என் மலர்
நீங்கள் தேடியது "அமலாக்கத்துறை சோதனை"
- கோயம்பேட்டில் வசித்து வரும் தொழில் அதிபர் லோகநாதன் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
- சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.
சென்னை:
சென்னையில் இன்று தொழில் அதிபர்கள் 5 பேருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சவுரி முடி மற்றும் விக் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இவரது வீட்டில் இன்று காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கோயம்பேட்டில் வசித்து வரும் தொழில் அதிபர் லோகநாதன் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை கோடம்பாக்கம் வெள்ளாளர் 2-வது தெருவில் வசித்து வரும் தொழில் அதிபர் வீடு, தெற்கு சிவன் கோவில் தெருவில் வசித்து வரும் தொழில் அதிபர் ஒருவரின் வீடு ஆகியவற்றிலும் 5-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சென்னையில் 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.
இது தொடர்பாக தொழில் அதிபர்களின் வீடுகளில் உள்ள கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்து அதிகாரிகள் ஆவணங்களை திரட்டி உள்ளனர். இதன் பேரில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.
- அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதாகக்கூறி, ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்தது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.
சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ள நிலையில், ஆகாஷ் பாஸ்கரனிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதாகக்கூறி, ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணைய தலைவர் மற்றும் பதிவாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.
- மோசமான உட்கட்டமைப்புடனும், தேசிய மருந்து பாதுகாப்பு விதிகளை மீறியும் இந்த நிறுவனம் செயல்பட்டுள்ளது.
- ஸ்ரீசன் பார்மா மருந்து உற்பத்தி நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை:
மத்தியபிரதேச மாநிலத்தில் 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து குடித்த 24 குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதேபோல் ராஜஸ்தானிலும் குழந்தைகள் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த 'கோல்ட்ரிப்' இருமல் மருந்தை காஞ்சீபுரம் மாவட்டம் சுங்கு வார்சத்திரத்தில் செயல்பட்டு வந்த ஸ்ரீசன் பார்மா நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த இருமல் மருந்தை தயாரித்த போது அழகு சாதன பொருட்கள் தயாரிப்பதற்கான 'புரோப்பிலின் கிளைக்கால்' பயன்படுத்தியதால், 'டை எத்திலீன் கிளைக்கால்' அளவு மிகவும் அதிகரித்து அந்த குழந்தைகளின் சிறுநீரகத்தை பாதித்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருந்து நிறுவன உரிமையாளரான சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ரங்கநாதன் (வயது 75) கைது செய்யப்பட்டார். ஸ்ரீசன் பார்மா மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கும் 'சீல்' வைக்கப்பட்டது.
23 குழந்தைகள் இறந்ததை தொடர்ந்து தமிழகம், கேரளா, மத்தியபிரதேசம், டெல்லி, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் 'கோல்ட்ரிப்' இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது.
ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் முறையற்ற செயல்பாடுகளில், தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் சரியாக கவனம் செலுத்தாததே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த இருமல் மருந்து நிறுவனத்துக்கு தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் 2011-ம் ஆண்டு உரிமம் வழங்கியது. அதன்பிறகு இந்த நிறுவனத்தில் 15 ஆண்டுகளாக தமிழக அரசு அதிகாரிகள் சரியாக ஆய்வு மேற்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
மோசமான உட்கட்டமைப்புடனும், தேசிய மருந்து பாதுகாப்பு விதிகளை மீறியும் இந்த நிறுவனம் செயல்பட்டுள்ளது. மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகள், மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் 'சுகம்' இணையதளத்தின் வாயிலாக புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த நிறுவனம் தங்கள் தயாரிப்புகளை புதுப்பிக்கவில்லை என்றும் தெரியவந்தது. இதையடுத்து 'கோல்ட்ரிப்' இருமல் மருந்தை சரியாக ஆய்வு செய்யாத 2 தர ஆய்வாளர்கள் ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து நிறுவன விவகாரத்தை தற்போது அமலாக்கத்துறை கையில் எடுத்துள்ளது. ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் முறையாக ஆய்வு நடத்தாமல் இருப்பதற்காக சுகாதாரத்துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கு சட்ட விரோதமாக பணபரிமாற்றம் செய்யப்பட்டதா? என்ற சந்தேகம் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுகாதாரத்துறை அதிகாரிகளின் வீடுகளில் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழக உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிர்வாக இயக்குனர் தீபாவின் வீடு சென்னை திருவான்மியூர் ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ளது. அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்தே சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு இணை இயக்குனராக பணிபுரியும் கார்த்திகேயன் வீடு சென்னை மேற்கு அண்ணா நகரில் உள்ளது. இவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகிறார்கள். இன்று காலை 7.15 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 பேர் கார்த்திகேயன் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
கார்த்திகேயன் வீட்டில் ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். கார்த்திகேயன் தனது அலுவலகத்தில் ரூ.25 ஆயிரம் லஞ்சப்பணம் பெற்றதாக வந்த புகாரின் பேரில் அப்போது அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. தற்போது அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். அலுவலகத்தில் பணிபுரியும் சுகாதாரத்துறை அதிகாரிகள், ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்தில் ஆய்வு நடத்தாமல் இருப்பதற்காக சட்டவிரோதமாக பணபரிமாற்றம் நடந்து இருக்கலாம் என்பதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் சென்னை கோடம்பாக்கம் நாகார்ஜுனா நகர் 2-வது தெருவில் மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர். அவரது வீட்டில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
தனது மருந்து நிறுவனத்தில் ஆய்வு செய்யாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ரங்கநாதன் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்து இருக்கிறாரா என்பதை அறிய அவரது வங்கி கணக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் கைப்பற்றி ஆய்வு நடத்தினார்கள்.
அதில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பது கண்டறியப்பட்டால், யார் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டு உள்ளது என்பதை கண்டறிந்து அந்த அதிகாரிகளையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா மருந்து உற்பத்தி நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சுகாதாரத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்தில் ஆய்வு நடத்தி இருக்கிறார்களா? அப்படி ஆய்வு நடத்த சென்ற அதிகாரிகள் யார்? அவர்கள் முறையாக ஆய்வு செய்தார்களா அல்லது பெயரளவுக்கு நடத்தினார்களா என்பது பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி அவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
- தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- அண்ணா நகர், காஞ்சிபுரத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை உட்கொண்ட 24 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணையில், காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் இருமல் மருந்தில், தடை செய்யப்பட்ட ரசாயனம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து தலைமறைவாக இருந்த ஸ்ரீசன் பார்மா நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் சென்னை அசோக் நகரில் கைது செய்யப்பட்டார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரங்கநாதனுக்கு, டிரான்சிட் வாரண்ட் வழங்கியதையடுத்து, மத்திய பிரதேசம் போலீசார் அவரை அம்மாநிலத்துக்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில் கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரித்த ஸ்ரீசன் பார்பா உரிமையாளர் ரங்கநாதன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோடம்பாக்கத்தில் உள்ள ரங்கநாதன் வீடு மற்றும் அண்ணா நகர், காஞ்சிபுரத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அண்ணா நகரில் உள்ள மருந்து நிர்வாகத்துறை இணை இயக்குநர் கார்த்திகேயன் வீடு, தமிழக மருந்து தரக்கட்டுப்பாட்டு நிர்வாக இயக்குநர் தீபா ஆகியோர் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
- சட்டவிரோதமாக பூடானில் இருந்து கார்கள் இறக்குமதி செய்ததாக வழக்கு.
- சுங்கத்துறை அதிகாரிகள் கேரளாவில் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோதமாக பூடானில் இருந்து கார்கள் இறக்குமதி செய்த வழக்கில் ஏற்கனவே சுங்கத்துறை அதிகாரிகள் நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் சோதனை நடத்தி உள்ளனர்.
இதனை தொடர்ந்து, சென்னையில் உள்ள துல்கர் சல்மான் வீட்டில் காலை முதலே துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
சுங்கத்துறை அதிகாரிகள் கேரளாவில் சோதனையில் ஈடுபட்ட நிலையில் தற்போது சென்னையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- வேளச்சேரியில் தொழில் அதிபர் அமித் பிஸ்நாத் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றது.
- மேற்கு மாம்பலத்தில் சுப்பிரமணி என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றது.
சென்னை:
சென்னையில் இன்று 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அடையாறு காந்தி நகர் 3-வது தெருவில் வசித்து வரும் இந்திரா என்ற டாக்டர் வீட்டில் இன்று காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.
இதே போன்று வேளச்சேரியில் தொழில் அதிபர் அமித் பிஸ்நாத் என்பவரது வீட்டிலும், மேற்கு மாம்பலத்தில் சுப்பிரமணி என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற புகாரின் பேரில் சோதனையை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் எது தொடர்பாக சோதனை நடைபெற்று உள்ளது என்பது பற்றிய தகவல்களை வெளியிடவில்லை.
சோதனை முடிவில்தான் அது பற்றிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- வீட்டில் இருந்தவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
- சோதனை நடந்து வரும் தொழில் அதிபர் ராமச்சந்திரன் அண்மையில் தி.மு.க.வில் இணைந்ததாக கூறப்படுகிறது.
சூலூர்:
சூலூர் அருகே உள்ள செலக்கரச்சல் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். தொழில் அதிபரான இவர் நூற்பாலை மற்றும் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு இவரது வீட்டிற்கு 6-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர்.
பின்னர் வீட்டிற்குள் நுழைந்ததும் வீட்டின் நுழைவு வாயிலை யாரும் உள்ளே வராதவாறும், உள்ளே இருந்து யாரும் வெளியில் செல்ல முடியாதவாறும் பூட்டினர்.
மேலும் வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களையும் வாங்கி வைத்து கொண்டனர். அதனை தொடர்ந்து வீடு முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையிலும், அங்குலம் அங்குலமாக சோதனை மேற்கொண்டனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகளுடன், வங்கி அதிகாரிகளும் வந்திருந்தனர். வீட்டில் இருந்தவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அமலாக்கத்துறை சோதனையை முன்னிட்டு தொழில் அதிபர் ராமச்சந்திரனின் வீட்டின் முன்பு 30-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொழில் அதிபர் ராமச்சந்திரன் தனியார் வங்கி ஒன்றில் தனது தொழிலுக்காக கோடி கணக்கில் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை ஒரே நேரத்தில் மொத்தமாக அடைத்து விட்டதாகவும் தெரிகிறது.
இவ்வளவு பெரிய தொகையை எப்படி ஒரே நேரத்தில் கட்ட முடிந்தது என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் தொழில் அதிபரின் வீட்டில் வங்கி அதிகாரிகள் உதவியுடன் சோதனை நடத்தி வருவது தெரியவந்துள்ளது.
காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சோதனை நடந்து வரும் தொழில் அதிபர் ராமச்சந்திரன் அண்மையில் தி.மு.க.வில் இணைந்ததாகவும் கூறப்படுகிறது.
கோவையில் தொழில் அதிபரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் அவரது உறவினர் ஒருவர் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
- சென்னை மாநகர் முழுவதும் சோதனை நடத்தப்பட்ட இடங்களில் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையின் முடிவில் தான் இது தொடர்பாக கூடுதல் தகவல்கள் தெரிய வரும்.
சென்னை:
சென்னையில் கே.கே.நகர், தியாகராயநகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். புரசைவாக்கம் பிளவர்ஸ் தெருவில் வசித்து வரும் அரவிந்த் என்பவர் வீட்டுக்கு இன்று காலையில் 2 வாகனங்களில் வந்த 8 அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகர் முழுவதும் சோதனை நடத்தப்பட்ட இடங்களில் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வெளிமாநிலங்களில் மருந்து நிறுவனத்தை நடத்தி வந்த இவர் சென்னையிலும் அதனை நடத்தி வருவதாகவும், கூறப்படுகிறது.
சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை நடத்தி வரும் இந்த சோதனையின் முடிவில் தான் இது தொடர்பாக கூடுதல் தகவல்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அமைச்சரின் குடும்பத்திற்கு சொந்தமான 3 மில்களிலும் சோதனை நடந்தது.
- நிறுவனத்தின் வங்கி கணக்குகள், செல்போன்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
தமிழக ஊரக வளர்ச்சி த்துறை அமைச்சரும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமியின் சென்னை மற்றும் திண்டுக்கல் மேற்கு கோவிந்தாபுரம் துரைராஜ் நகரில் உள்ள வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
இதேபோல் திண்டுக்கல் சீலப்பாடியில் உள்ள அவரது மகனும், பழனி தொகுதி எம்.எல்.ஏ.வுமான செந்தில்குமார் வீடு, வள்ளலார் நகரில் உள்ள அமைச்சரின் மகள் இந்திரா வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையிட்டனர்.
மேலும் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் உள்ள அமைச்சரின் குடும்பத்திற்கு சொந்தமான 3 மில்களிலும் சோதனை நடந்தது. இது பற்றி அறிந்ததும் அமைச்சர் அர.சக்கரபாணி அங்கு சென்றார். மேலும் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் அமைச்சர் வீட்டு முன்பு குவிந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
நேற்று காலை தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை சுமார் 15 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அப்போது வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. போலீசார் வெளியே பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் முக்கிய சொத்து ஆவணங்கள், முதலீடு குறித்த ஆவணங்கள், நிறுவனத்தின் வங்கி கணக்குகள், செல்போன்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது. பணம், நகை எதுவும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
- கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அமலாக்கத்துறை 5,300 வழக்குகள் பதிவு செய்துள்ளது.
- தமிழ்நாட்டு மக்கள் திமுகவுடன் ஓரணியில் திரண்டு நிற்கின்றனர்.
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.
2006-2011 திமுக ஆட்சியில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக சொல்லி, பழிவாங்கும் நடவடிக்கையாக அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கில் இருந்து 2012-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் அவரை விடுவித்து உத்தரவிட்டது. இதனை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்த நிலையில்தான், இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதா? என அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
உளவுத் துறை ஐ.ஜியாக இருந்த ஜாபர்சேட்டுக்கு வீட்டுவசதி வாரியம் சார்பில் நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறை கையில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த வழக்கில் 2022-ல் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று ஐ.பெரியசாமி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்தார். சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட இந்த வழக்குகளில் அதுகாலம் வரையில் தலையிடாத அமலாக்கத் துறை, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தீவிரம் காட்டுவது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்பது அரசியல் அறியாத எட்டாம் வகுப்பு மாணவனுக்கும் கூட தெரியும். அமலாக்கத் துறை விசாரணைக்கு ஐ.பெரியசாமி ஒத்துழைத்த பிறகும் கூட இன்றைக்கு திடீரென சோதனை நடத்தியிருப்பது சந்தேகங்களை எழுப்புகிறது.
விடுதலை பெற்ற வரலாற்றையும் விடுதலை வீரர்களின் தியாகத்தையும் நினைவு கூற வேண்டிய சுதந்திர தின வாழ்த்து செய்தியில், அரசியல் அவதூறுகளை அள்ளி வீசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசை அரசியல்வாதி போல குற்றச்சாட்டுகளால் வசை மாறி பொழிந்தார். இதையெல்லாம் சுட்டிக் காட்டி மறுப்பு தெரிவித்தோம். இந்த நிலையில்தான் இன்றைக்கு மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.
பாஜக வாசிங் மிஷினில் விழுவதற்கு நாங்கள் தவறு செய்தவர்கள் அல்ல. பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள்; பொய் வழக்கு போடப்பட்டவர்கள். அதனை நீதிமன்றத்தின் நிரூபித்து காட்டி, வெளியே வருவோமே தவிர, பாஜக வாசிங் மிஷினில் கழுவி, வழக்குகளை வாபஸ் பெற திமுகவினர் கோழைகள் அல்ல. சுயமரியாதை பாதையில் வந்தவர்கள். அடக்குமுறைக்கு அஞ்சாதவர்கள். அவசரகால நெருக்கடிகளை போல எத்தனையோ தழும்புகளுக்கு சொந்தக்காரர்கள்.
'சட்டவிரோத பண பரிமாற்றம்' என சொல்லி அமலாகத்துறை செய்யும் அடாவடிகள் ஒவ்வொன்றும் நீதிமன்றத்தில் அவமானப்பட்டு கொண்டிருக்கின்றன.
* ''கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அமலாக்கத்துறை 5,300 வழக்குகள் பதிவு செய்துள்ளது. ஆனால் வெறும் 40 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமலாக்கத்துறை மீது மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது'' என்று உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜால் பூயான் சொன்னார்.
* மூடா ஊழல் வழக்கில், "அரசியல் மோதல்களுக்கு ஏன் ED பயன்படுத்தப்படுகிறது?" என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கேள்வி எழுப்பினார்.
* சத்தீஸ்கர் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில், "ஆதாரமே இல்லாமல் குற்றம் சாட்டுவதை அமலாக்கத் துறை, தற்போது வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அமலாக்கத் துறையால் பதிவு செய்யப்படும் ஏராளமான வழக்குகளில் இதை நாங்கள் பார்க்கிறோம்" என உச்ச நீதிமன்றம் காட்டமாக விமர்சனம் வைத்தது.
அதிகாரம் மற்றும் தன்னாட்சி கொண்ட அமைப்புகளை எல்லாம் தன்னுடைய தேர்தல் அரசியல் கருவிகளாகப் பயன்படுத்தி வருகிறது மோடி அரசு. 'சட்டவிரோத பண பரிமாற்றம்' என பேசும் ஒன்றிய அரசுதான் 'வாக்கு திருட்டு' அரசியலை நடத்தி கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி, பாஜக வாக்கு மோசடி செய்திருப்பது இன்றைக்கு அம்பலப்பட்டு நிற்கிறது. இதனைக் கண்டு நாடே அதிர்ச்சி அடைந்துள்ளது. வாக்கு திருட்டு' என்ற சட்டவிரோத பரிமாற்றத்தை திசை திருப்ப அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் ஒன்றிய பாஜக அரசின் எடுபிடி அமலாக்கத்துறை சோதனை என்ற பெயரில் அத்துமீறுகிறது.
சில முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பப்பட்ட கோப்பு இன்னமும் அவரிடம் நிலுவையில் இருக்கிறது. தனது ஏஜெண்டான ஆளுநருக்கு அறிவுரை சொல்லி அதற்கு அனுமதி அளிக்கும்படி செய்ய வேண்டிய ஒன்றிய அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறையை ஏவி விடுவது வாடிக்கையாக இருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது FIR போடப்பட்டு, குற்றப்பத்திரிகையும் சிலர் மீது தாக்கலாகிவிட்டது. இவ்வளவுக்குப் பிறகும் அவர்கள் பக்கம் ED தலை வைத்தும் படுக்கவில்லை.
இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏதாவது திமுக அமைச்சர் வீட்டில் ED சோதனை நடத்தி குற்றத் தோற்றத்தை உருவாகுவது மட்டுமே ஒன்றிய அரசின் ஒரே குறிக்கோளாக இருக்கிறது. அதனை வைத்து பாஜக தலைவர்களும் பாஜகவின் அடிமைகளும் தங்களது மனம்போன போக்கில் அவதூறுகளை அள்ளித் தெளிப்பதும் வாடிக்கையாக நடைபெற்று வருகின்றது. இந்த துருப்பிடித்த ஆயுதங்களை எல்லாம் மழுங்கடிக்கப்பட்டே வருகிறது. இந்த அவதூறுகளை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் நம்பப் போவதில்லை. அது தெரிந்தும் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள்.
திமுகவினர் எவரொருவரும் மோடிக்கும் அஞ்ச மாட்டார்கள்; EDக்கும் அஞ்சமாட்டார்கள். திமுகவின் தலைவரும் தொண்டர்களும் தமிழ்நாட்டின் பாதுகாவல் அரண். அதனால் தமிழ்நாட்டு மக்கள் திமுகவுடன் ஓரணியில் திரண்டு நிற்கின்றனர். இதனைக் கண்டு மென்மேலும் எரிச்சலுற்று இதுபோன்ற ED சோதனைகளை நடத்தி அச்சுறுத்த கனவு காண்கின்றனர். அது தமிழ்நாட்டில் எடுபடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும் பிளவுபடுத்தவும் பா.ஜ.க. அரசு செய்யும் சூழ்ச்சிதான் அமலாக்கத்துறை சோதனை.
- இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகத்தையும் அரசியல் அமைப்பையும் சிதைக்கக் கூடியவை.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், தி.மு.கட்சியின் மூத்தத்தலைவருமான ஐ.பெரியசாமி சம்பந்தப்பட்ட இடங்களில் பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறது.
எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும் பிளவுபடுத்தவும் பா.ஜ.க. அரசு செய்யும் சூழ்ச்சிதான் அமலாக்கத்துறை சோதனை. இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகத்தையும் அரசியல் அமைப்பையும் சிதைக்கக் கூடியவை. அமலாக்கத்துறையினரின் இத்தகைய நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
- அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
- சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருந்து வருபவர் ஐ.பெரியசாமி. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஐ.பெரியசாமி தி.மு.க. துணை பொதுச்செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவராக திகழும் இவர் ஏற்கனவே கூட்டுறவு துறை, வருவாய் துறை பொறுப்புகளையும் அமைச்சரவையில் வகித்து உள்ளார்.
இந்த நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் வீடு மற்றும் சேப்பாக்கம் எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் உள்ள அவரது அறை ஆகிய இடங்களுக்கு இன்று காலை 6 மணி அளவில் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 பேர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இதே போன்று திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எம்.எல்.ஏ. விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






