search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kulasekarapattinam"

    • குலசேகரன்பட்டினத்தில் தற்காலிகமாக கான்கிரீட் தளம் மூலம் அமைக்கப்பட்டு உள்ள சிறிய ஏவுதளத்தில் இருந்து ரோகிணி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
    • வரும் காலங்களில் இங்கிருந்து விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டுகளின் வெற்றிக்கு இந்த தரவுகள் பயனுள்ள வகையில் இருக்கும்.

    குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

    இதனையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் தயாரிக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க 'ஆர்.எச்.200 சவுண்டிங்' ராக்கெட் இன்று குலசேகரன்பட்டினத்தில் தற்காலிகமாக கான்கிரீட் தளம் மூலம் அமைக்கப்பட்டு உள்ள சிறிய ஏவுதளத்தில் இருந்து ரோகிணி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரிக்கும் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்வி. மார்க்-3 ஆகிய முக்கியமான ராக்கெட்டுகளுக்கு முன்னோடியாக இருந்தது 'ஆர்.எச்.200' என்று அழைக்கப்படும் 'சவுண்டிங்' ராக்கெட்டாகும்.

    இந்த வகை ராக்கெட்டை பயன்படுத்தி காற்றின் திசை வேகம், ஒலியெழுப்பும் ராக்கெட்டுகளின் வளர்ச்சி, ராக்கெட்டுகளில் உயிர்வாழ்வு உள்ளிட்ட பல முக்கியமான ஆய்வுகள் செய்யப்பட்டு உள்ளன.

    குலசேகரன்பட்டினம் அமைந்துள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் விண்ணில் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் காற்றின் திசை வேகம் எவ்வாறு இருக்கிறது? என்பது குறித்த தரவுகளை அறிந்து கொள்வதற்காக இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

    இதன் மூலம் பெறப்படும் தரவுகள் கம்ப்யூட்டரில் சேகரிக்கப்பட்டு, வரும் காலங்களில் இங்கிருந்து விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டுகளின் வெற்றிக்கு இந்த தரவுகள் பயனுள்ள வகையில் இருக்கும்.

    • குலசை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நள்ளிரவில் விமர்சையாக நடந்தது.
    • பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர்.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு கட்டி, நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்தனர்.

    பெரும்பாலான பக்தர்கள் காளி, சிவன், பார்வதி, ராமர், லட்சுமணன், அனுமார், பிரம்மன், விஷ்ணு, கிருஷ்ணர் போன்ற சுவாமி வேடங்களையும், அரசன், அரசி, போலீஸ்காரர், குறவன், குறத்தி, கரடி, அரக்கன் போன்ற பல்வேறு வேடங்களையும் அணிந்து இருந்தனர். இதனால் தென் மாவட்டங்களில் காணும் இடமெல்லாம் வேடம் அணிந்த பக்தர்களாகவே காட்சி அளிப்பதால் தசரா திருவிழா களைகட்டியது.

    விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மாலையில் சமய சொற்பொழிவு, பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இந்நிலையில், பத்தாம் நாளான இன்று (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு குலசை தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் விமர்சையாக நடைபெற்றது.

    நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் தசரா குழுவினர் எளிதில் வந்து செல்லும் வகையில் தனிப்பாதைகள் அமைக்கப்பட்டன. விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

    2 ஆண்டுகளுக்கு பின் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிசேகங்களும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.
    • குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் 4- ம் திருநாளான இன்று இரவு 9 மணிக்கு அம்மன் மயில்வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழாவில் 4- ம் திருநாளான இன்று இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் மயில்வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    முன்னதாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிசேகங்களும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

    விரதம் இருந்து வந்த பக்தர்கள் அதிகாலையில் கடலில் நீராடி, கோவிலுக்கு வந்து, மஞ்சள் கயிற்றினால் ஆனகாப்பு வாங்கி வலது கையில் கட்டி விரதத்தை தொடர்ந்து வருகின்றனர், கோவிலில் திருவிழாவிற் கான அனைத்து ஏற்பாடு களையும் தூத்துக்குடி இணை ஆணையர் அன்பு மணி, உதவி ஆணையர் சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தசரா குழுவினர் வந்து கடலில் புனித நீர் எடுத்து கோவில் வளாகத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்வதும் நடந்து கொண்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட்ட மருத்துவ துறை போலீஸ் துறை மின்சார துறை போன்ற பல்வேறு அரசு துறை அதிகாரிகள் குலசே கரன்பட்டினம் நகரம் முழுவதும் வலம் வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • உடன்குடி பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடியவர்கள் கைது செய்ய வேண்டும், குலசேகரப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம் செய்ய வேண்டும்
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிபாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலை செழியன் தலைமையில் குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

    உடன்குடி:

    உடன்குடி பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடியவர்களை கைது செய்ய கூறியும், இதைத் தொடர்ந்து குலசேகரப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனக் கூறியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிபாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலை செழியன் தலைமையில் குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    நிகழ்வில் முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ரகுவரன், சுரேந்தர், அந்தோணி, ராவணன், ஒன்றிய செயலாளர் சங்கர் உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சித்திரை மாத வசந்த விழாவையொட்டி, 1,008 சுமங்கலி பூஜை நடந்தது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சித்திரை மாத வசந்த விழாவையொட்டி, நேற்றுமுன்தினம் காலை 7.30 மணிக்கு கணபதி வழிபாடு, விநாயகர் வேள்வி, இளைஞர் பூஜை, நிறை அவி அளித்தல், 9 மணிக்கு நவக்கிரக வழிபாடு, 10 மணிக்கு குபேர வழிபாடு, செல்வ வழிபாடு, பசு பூஜை, 10.30 மணிக்கு லட்சுமி ஹோமம், 11 மணிக்கு 1,008 கலச பூஜை, இறைவி வேள்வி, திருமுறைகள் ஓதுதல், மதியம் 12 மணிக்கு 1,008 கலசம் சிறப்பு நன்னீராட்டு, சிறப்பு அலங்கார தீபாராதனை, 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு 1,008 சுமங்கலி பூஜை, அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

    தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு 1,008 சங்கு பூஜை, இறைவன் வேள்வி, வேதம் திருமுறை ஓதுதல், அன்னதானம், 10 மணிக்கு சூரசம்ஹார கடற்கரையில் இருந்து 504 பால்குட ஊர்வலம், மதியம் 12 மணிக்கு 1,008 சங்காபிஷேகம், 504 பால்குட அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மதியம் 1 மணிக்கு திருமண தோஷம் விலக வேண்டி சிறப்பு அர்ச்சனை, மாலை 6.30 மணிக்கு 5004 மாவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு இறைவன், இறை விக்கு புஷ்பாஞ்சலி, அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தன. ஏற்பாடுகளை குலசை முத்தாரம்மன் தசரா குழு மற்றும் தமிழ்நாடு கல்வி அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் விமான கலசங்களுக்கும், சுவாமி-அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி, வருசாபிஷேகம் நடந்தது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் வருசாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள், யாகசாலை பூஜைகள் நடந்தது. காலை 11 மணி அளவில் கோவில் விமான கலசங்களுக்கும், சுவாமி-அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி, வருசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பின்னர் சங்காபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.

    மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் அம்மன் தேரில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் ராமசுப்பிரமணியன், கட்டளைதாரர் சலவையாளர், கலா தசரா குழுவினர் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் 1,008 பால்குட அபிஷேக விழா கடந்த 2 நாட்கள் நடந்தது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் 1,008 பால்குட அபிஷேக விழா கடந்த 2 நாட்கள் நடந்தது. நேற்று முன்தினம் காலையில் 108 சங்காபிஷேகம், 108 கலசாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் அரசடி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, யாகசாலை பூஜை, இரவில் அலங்கார தீபாராதனை, வில்லிசை, கற்பூர ஜோதி வழிபாடு நடந்தது.

    நேற்று காலையில் கணபதி ஹோமம், யாகசாலை பூஜை நடந்தது. சிதம்பரேசுவரருக்கு தீபாராதனையை தொடர்ந்து, சிதம்பரேசுவரர் கோவிலில் இருந்து முத்தாரம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வரப்பட்டது. பின்னர் சந்தனகுடம் பவனி நடந்தது.

    தொடர்ந்து அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு தீபாராதனையை தொடர்ந்து, அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் 1,008 பால்குடம் எடுத்து ஊர்வலமாக முத்தாரம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    பின்னர் 108 சுமங்கலி பெண்கள் கும்மி வழிபாடு, மாலையில் 1,008 அகல்தீப வழிபாடு, இரவில் புஷ்ப சகஸ்ரநாமாவளி அர்ச்சனை, பைரவருக்கு வடைமாலை அணிவித்து சிறப்பு பூஜை, அம்பாள் தேர் பவனி நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இதையொட்டி கோவில் முன்பு திரண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம். #Kulasekarapattinam #Dasara #Soorasamharam
    குலசேகரன்பட்டினம் :

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, அம்மனை வழிபடுகின்றனர்.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு அணிந்து, பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்தனர். ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோவிலின் அருகில் தசரா பிறை அமைத்து, அதில் பக்தர்கள் தங்கியிருந்து அம்மனை வழிபட்டனர்.

    ஒவ்வொரு ஊரிலும் பக்தர்கள் தசரா குழுக்கள் அமைத்து, வாகனங்களில் ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்தனர். தசரா குழுக்களின் சார்பில் கரகாட்டம், பரதநாட்டியம், மேற்கத்திய நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதனால் தென் மாவட்டங்களில் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் உள்ள சவுந்திரபாண்டிய நாடார்-தங்ககனி அம்மாள் கலையரங்கத்தில் தினமும் மாலையில் பக்தி சொற்பொழிவு, திருமுறை இன்னிசை, பரதநாட்டியம், வில்லிசை போன்றவையும், இரவில் பட்டிமன்றம், பாவைக்கூத்து, இன்னிசை நிகழ்ச்சி போன்றவையும் நடந்தது.

    10-ம் திருநாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. இதனை முன்னிட்டு காலை முதல் மதியம் வரையிலும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். பெரும்பாலான பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும் கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் பல மணி நேரம் காத்து இருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இரவு 12 மணி அளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளினார். அப்போது காளி வேடம் அணிந்த திரளான பக்தர்களும் அம்மனை பின்தொடர்ந்து வந்தனர். சூரசம்ஹாரத்தை காண்பதற்காக கடற்கரையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

    முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன், அம்மனை சுற்றி வந்து போருக்கு தயாரானான். அவனை சூலாயுதத்தால் அம்மன் வதம் செய்தார். பின்னர் யானையாகவும், சிங்கமாகவும், சேவலாகவும் அடுத்தடுத்து உருமாறி போர் புரிய வந்த மகிஷாசூரனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். அப்போது கூடியிருந்த பல லட்சக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் காளி, ஜெய் காளி’ என்று விண்ணதிர பக்தி கோஷங்களை எழுப்பினர்.

    பின்னர் கடற்கரை மேடையில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிதம்பரேசுவரர் கோவிலில் எழுந்தருளிய அம்மனுக்கு சாந்தாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் தேரில் பவனி வந்து கோவிலை சென்றடைந்தார். பின்னர் கோவில் கலையரங்கத்தில் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.



    தசரா திருவிழாவை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. குலசேகரன்பட்டினம் நகர் முழுவதும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில், குலசேகரன்பட்டினத்துக்கு வரும் சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றி அமைக்கப்பட்டன. குலசேகரன்பட்டினம் தருவைக்குளம் பகுதியில் தற்காலிக பஸ் நிலையங்கள், வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்து பக்தர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து, கோவிலுக்கு சென்றனர்.

    குலசேகரன்பட்டினம் நகர எல்லையில் தசரா குழுவினர் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், பக்தி கோஷங்களை எழுப்பியும் வந்தனர். வேடம் அணிந்த பக்தர்கள் சேகரித்த காணிக்கைகளை கோவில் உண்டியலில் செலுத்தினர். பின்னர் கடற்கரையில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்ததை தரிசித்தனர். கடற்கரையில் தசரா குழுக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கரகாட்டம், பரதநாட்டியம், மேற்கத்திய நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    பல்வேறு பகுதிகளில் இருந்தும் தசரா குழுவினர் குலசேகரன்பட்டினத்துக்கு விடிய, விடிய வந்த வண்ணம் இருந்தனர். குலசேகரன்பட்டினம் நகரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. குலசேகரன்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையோரம் நீண்ட தூரத்துக்கு பக்தர்களின் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையில், சுமார் 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    11-ம் நாளான இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்ந்தவுடன், கொடியிறக்கப்படும். பின்னர் அம்மன் காப்பு களைதல் நடைபெறும். தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்களும் காப்புகளை களைவார்கள். இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்.

    12-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி, 8 மணி, 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான ரோஜாலி சுமதா, இணை ஆணையர் பரஞ்ஜோதி, கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து உள்ளனர். #Kulasekarapattinam #Dasara #Soorasamharam

    குலசேகரன்பட்டினம் அம்பாளுக்கு முத்தாரம்மன் என்ற பெயர் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. அவையனைத்தும் பொருத்தமானதாகவே தெரிகிறது.
    அன்னை மகாசக்தி ஒவ்வொரு தலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் அருள்பாலிக்கிறாள். அந்த வகையில் குலசேகரன்பட்டினம் அம்பாளுக்கு முத்தாரம்மன் என்ற பெயர் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. அவையனைத்தும் பொருத்தமானதாகவே தெரிகிறது.

    பாண்டிநாடு முத்துடைத்து என்பார்கள். பாண்டிய மன்னர்கள் முத்துக்களைக் குவித்து தேவியாக நினைத்து வழிபட்டனர். அம்முத்துகள் அம்பாளாகத் திருமேனி கொண்டன. முத்துகளிலிருந்து அன்னை உதித்ததால் முத்தாரம்மன் என அழைக்கப்பட்டாள் என்பது ஒரு கருத்து.

    பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாகத் தொடுத்து அன்னைக்குச் சூட்டி மகிழ்ந்தனர். எனவே அன்னை, முத்தாரம்மன் எனவும் வழங்கலானாள். கிராமங்களில் அம்மை நோயினை முத்துப் போட்டதாகக் கூறுவது மரபு. முத்துக் கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தைச் சுற்றி நீர் கட்டச் செய்வர். இதன் மூலம் அம்மை நோய் (முத்துநோய்) குணமாகும். முத்துக்களை ஆற்றிக் குணப்படுத்தியதால் அன்னை, முத்து ஆற்று அம்மன், முத்தாரம்மன் எனஅழைக்கப்படுகிறாள்.

    சிப்பியிலிருந்து விடுபட்டது முத்து. முத்தைச் சிப்பி மூடியிருக்கிறது. உயிர்களை ஆணவ மலம் மூடி மறைத்துள்ளது. உயிர்களை மலக் கட்டுகளிலிருந்து விடுவித்தால், உயிர்கள் சீவன் முத்தர்கள் ஆவர். அம்பாள் சிப்பியிலிருந்து முத்துக்களைப் பிரித்தெடுப்பது போல உலக உயிர்களை மலக்கட்டு களிலிருந்து பிரித்துச் சீவன் முத்தர்களாக மாற்று கிறாள். இதனால் அன்னைக்கு, முத்தாரம்மன் என்ற பெயர் ஏற்பட்டது.

    இப்படி முத்தாரம்மன் பெயர் தோன்றியதற்கு பல கதைகள் உள்ளன. குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில், மற்ற பழைய கோவில்களை போல சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கட்டிட அமைப்புகளுடனோ அல்லது உயர்ந்த கோபுரங்கள் மற்றும் மாடவீதிகள் கொண்டதாகவோ அமையவில்லை. அந்த ஆலயம் மிகச்சிறிய ஆலயம்தான். ஆனால் முத்தாரம்மனின் அருளாட்சி வரையறுக்க முடியாத எல்லையாக பரவியுள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் சாதி, மத வேறுபாடின்றி குலசை முத்தாரம்மனை குலதெய்வம் போல வழிபடுகின்றனர். அவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் குலசை முத்தாரம்மனின் நாமத்தை உச்சரிக்கத் தவறுவதில்லை.
    குலசேகரன்பட்டினம் தலத்தில் ஈசன் ஞானமூர்த்தீஸ்வராக மனித வடிவில் உள்ளார். அதுவும் அனைவரும் வியக்கும் வகையில் மீசையுடன் ஞானமூர்த்தீஸ்வரர் உள்ளார்.
    சென்னை திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி மீசையுடன் இருப்பதை பார்த்திருப்பீர்கள். வைணவத் தலங்களில் இங்கு மட்டுமே பெருமாள் மீசையுடன் உள்ளார்.

    சிவ தலங்களில் 99 சதவீதம் லிங்க வழிபாடுதான் செய்து இருப்பீர்கள். ஆனால் இத்தலத்தில் ஈசன் ஞானமூர்த்தீஸ்வராக மனித வடிவில் உள்ளார். அதுவும் அனைவரும் வியக்கும் வகையில் மீசையுடன் ஞானமூர்த்தீஸ்வரர் உள்ளார்.

    முத்தாரம்மனுடன் சேர்ந்து அமர்ந்திருக்கும் ஞானமூர்த்தீஸ்வரர் கதை என்னும் செங்கோலைத் தன் வலது கையில் தாங்கிய நிலையில் உள்ளார். அவர் விருப்பு, வெறுப்பின்றி இந்த உலகை ஆட்சி செய்கிறார் என்பதே இதன் தத்துவம். ஞானமூர்த்தீஸ்வரர் தன் இடது கையில் திருநீற்று கொப்பரை வைத்துள்ளார். அதில் உருவங்கள் எதுவும் பொறிக்கப்படவில்லை. விபூதி மட்டுமே அதில் உள்ளது.

    விபூதிக்கும் ஒரு விளக்கம் உள்ளது. வி என்றால் மேலான என்று பொருள். பூதி என்றறால் செல்வம் என்று அர்த்தம். மேலான செல்வத்தை பக்தர்களுக்கு அருளும் வல்லமை படைத்தவர் என்று இதற்கு பொருள்.

    ஞானமூர்த்தீஸ்வரர் என்று பெயர் பெற்றதற்கும் காரணம் இருக்கிறது. ஞானம் என்றால் பேரறிவு மூர்த்தி என்றால் வடிவம் என்று அர்த்தம். ஈஸ்வரர் என்பதற்கு ஈகை சுரப்பவர் என்று பொருள்.

    அதாவது ஞானமூர்த்தீஸ்வரர் என்றால் பேரறிவு உடைய வடிவத்தை தாங்கி ஈகை சுரப்பவர் என்று அர்த்தம். தவம் இருப்பவர்களுக்கு ஈஸ்வரன் பதிஞானம் வழங்குவதால் ஞானமூர்த்தி எனப்படுகிறார். ஞானமுடி சூடியிருப்பதாலும், ஞானபீடத்தில் எழுந்தருளிடயிருப்பதாலும் இவர் ஞானமூர்த்தியாக திகழ்வதாக சொல்கிறார்கள்.
    சக்தி தலங்களில் குலசை என்று அழைக்கப்படும் குலசேகரன்பட்டினத்தில் ஆட்சி செய்யும் முத்தாரம்மன் தலம் மிகமிக சக்தி வாய்ந்த தலமாக திகழ்கிறது.
    திங்கள் ஈராம் தினங்கள் ஓரேழும் திருப்பெயரை
    எங்கிருந்தாலும் புகழ்வேன் நான் செலும் இடங்களெல்லாம்
    மங்களம் பொங்கி மரபோங்கி வாழவரம் தருவாய்
    எங்கள் முத்தாரம்மையே! அகிலாண்ட நாயகியே போற்றி!

    தமிழ்நாட்டில் எத்தனையோ சக்தி தலங்கள் உள்ளன. காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி போன்று பெரும்பாலான ஊர்களில் அம்மன் ஆட்சி செய்கிறாள். அவளது அருள் எங்கும் நிரம்பி இருக்கிறது. என்றாலும் சக்தி தலங்களில் குலசை என்று அழைக்கப்படும் குலசேகரன்பட்டினத்தில் ஆட்சி செய்யும் முத்தாரம்மன் தலம் மிகமிக சக்தி வாய்ந்த தலமாக திகழ்கிறது. திருச்செந்தூருக்கு மிக, மிக அருகில் இந்த தலம் உள்ளது.

    தமிழ்நாட்டில் சக்தி ஆலயங்கள் தோறும் தற்போது நவராத்திரி திருவிழா நடத்தப்படுகிறது. ஆனால் குலசையில் நடக்கும் விழா தசரா திருவிழாவாக பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. இந்தியாவில் மைசூர் தசரா திருவிழாவைத்தான் மிகப்புகழ் பெற்றதாக சொல்வார்கள். ஆனால் குலசை தசரா திருவிழா அதையும் மிஞ்சி சாதனை படைத்து வருகிறது.

    குலசை தசரா மகிசா சம்ஹார தினத்தன்று சுமார் 15 லட்சம் பேர் திரள்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்தவொரு சக்தி தலத்திலும் இல்லாத அதிசயம் இது. ஆண்டுக்கு ஆண்டு குலசை முத்தாரம்மன் அருளை பெற பக்தர்கள் குலசைக்கு படையெடுத்தப்படி உள்ளனர். இந்த ஊர் இப்போதுதான் புகழ்பெற்றது என்று நினைக்காதீர்கள். சங்க காலத்திலேயே இந்த ஊர் புகழ் பெற்று இருந்தது.

    சங்க காலத்தில் குலசேகரன்பட்டினம் ‘‘தென் மறைநாடு’’ என்றழைக்கப்பட்டது. இந்த ஊர் கடல் பகுதி இயற்கையாகவே மிகப் பெரிய கப்பல்கள் வந்து செல்லும் வசதி கொண்டது. இதனால் சங்க காலத்தில் குலசேகரன்பட்டினம் துறைமுகம் மிகப் பெரும் வாணிப கேந்திரமாகத் திகழ்ந்தது. சங்க காலத்தில் தமிழர்கள் குலசேகரன்பட்டினம் துறைமுகம் வழியாகவே ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வந்தனர். அது போல ஆப்பிரிக்கர்களும் குலசேகரன்பட்டினம் வந்ததற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.

    சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்திலும் குலசேகரன்பட்டினம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. அப்போது குலசேகரன்பட்டினம், வீரவளநாடு என்றழைக்கப் பட்டது. மூவேந்தர்களும் இந்த ஊர் துறைமுகம் வழியாகத்தான் நவதானியங்கள், தேங்காய், எண்ணை, மரம் போன்றவற்றை இறக்குமதி செய்தனர், உப்பு, கருப்பட்டி, கருவாடு, முத்து போன்றவற்றை ஏற்றுமதி செய்தனர். குலசேகரப் பட்டினத்தில் இருந்து சென்ற உப்பு ஒரு காலத்தில் உலகம் முழுவதும் வரவேற்பு பெற்று இருந்ததாக வரலாற்று குறிப்புகளில் உள்ளது.

    அரபு நாடுகளில் இருந்து பாண்டிய மன்னர்கள் குதிரைகளை குலசேகரன்பட்டினம் வழியாகத்தான் இறக்குமதி செய்தனர். இலங்கையை வென்ற சோழ மன்னன் இந்நகர் வழியாகத்தான் நாடு திரும்பினான். பாண்டிய மன்னன் சடையவர்ம சுந்தரபாண்டியனின் மகன் குலசேகரப் பாண்டியன் இப்பகுதியை கி.பி.1251ம் ஆண்டு முதல் சுமார் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

    குலசேகர பாண்டிய மன்னன், சுற்றியுள்ள சிற்றரசர்களிடம் போரிட்டு வெற்றிபெற்று தம் ஆதிக்கத்தை மதுரை முழுவதும் பரப்பினார். இதன் விளைவாக கேரளா நாட்டை கைப்பற்ற எண்ணி திருவனந்தபுர மன்னனிடம் தோல்வியுற்றான். வரும் வழியில் இரவு வெகு நேரமானதால் தூங்கிவிட்டான் பாண்டிய மன்னன். அவன்முன் அறம் வளர்த்த நாயகி அம்மன் தோன்றினாள்.

    “பாண்டிய மன்னா தூங்கிவிடாதே, தூங்கி உன் நாட்டின் பெருமை இழந்து விடாதே ஒருமுறை தோற்றால் என்ன? மறுமுறை முயற்சி செய் என்று அருள்வாக்கு சொல்லி ஆசிர்வதித்து மறைந்தாள். மீண்டும் மன்னன் படையெடுத்து வெற்றி பெற்றான். இதனால் அம்மனுக்கு கோயில் கட்டினான். கோவில் அருகே ஊர் அமைந்ததால் மன்னனின் நினைவாக குலசேகர பட்டினம் என பெயர் பெற்றது.

    சில நூற்றாண்டுகள் கழித்து ஆங்கிலேயர்கள் ஆட்சி ஏற்பட்ட போதும், குலசேகரன்பட்டினம் தன் முக்கியத்துவத்தை இழக்கவில்லை. குசேகரன்பட்டினத்தை சிறந்த துறைமுகமாக பயன்படுத்திய ஆங்கிலேயர்கள், பனை மரங்கள் தந்த பயனுள்ள பொருட்களை தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்வதற்காக திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினத்துக்கு ரெயில் போக்குவரத்தையும் நடத்தி வந்தனர். அதே சமயத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்திலும் குலசேகரன்பட்டினம் முதன்மையாக இருந்தது. 1942-ம் ஆண்டு நாடெங்கும் ஆகஸ்டு புரட்சி ஏற்பட்ட போது குலசேகரன்பட்டினத்தில் ஆங்கிலேய அதிகாரி லோன் வெட்டிக் கொல்லப்பட்டார்.

    இத்தகைய சிறப்புடைய குலசேகரன்பட்டினம், நாடு விடுதலை அடைந்த பிறகு சில சிறப்புகளை இழந்து விட்டது. துறைமுகம் இல்லாமல் போய்விட்டது. ரெயில் போக்குவரத்து நடந்ததற்கான சுவடே மறைந்து போய் விட்டது.

    இத்தகைய நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குலசேகரன்பட்டினம் ஊரின் பெயர் மீண்டும் நாடெங்கும் பேசப்படும் வகையில் உருவெடுத்துள்ளது. அதற்கு காரணம் குலசேகரன்பபட்டினத்தில் ஏற்பட்டுள்ள மாபெரும் ஆன்மீக புரட்சி. குலசேகரன்பட்டினத்தில் வீற்றிருந்து அருளாட்சி செய்து வரும் முத்தாரம்மன் கோடிக்கணக்கான பக்தர்களை ஈர்த்துள்ளாள். தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் குலசை வந்து முத்தாரம்மனை மனம் உருக வழிபட்டு மனதில் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

    குறிப்பாக புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழா, இன்று குலசை பெயரை உலகம் முழுக்க வாழம் தமிழர்களிடம் மட்டுமின்றி எல்லா தரப்பினரிடமும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தலம் இந்தியாவின் முக்கிய சக்தி தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
    ஒரே மாவட்டத்தில் அடுத்தடுத்த ஊர்களில் அதுவும் அடுத்தடுத்த மாதங்களில் நடக்கும் இந்த சூரசம்ஹாரங்கள் நிறைய ஒற்றுமைகளையும் - வேற்றுமைகளையும் கொண்டுள்ளன.
    அசுரர்கள் எனும் ஆணவ சக்தி தேவர்களையும், மக்களையும் துன்புறுத்தும் போதெல்லாம் இறைசக்தி புதிய அவதாரம் எடுத்து, அவற்றை அழிக்கும். இதற்கு சம்ஹாரம் என்று பெயர். சூரனை சம்ஹாரம் செய்வதால் சூரசம்ஹாரம் என்கிறோம்.

    உலகம் முழுவதும் தமிழர்களுக்கு, சூரசம்ஹாரம் என்றதும் திருச்செந்தூர் தலத்தில் கடலோரத்தில் நடக்கும் சூரசம்ஹாரம் தான் நினைவுக்கு வரும். தற்போது திருச்செந்தூர் அருகில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் நடக்கும் சூரசம்ஹாரமும் உலகப் புகழ் பெற்று வருகிறது.

    ஒரே மாவட்டத்தில் அடுத்தடுத்த ஊர்களில் அதுவும் அடுத்தடுத்த மாதங்களில் நடக்கும் இந்த சூரசம்ஹாரங்கள் நிறைய ஒற்றுமைகளையும் - வேற்றுமைகளையும் கொண்டுள்ளன.

    சூரபன்மன் எனும் அரக்கனை ஒழிக்கவே முருக அவதாரம் நிகழ்ந்தது. அது போல மகிஷாசுரனை அழிக்க அம்பாள் முத்தாரம்மனாக அவதரித்தார்.
    முருகப்பெருமானுக்கு வலுவூட்டும் வகையில் ஐப்பசி மாதம் சுக்கிலபட்சத்தில் பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் பக்தர்கள் கடும் விரதம் இருப்பது வழக்கம். அது போல அன்னை பராசக்தி வேள்வியில் வளர்ந்த 9 நாட்களும் அதாவது புரட்டாசி அமாவாசை கழிந்த மறுநாள் பிரதமையில் இருந்து 9 நாட்கள் பக்தர்கள் கடும் விரதம் இருப்பது வழக்கம்.

    சஷ்டியன்று திருச்செந்தூரில் முருகன் தேரில் எழுந்தருளி சூரபன்மனை சம்ஹாரம் செய்வார். குலசையிலும் முத்தாரம்மன் கடற்கரையில் தேரில் எழுந்தருளி மகிகனை சம்ஹாரம் செய்வாள்.

    முருகன் சம்ஹாரம் செய்யும் முன்பு சூரன் விதம் விதமான வேடங்களில் வருவான். அது போலவே குலசையிலும் மகிஷன் மூன்று வடிவங்களில் வருவான்.
    திருச்செந்தூர் கடற்கரையில் சூரபன்மனை தம் வேலால் முருகன் சம்ஹாரம் செய்வார். குலசையில் மகிஷனை சூலத்தால் அம்பாள் சம்ஹாரம் செய்வாள்.

    சம்ஹாரம் நடப்பதற்கு முன்பு திருச்செந்தூரில் வேலுக்கும் குலசையில் சூலத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இவையெல்லாம் இரு தலத்திலும் உள்ள ஒற்றுமையான சம்ஹார தகவல்களாகும்.

    ஒரே ஒரு முக்கியமான வித்தியாசம் திருச்செந்தூரில் சூரபன்மன் முருகனால் சம்ஹாரம் செய்யப்படும் நிகழ்வுகள் அமைதியாக நடைபெறும். ஆனால் குலசையில் மகிஷன் அழிக்கப்படும் நிகழ்வு மிகவும் ஆக்ரோஷமாக நடைபெறும்.

    மற்றொரு வித்தியாசம் திருச்செந்தூரில் மாலை நேரத்தில் சூரசம்ஹாரம் நடத்தப்படும். குலசையில் நள்ளிரவு 12 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறும்.
    திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்ததும் முருகனை குளிர்விக்க அபிஷேகம் செய்வார்கள். குலசையிலும் அம்பாளுக்கு குடம், குடமாக பால் அபிஷேகம் நடைபெறும்.

    திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிறைவு பெற்றதும் 90 சதவீத பக்தர்கள் புறப்பட்டுச் சென்று விடுவார்கள். ஆனால் குலசையில் விடிய, விடிய தசரா குழுக்களின் ஆடல் நிகழ்ச்சி நடைபெறும். குலசை சூரசம்ஹாரத்தை திருச்செந்தூர் சம்ஹாரத்தில் இருந்து மிகவும் வித்தியாசப்படுத்தி காட்டுவது இதுதான்.

    மற்றப்படி இரு சூரசம்ஹாரத்துக்கும் சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்துக்கும் கிடைக்காத இத்தகைய சிறப்பு தூத்துக்குடி மாவட்டத்துக்கு மட்டுமே கிடைத்துள்ளது.

    ×