search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kulasai Festival"

    • குலசேகரப்பட்டினத்தில் நவராத்திரி விழா திருவிழாவாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
    • புரட்டாசி மாதம் நவராத்திரி சமயத்தில் ஊரெங்கும் ஆடல் பாடல் களை கட்டும்.

    குலசேகரப்பட்டினத்தில் நவராத்திரி விழா பெரும் திருவிழாவாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

    இந்த சமயத்தில் ஊர் முழுவதும் உள்ள ஆட்ட கலைஞர்கள் அம்மன் வேடமிட்டு தெருவெங்கும் நடனமாடி

    திருவிழா நடத்த வேண்டிய தொகையை வீடுகள் தோறும் காணிக்கையாக பிச்சையெடுப்பர்.

    புரட்டாசி மாதம் நவராத்திரி சமயத்தில் ஊரெங்கும் ஆடல் பாடல் களை கட்டும்.

    கொண்டாடி விட்டு 10ம் நாள் விஜயதசமியன்று கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.

    இந்த நவராத்திரி கொண்டாட்டமே குலசேகரப்பட்டினத்தின் மிகப்பெரும் திருவிழாவாகும்.

    இதை தவிர ஆடிக்கொடை திருவிழா, ஐப்பசி விசு, திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி

    போன்ற தினங்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    அம்மை நோய் கண்டவர்கள் நலமடைய இங்கே பிரார்த்திக்கின்றனர்.

    மேலும் ஊனமுற்றவர்கள், மனநிலை பாதிப்படைந்தவர்கள் சொத்துக்கள் இழந்தவர்கள்,

    வியாபார விருத்தியடைய விரும்புபவர்கள் ஆகியோரும் மாவிளக்கு பூஜை,

    அங்க பிரதட்சனம், தீச்சட்டி எடுத்தல் வேல் அம்பு குத்தல் என தங்களால் இயன்ற நேர்த்தி கடன்களை செலுத்தி பலனடைகின்றனர்.

    • எல்லா கோவில்களிலும் சிவனுக்கும், அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கும்.
    • இக்கோவிலில் சக்தி மயமாக சிவனும், சிவமயமாக சக்தியும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.

    அழகிய கடற்கரை கிராமமான குலசை என அழைக்கப்படும் குலசேகரப்பட்டினம்

    திருநெல்வேலியிலிருந்து 68 கி.மீ. தொலைவிலும் திருச்செந்தூரிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

    இயற்கை எழில் கொஞ்சும் கடலோர கிராமமான குலசேகரப்பட்டினத்தில் இந்தியாவிலேயே

    மைசூருக்கு அடுத்தப்படியாக நவராத்திரி பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    9 நாட்கள் மட்டுமின்றி 365 நாட்களும் இங்கே கொண்டாடப்படும் அம்மன் அருள்மிகு முத்தாரம்மன்.

    குலசை முத்தாரம்மன் என்றால் மிக பிரசித்தம்.

    தலப்பெருமை:

    பொதுவாக எல்லா கோவில்களிலும் சிவனுக்கும், அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கும்.

    ஆனால் இக்கோவிலில் சக்தி மயமாக சிவனும், சிவமயமாக சக்தியும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.

    குலசை முத்தாரம்மன் கோவிலில் எங்கும் காண முடியாத அதிசயமாக இங்கு

    மூலவர் ஞானமூர்த்தீஸ்வரரும் அம்பாள் முத்தாரம்மனும் சுயம்புவாக தோன்றி ஒரே விக்கிரகமாக

    வடக்கு திசை நோக்கி வீற்றிருக்கின்றனர்.

    • தீச்சட்டி ஏந்தி வழிபட்டு தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறவர்களும் உண்டு.
    • அலகு குத்துதல் என்ற வேண்டுதலையும் பக்தர்கள் முத்தாரம்மனுக்கு செலுத்துகிறார்கள்.

    குலசை தசரா-நேர்த்திக் கடன்

    நேர்த்திக் கடனில், மாவிளக்கு பூஜை செய்வதும் ஒன்று. இது அனைத்து ஆலயங்களிலும் செய்வது போன்றே பக்தர்கள் அம்பாளுக்கு நேர்த்தி கடனாக மாவிளக்கு ஏற்றி வணங்கி வருகின்றனர்.

    அங்கப்பிரதட்சனம் செய்வதாக வேண்டிக் கொள்ளும் பக்தர்கள் அதனை நிறைவேற்றுகிறார்கள்.

    விசேஷ நாட்களில் ஊரின் மையத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்கு வந்து பிரகாரத்தில் அங்கப் பிரதட்சணம் செய்து தங்கள் வேண்டுதலைப் பூர்த்தி செய்கின்றனர்.

    தீச்சட்டி ஏந்தி வழிபட்டு தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறவர்களும் உண்டு.

    இவர்கள் குளித்து முடித்து விட்டு, ஈரத் துணியுடன், சந்தனம் பூசிய உடம்போடு, தீச்சட்டியைக் கைகளில் ஏந்தி, ஓம் சக்தி தாயே என்று பக்திப்பரவசத்தோடு கோவிலை வலம் வருகிறார்கள்.

    அலகு குத்துதல் என்ற வேண்டுதலையும் பக்தர்கள் முத்தாரம்மனுக்கு செலுத்துகிறார்கள். மேலும் சில பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி தங்கள் நேர்த்திக் கடனைப் பூர்த்தி செய்கின்றனர்.

    இங்கு இன்னுமொரு வேண்டுதல், அன்னதானம் செய்வது மற்றவர்களின் வயிற்றுப் பசியைப் போக்குவது என்பது ஒரு மிகப் பெரிய சேவையாகும்.

    பசியால் துடிக்கும் ஏழை, எளியவர்களுக்கு உணவு வழங்குவது போன்ற தொண்டு வேறு எதற்கும் ஈடாகாது என்பார்கள்.

    குலசை ஆலயத்தில் அன்னதானம் சிறப்பாக நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனாக ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குகின்றனர்.

    இது போன்று அருள்மிகு முத்தாரம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தி, தங்கள் வாழ்க்கையில் அனைத்து விதமான சகல சவுபாக்கியங்களையும் பக்தர்கள் பெற்றுச் செல்கின்றனர்.

    • குலசை ஆலயத்தில் மாத கடைசி வெள்ளிக்கிழமைகளில் பிரமாண்டமான மாவிளக்கு பூஜை நடைபெறும்.
    • குலசையில் சித்திரை மாதம் 1&ந் தேதி அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

    குலசை முத்தாரம்மன்-50

    1. குலசையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும், மைசூர் பகுதியை ஆண்ட மன்னர்களுக்கும் முன்பு உறவு முறை ஏற்பட்டதாம். இதனால் தான் தசரா திருவிழா மைசூர் போலவே குலசையிலும் தோன்றியதாக சொல்கிறார்கள்.

    2. தமிழ்நாட்டில் எல்லா ஆலயங்களிலும் விழாக்கள் ஆன்மீக விழாக்களாக இருக்கும். ஆனால் குலசையில் நடக்கும் தசரா திருவிழா கிராமிய கலை விழா போல நடைபெறுகிறது.

    3. குலசேகரப்பட்டினத்தில் ஞானமூர்த்தீஸ்வரர் ஆலயம் தவிர சிதம்பரேஸ்வரர் ஆலயம் காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் ஆலயம் என இரண்டு சிவாலயங்கள் உள்ளன.

    4. குலசையில் உள்ள விண்ணவரம் பெருமாள் கோவிலில் வழிபட்டால் திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட பலன்கள் கிடைக்கும்.

    5. குலசேகரப்பட்டினத்தில் வீரகாளியம்மன், பத்ரகாளியம்மன், கருங்காளியம்மன், முப்புடாரியம்மன், முத்தாரம்மன், உச்சினி மாகாளியம்மன், மூன்று முகம் கொண்ட அம்மன், வண்டிமறித்த அம்மன் என்று அட்டகாளிகளுக்கும் கோவில் உள்ளது.

    6. குலசை கோவில் கிராமத்து கோவிலாக இருந்தாலும் சாதி, மத வேறுபாடின்றி எல்லாரும் அருள் பெற்று பங்கேற்கும் சக்தி தலமாக உள்ளது.

    7. குலசை முத்தாரம்மன் கோவிலில் சமீபகாலமாக சிவாகமம், காமிகம் அடிப்படையில் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    8. குலசை தசரா காரணமாக சென்னை, மதுரை, சேலம் உள்பட தமிழ்நாட்டில் உள்ள ஆடல், பாடல், நடன இசை கலைஞர்களுக்கு சுமார் ஒரு வாரம் பணி புரியும் வாய்ப்பும் கை நிறைய சம்பள பணமும் கிடைக்கிறது.

    9. பொதுவாக சிவாலயங்களில் லிங்கத்தை நோக்கியபடி நந்தி இருக்கும். ஆனால் குலசையில் அம்மனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் நந்திக்கு பதில் சிம்மம் உள்ளது.

    10. குலசை ஆலயத்தில் மாத கடைசி வெள்ளிக்கிழமைகளில் பிரமாண்டமான மாவிளக்கு பூஜை நடைபெறும். மாதந்தோறும் சுமார் 500&க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த பூஜையில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

    11. மாவிளக்கு பூஜையின் போது தரும் மாவை சாப்பிட்டால் எத்தகைய நோயும் குறிப்பாக வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    12. குலசையில் சித்திரை மாதம் 1&ந் தேதி அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

    13. ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி 1&ந் தேதி குலசை கோவிலில் லட்சார்ச்சனை, 508 பால்குடம், அன்னதானம் ஆகிய மூன்றும் சிறப்பாக நடைபெறும்.

    14. புத்தாண்டு சிறப்பு பூஜைகளை ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் உள்ள காமதேவன் குழு பொறுப்பு ஏற்று செய்கிறது. இந்த பூஜைக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.

    15. சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திர தினத்தில் குலசை முத்தாரம்மன் கோவில் வருஷாபிஷேகம் நடைபெறும்.

    16. ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க் கிழமையன்று இரவு தேரோட்டம் நடத்தப்படுகிறது.

    17. தமிழ்நாட்டில் பொதுவாக சக்தி தலங்களில் கொடியேற்றம் நடைபெறாது. ஆனால் குலசை கோவிலில் கொடியேற்றம் நடத்தப்படுகிறது.

    18. அம்மை போட்டவர்கள் இத்தலத்தில் அம்மனை சுற்றி நீர் கட்ட செய்வார்கள். உடனே அம்மை இறங்கி விடும்.

    19. குலசை முத்தாரம்மனுக்கு மிகவும் பிடித்தது சிவப்பு சேலை, செவ்வரளி பூ மற்றும் எலுமிச்சை பழம் மாலை.

    20. நெல்லை மாவட்டம் பேட்டையை சேர்ந்த குறவர் இனத்தவர்கள் சுமார் ஆயிரம் பேர் கடந்த ஆடி மாதம் முதல் குலசையில் தங்கியுள்ளனர். குலசை முத்தாரம்மனை அவர்கள் தங்கள் குல தெய்வமாக கருதுகிறார்கள்.

    21. குலசை கோவிலில் விரதம் இருப்பவர்களில் சிலர் கடலில் குளித்து விட்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அங்கபிரதட்சனமாகவே முத்தாரம்மன் கோவிலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

    22. தமிழ்நாட்டில் உள்ள எல்லா வகை இசைக்கருவிகளையும் குலசை தசரா திருவிழாவில் பார்க்க முடியும்.

    23. குலசை கோவிலுக்கு சுமார் 800 க்கும் மேற்பட்ட தசரா குழுக்கள் வருகின்றன. சென்னை, மும்பையிலும் கூட குலசை தசரா குழுக்கள் உள்ளன.

    24. குலசையில் உள்ள நாடார் தசரா குழு தனித்துவம் கொண்டது. அந்த குழுவில் தான் எல்லா கடவுள்களின் வேடம் அணிந்தவர்களை காண முடியும்.

    25. தசரா விழா கொடியேற்றம் நிகழ்ச்சிக்கே குலசையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வது குறிப்பிடத்தக்கது.

    26. தசரா குழுக்களில் அதிக செலவு செய்யும் குழுவாக தாண்டவன்காடு தசரா குழு கருதப்படுகிறது.

    27. மகிஷாசூரனை முத்தாரம்மன் சம்காரம் செய்யும் நிகழ்ச்சி கோவில் முன்பு உள்ள குறுகலான தெருவில் தான் நடந்து வந்தது. கே.பி.கந்தசாமி அறநிலைத்துறை அமைச்சராக இருந்தபோது சம்ஹார நிகழ்ச்சி கடற்கரைக்கு மாற்றப்பட்டது.

    28. விஜயதசமியன்று நடக்கும் மகிஷாசூர வதம் நிகழ்ச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கும் அறம் வளர்த்த நாயகி கோவிலுக்கும் இடைப்பட்ட 3 கி.மீ. தூர கடற்கரையில் நடைபெறும்.

    29. சிவபெருமானிடம் முத்தாரம்மன் சூலம் வாங்கி சென்று மகிஷனை சம்ஹாரம் செய்வதாக வரலாறு உள்ளது. எனவே முத்தாரம்மன் ஏந்தி வரும் சூலத்துக்கும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.

    30. திருச்செந்தூரில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹாரம் அமைதியாக நடைபெறும். ஆனால் குலசையில் மகிஷனை அம்பாள் வதம் செய்யும் சம்ஹாரம் பக்தர்களின் ஆடல், பாடலுக்கிடையே ஆரவாரமாக நடைபெறும்.

    31. விஜயதசமி தினத்தன்று சரியாக இரவு 12 மணிக்கு மகிஷனை அம்பாள் சம்ஹாரம் செய்வாள்.

    32. மகிஷனை வதம் செய்த பிறகு முத்தாரம்மன் தேரில் பவனி செல்வாள். தமிழ்நாட்டில் அம்பாள் தேரில் ஏறி பவனி செல்வது இந்த தலத்தில் மட்டுமே நடைபெறுகிறது.

    33. சம்ஹார நாட்களில் முத்தாரம்மன் மிகவும் ஆவேசமாக காணப்படுவாள். எனவே 12&வது நாள் 108 பால்குடம் அபிஷேகம் செய்து அம்பாள் ஆவேசத்தை தணிப்பார்கள்.

    34. காளி வேடம் போடுபவர்களுக்கு கொலுசு, வளையல் மற்றும் மேக்கப் பொருட்களை வாங்கி தானமாக கொடுப்பதை தூத்துக்குடி மாவட்ட மக்கள் வேண்டுதலாக நிறைவேற்றுகிறார்கள்.

    35. நவராத்திரி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் மண்டபத்தில் வைக்கப்படும் முத்தாரம்மன் உற்சவத்துக்கு 6 தடவை அபிஷேக, ஆராதனை பூஜைகள் நடத்தப்படும். பக்தர்கள் அதில் பங்கேற்று பலன் பெறலாம்.

    36. திருப்பதி கோவிலில் பணக்கட்டுகளும், தங்க நகைகளும் உண்டியலில் போடப்படுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் குலசை கோவிலில் 90 சதவீத உண்டியல் வருவாய் சில்லறை நாணயங்களாகவே உள்ளது.

    37. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அடுத்தப்படியாக உண்டியல் வருமானத்தில் குலசை முத்தாரம்மன் கோவில் 2&வது இடத்தில் உள்ளது.

    38. அம்மை போட்டு குணம் அடைந்தவர்கள் குலசை முத்தாரம்மன் ஆலயத்துக்கு வந்து கப்பி முத்து எனப்படும் ஆமணக்கு முத்தை கிலோ கணக்கில் வாங்கி காணிக்கையாகக் கொடுக்கிறார்கள்.

    39. தூத்துக்குடி மாவட்ட மக்கள் குலசை முத்தாரம்மனிடம் வேண்டிக் கொண்டு முட்டை, கோழி, மாடு, ஆடு போன்ற வற்றை தானமாக கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். பக்தர்கள் கொடுக்கும் மாடுகளை பராமரிப்பதற்கு என்றே குலசையில் கோசாலை உள்ளது.

    40. குலசை முத்தாரம்மனுக்கு ரூ.1500 பணம் கட்டி சிறப்பு அபிஷேகம் நடத்தலாம்.

    41. புதிதாக கடை தொடங்கும் போதும், கிரக பிரவேசம் நடத்தும் போதும் முத்தாரம்மனுக்கு ஜவுளி எடுத்து கட்டுவதாக வேண்டிக் கொள்வார்கள். அதன்படி அம்பாளுக்கு 12 முழ சேலை, ஈசுவரனுக்கு 8 முழ வேட்டி எடுத்து காணிக்கையாக செலுத்துவார்கள்.

    42. குலசேகரப்பட்டினத்தில் உள்ள சிதம்பரேஸ்வரர் மற்றும் விண்ணவரம் பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான 35 அரிய சிலைகள் முத்தாரம்மன் ஆலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த 35 சாமி சிலைகளுக்கும் தினமும் காலை, மாலை இரு வேளைகளில் பூஜைகள் நடத்தப்படுகிறது.

    43. தண்டுபத்தை சேர்ந்த ஒரு பக்தர் குலசை முத்தாரம்மன் கோவிலில் நவக்கிரக சன்னதி அமைத்து கொடுத்துள்ளார்.

    44. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு குலசை முத்தாரம்மன் கோவில் தட்டாங்குடி கோவில் என்றழைக்கப்பட்டது.

    45. தசரா திருவிழாவுக்கு இந்த ஆண்டு சுமார் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பாதுகாப்புப் பணிகளில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.

    46. சமீப காலமாக குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமைகளை விட ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருகிறது.

    47. குலசையில் இந்துக்கள் தவிர கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களும் வசித்து வருகிறார்கள். முத்தாரம்மனுக்கு அவர்களும் காணிக்கை செலுத்துவதுண்டு. இது மும்மத ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக உள்ளது.

    48. கடந்த சில ஆண்டுகளாக முத்தாரம்மன் அருள்பெற இளம் பெண்களும், காளி வேடம் போட தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    49. விரதம் இருந்து குலசைக்கு வரும் பெண்கள் அருள் வந்து கோவில் பிரகாரத்தில் ஆடுவதை பார்க்கலாம். அவர்களிடம் பொதுமக்கள் ஆர்வமாக குறி கேட்பார்கள்.

    50. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில பகுதி மக்கள் தங்கள் வயலில் அறுவடை நடந்ததும் முதல் படி நெல்லை குலசை முத்தாரம்மனுக்கு கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    • வேடம் அணிந்தவர்களில் பெரும்பாலனவர்கள் ஆக்ரோஷமாக ஆடியபடிதான் வருவார்கள்.
    • அட்டையில் செய்த கருவிகளை வைத்து ஆடினால் யாருக்கும்,எந்த பாதிப்பும் ஏற்படாது.

    இரும்பு ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது

    குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலயத்துக்கு பல்வேறு வேடம் அணிந்து வரும் பக்தர்களிடம் ஆண்டுக்கு ஆண்டு மாற்றம் ஏற்பட்டபடி உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆடை, அலங்காரத்துக்கு பக்தர்கள் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.

    அதன்பிறகு அட்டைகள், கலர் தாள்களினால் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் பழக்கம் பக்தர்களிடம் ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக நிஜ பொருட்களையே பலரும் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

    அதாவது ஒருவர் சூலாயுதம், வேலாயுதம் ஏந்தி வரும் வகையில் வேடம் போட்டால், உண்மையான இரும்பு சூலாயுதம், வேலாயுதத்தை பயன்படுத்துகிறார்கள். இது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.

    குலசேகரப்பட்டினம் ஆலயத்தை பொருத்தவரை வேடம் அணிந்தவர்களில் பெரும்பாலனவர்கள் ஆக்ரோஷமாக ஆடியபடிதான் வருவார்கள். அப்படி வரும் போது உண்மையான இரும்பு ஆயுதங்கள் மற்றவர்களை பாதித்து விடுகிறது.

    அட்டையில் செய்த கருவிகளை வைத்து ஆடினால் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே வேடம் அணிந்து வருபவர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது என்று ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ஒலி பெருக்கி குழாய் வேண்டாம்

    குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் வந்து மகிஷனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த சூரசம்ஹாரத்தை காண குலசேகரன்பட்டினத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அன்றிரவு குலசையில் திரும்பிய திசையெல்லாம் தசரா குழுக்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அமர்க்களப்படும். அந்த சமயத்தில் தசரா குழுவினர் ஒலிபெருக்கி குழாய்களை பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    சம்ஹாரம் தொடங்குவதற்கு முன்பு கோவிலில் இருந்து நிறைய அறிவிப்புகள் வெளியிடப்படும். எல்லா தசரா குழுவினரும் ஒலிபெருக்கி குழாய்களை பயன்படுத்தினால், ஆலயத்தில் இருந்து வெளியிடப்படும் முக்கிய அறிவிப்புகள் பக்தர்களுக்கு கேட்காமல் போக வாய்ப்புள்ளது.

    எனவே தசரா குழுவினர் ஒலி பெருக்கி குழாய்களுக்கு பதில், ஒலிபெருக்கி பெட்டிகளை பயன்படுத்துமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். 

    ×