search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Land fraud"

    • கலியமூர்த்தி, திருசங்குவிடம் சென்று இது குறித்து கேட்டுள்ளார்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 59). இவருக்கு ரூ.50லட்சம் மதிப்பிலான 38 சென்ட் நிலம் பண்ருட்டி அருகே உள்ள மனம்தவிழ்ந்த புத்தூர் கிராமத்தில் உள்ளது.

    இந்த நிலையில் கலியமூர்த்திக்கு சொந்தமான 38 சென்ட் நிலம், அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினர் திருசங்குவின் பெயரில் மாறியதாக தகவல் வந்தது. இதையடுத்து கலியமூர்த்தி, தனது வீட்டில் இருந்து நிலப் பத்திரத்தை தேடிய போது அதனை காணவில்லை. மேலும், வாக்காளர் அடையாள அட்டையையும் காணவில்லை.

    இதனைத் தொடர்ந்து கலியமூர்த்தி, திருசங்குவிடம் சென்று இது குறித்து கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருசங்கு, கலியமூர்த்தியை அசிங்கமாக திட்டி விரட்டியடித்துள்ளார். அக்கம் பக்கத்தினர், கலியமூர்த்தியை மீட்டு அங்கிருந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கலியமூர்த்தி, இது குறித்து கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் புகாரளித்தார்.

    விசாரணையில், கலியமூர்த்திக்கு சொந்தமான நிலத்தின் பத்திரத்தையும், வாக்காளர் அடையாள அட்டையையும், திருசங்கு திருடியது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கலியமூர்த்தியின் வாக்காளர் அடையாள அட்டையில் இருந்த அவரது போட்டோவுக்கு பதிலாக, பொண்ணாங்குப்பத்தை சேர்ந்த மூர்த்தியின் போட்டோவை வைத்து போலியாக வாக்காளர் அடையாள அட்டையை திருசங்கு தயார் செய்துள்ளார்.

    போலியாக தயாரிக்கப்பட்ட ஆதாரத்தை வைத்து கலியமூர்த்திக்கு சொந்தமான நிலத்தை மூர்த்தியை வைத்து புதுப்பேட்டை பத்திரபதிவு அலுவலகத்தில் திருசங்கு கிரயம் பெற்றதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து திருசங்கு, அவருக்கு உடந்தையாக இருந்த மூர்த்தி, திருநாவுக்கரசு ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும், புதுப்பேட்டை பத்திர பதிவு அலுவலர் பாலாஜி, பத்திர எழுத்தர் சீனிவாசன் ஆகியோர் மீதும் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புதுப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இதுகுறித்து நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
    • விழுப்புரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

    விழுப்புரம்:

    சென்னை பெரம்பூர், சுப்பிரமணி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 65), ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர்களின் குடும்ப சொத்தான 6.67 ஏக்கர் நிலம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பேராவூர் பகுதியில் உள்ளது. இந்த சொத்தில் பொன்னுசாமிக்கு, இவரது அண்ணன் பேராவூரை சேர்ந்த சுப்ரமணி (72) பங்கு வழங்கவில்லை. இதுகுறித்து நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பொன்னுச்சாமிக்கு உரிய பங்கை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஆனால் உரிய பங்கை வழங்காமல் சுப்பிரமணி ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் பொன்னுசாமி புகார் அளித்தார். எஸ்.பி. ஸ்ரீநாதா உத்தரவின் பெரில் விழுப்புரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சுப்பிரமணி தம்பிக்கு வழங்க வேண்டிய பாகத்தை முறைகேடாக அவரது மகன் சத்யாவிற்கு எழுதி கொடுத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து சுப்பிரமணி அவரது மனைவி அன்னக்கிளி, மகன் திவாகரன், மகள்கள் சரண்யா லட்சுமி பிரபா, சத்யா ஆகிய ஆறு பேர் மீது நில மோசடி பிரி வில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்திரசேகர் பவன்குலே நில பரிவர்த்தனை தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
    • அதன்பிறகு தான் நாங்கள் அந்த பிரச்சினையை கையில் எடுத்தோம்.

    மும்பை :

    முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, கடந்த உத்தவ் தாக்கரே ஆட்சியின் போது மந்திரியாக இருந்த போது நாக்பூரில் குடிசைப்பகுதி மக்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை குறைந்த விலைக்கு விற்று மோசடியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்த பிரச்சினையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பதவி விலக வேண்டும் எனவும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான நில மோசடியை அம்பலப்படுத்தியது பா.ஜனதா தான் என உத்தவ் பாலாசாகேப் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், " முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான நில மோசடியை அம்பலப்படுத்தியது பா.ஜனதா கட்சி தான். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர் பவன்குலே, பிரவீன் தட்கே, நாகோ கானர் நாக்பூர் நில பரிவர்த்தனை தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதன்பிறகு தான் நாங்கள் அந்த பிரச்சினையை கையில் எடுத்தோம்.

    துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் ஆதரவாளர்களான பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டேயை அம்பலப்படுத்த விரும்பியது தெளிவாக தெரிகிறது.

    நான் பா.ஜனதா மாநில தலைவராக இருக்கும் போது தேவேந்திர பட்னாவிசை முதல்-மந்திரியாக பார்க்க விரும்புகிறேன் என சந்திரசேகர் பவன்குலே கூறிய மறுநாளே நாக்பூர் நில மோசடி அம்பலமாகி உள்ளது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான நிலமோசடியை திசைத்திருப்ப திஷா சலியன் மரணம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    விரைவில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் அமலாக்கத்துறை, சி.பி.ஐ.யிடம் புகார் அளிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிலம் வாங்கித்தருவதாக கூறி வெளிநாடு வாழ் தமிழரிடம் ரூ.1 கோடி மோசடி செய்தததாக அரசு வங்கி மேலாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மதுரை:

    தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா நகரைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் பாஸ்கர் (வயது 56). மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர், அங்கு தொழில் செய்து வருகிறார்.

    இவர் மதுரை காளவாசலில் உள்ள அரசு வங்கியில் வங்கிக்கணக்கு வைத்துள்ளார். ராஜமாணிக்கம் பாஸ்கர் மதுரையில் நிலம் வாங்க முடிவு செய்து செய்திருந்தார்.

    இந்த நிலையில் அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி மேலாளர் நல்லபெருமாள் என்பவர் ராஜமாணிக்கம் பாஸ்கரை செல்போனில் தொடர்பு கொண்டு மானகிரி பகுதியில் நிலம் விலைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இதை நம்பி அவர் முன் பணமாக ரூ.20 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது. தொடர்ந்து நிலம் வாங்குவதற்கும், பத்திரப்பதிவுக்கும் செலவுகள் ஏற்படும். எனவே கையெழுத்திட்ட பணம் நிரப்பாத காசோலையை அனுப்புமாறு நல்ல பெருமாள் கூறியுள்ளார். இதை நம்பி அவரும் தான் கையெழுத்திட்ட காசோலையை அனுப்பினார்.

    இந்த நிலையில் ராஜமாணிக்கம் பாஸ்கர் மதுரை குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் நிலம் வாங்குவதற்காக தான் கொடுத்த காசோலை மூலம் ரூ.1 கோடியே 59 லட்சத்தை நல்ல பெருமாள் எடுத்துள்ளார். இதற்கு உடந்தையாக மீனாட்சி சுந்தரம், அவரது மனைவி பராசக்தி, பாலாஜி வெங்கடேசன் ஆகியோர் இருந்துள்ளனர்.

    மேலும் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை வாங்கியதாகவும் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். எனவே அரசு வங்கி மேலாளர் உள்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி நல்லபெருமாள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
    திருநின்றவூரில் போலி ஆவணம் மூலம் ரூ.50 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவி மற்றும் அவரது கூட்டாளி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது54). வெல்டிங் ஷாப் வைத்துள்ளார். இவர் சொந்தமாக நிலம் வாங்க குழந்தைவேலு என்பவரை அணுகியுள்ளார்.குழந்தை வேலு மூலம் திருநின்றவூர்,பிரகாஷ் நகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் மோகன் என்பவரிடம் நிலம் வாங்க சென்றுள்ளனர். அப்போது மோகன் பிரகாஷ்நகர் 7 வது தெருவில் உள்ள ஒரு கிரவுண்ட் நிலத்தை ராஜேந்திரனுக்கு காட்டியுள்ளார்.

    இது கோயம்பத்தூரை சேர்ந்த லோகிதாஸ் என்பவருக்கு சொந்தமானது என்று 52 லட்சம் ரூபாய் விலை பேசியுள்ளார். பின்னர் ராஜேந்திரன் ரூ.50 லட்சத்து 60 ஆயிரம் விலைக்கு வாங்க ஒப்பு கொண்டு முன் தொகை ரூ.10 ஆயிரம் வழங்கியுள்ளார்.அதன் பின்பு லோகிதாசையும் மோகன் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

    இதனை நம்பி அனைத்து ஆவணங்களையும் பார்த்துவிட்டு ஆவடி பத்திர பதிவு அலுவலத்தில் ராஜேந்திரன் மனைவி பெயரில் 1200 சதுர அடியும், மற்றொரு பாதி ராஜேந்திரன் பெயரிலும் ரூ.50 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்து பத்திரப்பதிவு செய்துள்ளனர்.வாங்கிய இடத்தில் வீடுகட்டுவதற்காக சுத்தம் செய்தபோது அங்கு வந்த ஒருவர் இடம் தன்னுடையது என்றும் தனது பெயர்தான் லோகிதாஸ் என்று கூறியுள்ளார்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.விசாரணை மேற்கொண்டதில் வளசரவாக்கத்தை சேர்ந்த ரவி என்பவர் லோகிதாஸ் போல் ஆள்மாறட்டம் செய்து நிலத்தை விற்க கோயம்பத்தூரில் இருப்பது போல் ரே‌ஷன் கார்டு,ஆதார் கார்டு,பான் கார்டு,வாக்காளர் அட்டை முதல் வங்கி கணக்கு வரை லோகிதாஸ் பெயரில் வாங்கியுள்ளார்.மேலும் போலி பத்திரத்தை ஏற்பாடு செய்திருப்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் லோகிதாசாக ஆள் மாறாட்டம் செய்த ரவி அவரது மனைவி தேவிபிரியா மற்றும் அவரது கூட்டாளி ஹரி ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மோகன், சங்கர் என்கின்ற ராம சுப்ரமணியம் ஆகிய இருவரை தேடிவருகின்றனர். #tamilnews
    பெண்ணிடம் நிலம் வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    திருச்சி:

    திருச்சி திருவெறும்பூர் தென்றல் நகரை சேர்ந்தவர் ராமானுஜம். இவரது மனைவி ராதா (வயது 44). இவர்கள் நிலம் வாங்கமுடிவு  செய்தனர். அதற்காக நிலத்தரகர்கள் திருச்சி சிந்தாமணியை சேர்ந்த சத்தியமூர்த்தி, சரவணன், முருகன் ஆகியோரிடம் கூறினர். அவர்கள் திருவெறும்பூர் கல்லனை சாலையில் வேங்கூர் என்ற ஊரில் ஒரு நிலத்தை காட்டினர். அந்த நிலத்தை வாங்க ராதா முன்பணமாக ரூ.10 லட்சத்தை சத்தியமூர்த்தியிடம் கொடுத்தார். ஆனால் நிலத்தை சத்தியமூர்த்தி ராதாவுக்கு வாங்கி கொடுக்க வில்லை. 

    இதனால் சந்தேகம் அடைந்த ராதா நிலத்தை குறித்து விசாரித்து போது அது அங்கிகாரம் இல்லாத நிலம் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ராதா,சத்தியமூர்த்தியிடம் தான் கொடுத்த ரூ. 10 லட்சத்தை கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சத்தியமூர்த்தி, முருகன், சரவணன் ஆகிய 3 பேரும் ராதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். 

    இது குறித்து ராதா திருச்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் கோர்ட்டின் உத்தரவுபடி திருச்சி குற்ற பிரிவு போலீசார் நிலமோசடி செய்த சத்தியமூர்த்தி, முருகன், சரவணன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    நாமக்கல் அருகே போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை மோசடி செய்த விவசாயியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள மணிக்கட்டிபுதூரை சேர்ந்தவர் நடராஜன். இவருக்கு சொந்தமான 1,204 சதுர அடி நிலத்தை கடந்த 2009-ம் ஆண்டு நடராஜனின் சித்தப்பா பொன்னுசாமி (வயது 70), கூட்டு பட்டாவை வைத்து, போலியாக பட்டா மற்றும் இதர ஆவணங்களை தயார் செய்து, நாமக்கல் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் தூசூரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரின் பெயருக்கு பத்திரபதிவு செய்து கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

    அதே ஆண்டு தூசூர் பாலசுப்பிரமணியம், அய்யாவு என்பவருக்கு பத்திரத்தை மாற்றி பதிவு செய்து உள்ளதாக தெரிகிறது. அதன்பிறகு நடராஜன், அவருடைய நிலத்தை வங்கியில் அடகு வைக்க முயற்சித்து, பத்திரப்பதிவு அலுவலகத்தில் பரிசீலனை செய்தபோது, அந்த நிலம் பாலசுப்பிரமணியம் மற்றும் அய்யாவு என்பவர்கள் பெயரில் கிரயம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து நடராஜன் மாவட்ட பதிவாளரிடம் புகார் செய்தார். அதன்பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் போலி ஆவணங்கள் மூலம் நிலம் பத்திரபதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பத்திரப்பதிவை ரத்து செய்ய அவகாசம் கொடுத்து, இருவருக்கும் நோட்டீசு அனுப்பினர். ஆனால் அவர்கள் ரத்து செய்யவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து இந்த மோசடி சம்பவம் குறித்து இணை சார்பதிவாளர் பத்மினி நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விவசாயி பொன்னுசாமியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். 
    ×