search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Addiction"

    • குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்து உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.
    • போலீசார் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம்-கோவில்பட்டி ராஜாகுலத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (40). லாரி டிரைவர். இவரது மனைவி பாண்டீஸ்வரி (33). ராஜேந்திரனுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குடிபோதையில் கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ராஜேந்திரன் குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்து உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

    இதனால் ஆத்திரமடைந்த மனைவி வீட்டில் இருந்த கடப்பாரையால் கணவனை தலையில் அடித்தார். இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ்-இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயபாண்டியன், ஜெய்கணேஷ் உள்ளிட்ட போலீசார் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் தொடர்பாக நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவி பாண்டீஸ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தில் போதை பொருளை ஒழிப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • இளைஞர்கள் மாணவர்களை காலையில் ஒரு மணி நேரம் ஓட வைக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை பல்லாவரத்தில் தனியார் பாதுகாவலர்கள் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய சைலேந்திரபாபு, தனியார் பாதுகாவலராக பணிபுரியும் பணியாளர்கள் காவல் துறையினருடன் நன்கு பழக வேண்டும் என்றும், குற்றங்களை தடுக்க மிகவும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறி அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் போதை பொருளை ஒழிப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. போதை பொருளை சமுதாயத்தில் இருந்து ஒழிக்க ஆசிரியர்கள் பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும். இளைஞர்கள் மாணவர்களை காலையில் ஒரு மணி நேரம் ஓட வைக்க வேண்டும். அதே நேரத்தில் விளையாட்டு துறையில் ஈடுபடுத்தினால் மாணவர்களை போதை பழக்கம் நெருங்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குடிமகன்களின் ஆடைகள் விலகி இருப்பதால் பொதுமக்கள், பள்ளி- கல்லூரி மாணவர்கள் முகம் சுளித்தபடி செல்கின்றனர்.
    • பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் அரசு அனுமதி பெற்ற பார் திறக்க வேண்டும்.

    பொன்னேரி:

    பொன்னேரி, மீஞ்சூர், திருப்பாலைவனம், காட்டூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 20-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த மதுக்கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகின்றன. தற்போது இப்பகுதியில் அரசு அனுமதி பெற்ற பார் இல்லாததால் குடிமகன்கள் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு அருகில் உள்ள கடைகள், பஸ் நிலையம், வணிக வளாகம், சாலை ஓரங்கள், மரத்தடி பகுதிகள், வயல்வெளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் நடமாடும் பகுதியில் மதுகுடிக்கிறார்கள்.

    பின்னர் மதுபாட்டில்களை அங்கேயே உடைத்தும் போடுகின்றனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறாக சாலை ஓரங்களில் பாட்டில்கள் குவியலாக கிடக்கின்றன. மேலும் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு சாலை ஓரங்களில் போதையில் படுத்து கிடக்கிறார்கள். அவ்வாறு கிடக்கும் குடிமகன்களின் ஆடைகள் விலகி இருப்பதால் பொதுமக்கள், பள்ளி- கல்லூரி மாணவர்கள் முகம் சுளித்தபடி செல்கின்றனர்.

    இது குறித்து குடிமகன்கள் கூறுகையில், 'டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு குடிப்பதற்கு இடம் கிடைக்காததால் வேறு வழி இல்லாமல் சாலையின் அருகே மது குடிக்கிறோம். பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் அரசு அனுமதி பெற்ற பார் திறக்க வேண்டும்' என்றனர்.

    • போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • முடிவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.

    இதில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அவர்களுக்கு போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், இழப்புகள் குறித்து மதுக்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், காவலர் ராஜேஷ் குமார் ஆகியோர் அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர்கள் பாலக்குமார், கோவிந்தராஜ், ஆசிரியர் தேவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

    • போதிய விழிப்புணர்வு இருந்தால் போதைக்கு அடிமையாகாமல் மாணவர்கள் தவிர்க்கலாம் என கலெக்டர் கூறியுள்ளார்.
    • இளமைகால பருவத்தை நல்வழியில் பயன்படுத்த வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் கலச லிங்கம் பல்கலைக்கழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறையின் சார்பில் மது அருந்துதல் மது அருந்தி வாகனம் ஓட்டுதல் மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் போதைப்பொருட்களை தடுப்பதற்கும், முற்றிலுமாக ஒழிப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளும், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களி டையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நண்பர்கள் மூலமும், சூழ்நிலையின் காரணமாகவும் போதை பழக்கம் உருவாகிறது.

    சரியான விழிப்பு ணர்வு இருந்தால் போதைக்கு அடிமையாகாமல் தவிர்க்கலாம். போதையால் ஒரு நொடியில் ஏற்படக்கூடிய இன்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாழாகிவிடும். படிப்பு, வேலை உள்ளிட்டவைகளால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு போதைப் பொருள் தீர்வு அல்ல. மாணவர்கள் தங்கள் இளமைகால பருவத்தை நல்வழியில் பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • விழுப்புரம் மாவட்ட போலீஸ் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் சரவணன் தலைமை தாங்கினார்.
    • மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரியில் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட போலீஸ் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் சரவணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.

    விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் கலந்து கொண்டு போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். போதைப் பொருள் விற்பவர்கள் சம்பந்தமாக தகவல் தெரிவிக்க வேண்டிய எண்கள் அடங்கிய சிறிய அட்டையை மாணவர்களுக்கு வழங்கினர். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவெண்ணெநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் நன்றி கூறினார்.

    • பள்ளி மாணவ, மாணவிகளின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    • பதாகைகளை கையில் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் சென்றனர்.

    மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் மாணவர்கள் போதை பொருள் ஒழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்ற காட்சி.


    கடலூர்:

    போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில், விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் அறி வுறுத்தலின் பேரில், தமிழ்நாடு காவல் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில், விருத்தாசலம் அடுத்த மங்கலம் பேட்டையில், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் உண்டாகும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு, மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கண்ணன், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காளமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி விழிப்புணர்வு பேரணியானது மங்கலம்பேட்டை கடைவீதி, மெயின் ரோடு வழியாக சென்று புல்லூர் சோதனைச் சாவடியை சென்றடைந்தது. இந்த பேரணியின்போது, போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் உண்டாகும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் பள்ளி மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், தனிப்பிரிவு தலைமைக் காவலர் ராஜசேகர், பள்ளி ஆசிரியர்கள் பாபாஜி, விசாலாட்சி, சங்கர், சுடர் ஒளி, அனிதா உள்ளிட்ட ஆசிரியர், ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர்.

    • போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.
    • கலெக்டர் பழனி தலைமையில் கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    விழுப்புரம்:

    சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். அதையொட்டி விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கலெக்டர் பழனி தலைமையில் கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    அப்போது போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், எம்.எல்.ஏ.க்கள் புகழந்தி, டாக்டர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், கோட்டாட்சியர் பிரவீனா குமாரி, தாசில்தார் வேல்முருகன், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, கல்லூரி முதல்வர் சிவகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • காரைக்கால் நகர் பகுதியில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்ற முதியவரை, நகர போலீசார் கைது செய்தனர்.
    • அவரிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான போதை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகர் பகுதியில், புதுச்சேரி அரசால் தடை செய்ய ப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்ற முதியவரை, நகர போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான போதை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். காரைக்கால் இடும்பன்செட்டி சாலையில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக, நகர போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெ க்டர் புருசோத்தமன் உத்தரவின் பேரில், சப்.இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, பெட்டி க்கடையை சோதனை செய்தபோது, புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, கடை உரிமையாளர் காத்த பெருமாளை(வயது68) கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான போதை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    • இளைஞர்கள் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.
    • இளைஞர்கள் ஒன்றுகூடி சாலையில் செல்லும் பொதுமக்களை தாக்கி, மிரட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை நகர பகுதியில் நூற்றுக்கணக்கான மதுபார்கள் ஏற்கனவே இயங்கி வருகிறது.

    தற்போது ரெஸ்டோபார் எனப்படும் நடன அரங்கத்துடன் கூடிய மதுபார்களுக்கு அரசு அனுமதி வழங்கி வருகிறது. இந்த மதுபார்கள் நகர், புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே புதிது, புதிதாக முளைத்து வருகிறது. குடியிருப்புகள், கோவில், பள்ளி அருகே ரெஸ்டோ பார் திறக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இருப்பினும் அரசின் வருவாயை பெருக்கும் வகையில் ரெஸ்டோ பாருக்கு அனுமதி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    வார இறுதியில் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் ஒரு தரப்பினர் ரெஸ்டோ பாருக்காகவே வருகை தருகின்றனர். சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் மது அருந்திவிட்டு, நடனமாடுவதை விரும்புகின்றனர்.

    அதோடு நள்ளிரவு வரை ரெஸ்டோ பார் திறந்து செயல்பட சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் நள்ளிரவுக்கு மேல் மதுஅருந்தி கொண்டாடி விட்டு, நள்ளிரவு, அதி காலைக்கு மேல்தான் விடுதிகளுக்கு திரும்புகின்றனர்.

    புதுவையில் இருசக்கர வாகனங்களும் அதிகளவு வாடகைக்கு விடப்படுவதால், இதுபோன்ற ரெஸ்டோ பார் செல்பவர்கள், கார்கள், மோட்டார் சைக்கிளில் நள்ளிரவில் செல்கின்றனர்.

    அப்போது ஒரு சில இடங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. ஏற்கனவே புதுவையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் புதுவை இளைஞர்கள் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.

    சமீபகாலமாக ஆங்காங்கே இளைஞர்கள் ஒன்றுகூடி சாலையில் செல்லும் பொதுமக்களை தாக்கி, மிரட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    இதுபோன்ற ஒரு சம்பவத்தில்தான் லப்போர்த் வீதியில் மோட்டார்சைக்கிளில் சென்ற என்ஜினீயரை தாக்க முயன்றபோது பலியாகியுள்ளார். இது புதுவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    புதுவை மக்களுக்கு பிரெஞ்சு காலத்தில் இருந்தே மது அருந்தும் பழக்கம், பார்ட்டி கொண்டாடும் பழக்கம் உள்ளது. ஆனால் மற்றவர்களுக்கு இடையூ றாகவோ, பொது இடங்களில் அருவருக்கத்தக்க வகையிலோ நடப்பதோ கிடையாது.

    ஆனால் புதிய ரெஸ்டோ பார் கலாச்சாரம் சாலையின் நடுவீதியில் பிறந்தநாள் கொண்டாடுவது, பொது மக்களை அச்சுறுத்துவது போன்ற சம்பவங்களை அதிகரிக்க செய்துள்ளது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என அ.தி.மு.க. குரல் கொடுத்துள்ளது. ரெஸ்டோ பார் அனுமதியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதனால் புதுவை அரசுக்கு வருவாயா? வருங்காலமா? என்ற நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.

    • மது போதை உச்சத்திற்கு சென்ற சேத்தியாத்தோப்பு டாஸ்மாக் ஊழியர் வீடு திரும்ப முடிவு செய்தார்.
    • அந்த பஸ்சில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகளிடமும் போதையில் இருந்த சேத்தியாத்தோப்பு டாஸ்மாக் ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    கடலூர்:

    சேத்தியாத்தோப்பு டாஸ்மாக்கில் விற்பனை யாளராக பணிசெய்யும் வாலிபரும், சிதம்பரம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணி செய்யும் வாலிபரும் சேர்ந்து சிதம்பரம் பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று இரவு மது அருந்தினர்.   இதில் மது போதை உச்சத்திற்கு சென்ற சேத்தியாத்தோப்பு டாஸ்மாக் ஊழியர் வீடு திரும்ப முடிவு செய்தார். சிதம்பரம் பஸ் நிலையத்தினுள் சென்ற அவர், வேலூரில் இருந்து கடலூர் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். அங்கு பணியில் இருந்த கண்டக்டரிடம், வடலூருக்கு டிக்கெட் கேட்டார்.  அப்போது இந்த பஸ் கடலூருக்கு செல்கிறது. வடலூருக்கு செல்லாது என்று கண்டக்டர் கூறினார். அப்புறம் எதற்கு வடலூர் என பஸ்சில் எழுதப்பட்டுள்ளது என சேத்தியாத்தோப்பு டாஸ்மாக் ஊழியர் கண்டக்டரிடம் கேட்டுள்ளார். இதற்கு கடலூரில் இருந்து வேலூருக்கு செல்லும் போது வடலூர் வழியாக செல்லும், வேலூரில் இருந்து கடலூர் வரும் போது வடலூருக்கு போகாது என கண்டக்டர் போதையில் இருந்த டாஸ்மாக் ஊழியருக்கு விளக்கமளித்தார்.

    இதனை ஏற்காத டாஸ்மாக் ஊழியர், தவறான வழித்தடத்தில் பஸ் இயக்குகிறாயா, வடலூர் வழியாக சென்று என்னை இறக்கிவிட வேண்டும் என்று கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அந்த பஸ்சில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகளிடமும் போதையில் இருந்த சேத்தியாத்தோப்பு டாஸ்மாக் ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதில் செய்வதறியாது திகைத்த பஸ் டிரைவர், பஸ்சினை சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு பஸ்சை நிறுத்திய டிரைவர், கண்டக்டர் பணியில் இருந்த போலீசாரிடம் நடந்த விஷயங்களை கூறினர்.

    இதையறிந்த போதையில் இருந்த டாஸ்மாக் ஊழியர் பஸ்சில் இருந்து இறங்கி தப்பியோட முயற்சித்தார். இதில் நிலைதடுமாறிய அவர், கீழே விழுந்தார். அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த வெளியில் வந்த போலீசாரிடம், தன்னை டிரைவர், கண்டக்டர் இருவரும் சேர்ந்து தாக்கி விட்டதாக புகார் அளித்தார்  அப்போது திடீரென சேத்தியாத்தோப்பு டாஸ்மாக் விற்பனையாளர் பஸ்சின் முன்பாக சாலையில் படுத்து, பஸ்சினை எடுக்க முடியாமல் வழிமறித்தார். அப்போது அங்கு வந்த சிதம்பரம் டாஸ்மாக் விற்பனையாளர், இவருடன் சேர்ந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  இதனால் எரிச்சலடைந்த போலீசார், 2 பேரையும் குண்டு கட்டாக தூக்கி சாலையில் இருந்து அப்புறப்படுத்தி, அரசு பஸ்சினை போதை டாஸ்மாக் ஊழியர்களிடம் இருந்து விடுவித்தனர். மேலும், அவர்களை போலீஸ் நிலையத்தில் அமரவைத்து, 2 பேருக்கும் போதை தெளிந்தவுடன் அவர்களிடம் கடிதம் வாங்கி கொண்டு விடுவித்தனர். இந்த வீடியோ சிதம்பரம் பகுதியில் சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு போதை பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பேசினார்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே அசூர் பைபாஸ் சாலையில் உள்ள ஸ்ரீ சங்கரா கலை, அறிவியல் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு
    போதை பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு கல்லூரி டீன் தமிழ்ச்செல்வம் தலைமை தாங்கினார்.

    கல்லூரி முதல்வர் உஷா சேகர் முன்னிலை வகித்தார்.

    முன்னதாக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.

    முகாமில் சிறப்பு விருந்தினராக சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் கலந்து கொண்டு போதை பொருள் தடுப்பு குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பேசினார்.

    இதில் கல்லூரி மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×