என் மலர்
உள்ளூர் செய்திகள்
- உங்கள் அனைவருக்கும் ஓர் இனிய செய்தியைச் சொல்லவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
- லட்சியப் பாதையில் தமிழ் நாட்டை வழிநடத்த வேண்டும் என நித்தமும் உழைப்பவன்.
மக்களைக் காப்போம்- தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-
'மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்!' என்னுள் கலந்திருக்கும் எனதருமைத் தமிழக மக்களே, உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் ஓர் இனிய செய்தியைச் சொல்லவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இதை எழுதும்போதே எனது உள்ளம் மகிழ்ச்சியாலும் உவகையாலும் நிறைகிறது. என்னைப் பற்றி எல்லாமும் உங்களுக்குத் தெரியும். என்னிடம் எந்த ரகசியமும் இல்லை.
என் உயிருக்கு நெருக்கமான உறவாக இருக்கின்ற உங்களோடு இருக்கவே நான் எப்போதும் ஆசைப்படுபவன். சாமானியனிலும் சாமானியனாக உங்களோடு கலந்து உறவாட விரும்புகிறவன். தமிழ்க் குடியினர் அனைவரும் தலைநிமிர்ந்து செம்மாந்து வாழ்வதற்கு எனது செயல்கள் அனைத்தையும் அர்ப்பணிக்க நினைப்பவன்.
'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் அமைத்துக் கொடுத்த லட்சியப் பாதையில்
தமிழ் நாட்டை வழிநடத்த வேண்டும் என நித்தமும் உழைப்பவன்.
எனது தனிப்பட்ட வாழ்வும் அரசியல் வாழ்வும் வெவ்வேறானவை அல்ல. அவை ஒன்றோடு ஒன்று கலந்தவை என்பதை எனது நெஞ்சகத்தை அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள்.
ஓர் இனிய செய்தி சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா... அது என்னவென்றால், உங்கள் ஒவ்வொருவரையும் சந்திக்க உங்களைத் தேடி வருகிறேன். உங்கள் இல்லத்தையும், உள்ளத்தையும் தொட்டுப் பேச வருகிறேன்.
மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம் என்கிற எழுச்சிப் பயணத்தில் உங்களை எல்லாம் சந்தித்து உறவாட வருகிறேன்.
இந்தப் புரட்சிப் பயணத்தில் உங்களை எல்லாம் எழுச்சிமிக்கவர்களாக மாற்றுவது மட்டுமே எனது நோக்கம். வெற்றிகரமான ஒரு தமிழ் நாட்டை மீண்டும் உருவாக்குவதே எனது இந்தச் சுற்றுப் பயணத்தின் லட்சியம்.
இது எனது தனிப்பட்ட பயணம் அல்ல... ஒட்டுமொத்த தமிழ் நாடும் மாற்றத்தை நோக்கி நடக்கும் வெற்றிப் பயணம்!
இது எனது தனிப்பட்ட சுற்றுப் பயணம் அல்ல.... ஆட்சி மாற்றத்தையும் சமூக முன்னேற்றத்தையும் விரும்பும் ஒவ்வொரு தமிழரின் சுற்றுப் பயணம்!
இந்தப் பயணம் 'விடியா ஸ்டாலின் அரசை வீழ்த்தும் பயணம்'. இந்தப் பயணம் மாநிலம் காக்க 'மாபெரும் பயணம்'
இந்தப் பயணத்தில் உங்களை எல்லாம் மாற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும் முன்னணிக் களவீரனாக நான் இருப்பேன்!
இந்தப் பயணப் போர்க்களத்தில், ஆளும் கட்சியின் கொடுமைகளையும், சிறுமைகளையும் எதிர்த்துப் போராடும் ஒரு சிப்பாயாக இருப்பேன்!
நடக்கும் அனைத்துக் கொடுமைகளுக்கும் எதிராக, உங்கள் கைகளோடு எனது கையையும் இணைத்து உயர்த்துவேன்.
உங்கள் எண்ணங்களோடு, எனது எண்ணத்தையும் இணைத்து சிறுமைகளுக்கு எதிராகக் குரலுயர்த்துவேன்.
உங்களில் ஒருவனாக உங்களோடு நிற்பேன். உங்கள் தோளோடு தோள் சேர்த்து ஒரு தோழனாக நிற்பேன்.
உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்களோடு உறவாடி நிற்பேன். உங்கள் குறைகளையும் கோரிக்கைகளையும் காதுகொடுத்துக் கேட்கும் சேவகனாக இருப்பேன்.
தமிழ் நாட்டு மக்களைத் தேடி வரும் இந்த எழுச்சிப் பயணம், உங்கள் பங்களிப்போடு ஒரு மாற்றத்தை நோக்கிய வெற்றிப் பயணமாக மாறும் என்பதில் எள் முனையளவும் எனக்கு சந்தேகமில்லை.
இதற்கெல்லாம் முன்பாக, சில விஷயங்களையும் உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்... தனிமனித வளர்ச்சியிலும், கூட்டு வளர்ச்சியிலும் வீறுநடைபோட்ட தமிழ்நாடு இப்போது, சில விஷமிகளின் சுயநலத்தால் தள்ளாடுகிறது.
மாலுமியை இழந்த கப்பல் போல இலக்கு தெரியாமல் தத்தளிக்கிறது. ஆட்சி நடத்துகிறவருக்கு தமிழ்நாட்டு மக்களின் நலன் பற்றிய கவலை இல்லை.
தன் பெண்டு - தன் பிள்ளை - தன் வளம் போன்றவை மட்டுமே லட்சியமாக இருக்கின்றன. அரசாங்கத்தின் அத்தனை பாகங்களிலும் மக்கள் மீதான அலட்சியம் குடியேறிவிட்டது. மக்கள் நலனுக்கு எதிரான ஊழல் கோரத் தாண்டவமாடுகிறது. எளியவர்கள் உயிரைத் துச்சமாக நினைக்கும் போக்கு ஆட்சியாளர் மனத்தில் நிறைந்துவிட்டது.
தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்டவர்களும், பாட்டாளி வர்க்கத்தினரும் இப்போது மகிழ்ச்சியாக இல்லையே..... ஏன்?
ஒருசில கல்விக் கூடங்களும், சில சமூக ஊடகங்களும் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் கூடாரமாக தொடர்ந்து செயல்படுவது ஏன்?
அமைதிப்பூங்காவான தமிழ்நாடு சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டாலும், போதைப் பொருள் பெருக்கத்தாலும் அல்லலுறுவது ஏன்?
அதிகாரத்தைக் காட்டி தனிமனிதச் சொத்துக்களை அபகரிப்பதை இந்த அரசு மூடி மறைப்பது எதனால்?
அரசின் அச்சாணியாக இயங்கும் அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்பது வெட்கப்படவேண்டிய செயல் அல்லவா?
தமிழகத்தில் 'கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன்' இல்லாத துறைகளே இல்லை. இப்படிப்பட்ட அவல ஆட்சி தமிழகத்திற்கு தேவையா? படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதை அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்?
இப்படி, இந்த ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர், தொழிலாளர்கள் என்று அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொழில் முதலீடு அண்டை மாநிலங்களுக்கு மாறுகிறது. இந்த அரசு, அனைத்துத் துறைகளிலும் தோல்வியையே கண்டுள்ளது. எனவே, திமுக அரசு அகற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமல்லவா?
சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை எவரும் தமிழ் நாட்டில் பாதுகாப்போடு நடமாட முடியவில்லை. சிறுவர்களைச் சிதைக்கிற பெருங்குற்றங்கள் அதிகரித்துவிட்டன. முதியோர்கள் உயிரைத் தொடர்ச்சியாகப் பறிக்கிற ஈவு இரக்கமற்ற செயல்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
நாம் தமிழ் நாட்டில்தான் இருக்கிறோமா அல்லது ஈவு இரக்கமற்ற நீரோ மன்னனின் கொடுங்கோலாட்சியில் இருக்கிறோமா என ஒவ்வொரு தமிழரும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர். மக்கள் மனத்தில் நீறுபூத்த நெருப்பாக வேதனை சூழ்ந்து கொண்டிருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, ஆளும் தி.மு.க. அரசாங்கம் தமிழ் நாட்டு மாணவர்களின் கல்வியில்கூட அரசியல் செய்கிறது. போலி வாக்குறுதிகளைக் கொடுத்து பொய்யான ஆட்சி நடத்தும் மூடர்களின் கொட்டத்தை அடக்கி வீட்டுக்கு அனுப்ப, உங்களை எல்லாம் என்னோடு இணைந்து வர அழைக்கிறேன்.
அமைதியான தமிழ் நாடு –
வளமான தமிழ் நாடு –
நிறைவான தமிழ் நாடு;
இவைதான் நமது லட்சியம். நாம் வெல்வது நிச்சயம்!
முடியாத கொடுமைக்கு முடிவுகட்டுவோம்!
விடியாத ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்!
தீய சக்தியை வதைத்திட,
நல்லாட்சியை விதைத்திட,
விலகாத இருள் விலகட்டும்,
தமிழகத்தில் அஇஅதிமுக ஆட்சி மலரட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- த.வெ.க. தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.
- ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்குமாறு நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் போலீசாரால் அஜித்குமார் அடித்தக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
அதன்படி, போலீசார் தாக்குதலில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து வரும் 12ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தவெக திட்டமிட்டுள்ளது.
முன்னதாக, காவலாளி அஜித்குமார் கொலை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி த.வெ.க. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
ஆனால், த.வெ.க. தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க என்ன அவசரம் எனவும் நீதிபதி வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கோரிய மனு எண்ணிடப்பட்டு வந்தால் திங்கட்கிழமை விசாரிக்கப்படும். மேலும் ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்குமாறு நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.
6ம் தேதி (நாளை) ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து வரும் 12ம் தேதி சென்னை சிவானந்தா சாலையில் தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- சி.பி.ஐ. விசாரணைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- அஜித்குமாரின் தாய் மாலதி, தம்பி நவீனுக்கு ஓ.பி.எஸ் ஆறுதல் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார், காவல்துறையினர் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, அஜித்குமாரின் வீட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று ஓ.பன்னீர் செல்வம் ஆறுதல் தெரிவித்தார். பின்னர், அஜித்குமாரின் படத்திற்கு மாலை அணிவித்து ஓபிஎஸ் அஞ்சலி செலுத்தினார்.
அஜித்குமாரின் தாய் மாலதி, தம்பி நவீனுக்கு ஓ.பி.எஸ் ஆறுதல் தெரிவித்தார்.
- மாணவன் தனது வீட்டிற்கு சென்று புத்தகப்பைக்குள் அரிவாளை எடுத்து வைத்துக்கொண்டான்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களை அழைத்து விசாரித்துள்ளனர்.
சுரண்டை:
தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள வெள்ளாளங்குளம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் பிளஸ்-2 படிக்கும் மாணவன் ஒருவன் சம்பவத்தன்று சக மாணவனை விளையாட்டாக தலையில் தட்டியுள்ளான். இதைப்பார்த்து அந்த மாணவன் கோபம் அடைந்து திட்டியுள்ளான்.
அதன் பின்னர் சக மாணவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி உள்ளனர். ஆனாலும் தன்னை தலையில் தட்டிய மாணவர் மீது தொடர்ந்து ஆத்திரத்தில் இருந்த அந்த மாணவன் தனது வீட்டிற்கு சென்று புத்தகப்பைக்குள் அரிவாளை எடுத்து வைத்துக்கொண்டான்.
பின்னர் மறுநாள் பள்ளிக்கு வந்தபோது, தனது தலையில் தட்டிய சக மாணவனை அவன் கொண்டு வந்திருந்த அரிவாளை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவன் தனது ஆசிரியரிடம் தகவலை தெரிவித்துள்ளான்.
இதுகுறித்து உடனடியாக சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களை அழைத்து விசாரித்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து அரிவாள் வைத்திருந்த மாணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- யானை காரை துரத்தும் காட்சியை வாகன ஓட்டி செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
- சாலையில் செல்லும் யானைகளுக்கு வாகன ஓட்டிகள் எந்த ஒரு தொந்தரவும் அளிக்கக்கூடாது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
தமிழகம்-கர்நாடக இடையே மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இந்த நெடுஞ்சாலை அமைந்துள்ளது. சாலையின் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. சமீபகாலமாக பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் சென்று வருகின்றன. இதனால் இந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு பண்ணாரி அடுத்த சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டி ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை நெடுஞ்சாலையில் நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது. அந்த வாகன ஓட்டி ஹாரனை அடித்ததால் திடீரென ஆவேசம் அடைந்த அந்த ஒற்றை யானை அந்த காரை துரத்த தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாகன ஓட்டி காரை பின்னோக்கி வேகமாக இயக்கினார். சிறிது தூரம் அந்த காரை விரட்டி சென்ற அந்த ஒற்றை யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னர் வாகன ஓட்டி அங்கிருந்து சென்றார். யானை காரை துரத்தும் காட்சியை இந்த வாகன ஓட்டி செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். தற்போது சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பண்ணாரி தேசிய நெடுஞ்சாலை ஓரம் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. யானைகள் ஒரே இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம் பெயர்ந்து வருகிறது. சாலையில் செல்லும் யானைகளுக்கு வாகன ஓட்டிகள் எந்த ஒரு தொந்தரவும் அளிக்கக்கூடாது. இதை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- புதிய நிர்வாக குழுவினருடன் பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை நடத்தினார்.
- ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயற்குழு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பா.ம.க.வில் தலைமை நிர்வாகக்குழு செயல்பட்டு வந்தது. இந்த குழுவில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், திலகபாமா, பாலு, வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் அந்த குழுவை கலைத்து புதிய குழுவை ராமதாஸ் உருவாக்கினார். அந்த புதிய பா.ம.க. நிர்வாக குழுவில் ஜி.கே.மணி, முரளி சங்கர், கரூர் பாஸ்கர், அருள், பரந்தாமன், சிவபிரகாசம், தீரன், புதா.அருள்மொழி உள்ளிட்ட நிர்வாகிகளை ராமதாஸ் நியமனம் செய்தார்.
இந்த புதிய நிர்வாக குழுவினருடன் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் பா.ம.க.வின் நிர்வாக குழு கூட்டத்தில் மாநில செயற்குழு கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டது.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வருகிற 8-ந்தேதி மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயற்குழு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி புரிந்துள்ளது.
- கடந்த தேர்தலில் பொய் பிரசாரம் மூலமாகவே தி.மு.க. ஆட்சிக்கு வந்ததை சுட்டிக்காட்ட உள்ளேன்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. தயாராகி வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (7-ந்தேதி) கோவை மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
இதற்கான பிரசார பாடல் மற்றும் இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று நடைபெற்றது.
புரட்சித்தமிழரின் எழுச்சி பயணம், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்கிற வாசகங்களுடன் இரட்டை இலை சின்னத்தின் பின்னணியில் ஒற்றை கையை உயர்த்தி பிடிக்கும் வகையில் இலச்சினை வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதனை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தின்போது ஒளிபரப்ப உள்ள வீடியோ பாடலும் வெளியிடப்பட்டது.
இவன் சரித்திரம் போற்றும் சாமானியன் என்ற தலைப்பில் உருவாகி உள்ள இந்த பாடல் கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்றைக்கு முதலமைச்சர் என்னைப் பற்றி சொல்கிறார். எதிர்க்கட்சி தலைவர் இப்போதுதான் மக்களை சந்தித்து பேசுகிறார் என்று முதலமைச்சர் என்னைப் பற்றி பேசுவதாக நினைத்துக்கொண்டு அவரைப் பற்றியே பேசிக் கொண்டு இருக்கிறார்.
நான் எப்போதும் இயல்பாக மக்களோடு இருப்பவன். நான் எப்போதும் மக்களை சந்தித்துக் கொண்டு, அவர்களோடு பேசிக் கொண்டுதான் இருக்கின்றேன். அதனால் தான் மக்களின் குறைகளை அறிந்து அவர்களின் குரலாக நானும் அ.தி.மு.க.வும் ஒலித்து வருகிறோம்.
அதனை அடுத்து மிக முக்கியமான அத்தியாயம்தான் இந்த எழுச்சி பயணம். என்னது? தேர்தல் பிரசாரம் தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆம். தேர்தல் பிரசாரம்தான். ஆனால் இந்த பயணத்துக்கு ஒரு மிகப்பெரிய நோக்கம், தேவை இருக்கின்றது.
இந்த பயணத்தின் நோக்கம் விடியா ஸ்டாலின் மாடல் ஆட்சியின் செயல்களை மக்களிடம் அம்பலப்படுத்தி அவர்களிடம் மாற்றத்திற்கான நம்பிக்கையை விதைப்பது. இந்த பயணம் எதற்காக என்றால் இந்த ஆட்சியில் சிறுமி முதல் முதியவர் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை உள்ளது. தினந்தோறும் பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி என்று நாள்தோறும் நடந்த வண்ணம் இருக்கிறது.
அ.தி.மு.க. மக்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம். தி.மு.க.வை வேரோடு அழிக்க வேண்டும் என்பதற்காக எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கினார். ஜெயலலிதா சிறப்பான ஆட்சியை தந்தார். 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி புரிந்துள்ளது.
கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தோம். இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் என்று பெயர் பெறுகின்ற அளவுக்கு திட்டங்களை கொண்டு வந்து மக்களுக்கு நன்மை செய்தோம்.
இந்த பயணத்தின் நோக்கம் கடந்த 50 மாத தி.மு.க. ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்கள், துயரங்கள், வேதனைகள், கொடுமைகள் அத்தனையையும் பட்டியலிட்டு மக்களிடம் எடுத்து சொல்லி இந்த ஆட்சியை அகற்றுவதுதான் எங்களது நோக்கம், லட்சியம்.
இந்த தேர்தல் சுற்றுப்பயணம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மக்களின் பேராதரவை அ.தி.மு.க. பெறும். 2026 சட்டசபை தேர்தலில் வென்று அ.தி.மு.க. வரலாறு படைக்கும்.
வருகிற 7-ந்தேதி எனது தேர்தல் சுற்றுப் பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தொடங்குகிறேன். தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். மக்களை நேரடியாக சந்தித்து இந்த ஆட்சியின் அவலங்களை எடுத்து சொல்லி மக்கள் மனதிலே பதிய வைக்க உள்ளேன்.
இதன் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி அ.தி.மு.க. 2026-ல் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையோடு ஆட்சி அமைப்பதற்கு இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறேன்.
கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. அளித்த 525 தேர்தல் வாக்குறுதிகளில் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன. இதையெல்லாம் மக்களிடம் எடுத்து கூற இருக்கிறேன்.
கடந்த தேர்தலில் பொய் பிரசாரம் மூலமாகவே தி.மு.க. ஆட்சிக்கு வந்ததை சுட்டிக்காட்ட உள்ளேன். ஒவ்வொரு மாவட்டங்களிலும் பிரசாரம் மேற்கொள்ளும்போது அந்தந்த மாவட்டங்களின் பிரச்சனைகளை மக்கள் மத்தியில் எடுத்து கூறி அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டி வெற்றி பெறுவோம்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
- ஆன்லைனில் ரம்மி விளையாட்டில் பல லட்சத்தை இழந்ததாக தெரிகிறது.
- ஜனனி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி வடக்கு காட்டூர் சோழன் நகர் 2-வது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார் (வயது 32). இவருக்கு திருமணம் ஆகி ஜனனி (30) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கிஷோர் குமார் காட்டூர் பகுதியில் உள்ள பிரபல எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டது. இதில் பல லட்சத்தை அவர் இழந்ததாக தெரிகிறது.
இதனால் நெருக்கடிக்கு ஆளான கிஷோர் குமார் யாரும் எதிர்பாராத வகையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
பின்னர் உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு கிஷோர் குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் ஜனனி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவை பலரும் எதிர்ப்பது இயல்பான ஒன்றுதான்.
- பரந்தூர் மக்களுக்கு விஜயின் போராட்டம் நீதி பெற்று தருமானால் அதனை வரவேற்கிறோம்.
தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் நேற்று விஜய் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய விஜய், விஜய், பாஜக-வுடன் கூட்டணி அமைக்க தவெக ஒன்றும் அதிமுக, திமுக கிடையாது. திமுக மற்றும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதில் ஒருபோதும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உறுதிப்பட தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, திமுக மற்றும் பாஜகவை வெளிப்படையாக விமர்சிக்கும் விஜய், அதிமுக- வை விமர்சிக்காதது ஏன்? என்று அரசியல் நிபுணர்கள் முன் வைக்கும் கேள்வியாக உள்ளது.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* திமுக பற்றி பேசிய விஜய், அதிமுக பற்றி பேசாதது ஏன்? என தெரியவில்லை. த.வெ.க.வின் கொள்கை எதிரிகள் பட்டியலில் அதிமுக உள்ளதா? இல்லையா?
* அதிமுகவை விஜய் விமர்சிக்கிறாரே தவிர கொள்கை எதிரியாக குறிப்பிடவில்லை என்றே தோன்றுகிறது.
* ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவை பலரும் எதிர்ப்பது இயல்பான ஒன்றுதான்.
* பரந்தூர் மக்களுக்கு விஜயின் போராட்டம் நீதி பெற்று தருமானால் அதனை வரவேற்கிறோம் என்றார்.
- ரிதன்யா மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு சமூக நல அமைப்புகளும், பொதுமக்களும் போராடி வருகின்றனர்.
- ரிதன்யாவின் உருவப்படத்திற்கு தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு சமூக நல அமைப்புகளும், பொதுமக்களும் போராடி வருகின்றனர்.
இந்தநிலையில் அவிநாசி அனைத்து ஓட்டல் உரிமையாளர்கள், அனைத்து வியாபாரிகள், வணிகர் சங்கங்கள் மற்றும் அறக்கட்டளையினர் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ரிதன்யாவின் உருவப்படத்திற்கு தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேருக்கும் ஜாமின் வழங்கக்கூடாது. வழக்கை விரைவில் முடித்து உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
இந்த வழக்கில் உரிய நீதி கிடைக்காவிட்டால் தொடர் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்ய ப்பட்டது. வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி செலுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
- ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
- இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
சென்னை:
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீதான விசாரணையின் போது இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். விரைவில் இம்மனு மீதான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- போலீஸ் அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் திணறினர்.
- சில கேள்விகளுக்கு சற்று யோசித்து விளக்கம் அளித்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு புகார் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவு போலீசாரால் கொடூர சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக மதுரை ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்ததோடு மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேசை விசாரணை அதிகாரியாக நியமித்து வருகிற 8-ந்தேதி அஜித்குமார் கொலை தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட்டு உத்தரவிட்ட மறுநாளே (2-ந்தேதி) நீதிபதி தனது விசாரணையை தொடங்கினார். இதற்காக திருப்புவனத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முதல்நாளில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை திருப்புவனம் போலீசார் நீதிபதியிடம் வழங்கினர். அதனை தொடர்ந்து கோவில் ஊழியர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. 2-வது நாளில் அஜித்குமார் தாய், அவரது சகோதரர் நவீன்குமார் மற்றும் உறவினர்களிடம் சுமார் 3 மணிநேரத்துக்கும் மேல் விசாரணை நடைபெற்றது. 3-வது நாளான நேற்று அஜித்குமார் மரணம் தொடர்பாக திருப்புவனம் மற்றும் மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
4-வது நாளான இன்று இறுதி கட்ட விசாரணை நடைபெற்றது. காலை 9 மணியளவில் திருப்புவனம் வந்த நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நேரடியாக திருப்புவனம் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிபதி சரிபார்த்தார்.
தொடர்ந்து போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவரிடம் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்றது முதல் இறக்கும் வரை போலீசார் நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டு விளக்கம் பெறப்பட்டது.
நீதிபதி விசாரணையின் போது பல்வேறு கேள்விகளை கேட்டார். அதனை எதிர்பாராத போலீஸ் அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் திணறினர். சில கேள்விகளுக்கு சற்று யோசித்து விளக்கம் அளித்தனர்.
இன்றைய விசாரணையில் சஸ்பெண்டு செய்யப்பட்ட மானாமதுரை டி.எஸ்.பி. சண்முகசுந்தரம், ஏ.டி.எஸ்.பி. சுகுமாறன் மற்றும் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், மானாமதுரை ஏ.டி.எஸ்.பி. போலீஸ் அலுவலக போலீசார், திருப்புவனம் போலீசார் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளனர்.
அவர்களிடம் நிகிதா கொடுத்த புகார், அஜித்குமாரை விசாரணை செய்ய உத்தரவு கொடுத்த அதிகாரி, தாக்குதலில் இறந்த பின் உயர் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் போன்றவை குறித்து நீதிபதி விசாரணை மேற்கொள்வார் என தெரிகிறது.
ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அனைத்து சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்படும் என தெரிகிறது. அதன்பின் அறிக்கை தயார் செய்யப்பட்டு அதனை 8-ந்தேதி நீதிபதி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேவைப்படும் பட்சத்தில் மேலும் கால அவகாசம் கேட்கவும் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் முடிவு செய்துள்ளார்.






