என் மலர்
நீங்கள் தேடியது "Kulasai Dasara"
- முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- பத்தாம் நாளான இன்று விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெற்றது.
உடன்குடி:
பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து பல்வேறு வேடங்களை அணிந்த பக்தர்கள் ஒவ்வொரு ஊரிலும் தசரா குழுக்கள் அமைத்து, வாகனங்களில் ஊர் ஊராக சென்று, கலைநிகழ்ச்சி நடத்தியும் காணிக்கை வசூலித்து வந்தனர்.
திருவிழாவையொட்டி தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் மாலையில் சமய சொற்பொழிவு, திருமுறை இன்னிசை, பரதநாட்டியம், வில்லிசை, இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடந்தது.
இந்நிலையில், பத்தாம் நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதனையொட்டி காலை முதல் மதியம் வரையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
பெரும்பாலான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர்.
இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளினார்.
அப்போது காளி வேடம் அணிந்த பக்தர்களும் அம்மனை பின்தொடர்ந்து வந்தனர். சூரசம்ஹாரத்தை காண்பதற்காக கடற்கரையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.
முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன் 3 முறை அம்மனை வலம் வந்து போரிட தயாரானான். அவனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். பின்னர் சிங்க முகமாக உருமாறிய மகிஷாசூரன் மீண்டும் உக்கிரத்துடன் போரிடுவதற்காக அம்மனை 3 முறை சுற்றி வந்தான். அவனையும் அம்மன் சூலாயுதம் கொண்டு அழித்தார். தொடர்ந்து எருமை முகமாக உருமாறிய மகிஷாசூரன் மறுபடியும் பெருங்கோபத்துடன் அம்மனுடன் போர்புரிய வந்தான். அவனையும் சூலாயுதத்தால் அம்மன் சம்ஹாரம் செய்தார்.
அதன்பிறகு சேவலாக உருமாறி போரிட்ட மகிஷாசூரனையும் அன்னை சூலாயுதத்தால் வதம் செய்தார். அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் 'ஓம் காளி, ஜெய் காளி' என்று விண்ணதிர பக்தி கோஷங்களை முழங்கி அம்மனை வழிபட்டனர்.
- முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள்.
- குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும்.
கோவில் தோற்றம்
தமிழகத்தின் தசரா என்றாலே குலசை தான். மைசூர் தசராவை மிஞ்சும் வகையில், தமிழ்நாட்டின் தென்கோடி கடற்கரையில் மகிஷாசுரனை சக்தியின் அம்சமான முத்தாரம்மன் சம்ஹாரம் செய்கிறாள். சங்க காலத்தில் குலசேகரப்பட்டினம் 'தென்மறைநாடு' என்று அழைக்கப்பட்டது.
பாண்டிய மன்னன் சடையவர்ம சுந்தரபாண்டியனின் மகன் குலசேகரப்பாண்டியன், இப்பகுதியை சுமார் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தான். கேரள மன்னனை வெல்ல குலசேகரப்பாண்டியன் படையெடுத்தபோது, அவன் கனவில் முத்தாரம்மன் தோன்றி அருளாசி வழங்கினாள். வெற்றி பெற்ற குலசேகரப்பாண்டியன் முத்தாரம்மனின் உத்தரவுபடி துறைமுகத்தைச் சீர்படுத்தி ஊரையும் பெரிதாக்கினான்.
பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாகத் தொடுத்து அன்னைக்குச் சூட்டி மகிழ்ந்தனர். எனவே அன்னை, 'முத்தாரம்மன்' என வழங்கலானாள். அம்மை நோயினை முத்துப் போட்டதாகக் கூறுவது மரபு. முத்துக் கண்டவர்கள் அம்பாள் பீடத்தைச் சுற்றி நீர் கட்டச் செய்வர். இதன்மூலம் அம்மை நோய் (முத்து நோய்) குணமாகும். முத்துக்களை ஆற்றிக் குணப்படுத்தியதால் அன்னை, 'முத்து ஆற்று அம்மன்' என்றழைத்து, அதுவே மருவி 'முத்தாரம்மன்' என அழைக்கப்படுகிறாள் என்றும் கூறப்படுகிறது.
ஆரம்ப காலங்களில் சுயம்பு வடிவிலேயே முத்தாரம்மனைப் பக்தர்கள் வழிபட்டு வந்தனர். அன்னையின் திருமேனியினைக் கண்குளிரக் கண்டு, தரிசனம் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் அம்பாளிடம் வேண்டினர். ஒரு நாள் கனவில், தம்மோடு, ஞானமூர்த்தீஸ்வரர் திருமேனியுடன் ஆசாரிக்குக் காட்சி அளித்து, ''இதேபோல் எமக்கு ஒரு சிலை செய்து வையுங்கள்'' என ஆணையிட்டார்.
அதன்படி அந்தச் சிலை, மயிலாடியில் இருந்து வரவழைக்கப்பட்டு சுயம்புவாக முளைத்துள்ள அம்பாளின் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டது. முத்தாரம்மன் அருகே சுவாமி ஞானமூர்த்தீஸ்வரர் வீற்றிருப்பதும், இருவருமே வடக்கு நோக்கி காட்சி தருவதும் இத்தலத்திற்கு மட்டுமே உள்ள பெருமையாகும்.
முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும், மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர். மக்களின் துன்பம் கண்டு சகிக்க முடியாத அன்னையும், மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு முத்தாரம்மனாகப் பூமிக்கு வந்தாள்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலை போல ஆனார்கள். அதேபோல இந்திரனும், திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக மாறினார்கள். அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் வழக்கம் வந்தது. அன்னை அவர்கள் கொடுத்த ஆயுதங்களைப் பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.
தவவலிமை மிக்க வரமுனி, ஆணவம் மிகுதியால் அவரது இருப்பிடம் வழியாக வந்த அகத்திய முனிவரை மதிக்கத் தவறியதோடு அவமரியாதையும் செய்தார். மனம் நொந்த அகத்தியர், வரமுனியை எருமைத்தலையும், மனித உடலும் பெற்று குலசேகரப்பட்டினம் இறைவியால் அழிவாயாக எனச் சாபமிட்டார். அகத்திய முனிவரின் சாபத்தால் வரமுனி எருமைத்தலையும் மனித உடலும் பெற்று மகிஷாசுரனாக மாறினார். ஆனாலும் தனது தவவலிமையால் பல வரங்களைப் பெற்றார். முனிவராக வாழ்வைத் துவங்கிய வரமுனி, தனது வாழ்வின் பிற்பகுதியில் அசுரனாகவே வாழ்வை நடத்தினார்.
அவரின் இடையூறுகளைத் தாங்க இயலாத முனிவர்கள் அன்னையை நோக்கி கடும் வேள்வி நடத்தினர். மகிஷாசுரனின் கொடூர செயல்களுக்கு முடிவுகட்டும் விதமாக அவனை அழித்தாள் லலிதாம்பிகை. இந்தப் புனித நாள்தான் தசரா பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னை பராசக்தி, வேள்வியில் வளர்ந்த ஒன்பது நாட்களும் `நவராத்திரி' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
நவராத்திரி தினங்களில் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் சுமார் 4 கிலோமீட்டர் பரப்பளவுக்கு எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சுமார் 800-க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் விதம், விதமான வேடத்தில் வந்து குலசையைக் குதூகலப் படுத்துவார்கள். ஒவ்வொரு குழுவும் தனித் தனியாக மேளம் முழங்க வட்டம், வட்டமாக நின்று ஆடுவதைக் காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக விளங்கும்.
குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். 10-வது நாள் விஜய தசமி தினத்தன்று மகிஷாசுரனை முத்தாரம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி கடலோரத்தில் நடைபெறும். புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் கொடியேற்றத்துடன் தசரா பண்டிகை தொடங்கும். கொடியேற்ற நாளுக்கு முந்தைய இரவில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவாரத் தேவதைகளுக்குக் காப்பு கட்டப்படும். முதல் நாளில் அம்பாள் துர்க்கை கோலத்தில் காட்சி தருவாள். இரண்டாம் நாள் விசுவகர்மேஸ்வரர் கோலத்திலும், மூன்றாம் நாள் பார்வதி கோலத்திலும், நான்காம் நாள் பாலசுப்பிரமணியர் கோலத்திலும், ஐந்தாம் நாள் நவநீத கிருஷ்ணர் கோலத்திலும், ஆறாம் நாள் மகிஷாசுரமர்த்தினியாகவும், ஏழாம் நாள் ஆனந்த நடராசராகவும், எட்டாம் நாள் அலைமகள் கோலத்திலும், ஒன்பதாம் நாள் கலைமகள் கோலத்திலும் காட்சியளித்து வீதிஉலா வருகிறாள்.
பத்தாம் நாள் பிற்பகலில் தசமி திதியில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், மகிஷாசுர சம்ஹாரத்திற்காகக் கொண்டு செல்லப்படும் சூலத்திற்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற பிறகு, மகிஷாசுரமர்த்தினி கோலம் கொண்டு, கடற்கரையில் அமைந்திருக்கும் சிதம்பரேசுவரர் கோவிலை நோக்கி அம்பாள் புறப்பாடு நடைபெறும். காளிவேடம் போட்டு இருக்கும் அனைவரும் தேர்மண்டபத்துக்கு வந்து, அம்மனைச் சூழ்ந்து நிற்பார்கள். அம்மன் அசுரனைத் தம் சூலாயுதத்தால் குத்தும்போது இவர்களும் தம் கைகளில் உள்ள சூலாயுதத்தால் மகிஷனைக் குத்துவார்கள். உலகத்தில் தர்மத்தைக் காத்து அதர்மத்தை அடியோடு வீழ்த்த இந்த வதத்தை அம்பாள் செய்வதாக ஐதீகம். இது தமிழ்நாட்டில் எந்த ஊர் விழாவிலும் காண முடியாத, காண கிடைக்காத அற்புத காட்சியாகும்.
இதனையடுத்து, சிதம்பரேஸ்வரர் ஆலயத்தை வந்தடையும் அன்னைக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பதினோராவது நாள் காலை பூஞ்சப்பரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அன்னை அருள்புரிவாள். அம்பாள் மாலை கோவிலை வந்தடைந்த பின்னரே, கொடி இறக்கப்படும். அதன்பிறகு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளின் காப்புகள் களையப்படும். காப்பு கட்டிய பக்தர்கள் அனைவரும் தங்கள் காப்புகளைக் களைந்து விடுவார்கள். இரவில் அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெறும். 12-வது நாள் முற்பகலில் முத்தாரம்மனைக் குளிர்விப்பதாகக் குடம், குடமாகப் பாலாபிஷேகம் நடத்தப்படும். அத்துடன் தசரா விழா சிறப்பாக நிறைவடையும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர்- கன்னியாகுமரி சாலையில் திருச்செந்தூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் கோவில் உள்ளது.
- குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
குலசேகரன்பட்டினம்:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
8-ம் திருவிழாவான நேற்று காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இரவில் கமல வாகனத்தில் கஜலெட்சுமி திருக்கோலத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
9-ம் திருவிழாவான நேற்று இரவில் அம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் கல்வி கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த நிலையில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் 10-ம் திருவிழாவான இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி காலையில் 6 மணி முதல் இரவு 7 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்ற பிறகு, இரவு 12 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நள்ளிரவு 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகிறது. 2 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவிலுக்கு எழுந்தருளுகிறார்.
நாளை அதிகாலை 3 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோவில் அபிஷேக மேடையில் வைத்து அபிஷேக ஆராதனை நடைபெறும். அதன்பிறகு அம்மன் திருத்தேரில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தேர் நிலைக்கு வந்தவுடன் அதிகாலை 5 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் அம்மன் எழுந்தருளி அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகிறது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- சுற்றுப்புற பகுதியில் உள்ள மக்கள் பலர் அதிகாலையிலே கோவிலுக்கு நடந்து வந்து தரிசனம் செய்தனர்.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெரும் திருவிழாவில் 7-ம் திருநாளான இன்று காலை முதல் இரவு வரை மண்டகப்படிதாரர்களின் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இதையொட்டி காலையில் நடை திறந்தது முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் ஏராளமான தசரா குழுவினர் நேற்று இரவு வரை மேளவாத்தியங்களுடன் ஆட்டம் பாட்டத்துடன் வந்து காப்புகட்டி சென்றனர்.
இன்றும் தசரா குழுவினர் வந்து காப்புகட்டி சென்றனர். சுற்றுப்புற பகுதியில் உள்ள மக்கள் பலர் அதிகாலையிலே கோவிலுக்கு நடந்து வந்து தரிசனம் செய்தனர்.
இன்று கோவில் கலை அரங்கத்தில் மாலை 3 மணிமுதல் ஆசிரியர் பெருமாள், கிஷோர் சமய சொற்பொழிவு, நடனம், பரதநாட்டியம், தொடர்ந்து இரவு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கிறார்.
திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம், ஆய்வாளர் முத்துமாரியம்மாள் அறங்காவலர் குழுத்தலைவர் தாண்டவன்காடு கண்ணன் மற்றும் அறங்காவலர்கள், ஆலய பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- கடற்கரை மற்றும் குலசை பகுதியில் திரும்பி பக்கம் எல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
- இன்று முதல் தினசரி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் கலை அரங்கத்தில் கலை நிகழ்ச்சி நடக்கிறது.
உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோவில் தசரா பெருந் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி நேற்று இரவே ஏராளமான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் வந்து குவிந்தனர். இன்று அதிகாலையில் அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வைத்து ஊர்வலம் நடந்தது.
கொடிப்பட்டம் கோவிலை வந்துசேர்ந்ததும் அதிகாலை 5.36 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகங்களும் அலங்காரங்களும் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. விழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் தீர்த்தம் எடுத்து ஓம்காளி, ஜெய்காளி கோஷம் எழுப்பி பரவசம் அடைந்தனர்.
இதனால் கடற்கரை மற்றும் குலசை பகுதியில் திரும்பி பக்கம் எல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கோவிலில் இலவசமாக வழங்கிய மஞ்சள் கயிற்றினால் ஆன காப்பு வாங்கி வலது கையில் கட்டினர்.
இதைத்தொடர்ந்து தாங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற தங்களுக்கு பிடித்தமானவேடங்கள் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூல் பிரிக்க தொடங்குவார்கள். காலை 10 மணிக்கு சிவலூர் தசரா குழு சார்பில் அன்னதானம் வழங்கும் பணி தொடங்கியது.
இன்று முதல் தினசரி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் கலை அரங்கத்தில் கலை நிகழ்ச்சி நடக்கிறது.
இன்று முதல் 1-ந் தேதி வரை தினசரி காலை 7.30 மணி, காலை 9 மணி, காலை 10.30 மணி, பகல் 12 மணி, பகல் 1.30 மணி, மாலை 4.30 மணி, மாலை 6 மணி, இரவு 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், தினசரி மதியம் 12 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.
இன்று முதல் 9-ம் திருவிழாவான 1-ந் தேதி வரை தினசரி இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் ஒவ்வொரு வாகனத்தில் ஒவ்வொரு கோலத்தில் வீதியுலா நடக்கிறது.
6-ம் திருவிழா முதல் 10-ம் திருவிழா வரை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தசரா குழுவினர் வேடம் அணிந்து மேளம், டிரம் செட், செண்டா மேளம், தாரை தப்பட்டம் மற்றும் கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சி நடத்துவார்கள்.
எனவே நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் தசரா பக்தர்களாக காட்சியளிப்பார்கள். 10-ம் திருவிழா அன்று 11 மணிக்கு அன்னை முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் தொடர்ந்து இரவு 12 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி தொடர்ந்த பலலட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.
வருகிற 3-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு சூரசம்காரம் முடிந்தவுடன் கடற்கரையில் அன்னைக்கு அபிஷேக ஆராதனையும், அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோவில் முன்பு எழுந்தருளி சாந்தாபிஷேக ஆராதனையும், 3 மணிக்கு அபிஷேக மேடையில் அபிஷேக ஆராதனையும் தொடர்ந்து தேரில் பவனி வந்து தேர் நிலையம் சென்றடைதல், 5 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் அபிஷேக ஆராதனையும், 6 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் வீதியுலா புறப்படுதல் நடைபெறுகிறது.
பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 4.30 மணிக்கு சப்பரம் கோவிலுக்கு வந்து சேர்ந்தவுடன் பக்தர்கள் காப்பு களைந்து விரதம் முடிப்பார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.
12-ம் திருவிழாவான அக்டோபர் 4-ந் தேதி காலை 6 மணி, காலை 8 மணி, காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் ஏற்பாட்டில் சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடக்கிறது.
தசரா திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் செல்வி, கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம், ஆய்வர் முத்துமாரியம்மாள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், அறங்காவலர்கள் ரவீந்திரன் குமரன், மகாராஜன், கணேசன், வெங்கடேஸ்வரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகமும் தசரா விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.
- தென் மாவட்டத்தை பொறுத்தவரை நவராத்திரி என்றாலே குலசேகரன்பட்டினம் தான்.
- தசராவில் பக்தர்கள் அணியும் ஒவ்வொரு வேடத்துக்கும் ஒவ்வொரு பலன்களை முத்தாரம்மன் தருவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தென் மாவட்டத்தை பொறுத்தவரை நவராத்திரி என்றாலே குலசேகரன்பட்டினம் தான். இதனை சுருக்கி 'குலசை' என்பார்கள்.
குலசை தசரா பெருந்திருவிழாவில் பங்கேற்பதற்காக, தூத்துக்குடி மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.
இந்த ஆண்டு குலசை தசரா திருவிழா வருகிற 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் 10-ம் நாள் திருவிழாவான அக்டோபர் 2-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
இந்த கோவிலில் ஒரே பீடத்தில் சுவாமி ஞான மூர்த்தீஸ்வரரும், அம்பிகை முத்தாரம்மனும் வீற்றிருக்கிறார்கள்.
பாண்டியநாட்டை ஆண்ட குலசேகரபாண்டிய மன்னனுக்கு அன்னை முத்தாரம்மன் காட்சி கொடுத்து அருள் வழங்கியதால் இவ்வூர் குலசேகரன்பட்டினம் என அழைக்கப்பட்டதாக வரலாறு உண்டு.
இந்த கோவில் முன்பு சாதாரண ஒரு தெருக் கோவிலாக இருந்து வந்தது. ஆனால் இன்று உலகப் பிரசித்தி பெற்ற கோவிலாக சிறப்பு பெற்று வளர்ச்சி பெற, அம்பாளின் மீதுள்ள பக்தர்களின் அளவு கடந்த நம்பிக்கை தான் காரணம்.
முன்பெல்லாம் அம்மை நோய் குணமாக வேண்டி மட்டுமே அம்மனுக்கு விரதம் மேற்கொள்வார்கள். ஆனால் தற்போது கடன், வியாபார முடக்கம், வழக்கு பிரச்சினை என சகல துன்பங்களையும் நீக்கி வரம் அருள்வதால் பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனின் அருளை பெறப் பக்தர்களின் கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு லட்சக்கணக்கில் அதிகரித்து கொண்டே வருகிறது.
கிராமத்து கோவிலாக இருந்தாலும் சாதி, மத வேறுபாடின்றி எல்லோரும் அருள் பெறும் சக்தி தலமாகவே இந்த கோவில் விளங்கி வருகிறது. முற்காலத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் மாறு வேடத்தில் சென்று மக்களிடம் தர்மம் எடுத்ததாக ஐதீகம் உள்ளதாம்.
இந்த ஐதீகப்படி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டியும், நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டியும் மாறுவேடம் பூண்டு மக்களிடம் முத்தாரம்மனுக்கு காணிக்கை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். இதனை அம்மனே நேரில் வந்து கேட்பதாகக் கருதி மக்கள் தர்மம் செய்கிறார்கள்.
தசராவில் பக்தர்கள் அணியும் ஒவ்வொரு வேடத்துக்கும் ஒவ்வொரு பலன்களை முத்தாரம்மன் தருவதாக பக்தர்கள் நம்புகின்றனர். காளி, சிவன், பார்வதி, பிரம்மா, விஷ்ணு, விநாயகர், முருகன், குறவன், குறத்தி, குரங்கு, கரடி, நர்சு, போலீஸ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வேடங்கள் அணிந்து ஊர் ஊராக சென்று, அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து, கோவில் உண்டியலில் செலுத்துவது தான் இதன் சிறப்பு ஆகும். முனிவர் வேடமானது முன் ஜென்ம பாவங்களை தீர்ப்பதாகவும், குறவர் வேடமானது மன குறைகளை தீர்க்கும் எனவும், பெண்கள் வேடமானது திருமண குறையை தீர்க்கும் எனவும், காளி வேடம் காரிய சித்தியை தரும் எனவும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு பக்தர்களும் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப வேடங்களை அணிந்து வருவர். காவல்துறை வேடம் முதல் செவிலியர், மருத்துவர், எமதர்மன், சித்திரகுப்தன் என பல்வேறு வேடங்களை பக்தர்கள் அணிந்து வருவர்.
அம்மன் அருளின்படி , காளி வேடம் அணிபவர்கள் 41 நாட்களுக்கு மேலாக விரதம் இருக்க தொடங்குவார்கள். அவர்கள் வீட்டருகே, குடில் அமைத்து அதில் அம்மனின் புகைப்படம் வைத்து தினமும் பூஜை செய்து அங்கேயே விரதம் இருந்து தங்கி இருப்பர். மற்ற வேடம் அனுபவர்கள் காளி வேடம் அணிபவர்களிடம் காப்பு கட்டி கொள்வர். மற்ற வேடம் அணிபவர்கள் குடியேறும் நாள் அன்று மாலை அணிந்து 11 நாள் விரதம் இருப்பர்.

ஒவ்வொரு வேடத்திற்கும் ஒவ்வொரு பலன் இருப்பது போல, ஒவ்வொரு மாலைக்கும் ஒவ்வொரு பலன் இருப்பதாக நம்பப்படுகிறது. பச்சை வண்ண மாலையானது பசுமையான வாழ்வை தரும் எனவும், மஞ்சள் வண்ண மாலை மங்கல நிகழ்வை தருவதாகவும், கருங்காலி மாலை நல்லெண்ணத்தை தருவதாகவும், துளசி மாலை புனிதத்தை தருவதாகவும், ருத்திராட்ச மாலை சன்னியாச வாழ்வையும் அளிப்பதாகவும் நம்பப்படுகிறது.
ஒவ்வொரு வேடம் அணிந்தவர்களும், அது எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், அருகில் வீடுகளில் யாசகம் பெற்று, அந்த காணிக்கையுடன் சூரசம்காரம் நடக்கும் நாளன்று கோவில் சென்று தங்கள் வேடத்துடன் அம்மனை தரிசித்து பின்னர் கடலில் சென்று நீராடிவிட்டு வருவர்.
பின்னர் இரவு 10 மணி அளவில் முத்தாரம்மன் எழுந்தருளி, சூரனை வீழ்த்தும் சூரசம்கார நிகழ்வு கடற்கரையில் நிகழும். இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்து இருப்பார்கள். சூரசம்காரம் முடிந்து அம்மன் சன்னதி தேரில் ஊர்வலம் வருவார்.
அம்மன் சன்னதியை அடைந்த பிறகு காப்பு தரிக்கப்படும். காளி வேடம் அணிந்தவர்கள் மட்டும் கோவிலில் காப்பு தரிப்பார்கள். மற்ற வேடம் அணிந்தவர்கள் காளி வேடம் அணிந்தவர்களிடம் காப்பு தரித்து கொள்வர். அதன் பிறகே குலசை முத்தாரம்மன் தசரா விரத காலம் நிறைவுபெறும்.
இந்த ஆண்டு தசரா திருவிழாவுக்காக 61 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் கடந்த மாதம் 4-ந் தேதியே மாலை அணிந்தனர். 51 நாட்கள் விரதம் இருப்பவர்கள் கடந்த மாதம் 14-ந் தேதியும், 48 நாட்கள் விரதம் இருப்பவர்கள் 17-ந் தேதியும், 41 நாட்கள் விரதம் இருப்பவர்கள் 24-ந் தேதியும் விரதம் தொடங்கினர்.

கோவிலில் இன்று விரதம் தொடங்கிய பக்தர்கள்.
31 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் கடந்த 3-ந் தேதியும், 21 நாட்கள் விரதம் இருப்பவர்கள் கடந்த 13-ந் தேதியும் விரதம் தொடங்கினர். தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது நெல்லை, தென்காசி, விருதுநகர் மற்றும் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குலசை வந்து கடற்கரையில் நீராடி அம்மன் முன்பு மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர். இதனால் உடன்குடி, குலசை, திருச்செந்தூர் பகுதிகளில் எங்கு திரும்பினாலும் மாலை அணிந்த பக்தர்கள் காட்சியளிக்கின்றனர். கடந்த 2022-ம் ஆண்டு சுமார் 7 லட்சம் பக்தர்கள், 2023-ம் ஆண்டு 8 லட்சம் பக்தர்கள், கடந்த ஆண்டு 10 லட்சம் பக்தர்கள் வேடம் அணிந்திருந்த நிலையில், இந்த ஆண்டு இருமடங்கிற்கும் அதிகமான அளவில் பக்தர்கள் வேடம் அணிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் உண்டியல் வசூலே, மாலை அணியும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை உறுதிபடுத்துவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த ஆண்டு சூரசம்ஹாரம் நாளில் மட்டும் 20 லட்சம் பேர் திரண்ட நிலையில், இந்த ஆண்டு அதைவிட அதிகமாக கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வாகன நிறுத்துமிட வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
- பாசி மாலைகளை வாங்கி கடலில் கழுவி சாமியின் பாதத்தில் வைத்து பின்பு கழுத்தில் அணிந்து கொள்வர்.
- ரூ.30 முதல் ரூ.350 வரை வண்ண பாசிகள் விற்பனைக்கு குவித்து வைக்கபட்டுள்ளது.
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தப்படியாக தசரா திருவிழா தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 23-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி அக்டோபர் 2-ந் தேதி நள்ளிரவு சூரசம்காரம் நடக்கிறது.
4-ந் தேதி தசரா திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் ஏராளமான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு வருவதுடன், தசரா திருவிழாவில் கடுமையான விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் 61, 41, 21, 11 நாட்கள் என தங்களுக்கு ஏற்றவாறு என அவரவர் சூழலுக்கு தகுந்தாற்போல் விரதம் மேற்கொள்வர். விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் புனித நீராடி கடற்கரை பகுதியில் விற்பனை செய்யப்படும் பாசி மாலைகளை வாங்கி கடலில் கழுவி சாமியின் பாதத்தில் வைத்து பின்பு கழுத்தில் அணிந்து கொள்வர்.
தசரா திருவிழாவையொட்டி பாசி மாலை விற்பனை செய்ய நெல்லை, வள்ளியூர், பேட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான நரிக்குறவர்கள் குடும்பத்துடன் குலசேகரன்பட்டினம் உடன்குடி பகுதியில் தங்கி உள்ளனர். ரூ.30 முதல் ரூ.350 வரை வண்ண பாசிகள் விற்பனைக்கு குவித்து வைக்கபட்டுள்ளது. சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பிருந்து கடற்கரை வரை ஏராளமான பாசி மாலை விற்பனை செய்யும் நரிக்குறவர்கள் தங்களது குடும்பத்துடன் குவிந்து காணப்படுகின்றனர்.
தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து இதனை வாங்கிசெல்வதால் பாசி மாலைகள் விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது. மேலும் தற்போது கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கும் பக்தர்கள் தினசரி குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.
- காளி வேடம் போடுவது மிகக் கடுமையான விரதத்துக்கு உரியதாகக் கருதப்படுகிறது.
- ஆண்கள் காளிவேடமிட்டு வருவதை குலசேகரன்பட்டினம் கோவிலில் காணலாம்.
கஷ்டங்களைப் போக்கும் காளி வேடம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவுக்கு வேடமணியும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது. தசரா வழிபாட்டு சடங்கின் ஒரு பகுதியாக ஆண்கள் காளிவேடமிட்டு வருவதை குலசேகரன்பட்டினம் கோவிலில் காணலாம்.
காளிவேடம் போட்டு இருப்பவர்கள் மேளதாளங்களுக்கேற்ப ஆடிக்கொண்டு ஊர்வலமாக செல்வார்கள். காளி இல்லாத தசரா குழுக்கள் இருக்காது. சூரசம்ஹாரத்தன்று காளிவேடம் போட்டு இருக்கும் அனைவரும் தேர் மண்டபத்துக்கு வந்து, அம்மனை சூழ்ந்து நிற்பார்கள்.
அம்மன் மகிசனைக் கொல்லை புறப்படுகையில் இவர்கள் அனைவரும் ஓங்காரக் கூச்சலிட்டபடி அம்மனைப் பின் தொடருவார்கள். அம்மன் சூரனைத் தம் சூலாயுதத்தால் குத்தும்போது இவர்களும் தம் கைகளில் உள்ள சூலாயுதத்தால் மகிசனைக் குத்துவார்கள்.
இந்நிகழ்ச்சியின் போது சுமார் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட காளிவேடம் அணிந்து இருப்பவர்கள், அம்மனை சூழ்ந்து நிற்பார்கள், இது தமிழ் நாட்டில் எந்த ஊர் விழாவிலும் காண முடியாத, காண கிடைக்காத அற்புத காட்சியாகும்.
காளி வேடம் போடுவது மிகக் கடுமையான விரதத்துக்கு உரியதாகக் கருதப்படுகிறது. இவர்கள் தசரா விழாவுக்காக நாற்பத்தொரு நாட்கள் கடும் விரதம் மேற்கொள்வார்கள். அந்நாட்களில் ஒருவேளை மட்டுமே சைவ உணவு சாப்பிடுவார்கள்.
தூய்மையைக் கடைப்பிடித்து, அவரவர் ஊர்ப்புறங்களில் உள்ள கோவில்களில் தங்கி, தாமே சமைத்து காலை, மாலை இரு நேரமும் குளித்து விரதம் மேற்கொள்வார்கள். இவ்வாறு விரதம் மேற்கொண்டோர் கொடியேற்றத்திற்குப் பின் மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்ற நாள்கணக்கில் காளிவேடம் ஏற்று ஊர், ஊராக சென்று வருவார்கள்.
தலையில் பின்புறம் தொங்குமாறு கட்டப்பட்ட நீண்ட முடியுடன், தகரத்தாலும் அட்டையாலும் செய்யப்பட்டு அழகுப்படுத்தப்பட்ட கிரீடம், நேர்பார்வை மட்டுமே பார்க்கத்தக்கவாறு சிறுதுளையிடப்பட்டு தகரத்தால் செய்யப்பட்ட கண்மலர், வாயின் இருபுறமும் செருகிக் கொள்ளத்தக்க வீரப்பற்கள், வெளியில் தொங்கும் நாக்கு, முகத்தில் சிவப்புப் பூச்சு, மரப்பட்டையாலும் இரும்புத் தகட்டாலும் அட்டையாலும் செய்யப்பட்ட பக்கத்துக்கு நான்கு என்ற முறையில் எட்டுக்கைகள், சிவப்புப்புடவை, மனிதத்தலைகள் வரையப்பட்ட அட்டை மாலை, உருத்திராட்ச மாலைகள், பாசி மாலைகள், இடையில் ஒட்டியாணம், காலில் கனத்த சதங்கைகள், கையில் இரும்பாலான கனத்த வாள் & இவையே காளிவேடம் அணிதலுக்கு உரிய பொருட்களாகும்.
இப்பொருட்களின் மொத்த எடை அளவு இருபது முதல் முப்பது கிலோ வரை இருக்கும். கடும் விரதம் மேற்கொண்டு, கடினமான இவ்வேடத்தை போடுபவர்களை மக்கள் காளியாகவே கருதுகின்றனர்.
காளிவேடத்தில் இருப்பவர்களை கண்டதும் அம்மனே வந்ததாக பக்தர்கள் எண்ணுவதும் வழிபடுவதும் காணிக்கை அளிப்பதும் அருள்வாக்குப் பெறுவதும் வழக்கமாகி உள்ளது. இதனால் இவ்வேடத்திற்கு மிகுந்த மரியாதை நிலவுகிறது.
எனவே, இவ்வேடம் புனைவோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக மிக அதிகமாகி விட்டது. காளி வேடத்தை முதன் முதலில் போட்டவர் யார் என்று பல்வேறு தசரா குழுவினரிடமும் கேட்டு ஆய்வு செய்த போது, குலசேகரன் பட்டினத்தைச் சேர்ந்த ஆறுமுகம் செட்டியார் என்பவர்தான் முதன் முதலாக முத்தாரம்மன் ஆலயத்தில் விரதம் இருந்து காளி வேடம் போட்டதாக தெரிய வந்தது.
அவரைத் தொடர்ந்து சேது பிள்ளை என்பவர் காளி வேடம் அணிந்ததாக கூறப்படுகிறது. குலசேகரன்பட்டினம், சிறு நாடார் குடியிருப்பு, பெரியபுரம், மாதவன்குறிச்சி, தாண்டவன்காடு, உடன்படி சந்தையடியூர், சுண்டங்கோட்டை ஊர்களைச் சேர்ந்த பலர் தொடர்ந்து பல ஆண்டுகள் காளி வேடமிட்டு சாதனை படைத்துள்ளனர்.
உடன்குடி ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க. உறுப்பினரும் பெரியபுரம் அம்பாள் தசரா குழுவின் செயலாளருமான எஸ்.பிரபாகர் முருகராஜ் 30 ஆண்டுகள் பல்வேறு வேடங்கள் அணிந்து முத்தாரம்மனுக்கு சேவை செய்தவர். இதில் 7 ஆண்டுகள் அவர் காளி வேடம் ஏற்றார்.
இதுபற்றி அவர் கூறுகையில், "காளி வேடம் போடுபவர்கள் மிக, மிக பயபக்தியுடன் விரதம் இருக்க வேண்டும். அம்மன் அவர்கள் மூலம் நிறைய வாக்குகள் சொல்வாள். இது முத்தாரம்மனின் மகிமைகளில் ஒன்று" என்றார்.
கொழும்பில் தொழில் புரியும் இவர் கடந்த சுமார் 10 ஆண்டுகளாக தசரா குழுவினரை ஒருங்கிணைத்து சேவையாற்றி வருகிறார். அதோடு குலசேகரன்பட்டினத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் சேவைகளையும் செய்து வருகிறார்.
குலசை வரும் பக்தர்கள் வசதிக்காக இன்னும் நிறைய திருப்பணிகள் செய்ய வேண்டும் என்கிறார் இவர். தனது வேண்டுகோளை ஏற்று குலசையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் வடக்கு கடற்கரை சாலை அமைத்து தந்ததை பெருமையுடன் கூறினார்.
காளி வேடம் போடுபவர்கள் நேர்ச்சையின் பொருட்டு அவ்வேடத்தைப் போடுவதாகத் தாமே முடிவு செய்து கொள்கின்றனர். ஆனால் பிற வேடங்களைப் போடுபவர்கள் தம் ஊர்களில் உள்ள கோவில் பூசாரிகளிடமோ சாமி ஆடுபவரிடமோ கணக்குக் கேட்டு, போட வேண்டிய வேடம் குறித்து முடிவு செய்கின்றனர்.
இதுவே நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த மரபாகும். ஆனால் இம்மரபு கடந்த சில ஆண்டுகளாக மாறி விட்டது. தற்போது பெரும்பாலான பக்தர்கள் தாம் விரும்பிய வேடத்தை யாரிடமும் கேட்காமல் தாமே தேர்வு செய்து போட்டு கொள்கின்றனர்.
எந்த வேடத்தை ஏற்றாலும் விரதம் இருக்க வேண்டியது என்பது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும். காளி வேடம் தவிர, பிற வேடங்களைப் போடுபவர்கள் கொடியேற்றத்திற்குப் பின், பத்துநாள், ஏழுநாள், ஐந்து நாள், மூன்று நாள் என்ற கணக்கில் அவரவர் வசதிக்கேற்ப விரதம் இருக்கின்றனர்.
இவர்கள் தங்கள் ஊர்களில் தசராக் குழுக்களை அமைத்துக் கொள்வார்கள். கிருஷ்ணன், பரமசிவன், இந்திரன, சூரியன், யமன், சந்திரன், இராமர், ஆஞ்சநேயர், பஞ்சபாண்டவர், அரசன், அரசி, குறவன், குறத்தி, காவலர், மோகினி, அரசியல்வாதிகள், திரைப்பட நடிகர்கள், கரடி, குரங்கு, புலி, போன்ற ஏராளமான வேடங்களைத் தசரா நாட்களில் காணமுடியும்.
சிலர் ஆண்டுதோறும் ஒரே வேடத்தைத் தொடர்ந்து போடுவார்கள். வேறு சிலர் தாம் விரும்பிய பலவித வேடங்களை ஆண்டுதோறும் மாற்றி மாற்றி போட்டுக் கொள்கின்றனர். எந்த வேடம் போடுவதற்கும் யாருக்கும் தடை இல்லை என்பதால், எல்லா வேடங்களையும் பக்தர்கள் போட்டுக் கொள்கின்றனர்.
வேடம் போடத் தொடங்கும் நாளன்று குழுவில் உள்ள அனைவரும் குலசேகரன்பட்டினம் சென்று, கடலில் குளித்து விட்டு, கோவிலுக்கு சென்று காப்புக் கட்டிக் கொள்கின்றனர். பின் குழுவாக ஊருக்குத் திரும்பி வேடம் போடத் தொடங்குவார்கள்.
வேடம் போட்டதும் தம் இருப்பிடத்தில் அல்லது கோவிலில் உள்ள அம்மனுக்குப் பூசை செய்து, தமது ஆட்டத்தைத் தொடங்குவார்கள். சூரசம்ஹாரம் வரை இவர்கள் குழுவாகவே செயல்படுவார்கள்.
வேடம் அணிவதற்குப் பயன்படுத்தும் பொருட்களை யாரும் தொடாதவாறு பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொள்வார்கள். தீட்டு எனக் கருதப்படும் இடங்களுக்கு இவர்கள் செல்வதில்லை.
தசராக் குழுக்களின் தேவையை உணர்ந்து அந்தந்த ஊர்மக்களும் நடத்துகொள்வதுண்டு. அவர்களுக்கு இடையூறு நேராத வகையிலும் அவர்களின் பக்திக்கு ஏற்ற முறையிலும் ஊர்மக்களின் நடவடிக்கைகள் காணப்படும்.
தசரா குழுவினர் நோன்பு தொடங்கிய நாள் முதல் வேடம்போடுதல், ஊர் ஊராக செல்லுதல், காணிக்கை வசூலித்தல், அருள் வாக்கு கூறுதல், மேளதாளங்களுடனும் கலைஞர்களுடனும் இணைந்து ஆட்டங்களை நிகழ்த்துதல் போன்றவற்றை செய்வார்கள். இதனால் தசரா குழுவினர் எந்த ஊருக்கு சென்றாலும், அந்த ஊரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக மாறிவிடும்.
இந்த கிராமியத் திருவிழா நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டுமே ஆண்டுக்கு ஒரு தடவை நடைபெறும் அற்புத திருவிழாவாகும். மற்ற மாவட்டத்துக்காரர்கள் இந்த வித்தியாசமான திருவிழாவின் மகத்துவத்தை ரசித்து பார்க்க வேண்டுமானால் குலசேகரன் பட்டினத்துக்கு சென்றால் பார்க்கலாம். இது அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு திருவிழாவாக இருக்கும்.
- சுவாமி வேடம் அணியும் பக்தர்கள் 61, 41, 21 நாட்கள் என விரதம் இருப்பார்கள்.
- தனி நபராகவும், தசரா குழுக்களாக வந்தும் முன் ஆர்டர் செய்கின்றனர்.
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 24-ந்தேதி மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது.
பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதில் பல்வேறு நோய்கள், தொழில் முடக்கம், குடும்ப பிரச்சினைகள் தீர அம்மனுக்கு நேர்த்தி கடனாக காளி, அம்மன், சிவன், கிருஷ்ணன், விநாயகர், முருகன், பண்டாரம், குரங்கு, கரடி ,புலி, சிங்கம், குறவன், குறத்தி, பெண், போலீஸ் போன்ற பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை பிரித்து அம்மனுக்கு செலுத்துவார்கள்.
இதில் சுவாமி வேடம் அணியும் பக்தர்கள் 61, 41, 21 நாட்கள் என விரதம் இருப்பார்கள். திருவிழா தொடங்க இன்னும் 2 வாரமே இருப்பதால் வேடம் அணியும் பக்தர்கள் அனைவரும் கடலில் குளித்து மாலை அணிந்து விரதம் தொடங்கி வருகின்றனர்.
பல்வேறு சுவாமி வேடத்திற்கான கீரிடம், சடை முடி, சூலாயுதம், நெற்றி பட்டை, கண்மலர், வீரபல் போன்றவை கடந்த சில மாதங்களாக உடன்குடியில் தயாராகி பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த பொருட்கள் தயார் செய்வதில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ள தொழிலாளர்கள் அதிகம் பேர் இருப்பதால் உடன்குடி பகுதியில் தயார் செய்யப்படும் சுவாமி வேடப்பொருட்களுக்கு அதிக கிராக்கி உள்ளது.
தனி நபராகவும், தசரா குழுக்களாக வந்தும் முன் ஆர்டர் செய்கின்றனர். சிலர் இடுப்பு ஒட்டியாணம், தலை கீரிடம், கை பட்டை போன்றவற்றிற்கு முன்னதாக அளவு கொடுத்து முன்பதிவு செய்வதாகவும் இதில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் உள்ள பெண்கள் போல வேடம் போடும் பக்தர்கள் இரட்டை ஜடை, ஒத்த ஜடை என்று பல்வேறு அலங்காரத்தில் தலை முடிவைப்பார்கள். இதுபோன்று ராஜா, ராணி வேடம் போன்ற பல்வேறு பொருட்களும் உடன்குடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதால் தற்போது உடன்குடியில் தசரா பொருட்களின் விற்பனை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
- எல்லா கோவில்களிலும் சிவனுக்கும், அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கும்.
- இக்கோவிலில் சக்தி மயமாக சிவனும், சிவமயமாக சக்தியும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.
அழகிய கடற்கரை கிராமமான குலசை என அழைக்கப்படும் குலசேகரப்பட்டினம்
திருநெல்வேலியிலிருந்து 68 கி.மீ. தொலைவிலும் திருச்செந்தூரிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் கடலோர கிராமமான குலசேகரப்பட்டினத்தில் இந்தியாவிலேயே
மைசூருக்கு அடுத்தப்படியாக நவராத்திரி பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
9 நாட்கள் மட்டுமின்றி 365 நாட்களும் இங்கே கொண்டாடப்படும் அம்மன் அருள்மிகு முத்தாரம்மன்.
குலசை முத்தாரம்மன் என்றால் மிக பிரசித்தம்.
தலப்பெருமை:
பொதுவாக எல்லா கோவில்களிலும் சிவனுக்கும், அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கும்.
ஆனால் இக்கோவிலில் சக்தி மயமாக சிவனும், சிவமயமாக சக்தியும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.
குலசை முத்தாரம்மன் கோவிலில் எங்கும் காண முடியாத அதிசயமாக இங்கு
மூலவர் ஞானமூர்த்தீஸ்வரரும் அம்பாள் முத்தாரம்மனும் சுயம்புவாக தோன்றி ஒரே விக்கிரகமாக
வடக்கு திசை நோக்கி வீற்றிருக்கின்றனர்.
- குலசேகரப்பட்டினத்தில் நவராத்திரி விழா திருவிழாவாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
- புரட்டாசி மாதம் நவராத்திரி சமயத்தில் ஊரெங்கும் ஆடல் பாடல் களை கட்டும்.
குலசேகரப்பட்டினத்தில் நவராத்திரி விழா பெரும் திருவிழாவாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த சமயத்தில் ஊர் முழுவதும் உள்ள ஆட்ட கலைஞர்கள் அம்மன் வேடமிட்டு தெருவெங்கும் நடனமாடி
திருவிழா நடத்த வேண்டிய தொகையை வீடுகள் தோறும் காணிக்கையாக பிச்சையெடுப்பர்.
புரட்டாசி மாதம் நவராத்திரி சமயத்தில் ஊரெங்கும் ஆடல் பாடல் களை கட்டும்.
கொண்டாடி விட்டு 10ம் நாள் விஜயதசமியன்று கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.
இந்த நவராத்திரி கொண்டாட்டமே குலசேகரப்பட்டினத்தின் மிகப்பெரும் திருவிழாவாகும்.
இதை தவிர ஆடிக்கொடை திருவிழா, ஐப்பசி விசு, திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி
போன்ற தினங்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
அம்மை நோய் கண்டவர்கள் நலமடைய இங்கே பிரார்த்திக்கின்றனர்.
மேலும் ஊனமுற்றவர்கள், மனநிலை பாதிப்படைந்தவர்கள் சொத்துக்கள் இழந்தவர்கள்,
வியாபார விருத்தியடைய விரும்புபவர்கள் ஆகியோரும் மாவிளக்கு பூஜை,
அங்க பிரதட்சனம், தீச்சட்டி எடுத்தல் வேல் அம்பு குத்தல் என தங்களால் இயன்ற நேர்த்தி கடன்களை செலுத்தி பலனடைகின்றனர்.
- தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன், தன்தலையுடன் அம்மனை சுற்றி வந்து போருக்கு தயாராவான்.
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா பெருந்திருவிழா உலக பிரசித்தி பெற்ற திருவிழா ஆகும்.
இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்குவதற்கு முன்பாக பல லட்சம் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி வந்தனர்.
கோவிலில் கொடியேறியதும் பக்தர்கள் அனைவரும் கோவிலுக்கு வந்து, மஞ்சள் கயிற்றினால் ஆன காப்புகளை வாங்கி வலது கையில் கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூலித்து வந்தனர்.
தங்களது ஊர் பெயரில் தசரா குழுக்கள் அமைத்து ஊரில் தசரா குடில் அமைத்து, காவடி, கரகம், நையாண்டி மேளம், கோலாட்டம், சிலம்பாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சி, தாரை தப்பட்டையுடன் சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வந்தனர்.
கோவிலில் தினசரி காலை முதல் இரவு வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தினசரி மாலை முதல் இரவு 9 மணி வரை சமய சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை, வில்லிசை போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடந்து வந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலையில் இருந்தே பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர். அம்மன் பெயரில் வசூல் செய்த காணிக்கைகளை கோவிலில் கொண்டு பக்தர்கள் சேர்ப்பதற்கு வசதியாக கோவிலை சுற்றி ஏராளமான சிறப்பு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் வந்து செல்ல வசதியாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் இருந்து 1,500-க்கு மேற்பட்ட சிறப்பு அரசு பஸ்கள் விடப்பட்டுள்ளனன. 10 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள கடற்கரை செல்லும்போது கடும் விரதம் இருந்து காளி வேடம் மற்றும் சுவாமி வேடம் அணிந்த பக்தர்கள் அம்மனை பின் தொடர்ந்து செல்வார்கள்.
கடற்கரையில் பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெறும்.
முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன், தன்தலையுடன் அம்மனை சுற்றி வந்து போருக்கு தயாராவான். அவனை சூலாயுதத்தால் அம்மன் வதம் செய்வார். பின்னர் சிங்கமுகமாக மாறி எதிர்கொள்வான். 3-வது எருமை தலையுடனும், 4-வது சேவல் உருவத்திலும் மாறிமாறி வருவான். 4 உருவத்தையும் அன்னை முத்தாரம்மன் அழிப்பார்.
அதன்பின் முத்தாரம்மன் கடற்கரையில் எழுந்தருளி அபிஷேகம், பின்பு சிதம்பரேஸ்வரர் கோவில், அதன்பின்பு கோவில் கலை அரங்கத்தில் எழுந்தருளி அபிஷேகம் நடைபெறும்.
நாளை 25-ந்தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு அம்மன் திருவீதி உலா சென்று விட்டு நண்பகல் சுமார் 3 மணி அளவில் கோவிலுக்கு வந்ததும் முதலில் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கப்படும்.
அதைத்தொடர்ந்து பக்தர்கள் காப்பு அவிழ்த்து விரதத்தை முடித்து கொள்வார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம், நாளைமறுநாள் (26-ந்தேதி) பிற்பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறும்.
சூரசம்ஹாரத்தை காண இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் குலசை பகுதி முழுவதுமே பக்தர்களின் தலைகளாக காட்சி அளிக்கிறது. இதே போல உடன்குடி, திருச்செந்தூர் பகுதிகளிலும் தசரா பக்தர்களின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

வேடமணிந்து காணிக்கை செலுத்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள்.
குலசையில் இன்று நள்ளிரவு நடைபெறும் சூரசம்ஹார விழாவில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவிலுக்கு கிழக்கு பக்கம் கடற்கரை இருப்பதால், மேற்கு பக்கம் உடன்குடி வழியாகவும் வடக்கு பக்கம் திருச்செந்தூர் வழியாகவும் தெற்கு பக்கம் மணப்பாடு வழியாக மட்டுமே வாகனங்கள் வந்து செல்ல முடியும்.
அதனால் திருச்செந்தூரில் இருந்து மணப்பாடு வரையிலும் மற்றும் உடன்குடி சுற்றுபுற பகுதி முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்செந்தூரில் இருந்து கடற்கரை வழியாக மணப்பாடு உவரி செல்லும் அனைத்து வாகனங்களும் பரமன்குறிச்சி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
இதைப்போல நாசரேத், சாத்தான்குளம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் மணப்பாடு வழியாக செல்வதற்கு சாத்தான்குளம் பகுதியில் திருப்பி விடப்பட்டுள்ளது.
மாவட்ட வருவாய்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் குலசேகரன்பட்டினத்தில் முகாமிட்டு தீவிரமாக பணிகளை செய்து வருகின்றனர்.






