என் மலர்
இந்தியா
- நேற்று தங்கம் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.ரூ.1,19,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்போருக்கு பெரும் அதிர்ச்சி அளித்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 1,440 ரூபாய், செவ்வாய்கிழமை 240 ரூபாய், புதன்கிழமை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,440-க்கு விற்பனையானது. அதனை தொடர்ந்து நேற்று தங்கம் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.ரூ.1,19,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் குறைந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,900-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 295 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
26-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,360
25-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,440
24-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,120
23-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,880
22-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,440
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
26-02-2026- ஒரு கிராம் ரூ.295
25-02-2026- ஒரு கிராம் ரூ.295
24-02-2026- ஒரு கிராம் ரூ.290
23-02-2026- ஒரு கிராம் ரூ.300
22-02-2026- ஒரு கிராம் ரூ.290
- 50 வயதை கடந்த விசைப்படகு உரிமையாளர்களுக்கு மீனவர் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார்.
- ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் 50 வயதை கடந்த விசைப்படகு உரிமையாளர்களுக்கு மீனவர் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து இதற்கு தடையாக இருந்த ஒரு சில விதிகள் புதுச்சேரி அரசால் திருத்தப்பட்டு இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 50 வயது நிறைவடைந்த 323 மீனவர்களுக்கு இந்த ஆண்டு புதிதாக ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.
மேலும் மீன்வளத்துறை மூலம் ஓய்வூதியம் பெறும் மீனவர் இறந்துவிட்டால் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதே போல் 2025-26-ம் ஆண்டிற்கான மழைக்கால நிவாரணமாக தலா ரூ.6 ஆயிரம் வீதம் விடுபட்ட 328 மீனவர் குடும்பங்களுக்கு ரூ.19 லட்சத்து 68 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இந்த நிவாரணம் மீனவர்கள் வங்கி கணக்கில் இன்று செலுத்தப்படுகிறது.
- ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.4 லட்சத்து 66 ஆயிரம் கடன் உள்ளது.
- அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்கள் கரைவேட்டியை கூட கட்ட முடியாமல் போய்விட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடந்தது. இதற்கு ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பாரதிமுருகன் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
தி.மு.க. அரசு அனைத்து வரிகளையும் உயர்த்தியது. அதேபோல் விலைவாசியும் கடுமையாக உயர்ந்துவிட்டன. இதன்மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது. அதை மறைக்க தி.மு.க. அரசு ரூ.1,000 வழங்குகிறது. அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மக்களின் சுமையை குறைக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதனால் தமிழக மக்களிடம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு பெருகிறது. அதை சகித்து கொள்ள முடியாமல் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறித்து தி.மு.க. அவதூறு பரப்புகிறது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மூழ்கும் கப்பல் என்று கூறுகின்றனர். அ.தி.மு.க. நீர்மூழ்கி கப்பலாக இருந்து தமிழக மக்களை பாதுகாப்பாற்றும். தி.மு.க. ஆட்சியால் தமிழகத்தின் கடன்சுமை ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.4 லட்சத்து 66 ஆயிரம் கடன் உள்ளது.
கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு காரணமானவர் யார்? என்று சி.பி.ஐ. அறிக்கை வெளியாக இருக்கிறது. ஆனால் விஜய் செய்த தவறால் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் கரூர் சம்பவத்தில் தன் ரசிகர்கள் இறந்ததற்கு பொறுப்பேற்காமல் நான் தான் காரணமா? என விஜய் கேட்கிறார்.
அரசியல் கட்சிகள் நடத்தும் ரோட்ஷோக்களை முறைப்படுத்தும் அரசின் நெறிமுறைகளால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. நான் கூறிய பிறகு தான் வேலூரில் நடைபெற்ற த.வெ.க. கூட்டத்தில் கூடாரம் அமைத்து விஜய் பேசியுள்ளார்.
அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்கள் கரைவேட்டியை கூட கட்ட முடியாமல் போய்விட்டனர். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி அமையும் என்று பேசினார்.
- அனுமதிக்கப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும்.
- உற்சாகமும் உத்வேகமும் எல்லை மீறிப் போக அனுமதித்திடக் கூடாது.
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
தலைவர் கலைஞர் - அன்னை தயாளு அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்து; பொதுவுடைமைப் பூமியாம் சோவியத் நாட்டின் சுடரொளி ஸ்டாலின் அவர்களின் பெயர் சூட்டப்பட்டு, கொள்கைக் கோட்டமாம் கோபாலபுரத்தில் வளர்ந்து, இளமையிலேயே இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு, திராவிட இயக்கத்தை நோக்கி இளைஞர்களைத் திரட்டிடும் இனிய பணியைச் சுமந்து, கடந்து வந்த மேடு - பள்ளங்களைச் சமமாகப் பாவித்து ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டு; தலைவர் கலைஞர் அவர்களிடம் பயின்ற பண்புகளோடும், கடமை உணர்வோடும் கழகத்தைக் கண்களாகவும் தலைவர் கலைஞர் அவர்களை கதிரொளியாகவும் கொண்டு, என்னால் இயன்றவரை எல்லோருக்கும் பயனுள்ள வகையில், கனிவு - துணிவு ஆகியவற்றைத் துணையாகக் கொண்டு, தொண்டூழியம் ஆற்றி வரும் எனக்கு மார்ச்-1 அன்று 73-ஆவது பிறந்தநாள்!
1-3-2026 அன்று எனது பிறந்தநாளையொட்டி ஆர்வம் மிகுதியால், கண்ணுறுத்தும் படாடோப விளம்பரங்களைக் கட்டாயம் தவிர்த்து, அனுமதிக்கப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும். உற்சாகமும் உத்வேகமும் எல்லை மீறிப் போக அனுமதித்திடக் கூடாது.
பிறந்தநாளையொட்டி, சமுதாயத்தில் மெலிந்து நலிந்த பிரிவினரான ஏழை எளிய மகளிர், முதியோர், ஆதரவற்றோர், திருநர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் நலன் பேணும் வகையில் இயன்ற உதவிகளைச் செய்வது; கழகக் கொடிகளைப் புதுப்பிப்பது - புதிய கொடிகளை ஏற்றி வைப்பது - கிளைக் கழகங்களின் பெயர்ப் பலகைகளைப் புதுப்பிப்பது – பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் பெயர்களில் அமைந்துள்ள படிப்பகங்களுக்குப் பயனுள்ள புதிய நூல்களை வழங்குவது - கழகத்தின் மூத்த உறுப்பினர்களைச் சிறப்பிப்பது, பெருவாரியாக இரத்தத் தானம் செய்வது போன்றவற்றை ஆற்றுவதுமே அவசியமானவை. இயக்கத்திற்கு ஆக்கமளித்திடும் இத்தகைய செயல்பாடுகளை மட்டுமே நான் பெரிதும் வரவேற்கிறேன்; சமூக உணர்வும், இயக்கப் பற்றும் மிளிரும் இத்தகைய நற்செயல்கள் எல்லா இடங்களிலும் நிகழுமானால், அவற்றையே என்னரும் தோழர்களின் இதய வாழ்த்துகளாகக் கொண்டு பெருமகிழ்ச்சி கொள்வேன்!
இன்று முதல் நமது நிலையும் நினைப்பும் எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலையே மையம் கொண்டதாக இருந்திட வேண்டும். நாட்கள் இருக்கிறதே - என்ன அவசரம் என்று எண்ணிடாமல், இப்போதிருந்தே தேர்தல் பணிகளைத் திட்டமிட்டுத் தொய்வின்றித் தொடர்ந்திட வேண்டும். நமது திராவிட மாடல் அரசின் திட்டங்களால் "ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற குரல் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. எனவே, ஏழாவது முறையும் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிட உங்களது உழைப்பு அமைந்திட வேண்டும்! அதுவே எனக்கு நீங்கள் வழங்கிடும் சிறந்த பிறந்தநாள் வாழ்த்து!
ஆடம்பரத்தைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான பணிகளை அமைதியாக மேற்கொள்வீர்! இந்த எனது அன்பு வேண்டுகோளை எல்லோரும் நினைவில் கொள்வீர்! என்று கூறியுள்ளார்.
- ஓட்டல் நிர்வாகம் தனது வங்கி கணக்கை சரிபார்த்தபோது, ஒரு ரூபாய் கூட வரவு வைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.
- மொத்தம் ரூ.6.17 லட்சம் பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அரியானா மாநிலம் சோனாவைச் சேர்ந்தவர் ஹிமான்ஷூ (வயது 26). எம்.சி.ஏ. பட்டம் பெற்ற இவர், யூடியூப் சேனல் விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார். குருகிராம் டி.எஸ்.எப் பேஸ்-5 பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஹிமான்ஷு தங்கி வந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 24-ந்தேதி வரை தங்கியிருந்த அவர், ஓட்டல் வாடகையாக 16 தவணைகளில் பணம் செலுத்தியதாகக் கூறி, அதற்கான 'ஸ்கிரீன்ஷாட்'டுகளை வாட்ஸ்அப் மூலம் ஓட்டல் மேலாளருக்கு அனுப்பியுள்ளார்.
ஓட்டல் நிர்வாகம் தனது வங்கி கணக்கை சரிபார்த்தபோது, ஒரு ரூபாய் கூட வரவு வைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஹிமான்ஷுவிடம் கேட்டபோது, அவர் வங்கி கணக்கு விவரங்களை தர மறுத்துவிட்டு ஓட்டலை விட்டு வெளியேறினார். மொத்தம் ரூ.6.17 லட்சம் பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து ஓட்டல் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹிமான்ஷுவை கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. "போலி போன்பே செயலி மூலம் பணம் செலுத்தியது போல் எப்படி ஏமாற்றுவது என்பது குறித்து யூடியூப்பில் வீடியோ பார்த்தேன். அதன் மூலம் ஒரு போலி செயலியை பதிவிறக்கம் செய்து, ஓட்டல் மேலாளருக்கு போலி ஸ்கிரீன்ஷாட்டுகளை அனுப்பி ஏமாற்றினேன்" என்று அவர் ஒப்புக்கொண்டார்.
அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் சேர போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
- ஆளும் தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., விஜயின் த.வெ.க என இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது. தற்போது அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் வேகம் காட்டி வருகின்றன.
இப்படி அரசியல் களம் ஒருபக்கம் பம்பரமாக சுழன்று கொண்டிருக்க முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் சேர போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளில், ஆளும் தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது MLA பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், அவருடன் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. உசிலம்பட்டி அய்யப்பனும் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
MLA பதவியை ராஜினாமா செய்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து தி.மு.க.வில் அவர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன், ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோரும் தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓ.பி.எஸ். தி.மு.க.வில் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ளனர்.
- கடந்த 20-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரையில் 45 நாட்கள் மின்சார ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது.
- கடந்த சில நாட்களாக பயணிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 10, 11-ல் பராமரிப்பு பணி காரணமாக கடந்த 20-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரையில் 45 நாட்கள் மின்சார ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பயணிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் புறநகர் ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்தை குறைக்க தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இன்று முதல் கூடுதலாக 20 விரைவு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இந்த விரைவு மின்சார ரெயில்கள் எழும்பூர், மாம்பலம், கிண்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஜம்மு காஷ்மீர் முதல் இன்னிங்சில் 584 ரன்களில் ஆல் அவுட்டானது.
- கர்நாடக அணியின் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட் வீழ்த்தினார்.
ஹூப்ளி:
ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ரஞ்சி டிராபிக்கான இறுதிப்போட்டி கர்நாடகாவின் ஹூபளியில் நடந்து வருகிறது. இதில் கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஜம்மு காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 584 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷுபம் பண்டி சதமடித்து 121 ரன்னில் அவுட்டானார். யாவர் ஹசன் 88 ரன்னும், கேப்டன் பரஸ் டோக்ரா அரை சதம் கடந்து 70 ரன்னும், அப்துல் சமது 61 ரன்னும், கண்ணையா வாத்வான் 71 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஷகில் லோத்ரா 72 ரன் எடுத்தார்.
கர்நாடக அணியின் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, கர்நாடக அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடி சதம் அடித்தார்.
மூன்றாம் நாள் முடிவில் கர்நாடக அணி 5 விக்கெட்டுக்கு 220 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 130 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- பிரதமர் மோடி இஸ்ரேலில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்.
- இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர், அவரது மனைவி வழியனுப்பி வைத்தனர்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி இருநாள் பயணமாக இஸ்ரேல் சென்றார். அவரை பென்குரியன் விமான நிலையத்தில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு நேரில் வரவேற்றார். ஜெருசலேம் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடிக்கு நெசெட் சபாநாயகர் விருது வழங்கப்பட்டது. இஸ்ரேல் நாடாளுமன்ற சபாநாயகர் அமினர் ஒகானா இந்த விருதை மோடிக்கு அணிவித்தார்.
ஜெருசலேமில் நடந்த தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்காட்சியில் மோடியும், நேதன்யாகுவும் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.
இரண்டாம் நாளான நேற்று பிரதமர் மோடி யாத் வாஷேம் பகுதியில் நாஜிக்களால் கொல்லப்பட்ட யூதர்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிற்பகலில் பிரதமர் மோடியும், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் சந்தித்தனர். இந்தியா-இஸ்ரேல் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 27 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மாலையில் பிரதமர் மோடி இஸ்ரேலில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார். அதன்பின் இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, அவரது மனைவி சாரா ஆகியோர் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், மாலை 5.50 மணிக்கு இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடி இன்று அதிகாலை தலைநகர் டெல்லி வந்தடைந்தார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.
- 257 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே 184 ரன் மட்டுமே எடுத்தது.
- இதன்மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
சென்னை:
டி20 உலகக் கோப்பை தொடரின் 48-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இதில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 256 ரன்கள் குவித்தது. அதிரடியில் மிரட்டிய அபிஷேக் சர்மா 30 பந்தில் 55 ரன்கள் குவித்தார். ஹர்திக் பாண்ட்யா 23 பந்தில் 50 ரன்னும், திலக் வர்மா 16 பந்தில் 44 ரன்னும் குவித்தனர்.
தொடர்ந்து, 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பிரியன் பென்னட் அதிரடியாக ஆடி 97 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது.
இந்நிலையில், சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு தோல்விகளைப் பெற்ற ஜிம்பாப்வே அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
குரூப் 2 பிரிவில் இருந்து இங்கிலாந்தும், குரூப் 1 பிரிவில் தென் ஆப்பிரிக்காவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
- முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 256 ரன்கள் குவித்தது.
- ஹர்திக் பாண்ட்யா 23 பந்தில் 50 ரன்கள் குவித்தார்.
சென்னை:
டி20 உலகக் கோப்பை தொடரின் 48-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இதில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 256 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 24 ரன்னும், இஷான் கிஷன் 38 ரன்னும் எடுத்தனர். அதிரடியில் மிரட்டிய அபிஷேக் சர்மா 30 பந்தில் 55 ரன்கள் குவித்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 33 ரன்கள் எடுத்தார்.
5வது விக்கெட்டுக்கு இணைந்த ஹர்திக் பாண்ட்யா ஜோடி சிக்சர், பவுண்டரிகளை விளாசியது. பாண்ட்யா 23 பந்தில் 50 ரன்னும், திலக் வர்மா 16 பந்தில் 44 ரன்னும் குவித்தனர்.
இதையடுத்து, 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பிரியன் பென்னட் அதிரடியாக ஆடி 97 ரன்கள் குவித்தார்.
இதன்மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது.
இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.
- தூத்துக்குடி- மைசூரு இடையிலான விரைவு ரெயில் கடம்பூர் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும்.
- சிறப்பு ரெயில்கள், விரைவு ரெயில் சேவையாக மாற்றப்பட்டிருப்பது பல்வேறு வகைகளிலும் தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக அமைகின்றது.
சென்னை:
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழகத்தின் பெண்ணாடம் மற்றும் கடம்பூர் போன்ற ரெயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படுகின்ற இரண்டு விரைவு ரெயில்கள், குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டுமென்கிற அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை, சமீபத்தில் மாண்புமிகு மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களிடத்தில் முன்வைத்திருந்தேன்.
தமிழக மக்கள் சார்பாக முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற நமது மத்திய ரெயில்வே அமைச்சகம், சென்னை எழும்பூர்- திருச்சிராப்பள்ளி இடையிலான விரைவு ரெயில் பெண்ணாடம் ரெயில் நிலையத்திலும், தூத்துக்குடி- மைசூரு இடையிலான விரைவு ரெயில் கடம்பூர் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும் என்கிற அறிவிப்பை வழங்கியுள்ளது.
இந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்களின், பொது போக்குவரத்து மற்றும் தொழில் சார்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இந்த அறிவிப்பு நிவர்த்தி செய்யும். இதற்காக தமிழக மக்கள் சார்பில், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மற்றொரு பதிவில்,
தமிழகத்தின் முக்கிய ரெயில் நிலையங்கள் மூலம் பல்வேறு மாவட்டங்களை இணைக்கின்ற வகையில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரெயில்களை, வழக்கமாக இயங்கும் வகையிலான விரைவு ரெயிலாக மாற்றுவது தொடர்பான கோரிக்கையை, மாண்புமிகு மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களிடத்தில் முன்வைத்திருந்தேன்.
அவ்வகையில், கொல்கத்தாவின் ஷாலிமார்-எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், ஹைதராபாத்தின் கச்சிகுடா-தூத்துக்குடி, ஐதராபாத்-கன்னியாகுமரி, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி போன்ற ரெயில் நிலையங்கள் இடையே இயங்கி வந்த சிறப்பு ரெயில்கள், விரைவு ரெயில் சேவையாக மாற்றப்பட்டிருப்பது பல்வேறு வகைகளிலும் தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக அமைகின்றது.
தமிழக மக்கள் சார்பாக முன்வைக்கப்படும் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை மேற்கொண்டு வரும், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசிற்கும், மாண்புமிகு மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
அவர்களுக்கும், தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.






