search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TASMAC"

    • தமிழகத்தில் கோடைகாலத்தையொட்டி 24 பீர் பிராண்டுகள் விற்பனை நடைபெற்றது.
    • வெளிநாட்டு வகை மதுபான விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கோடை வெப்பம் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே வாட்டி வதைத்து வருகிறது. கோடை வெப்பம் என்றாலே டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் முதல் தேர்வாக 'பீர்' தான் இருக்கும். அந்த வகையில், தற்போது கோடை காலத்தில் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. டாஸ்மாக் நிர்வாகமும் பல்வேறு புது வகையான பீர்களையும் அறிமுகம் செய்துள்ளது.

    இந்த நிலையில், கோடை காலத்தையொட்டி தமிழகத்தில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த மே 1-ந்தேதி முதல் தற்போது வரை, டாஸ்மாக் கடைகளில் 25 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான பீர் பெட்டிகள் விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது, கடந்த ஆண்டு மே மாத விற்பனையை காட்டிலும் 30 சதவீதம் அதிகம் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் கோடைகாலத்தையொட்டி 24 பீர் பிராண்டுகள் விற்பனை நடைபெற்றது. இதில், 3 புது வகையான பீர் பிராண்டுகளும் விற்பனை செய்யப்பட்டன. அதில், 100 சதவீதம் கோதுமை பீா் அடங்கும். இது மாநிலம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், புதிய வகை பீர் பிராண்டுகளை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. விற்பனையை பொறுத்தவரையில், மே மாதத்தில் மட்டும் இதுவரை 25 லட்சத்து 50 ஆயிரம் வரையில் பீர் பெட்டிகள் விற்பனை நடந்துள்ளது. இது, கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் அதிகம். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 20 லட்சம் வரை பீர் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது அதைவிட 30 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. அதேபோல், வெளிநாட்டு வகை மதுபான விற்பனையும் கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்துள்ளது. அதேபோல், டாஸ்மாக் வருவாய் மே மாதத்தில் அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மதுபான பாட்டிலில் ஈ, எறும்பு செத்து கிடப்பதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என விற்பனையாளர் கூறியுள்ளார்.
    • டாஸ்மாக் கடை ஊழியர்கள் அவரை சமரசம் செய்து வேறு ஒரு மதுபாட்டில் கொடுத்தனர்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சுப்பிரமணியபுரத்தை அடுத்த நவாச்சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் நேற்று மாலை 34 வயது மதிக்கத்தக்க மதுப் பிரியர் ஒருவர் மதுபாட்டில் ஒன்று வாங்கிச் சென்றார்.

    அந்த மதுவை குடிப்பதற்காக பாட்டிலை திறக்க முயன்றபோது பாட்டிலில் ஒரு ஈ , ஒரு கட்டெறும்பு கிடந்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து அவர் மீண்டும் மதுக்கடைக்கு சென்று விற்பனையாளரிடம், பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள இந்த பாட்டிலில் ஈ, எறும்பு எப்படி செத்து கிடக்கிறது? என்று கேட்டுள்ளார்.

    அப்போது மதுபான பாட்டிலில் ஈ, எறும்பு செத்து கிடப்பதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என விற்பனையாளர் கூறியுள்ளார்.

    இதனால் மதுப்பிரியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் அவரை சமரசம் செய்து வேறு ஒரு மதுபாட்டில் கொடுத்தனர்.

    இதனை அந்த வாடிக்கையாளர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார். தற்போது அவை வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் மது பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • டாஸ்மாக் ஊழியரை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே ருக்மணிபாளையத்தில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விற்பனையாளராக பால சுப்பிரமணியன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் 4 பேர் கொண்ட கும்பல் இலவசமாக மதுபானம் தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு அந்த விற்பனையாளர் கொடுக்க முடியாது என கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் அருகில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து விற்பனையாளர் பாலசுப்ரமணியனின் தலையில் தாக்கியுள்ளனர்.

    அதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் பீரிட்டு வெளி வந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் பாலசுப்ரமணியனை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    மேலும், இதுகுறித்து மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மர்ம கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டதாக மன்னார்குடி அடுத்த சொக்கனானவூர் கிராமத்தை சேர்ந்த அருள்முருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும், தாக்குதலில் ஈடுபட்ட நெடுவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்த திவ்யராஜ், அதே பகுதியை சேர்ந்த அஜித் மற்றும் சொக்கனானவூர் கிராமத்தை சேர்ந்த சரத் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். டாஸ்மாக் ஊழியரை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • டாஸ்மாக் கடைகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பீர் விற்பனை அதிகரித்து வருகிறது.
    • கடந்த 3 நாட்களாக பீர் கேட்டால் இல்லை என்ற பதில் தான் வருகிறது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை வட்டாரத்தில் ஈங்கூர், வெள்ளோடு, பெருந்துறை ஆர்.எஸ். உட்பட 14 இடங்களில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படுகிறது.

    தற்போது கோடை வெயில் வெழுத்து வாங்குவதாலும், 109 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் இருப்பதாலும், டாஸ்மாக் கடைகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பீர் விற்பனை அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் சென்னிமலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் திடீரென பீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக பீர் கேட்டால் இல்லை என்ற பதில் தான் வருகிறது. இதனால் குடிமகன்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பல கடைகளில் தேடி அழைந்தும் பீர் கிடைக்காத விரக்தியில் சரக்கு குடித்து செல்கின்றனர்.

    மேலும் டாஸ்மாக் கடைகளில் உயர் ரக சரக்குகள் வரவு அதிகரித்துள்ளதாலும், "குடிமகன்கள்" விரும்பும் சரக்குகள் கிடைப்பதில்லை. குடிமகன்கள் விரும்பி கேட்கும் பிராண்டுகள் படிப்படியாக குறைந்து விட்டன.

    விலை அதிகரிப்பு உள்ள சரக்குகள் தான் கிடைக்கின்றன. என்ற குற்றசாட்டுகள் நீண்ட நாட்களாக உள்ள நிலையில், தற்போது பீர் பிரியர்களும் குளு குளு பீர் வகைகள் கிடப்பதே இல்லை என குறைபட்டு கொள்கின்றனர்.

    டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுபாடு இன்றி கிடைக்கும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிமகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.
    • கடந்த ஆண்டு டின் பீர் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.

    திருச்சி:

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரிக்கிறது. பொதுவாக அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படும் கத்தரி வெயில் காலமான மே மாதத்தில் தான் வெயிலின் உக்கிரம் இந்த அளவுக்கு இருக்கும். ஆனால் முன்பாகவே மேலும் தாக்கம் கடுமையாக உள்ளது.

    அதிலும் திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தினமும் வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால் வெப்ப தாக்குதலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை அதிகம் நாடி வருகின்றனர்.

    ஆனால் மது பிரியர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஜில் பீர் அதிகம் குடிக்க தொடங்கியுள்ளனர். இதனால் டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.

    திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் ஜில் பீர் விற்பனை 2 மடங்காக அதிகரித்து உள்ளது. டாஸ்மாக் கடைகளில் ஜில் பீருக்காக கூட்டம் அலை மோதுகிறது.

    இதுபற்றி திருச்சி மண்டல டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த 2 மாதங்களில், பீர் விற்பனை 8 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மாயிலாடுதுறை, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 18 ஆயிரம் பீர் பெட்டிகள் விற்பனை ஆகியுள்ளது.

    வருகிற மே மாதத்தில் விற்பனை 18 முதல் 20 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கிறோம். மேலும், கடந்த ஆண்டு டின் பீர் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது 8 டிப்போக்களிலும் தேவைக்கு ஏற்ப பீர் பாட்டில்கள் வழங்கப்படுகின்றன.

    பாராளுமன்றத் தேர்தல் கட்டுப்பாடுகள் காரணமாக சில நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் விற்பனை மந்தமாக இருந்தது. தற்போது விற்பனை சூடு பிடித்துள்ளது என தெரிவித்தார்.

    திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மேற்பார்வையாளர் கூறும் போது, சமீபத்தில் சாதாரண பீர் பாட்டில்களின் விலை ரூ.170லிருந்து ரூ.230 ஆக உயர்ந்துள்ளது. விலை உயர்ந்தாலும் அது விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பகலில் பீர் விற்பனை அதிகமாக நடக்கிறது என்றார்.

    • தேவையான மது பாட்டில்களை வாங்கி இருப்பு வைக்க மது பிரியர்கள் ஆர்வம் காட்டினர்.
    • இன்று ஒரே நாளில் மட்டும் வழக்கமான விற்பனையை விட கூடுதலாக மது விற்பனை நடந்தது.

    வேலூர்:

    வேலூரில் பாராளுமன்ற தேர்தலையொட்டி கடந்த 17-ந்தேதி முதல் நேற்று 19-ந்தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நாளையும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    அனைத்து மதுபான கடைகளிலும் குடிமகன்கள் மது குடிப்பதற்காக குவிந்தனர். பலர் கூடுதல் மதுபாட்டில்களை வாங்கி வயிறு முட்ட குடித்தனர். மேலும் பலர் நன்றாக மது குடித்துவிட்டு தங்களது தேவைக்காக மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். பல்வேறு இடங்களில் கூட்டம் கூட்டமாக வந்து மது வகைகளை வாங்கிச்சென்றனர்.

    தேவையான மதுபாட்டில்களை வாங்கி இருப்பு வைக்க மது பிரியர்கள் ஆர்வம் காட்டினர்.

    ஆனால் டாஸ்மாக் கடைகளில் இன்று குவிந்த மது பிரியர்கள் தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை வாங்கி குவித்து மொத்தமாக மறைத்து அள்ளிச் சென்றுள்ளனர்.

    இது போன்று வாங்கிச் சென்ற மதுபாட்டில்களை திருட்டுத்தனமாக கூடுதல் விலைக்கும் அவர்கள் விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. இதைத் தொடர்ந்து அதுபோன்ற மது விற்பனையை தடுப்பதற்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இன்று ஒரே நாளில் மட்டும் வழக்கமான விற்பனையை விட கூடுதலாக மது விற்பனை நடந்தது. இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குவிந்து விற்பனை களைகட்டியது.

    • தேர்தல் பிரசாரம் முடிவடையும் நாளில் இருந்து வாக்குப்பதிவு நடைபெறும் நாள் வரை கடைகள் மூடல்.
    • வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ந்தேதியும் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு.

    இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. தமிழகத்தில் கட்சி தலைவர்கள் தற்போது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், 17-ந்தேதி மாலை ஐந்து மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடையும்.

    அதனால் தேர்தல் பிரசாரம் முடிவடையும் நாளில் இருந்து வாக்குப்பதிவு நடைபெறும் 19-ந்தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.

    அதனைத்தொடர்ந்து தமிழக அரசு மூன்று நாட்களை டாஸ்மாக் மூடப்படும் என அறிவித்துள்ளது. அத்துடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ந்தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்துள்ளது.

    • கண்காணிப்பு குழுவினர் போலீசார் உதவியுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சோதனையில் உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு சென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வரும் 19-ந் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இதனை முன்னிட்டு தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் போலீசார் உதவியுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு சென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை மேம்பாலம் அருகே பறக்கும் படை தனி தாசில்தார் கண்ணன் தலைமையில் குழுவினர் போலீசார் உதவியுடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்து 480 ரொக்கம் இருந்தது கண்டுபிடி க்கப்பட்டது.

    இது குறித்து காரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் வடுவூர் நெய்வாசல் டாஸ்மாக்கில் பணிபுரிவதும், அங்கு வசூலான பணத்தை தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் உள்ள தனது வீட்டுக்கு கொண்டு வந்து பின்னர் வங்கியில் செலுத்த இருந்ததும் தெரியவந்தது. இருந்தாலும் அதற்கு உரிய ஆவணம் இல்லாததால் ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்து 480-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    • டாஸ்மாக் கடையை ஊழியர்கள் திறந்து திருஷ்டி பூசணிக் காயை சுற்றி உடைத்தனர்.
    • மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    அம்பத்தூர்:

    முகப்பேர் மேற்கு, ரெட்டி பாளையம் சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. பள்ளி, குடியிருப்பு அருகே மதுக்கடை திறப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று புதிய மதுக்கடை திறக்கபட இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் மதுக்கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

    தகவல் அறிந்ததும் உதவி கமிஷனர் கிரி மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை ஊழியர்கள் திறந்து திருஷ்டி பூசணிக் காயை சுற்றி உடைத்தனர். இதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் மதுக் கடைக்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடை உடனடியாக மூடப்பட்டது. அந்த மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுபாட்டில்களுக்கு கூடுதல் விலை வசூலிப்பதை தடுக்க உதவும் என்று அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
    • சென்னையில் பல கடைகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வசதி இல்லை,

    சென்னை:

    டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வசதி ஏற்படுத்த வேண்டும் என மது பிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன் பேரில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட எல்லையில் உள்ள 132 டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் வாங்குபவர்களிடம் பே.டி.எம். கியூஆர் கோடு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் பணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு மதுப்பிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இது மதுபாட்டில்களுக்கு கூடுதல் விலை வசூலிப்பதை தடுக்க உதவும் என்று அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


    இதேபோல் சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் சுமார் 1000 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஆனால் சென்னையில் பல கடைகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வசதி இல்லை என்று மதுப்பிரியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுக்கடைகளில் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பது தடுக்கப்படும் என்று நம்பி இருந்தோம். ஆனால் சென்னையில் பல கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை இருந்தும் அதை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பது தொடர்பாக அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • மதுபானக் கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
    • பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இயங்கிவரும் மதுபானக் கடைகள்.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட காகிதப்பட்டறை பகுதியைச் சேர்ந்த 28 வது வார்டில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டும் ஆறு மதுபானக் கடைகள் இயங்கி வருவதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் நாள் தோறும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    மதுக்கடைகள் திறக்கப்படும் நேரம் தொடங்கி வார்டு முழுவதுமே மது குடிப்பவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால், வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுவதாகவும், இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் மதுபானக் கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதியில் வசிக்கும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இயங்கிவரும் மதுபானக் கடைகளைக் கணக்கெடுத்து அவற்றை உடனடியாக மூட நடவடிக்கை எடுப்பதோடு, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர் காலத்தை சிதைக்கும் போதைப் பொருட்களின் தாராள நடமாட்டத்தை இனியாவது தீவிர சோதனையின் மூலம் கண்டறிந்து அவற்றை முற்றிலுமாக ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளு மாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் ஒரு டப்பிங் படம் பார்ப்பது போல் இருந்தது.
    • 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியதாக தமிழக அரசு கூறி வருகிறது.

    தாம்பரம்:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நேற்று மாலை செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் தொடங்கியது. அப்போது நடைபயண பிரசார வாகனத்தில் நின்றபடி பொதுமக்களிடையே அண்ணாமலை பேசியதாவது:-

    காங்கிரஸ் ஆட்சியில் மோசமாக இருந்த இந்திய பொருளாதாரத்தை பிரதமர் மோடியின் கடுமையான உழைப்பு, நேர்மையான ஆட்சி தொலைநோக்கு பார்வையுடன் கொண்ட திட்டத்தால் இந்தியா 5-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. பா.ஜனதாவின் 295 தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    2024-2028-ம் ஆண்டுகளில் இந்தியா 3-வது பொருளாதார நாடாக மாறும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுவதும் பா.ஜனதா. 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்.

    தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் ஒரு டப்பிங் படம் பார்ப்பது போல் இருந்தது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் மாநில அரசு தமிழில் என்ன பெயர் வைக்கலாம் என்பதே இந்த பட்ஜெட்டில் உள்ளது.

    உள்ளூர் மக்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அதற்கென்று தனியாக பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. தி.மு.க. ஆட்சியில் கடந்த 33 மாதங்களாக எந்தவிதமான வளர்ச்சி திட்டங்களும், பணிகளும் செய்யவில்லை. தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக 20 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை. ஆனால் கனவு உலகில் வாழும் முதல்வர் 99 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக கூறி வருகிறார்.

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், புற்றுநோய் ஏற்படுவதால் வண்ண பஞ்சுமிட்டாய்க்கு தடை விதித்துள்ளார். அதைபோல தமிழக அரசு டாஸ்மாக் கடையில் சத்து டானிக் விற்கிறார்களா? இதற்கு ஏன் தடை விதிக்கவில்லை, மதுவுக்கு தடை விதிப்பார்களா?.

    60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியதாக தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால் டி.என்.பி.எஸ்.சி மூலம் 10 ஆயிரத்து 600 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மத்திய அரசு பல கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கலந்து கொண்ட ஏராளமான பா.ஜ.க.வினர் அண்ணாமலையை மலர் தூவி வரவேற்றனர். பொதுமக்களை பார்த்து அண்ணாமலை கையசைத்து பொதுமக்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

    இதையடுத்து சென்னை தாம்பரம் அடுத்த காமராஜபுரம் பஸ் நிலையம் அருகில் பொதுமக்களிடையே அண்ணாமலை பேசினார். மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியன் உள்பட பா.ஜனதா நிர்வாகிகள் உடன் வந்தனர்.

    ×