search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்கு"

    • வேட்பு மனு தாக்கலின் போது 5 பேர் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்று போலீசார் அறிவுறுத்தியதால் மற்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
    • போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தேர்தல் பணியில் ஈடுபட்ட புதிய கண்காணிப்பு அலுவலர் நீதிநாதன் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க. சார்பில் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார். இவர் நேற்று தேனி கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது அவரது ஆதரவாளர்கள் அதிக அளவில் திரண்டு உள்ளே செல்ல முயன்றனர்.

    போலீசார் அவர்களை தடுத்து நிறுத்திய போது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி செய்ய விடாமல் தடுத்தனர். அன்னஞ்சி விலக்கில் இருந்து 70 கார்கள், 3 ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்களில் கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    வேட்பு மனு தாக்கலின் போது 5 பேர் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்று போலீசார் அறிவுறுத்தியதால் மற்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தேர்தல் பணியில் ஈடுபட்ட புதிய கண்காணிப்பு அலுவலர் நீதிநாதன் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் டி.டி.வி. தினகரன் மற்றும் அக்கட்சி நிர்வாகி ராம்பிரசாத் உள்பட பலர் மீது 5 பிரிவுகளின் கீழ் தேனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    தேனியில் உள்ள தனியார் விடுதியில் சந்தேகப்படும்படியான வெளியூர் நபர்கள் தங்கி இருந்து தேர்தல் பணியில் ஈடுபடுவதாக மாவட்ட கலெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விடுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் தஞ்சாவூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தங்கி இருந்தார். அ.ம.மு.க. நிர்வாகியான அவர் தேர்தல் செலவுக்காக ரூ.4 லட்சத்து 49 ஆயிரத்து 500 பணத்தை வைத்திருந்தது தெரியவரவே அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்தை பெரியகுளம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    • 3-வது முறையாக நகரியில் நடிகை ரோஜா வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
    • தெலுங்கு தேசம், பா.ஜ.க நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா என கூட்டணி பலமாக உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா 3-வது முறையாக நகரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    1999-ம் ஆண்டு அரசியலில் அடியெடுத்து வைத்த ரோஜா தெலுங்கு தேசம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 2011-ம் ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    2014-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ரோஜாவுக்கு தமிழக எல்லையில் உள்ள நகரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. தமிழர்கள் கணிசமாக வசிக்கும் அந்த தொகுதியில் ரோஜாவிற்கு வரவேற்பும் கிடைத்தது.

    அந்த தேர்தலில் 73 ஆயிரத்து 924 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் கலிமுத்து கிருஷ்ணம்மா என்பவரை 858 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    அப்போது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த ரோஜா பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு தொகுதி மக்களிடம் மேலும் பெயர் பெற்றார்.

    இதனால் 2019-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஜெகன் மோகன் ரெட்டி அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளித்தார்.

    2-வது முறையாக நகரி தொகுதியில் போட்டியிட்ட ரோஜா அந்த தேர்தலில் 80,333 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் கலிபானு பிரகாஷ் என்பவரை 2,708 வாக்குகள் வித்தியாசத்தில் ரோஜா வீழ்த்தினார். இதனால் ரோஜாவுக்கு சுற்றுலா துறை மந்திரி பதவியும் கிடைத்தது.

    ஆளுங்கட்சி மந்திரியான ரோஜா அவரது கட்சி, ஜெகன் மோகன் ரெட்டி பற்றி யார் விமர்சித்தாலும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வந்தார்.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே நகரி தொகுதியில் பொதுமக்களை வீடுவீடாக சந்தித்து ஏன் மீண்டும் வேண்டும் ஜெகன் அண்ணா என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    மேலும் அவரது தொகுதியில் உள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் தங்கி இருந்து அந்த மக்களுக்கு என்னென்ன அடிப்படை வசதிகள் தேவை என்பதை கண்டறிந்து பூர்த்தி செய்தார்.

    ஆடுதாம் ஆந்திரா என்ற பெயரில் மாநிலம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

    நகரி தொகுதியில் ஒவ்வொரு கிராமங்களுக்கும் ரோஜா நேரில் சென்று போட்டிகளை தொடங்கி வைத்தார். அப்போது இளைஞர்களுடன் கபடி விளையாடி அசத்தி கவர்ந்தார்.

    நகரி தொகுதியில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடந்த பிரமாண்ட விழாவில் ஜனசேனா கட்சித் தலைவரான நடிகர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்தார். அந்தக் கூட்டத்தில் ரோஜா பேசுகையில்

    நடிகர் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் ஒரு வசனம் வரும். குறைக்காத நாயும் இல்லை. குறை சொல்லாத வாயும் இல்லை இது ரெண்டும் இல்லாட்டி ஊரும் இல்லை. புரிஞ்சிதா ராஜா அர்த்தமாய்ந்தா ராஜா என்றார். இது ரஜினி ரசிகர்கள் அவர் மீது வைத்திருந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளியாக அமைந்தது.

    எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனாக திகழ்ந்துவரும் ரோஜாவுக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பே கிடைக்காது. அவர் தொகுதி மாறிவிடுவார் எம்.பி.தேர்தலில் போட்டியிடப் போகிறார் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.

    அதையெல்லாம் தாண்டி 3-வது முறையாக நகரியில் நடிகை ரோஜா வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

    இந்த முறையும் அவரை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கலிபானு பிரகாஷ் போட்டியிடுகிறார். ஆந்திராவைப் பொறுத்தவரை தெலுங்கு தேசம், பா.ஜ.க நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா என கூட்டணி பலமாக உள்ளது.

    ஆனால் ரோஜா சார்ந்துள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. நகரி தொகுதியில் உள்ள ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் சிலர் ரோஜா மீண்டும் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ரோஜா ஈடுபட்டு வருகிறார். கட்சி தொண்டர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

    3-வது முறையாக நகரி தொகுதியில் வெற்றி பெறும் முனைப்பில் ரோஜா தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

    ஜெகன்மோகன் ரெட்டி கட்சியின் முக்கிய தலைவராக வலம் வரும் ரோஜாவை இந்த தேர்தலில் எப்படியாவது வீழ்த்த வேண்டும் என தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு தேர்தல் வேலையில் இறங்கி உள்ளன.

    • பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
    • 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கரூர் சாலையில் உள்ளது சேனாபதிபாளையம். இங்குள்ள ரேஷன் கடை அருகில் சாலையோரம் பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்து பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராகவேந்தனுக்கு செல்போனில் தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சேனாபதிபாளையம் கிறிஸ்துவ தெருவில் மத வழிபாட்டுத்தலம் கட்ட கடந்த 4 வருடங்களாக அனுமதி கேட்டு கிடைக்கவில்லை என்றும் அரசும் அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. அதனால் தேர்தலை புறக்கணிப்பதாக தெரியவந்தது.

    அரசுக்கு சொந்தமான இடத்தில் மத வழிபாட்டுதலம் கட்ட அனுமதி கேட்டு அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து பொது இடத்தில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்த தேர்தல் புறக்கணிப்பு பேனரை அகற்றுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அகற்றாததால் அதிகாரிகளே பேனரை அகற்றி தக்க நடவடிக்கை எடுக்குமாறு வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதையடுத்து பேனர் வைத்ததாக சேனாதிபாளையத்தைச் சேர்ந்த வினோத்குமார் (வயது 27), இசக்கி (27), சிலம்பரசன் (35), சைமன் (35), பிரவீன் (31), மேத்யூ (29) ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பிரதமர் மோடி பேரணி நடத்த மாநகர காவல்துறை அனுமதி மறுப்பு.
    • எந்த கட்சிக்கும் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை.

    பிரதமர் நரேந்திர மோடி வருகிற 18-ந்தேதி கோவை மாவட்டத்திற்கு வருகிறார். கோவை பயணத்தின்போது, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, பொள்ளாச்சி பாராளுமன்றத்தில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் திட்டமிட்டனர்.

    மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.

    ஆலோசனையின்போது, கோவையில் பிரதமர் மோடி பேரணி நடத்த மாநகர காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், கோவையில் பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    பொதுத்தேர்வு, பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டதாக காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

    மேலும், எந்த கட்சிக்கும் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை என காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.

    இதைதொடர்ந்து, கோவை மாவட்ட பாஜக தாக்கல் செய்த வழக்கில் இன்று மாலை 4.30 மணிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளிக்கிறார்.

    • குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
    • பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

    புதுடெல்லி:

    கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி குடியுரிமை திருத்த சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

    இதன்படி, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படவில்லை.

    இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டது. இத்துடன் இந்த சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது.

    குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

    இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடுத்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் விதிகள் மதிப்புமிக்க உரிமைகள் உருவாக்கப்பட்டு குறிப்பிட்ட சில மதங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படுகிறது. அவசர கதியில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தது. எனவே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புஷ்பராணி அந்த எட்டே கால் சென்ட்க்கு உரிய தொகையை திரும்பக் கேட்டார்.
    • புஷ்பராணி சமயபுரம் போலீசில் புகார் செய்தார்.

    திருச்சி:

    திருச்சி மணச்சநல்லூர் மேட்டு இருங்களூர் யாகூப் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி புஷ்பராணி (வயது 48).

    பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மனைவி சந்திரா. இவர்கள் 2 பேரும் உறவினர்கள்.

    இந்த நிலையில் சந்திரா இருங்கலூரில் தனக்கு சொந்தமாக இருக்கும் 21 சென்ட்நிலத்தை விற்பதாக அவரிடம் கூறியுள்ளார்.

    அதைத் தொடர்ந்து புஷ்பராணி அந்த நிலத்தை வாங்க முடிவு செய்து ரூ. 18 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை கொடுத்தார்.

    பின்னர் புஷ்பராணி அந்த நிலத்துக்குரிய வில்லங்க சான்றை பார்த்தபோது 21 சென்ட் நிலத்தில் எட்டே கால் சென்ற நிலம் ஸ்ரீதேவி மங்கலம் பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவரது பெயரில் இருப்பது தெரியவந்தது. ஆனால் போலி ஆவணங்கள் தயாரித்து சந்திரா அவரை ஏமாற்றியது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து புஷ்பராணி அந்த எட்டே கால் சென்ட்க்கு உரிய தொகையை திரும்பக் கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து புஷ்பராணி சமயபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சந்திரா மற்றும் அவரது உறவினர்கள் தர்மராஜ், மகன் பிரபாகர் மரியராஜ், மனைவி மார்க்சி மற்றும் மார்க்கெட் புஷ்பலதா, டெய்சி ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தார்.
    • பெண் குழந்தைகள் தாழ்ந்தவர்கள் என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, மூவாட்டுப்புழா பகுதியை சேர்ந்த ஒருவருடன் 2012-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அந்த பெண்ணை ஆண் குழந்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று திருமணம் நடந்த நாளிலேயே கணவரின் குடும்பத்தினர் கூறியிருக்கின்றனர்.

    மேலும் ஆண் குழந்தை பிறக்க கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்று கூறி திருமணம் நடந்த நாளில் இருந்தே அந்த பெண்ணை, கணவரின் தாய் துன்புறுத்தியபடி இருந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணுக்கு 2014-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்ததது.

    இதனால் அந்த பெண்ணிடம் கணவரின் குடும்பத்தினர் துன்புறுத்துவது போன்றே நடந்துள்ளனர். ஆனவே ஆண் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்று கூறி தனது மாமியார் துன்புறுத்தியதாக அந்த பெண், கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் அந்த பெண்ணின் மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன், ஆண் குழந்தையை பிரத்யேகமாக பெற்றெடுக்க வேண்டும் என்று ஒரு பெண்ணை கோருவது ஒழுக்கக் கேடானது என்று கருத்து தெரிவித்தார்.

    மேலும் பெண் குழந்தைகள் தாழ்ந்தவர்கள் என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பெண்கள் தான் பூமிக்கு உயிர் கொடுக்கிறார்கள் என்று கூறிய அவர், சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்மனுக்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    • நீதிபதி கண்ணன் குழு பிரந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலனை.
    • பேராசிரியரை நீக்க வேண்டுமென்ற குழுவின் பரிந்துரை அமல்படுத்த வேண்டும்.

    பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக கல்லூரி மாணவிகள் 7 பேர் கலாஷேத்ரா பவுண்டேஷன் மீது வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் வந்தது.

    அப்போது, "மாணவிகள் அளித்த பாலியல் தொல்லை புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா அறக்கட்டளை கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது" என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

    மேலும், "நீதிபதி கண்ணன் குழு பிரந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக உடனடியாக பரிசீலிக்க வேண்டும்" என கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சம்பவம் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என்றும், புகாருக்கு உள்ளான பேராசிரியரை நீக்க வேண்டுமென்ற குழுவின் பரிந்துரை உடனடியாக அமல்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • 2 தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
    • கிராமத்தில் பதற்றம் ஏற்படவே 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே பூமிரெட்டிபட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் கோவிலில் சினிமா பாடல் ஒலிபரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரிடம் தட்டி கேட்டனர். இதையடுத்து 2 தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் அந்த கிராமத்தில் பதற்றம் ஏற்படவே 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மோதலில் ஈடுபட்ட 2 தரப்பை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு ஒருவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மோதல் காரணமாக தொடர்ந்து பதற்றம் நீடித்து வரவே மேட்டூர் உதவி கலெக்டர் பொன்மணி தலைமையில் இரு தரப்பினருக்கும் இடையே விரைவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இருப்பினும் இரு தரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபடாமல் இருக்க வேண்டி முன்எச்சரிக்கையாக போலீசார் பூமிரெட்டிபட்டி கிராமத்தில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • 5 சம்மனுக்கும் கெஜ்ரிவால் ஆஜராகாமால் புறக்கணித்தார்.
    • அமலாக்கத்துறை டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா, உள்ளிட்டோர் கைதாகி ஜெயிலில் உள்ளனர். அவர்களுக்கு இதுவரை ஜாமின் கிடைக்கவில்லை.

    இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 சம்மன் அனுப்பப்பட்டது.

    நவம்பர் 2, டிசம்பர் 21, ஜனவரி 3, 19, பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. பண மோசடி தொடர்பான விசாரணைக்காக இந்த சம்மனை அனுப்பி இருந்தது. ஆனால் 5 சம்மனுக்கும் கெஜ்ரிவால் ஆஜராகாமால் புறக்கணித்தார்.

    இந்நிலையில் 5 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

    ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் பண மோசடி தடுப்பு சட்டத்தின் பிரிவு 63 (4)-ன் கீழ் வழக்கு தொடரப் பட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற 7-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

    • இந்த சம்பவம் குறித்து மயங்கின் மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    • மயங்கின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

    இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் தற்போது ரஞ்சி தொடரில் விளையாடி வருகிறார். கர்நாடக அணி கேப்டனான மயங்க் அகர்வால் தனது அணியினருடன் டெல்லி புறப்பட விமான நிலையம் சென்றார். அணியினருடன் விமானத்தில் ஏறிய மயங்க் அகர்வாலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    விமானத்தில் இருந்த படி சில முறை அவர் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விமானத்தில் இருந்து அவசரஅவசரமாக வெளியேறிய மயங்க் அகர்வால் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவரு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் மயங்க் அகர்வாலின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மயங்க் அகர்வால் குணமடைய வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி என எக்ஸ் தளத்தில் தனது புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

    அதில், நான் இப்போது நன்றாக உணர்கிறேன். மீண்டு வர தயாராகி வருகிறேன். குணமடைய வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி. பிரார்த்தனைக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி, அனைவருக்கும்' என்று பதிவிட்டுள்ளார்.

    இருப்பினும், இந்த சம்பவம் குறித்து மயங்கின் மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். விமானத்தில் அமர்ந்திருக்கும் போது தண்ணீர் என்று தவறாக நினைத்து மயங்க் அந்த திரவத்தை தனக்கு முன்னால் குடித்ததாக மேலாளர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து மேற்கு திரிபுரா எஸ்பி கிரண் குமார் கூறுகையில், மயங்கின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

    • அரசு போக்குவரத்து கழகத்தில் சேவியர் குமார் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார்.
    • மற்றவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இரணியல்:

    திங்கள் சந்தை அருகே மைலோடு மடத்துவிளை பகுதியை சேர்ந்தவர் சேவியர் குமார் (வயது 42). இவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும் இருந்தார். மேலும் மைலோடு கிறிஸ்தவ ஆலய பங்கு பேரவையின் முன்னாள் பொருளாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரது மனைவி ஜெமிலா (40). இவர் மைலோடு ஆலய நிர்வாகத்திற்குட்பட்ட தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    மைலோடு ஆலய பாதிரியராக இருப்பவர் ராபின்சன். இவர் பங்கு பேரவை தலைவராகவும் உள்ளார். தற்பொழுது பங்கு பேரவை நிர்வாகத்தினருக்கும், ஏற்கனவே பங்கு பேரவை நிர்வாகியாக இருந்த சேவியர் குமாருக்கும் இடையே நிர்வாக ரீதியாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த பிரச்சனையை சமூக வலைதளங்களில் சேவியர் குமார் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சேவியர் குமாரின் மனைவி ஜெமீலாவை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ததாக தெரிகிறது. இதனால் ஜெமிலாவை மீண்டும் பள்ளியில் சேர முயற்சி மேற்கொண்டார். இது தொடர்பாக பாதிரியார் ராபின்சனை சந்தித்து சேவியர் குமார் பேசினார். நேற்று மதியமும் சேவியர் குமார் பாதிரியார் ராபின்சனை சந்தித்து பேச ஆலயத்தில் உள்ள பாதிரியார் இல்லத்திற்கு சென்றார்.

    இந்த நிலையில் ஆலய வளாகத்திற்குள் பாதிரியார் இல்லத்தில் சேவியர் குமார் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் ஜெமிலா மற்றும் அவரது உறவினர்கள், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் பதட்டமான சூழல் நிலவியது. குளச்சல் டி.எஸ்.பி. பிரவீன் கவுதம், தக்கலை டி.எஸ்.பி. உதய சூரியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    கொலை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் சேவியர் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் சேவியர் குமார் உடலை எடுக்க விடாமல் அவரது உறவினர்கள் தடுத்தனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

    நள்ளிரவு 1.45 மணிக்கு சேவியர் குமாரின் உடல் அங்கிருந்து எடுக்கப்பட்டது. சுமார் 11 மணி நேரத்துக்கு பிறகு போலீசார் சேவியர் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அவரது மனைவி ஜெமீலா கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மைலோட்டை சேர்ந்த ரமேஷ் பாபு, மைலோடு பங்குத்தந்தை ராபின்சன் மற்றும் மைலோட்டை சேர்ந்த ஜஸ்டிஸ் ரோக், சுரேஷ், எட்வின் ஜோஸ், சோனிஸ், அஜய், அர்வின், டெரிக், வினோ, வின்சென்ட், ஜெனிஸ், பெனிட்டோ மற்றும் கண்டால் தெரியும் 2 பேர் என 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் ரமேஷ் பாபு அரசு வழக்கறிஞர் ஆவார். தி.மு.க. ஒன்றிய செயலாளராக உள்ளார். ராபின்சன், பெனிட்டோ இருவரும் பங்கு தந்தைகள் ஆவார்கள். தலைமறைவாக உள்ள அவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் 2 பேரை பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மற்றவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவுவதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட சேவியர் குமாரின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட சேவியர் குமாரின் தரப்பிலிருந்து பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்த பிறகு உடலை பெற்றுக் கொள்வோம். ஜெமிலாவிற்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

    ×