search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dowry torture"

    திருவள்ளூர் அருகே காதல் திருமணம் செய்த 9 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

    திருவள்ளூர்:

    ஆந்திர மாநிலம் சிந்தலப் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன். இவரும் நெல்லூர் மாவட்டம் ஜலதாங்கிய சேர்ந்த மாலினி (வயது 20) என்பவரும் கடந்த 9 மாதத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் இருவரும் திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சநேயபுரம் பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்தனர். மதுசூதனன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனவேதனை அடைந்த மாலினி வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து மாலினியின் தந்தை தாமோதரன் திருவள்ளூர் தாலுக்கா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், மகள் மாலினியை வரதட்சணை கேட்டு அவரது கணவர் கொடுமைப்படுத்தி உள்ளார். அவளது சாவில் மர்மம் உள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாலினிக்கு திருமணமாகி 9 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    கேரள மாநிலம் கொல்லத்தில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை 1½ மாதம் பட்டினி போட்டு கொன்ற கணவன் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர். #DowryTorture
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியை சேர்ந்த துளசிதாஸ், விஜயலட்சுமி ஆகியோரின் மகள் துசரா (வயது 27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்துலால் (30) என்பவருக்கும் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    பெண்ணின் தந்தை திருமணத்தின்போது பேசப்பட்ட வரதட்சணையை கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் மற்றும் மாமியார் இருவரும் சேர்ந்து புதுப்பெண்ணை அடித்து துன்புறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 1½ மாதமாக புதுப்பெண் துசராவின் நடமாட்டம் இல்லை. துசரா வீட்டில் உள்ள தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார். சத்தம்போடாமல் இருக்க வாயில் துணி கட்டப்பட்டிருந்தது.

    காலையில் ஒரு டம்ளர் சர்பத், மதியம் ஒரு டம்ளர் தண்ணீர், இரவு மீண்டும் ஒரு டம்ளர் சர்பத் மட்டுமே ஜன்னல் வழியாக கொடுத்தனர்.

    இந்நிலையில் நேற்று துசரா உடல் நிலை திடீரென மோசமானது. இதற்குமேல் வைத்திருந்தால் மாட்டிக்கொள்வோம் என்று பயந்த கணவரும், மாமியாரும் சேர்ந்து துசராவை கருநாகப்பள்ளியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துசரா பரிதாபமாக இறந்தார்.

    துசராவின் சாவில் சந்தேகம் இருப்பதாக டாக்டர்கள் யூபுள்ளி போலீசில் புகார் செய்தனர். போலீசார் சந்துலால் மற்றும் அவரது தாய் கீதாலால் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் போதிய வரதட்சணை கிடைக்காத ஆத்திரத்தில் துசராவை வீட்டில் அடைத்து வைத்து பட்டினி போட்டோம். திருமணத்தின்போது 60 கிலோ எடை இருந்தார். 1 ½ மாதம் தண்ணீர் மட்டுமே கொடுத்ததால் 40 கிலோ எடை குறைந்து இறக்கும்போது 20 கிலோ எடை மட்டுமே இருந்தார். பட்டினி போட்டே கொலை செய்தோம் என்று தாயும், மகனும் ஒப்புக்கொண்டனர்.

    இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் கருநாகப்பள்ளி கோர்ட்டில் ஒப்படைத்தனர். #DowryTorture
    பெண் டாக்டரிடம் வரதட்சணை கேட்டு கணவர் சித்ரவதை செய்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த உள்ளூர் அனுமந்த் நகரை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் ஓய்வுபெற்ற என்.எல்.சி. அலுவலர். இவரது மகள் வனிதா. இவர் டாக்டருக்கு படித்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டில் டாக்டர் வனிதாவுக்கும் , மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ராகுல் பட்டேல் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் திருமண தகவல் மையம் மூலம் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதற்கிடையே ரூ.3½ லட்சம் வரதட்சணை கேட்டு டாக்டர் வனிதாவை அவர் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த வனிதா, இதுபற்றி கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருவாரூரில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் மீது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 35), இவரது மனைவி மீனா (28). இவர்களுக்கு 4 வயதில் பெண்குழந்தை உள்ளது. திருவாரூரில் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அறிவழகன் திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். திருப்பூருக்கு வேலைக்கு சென்ற அறிவழகன் வீட்டிற்கு வராமலும், பணமும் அனுப்பாமல் இருந்துள்ளார்.

    இதனால் சந்தேகம் அடைந்த மீனா இதுகுறித்து திருப்பூரில் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் விசாரித்த போது அறிவழகன் அங்கு திருமணமான பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு வீட்டிற்கு வராமல் இருப்பது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மீனா இதுகுறித்து அறிவழகனிடம் கேட்ட போது வரதட்சணை வாங்கிவந்தால் மட்டுமே உன்னுடன் குடும்பம் நடத்துவேன் என கூறி அறிவழகன அடித்து துன்புறுத்தினாராம்.

    இதுகுறித்து மீனா திருவாரூர் அனைத்துமகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பவள்ளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    திண்டுக்கல் அருகே வரதட்சணைக்காக மருமகளை வீட்டை விட்டு சப்-இன்ஸ்பெக்டர் விரட்டியதால் மனமுடைந்து அவர் வி‌ஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திண்டுக்கல்:

    வரதட்சணைக்காக மருமகளை வீட்டை விட்டு சப்-இன்ஸ்பெக்டர் விரட்டியதால் மனமுடைந்து வி‌ஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ரமேஷ் என்பவருக்கும் கன்னிவாடி அருகே உள்ள குரும்பபட்டியைச் சேர்ந்த சுகந்தி (வயது 21) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு 8 மாத கைக்குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பிறகு ரமேஷ் வேலை இல்லாமல் இருந்ததால் அவர் தொழில் தொடங்க ரூ.5 லட்சம் பணம் வாங்கி வருமாறு மாமனார் சுப்பிரமணி அவரை கொடுமைபடுத்தி வந்துள்ளார்.

    இதனால் குழந்தை பிறந்தவுடன் அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். மேலும் சுகந்தி வேறு ஒரு வாலிபருடன் பழகுவதாகவும் குற்றம் சாட்டினார். சம்பவத்தன்று சுகந்தி வீட்டுக்கு சென்ற சுப்பிரமணி மற்றும் ரமேஷ் வரதட்சணை ஏன் வாங்கி வரவில்லை? என சத்தம் போட்டுள்ளனர்.

    இதனால் மனமுடைந்த சுகந்தி வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வரதட்சணைக்காக போலீஸ் அதிகாரியே மருமகளை வீட்டை விட்டு விரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருமணமான சில மாதங்களில் புதுப்பெண்ணிடம் வரதட்சணை கொடுமை செய்த கணவர்- கொழுந்தனார் கைது செய்யப்பட்டனர்.

    சேதராப்பட்டு:

    கோட்டக்குப்பம் அருகே புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது32). இவர் காலாப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மரக்காணம் அருகே கீழ்பேட்டையை சேர்ந்த பூரணி (22) என்பவருக்கும் கடந்த 3.2.2017 அன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது பூரணிக்கு பெற்றோர் போதுமான சீர்வரிசை வாங்கி கொடுத்தனர்.

    இந்த நிலையில் திருமணம் முடிந்த சில மாதங்களில் பூரணியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரது கணவர் ஞானசேகர், கொழுந்தனார் ரகுபதி, மாமியார் செந்தாமரை ஆகியோர் கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்தரவதை செய்து வந்ததால் பூரணி இதுகுறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி நேற்று ஞானசேகர், ரகுபதி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் ஜெயிலில் அடைத்தனர். செந்தாமரையை தேடி வருகிறார்கள். புதுப்பெண்ணிடம் வரதட்சணை கொடுமை செய்த சம்பவத்தில் திருமண நாளில் கணவர் மற்றும் கொழுந்தனார் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூரில் மனைவியிடம் அதிக வரதட்சணை கேட்டு கொடுமை செய்த தனியார் ஏர்லைன்ஸ் பைலட்டை போலீசார் கைது செய்தனர்.
    பெங்களூரு:

    இண்டிகோ ஏர்லைன்சில் விமானியாக பணியாற்றி வருபவர் யுதிஷ்டர் புனியா (வயது 32). இவருக்கும் பினு சிங் என்பவருக்கும் 2014-ம் ஆண்டு ஜெய்ப்பூரில் திருமணம் நடைபெற்றது. தொடக்கத்தில் டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருந்த இந்த தம்பதியர் பின்னர் 2016-ம் ஆண்டில் பெங்களூரு வந்தனர். அங்கு, மாரத்தள்ளி பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் வசித்து வந்தனர். திருமண நேரத்தில், யுதிஷ்டருக்கு ரொக்க பணம் மற்றும் தங்க நகைகள் வரதட்சணையாக தாரளமாக வழங்கப்பட்டதாக தெரிகிறது.

    மேலும் தம்பதியர் மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில், யுதிஷ்டருக்கு பெண் குழந்தை பிறந்த பிறகு, அவர் மனைவியை வரதட்சணை கொடுமை செய்ய தொடங்கினாராம். பிறந்த வீட்டிலிருந்து மேலும் பணம், நகைகளை கொண்டு வரச்சொல்லி மனைவியை கட்டாயப்படுத்தியும், சித்ரவதை செய்தும் வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு யுதிஷ்டரின் தாயாரும் உடந்தையாக இருந்தாராம். இதனால் மன உளைச்சல் அடைந்த பினுசிங் தனது கணவர் மற்றும் மாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெங்களூரு எச்.ஏ.எல். காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    விசாரணைக்கு ஆஜராகாமல் தப்பித்து வந்த யுதிஷ்டரை, நீதிமன்ற உத்தரவின்படி எச்.ஏ.எல். போலீசார், ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
    கூடுதல் வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.#DowryTorture
    விருதுநகர்:

    திருத்தங்கலை சேர்ந்த கணேசன் மகள் லாவண்யா (வயது 23)வுக்கும், வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜமுருகன் என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் லாவண்யா புகார் செய்தார்.

    எனக்கு திருமணத்தின் போது 30 பவுன் நகையும், சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன. இந்த நிலையில் கூடுதலாக 20 பவுன் நகை மற்றும் ரூ. 10 லட்சம் கேட்டு கணவர் ராஜமுருகன், அவரது பெற்றோர் ஹரிராம்- விஜயா, கணவரின் சகோதரி மகாலட்சுமி ஆகியோர் சித்ரவதை செய்தனர்.

    மேலும், சில நாட்களுக்கு முன்பு கணவர் ராஜமுருகன் தாலியை பறித்துக்கொண்டு என்னை வீட்டை விட்டு விரட்டிவிட்டார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி ராஜமுருகன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #DowryTorture
    போடியில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    தேனி:

    போடி ஆர்.ஐ.ஆபிஸ் ரோட்டை சேர்ந்தவர் சிவபாலன்(வயது39). இவரது மனைவி கலைவாணி(31). இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 15 பவுன்நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டன. 5 வயது குழந்தை உள்ளது.

    சிவபாலன் சவுதிஅரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். தற்போது விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பிய சிவபாலன் கலைவாணியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்துள்ளார். கலைவாணியின் நகைகளை பறித்துக்கொண்டு மேலும் ரூ.5 லட்சம் பணம் வாங்கி வந்தால்தான் குடும்பம் நடத்த முடியும் எனக்கூறி அவரை தாய்வீட்டிற்கு அனுப்பி உள்ளார்.

    இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கலைவாணி போடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வரதட்சணை கொடுமைப்படுத்திய சிவபாலன், அவரது சகோதரன் சிவராமகாசி, மற்றும் உறவினர்கள் ஜெயகீதா, ஜெயலட்சுமி, மாலா, பாஸ்கரன் ஆகிய 6 பேர்மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    அரக்கோணம் அருகே திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆன இளம்பெணி தீயில் கருகி பலியான சம்பவம் தொடர்பாக கணவர், மாமியார் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி தேவி (28). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது.

    தேவி நேற்று வீட்டில் இருந்தபோது உடலில் தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தேவியின் அண்ணன் தேவராஜ் அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதில் எனது தங்கையை அவரது கணவர், மாமியார் ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்தனர். என் தங்கை மீது மண்எண்ணை ஊற்றி கொளுத்திவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

    அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தீவட்டிபட்டி இளம்பெண்ணை தாக்கிய கணவர் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டனர். இதனை கிடா வெட்டி விருந்து வைத்து மனைவி கொண்டாடியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிபட்டி கள்ளிகாடு பகுதியை சேரந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சீனிவாசன் (33). லாரி டிரைவராக உள்ளார். சீனிவாசன் மனைவி ராமாயி (29). இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வருடம் ஆகிறது. 2 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. ராமாயி, சீனிவாசனுக்கு அத்தை மகள் ஆவார்.

    இந்த நிலையில் சீனிவாசன் தன் மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்தார். மேலும் மாமனார் ராஜேந்திரன் மருமகளை மானபங்கம் செய்ததாக தெரிகிறது. இதனை தட்டிகேட்ட உறவினர்கள் அனைவரிடமும் தகராறு செய்துள்ளனர்.

    இது குறித்து தீவட்டிபட்டி போலீசில் ராமாயி புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் தீவட்டிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னராஜ் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரன் மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    இதனால் மகிழ்ச்சியடைந்த ராமாயி மற்றும் அவரது பெற்றோர், உறவினர்களுக்கு கள்ளி காட்டில் உள்ள எல்லம்மாள் கோவிலில் இன்று கிடாவெட்டி விருந்து வைத்தனர்.

    கணவர் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டதை தன் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் கிடா வெட்டி விருந்து வைத்து கொண்டாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவைச் சேர்ந்தவர் கவுசல்யா (வயது 26). இவருக்கும், ராஜபாளையம் அருகேயுள்ள முகவூரைச் சேர்ந்த காஞ்சித்தலைவன் (33) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது 40 பவுன் நகை, ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. காஞ்சித்தலைவன் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் காஞ்சித்தலைவன், அவரது தாயார் முனியம்மாள், சகோதரி தமிழ்செல்வி ஆகியோர் கவுசல்யாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

    இது குறித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் கவுசல்யா புகார் செய்தார். அதன் பின்னர் தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

    போலீசார் சமரசம் செய்த பின்னரும் காஞ்சித் தலைவன் தனது வீட்டுக்கு மனைவியை அழைத்து வரவில்லை.

    இந்த நிலையில் காஞ்சித்தலைவன் தனது மனைவியின் வீட்டுக்குச் சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    இது குறித்து ராஜபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரனிடம் கவுசல்யா புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா விசாரணை நடத்தி பேராசிரியரை கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.

    ×