search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரம் பஸ் நிலையத்தில்  போதை டாஸ்மாக் ஊழியர்கள் அரசு பஸ் டிரைவர், கண்டக்டரிடம் ரகளை: போலீசார் எச்சரித்து அனுப்பினர்
    X

    சிதம்பரம் பஸ் நிலையத்தில் போதை டாஸ்மாக் ஊழியர்கள் அரசு பஸ் டிரைவர், கண்டக்டரிடம் ரகளை: போலீசார் எச்சரித்து அனுப்பினர்

    • மது போதை உச்சத்திற்கு சென்ற சேத்தியாத்தோப்பு டாஸ்மாக் ஊழியர் வீடு திரும்ப முடிவு செய்தார்.
    • அந்த பஸ்சில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகளிடமும் போதையில் இருந்த சேத்தியாத்தோப்பு டாஸ்மாக் ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    கடலூர்:

    சேத்தியாத்தோப்பு டாஸ்மாக்கில் விற்பனை யாளராக பணிசெய்யும் வாலிபரும், சிதம்பரம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணி செய்யும் வாலிபரும் சேர்ந்து சிதம்பரம் பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று இரவு மது அருந்தினர். இதில் மது போதை உச்சத்திற்கு சென்ற சேத்தியாத்தோப்பு டாஸ்மாக் ஊழியர் வீடு திரும்ப முடிவு செய்தார். சிதம்பரம் பஸ் நிலையத்தினுள் சென்ற அவர், வேலூரில் இருந்து கடலூர் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். அங்கு பணியில் இருந்த கண்டக்டரிடம், வடலூருக்கு டிக்கெட் கேட்டார். அப்போது இந்த பஸ் கடலூருக்கு செல்கிறது. வடலூருக்கு செல்லாது என்று கண்டக்டர் கூறினார். அப்புறம் எதற்கு வடலூர் என பஸ்சில் எழுதப்பட்டுள்ளது என சேத்தியாத்தோப்பு டாஸ்மாக் ஊழியர் கண்டக்டரிடம் கேட்டுள்ளார். இதற்கு கடலூரில் இருந்து வேலூருக்கு செல்லும் போது வடலூர் வழியாக செல்லும், வேலூரில் இருந்து கடலூர் வரும் போது வடலூருக்கு போகாது என கண்டக்டர் போதையில் இருந்த டாஸ்மாக் ஊழியருக்கு விளக்கமளித்தார்.

    இதனை ஏற்காத டாஸ்மாக் ஊழியர், தவறான வழித்தடத்தில் பஸ் இயக்குகிறாயா, வடலூர் வழியாக சென்று என்னை இறக்கிவிட வேண்டும் என்று கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அந்த பஸ்சில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகளிடமும் போதையில் இருந்த சேத்தியாத்தோப்பு டாஸ்மாக் ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதில் செய்வதறியாது திகைத்த பஸ் டிரைவர், பஸ்சினை சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு பஸ்சை நிறுத்திய டிரைவர், கண்டக்டர் பணியில் இருந்த போலீசாரிடம் நடந்த விஷயங்களை கூறினர்.

    இதையறிந்த போதையில் இருந்த டாஸ்மாக் ஊழியர் பஸ்சில் இருந்து இறங்கி தப்பியோட முயற்சித்தார். இதில் நிலைதடுமாறிய அவர், கீழே விழுந்தார். அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த வெளியில் வந்த போலீசாரிடம், தன்னை டிரைவர், கண்டக்டர் இருவரும் சேர்ந்து தாக்கி விட்டதாக புகார் அளித்தார் அப்போது திடீரென சேத்தியாத்தோப்பு டாஸ்மாக் விற்பனையாளர் பஸ்சின் முன்பாக சாலையில் படுத்து, பஸ்சினை எடுக்க முடியாமல் வழிமறித்தார். அப்போது அங்கு வந்த சிதம்பரம் டாஸ்மாக் விற்பனையாளர், இவருடன் சேர்ந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் எரிச்சலடைந்த போலீசார், 2 பேரையும் குண்டு கட்டாக தூக்கி சாலையில் இருந்து அப்புறப்படுத்தி, அரசு பஸ்சினை போதை டாஸ்மாக் ஊழியர்களிடம் இருந்து விடுவித்தனர். மேலும், அவர்களை போலீஸ் நிலையத்தில் அமரவைத்து, 2 பேருக்கும் போதை தெளிந்தவுடன் அவர்களிடம் கடிதம் வாங்கி கொண்டு விடுவித்தனர். இந்த வீடியோ சிதம்பரம் பகுதியில் சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    Next Story
    ×