என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dasara Festival"

    • முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள்.
    • குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும்.

    கோவில் தோற்றம்

    தமிழகத்தின் தசரா என்றாலே குலசை தான். மைசூர் தசராவை மிஞ்சும் வகையில், தமிழ்நாட்டின் தென்கோடி கடற்கரையில் மகிஷாசுரனை சக்தியின் அம்சமான முத்தாரம்மன் சம்ஹாரம் செய்கிறாள். சங்க காலத்தில் குலசேகரப்பட்டினம் 'தென்மறைநாடு' என்று அழைக்கப்பட்டது.

    பாண்டிய மன்னன் சடையவர்ம சுந்தரபாண்டியனின் மகன் குலசேகரப்பாண்டியன், இப்பகுதியை சுமார் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தான். கேரள மன்னனை வெல்ல குலசேகரப்பாண்டியன் படையெடுத்தபோது, அவன் கனவில் முத்தாரம்மன் தோன்றி அருளாசி வழங்கினாள். வெற்றி பெற்ற குலசேகரப்பாண்டியன் முத்தாரம்மனின் உத்தரவுபடி துறைமுகத்தைச் சீர்படுத்தி ஊரையும் பெரிதாக்கினான்.

    பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாகத் தொடுத்து அன்னைக்குச் சூட்டி மகிழ்ந்தனர். எனவே அன்னை, 'முத்தாரம்மன்' என வழங்கலானாள். அம்மை நோயினை முத்துப் போட்டதாகக் கூறுவது மரபு. முத்துக் கண்டவர்கள் அம்பாள் பீடத்தைச் சுற்றி நீர் கட்டச் செய்வர். இதன்மூலம் அம்மை நோய் (முத்து நோய்) குணமாகும். முத்துக்களை ஆற்றிக் குணப்படுத்தியதால் அன்னை, 'முத்து ஆற்று அம்மன்' என்றழைத்து, அதுவே மருவி 'முத்தாரம்மன்' என அழைக்கப்படுகிறாள் என்றும் கூறப்படுகிறது.

    ஆரம்ப காலங்களில் சுயம்பு வடிவிலேயே முத்தாரம்மனைப் பக்தர்கள் வழிபட்டு வந்தனர். அன்னையின் திருமேனியினைக் கண்குளிரக் கண்டு, தரிசனம் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் அம்பாளிடம் வேண்டினர். ஒரு நாள் கனவில், தம்மோடு, ஞானமூர்த்தீஸ்வரர் திருமேனியுடன் ஆசாரிக்குக் காட்சி அளித்து, ''இதேபோல் எமக்கு ஒரு சிலை செய்து வையுங்கள்'' என ஆணையிட்டார்.

    அதன்படி அந்தச் சிலை, மயிலாடியில் இருந்து வரவழைக்கப்பட்டு சுயம்புவாக முளைத்துள்ள அம்பாளின் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டது. முத்தாரம்மன் அருகே சுவாமி ஞானமூர்த்தீஸ்வரர் வீற்றிருப்பதும், இருவருமே வடக்கு நோக்கி காட்சி தருவதும் இத்தலத்திற்கு மட்டுமே உள்ள பெருமையாகும்.

    முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும், மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர். மக்களின் துன்பம் கண்டு சகிக்க முடியாத அன்னையும், மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு முத்தாரம்மனாகப் பூமிக்கு வந்தாள்.

    பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலை போல ஆனார்கள். அதேபோல இந்திரனும், திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக மாறினார்கள். அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் வழக்கம் வந்தது. அன்னை அவர்கள் கொடுத்த ஆயுதங்களைப் பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.

    தவவலிமை மிக்க வரமுனி, ஆணவம் மிகுதியால் அவரது இருப்பிடம் வழியாக வந்த அகத்திய முனிவரை மதிக்கத் தவறியதோடு அவமரியாதையும் செய்தார். மனம் நொந்த அகத்தியர், வரமுனியை எருமைத்தலையும், மனித உடலும் பெற்று குலசேகரப்பட்டினம் இறைவியால் அழிவாயாக எனச் சாபமிட்டார். அகத்திய முனிவரின் சாபத்தால் வரமுனி எருமைத்தலையும் மனித உடலும் பெற்று மகிஷாசுரனாக மாறினார். ஆனாலும் தனது தவவலிமையால் பல வரங்களைப் பெற்றார். முனிவராக வாழ்வைத் துவங்கிய வரமுனி, தனது வாழ்வின் பிற்பகுதியில் அசுரனாகவே வாழ்வை நடத்தினார்.

    அவரின் இடையூறுகளைத் தாங்க இயலாத முனிவர்கள் அன்னையை நோக்கி கடும் வேள்வி நடத்தினர். மகிஷாசுரனின் கொடூர செயல்களுக்கு முடிவுகட்டும் விதமாக அவனை அழித்தாள் லலிதாம்பிகை. இந்தப் புனித நாள்தான் தசரா பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னை பராசக்தி, வேள்வியில் வளர்ந்த ஒன்பது நாட்களும் `நவராத்திரி' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

    நவராத்திரி தினங்களில் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் சுமார் 4 கிலோமீட்டர் பரப்பளவுக்கு எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சுமார் 800-க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் விதம், விதமான வேடத்தில் வந்து குலசையைக் குதூகலப் படுத்துவார்கள். ஒவ்வொரு குழுவும் தனித் தனியாக மேளம் முழங்க வட்டம், வட்டமாக நின்று ஆடுவதைக் காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக விளங்கும்.

    குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். 10-வது நாள் விஜய தசமி தினத்தன்று மகிஷாசுரனை முத்தாரம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி கடலோரத்தில் நடைபெறும். புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் கொடியேற்றத்துடன் தசரா பண்டிகை தொடங்கும். கொடியேற்ற நாளுக்கு முந்தைய இரவில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவாரத் தேவதைகளுக்குக் காப்பு கட்டப்படும். முதல் நாளில் அம்பாள் துர்க்கை கோலத்தில் காட்சி தருவாள். இரண்டாம் நாள் விசுவகர்மேஸ்வரர் கோலத்திலும், மூன்றாம் நாள் பார்வதி கோலத்திலும், நான்காம் நாள் பாலசுப்பிரமணியர் கோலத்திலும், ஐந்தாம் நாள் நவநீத கிருஷ்ணர் கோலத்திலும், ஆறாம் நாள் மகிஷாசுரமர்த்தினியாகவும், ஏழாம் நாள் ஆனந்த நடராசராகவும், எட்டாம் நாள் அலைமகள் கோலத்திலும், ஒன்பதாம் நாள் கலைமகள் கோலத்திலும் காட்சியளித்து வீதிஉலா வருகிறாள்.

    பத்தாம் நாள் பிற்பகலில் தசமி திதியில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், மகிஷாசுர சம்ஹாரத்திற்காகக் கொண்டு செல்லப்படும் சூலத்திற்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற பிறகு, மகிஷாசுரமர்த்தினி கோலம் கொண்டு, கடற்கரையில் அமைந்திருக்கும் சிதம்பரேசுவரர் கோவிலை நோக்கி அம்பாள் புறப்பாடு நடைபெறும். காளிவேடம் போட்டு இருக்கும் அனைவரும் தேர்மண்டபத்துக்கு வந்து, அம்மனைச் சூழ்ந்து நிற்பார்கள். அம்மன் அசுரனைத் தம் சூலாயுதத்தால் குத்தும்போது இவர்களும் தம் கைகளில் உள்ள சூலாயுதத்தால் மகிஷனைக் குத்துவார்கள். உலகத்தில் தர்மத்தைக் காத்து அதர்மத்தை அடியோடு வீழ்த்த இந்த வதத்தை அம்பாள் செய்வதாக ஐதீகம். இது தமிழ்நாட்டில் எந்த ஊர் விழாவிலும் காண முடியாத, காண கிடைக்காத அற்புத காட்சியாகும்.

    இதனையடுத்து, சிதம்பரேஸ்வரர் ஆலயத்தை வந்தடையும் அன்னைக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பதினோராவது நாள் காலை பூஞ்சப்பரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அன்னை அருள்புரிவாள். அம்பாள் மாலை கோவிலை வந்தடைந்த பின்னரே, கொடி இறக்கப்படும். அதன்பிறகு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளின் காப்புகள் களையப்படும். காப்பு கட்டிய பக்தர்கள் அனைவரும் தங்கள் காப்புகளைக் களைந்து விடுவார்கள். இரவில் அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெறும். 12-வது நாள் முற்பகலில் முத்தாரம்மனைக் குளிர்விப்பதாகக் குடம், குடமாகப் பாலாபிஷேகம் நடத்தப்படும். அத்துடன் தசரா விழா சிறப்பாக நிறைவடையும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர்- கன்னியாகுமரி சாலையில் திருச்செந்தூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் கோவில் உள்ளது.

    • குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    குலசேகரன்பட்டினம்:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    8-ம் திருவிழாவான நேற்று காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

    இரவில் கமல வாகனத்தில் கஜலெட்சுமி திருக்கோலத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    9-ம் திருவிழாவான நேற்று இரவில் அம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் கல்வி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இந்த நிலையில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் 10-ம் திருவிழாவான இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி காலையில் 6 மணி முதல் இரவு 7 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்ற பிறகு, இரவு 12 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நள்ளிரவு 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகிறது. 2 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவிலுக்கு எழுந்தருளுகிறார்.

    நாளை அதிகாலை 3 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோவில் அபிஷேக மேடையில் வைத்து அபிஷேக ஆராதனை நடைபெறும். அதன்பிறகு அம்மன் திருத்தேரில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    தேர் நிலைக்கு வந்தவுடன் அதிகாலை 5 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் அம்மன் எழுந்தருளி அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகிறது.

    • 2-ந்தேதி சூரசம்ஹாரம் நாளில் 20 லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • மாவட்ட நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு தேவயைான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா பெருந்திருவிழா கடந்த 23-ந்தேதி கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு தொடங்கியது.

    இதையொட்டி கோவிலில் தினசரி காலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேகங்கள், மதியம் அன்னதானம், மாலை 3 மணிக்கு சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை பரதநாட்டியம் போன்ற பல்வேறு கலைநிகழ்சிகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் ஒவ்வொரு திருக்கோலத்தில் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    இந்த நிலையில் விரதம் தொடங்கிய பக்தர்கள் கோவிலுக்கு வந்து கடலில் நீராடி வலது கையில் காப்புகட்டி தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராக மற்றும் பஜார் வீதிகளில் சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர். இதனால் திரும்பிய திசைகளில் எல்லாம் தசரா பக்தர்களாக தெரிகிறது.

    கடந்த 28-ந்தேதி முதல் தசரா குழுவினர் மேளம், தாரை தப்பட்டை மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள் டிஸ்கோவுடன் வந்து காப்பு கட்ட தொடங்கினர். மறுநாள் ஊர் பெயரோடு அமைந்த தசரா குழுவினர் ஊர் ஊராக சென்று கலைநிகழ்ச்சி நடந்தி அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் உள்ள முக்கிய ஊர்களில் தசரா பக்தர்கள் மற்றும் தசரா குழுவினர் அதிக அளவில் காணப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் அம்மன் பெயரில் வசூல் செய்த பணத்தை 10-ம் திருநாளான வருகிற 2-ந் தேதி காணிக்கையை கோவில் உண்டியலில் கொண்டு சேர்ப்பார்கள். இதற்கு பக்தர்களுக்கு வசதியாக கோவிலை சுற்றி தற்காலிக உண்டியல்கள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

    விழாவின் முக்கிய நாளான வருகிற 2 மற்றும் 3-ந்தேதி பக்தர்கள் வந்து செல்ல வசதியாக 500-க்கும் மேற்பட்ட சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    மருத்துவ துறை, மின்சார துறை, வருவாய்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் 2 நாள் இங்கு முகாமிட்டு பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கின்றனர்.

    2-ந் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு சிறப்பு பூஜையூடன் அன்னை முத்தாரம்மன் சிம்மவாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு செல்லும் போது காளி வேடம் மற்றும் சுவாமி வேடம் அணிந்த பக்தர்கள் ஒம்காளி, ஜெய்காளி என ஆக்ரோஷமாக கோஷமிட்டு முத்தாரம்மனை பின்தொடந்து செல்வார்கள். சுமார் 20 லட்சம் பக்தர்கள் கூடும் கடற்கரையில் அம்மன், மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.

    தொடர்ந்து நள்ளிரவு 1 மணிக்கு கடற்கரை மேடையிலும் தொடர்ந்து 2 மணிக்கு சிதம்பரேஸ்வரர் கடற்கரை மேடையில் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    3-ந் தேதிஅதிகாலை பூஞ்சப்பரத்தில் அன்னை முத்தாரம்மன் வீதியுலா புறப்படுதல், பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம், மாலை 4.30 மணிக்கு சப்பரம் கோவிலுக்கு வந்து சேர்ந்தவுடன் பக்தர்கள் காப்பு களைந்து விரதம் முறிப்பார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. 12-ம் திருவிழாவான 4-ந் தேதி காலை 6 மணி, 8 மணி, 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் ஏற்பாட்டில் சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடக்கிறது.

    தசரா திருவிழா ஏற்பாடுகளை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் செல்வி, கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம், ஆய்வர் முத்துமாரியம்மாள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், அறங்காவலர்கள் ரவீந்திரன் குமரன், மகாராஜன், கணேசன், வெங்கடேஸ்வரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    2-ந் தேதி சூரசம்ஹாரம் நாளில் 20 லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் திரள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு தேவயைான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்காக தற்காலிக வாகன நிறுத்தும் இடங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார் ஈடுபடுகின்றனர். மேலும் டிரோன் மற்றும் ஏ.ஐ.தொழில்நுட்ப வசதிகளுடன் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    • சுற்றுப்புற பகுதியில் உள்ள மக்கள் பலர் அதிகாலையிலே கோவிலுக்கு நடந்து வந்து தரிசனம் செய்தனர்.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெரும் திருவிழாவில் 7-ம் திருநாளான இன்று காலை முதல் இரவு வரை மண்டகப்படிதாரர்களின் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    இதையொட்டி காலையில் நடை திறந்தது முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    மேலும் ஏராளமான தசரா குழுவினர் நேற்று இரவு வரை மேளவாத்தியங்களுடன் ஆட்டம் பாட்டத்துடன் வந்து காப்புகட்டி சென்றனர்.

    இன்றும் தசரா குழுவினர் வந்து காப்புகட்டி சென்றனர். சுற்றுப்புற பகுதியில் உள்ள மக்கள் பலர் அதிகாலையிலே கோவிலுக்கு நடந்து வந்து தரிசனம் செய்தனர்.

    இன்று கோவில் கலை அரங்கத்தில் மாலை 3 மணிமுதல் ஆசிரியர் பெருமாள், கிஷோர் சமய சொற்பொழிவு, நடனம், பரதநாட்டியம், தொடர்ந்து இரவு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கிறார்.

    திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம், ஆய்வாளர் முத்துமாரியம்மாள் அறங்காவலர் குழுத்தலைவர் தாண்டவன்காடு கண்ணன் மற்றும் அறங்காவலர்கள், ஆலய பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • கடற்கரை மற்றும் குலசை பகுதியில் திரும்பி பக்கம் எல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
    • இன்று முதல் தினசரி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் கலை அரங்கத்தில் கலை நிகழ்ச்சி நடக்கிறது.

    உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோவில் தசரா பெருந் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி நேற்று இரவே ஏராளமான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் வந்து குவிந்தனர். இன்று அதிகாலையில் அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வைத்து ஊர்வலம் நடந்தது.

    கொடிப்பட்டம் கோவிலை வந்துசேர்ந்ததும் அதிகாலை 5.36 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகங்களும் அலங்காரங்களும் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. விழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் தீர்த்தம் எடுத்து ஓம்காளி, ஜெய்காளி கோஷம் எழுப்பி பரவசம் அடைந்தனர்.

    இதனால் கடற்கரை மற்றும் குலசை பகுதியில் திரும்பி பக்கம் எல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கோவிலில் இலவசமாக வழங்கிய மஞ்சள் கயிற்றினால் ஆன காப்பு வாங்கி வலது கையில் கட்டினர்.

    இதைத்தொடர்ந்து தாங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற தங்களுக்கு பிடித்தமானவேடங்கள் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூல் பிரிக்க தொடங்குவார்கள். காலை 10 மணிக்கு சிவலூர் தசரா குழு சார்பில் அன்னதானம் வழங்கும் பணி தொடங்கியது.

    இன்று முதல் தினசரி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் கலை அரங்கத்தில் கலை நிகழ்ச்சி நடக்கிறது.

    இன்று முதல் 1-ந் தேதி வரை தினசரி காலை 7.30 மணி, காலை 9 மணி, காலை 10.30 மணி, பகல் 12 மணி, பகல் 1.30 மணி, மாலை 4.30 மணி, மாலை 6 மணி, இரவு 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், தினசரி மதியம் 12 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.

    இன்று முதல் 9-ம் திருவிழாவான 1-ந் தேதி வரை தினசரி இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் ஒவ்வொரு வாகனத்தில் ஒவ்வொரு கோலத்தில் வீதியுலா நடக்கிறது.

    6-ம் திருவிழா முதல் 10-ம் திருவிழா வரை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தசரா குழுவினர் வேடம் அணிந்து மேளம், டிரம் செட், செண்டா மேளம், தாரை தப்பட்டம் மற்றும் கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சி நடத்துவார்கள்.

    எனவே நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் தசரா பக்தர்களாக காட்சியளிப்பார்கள். 10-ம் திருவிழா அன்று 11 மணிக்கு அன்னை முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் தொடர்ந்து இரவு 12 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி தொடர்ந்த பலலட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

    வருகிற 3-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு சூரசம்காரம் முடிந்தவுடன் கடற்கரையில் அன்னைக்கு அபிஷேக ஆராதனையும், அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோவில் முன்பு எழுந்தருளி சாந்தாபிஷேக ஆராதனையும், 3 மணிக்கு அபிஷேக மேடையில் அபிஷேக ஆராதனையும் தொடர்ந்து தேரில் பவனி வந்து தேர் நிலையம் சென்றடைதல், 5 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் அபிஷேக ஆராதனையும், 6 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் வீதியுலா புறப்படுதல் நடைபெறுகிறது.

    பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 4.30 மணிக்கு சப்பரம் கோவிலுக்கு வந்து சேர்ந்தவுடன் பக்தர்கள் காப்பு களைந்து விரதம் முடிப்பார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.

    12-ம் திருவிழாவான அக்டோபர் 4-ந் தேதி காலை 6 மணி, காலை 8 மணி, காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் ஏற்பாட்டில் சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடக்கிறது.

    தசரா திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் செல்வி, கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம், ஆய்வர் முத்துமாரியம்மாள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், அறங்காவலர்கள் ரவீந்திரன் குமரன், மகாராஜன், கணேசன், வெங்கடேஸ்வரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகமும் தசரா விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

    • தென் மாவட்டத்தை பொறுத்தவரை நவராத்திரி என்றாலே குலசேகரன்பட்டினம் தான்.
    • தசராவில் பக்தர்கள் அணியும் ஒவ்வொரு வேடத்துக்கும் ஒவ்வொரு பலன்களை முத்தாரம்மன் தருவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

    இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தென் மாவட்டத்தை பொறுத்தவரை நவராத்திரி என்றாலே குலசேகரன்பட்டினம் தான். இதனை சுருக்கி 'குலசை' என்பார்கள்.

    குலசை தசரா பெருந்திருவிழாவில் பங்கேற்பதற்காக, தூத்துக்குடி மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.

    இந்த ஆண்டு குலசை தசரா திருவிழா வருகிற 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் 10-ம் நாள் திருவிழாவான அக்டோபர் 2-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

    இந்த கோவிலில் ஒரே பீடத்தில் சுவாமி ஞான மூர்த்தீஸ்வரரும், அம்பிகை முத்தாரம்மனும் வீற்றிருக்கிறார்கள்.

    பாண்டியநாட்டை ஆண்ட குலசேகரபாண்டிய மன்னனுக்கு அன்னை முத்தாரம்மன் காட்சி கொடுத்து அருள் வழங்கியதால் இவ்வூர் குலசேகரன்பட்டினம் என அழைக்கப்பட்டதாக வரலாறு உண்டு.

    இந்த கோவில் முன்பு சாதாரண ஒரு தெருக் கோவிலாக இருந்து வந்தது. ஆனால் இன்று உலகப் பிரசித்தி பெற்ற கோவிலாக சிறப்பு பெற்று வளர்ச்சி பெற, அம்பாளின் மீதுள்ள பக்தர்களின் அளவு கடந்த நம்பிக்கை தான் காரணம்.

    முன்பெல்லாம் அம்மை நோய் குணமாக வேண்டி மட்டுமே அம்மனுக்கு விரதம் மேற்கொள்வார்கள். ஆனால் தற்போது கடன், வியாபார முடக்கம், வழக்கு பிரச்சினை என சகல துன்பங்களையும் நீக்கி வரம் அருள்வதால் பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனின் அருளை பெறப் பக்தர்களின் கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு லட்சக்கணக்கில் அதிகரித்து கொண்டே வருகிறது.

    கிராமத்து கோவிலாக இருந்தாலும் சாதி, மத வேறுபாடின்றி எல்லோரும் அருள் பெறும் சக்தி தலமாகவே இந்த கோவில் விளங்கி வருகிறது. முற்காலத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் மாறு வேடத்தில் சென்று மக்களிடம் தர்மம் எடுத்ததாக ஐதீகம் உள்ளதாம்.

    இந்த ஐதீகப்படி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டியும், நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டியும் மாறுவேடம் பூண்டு மக்களிடம் முத்தாரம்மனுக்கு காணிக்கை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். இதனை அம்மனே நேரில் வந்து கேட்பதாகக் கருதி மக்கள் தர்மம் செய்கிறார்கள்.

    தசராவில் பக்தர்கள் அணியும் ஒவ்வொரு வேடத்துக்கும் ஒவ்வொரு பலன்களை முத்தாரம்மன் தருவதாக பக்தர்கள் நம்புகின்றனர். காளி, சிவன், பார்வதி, பிரம்மா, விஷ்ணு, விநாயகர், முருகன், குறவன், குறத்தி, குரங்கு, கரடி, நர்சு, போலீஸ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வேடங்கள் அணிந்து ஊர் ஊராக சென்று, அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து, கோவில் உண்டியலில் செலுத்துவது தான் இதன் சிறப்பு ஆகும். முனிவர் வேடமானது முன் ஜென்ம பாவங்களை தீர்ப்பதாகவும், குறவர் வேடமானது மன குறைகளை தீர்க்கும் எனவும், பெண்கள் வேடமானது திருமண குறையை தீர்க்கும் எனவும், காளி வேடம் காரிய சித்தியை தரும் எனவும் கூறப்படுகிறது.

    ஒவ்வொரு பக்தர்களும் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப வேடங்களை அணிந்து வருவர். காவல்துறை வேடம் முதல் செவிலியர், மருத்துவர், எமதர்மன், சித்திரகுப்தன் என பல்வேறு வேடங்களை பக்தர்கள் அணிந்து வருவர்.

    அம்மன் அருளின்படி , காளி வேடம் அணிபவர்கள் 41 நாட்களுக்கு மேலாக விரதம் இருக்க தொடங்குவார்கள். அவர்கள் வீட்டருகே, குடில் அமைத்து அதில் அம்மனின் புகைப்படம் வைத்து தினமும் பூஜை செய்து அங்கேயே விரதம் இருந்து தங்கி இருப்பர். மற்ற வேடம் அனுபவர்கள் காளி வேடம் அணிபவர்களிடம் காப்பு கட்டி கொள்வர். மற்ற வேடம் அணிபவர்கள் குடியேறும் நாள் அன்று மாலை அணிந்து 11 நாள் விரதம் இருப்பர்.

     

    ஒவ்வொரு வேடத்திற்கும் ஒவ்வொரு பலன் இருப்பது போல, ஒவ்வொரு மாலைக்கும் ஒவ்வொரு பலன் இருப்பதாக நம்பப்படுகிறது. பச்சை வண்ண மாலையானது பசுமையான வாழ்வை தரும் எனவும், மஞ்சள் வண்ண மாலை மங்கல நிகழ்வை தருவதாகவும், கருங்காலி மாலை நல்லெண்ணத்தை தருவதாகவும், துளசி மாலை புனிதத்தை தருவதாகவும், ருத்திராட்ச மாலை சன்னியாச வாழ்வையும் அளிப்பதாகவும் நம்பப்படுகிறது.

    ஒவ்வொரு வேடம் அணிந்தவர்களும், அது எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், அருகில் வீடுகளில் யாசகம் பெற்று, அந்த காணிக்கையுடன் சூரசம்காரம் நடக்கும் நாளன்று கோவில் சென்று தங்கள் வேடத்துடன் அம்மனை தரிசித்து பின்னர் கடலில் சென்று நீராடிவிட்டு வருவர்.

    பின்னர் இரவு 10 மணி அளவில் முத்தாரம்மன் எழுந்தருளி, சூரனை வீழ்த்தும் சூரசம்கார நிகழ்வு கடற்கரையில் நிகழும். இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்து இருப்பார்கள். சூரசம்காரம் முடிந்து அம்மன் சன்னதி தேரில் ஊர்வலம் வருவார்.

    அம்மன் சன்னதியை அடைந்த பிறகு காப்பு தரிக்கப்படும். காளி வேடம் அணிந்தவர்கள் மட்டும் கோவிலில் காப்பு தரிப்பார்கள். மற்ற வேடம் அணிந்தவர்கள் காளி வேடம் அணிந்தவர்களிடம் காப்பு தரித்து கொள்வர். அதன் பிறகே குலசை முத்தாரம்மன் தசரா விரத காலம் நிறைவுபெறும்.

    இந்த ஆண்டு தசரா திருவிழாவுக்காக 61 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் கடந்த மாதம் 4-ந் தேதியே மாலை அணிந்தனர். 51 நாட்கள் விரதம் இருப்பவர்கள் கடந்த மாதம் 14-ந் தேதியும், 48 நாட்கள் விரதம் இருப்பவர்கள் 17-ந் தேதியும், 41 நாட்கள் விரதம் இருப்பவர்கள் 24-ந் தேதியும் விரதம் தொடங்கினர்.

     

    கோவிலில் இன்று விரதம் தொடங்கிய பக்தர்கள்.

    31 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் கடந்த 3-ந் தேதியும், 21 நாட்கள் விரதம் இருப்பவர்கள் கடந்த 13-ந் தேதியும் விரதம் தொடங்கினர். தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது நெல்லை, தென்காசி, விருதுநகர் மற்றும் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குலசை வந்து கடற்கரையில் நீராடி அம்மன் முன்பு மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர். இதனால் உடன்குடி, குலசை, திருச்செந்தூர் பகுதிகளில் எங்கு திரும்பினாலும் மாலை அணிந்த பக்தர்கள் காட்சியளிக்கின்றனர். கடந்த 2022-ம் ஆண்டு சுமார் 7 லட்சம் பக்தர்கள், 2023-ம் ஆண்டு 8 லட்சம் பக்தர்கள், கடந்த ஆண்டு 10 லட்சம் பக்தர்கள் வேடம் அணிந்திருந்த நிலையில், இந்த ஆண்டு இருமடங்கிற்கும் அதிகமான அளவில் பக்தர்கள் வேடம் அணிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் உண்டியல் வசூலே, மாலை அணியும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை உறுதிபடுத்துவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த ஆண்டு சூரசம்ஹாரம் நாளில் மட்டும் 20 லட்சம் பேர் திரண்ட நிலையில், இந்த ஆண்டு அதைவிட அதிகமாக கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வாகன நிறுத்துமிட வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    • பாசி மாலைகளை வாங்கி கடலில் கழுவி சாமியின் பாதத்தில் வைத்து பின்பு கழுத்தில் அணிந்து கொள்வர்.
    • ரூ.30 முதல் ரூ.350 வரை வண்ண பாசிகள் விற்பனைக்கு குவித்து வைக்கபட்டுள்ளது.

    இந்தியாவில் மைசூருக்கு அடுத்தப்படியாக தசரா திருவிழா தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 23-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி அக்டோபர் 2-ந் தேதி நள்ளிரவு சூரசம்காரம் நடக்கிறது.

    4-ந் தேதி தசரா திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் ஏராளமான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு வருவதுடன், தசரா திருவிழாவில் கடுமையான விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் 61, 41, 21, 11 நாட்கள் என தங்களுக்கு ஏற்றவாறு என அவரவர் சூழலுக்கு தகுந்தாற்போல் விரதம் மேற்கொள்வர். விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் புனித நீராடி கடற்கரை பகுதியில் விற்பனை செய்யப்படும் பாசி மாலைகளை வாங்கி கடலில் கழுவி சாமியின் பாதத்தில் வைத்து பின்பு கழுத்தில் அணிந்து கொள்வர்.

    தசரா திருவிழாவையொட்டி பாசி மாலை விற்பனை செய்ய நெல்லை, வள்ளியூர், பேட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான நரிக்குறவர்கள் குடும்பத்துடன் குலசேகரன்பட்டினம் உடன்குடி பகுதியில் தங்கி உள்ளனர். ரூ.30 முதல் ரூ.350 வரை வண்ண பாசிகள் விற்பனைக்கு குவித்து வைக்கபட்டுள்ளது. சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பிருந்து கடற்கரை வரை ஏராளமான பாசி மாலை விற்பனை செய்யும் நரிக்குறவர்கள் தங்களது குடும்பத்துடன் குவிந்து காணப்படுகின்றனர்.

    தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து இதனை வாங்கிசெல்வதால் பாசி மாலைகள் விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது. மேலும் தற்போது கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கும் பக்தர்கள் தினசரி குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.

    • குலசேகரன்பட்டினத்தில் பிரசித்திப் பெற்ற தசரா திருவிழா வருகிற அக்டோபர் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • தீப்பெட்டி தொழில்சாலையின் மிக பழமையான கட்டிடச்சுவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளது.

    உடன்குடி:

    உடன்குடி யூனியன் கவுன்சி லர்கள் கூட்டம் கூட்டரங்கில் நேற்று நடந்தது. யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கினார். ஆணையாளர் ஜான்சிராணி முன்னிலை தாங்கினார். கவுன்சிலர்கள் முருங்கை மகாராஜா, செல்வின், லோபோரின், முருகேஸ்வரி, ஜெயகமலா, தங்க லெட்சுமி மெல்சி ஷாலினி, ராமலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் முதலில் வரவு செலவு வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் நடந்த விவாதம் வருமாறு:-

    முருகேஸ்வரி (அ.தி.மு.க): குலசேகரன்பட்டினத்தில் பிரசித்திப் பெற்ற தசரா திருவிழா வருகிற அக்டோபர் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத்திரு விழாவை காண இந்தியா முழு வதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குலசையில் குவி வார்கள். பக்தர்களின் வசதிக்காக குலசை நகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக பக்தர்கள் அதிகளவு பயன்படுத்தும் குலசை வடக்கூர் ரோடு, காமராஜர்நகர் ரோடு, குலசை கடற்கரை ரோடு மற்றும் இணைப்பு ரோடுகள் அனைத்து ரோடுகளையும் உடனடியாக புதுப்பிக்க வேண்டும்.

    முருங்கை மகாராஜா (அ.தி.மு.க): குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அருகில் தீப்பெட்டி தொழில்சாலையின் மிக பழமையான கட்டிடச்சுவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளது. தசரா திருவிழாவின் போது சுவர் இடிந்து விழுந்தால் பலத்த உயிர் சேதம் ஏற்படும். எனவே ஆபத்தான சுவரை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

    தசரா திருவிழாவின் போது பக்தர்கள் குலசை மெயின் ரோட்டில் இருந்து ரெத்தினமாகாளி அம்மன் கோவில் வழியாக முத்தாரம்மன் கோவிலுக்கு செருப்பு அணியா மல் நடந்து வரு வார்கள். எனவே பக்தர்களின் வசதிக்காக இதனை பேவர்பிளாக் சாலையாக அமைக்க வேணடும்.

    செல்வின் (கவுன்சிலர்): மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாலை நேரங்களில் சிகிச்சை அளிக்க மருத்துவ பணியாளர்கள் இல்லை. எனவே டாக்டர் மற்றும் பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.

    பாலசிங் (சேர்மன்): அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் அறிவுறுத்தலின் படி தசரா திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடங்கி உள்ளது. குலசே கரன்பட்டினத்தில் 3 முக்கியமான ரோடு போடப்பட்டுள்ளது. கல்லா மொழியில் சிமெண்ட் ரோடு அமைக்கும் பணி தொடங்க உள்ளது. தசரா திருவிழாவிற்கு முன்பாக குலசையில் உள்ள அனைத்து ரோடுகளும் மரமாத்து செய்யப்பட்டு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் தசரா திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்து தரப்படும்.

    தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுகோள் விடுத்து பேசினர்.

    • தசரா திருவிழாவின் 9-வது நாள் விரதமிருந்து பெண்கள், குழந்தைகள் அதிகளவில் கலந்து கொண்டு கோவிலிலேயே தங்கி வழிபாடு செய்கின்றனர்.
    • முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் சினிமா பாடல்கள் என்ற பெயரில் குத்து பாடல்களுக்கு நடனக்கலைஞர்கள் ஆபாசமான மற்றும் கொச்சையான நடனங்களை ஆடுவது பக்தர்களின் மனதை புண்படுத்துகிறது.

    மதுரை:

    திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது:-

    திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் முத்தாரம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மைசூருக்கு அடுத்த படியாக தசரா திருவிழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. முத்தாரம்மன் கோவிலில் 12 நாட்கள் தசரா திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடன் சிறப்பு வழிபாடுகளை செய்வார்கள்.

    கோவில் பாரம்பரியத்தின்படி, பக்தர்கள், இளம் குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என அனைத்து வயதினரும் காளி, சிவன், அரசர்கள், குரங்குகள், யமன் போன்ற பல வேஷங்களை அணிந்து யாசகம் பெற்று காணிக்கைகளை அம்மனுக்கு கொடுப்பார்கள்.

    இத்திருவிழாவின் 9-வது நாள் விரதமிருந்து பெண்கள், குழந்தைகள் அதிகளவில் கலந்து கொண்டு கோவிலிலேயே தங்கி வழிபாடு செய்கின்றனர். இந்நிலையில் முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் சினிமா பாடல்கள் என்ற பெயரில் குத்து பாடல்களுக்கு நடனக்கலைஞர்கள் ஆபாசமான மற்றும் கொச்சையான நடனங்களை ஆடுவது பக்தர்களின் மனதை புண்படுத்துகிறது.

    ஏற்கனவே கோவில்களில் நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனங்கள் இடம்பெறக் கூடாது. மேலும் குறவன் குறத்தி சமூகத்தை அவமதிக்கும் வகையில் நடனங்கள் நாடகங்கள் உள்ளிட்டவை நடைபெறக்கூடாது என ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

    இந்த நிலையில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் தசரா திருவிழாவில் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமான வகையில் சினிமா பாடல்கள் மற்றும் குத்துப் பாடல்களுக்கு நடனம் ஆடப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் சுந்தர், பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசரனைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, கடந்த வருடம் நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை என்றார்.

    இதனை தொடர்ந்து நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த ஆண்டு இந்த கோர்ட்டு விரிவான உத்தரவு பிறத்துள்ளது. எனவே அதனை முறையாக பின்பற்ற வேண்டும். மேலும், தென் மாவட்டங்களில் இது போன்ற ஆடல், பாடல் கரகாட்டங்கள் எல்லாம் ரசிக்க கூடிய வகையில் பொழுது போக்குக்கான ஒன்றாக தானே இருக்கும் என கருத்துக்களை தெரிவித்தனர்.

    மேலும் இதில் நாங்கள் புதிய உத்தரவு பிறப்பிக்க விரும்பவில்லை கடந்த ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத பட்சத்தில் மனுதாரர் அவமதிப்பு வழக்கு தொடரலாம் என கூறிய நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

    • இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற அக்டோபர் 15-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • பக்தர்கள் தங்குவதற்கு கடற்கரை மற்றும் புதுத்தெரு பைபாஸ் பகுதியில் பக்தர்கள் ஓய்வு கூடம் இந்த ஆண்டு அமைக்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் தசரா திருவிழா மிகவும் விமர்சை யாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டிற்கான தசரா திருவிழா வருகிற அக்டோபர் 15-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக்டோபர் 24-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹார விழா நடக்கிறது. மறுநாள் 25-ந்தேதி மாலை 4 மணிக்கு கொடி இறக்கம் நடக்கிறது.விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், கழிப்பறை வசதிகள், வாகன நிறுத்தம் குறித்து தூத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை தக்காரும், உதவி ஆணையருமான சங்கர் தலைமையில் ஆய்வு பணி நடந்தது.

    இதில் பக்தர்கள் தங்குவதற்கு கடற்கரை மற்றும் புதுத்தெரு பைபாஸ் பகுதியில் பக்தர்கள் ஓய்வு கூடம் இந்த ஆண்டு அமைக்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    மேலும் குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் பகுதியில் 10 ஏக்கர் நிலத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகன நிறுத்தம் செய்வதற்கு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிர மணியன், கோவில் ஆய்வாளர் பகவதி, கோவில் கணக்கர் டிமிட்ரோ மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.

    • கூட்டத்தில் 100-க்கு மேற்பட்ட தசரா குழுவின் தலைவர் மற்றும் பிரதிநிதி கள் கலந்து கொண்டு தங்களது ஆலோ சனைகளை வழங்கினர்.
    • கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 15-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. இத்திரு விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிர த்திற்கு மேற்பட்ட தசரா குழுக்கள் கலை நிகழ்ச்சி நடத்தி காணிக்கை வசூல் செய்வார்கள்.

    ஆலோசனை கூட்டம்

    தசரா குழுவினர் திருவிழாவின் போது நடந்துகொள்ளும் முறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் கோவில் அருகில் உள்ள சிவனணைந்த பெருமாள் திருமண மண்டபத்தில் நடந்தது. திருச்செந்தூர் ஆர்.டி.ஒ., வாமணன் தலைமை தாங்கினார்.

    திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ், போக்கு வரத்து துறையை சேர்ந்த மயிலேறும் பெருமாள், குலசேகரன் பட்டினம் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் செயல் அலுவலர் ராமசுப்பி ரமணியன் வரவேற்றார்.

    தொடர்ந்து பக்தர்களின் கேள்விகளுக்கு பதில் கூறினார். அப்போது, குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வேண்டு கோள் வைத்து பேசினார்.

    4 மாவட்டங்களுக்கு விடுமுறை

    கூட்டத்தில் 100-க்கு மேற்பட்ட தசரா குழுவின் தலைவர் மற்றும் பிரதிநிதி கள் கலந்து கொண்டு தங்களது ஆலோ சனைகளை வழங்கினர். பெரும்பா லானவர்கள் 9, 10, 11-ம் திருவிழா நாட்களில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், வருகிற 24-ந்தேதி மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. மறுநாள் 25-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதால் திருவிழாவில் கலந்து கொள்ளும் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல சிரமம் ஏற்படும்.

    எனவே நான்கு மாவட்டங்களில் மட்டும் 25-ந்தேதி விடுமுறை விட வேண்டும் என தெரிவித்தனர்.

    ஏற்பாடுகள் குறித்து திருச்செந்தூர் ஆர்.டி.ஒ. வாமணன் கூறுகையில்,

    தசரா குழுக்களின் ஆலோ சனைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகள் விரிவாக செய்யப்படும் என தெரிவித்தார். முடிவில் செயல் அலுவலர் சங்கரேஸ்வரி நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் குலசேகரன் பட்டினம் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் கணேசன், நுகர்வோர் பேரவை மாநில தலைவர் மோகன்சுந்தரம், தாண்ட வன்காடு கார்த்தி கேயன், பிச்சிவிளை சுதாகர், ஒடக்கரை சுகு, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவிலில் தாக சாந்தி, சிறப்பு பூஜையும் நடந்தது.
    • வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்த அம்மனை வழிபட்டனர்.

    ஏரல் அடுத்து உள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவிலில் தசரா திருவிழா நேற்று நடந்தது. இத்திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. அதிகாலை 2 மணிக்கு வான வேடிக்கையுடன், நையாண்டி மேளம், கரகாட்டம், பேண்டு வாத்தியம் முன் செல்ல அம்மன் கற்பகபொன் சப்பரத்தில் நகர்வலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்த அம்மனை வழிபட்டனர்.

    நகர்வலம் சென்ற அம்மன் நேற்று அதிகாலை ஏரல் நட்டார் அம்மன் கோவில் சென்றடைந்தவுடன், சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவிலில் தாக சாந்தி, சிறப்பு பூஜையும் நடந்தது.

    அங்கிருந்து அம்மன் புறப்பாடாகி, ஏரல் மெயின் பஜார் வழியாக ஏரல் சேனையர் சமுதாய உச்சினிமாகாளி அம்மன் கோவிலை சென்றடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    பஜார் வழியாக தனது பேட்டையில் அமர்ந்த அம்மனுக்கு இரவு ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் சார்பாக சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜையும் நடந்தது. இரவு அம்மன் நகர்வலம் புறப்பட்டு இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் வந்து அடைந்தது. அங்கு சிறப்பு தீபாராதனை, பூஜைகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    ×