search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "O Panneer Selvam"

    • எடப்பாடியார் ஒருபோதும் முதலமைச்சர் பதவி கொடுங்கள் எனவும், பொதுச்செயலாளர் பதவி கொடுங்கள் எனவும் யாரிடத்திலும் போய் நிற்கவில்லை.
    • துணை முதலமைச்சர் பதவி கொடுத்த போதே கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்கும் தருணத்தில் அதற்கு மறுப்பு தெரிவித்து மவுனம் சாதித்தார்.

    மதுரை:

    அ.தி.மு.க.வில் இருந்து கடந்த 2017-ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு காட்சிகள் மாறின.

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் அவர் இணைந்தார். அப்போது அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது.

    அதன் பிறகு எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர் செல்வம் ஒத்துப்போகாத நிலையில் 2-வது முறையாக கடந்த 2022-ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

    அ.தி.மு.க. தலைமைக் கழகத்தை ஓ.பன்னீர்செல்வம் கைப்பற்ற வந்த போது அவரது ஆட்கள் தலைமைக் கழக கதவை காலால் எட்டி உதைத்து அங்கிருந்த பொருட்களை தஸ்தாவேஜுகளை அள்ளிச் சென்றனர். அதனால் ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள்.

    அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் சேர எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. அவரை அ.தி.மு.க.வில் சேர்க்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக உள்ளார். இதனால் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பாரதிய ஜனதா ஆதரவுடன் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிட்டார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் சேருவதற்கு மீண்டும் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் அ.தி.மு.க.வில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அவரை அ.தி.மு.க.வில் எக்காலத்திலும் சேர்க்க மாட்டோம் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரான முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

    மதுரையில் ஆர்.பி. உதயகுமார் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- அ.தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய போவதாக சிலர் வதந்தியை பரப்புகிறார்களே அது உண்மையா?

    பதில்:- பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியான பிறகு மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்தை சேர்க்க திட்டம். திரைமறைவில் நடக்கும் ரகசிய முயற்சிகள் என்று நீங்கள் கேட்ட இந்த செய்தியை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். அது மட்டுமல்ல எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் செய்திகள் ஊடகங்களில் வெளி வருகிறது.

    ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல் முதலாக அ.தி.மு.க.வில் தனக்கு பதவி பறிபோகிறது என்ற ஒரு சூழ்நிலை வந்தவுடன், பிரிவுக்காக முதன் முதலாக பிள்ளையார் சுழி போட்டவர் ஓ.பன்னீர்செல்வம்தான்.

    அதைத் தொடர்ந்து அம்மா உயிரை கொடுத்து உருவாக்கிய அ.தி.மு.க. அம்மா அரசை காப்பாற்றுவதற்கு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன் வைத்த போது எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட போது அதிலும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு நிலைப்பாடு இல்லாமல் எதிர்த்து வாக்களித்த ஒரு நிலையை சட்டமன்றத்தில் பார்த்தோம். அது அங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதைத் தொடர்ந்து கட்சிக்கு எதிராக வாக்களித்தாலும் கட்சி ஒற்றுமையின் முக்கியத்துவத்தை கருதி அவரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டு அவருக்கு கட்சியில் மிக உயர்ந்த பொறுப்பான பொதுச்செயலாளர் அந்தஸ்திலான ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

    ஆட்சியிலே முதலமைச்சர் அந்தஸ்தில் துணை முதலமைச்சர் பதவியும் சி.எம்.டி.ஏ. வீட்டு வசதி வாரிய பொறுப்பும் வழங்கப்பட்டது.

    ஆனால் கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய தருணத்தில் எல்லாம், ஒன்று அந்த முடிவுக்கு மறுப்பு தெரிவிப்பார். அல்லது மவுனம் சாதிப்பார். இதனால் கட்சியினுடைய வளர்ச்சி நடவடிககை வரலாறு காணாத வகையிலே பின் தங்கி இருந்ததை நாம் பார்த்தோம்.



    தேர்தலில் அவரது சொந்த மாவட்டத்தில் தேனியில் அம்மாவின் மறைவுக்கு பிறகு இன்றைக்கு இரட்டை இலை எத்தனை தொகுதியிலே அங்கு வெற்றி பெற்றிருக்கிறது? அவர் போட்டியிட்ட சட்டமன்ற தொகுதி தவிர 4 தொகுதியில் 3 தொகுதி தொடர்ந்து தோல்வியை தழுவி இருக்கிறது.

    தேனி எம்.பி. தொகுதி வெற்றி பெற்றதே? என்று நீங்கள் கேட்கலாம். தேனி எம்.பி. தொகுதி அப்போது வெற்றி பெற்றது வேறு விவகாரம். அந்த விவகாரத்துக்குள் செல்ல நான் விரும்பவில்லை.

    அந்த வெற்றி என்பது அவருக்கு மட்டும் சொந்தமல்ல. அது அ.தி.மு.க.வுக்கான சொந்தம். அதன் பிறகு அவர் அ.தி.மு.க.வில் செய்த குழப்பங்கள் ஏராளம். அ.தி.மு.க. தொண்டர்கள் கோவிலாக வணங்கும் தலைமைக் கழகத்தை குண்டர்களுடன் வந்து அடித்து நொறுக்கி தலைமைக் கழக கதவை காலால் எட்டி உதைத்து அங்கிருந்த தஸ்தாவேஜுகளை தூக்கிச் சென்றதை நாடே அறியும்.

    அந்த சமயத்தில் அவர் அ.தி.மு.க.வில் இருந்து 2-வது முறையாக நீக்கப்பட்டார். அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

    அதன் பிறகு அ.தி.மு.க.வை எதிர்த்து நீதிமன்றம் சென்றார். இரட்டை இலையை முடக்கப் பார்த்தார்.

    அ.தி.மு.க.வின் 52 ஆண்டுகால வரலாற்றில் இத்தனை வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்தது கிடையாது. அதற்கு காரணம் ஓ.பி.எஸ்., அவர் சுயலாபத்துக்காக பதவி சுகத்துக்காக வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலோடு நான் சொல்கிறேன். எந்த காலத்திலும் ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ப்பதாக வருகின்ற செய்திகளில் துளியும் உண்மை இல்லை. இதை அழுத்தம் திருத்தமாக ஆணித்தரமாக அ.தி.மு.க. சார்பாக நான் சொல்கிறேன்.

    இரட்டை இலைக்கு எதிராக ஒற்றை சீட்டுக்காக தற்போது இரட்டை இலையை தோற்கடிப்பேன் என சுயேட்சையாக ராமநாதபுரத்தில் போட்டியிட்ட ஓ.பி.எஸ்.சை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்.


    இதுபோல் ஓ.பி.எஸ். தொடர்ந்து கட்சிக்கு எதிராக பல பாவங்களை செய்து வருகிறார். எடப்பாடியார் ஒருபோதும் முதலமைச்சர் பதவி கொடுங்கள் எனவும், பொதுச்செயலாளர் பதவி கொடுங்கள் எனவும் யாரிடத்திலும் போய் நிற்கவில்லை.

    ஓ.பி.எஸ்.க்கு ஆட்சியிலும், கட்சியிலும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கட்சியில் உரிய முக்கியத்துவம் பிரதிநித்துவம் கொடுக்கும் வகையில் துணை முதலமைச்சர் பதவி கொடுத்த போதே கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்கும் தருணத்தில் அதற்கு மறுப்பு தெரிவித்து மவுனம் சாதித்தார். இதனால் கட்சியின் வளர்ச்சி நடவடிக்கை வரலாறு காணாத வகையில் பின்தங்கியது.

    ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல் முதலாக அ.தி.மு.க.வில் தனக்கு பதவி பறிபோகிறது என்ற சூழல் வந்தவுடன் பிரிவுக்கு முதல் முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் ஓ.பி.எஸ்.தான். அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். இணைவதாக வரும் தகவலுக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லை.

    இவ்வாறு உதயகுமார் கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் கட்சிக்குள் வந்தால் மீண்டும் இரட்டை தலைமை உருவாகி விடும் என்று அஞ்சுகிறார்.
    • ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சென்னை:

    தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் வட மாநிலங்களிலும் இன்னும் சில தினங்களில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு ஜூன் 4-ந்தேதி அன்று முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் தனித்தனி அணியாக களம் கண்டதால் வாக்குகள் பிரிந்து தி.மு.க.வுக்கே அது சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. வுக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்க திட்டமிட்டிருந்த அ.தி.மு.க.வின் கனவு பலிக்காமலேயே போய் விட்டது. தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்த்து களம் கண்ட அ.தி.மு.க., பா.ம.க.வையும் கூட்டணியில் சேர்த்திருந்தால் தி.மு.க. கூட்டணிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி இருக்க முடியும் என்றே அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.

    அதே நேரத்தில் அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக பாரதிய ஜனதா கூட்டணியில் போய் சேர்ந்துள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் களம் கண்டுள்ள அவர் வெற்றி பெறுவாரா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு தனிக்கட்சியை தொடங்கிய டி.டி.வி. தினகரனும் பாரதிய ஜனதாவோடு கைகோர்த்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். இப்படி ஓ.பி.எஸ், டி.டி.வி. தினகரன் இருவருமே பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக கைகோர்த்திருப்பது அந்த கட்சிக்கு பலவீனமாகவே பார்க்கப்படுகிறது.

    அதே நேரத்தில் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கக் கூடாது என்றே அ.தி.மு.க. இரண்டாம் கட்ட தலைவர்கள் பலரும் கட்சி மேலிடத்திடம் குறைபட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்று, ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரனையும் அரவணைத்துச் சென்றிருந்தால் நிச்சயம் அ.தி.மு.க. கூட்டணி வலுவானதாகவே மாறி இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    பா.ஜனதா கூட்டணியில் அ.தி.மு.க. இடம்பெற்று பா.ம.க.வும் அந்த கூட்டணியில் சேர்ந்திருந்தால் நிச்சயம் தி.மு.க. கூட்டணிக்கு அந்த அணி கடும் போட்டியாக இருந்திருக்கும் என்றே கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

    ஆனால் தற்போதைய சூழலில் ஓட்டுகள் பிரிந்து தி.மு.க. வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்புகளும் தெரிவித்து உள்ளன.


    எனவே அ.தி.மு.க.வின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தும் சில அதிரடியான முடிவுகளை அ.தி.மு.க. மேற்கொள்ள வேண்டிய கட்டாயமாகி இருப்பதாகவே கட்சியினர் பலர் கூறியுள்ளனர். குறிப்பாக ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை மீண்டும் உருவாக்கினால் தனித்து நின்றே வெற்றி பெற முடியும் என்றும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் விளக்கமாக எடுத்துக் கூறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் இதன் மூலம் அ.தி.மு.க. மீண்டும் வலுப்பெறும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

    இது தொடர்பாக திரை மறைவில் ரகசிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் கட்சிக்குள் வந்தால் மீண்டும் இரட்டை தலைமை உருவாகி விடும் என்று அஞ்சுகிறார். அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் இன்னமும் முழுமையாக தீர்க்கப்படாமலேயே இருக்கும் நிலையில் அவருடன் எப்படி கை கோர்த்து செயல்பட முடியும்? என்கிற கேள்விகளையும் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் எழுப்பியுள்ளனர். இப்படி அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை மீண்டும் சேர்ப்பது தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் பாராளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவினால் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • துணை வேந்தரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்துள்ளதன் காரணமாக தலைமையில்லாமல் பல்கலைக்கழகங்கள் இயங்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
    • எது எப்படியோ, தி.மு.க. அரசின் மோதல் போக்கு, மாணவ, மாணவியரின் கல்வியை கடுமையாக பாதித்துள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் போன்றவை துணை வேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகங்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

    இதற்குக் காரணம், ஆட்சியில் இருக்கும்போது ஒரு கொள்கை, ஆட்சியில் இல்லாதபோது ஒரு கொள்கை என இரட்டை நிலைப்பாட்டினை தி.மு.க. எடுத்திருப்பதுதான். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் முரண்பாடுகளில் மொத்த உருவமாக தி.மு.க. விளங்குகிறது. தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாடு காரணமாக கல்வி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. எனவே, பல்கலைக்கழக மானியக் குழு விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்றுவது அவசியம். இதனைப் பின்பற்றாமல், துணை வேந்தரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்துள்ளதன் காரணமாக தலைமையில்லாமல் பல்கலைக்கழகங்கள் இயங்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

    எது எப்படியோ, தி.மு.க. அரசின் மோதல் போக்கு, மாணவ, மாணவியரின் கல்வியை கடுமையாக பாதித்துள்ளது.

    தமிழ்நாட்டு மாணவ, மாணவியரின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள நடைமுறைகளின்படி பல்கலைகழகங்களின் துணை வேந்தர் நியமனத்தை மேற்கொள்ள உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பரமக்குடி நகர் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
    • திரண்டு இருந்த மக்களை நோக்கி கையை அசைத்தவாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாக்கு சேகரித்தபடி ஜே.பி.நட்டா வாகனத்தில் சென்றார்.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்.

    இதைத்தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று காலை புதுச்சேரியில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டு மதுரை வந்தார். விமான நிலையம் வந்த ஜே.பி.நட்டாவுக்கு பா.ஜ.க. பிரமுகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி யாதவா மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட் மைதானத்திற்கு காலை 11.00 மணிக்கு வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து அவர் கிருஷ்ணா தியேட்டர் பகுதிக்கு சென்றார்.

    ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து வாகன பிரசாரத்தில் ஜே.பி.நட்டா ஈடுபட்டார். அவரது வருகையை முன்னிட்டு பரமக்குடி நகர் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த பிரசாரத்தை முன்னிட்டு அவரது வாகனம் பேருந்து நிலையம், வெள்ளி விழா தோரணவாயில் வழியாக காந்தி சிலை வரை சுமார் 3 கி.மீ. தூரம் சென்றது. அவர் செல்லும் வழியில் இரு புறங்களிலும் பா.ஜ.க.வினரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து ஆரவாரம் செய்து அவருக்கு வரவேற்பு அளித்தனர். திரண்டு இருந்த மக்களை நோக்கி கையை அசைத்தவாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாக்கு சேகரித்தபடி ஜே.பி.நட்டா வாகனத்தில் சென்றார்.

    பின்னர் காந்தி சிலை அருகே வாகனத்தில் இருந்த படியே ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    மிகவும் தகுதி வாய்ந்த, திறமை வாய்ந்த தலைவர் ஓ.பன்னீர்செல்வம். அவருக்கு பிரசாரம் செய்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழக மக்களுக்காக ஓங்கி ஒலித்த குரல் அவருடையது. அவரது குரல் டெல்லியிலும் ஒலிக்க வேண்டும் என்பதற்காக இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் வேட்பாளராக போட்டியிடும் அவரை நீங்கள் வெற்றிபெற செய்ய வேண்டும். இதற்காக பலாப்பழம் சின்னத்தில் நீங்கள் வாக்களிப்பீர்களா?

    நடைபெறும் இந்த தேர்தல் வெறும் பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, 2047-ல் பாரதம் ஒரு வளர்ச்சியடைந்த பாரதமாக, வலிமை பெற்ற பாரதமாக மாறுவதற்கான ஒரு தேர்தலாகும். எனவே 400 சீட்டுக்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மத்திய பா.ஜ.க. ஆட்சியில், ஏழைகள் வளம் பெற அதிகமான திட்டங்களை அளித்துள்ளது. ஏழை மக்களுக்கு வீடு கட்டும் திட்டம், மருத்துவ வசதி போன்றவை அளிக்கப்பட்டுள்ளன.

    ரேசன் கடைகள் மூலமாக 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கும் இது தொடர்ந்து வழங்கப்படும். மத்தியில் பா.ஜ.க. ஆட்சியின் மூலம் 25 கோடி ஏழைகள் வறுமைக்கோட்டிற்கு மேலே வந்துள்ளனர். 12 ஆயிரம் கிலோ மீட்டர் சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதேபோன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்துவதற்காக தமிழகத்திற்கும், ஏராளமான நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

    தி.மு.க. என்பது, அநீதி, ஊழல், கட்டப்பஞ்சாயத்து தவிர வேறொன்றும் இல்லை. அவர்கள் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் சொத்துகளை குவித்துள்ளனர். ஜூன் 4-ந்தேதி அன்று அமையும் ஆட்சி இவர்களை சிறைக்கு அனுப்பும் அல்லது ஆட்சியை விட்டு வெளியே அனுப்பும். ஆகவே பா.ஜ.க. வெற்றி பெற பலாப்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதன் பின்னர் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து கோவைக்கு புறப்பட்டு சென்றார்.

    • மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என முழக்கமிட்டார்.
    • சாலை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன் என ஓ.பன்னீர்செல்வம் வாக்குறுதி அளித்து விட்டு சென்றார்.

    கீழக்கரை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் ஆங்காங்கே பிரசாரத்தில் ருசிகரங்களுக்கும், பரபரப்புகளுக்கும் சற்றும் பஞ்சமில்லை. கலகலவென்று பேசும் வேட்பாளர்கள், கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கும் வாக்காளர்கள் என சுவாரசியங்களும் அரங்கேறி வருகிறது. அப்படி ஒரு நிகழ்வுதான் ஓ.பி.எஸ். பிரசாரத்திலும் நடந்துள்ளது.

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில் நேற்று அவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய பகுதிகளான குயவன்குடி, வாலாந்தரவை, வழுதூர், பெருங்குளம், செம்படையார்குளம், கும்பரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது செம்படையார்குளம் கிராமத்தில் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தபோது அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கோட்சூட் அணிந்தபடி டிப்டாப்பாக பிரசார களத்திற்குள் வந்தார். பின்னர் அவர் நான் துபாயிலிருந்து வருகிறேன் என ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து குரல் எழுப்பி, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என முழக்கமிட்டார்.

    அதற்கு ஓபிஎஸ் "தம்பி துபாயா, முதல்ல அந்த கூலிங் கிளாஸ போடுங்க" என அவருடன் சிரித்து கொண்டே பேசினார். ஆனால் அந்த இளைஞர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் அங்கிருந்து பிரசாரத்தை மீண்டும் தொடங்கிய, ஓ.பன்னீர்செல்வம் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள், இப்பகுதியில் சாலை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்து விட்டு சென்றார்.

    • ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
    • ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு ஓ.பன்னீர் செல்வம் ரூ.2000 வழங்கியது தேர்தல் விதிமுறை மீறல் என்று புகார் எழுந்துள்ளது.

    அறந்தாங்கி:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜனதா கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் சுயேட்சை சின்னத்தில் தேர்தலை சந்திக்கிறார்.

    ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் செல்லும் இடங்களில் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கிறார்கள்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

    ஒரு பெண் ஆரத்தி எடுத்தபோது ஓ.பன்னீர்செல்வம் அவரது தட்டில் ரூ.2000 போட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

    அந்த வீடியோவில் ஓ. பன்னீர்செல்வம் ஆரத்தி காட்டிய பெண்ணுக்கு கொடுப்பதற்காக தனது பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கிறார். அதில் 500 ரூபாய் நோட்டுகளாக வருகிறது. அதில் 4 நோட்டுகளை எடுத்து அவர் அந்த பெண்ணுக்கு கொடுக்கிறார்.

    இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு ஓ.பன்னீர் செல்வம் ரூ.2000 வழங்கியது தேர்தல் விதிமுறை மீறல் என்று புகார் எழுந்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    • மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் பா.ஜனதா தீர்வு காணும்.
    • பழங்குடியின கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கவில்லை. தண்ணீர் கூட கொடுக்காமல் அவர்களை வஞ்சித்துள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கூடலூர், பந்தலூர் பகுதியில் அவர் ஆதரவு திரட்டினார். இன்று அவர் மேட்டுப்பாளையம் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

    தொடர்ந்து எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை, புரட்சியை ஏற்படுத்தும் தேர்தலாக இந்த பாராளுமன்ற தேர்தல் அமையும். அத்துடன் வரலாற்றை மாற்றும் தேர்தலாகவும் இந்த தேர்தலானது இருக்க போகிறது.

    தற்போது நீலகிரி எம்.பியாக இருக்க கூடிய ஆ.ராசா இந்த தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை. குறிப்பாக கூடலூர் பகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை. பழங்குடியின கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கவில்லை. தண்ணீர் கூட கொடுக்காமல் அவர்களை வஞ்சித்துள்ளனர்.

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் உள்ள மக்கள் அனைவரும் இருண்டகாலம் முடிந்து எப்போது நமக்கு பிரகாசமான காலம் வர போகிறது என ஏக்கத்தோடு காத்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு விடிவு காலம் பிறக்க போகிறது.

    மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் பா.ஜனதா தீர்வு காணும். பிரதமர் மோடி ஆட்சியின் வளர்ச்சியை நீலகிரி மக்களும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

    ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது. அங்கு தோல்வி பயத்தில் தி.மு.க., அ.தி.மு.க தான் அவருக்கு எதிராக அவரது பெயரை போன்றுள்ள 5 நபர்களை இறக்கியுள்ளனர்.

    எத்தனை பேர் வந்தாலும் மக்களிடம் அவருக்கான செல்வாக்கு உள்ளது. நிச்சயமாக அவர் பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
    • மருச்சுக்கட்டு பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் ஓ.பன்னீர்செல்வம்.

    ராமநாதபுரம்:

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கும் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் நடத்து அதிகாரியிடம் வேட்பு மனுவை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    முன்னதாக, மருச்சுக்கட்டு பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஓ.பன்னீர்செல்வம் அங்கு வைத்து வேட்பு மனுவில் கையெழுத்து போட்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார்.

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    • அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதால் பிரச்சனை ஏற்படுவதாக பொதுமக்களோ அல்லது கட்சியின் தொண்டர்களோ புகார் அளிக்கவில்லை.
    • மேல்முறையீட்டு மனு மீது எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவு.

    சென்னை :

    அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்க கோரி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு நிரந்தர தடை விதித்து கடந்த 18 ஆம் தேதி உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல் முறையீட்டு மனுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? இல்லையா? இதுகுறித்து நிலுவையில் உள்ள பிரதான வழக்கில் தான் முடிவு செய்ய முடியும் என உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 42 ஆண்டுகளாக அதிமுகவின் அடிப்படை தொண்டர், முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த தனக்கு, கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதித்தது ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதால் பிரச்சனை ஏற்படுவதாக பொதுமக்களோ அல்லது கட்சியின் தொண்டர்களோ புகார் அளிக்கவில்லை. அப்படி இருக்கையில் எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் மனுத்தாக்கல் செய்ததாக தனது மேல் முறையீட்டு மனுவில் ஓபிஎஸ் கூறியிருந்தார். மேலும், அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் முழுமையாக அங்கீகரிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும் மேல்முறையீட்டு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் ஆர். சுப்ரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் வரும் திங்கட்கிழமை (மார்ச்-25) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.

    அதன்படி, இன்று ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடையை விலக்க இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் முடிந்த பிறகு வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்றும் மேல்முறையீட்டு மனு மீது எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணை ஜூன் மாதம் 10-ந்தேதிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
    • குல தெய்வமான தொட்டிச்சியம்மன் கோவிலிலும் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டார்.

    கிரி வீதி வரை நடந்து பின்னர் பேட்டரி கார் மூலம் ரோப்கார் மையம் சென்றார். ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் தங்க ரதம் இழுக்க பெயர் பதிவு செய்தார். அதில் வரிசை எண் 102ல் அவரது பெயரிலும், வரிசை எண் 103ல் பிரதமர் நரேந்திர மோடி பெயரிலும் தங்க ரதம் இழுக்க பணம் கட்டினார்.

    தங்க ரத நிலை 1-ல் இருந்து 2 வரை அவர் தங்க ரதம் இழுத்து வழிபாடு செய்தார். அதன் பின்பு மூலவர் தண்டாயுதபாணியை மனமுருகி வழிபட்டார். மீண்டும் பாரத பிரதமராக மோடி வர வேண்டும் என்பதற்காக இந்த வழிபாட்டில் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

    அதன் பின்னர் தனது குல தெய்வமான தொட்டிச்சியம்மன் கோவிலிலும் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். முன்னதாக நேற்று காலையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலிலும், மதியம் மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும் வழிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஓபிஎஸ் அ.தி.மு.க.வின் கொடி, சின்னம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
    • பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து இருந்தார்.

    சென்னை:

    கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரை கட்சியில் இருந்து நீக்கியும், பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், அவர் உட்பட 4 பேரை நீக்கி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்தது.

    இந்த நிலையில், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவில், பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை எதுவும் விதிக்கவில்லை.

    எனவே, அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்த கூடாது என்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

    சென்னை ஐகோர்ட்

    சென்னை ஐகோர்ட்

     இதையடுத்து சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஓபிஎஸ் தரப்பில் ஒரு முறையீடு செய்யப்பட்டது. தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கின் தீர்ப்பில், அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவைகளை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர், தடை விதித்தது செல்லும் என தீர்ப்பளித்தனர். மேலும் ஓபிஎஸ் தரப்பு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அதேநேரம் வேண்டுமானால் ஓபிஎஸ் தரப்பு, தனி நீதிபதி முன் உரிய மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்து இருந்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டது.

    மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நிரந்தரம் செய்தும் உத்தரவிட்டது.

    பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து இருந்த நிலையில் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஓ.பி.எஸ். பாரதிய ஜனதா கூட்டணியில் இருக்கிறாரா? இல்லையா என்பது இன்னும் முடிவாகவில்லை.
    • நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பி.எஸ். கூறி வருகிறார்.

    சென்னை:

    கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி ஒருமன தாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

    இதனை எதிர்த்து ஓ.பி.எஸ். ஏறாத நீதிமன்றம் இல்லை. ஆனால் எங்கும் ஓ.பி.எஸ்.க்கு தீர்ப்பு சாதகமாக வரவில்லை. இதனால் அரசியல் ரீதியாக அ.தி.மு.க.வுக்கு பல்வேறு வகையில் அழுத்தம் கொடுத்து வந்தார். இன்னும் நான் தான் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்றும் கூறி வருகிறார்.

    அ.தி.மு.க.வின் சின்னத்தை பயன்படுத்துவது அ.தி.மு.க. கரை வேட்டியை உடுத்துவது, காரில் அ.தி.மு.க. கொடியை பறக்க விடுவது போன்று அவரது ஆதரவாளர்கள் இருந்தனர்.

    இதுபோன்ற செயல்கள் அ.தி.மு.க.வினரை ஆத்திரமடைய செய்ததால் அ.தி. மு.க. தொடர்பான எதையும் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த கூடாது என்று ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அ.தி.மு.க. கட்சி பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்தனர்.


    இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்திருந்தனர். இதை அடுத்து பிரதான மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு வந்த போது இருதரப்பு வாதங்களுக்கு பின் வழக்கின் தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஓ.பி.எஸ். பாரதிய ஜனதா கூட்டணியில் இருக்கிறாரா? இல்லையா என்பது இன்னும் முடிவாகவில்லை.

    ஆனால் அதற்கு முன்பே செல்லும் இடமெல்லாம் பாராளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் கூறி வந்தார்.

    இந்த நிலையில்தான் இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி பாராளுமன்ற தேர்தலில் படிவம் 'ஏ' மற்றும் 'பி' படிவத்தில் கையெழுத்திட இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    அப்படி கொடுக்க முடியாத பட்சத்தில் இரு தரப்புக்கும் வேறு சின்னத்தை ஒதுக்க வேண்டும்.

    அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்.) தொண்டர் மீட்பு குழுவுக்கு பொதுசின்னம் தர வேண்டும் என்று அதில் வலியுறுத்தி உள்ளார்.

    இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இதுவரை பா.ஜனதா கூட்டணியில் எத்தனை தொகுதியில் போட்டியிடுவோம் என்று ஓ.பி.எஸ். இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    இந்த சூழலில் தேர்தல் ஆணையத்தில் உள்ள ஓ.பி.எஸ். கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக ஒதுக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு அதை பதிவு செய்து கொண்டது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதை அங்கீகரித்து அவருக்கு மீட்டிங் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. எனவே இப்போது வரை அ.தி.மு.க. கொடி, சின்னம் என அனைத்தும் எடப்பாடி பழனிசாமி வசம்தான் உள்ளன.

    நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பி.எஸ். கூறி வருகிறார். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் நாளை இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வர உள்ளது.

    இதில் ஓ.பி.எஸ்.க்கு எதிராக தீர்ப்பு அமையும் பட்சத்தில் அதை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் செயல்படும். எனவே இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. ஓ.பி.எஸ். மனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது என்றனர்.

    பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களிடம் விருப்ப மனு வாங்கி உள்ள நிலையில் பா.ஜனதா கூட்டணியில் இருக்கிறாரா? அல்லது ஆதரவு தெரிவிப்பாரா? என்பது நாளை தெரிந்துவிடும். அதற்கேற்பதான் தேர்தல் கமிஷனில் முடிவும் அமையும்.

    ×