என் மலர்
உள்ளூர் செய்திகள்
- போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீருக்கு தொடர்பு இருக்கலாமோ? என்கிற சந்தேகத்தின் பேரிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
- ஜாபர் சாதிக்கின் சாந்தோம் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சென்னை:
டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருட்களை கடத்திய வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சூடோ பெட்ரின் என்கிற போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருளை கடத்தி ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் பணத்தை சுருட்டியது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஜாபர் சாதிக் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். தற்போது அவர் சிறையில் உள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் சட்டவிரோதமாக பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையினர் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அது தொடர்பான தகவல்கள் மற்றும் ஆதாரங்களையும் திரட்டி வந்தனர்.
இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் நண்பரும், தொழில் பங்குதாரருமான டைரக்டர் அமீரிடம் கடந்த 2-ந்தேதி டெல்லியில் விசாரணை நடத்தப்பட்டது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி அமீரை நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். 10½ மணி நேர விசாரணைக்கு பிறகு அமீர் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தங்களது நேரடி விசாரணையை இன்று தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக சென்னையில் 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவ படை பாதுகாப்புடன் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

ஜாபர் சாதிக்குடன் இணைந்து ஓட்டல் ஒன்றை நடத்தி வந்த இயக்குனர் அமீர் 'இறைவன் மிகப்பெரியவன்' என்கிற சினிமா படத்தையும் எடுத்து வந்தார். இந்த படத்தின் தயாரிப்பாளராக ஜாபர்சாதிக்கும், இயக்குனராக அமீரும் இருந்தனர். இந்த படத்துக்கான படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில்தான் ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கினார்.
இதனால் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீருக்கும் தொடர்பு இருக்கலாமோ? என்கிற சந்தேகத்தின் பேரிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தங்களது முதல்கட்ட விசாரணையை நடத்தி முடித்து உள்ள நிலையில்தான் சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று காலையில் 7 அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர். தி.நகரில் உள்ள அமீரின் அலுவலத்திலும் சோதனை நடந்தது.
இந்த சோதனையின் போது அமீரின் வீட்டில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. அவைகளை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜாபர்சாதிக்கின் சாந்தோம் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த வீட்டில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தி வீட்டை பூட்டி 'சீல்' வைத்திருந்தனர்.
கோர்ட்டு உத்தரவின்பேரில் 2 நாட்களுக்கு முன்பு தான் 'சீல்' அகற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜாபர் சாதிக்கின் வீட்டிலும் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையிலும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள புகாரி ஓட்டல் உரிமையாளர் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
பெரம்பூர் பொன்னப்பன் தெருவில் உள்ள முகேஷ், யுகேஷ், லலித்குமார் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இவர்கள் நிதி நிறுவனத்தையும், கெமிக்கல் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்கள்.
புரசைவாக்கத்தில் உள்ள ஓட்டல் ஒன்றிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த ஓட்டலில் ஜாபர் சாதிக் பங்குதாரராக இருப்பதாக கூறப்படுகிறது.
இதேபோன்று ஜாபர் சாதிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்த தொழில் அதிபர்கள் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் பணப்பட்டுவாடாவை தடுக்க வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல இடங்களில் சோதனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்தக்கட்டமாக அமலாக்கத்துறையினர் மேலும் பல முக்கிய பிரமுகர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சேப்பாக்கத்தில் சிஎஸ்கே, கேகேஆர் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடந்தது.
- இதில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.
சென்னை:
சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடந்தது.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 137 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 34 ரன்கள் எடுத்தார்.
சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தபோது ஷிவம் துபே ஆட்டம் இழந்தார். அதன்பின், டோனி களம் இறங்குவார் என அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த வேளையில், ட்ரெஸ்சிங் ரூமில் இருந்து ரவீந்திர ஜடேஜா சிரித்தபடியே பேட்டினை எடுத்துக்கொண்டு மைதானத்திற்குள் நுழைய முயலுவதுபோல சென்று பின் திரும்பவும் ட்ரெஸ்சிங் ரூமிற்கு உள்ளே சென்றார்.
இதனைப் பார்த்த சக சி.எஸ்.கே. வீரர்கள் மற்றும் ரசிகர்களின் சிரிப்பலையில் அரங்கம் அதிர்ந்தது.
சிறிது நேரத்தில் வெளியே வந்த மகேந்திர சிங் டோனிக்கு அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர்கள் கரகோஷங்களை எழுப்பி தங்களது உற்சாக வரவேற்பினை அளித்தனர்.
இதுதொடர்பான காட்சிகளை டிரெஸ்சிங் ரூமில் இருந்து மேலே இருக்கையில் அமர்ந்திருந்த ரசிகர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட, அது வைரலாகி வருகிறது.
- திடீரென காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- குடிநீர் கட்டணம் ரூ. 2000 ரூபாய் பணம் கட்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை என்று ஆவேசத்துடன் தெரிவித்தனர்.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டில் திருநீலகண்டார் வீதி அமைந்துள்ளது. இந்த வீதியின் ஒரு சிறிய சந்து பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பவானி நகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் காவிரி ஆற்று குடிநீர் அந்த பகுதி மக்க ளுக்கு முறையாக கிடைக்க வில்லை என அவர்கள் புகார் கூறினர்.
மேலும் இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் பல முறை புகார் கூறியும் இது வரை முறையாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பவானி திருநீலகண்டர் வீதியை சேர்ந்த பொதுமக்கள் முறையான குடிநீர் வழங்க கோரி இன்று காலை அந்த பகுதியில் ஒன்று திரண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் திடீரென காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர் முறையாக வழங்க கோரி அந்த பகுதி மக்கள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தனர். மேலும் கருப்பு கொடிக்கட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறும் போது,
பவானி திருநீலர் கண்ட வீதியில் சரியாக தண்ணீர் கிடைப்பது இல்லை. பலர் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சி எடுத்துக் கொள்வதால் எங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் கிடைக்காமல் மிகுந்த அவதிப்படுகிறோம்.
தினமும் ஒரு குடம் இரண்டு குடம் மட்டுமே தண்ணீர் கிடைப்பதால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறோம். குடிநீர் கட்டணம் ரூ. 2000 ரூபாய் பணம் கட்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை என்று ஆவேசத்துடன் தெரிவித்தனர்.
எனவே முறையான குடிநீர் வழங்க வேண்டும். மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பவர்களை கண்டறிந்து மின் மோட்டார்களை நகராட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி குடிநீர் பிரிவு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தங்கள் பிரச்சனை குறித்து உரிய தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.
- பாராளுமன்ற தொகுதி முழுவதும் மன்சூர் அலிகான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
- மன்சூர் அலிகானின் ஆதரவாளரை பா.ஜ.க.வை சேர்ந்த பிரமுகர் தாக்கியதாக கூறப்படுகிறது.
வேலூர்:
பிரபல நடிகரும் ஜனநாயக புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
வேலூர் பாராளுமன்ற தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகானின் ஆதரவாளரை பா.ஜ.க.வை சேர்ந்த பிரமுகர் தாக்கியதாக கூறப்படுகிறது. தனது ஆதரவாளரை தாக்கிய பா.ஜ.க. பிரமுகரை கைது செய்யக்கோரி நடிகர் மன்சூர் அலிகான் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் நடவடிக்கை எடுக்காததால் இன்று காலை நடிகர் மன்சூர் அலிகான் சத்துவாச்சாரி போலீஸ் நிலையம் முன்பாக தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு தற்போது 200 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது.
- குண்டேரிப் பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.81 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர் வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 47.28 அடியாக குறைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடிக்கு கீழ் வருவது குறிப்பிடத்தக்கது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
காளிங்கராயன் வாய்க்கால் பாசனம், தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனம் ஆகிய வற்றுக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு தற்போது 200 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் குண்டேரிப் பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.81 அடியாக உள்ளது. வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 23.40 அடியாக உள்ளது. அதே சமயம் 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர் வரத்து இன்றி அணை முழுமையாக வறண்டது.
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- இலங்கை கடற்படையினர் தாக்குதலில் பலத்த காயம் அடைந்த 2 மீனவர்களும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
- கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடுவதால் எங்களுக்கு பல ஆயிரம் ரூபாய் இழப்பீடு ஏற்படுகிறது என மீனவர்கள் தெரிவித்தனர்.
ராமேசுவரம்:
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களும், விசைப்படகுகளுடன் மீனவர்கள் சிறைப்பிடிப்பு சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறித்தான் வருகிறது. மீனவர்களின் பிரச்சனைக்கு கச்சத்தீவை மீட்பதே தீர்வாகும் என்ற ஒற்றை வாசகம் இந்த பாராளுமன்ற தேர்தலில் ஓங்கி ஒலித்து வருகிறது.
இதற்கிடையே எல்லை தாண்டி வந்ததாக குறிப்பாக ராமேசுவரம் மீனவர்கள் மாதத்தில் 20-க்கும் அதிகமானோர் சிறைபிடிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம் மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம், உண்ணாவிரதம் இருந்தபோதிலும் நிரந்தர தீர்வு எட்டப்படாமலேயே உள்ளது.
இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 338 விசைப்படகுகளில் மீன்பிடி அனுமதிசீட்டு பெற்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நள்ளிரவில் அவர்கள் இந்திய கடல் எல்லையில் கச்சத்தீவு, நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு 5 குட்டி ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் அந்த பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தாக்கி விரட்டியடித்தனர். மேலும் மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளையும் அறுத்து சேதப்படுத்தினர். இதனால் உயிருக்கு பயந்த மீனவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.
ஆனாலும் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர் மெக்கானிக் (வயது 34) என்பவரை தண்ணீர் பைப்பை கொண்டு இலங்கை கடற்படையினர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு இடது கை மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதே போல் ராமேசுவரம் மீனவர் தங்கம் (55) என்பவரையும் கம்பு மற்றும் கம்பியால் தாக்கியதில் அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே படகில் இருந்த மீனவர்கள் பாதியில் இன்று அதிகாலை கரை திரும்பினர். கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடுவதால் எங்களுக்கு பல ஆயிரம் ரூபாய் இழப்பீடு ஏற்படுகிறது என மீனவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இலங்கை கடற்படையினர் தாக்குதலில் பலத்த காயம் அடைந்த 2 மீனவர்களும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சிறுவர்கள் நமீதாவை பார்த்து அக்கா எங்களுக்காக ஒரு பாட்டு பாடுங்கள் என கேட்டனர்.
- வருகிற தேர்தலில் தாமரை சின்னத்துக்கு வாக்களித்து மத்திய மந்திரி எல்.முருகனை வெற்றி பெறச் செய்யுங்கள்.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து அன்னூர் அருகே உள்ள பொகலூர் பகுதியில் நடிகையும், பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினருமான நமீதா பிரசாரத்தில் ஈடுபட்டார்.
நடிகை நமீதா வருவதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் பொகலூர் பகுதியில் திரண்டிருந்தனர். நமீதா திறந்த வேனில் நின்றபடி வந்ததை பார்த்ததும் பொதுமக்கள் உற்சாக மிகுதியில் சத்தம் போட்டு ஆரவாரம் செய்தனர். இளைஞர்கள் விசில் அடித்து வரவேற்றனர்.
அங்கு நின்ற சிறுவர்கள் நமீதாவை பார்த்து அக்கா எங்களுக்காக ஒரு பாட்டு பாடுங்கள் என கேட்டனர். மேலும் நமீதாவுடன் சிறுவர்களும், பெண்களும் செல்பி எடுக்க முயற்சித்தனர். அதற்கு சிரமம் வேண்டாம், நானே உங்களுடன் செல்பி எடுத்துக் கொள்கிறேன் என பிரசார வாகனத்தில் நின்றபடியே சுற்றி, சுற்றி செல்பி எடுத்துக் கொண்டார்.
பொதுமக்கள் மத்தியில் நடிகை நமீதா பேசியதாவது:-
மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த பா.ஜ.க. அரசு சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ளது. கூகுள் பே, பே.டி.எம் போன்ற டிஜிட்டல் பணபரி வர்த்தனை மூலம் வங்கிகளில் காத்திருக்கும் நிலையை எளிமையாக்கி பொது மக்களுக்கு கால நேர விரயத்தையும், சிரமங்களையும் குறைத்துள்ளது. செல்போன் பயன்பாட்டினை பொறுத்தவரை உலகத்தில் எங்கும் இல்லாத வகையில் செல்போன் டேட்டா உபயோகத்துக்கான கட்டணம் இந்தியாவில் மட்டுமே குறைந்த அளவில் உள்ளது.
வெளிநாட்டில் ஒரு ஜீ.பி டேட்டா ரூ.300ஆக உள்ள நிலையில் இந்தியாவில் ரூ.10 மட்டுமே. நீலகிரி தொகுதியில் தற்போது எம்.பி.யாக இருக்கும் நபரின் பெயரை கூட தனக்கு சொல்ல விருப்பமில்லை. நம்பி வாக்களித்த மக்களை அவர் தொடர்ந்து அவமானப்படுத்துகிறார். மக்களின் நம்பிக்கையான கடவுள் வழிபாட்டினை கொச்சைப்படுத்துகிறார். எனவே வருகிற தேர்தலில் தாமரை சின்னத்துக்கு வாக்களித்து மத்திய மந்திரி எல்.முருகனை வெற்றி பெறச் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.
- ஒரு கிராம் வெள்ளி ரூ.88-க்கும் பார் வெள்ளி ரூ.88ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 53,360-க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,670-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.88-க்கும் பார் வெள்ளி ரூ.88ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை சவரன் ரூ.53 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுவதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
- டீக்கடை முன்பு கூடியிருந்த பொதுமக்களிடம் தாமரை சின்னத்துக்கு அவர் வாக்கு சேகரித்தார்.
- பால் உற்பத்தியாளர்களுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர் எல்.முருகன், அன்னூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கரியாக்கவுண்டனூர் கிராமத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த தொண்டர் பழனிசாமி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். அவர் தனது கடைக்கு தேநீர் அருந்த வருமாறு எல்.முருகனுக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று எல்.முருகன் அந்த கடைக்கு சென்று டீ குடித்தார். சிறிது நேரம் டீக்கடைக்காரருடன் உரையாடி விட்டு தேநீருக்கு உரிய காசை கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் டீக்கடை முன்பு கூடியிருந்த பொதுமக்களிடம் தாமரை சின்னத்துக்கு அவர் வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து மத்திய மந்திரி எல். முருகன் அன்னூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட குன்னத்தூ ராம்பாளையம், கஞ்சப் பள்ளி, அல்லப்பாளையம், அ.மேட்டுப்பாளையம், பசூர், பட்டக்காரன்புதூர், மூக்கனூர், குப்பனூர், அக்கரை செங்கப்பள்ளி, கணுவக்கரை, ஆம்போதி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
மத்திய அரசு சார்பில் கிராமப்புற மக்களுக்கு உஜ்வாலா திட்டத்தில் ரூ.400 மானியத்தில் விலையில்லா எரிவாயு இணைப்புகள் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தி.மு.க.அரசு விவசாயிகளை ஒழிக்க வேண்டும், அவர்களது வாழ்வாதாரத்தை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டு தோறும் முப்பொழுதும் விளையும் நிலங்களை தாரை வார்க்க முயற்சி செய்கிறது. இதனை எதிர்த்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு தடுக்கப்பட்டது. அன்னூரில் சிப்காட் அமைக்க தி.மு.க. மீண்டும் முயற்சித்தால் பா.ஜ.க. சார்பில் ஒவ்வொரு தொண்டரும் தனது உயிரை கொடுத்தாவது தடுத்து நிறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.
- லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.
இதை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் இளநீர் பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்க வசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு சர்வ லோகேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிர காரத்தில் அருள்பாலித்தார். இரவு 11 மணிக்கு மேள தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.
அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா, அங்காளம்மா, என கரகோஷத்துடன தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோவில் பூசாரிகள் அங்காள பரமேஸ்வரி அம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல்கள் பாடினர்.
இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மனை கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரியில் இருந்தும் மேல் மலையனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
- காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி வருகிற 12-ந்தேதி வருகிறார்.
- பிரியங்கா கரூரில் ஜோதிமணிக்கு ஆதரவு திரட்ட விரும்பியதால் அங்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. பிரசாரம் நிறைவடைய இன்னும் ஒரு வாரமே இருப்பதால் தமிழகத்தில் எல்லா கட்சிகளும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன. தலைவர்களும் முற்றுகையிட்டு வருகிறார்கள்.
காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி வருகிற 12-ந்தேதி வருகிறார். நெல்லை மற்றும் கோவையில் அவர் பிரசாரம் செய்கிறார்.
அதை தொடர்ந்து வருகிற 15-ந் தேதி பிரியங்கா காந்தி தமிழகம் வருகிறார். சேலம் பகுதியில் அவரது பிரசாரத்துக்கு திட்டமிட்டிருந்தார். ஆனால் பிரியங்கா கரூரில் ஜோதிமணிக்கு ஆதரவு திரட்ட விரும்பியதால் அங்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
விமானத்தில் 15-ந்தேதி திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கரூர் செல்கிறார். கரூரில் ஜோதிமணிக்கு ஆதரவு திரட்டும் வகையில் ரோடு ஷோ செய்கிறார். இதற்கான இடங்களை தேர்வு செய்து வருகிறார்கள்.
கரூர் பிரசாரத்தை முடித்துவிட்டு திருச்சி திரும்பும் பிரியங்கா அங்கிருந்து வேறு மாநில பிரசாரத்துக்கு செல்வதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
- தனியார் நிலங்கள் மற்றும் வனப்பகுதியில் அவ்வப்போது தீபிடித்து எரிந்து வருவதும் பின்னர் அணைவதும் வாடிக்கையாக உள்ளது.
- விவசாயிகளே காய்ந்த சருகுகள் உள்ள பகுதியில் தீ வைத்து பன்றி போன்ற விலங்குகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக செடி-கொடிகள் மற்றும் புல்வெளிகள் காய்ந்து கருகி வருகிறது. மேலும் ஒரு சில தனியார் நிலங்கள் மற்றும் வனப்பகுதியில் அவ்வப்போது தீபிடித்து எரிந்து வருவதும் பின்னர் அணைவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் இன்று பூம்பாறை வனப்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பிரதான மலைச்சாலை ஓரங்களிலும் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. தீ வேகமாக பரவி வருவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் மலைச்சாலையை ஒட்டி சாலையை கடக்கும் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த அச்சத்துடனே கடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பூம்பாறை, மன்னவனூர் உள்ளிட்ட வனப்பகுதியில் பெரும்பாலும் விவசாய நிலங்களுக்கு அருகே காய்ந்த பயன்பாடற்ற நிலங்களும் உள்ளது. இப்பகுதியில் சருகுகள் அதிக அளவில் குவிந்து கிடப்பதால் அங்கு வன விலங்குகள் தங்கி இரவு நேரங்களில் பயிர்களை சேதப்படுத்துவது தொடர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகளே காய்ந்த சருகுகள் உள்ள பகுதியில் தீ வைத்து பன்றி போன்ற விலங்குகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சருகுகள் எரிந்து பின்னர் மக்கிய பிறகு அந்த இடத்தில் உடனடியாக தாவரங்கள் முளைத்து வருவதாகவும் அவர்கள் நம்புகின்றனர். இதனால் காரணமாகவே விவசாயிகள் தாங்களாகவே தீ வைப்பதால் இதனை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.






