவில்லை.

    இதையடுத்து இருவரையும் மீட்டு கொண்டு வர ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று அதிகாலை பால்கன்-9 ராக்கெட்டில் டிராகன் விண்கலம் ஏவப்பட்டது.

    இதில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஆனி மெக்கிளைன், நிக்கோலி அயர்ஸ், ஜப்பான் விண்வெளி வீரர் டகுயா ஒனிஸி, ரஷிய விண்வெளி வீரர் கிரிஸ் பெஸ்கோவ் ஆகியோர் சென்றனர். இந்த விண்கலம் இன்று காலை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. அதில் இருந்து விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சென்றனர். அவர்களை அங்கிருக்கும் வீரர்கள் வரவேற்றனர். வருகிற 19-ந்தேதி சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹேக் மற்றும் ரஷியாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் டிராகன் விண்கலத்தில் பூமிக்கு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விண்வெளியில் சிக்கி தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் 9 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்ப உள்ளனர். அதேவேளையில் வானிலை இடையூறு ஏதாவது ஏற்பட்டால் அவர்கள் பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    • அடுத்த ஆண்டு விண்ணில் ஏவ திட்டம்
    • இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தகவல்

    நாகர்கோவில்:

    இஸ்ரோ முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய ஆலோசகரு மான சிவன் இன்று நாகர்கோவில் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இஸ்ரோவில் வரும் சனிக்கிழமை பி.எஸ்.எல்.வி. சி4 என்ற 54-வது பி.எஸ்.எல்வி. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. அதில் கடல் ஆய்வுக்கான செயற்கைக்கோளும், 8 வணிக ரீதியான செயற்கைக்கோள்களும் அனுப்பப்பட உள்ளது. அதன்பிறகு அடுத்த கட்டமாக எஸ்.எஸ்.எல்.வி. செயற்கை கோள் செலுத்தப்பட இருக்கிறது.ஆதித்யா எல்.ஒன். மற்றும் ககன்யான் செயற்கைக்கோள் போன்றவைகள் செலுத்தப்பட இருக்கின்றன.

    நிலவுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் விண்கலம் செலுத்துவதற்கு முன்பு பல்வேறு கட்ட சோதனை ராக்கெட்டுகள் செலுத்தப்பட வேண்டி இருக்கிறது. எனவே அந்த சோதனைகள் நடைபெறும். ககன்யான் விண்கலம் செலுத்துவதற்கு முன்பு 2 முக்கிய காரணங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது. ககன்யான் ராக்கெட்டில் செல்லும் மனிதர்களின் பாதுகாப்பு குறித்து கவனிக்க வேண்டும்.அதற்கு தகுந்த வகையில் ராக்கெட் உருவாக்கப்பட வேண்டும். விண்ணில் அவர்கள் இருக்கும் போது அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அதாவது பூமியில் இருப்பது போன்ற நிலையை அங்கு உருவாக்க வேண்டும்.

    இதுதொடர்பான சோதனைகள் நடைபெற்று வருகிறது. அதைப் போன்று மனிதர்கள் விண்ணில் செல்லும் போது ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் உடனே அவர்கள் ராக்கெட்டில் இருந்து பிரிந்து தனியாக பூமியில் வந்து இறங்கும் வகையில் சோதனைகள் நடத்தப்பட வேண்டி உள்ளது. இதைத் தொடர்ந்து ரோபோவை விண்ணிற்கு அனுப்பும் சோதனை நடைபெறும். அது வெற்றிகரமாக நடைபெற்ற பிறகு அது பாதுகாப்பான பயணமா என்பது உறுதி செய்யப்படும்.

    பின்னர் ககன்யானில் மனிதனை அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது ககன்யான் விண்கலம் செலுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட சோதனைகள் நடை பெற்று வருகிறது. அந்த சோதனைகள் அனைத்தும் இதுவரையிலும் வெற்றி பெற்றுள்ளன.

    சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்.ஒன். விண்கலம் தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு இது விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அது சாதாரண ஆர்பிட் போல் அல்லாமல் லிபரேஷன் பாயிண்ட் ஒன்று வைத்து அங்கு செயற்கைகோளை செலுத்தி சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அது சூரியனை ஆய்வு செய்யும்.

    குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நில ஆர்ஜிதப் பணிகள் முடிவடைந்து விட்டன. கட்டுமான பணிகள் அங்கு தொடங்கப்பட வேண்டி உள்ளது. அதற்கு முன்னதாக அங்கு மண் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும். செயற்கைக்கோள் செலுத்தும் போது அதன் நிலையை அந்த பகுதி தாங்குமா என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் ஐஸ்பேஸ் நிறுவனத்தின் விண்கலம் ஹக்குடோ விண்ணில் ஏவப்பட்டது.
    • விண்கலம் நிலவில் தரையிறங்கும் வீடியோ யூடியூப் தளத்தில் நேரலை செய்யப்படுகிறது.

    ஜப்பானை சேர்ந்த தனியார் நிறுவனம் ஐஸ்பேஸ் நிறுவனம் தனது விண்கலத்தை நிலவில் தரையிறங்க செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஐஸ்பேஸ் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கும் பட்சத்தில் நிலவில் தரையிறங்கிய முதல் தனியார் விண்கலம் என்ற பெருமையை பெற்றுவிடும்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் ஐஸ்பேஸ் நிறுவனத்தின் விண்கலம் ஹக்குடோ விண்ணில் ஏவப்பட்டது. கடந்த மாதம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை சென்றடைந்த ஹக்குடோ விண்கலம் தற்போது 100 கிலோமீட்டர் உயரத்தில் நிலவை சுற்றி வருகிறது.

    இன்றிரவு 10.10 மணிக்கு ஹக்குடோ விண்கலம் நிலவில் தரையிறங்க இருக்கிறது. விண்கலம் நிலவில் தரையிறங்கும் வீடியோ ஐஸ்பேஸ் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் நேரலை செய்யப்பட இருக்கிறது. ஹக்குடோ விண்கலம் 2.3 மீட்டர் உயரமும், 2.6 மீட்டர்கள் அகலமாகவும் உள்ளது. இதில் உள்ள எரிபொருள் உள்பட விண்கலத்தின் மொத்த எடை 1000 கிலோ ஆகும். 

    • விண்கலத்தை ராக்கெட்டில் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • சந்திராயான்- 3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டரில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டு உள்ளன.

    சென்னை:

    இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 2019-ம் ஆண்டு ஜூலை 22-ந் தேதி ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னர் சந்திரயான்-2 விண்கலம் 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப் பாதையை சென்றடைந்தது.

    எனினும், தொழில்நுட்ப கோளாறால் திட்டமிட்டபடி 'லேண்டர் கலன்' தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான 'ஆர்பிட்டர்' நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. தற்போது ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்து, ஆய்வு செய்து வருகிறது.

    இதற்கிடையே, சந்திரயான்-3 திட்டத்தை சுமார் ரூ.615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. ஏற்கெனவே ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்களை மட்டும் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக இதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் வருகிற 13-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு விண்ணில் ஏவப் பட உள்ளது. இதற்காக, சந்திரயான்-3 விண்கலம் கடந்த மே இறுதியில் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விண்கலத்தை ராக்கெட்டில் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இறுதிக் கட்ட சோதனைகள் நிறைவடைந்த பின்னர், ஏவு தளத்துக்கு ராக்கெட் கொண்டு செல்லப்படும்.

    கடந்த முறை ஏற்பட்ட தோல்வியை அடிப்படையாக கொண்டு லேண்டர் மற்றும் ரோவர் கலன்களில் அதிநவீன வசதிகளுடன், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    இது குறித்து இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறியதாவது:-

    சந்திராயான்- 3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டரில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டு உள்ளன. சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் நிலவில் வேகமாக தரையிறங்கும் போது உடைந்து விடாமல் இருக்கும் வகையில் அதன் கால்கலை வலுவாக வடிவமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தரையிறங்கும் போது விபத்தை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    சந்திரயான் -2 தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதில் உள்ள குறைபாடுகள் அனைத்தும் களையப்பட்டு உள்ளன. வினாடிக்கு 2 அல்லது 3 மீட்டர் வேகத்தில் தரையிறங்கினால் கூட அது விபத்துக்குள்ளாகாது. மேலும் பல தடங்கல்கள் ஏற்படுவதை கையாள லேண்டரில் அதிக எரி பொருள்களை சேர்த்துள்ளோம். அதில் இருந்து மீண்டு வருவதற்கான திறன்களும் சேர்க்கப்பட்டு உள்ளது. மற்றொரு அம்சமாக லேசர் டாப்ளர் வேக மீட்டர் எனப்படும் சென்சார் ஒன்றையும் சேர்த்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரண்டு ராக்கெட்டுகளை பயன்படுத்தி நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டம்
    • இதற்கு முன் ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி மாதிரிகளை சேகரித்துள்ளது

    2030 வருடத்திற்குள் சந்திரனுக்கு இரண்டு ராக்கெட்டுகளை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. இதில் ஒன்று சந்திரனின் மேற்பரப்பில் தரையிறங்கும் லேண்டர் (Lander) வாகனத்தை சுமந்து செல்லும். மற்றொன்று விண்வெளி வீரர்களை கொண்டு செல்லும் விண்கலத்தை ஏந்திச் செல்லும்.

    விண்வெளி வீரர்களையும், லேண்டரையும் ஒன்றாக அனுப்பும் அளவுக்கு ஒரு சக்திவாய்ந்த கனரக ராக்கெட்டை உருவாக்குவதில் சீனாவிற்கு நீண்டகாலமாக தொழில்நுட்ப தடை இருந்து வந்தது. இந்த இரட்டை ராக்கெட் திட்டம் மூலம் அது தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இரண்டு ராக்கெட்டுகளும் சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழைந்து அதன் விண்கலங்கள் நிலைநிறுத்தப்பட்ட பின்னர், விண்வெளி வீரர்கள் லேண்டரில் பயணித்து சந்திரனின் மேற்பரப்பில் இறங்குவார்கள். பின்பு சந்திரனில் தங்கள் அறிவியல் ஆராய்ச்சி பணிகளை முடித்துக்கொண்டு, மாதிரிகளை சேகரித்த பிறகு, சுற்றுப்பாதையில் உள்ள விண்கலத்திற்கு விண்வெளி வீரர்கள் லேண்டர் மூலம் திரும்புவார்கள். அதில் பயணித்து அவர்கள் பூமிக்கு வருவார்கள்.

    சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் போட்டி சமீபத்திய ஆண்டுகளில் தீவிரமடைந்துள்ளது. சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டும் சந்திரனில் உள்ளதாக கருதப்படும் கனிம வளங்களை குறி வைக்கின்றன.

    சந்திரனில் மனிதர்களுக்கான வாழ்விடங்களை நிறுவுவதன் மூலம், செவ்வாய் போன்ற பிற கிரகங்களுக்கு எதிர்கால விண்வெளி ஆராய்ச்சி குழுவினர் பயணங்களை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.

    இதுபோன்ற விண்வெளி பயணங்களில், அனுபவம் மற்றும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை விட சீனா இன்னும் பின்தங்கியே உள்ளது.

    சந்திரனில் இறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள விரும்பும் சீனாவின் லட்சிய நோக்கங்களை பூர்த்தி செய்ய, அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள், "சூப்பர் ஹெவி லாங் மார்ச் 10" எனப்படும் ராக்கெட், விண்வெளி வீரர்களுக்கான ஒரு புதிய வடிவமைப்புடைய விண்கலம், சந்திரனில் பயணிக்கும் லேண்டர் மற்றும் விண்வெளி வீரர்களின் குழுவோடு சந்திரனில் நடமாடும் ரோவர் ஆகியவற்றை உருவாக்கி வருகின்றனர்.

    2020-ல் சீனா மேற்கொண்ட ஆளில்லா விண்வெளி பயணத்தின் மூலம் சந்திரனில் இருந்து மாதிரிகளை கொண்டு வந்தது. இதன் மூலம், அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனுக்கு பிறகு சந்திரனிலிருந்து மாதிரிகளை கொண்டு வந்த 3-வது நாடாக சீனா ஆனது குறிப்பிடத்தக்கது.

    • சந்திரயான்-3 விண்கல ராக்கெட்டின் பாகமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
    • சில ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தில் பாகம் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவின் மேற்கில் உள்ள ஜீரியன் விரிகுடாவுக்கு அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. பெரிய அளவிலான உலோக பாகம் போன்று இருந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். மேலும் அபாயகரமான பொருளில் இருந்து விலகி இருக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தினர்.

    இதுகுறித்து ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் கூறும்போது, மத்திய மேற்கு கடற்கரையில் உள்ள கிரீன் ஹெட் அருகே மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வருகிறோம். இது ஒரு வெளிநாட்டு விண்வெளி ஏவுகணையில் இருந்து வந்திருக்கலாம்.

    மற்ற நாடுகளுடன் நாங்கள் தொடர்பு கொள்கிறோம். அந்த பொருளின் தோற்றம் தெரியாததால் அதை கையாள்வதையோ அல்லது நகர்த்த முயற்சிப்பதையோ மக்கள் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.

    இதற்கிடையே ஆஸ்திரேலிய கடற்கரையில் ஒதுங்கிய அந்த பொருள், சமீபத்தில் இந்தியாவில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கல ராக்கெட்டின் பாகமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

    மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தில் பாகம் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் கூறும்போது, விசாரணை நடந்து வருவதால், தகவல்கள் கிடைக்கும் வரை முடிவுகளை எடுப்பதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.

    இந்த மர்ம பொருள் 2 மீட்டர் உயரமும், 2 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது. ராக்கெட் பாகம் போன்று உள்ளது.

    • பூஸ்டர்கள் பிரிந்த பிறகு, அவை இங்குதான் கீழே விழும்
    • சந்திரயான்-3 ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது

    உலகின் முன்னணி நாடுகள், நிலவில் உள்ள வளங்களை கண்டறிவது உட்பட பல காரணங்களுக்காக நிலவிற்கு விண்கலங்களை அனுப்பி ஆராய்ச்சிகளை செய்கின்றன.

    1959லிருந்து 1976 வரை ரஷியா நிலவிற்கு ரோபோ விண்கலங்களை தொடர்ச்சியாக அனுப்பி வந்தது. இவற்றில் 15 வெற்றிகரமாக நடந்தது. ரஷியாவின் லூனா எனும் இத்திட்டம், மேற்கத்திய நாடுகளால் லுனிக் என அழைக்கப்படுகிறது.

    சுமார் அரை நூற்றாண்டு கழித்து மீண்டும் நிலவிற்கு ரஷியா ஒரு விண்கலம் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக, தனது நாட்டின் கிழக்கில் உள்ள ஒரு கிராமத்தை ரஷியா ஆகஸ்ட் 11 அன்று காலி செய்ய இருக்கிறது.

    1976க்கு பிறகு ரஷியா நிலவிற்கு அனுப்பவிருக்கும் இந்த லூனா-25 எனப்படும் லேண்டர் விண்கலம், மாஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 5,550 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோம் எனும் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் என்று அந்நாட்டின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    லூனா-25 லேண்டர் விண்கலத்தை சோயுஸ்-2 ஃப்ரிகாட் எனும் ராக்கெட் பூஸ்டர் சுமந்து செல்லும். விண்கலத்தை தாங்கி செல்லும் ராக்கெட்டிலிருந்து பூஸ்டர்கள் பிரிந்த பிறகு, அவை இங்குதான் கீழே விழும் என்று கணிக்கப்பட்டிருப்பதால், ஏவுதளத்திற்கு தென்கிழக்கே ரஷியாவின் கபரோவ்ஸ்க் பகுதியில் உள்ள ஷக்டின்ஸ்கி எனப்படும் இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் ஆகஸ்ட் 11 அன்று அதிகாலை வெளியேற்றப்படுவார்கள்.

    நிலவின் தென் துருவம் நோக்கி செல்லும் ரஷியாவின் முதல் விண்கலம் இது.

    ஒரு வருட காலம் நிலவில் தங்கி, நிலவில் நீர்நிலைகளின் சாத்தியக்கூறுகள் குறித்தும், வளங்கள் மற்றும் கட்டமைப்பு குறித்தும் தகவல்களை வழங்கும்.

    இந்தியாவிலிருந்து இஸ்ரோவால், ஜூலை 14 அன்று வானில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலமும் ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவ மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இம்முயற்சி வெற்றியடைந்தால், நிலவின் தென் துருவத்தை தொட்ட முதல் நாடு எனும் புகழை இந்தியா பெறும்.

    • 100 கிமீ தூரத்தை எட்டியபின், விண்கலத்தில் புரபல்சன் மற்றும் விக்ரம் என்ற லேண்டர் என 2 முக்கியப் பகுதிகள் உள்ளன.
    • லேண்டர் "டீபூஸ்ட்" முடிந்தவுடன், பணியை எளிதாக்கும் ஒரு செயல்முறையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

    பெங்களூரு:

    நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் சந்திராயன்-3 விண்கலம் கடந்த 14-ந் தேதி ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. பல்வேறு நிலைகளை கடந்து சென்றுள்ள இந்த விண்கலம் 40 நாட்கள் பயணம் செய்து வருகிற 23-ந் தேதி மாலை 5.47 மணி அளவில் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 5-ந்தேதி மாலை 5 மணி அளவில் சந்திராயன்-3 விண்கலம் நிலவு பாதையில் இருந்து நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதைக்குள் லுனார் ஆர்பிட் இன்ஞக்சன் மூலம் நுழைந்தது.

    சந்திரயான்-3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் அதிகபட்சமாக 18 ஆயிரம் கிலோமீட்டர் முதல் குறைந்தபட்சம் 100 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்யும். இன்று முதல் நிலவின் சுற்றுப்பாதை தூரத்தை குறைக்கும் பணி தொடங்கும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    100 கிமீ தூரத்தை எட்டியபின், விண்கலத்தில் புரபல்சன் மற்றும் விக்ரம் என்ற லேண்டர் என 2 முக்கியப் பகுதிகள் உள்ளன. அந்த லேண்டரில்தான் ரோவர் கருவியும் அமைந்துள்ளது. தரையிறக்கத்தின் போது உந்துவிசை கருவியை யும், லேண்டரையும் தனியாக பிரிக்க வேண்டியுள்ளது. அப்படிப் பிரித்து, லேண்டரை அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் முதல் குறைந்தபட்சமாக 30 கிலோமீட்டர் வரை நீள்வட்டப் பாதையில் செலுத்துவார்கள். லேண்டரின் கீழே 4 குட்டி ராக்கெட்டுகள் உள்ளன. அந்த ராக்கெட்டுகளின் உதவியுடன், லேண்டரை மெல்ல மெல்லத் தரையிறக்க வேண்டும். இது வெற்றிகரமாக நிகழ்ந்தால், சந்திராயன்-3 நிலவில் அதன் ஆராய்ச்சி தொடங்கியை தகவல்களை வழங்கும்.

    இது தொடர்பாக பெங்களூருவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசியதாவது:-

    தற்போது விண்கலம் நிலவை நெருங்க 3 டி-ஆர்பிட்டிங் நிகழ்வுகள் உள்ளன. இன்றும், வருகிற 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் அதன் சுற்றுப்பாதை சந்திரனில் இருந்து 100 கி.மீ. வரை குறைக்கப்படும். லேண்டர் ப்ரொபல்ஷன் மாட்யூல் பிரிப்புப் பயிற்சியானது, லேண்டர் "டீபூஸ்ட்" முடிந்தவுடன், பணியை எளிதாக்கும் ஒரு செயல்முறையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 23-ந் தேதி நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும்.

    இந்த முறையும் விக்ரமில் உள்ள 2 என்ஜின்கள் வேலை செய்யவில்லை என்றாலும் அது இன்னும் தரையிறங்க முடியும் என்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். எனவே இவை சரியாகச் செயல்படும் பட்சத்தில் விக்ரம் லேண்டர் பல தோல்விகளைச் சமாளிக்கும் வகையில் முழு வடிவமைப்பும் செய்யப்பட்டுள்ளது.

    விக்ரம் லேண்டரை சந்திரனில் செங்குத்தாக தரை இறக்குவது இஸ்ரோ குழுவின் முன் உள்ள மிகப்பெரிய சவால். ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் பிரிந்ததும், அது கிடைமட்டமாக நகரும். தொடர்ச்சியான நிகழ்வுகள் மூலம், அது சந்திரனில் பாதுகாப்பாக தரையிறங்கு வதற்காக செங்குத்து நிலைப்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    சந்திராயன்-2 பணியின் போது, இஸ்ரோ தனது லேண்டரை நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக இறக்க தவறியது. எனவே இந்தமுறை இந்தப் பயிற்சி மிகவும் முக்கியமானது. கிடைமட்டத்தில் இருந்து செங்குத்து திசைக்கு மாற்றும் திறன் மிக நுட்பமானது. இங்குதான் கடந்த முறை பிரச்சினை ஏற்பட்டது.

    பயன்படுத்தப்படும் எரிபொருள் குறைவாக உள்ளதா, தொலைவு கணக்கீடுகள் சரியாக உள்ளதா மற்றும் அனைத்து வழிமுறைகளும் சரியாக செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதும் சவாலாக உள்ளது. எப்படி என்றாலும் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் முயற்சியை மேற்கொள்வதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ குழு இந்த முறை செய்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×